![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
58. நன்றியின் நினைவுச் சின்னம் கோசாம்பி நகரத்து வேளாளப் பெருமக்கள் விளை நிலங்கள் மிக்க சிற்றூர்களும் பிற வசதிகளும் அடைந்து நலம் பெருக வழி செய்தனர், உதயணன் அமைச்சர். இந்நிலையில் கோசாம்பி நகருக்கு அப்பால் நாட்டின் எல்லைப் புறத்திலுள்ள சில சிற்றரசர்கள், உதயணனுக்கு எதிராக மாறுபட்டுக் கலவரம் செய்தமையால், உதயணன் தன் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களை ஏற்ற படைகளுடன் அங்கே அனுப்பி வைத்தான். மகத நாட்டிலிருந்து வந்த படைத் தலைவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தாலும் மகத வீரர்களிற் பலர் இன்னும் கோசாம்பியிலேயே தங்கியிருந்தனர். அவர்களும் உதவிக்குச் சென்று பிங்கல கடகர்களை வெற்றி முழக்கத்தோடு திரும்பச் செய்தனர். பிங்கல கடகர்கள் எல்லைப் புறத்து அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பியதும் மகத நாட்டு வீரர்களுக்குத் தக்க சீர் சிறப்புக்களைச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். ஒரு நல்ல நாளில் பதுமாபதி, கோசாம்பி நகரத்து அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து குடி புகுந்தாள். உதயணன் அந்தப்புரத்தைச் சேர்ந்தக் கட்டிடங்களை பதுமைக்காக மேலும் அழகுபடுத்திப் புதுப்பித்திருந்தான். மகத மன்னனின் தங்கை பதுமாபதி, இராசகிரிய நகரத்தின் பெரிய அரண்மனையினும் இந்தப் புதிய அரண்மனையின் அந்தப்புரம் எழில் ஓங்கி விளங்குதல் கண்டு இதை வியந்தாள். நாட்டிலே நல்லாட்சியும், பதுமையுடன் கூடிய இன்ப வாழ்வுமாகத் தன் நாட்களை அமைதியும் பயனும் நிறைந்தனவாகச் செலவிட்டு மகிழலானான் உதயணன். கோசாம்பியின் ஆட்சியை அடைந்து இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வருங்கால், ஒருநாள் அவனுக்கு பத்திராபதியின் நினைவு உண்டாயிற்று. தன்னையும் வாசவதத்தையையும் சுமந்து கொண்டு உஞ்சை நகரின் நீராடல் துறையிலிருந்து இரவு என்றும் பகல் என்றும் பாராமல் ஓடி வந்து, அந்த யானை வருகின்ற வழியிலே இறந்து போன நிகழ்ச்சியும் கூடவே அவன் நினைவில் தோன்றி உள்ளத்தை உருக்கியது. பத்திராபதி தனக்குச் செய்திருக்கும் நன்றியின் அளவை உள்ளூற நினைத்துப் பார்த்தபோது, எப்படியாவது அந்த நன்றிக்கு அழியாத கைம்மாறு ஒன்று செய்தால் ஒழியத் தன் மனம் திருப்தியுறாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த நினைவு ஏற்பட்டவுடனே, காட்டுப் பகுதியில் நன்கு பழக்கமுள்ள சிலரை அழைத்துப் பத்திராபதியைத் தான் புதைத்துவிட்டு வந்த இடமும் வழியும், முதலிய விவரங்களைத் தெளிவாகக் கூறி, அந்த இடத்தை அடையாளங் கண்டு அங்கே அகப்படும் அதன் எலும்பு முதலிய பொருள்களை எவ்வாறேனும் தேடிக் கொண்டுவருமாறு கூறினான். அவர்களும் இயன்ற வரையில் தேடிப் பார்த்துக் கொண்டு வர முயற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர். செலுத்த வேண்டியதொரு நன்றியைச் செலுத்தி அமைதியுறாமல், அதைத் தாங்கி மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது என்பது பண்புடையோருக்கு மிகப் பெரிய சுமையாகத் தோன்றும். அந்தச் சுமையை உள்ளன்போடு செய்து கழித்தால் ஒழிய, அவர்கள் மனப்பாரம் குறைந்து விடுவது இல்லை. 'நன்றிக்கு ஏற்ற இடத்தில் நன்றியைச் செலுத்தத் தவறக்கூடாது' என்பது சிறந்த பண்பாட்டுக்கு உரிய சின்னங்களில் ஒன்று அல்லவா? உதயணனும் இத்தகைய பண்பாடு நிறைந்தவன். ஆகையால் தான் என்றோ பல நாள்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டதோடு அல்லாமல், பத்திராபதி என்னும் யானைக்கு என்றும் நிலைத்து நிற்கும் ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவன் கருதினான். ஒரு விலங்கின் உயிரையும் மனித மனத்தோடு நினைக்கிற பரந்த அன்பு அவனுக்கு இருந்தது. இதனுடன் பத்திராபதியின் உயிர் நற்கதி அடைவதற்கு வேறு ஓர் அறத்தையும் அங்கே செய்வது இன்றியமையாதது என்று உதயணன் கருதினான். "வழிச் செல்வோர் நீர் விடாய் தணித்துக் கொள்வதற்கு ஒரு தண்ணீர்ப் பந்தரும், பசித்து வந்த மக்கள் வயிறார உண்டு செல்வதற்காக ஓர் அட்டிற்சாலையும் அதனருகே அமைத்துவிட வேண்டும்" என்று கூறிக் கட்டிடம் அமைக்கும் கலைஞர்களையும் சிற்பிகளையும் அழைத்து, அவர்களிடமும் விவரத்தைக் கூறி, முன்பு பத்திராபதி வீழ்ந்த இடமறிந்து வந்து கூறியவர்களோடு அவர்களைக் காட்டிற்கு அனுப்பினான். காட்டில் கலைஞர்களுக்கு எல்லாச் சௌகரியங்களையும் ஏற்படுத்தித் தருமாறு அரண்மனை ஏவலாளர்கள் ஆணையிடப் பெற்றனர். பத்திராபதி வீழ்ந்த இடத்தை அடையாளங் கண்டு அதன் எலும்பு முதலிய அரும் பொருள்களைச் சேகரித்துக் கொடுத்தவர்களை இன்மொழிகளால் பாராட்டி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுத்து அனுப்பினான் உதயணன். காட்டு வேடர்களுக்கும் குறும்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. பத்திராபதியின் கோவில் திருப்பணி பற்றிய செய்தி, அங்கங்கே சென்று மீண்டும் எல்லோருக்கும் தெரியுமாறு பறை சாற்றப் பெற்றது. இரண்டோர் திங்களில் கோவிலும் சிலையும் வேலை முற்றி நிறைவேறின. கடவுள் மங்கலம் நிகழ்த்துவதற்கு முன்னால் நடுக்காட்டிலிருந்த அந்த இடத்திற்குச் சென்று வருவதற்கு வசதியாகப் பெரிய சாலை ஒன்று அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வழிபாடு நடத்துகின்றவர்கட்கும், பிறர்க்கும் அங்கேயே அருகில் இருக்கைகள் கட்டப் பெற்றன. மாதந் தவறாமல் திருவிழாக்கள் நடத்துவதற்குப் போதுமான உடைமைகள் கோவிலுக்கு உரிமை செய்து கொடுக்கப் பெற்றன. சிறந்த முறையில் கடவுள் மங்கலமும் ஒருநாள் செவ்வனே நிகழ்ந்து இனிதாக நிறைவேறியது. பத்திராபதி இனிமேல் தெய்வமாகியது. |