உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நானூறு சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார் ... தொடர்ச்சி - 3 ... 11. பழவினை
[அஃதாவது முற்பிறப்பிற் செய்த பாவபுண்ணியங்களைப் பற்றிச் சொல்லிய அதிகாரம். பழவினை - பண்புத்தொகை, பழமையான வினையென விரியும்.]
101. பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. (இ-ள்.) பல் ஆவுள் - பல பசுக்களில், உய்த்து விடினும் - செலுத்திவிட்டாலும், சூழ கன்று - இளமையான கன்று, தாய் நாடிக் கோடலை - (தன்) தாயைத் தேடி யடைதலில், வல்லது ஆம் - சாமர்த்திய முள்ளதாகும்; (அதுபோல) தொல்லை பழவினையும் - முற்பிறப்பிற் செய்த கருமமும், தான் செய்த - தன்னைச் செய்த, கிழவனை - உரியவனை, நாடி கொளற்கு - தேடி அடைதலில், அன்ன தகைத்து - அப்படிப்பட்ட தன்மையை [சாமர்த்தியத்தை] யடையுதாம், எ-று. பல பசுக்களி னடுவேவிட்ட கன்று தன் தாயைத் தேடிக் கண்டு எப்படியடைகின்றதோ அப்படி யொருவன் செய்த பாவபுண்ணிய கருமம் பிற்பிறப்பில் அவனிடத்து வந்து சேருமென்பதாம். இதனால் அக்கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே யொழியுமென்று நினையாமல் பிற்பிறப்பில் தொடர்ந்து பயனை யநுபவிக்கச் செய்யுமாதலால், தீவினை யொழித்து நல்வினை செய்ய வேண்டுமெனச் சொல்லியதாயிற்று. பல் ஆ - பண்புத்தொகை. விடினும் - உம் - சிறப்பும்மை. குழக்கன்று - பண்புத்தொகை, குழவாகிய கன்று என விரியும். வல்லது - குறிப்பு வினைமுற்று, வல் - பகுதி, அ - சாரியை, து - ஒன்றன்விகுதி, லகரம் இரட்டியது சந்தி. ஆம் - அசை; ஆகும் எனப்பொருள் கொள்ளின், வல்லது - பண்படியாப்பிறந்த பெயர்; குறிப்புமுற்றாலடைந்த பெயரென்னவுமாம். கோடலை - ஐ யுருபு இடப்பொருளில் வந்தது. வேற்றுமை மயக்கம். தொல்லைப் பழமை - ஒரு பொருட் பன்மொழி, அல்லது பழவினை என்பதைத் தொடர்ந்து வரும் கருமத்துக்கு ஒரு பெயராக் கொண்டு தொல்லையென்பதை அதற்கு அடையாக் கொள்வது நேர். தொல்லை - துன்பம், அதனைச் செய்யும் பழவினையெனவு முரைக்கலாம், ஆயினும் அது நல்வினைக் கேலாமை காண்க. அன்ன - குறிப்புப் பெயரெச்சம், அன் - பகுதி, அல்லதுஅ - பகுதி, னகரம் - சாரியை. தகைத்து - குறிப்புமுற்று, தகை - பகுதி, (=குணம்), து - விகுதி; தகையென்பது தகு என்னும் வினைப்பகுதிமேல் ஐ என்னும் தொழிற்பெயர் விகுதி வந்ததாம்; ஆயினும் பொருளினால் அது பண்பு. ஏகாரம் - தேற்றம். தற்செய்த - தான் என்பது பொதுப் பெயராயினும் [மெய். சூ. 15ம் விதியால்] னகரந் திரிந்தது; [உருபு. சூ. 8ம் விதியால்] முதல் குறுகியது. கிழவன் - பண்படியாகப் பிறந்த பெயர்; கிழமை - பகுதி, அன் - விகுதி. கொளற்கு - வேற்றுமை மயக்கம்.
102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்க துடைத்து. (இ-ள்.) உருவும் - அழகும், இளமையும் - வாலிபமும், ஒள் பொருளும் - மேன்மையான செல்வமும், உட்கும் - (பலர்) அஞ்சத்தக்க மதிப்பும், ஒருவழி நில்லாமை - ஒருவழிப்பட்டு நிலைபெற்றிராமையை, கண்டும் - பார்த்தும், ஒருவழி - ஒரு பிறப்பிலும், ஒன்றேயும் இல்லாதான் - யாதொரு நற்செய்கையும் இல்லாதவனுடைய, வாழ்க்கை - வாழுதலானது, உடம்பு இட்டு நின்று - உடலைப் பெற்று நின்று, வீழ்ந்தக்கது - வீழுந்தன்மையை, உடைத்து - உடையது, எ-று. உருவமுதலாகிய பொருள்கள் ஓரிடத்தில் நிலையாயிராமலழிந்து போவது பிரத்தியக்ஷமா யிருக்கையால், அவற்றின் காரணமாகிய நல்வினையை ஒருபிறப்பிலும் செய்யாதவனுடைய வாழ்வானது பிறந்தான் இறந்தானென்னு மாத்திரையே யன்றி வேறு பயனில்லாதது என்பது கருத்து. இதனால் ஒரு பிறப்பிலாகிலும் நல்வினை செய்தால் அது பிற்பிறப்புகளில் தொடர்ச்சியாய் நன்மைகளை யுண்டாக்குமென்பதாம். உட்கு - கருவிப் பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; உட்குதல் - அஞ்சுதல், உம்மைகள் - எண்ணுப்பொருளன. கண்டும் - உம்மை உயர்வு சிறப்பு. ஒன்றேயும் - உம்மை இழிவு சிறப்பு அல்லது விகற்பப் பொருள். வீழ்ம் - வீழும் என்பதில் உகரம் தொகுத்தல் விகாரம். தக்கது - குணத்தை யுணர்த்திய தொழிற்பெயர். ஏ - அசை.
103. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை; அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக் காரெனச் செய்தாரும் இல். (இ-ள்.) வளம்பட வேண்டாதார் - (செல்வ முதலியவற்றால்) வளப்பத்தையடைய விரும்பாதவர்கள், யார் யாரும் - எப்படிப்பட்டவர்களும், இல்லை - (உலகத்தில்) இல்லை; போகம் - சுகானுபவங்கள், அவர் அவர் ஆற்றான் - அவரவர்களுடைய புண்ணியவசத்தினாலே, அளந்தன - அளக்கப்பட்டிருக்கின்றன; விளங்காய் திரட்டினார் - விளங்காயைத் திரண்டவுருவாகச் செய்தவர்கள், இல்லை - யாருமில்லை; களம் கனியை - களாப்பழத்தை, கார் என செய்தாரும் - கறுப்பாகச் செய்தவர்களும், இல் - இல்லை, எ-று. உலகத்தில் செல்வமுதலிய வளப்பத்தை யாவருமே விரும்புகிறார்கள்; ஆயினும் அவரவர் செய்த புண்ணியங்களுக்கேற்றபடி அப்போகம் கிடைக்குமே யல்லது அதிகமாயும் குறைவாயும் கிடைக்க மாட்டாது; எங்ஙனமெனில், விளங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையால் திரண்டிருப்பது போலவும் களங்கனி கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும் எனவறிக. விளங்காய் முதலியன தந்தம் இயற்கையா லமைந்திருப்பது போல அவரவர் சுகமும் அவரவர் புண்ணியமும் இயற்கையால் அமைந்த தென்பதாம். இதனால் பிற்பிறப்பில் விசேஷமாக வளம்பட்டவர் முற்பிறப்பில் மிகுதியான புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது கருத்து. யாரும் என்பதில் உம்மை முற்றுப் பொருளது. அளந்தன - செயப்பாட்டுவினை, செய்வினை போல் வந்தது, [பொது. சூ. 49] இல் - எதிர்மறைக்குறிப்பின் பகுதி முற்றுப் பொருளைத் தந்தது. இல்லைக் களங்கனி என்னுமிடத்தில் ஓசை பற்றி வல்லொற்று மிகுந்தது.
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா, பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லை அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். (இ-ள்.) உறல் பால் - வந்து கூடும்படியான தீவினைகளை, நீக்கல் - தடுத்தல், உறுவர்க்கும் - முனிவர்களுக்கும், ஆகா - இசையாது; பெறல் பால் அனையவும் - பெறும்படியான தன்மையையுடைய நல்வினைகளும், அன்ன ஆம் - அத்தன்மையனவாம்; மாரி - மழையானது, வறப்பின் - வறண்டால், அதனை தருவாரும் இல்லை - அதைக் கொடுப்பாருமில்லை; சிறப்பின் - (அது) அதிகப்பட்டால், தணிப்பாரும் இல் - (அதனை) அடக்கவல்லவர்களுமில்லை, எ-று. மழை வறண்ட காலத்தில் அதனைக் கொடுப்பதற்கும் அது அதிகப்பட்டால் அதனைத் தணிப்பதற்கும் எப்படி ஒருத்தருக்குஞ் சக்தி யில்லையோ அப்படியே ஒருவனுக்குத் தீவினைப்பயன் நேரிட்டபோதும் நல் வினைப்பயன் நேரிட்ட போதும் அவைகளைத் தடுக்க யாராலுமாகாது; அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பதாம். உறற்பால - உறல் - வந்து சேர்தல், பால் - தன்மை, அதாவது சேரும்படியான தன்மைப்; அ - பலவின்பால் விகுதி, இது உடைமைப் பொருளைக் காட்டும்; தத்திகம். உறுவர் - சாமர்த்தியம் மிகுந்தவர். ஆகா - ஆகாது என்பதில் ஈறு தொக்கது; அல்லது நீக்கலென்பதைப் பன்மையாக் கொள்க. பெறற்பாலனைய - பெறுதலாகிய பான்மையையுடைய அப்படிப்பட்டவை எனப் பொருள் விரித்துக் கொள்க. அன்ன - குறிப்பு வினைமுற்று, அல்லது வினையாலணையும் பெயர். இவ்வாறு வருவதை வட நூலார் 'விதேயவிசேஷண' மென்பர். வறப்பின் - செயினென்னும் வாய்பாட் டெதிர்கால வினையெச்சம், பகரம் - இடைநிலை, இன் - விகுதி; அல்லது வறப்பு என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு ஏழனுருபு புணர்ந்த தெனினும் பொருந்தும். சிறப்பின் என்பதை வறப்பின் என்பதைப் போற் கொள்க.
105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை வினைப்பயன் அல்லால் பிற. (இ-ள்.) பனை துணையார் - பனையளவாக விருந்தவர் [உயர்ந்தவர் என்றபடி], தினை துணையர் ஆகி - தினையளவினராகி, தம் தேக உள் அடக்கி - தமது சாமர்த்தியத்தை உள்ளே அடங்கச் செய்து, வைகலும் - தினந்தோறும், பாடு அழிந்து - பெருமை கெட்டு, வாழ்வார் - இருப்பார்; நினைப்ப - யோசித்தால், மேலை வினை பயன் அல்லால் - முற்பிறப்பிற் செய்த வினையின் பயனேயல்லாமல், பிற கிடந்தது - வேறாக இருப்பதாகிய, எவன் உண்டு ஆம் - எது உண்டாகும், எ-று. உயர்ந்த நிலையிலிருந்த ஒருவன் மிகவும் தாழ்ந்த நிலையில் வந்து தன் சாமர்த்தியமும் பெருமையும் கெட்டிருப்பது எதனாலென்று யோசித்தால், அவன் பூர்வஜனனத்திற் செய்த தீவினையினாலே யல்லாமல் வேறு காரணத்தாலல்ல என்பது கருத்து. பனை தினை என்னும் உபமானங்களைப் பிரமாணத்திற்குக் கொள்ளாமல் மேன்மைக்கும் தாழ்மைக்கும் கொள்க. தினைத் துணையர் - தினையின் தளவையுடையவர் என விரித்துக் கொள்க. வைகலும் - உம்மை - முற்றுப்பொருளது. நினைப்ப - எதிர்காலவினையெச்சம். எவன் - வினாவினைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; எ - பகுதி, அ - சாரியை, னகரம் - விகுதி; இது சாரியையின்றி என் எனவும், அதன்மேல் ஐகாரச் சாரியை பெற்று என்னை எனவும், அகரச் சாரியை பெற்று என்ன எனவும் வரும், எவன் என்பதைப் பகாப்பதமாகக் கொள்ளின் என் என்பது இடைக்குறையாம்.
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார் சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால் கோதென்று கொள்ளாதாம் கூற்று. (இ-ள்.) பல் ஆன்ற கேள்வி - மேன்மைப்பட்ட கேள்விகளினது, பயன் உணர்வார் - பயனை அறிந்தவர்கள், வீயவும் - அழியவும், கல்லாதார் - படியாத மூடர்கள், வாழ்வது - நெடுங்காலம் சீவித்திருப்பதை, அறிதிர் - அறிந்திருக்கிறீர்கள்; கல்லாதார் - படியாதவர்கள், சேதனம் என்னும் - அறிவென்னப்பட்ட, அச்சேறு - அந்தச் சாரத்தை, அகத்து இன்மையால் - உள்ளத்திலே உடையரா யில்லாமையால், (அவரை) கூற்று - யமன், கோது என்று - திப்பியென்று நினைத்து, கொள்ளாது - கொள்ளமாட்டான், எ-று. நூல்களின் சாரத்தையறிந்த யோக்கியர்கள் சீக்கிரத்தில் மாண்டுவரப் படியாத மூடர்கள் நெடுங்காலம் வாழ்ந்திருப்பது உங்களுக்குப் பிரத்தியட்சமாக இருக்கின்றதே, அது ஏனெனில் கற்றவரிடத்தில் சேதனம் என்னும் சாரம் இருத்தல் பற்றி அவரை யமன் தீவிரத்தில் கொள்ளுகின்றான், மற்றவரை அச்சாரம் இல்லாமையால் கொள்ளுவதில்லை என கவிசாதுரியத்தாற் றற்குறிப்பேற்றமாய்க் கூறினார். இப்படி விபரீதமாவதும் முன் வினைப்பயன் என்பது கருத்து. அகன்ற என்பது ஆன்ற வென ஆயிற்று என்பர். வீய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், வீ - பகுதி, அ - விகுதி, யகரம் - உடம்படுமெய். அறிதிர் - முன்னிலைப்பன்மை இறந்த கால வினைமுற்று; அறி - பகுதி, த் - இடைநிலை, இர் - விகுதி. கூற்று - சொல்லளவில் அஃறிணையாயினும் பொருள் அளவில் உயர்திணை. இங்ஙனமே அரசு அமைச்சு முதலியவும் கொள்க. ஏல் ஆம் - அசைகள்.
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப முன்னை வினையாய் விடும். (இ-ள்.) அடம்பம் பூ - அடம்பக் கொடியின் பூக்களை, அன்னம் கிழிக்கும் - அன்னங்கள் (கோதிக்) கிழிக்கின்ற, அலை கடல் - அலைகளையுடைய கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய, கரையையுடைய பாண்டியனே!, (சிலர்) இடும்பை கூர் நெஞ்சத்தார் - துன்பம் மிகுந்த மனமுடையவர்களாகி, எல்லாரும் காண - யாவருங் காணும்படி, நெடும் கடை நின்று - பெரிய வாயில்களிலே நின்று [பலவீட்டு வாயில்களிற்சென்று என்றபடி], உழல்வது எல்லாம் - (பிச்சைக்காக) வருந்தும் செயல்களெல்லாம், முன்னை வினை ஆய் விடும் - முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகி நிற்கும், எ-று. சிலர் வறுமையால் மிகவும் மனநொந்து பிச்சைக்காக வீடுதோறுஞ் சென்று வருந்தி நிற்பது முன்னை வினையின் பயன் என்றபடி. இதனால் இப்பிறப்பி லனுபவிக்கும் நன்மை துன்மைகளுக்குப் பழவினையே காரணமென்றதாயிற்று. இடும்பைகூர் நெஞ்சத்தார் என்பதை காண்போருக்கு அடையாகக் கொண்டு, இரப்போர்படும் அல்லலுக்கு ஐயோவென்று இரக்க முற்றனரெனப் பொருள் கூறுவது அமையும். இடும்பைகூர் - எழுவாய்த் தொடர், கூர்நெஞ்சம் - வினைத்தொகை நிலைத்தொடர். நெடுமை - பன்மை. நெடுங்கடை - பல்லாயிலென்றாயிற்று. உழல்வது - சாதியொருமை. உழல்வதெல்லாம் - பலவகைப்பட்ட வுழலுதல், ஆய்விடு - ஒரே பகுதி.
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும் பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப! செய்த வினையான் வரும். (இ-ள்.) வளி ஓடி - காற்று வீசி, நெய்தல் - நெய்த னிலங்களிலே, நறவு உயிர்க்கும் - தேனைச் சிந்துகின்ற, நீள் கடல் தண் சேர்ப்ப - நீண்ட கடலினது குளிர்ச்சியான துறையை யுடைய பாண்டியனே, அறியாரும் அல்லர் - (ஒருவர்) அறியாதவர்களு மல்லராகி, அறிவது - வேண்டியதை, அறிந்தும் - தெரிந்திருந்தும், பழியோடுபட்டவை - நிந்தனையோடு கூடிய காரியங்களை, செய்தல் - செய்வது, செய்த வினையான் - (முற்பிறப்பிற்) செய்த தீவினையால், வரும் - உண்டாகும், எ-று. இப்பிறப்பில் பாவ காரியங்களைச் செய்வதும் முற்பிறப்பின் தீவினைப்பயனாம் என்றபடி, பாவகாரியம் செய்வது அறியாமையால் நேர்ந்தாலும் ஒருவகை கூடலாம்; அறிந்தும் செய்வது அவ்வினையின் வசத்தினாலேயே யென்பது கருத்து. அறியாரும், அறிந்தும் - உம்மை - சிறப்பு. பழியோடு - பழிக்கப்படுவது பழி, செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். உயிர்க்கும் என்னும் பெயரெச்சம் சேர்ப்ப என்னும் இடப்பெயரைக் கொண்டது. நீள்கடல் - வினைத் தொகையாதலால் ஈறு இயல்பாயிற்று [நன். மெய். சூ.24.].
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும் வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை; வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. (இ-ள்.) நீர் ஈண்டு வையத்துள் - சமுத்திரம் சூழ்ந்த பூமியுள், எல்லாரும் - எவர்களும், எத்துணையும் - எவ்வளவாயினும், தீய வேண்டார் - தீயவைகளை விரும்பமாட்டார்; நல்லவை - நன்மைகளே, விழை பயன் - அவர்கள் விரும்பும் பயனாகும்; வேண்டினும் - விரும்பினாலும், வேண்டாவிடினும் - விரும்பாதிருந்தாலும், உறல் பால - வரத்தக்கவை, தீண்டா விடுதல் அரிது - (ஒருவரை) சேராமற் போவது இல்லை, எ-று. உலகத்திலே எவரும் தீமையை வேண்டார்; நன்மையையே வேண்டுவார்கள்; ஆயினும் வரவேண்டியது வந்து சேருமே யன்றி இவர்கள் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்க நில்லா என்பதாம். ஒருவனுக்குச் சம்பவிக்கும் நன்மை துன்மைகள் பழவினையினாலேயே என்பது கருத்து. இங்ஙனங் கூறியது முற்பாட்டுகளின் கருத்தை உறுதிப் படுத்தற்கென்க. மன் - அசை; மன் என்பதற்குப் பெரும்பான்மை யெனப் பொருள் கொண்டு, தற்கொலை முதலிய தீமைகளையும் விரும்புகிறார்களெனவும் பொருள் கொள்ளலாம். தீய - தீமையடியாகப் பிறந்த பலவின் பெயர். தீண்டா - ஈறு தொக்க எதிர்மறைவினையெச்சம். அரிது - இங்கே இல்லையென்னும் பொருளைத் தந்தது, அருமையடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. ஈறு போதலும் இடை உகரம் இஆதலும் ஆகிய விகாரங்கள் இங்கே வந்தன; [நன். பத. சூ. 9].
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும் சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத் தென்னை பரிவு. (இ-ள்.) சிறு காலை - அற்பகாலத்தில் [கருப்பட்ட காலத்தில் என்றபடி], பட்ட - உண்டாகிய, பொறியும் - எழுத்துகளும் [அதாவது கடவுளமைத்த விதிகளும்], சிறுகா - குறைய மாட்டா; பெருகா - வளரமாட்டா; முறை பிறழ்ந்து வாரா - கிரமம் தப்பி வரமாட்டா; உறு காலத்து - துன்பம் வந்த காலத்திலே, ஊற்று ஆகா - ஊன்றுகோலாகமாட்டா; ஆம் இடத்தே ஆகும் - வரவேண்டிய காலத்திலேயே வந்து சேரும்; அதனால் - அப்படியிருப்பதால், இறு காலத்து - மரண காலத்தில், பரிவு என்னை - துன்பப்படுவது ஏன், எ-று. கருவுற்றபோதே ஒருவனுக்கு நடக்க வேண்டியது இன்னின்னவெனச் சங்கற்பித்தவை குறைந்தும் வளர்ந்தும் பிறழ்ந்தும் ஆவன வில்லை; வந்த காலத்து ஸ்திரமாயிராமல் ஆகுங்காலத்திலேயே ஆகும்; ஆதலால் நேரும் துன்பங்களைக் குறித்துத் துக்கிப்பது வீண் என்பது கருத்து. பொறி - பொறிக்கப்பட்டவை; பொறித்தல் - எழுதுதல், சிறுகா, பெருகா, வாரா, ஆகா - இவை எதிர்மறைப் பன்மை வினைமுற்று. இவைகளை ஈறுதொக்க வினையெச்சமாகக் கொண்டு ஆகும் என்பதனோடு முடிக்கலாம். சிறுகாலை - சிறுமையாகிய காலம், அதாவது உருவம் கருப்பட்டகாலம். இறுகாலத்து என்பது மற்ற துன்பங்கள் வரும் காலத்துக்கும் உபலக்ஷணம். 12. மெய்ம்மை
[அதாவது உண்மை என்றால் அந்தந்தப் பொருள்களி ளியற்கையான தன்மை.]
111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து. (இ-ள்.) இசையா ஒரு பொருள் - தமக்குக் கைகூடாத ஒரு பொருளை, இல் என்றல் - (ஆதுலர்க்கு) இல்லையென்று சொல்லுதல், யார்க்கும் வசை அன்று - எப்படிப்பட்டவர்களுக்கும் குற்றமாகாது; வையத்து இயற்கை - (இது) உலகத்தின் சுபாவமாகும்; நிரை தொடீஇ - வரிசையான வளையலணிந்தவளே!, நசை அழுங்க - ஆசை கெடும்படி, நின்று ஓடி - நெடுங்காலம் கழித்து, பொய்த்தல் - பொய் சொல்லுதல், செய் நன்றி - (ஒருவன் செய்த) உபகாரத்தை, கொன்றாரில் - மறந்தவர்களைக் காட்டிலும், குற்றம் உடைத்து - குற்றமுடையதாகும், எ-று. இசையாத பொருளை யில்லையென்று சொல்லுதல் குற்றமன்று, ஒருவனுக்குக் கொடுப்பதாக நெடுங்காலம் ஆசைகாட்டிக் கடைசியில் இல்லையென்பது நன்றி மறப்பதினுன் குற்றமாம். "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்று கூறியதனால் செய்ந்நன்றி கொன்றாரில் என்றார். இதனால் அயோக்கியனுடைய தன்மை சொல்லப்பட்டது. அன்று - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. நிரைதொடீஇ - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த - அன்மொழித்தொகை, அளபெடை விளியுருபு. செய்ந்நன்றி - [நன். உயி. புண. சூ. 8] விதியால் நகரம் மிகுந்தது.
112. தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. (இ-ள்.) தக்காரும் - யோக்கியரும், தக்கவர் அல்லாரும் - யோக்கியரல்லாதவர்களும் [அயோக்கியர்களும்], எக்காலும் - எப்போதும், தம் நீர்மை - தம்முடைய குணமானது, குன்றல் இலராவர் - குறைதல் இல்லாதவராவர்; அக்காரம் - வெல்லமானது, யாவர் தின்னினும் - யார் தின்றாலும், கையாது - கசக்கமாட்டாது; வேம்பு - வேப்பங்காய், தேவரே தின்னினும் - தேவர் தின்றாலும், கைக்கும் - கசப்பைத் தரும், எ-று. யோக்கியர் மெய்சொல்லும் குணத்திலும் அயோக்கியர்கள் பொய்சொல்லுங் குணத்திலும் குறையார்கள். ஒருவேளை விதிவசத்தால் யோக்கியர் பொய்சொன்னாலும் அயோக்கியர் மெய்சொன்னாலும் அவரவருக்குத் தங்களுக்குரிய குணத்திலேயே பிர்யமிருக்கும்; இதை அக்காரமும் வேம்புமாகிய உபமானங்களால் அறிந்து கொள்க. தக்கார் - தகு என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர்; இதில் ககரம் மிகுந்து தன்மையைக் காட்டியதே யன்றிக் காலம் காட்டவில்லை. குன்றல் இலராவார் - குன்றுதல் இலர் என்றும், குன்றுதலை இலர் என்றும் இரு வகையினும் கூறலாம்; இல்லையென்னும் குறிப்பு வினை செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் வருதலினாலென வறிக. எழுவாயாக் கொண்டபக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் அதனொடு சார்த்தி னத்தினை முடிபின" என்னும் [பொது. சூ. 29] விதியா லமைத்துக் கொள்க. ஏ, ஆம் - அசை.
113. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனின் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர். (இ-ள்.) ஈரம் குன்ற நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, கால் ஆடு போழ்தில் - (ஒருவனுக்கு) செல்வாக்கு உண்டான காலத்தில், வானத்துமேல் ஆடு - ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற, மீனில் - நக்ஷத்திரங்களைக் காட்டிலும், கழி கிளைஞர் - கழிக்கத்தக்க சுற்றத்தார்கள், பலர் ஆவர் - அநேகராயிருப்பார்கள்; ஏலா இடர் - தகாத துன்பங்களில், ஒருவர் உற்றக்கால் - ஒருவர் பொருந்தினால், தொடர்பு உடையேம் - சம்பந்தமுடையரா யிருக்கிறோம், என்பார் - என்று சொல்லுகிறவர்கள், சிலர் - சிலரேயாவார், எ-று. செலவமுள்ள காலத்திலே பொய்யான உறவு பாராட்டி நடிப்பவர் பலர்; துன்பமுற்ற காலத்திலே மெய்யாகச் சம்பந்தமுடையவரென்று வந்து உதவுவோர் சிலராம். இஃது உலக இயற்கை. காலாடு - கால் - பாதம், ஆடுதல் - நினைத்த விடம் போதல், இது இலக்கணையால் செல்வம் பெற்றதற்கு வந்தது. கழி - உரிச்சொல், கிளைஞர் - முறைப்பெயர், கிளையாய் நிற்பவர்கள்; யகரத்துக்கு ஞகரம் போலி.
114. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர். (இ-ள்.) வடு இலா வையத்து - குற்றமற்ற உலகத்தில், மன்னிய மூன்றில் - நிலைபெற்றிருக்கின்ற (அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்றிலும், நடுவணது - நடுவிலிருக்கின்ற பொருளை, எய்த - (ஒருவன்) அடைந்ததனால், இருதலையும் - முதலிலுள்ள அறத்தையும் கடையிலுள்ள இன்பத்தையும், எய்தும் - அடைவான்; நடுவணது - பொருளை, எய்தாதான் - அடையாதவன், உலை பெய்து அடுவது போலும் - (கொல்லன்) உலையிலிட்டு காய்ச்சுவது போன்ற, துயர் எய்தும் - துன்பத்தை அடைவான், எ-று. பொருளைப் பெற்றால் அறம் இன்பம் இரண்டையும் பெறலாம்; அதைப் பெறாவிடி னிவற்றைப் பெறுதலில்லை யென்றதனால், பொருளில்லாவிடில் பொய், குறளை, வஞ்ச முதலியவற்றைச் செய்ய வேண்டி வருதலால் அறமுதலியவற்றை அடைவது கூடாது. உலைப்பெய்து அடுவது போலுந் துயர் - ஒரு செந்துவை உலையிலிட்டு அட்டால் அதற்கு உலைநீர் காயக்காயத் துன்பம் அதிகரிப்பது போல், பொருள் எய்தாதானுக்கும் பொய் வஞ்சனை முதலியவை மிகுதலால், நாளுக்குநாள் துன்பம் அதிகரிக்கு மென்பது கருத்து. நடுவணது - நடு - பகுதி, அண் - இடத்தைக் காட்டும் விகுதி, நடுவண் என்பதன் மேல் அ - சாரியையும், து - விகுதியும் வந்து நடுவணது என்றாயிற்று. எய்தும் - செய்யுமெனமுற்று ஆண்பாலுக்கு வந்தது; [நன். வினை. சூ. 29].
115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (இ-ள்.) நல் ஆவின் கன்று ஆயின் - நல்ல பசுவின் கன்றானால், நாகும் - இளம் பெட்டைக் கன்றும், விலை பெறூஉம் - (நல்ல) விலையை யடையும்; கல்லாரே ஆயினும் - படியாதவர்களா யிருந்தாலும், செல்வர் வாய் சொல் - செல்வர் வாக்கிலிருந்து வரும் சொற்கள், செல்லும் - ஏற்றுக் கொள்ளப்படும்; புல் ஈர போழ்தின் - அற்ப ஈரமுள்ள காலத்தில், உழவே போல் - உழுதலைப் போல, மீது ஆடி - மேலே மாத்திரம் தோன்றி, நல்கூர்ந்தார் சொல் - தரித்திரன் வாய்ச் சொற்கள், செல்லா - ஏற்றுக் கொள்ளப்படமாட்டா, எ-று. நல்ல பசுவின் பெண் கன்று விசேஷமான பால் கொடுக்குமென்பதனால் கன்றாயிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்குவார்கள். அதுபோல் செல்வர் மூடர்களாயிருந்தாலும் அவர்கள் வாய்ச்சொல்லினால் பயனுண் டென்பதைப் பற்றி அதனை யேற்றுக் கொள்வார்கள். புல்லீரத்தி லுழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி உள்ளே செல்லாதது போலத் தரித்திரனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப் பட்டாலும் பயனின்மையால் அங்கீகரிக்கப்ப்ட மாட்டா என்பது கருத்து. பெறூஉம் - இன்னோசைக்கு வந்த அளபெடை நாகும், ஆயினும், - இவற்றுள் உம்மை இழிவு சிறப்பு.
116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். (இ-ள்.) இடம் பட - அதிகமாக், மெய் ஞானம் - மெய்யான நூல்களை, என்றும் கற்பினும் - எக்காலமும் கற்றாலும், அடங்காதார் - அடக்கமில்லாதவர்கள், என்றும் அடங்கார் - எப்போதும் அடங்காமலே யிருப்பர்; தடம் கண்ணாய் - விசாலமான கண்களை யுடையவளே! பேய்ச்சுரையின் காய் - பேய்ச் சுரைக்காய்கள், உப்போடு நெய் பால் தயிர் காயம் பெய்து - உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் போட்டு, அடினும் - சமைத்தாலும், கைப்பு அறா - கசப்பு நீங்காதனவாம், எ-று. ஞான நூல்களை யெவ்வளவு கற்றாலும் அதனால் அடங்காதாருக்கு நன்மையுள்ள குணம் வருவதில்லை, பேய்ச் சுரைக்காய்க்கு எவ்வளவு சம்பாரங்கள் சேர்ந்தாலும் அதன் கைப்பு நீங்காதது போலென்றபடி. இடம்பட - இடமானதுண்டாக, அதாவது புத்தி விசாலமாக, நன்றாக என்றபடி சுரைக்காய் கைப்பறா என்பதை "உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்" என்ற விதியினா லமைத்துக் கொள்க. உப்பொடு - ஒடு - எண்ணிடைச் சொல்; இதனை நெய் முதலியவற்றோடுங் கூட்டிக் கொள்க. [நன். இடை. சூ. 10]
117. தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க என்னை அவரோடு பட்டது - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப! உறற்பால யார்க்கும் உறும். (இ-ள்.) புன்னை - புன்னை மரங்களினது, விறல் - வெற்றி பெற்ற, பூகமழ் - புஷ்பங்கள் பரிமளிக்கின்ற, கானல் - சோலையையுடைய, வீங்கு - ஓங்குகின்ற, நீர் - கடலினது, சேர்ப்ப - கரையையுடையவனே!, தம்மை இகழ்வாரை - தம்மை நிந்திப்பவர்களை, அவரின் முன் - அவர் நிந்திப்பதற்கு முன்னமே, தாம் இகழ்க - தாம் நிந்திக்கக்கடவர்; அவரோடு பட்டது - அவரோடு தமக்குண்டாகியது, என்னை - என்ன?, உறல் பால - வரவேண்டியவை, யார்க்கும் உறும் - எவர்க்கும் வந்தே தீரும், எ-று. தம்மை நிந்திப்பவர்களைத் தாட்சணியமில்லாமல் முந்தி நிந்திப்பதே பலம், அதனால் நன்மையோ தீமையோ வரவேண்டியது வந்தே தீரும். இது புத்திசாலிக்கு ஏற்கையான காரியம், இதனால் நிந்திக்க எத்தனப்படுபவனுடைய நிந்தை குறைப்படும் என்பது கருத்து. அவரின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், முன் என்னுங் காலத்திற்கு எல்லையானது பற்றி யென்றறிக. விறலாவது துற்கந்தத்தை நீக்கும் சாமர்த்தியம்.
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு. (இ-ள்.) ஆ வேறு உருவின ஆயினும் - பசுக்கள் வெவ்வேறுருக்களை யடையனவா யிருந்தாலும், ஆ பயந்த பால் - அப்பசுக்கள் கொடுத்த பால்கள், வேறு உருவின அல்ல ஆம் - வேறுபட்ட உருவமுள்ளவை யாகமாட்டா; அறம் - தருமம், பால் போல் ஒருதன்மைத்து ஆகும் - பாலைப்போல ஒரே குணத்தை யுடையதாகும்; நெறி - (அத்தருமத்தைத் தரும்) மார்க்கங்கள், ஆ போல் - பசுக்களைப் போல், ஈங்கு - இவ்வுலகத்தில், உருவு பல் கொளல் - பல உருவுகளைக் கொண்டிருத்தலை (உடையனவாயிருக்கும்), எ-று. தானம் தவம் விரதம் அவரவர்க்கு இஷ்டமான தெய்வத்தைத் தொழல் முதலிய தர்மகாரண மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் அவைகளா லுண்டாகும் நற்கதிக்கு ஏதுவான தருமம் ஒன்றே யாம். அஃது, பசுக்கள் வெவ்வே றுருவங்களுள்ளனவாயினும் அவைகளாலுண்டான பால் ஒரு தன்மையா யிருப்பது போலென்றபடி. இப்படியிருப்ப தவற்றி னுண்மை யென்பது கருத்து. ஆ - பால்பகா வஃறிணைப் பெயர். உருவின - உரு - பகுதி, இன் - சாரியை, அ - பலவின்பால் விகுதி. தன்மைத்து - குறிப்பு வினையாலணையும் பெயர். கொளல் - தொழிற்பெயர்.
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர் கடைபோக செல்வம்உய்த்தார்? (இ-ள்.) தேருங்கால் - ஆராயுமிடத்து, யார் - எவர், உலகத்து - பூமியில், ஓர் சொல் இல்லார் - ஒரு (நிந்தைச்) சொல்லை உடையராயிராதவர்கள்?, யார் - எவர், உபாயத்தின் - ஒரு ஏதுவினாலே, வாழாதார் - வாழாதிருப்பவர்கள்?, யார் - எவர், இடை ஆக - (வாழ்நாளின்) மத்தியில், இன்னாதது - துன்பத்தை, எய்தாதார் - அடையாதவர்கள்?, யார் - எவர், கடை போக (வாழ்நாள்) கடைசிவரையிலும், செல்வம் உய்த்தார் - சம்பத்தைப் பொருந்தினவர்கள்? [ஒருவருமிலர்], எ-று. இவ்வுலகத்தில் எல்லாரும் நிந்தைப் படுபவர்களும், ஒரு ஏதுவினால் வாழ்பவர்களும், நடுவில் துன்பமுடையவர்களும், கடைசி வரையிலு மில்லாமல் சில காலம் வரைக்குமே செல்வ முடையவர்களுமா யிருக்கிறார்கள். இவையெல்லாம் உலகத்தின் உண்மையென்பது கருத்து. யா அர் - அசை நிறைக்கவந்த அளபெடை உபாயத்தின் - இன் - ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. உபாயங்களாவன; உழவு, வாணிபம், சேவகம், பிச்சை முதலியனவாம்.
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றம் கொண்டுஓடும் பொழுது. (இ-ள்.) தேரில் - (நன்றாய்) யோசித்தால், தம்மொடு செல்வது - (இறந்து போகும்போது) தம்மோடு கூட வருவது, தாம் செய்வினை அல்லால் - அவரவர் செய்த நல்வினை தீவினைகளே யல்லாமல், யாங்கணும் - எவ்வுலகத்தினும், பிறிது இல்லை - வேறு இல்லை; கூற்றம் - யமன், கொண்டு ஓடும் பொழுது - கொண்டு போகும் போது, ஆங்கு - அப்படி, தாம் போற்றி - தாம் பாதுகாத்து, புனைந்த - (ஆடையாபரணாதிகளால்) அலங்கரித்த, உடம்பும் - சரீரமும், பயம் இன்று - பிரயோசனமில்லை; எ-று. தான் போற்றிப் புனைந்த வுடம்பும் சாம்போது பயனில்லாமற் போக, பொருண் முதலியவை கூட வரா; தான் செய்த வினையொன்றே தன்னைப் பின்பற்றும் என்பது கருத்து. இதுவும் பொருள்களி னுண்மை. யாங்கண் - யா - வினா விடைச்சொல், கண் - இடப்பெயர், பண்புத்தொகை, ஙகரம் - தோன்றல் விகாரம். கூற்றம் - அம் - சாரியை. 13. தீவினை அச்சம்
[அதாவது தீவினை செய்வதற்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதைப் பற்றிச் சொல்லியது. பொருள்களின் மெய்ம்மையை யுணர்தலினாலே தீமை பயக்குமவை இன்னின்னவை யென்று தெரியும், ஆனதைப்பற்றி மெய்ம்மையின் பின்னர் இது வைக்கப்பட்டது.]
121. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு. (இ-ள்.) சுடுகாடு - சுடுகாடுகள், துக்கத்துள் - துக்கத்தைத் தரும் பாபகாரியங்களில், தூங்கி - சுகித்திருந்து, துறவின்கண் - (அவற்றைத்) துறக்கும் வழியில், சேர்கலா - சேரமாட்டாத, மக்கள் - மனிதர்களுடைய, பிணத்த - உயிர்போன உடல்களையுடையனவாம்; புலன் கெட்ட - அறியுந்திறங் கெட்ட, புல் அறிவு ஆளர் - அற்ப அறிவை யுடையவர்களது, வயிறு - வயிறுகள், தொக்க - சேர்ந்த, விலங்கிற்கும் - மிருகங்களுக்கும், புள்ளிற்கும் - பட்சிகளுக்கும், காடே - இடுகாடேயாம், எ-று. மனிதப் பிணங்களை யிடுகிற சுடுகாட்டைப் போல புத்தியில்லாதவர்களுடைய வயிறுகள் மிருகங்களையும் பட்சிகளையும் கொன்றிடும்படியான சுடுகாடு என்று நிந்தித்ததனால் விவேகமுள்ளவன் மிருகபட்சிகளைக் கொன்று தின்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்தாம். "துக்கத்துட்டூங்கித் துறவின் கட்சேர்கலா மக்கள்" என்றதனால் உடம்பைப் போற்றுதலே யன்றி உயிர்க் குறுதியானவற்றைச் செய்யாதவர்கள் என்பதாம். சேர்கலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், சேர் - பகுதி, கல் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறை விகுதி. பிணத்த - பலவின் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. காடே - ஏ - தேற்றம். புன்மையான அறிவை யாள்பவர் புல்லறிவாளர்; புல்லறிவு - உண்ணுதல் உறங்குதல் முதலிய சாதாரண அறிவு.
122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க் கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். (இ-ள்.) சுரும்பு ஆர்க்கும் - வண்டுகள் சப்திக்கின்ற, காட்டுள் ஆய் வாழும் - காட்டினிடத்து இருந்து வசிக்கின்ற, சிவலும் - கவுதாரியையும், குறும்பூழும் - காடையையும், கூட்டுள் ஆய் - கூடுகளில் இருக்கும்படி, கொண்டு வைப்பார் - பிடித்து வந்து அடைத்து வைப்பவர்கள், இரும்பு ஆர்க்கும் - இருப்பு விலங்குகள் சப்திக்கின்ற, காலர் ஆய் - கால்களை யுடையவர்களாய், ஏதிலார்க்கு - பகைவர்களுக்கு, ஆளாய் - (அடிமை) ஆள்களாய், சுரும் பார் - வட்டை நிலத்திலும், [அல்லது, கரும்பு ஆர் - கரும்புகள் விளைந்த,] கழனியுள் - கழனியிலும் [கருப்பந் தோட்டங்களில் என்றபடி], சேர்வர் - (வேலை செய்யும்படி) சேர்வார்கள், எ-று. காடை கவுதாரி முதலியவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைப்பவர்கள் மறுமையில் பகைவர்க்கு அடிமைகளாய் காலில் விலங்கு பூண்டு கழனிகளில் வேலை செய்விக்கப் படுவார்களென்பதாம். கரும் பார் - கருமையான பார், இங்கே கருமையாவது வலிமை, அதாவது வட்டையாயிருத்தல், பயனில்லாத நிலம். கரும்பாருள்ளும் கழனியுள்ளும் என முதல் பட்சத்தில் உம்மைத் தொகையாகவும், கரும் பார்ந்த கழனியுள் என இரண்டாவது பட்சத்தில் வினைத்தொகை யாகவுங் கொள்க. வைப்பார் - வினையாலணையும் பெயர்.
123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். (இ-ள்.) அக்கால் - அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை - நண்டை, காதலித்து - விரும்பி, கால் முரித்து - காலையொடித்து, தின்ற - (அதனைத்) தின்ற, பழவினை - (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் - (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை - உள்ளங்கையானது, அக்கு போல் - சங்குமணியைப் போல, ஒழிய - நீங்க, விரல் அழுகி - விரல்கள் அழுகிப் போய், துக்கம் - துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் - பலவகைக் குட்ட நோய்கள், எழுப - உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று. தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம். "அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்" என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்" என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.
124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (இ-ள்.) நெய் போல்வதும் - நெய்யைப் போல இதமாகிய பொருளும், நெருப்பு அழல் - நெருப்பினது உக்கிரத்தை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், எரிப்ப சுட்டு - (உடலை) யெரிக்கும்படி காய்ந்து, எவ்வம் நோய் - துன்பப்படுத்தும் படியான நோயை, ஆக்கும் - உண்டாக்கும்; (அதுபோல) கோடாரும் - (நல்லொழுக்கத்திற்) கோணி நடவாதவரும், சுடு வினையார் ஆகியார் - கடுமையான தீவினை செய்பவர்களை, சார்ந்து - சேர்ந்து, கோடி - (தம் ஒழுக்கத்தில்) கோணி, பரப்ப - மிகவும், கொடு வினையா ஆகுவர் - கொடுமையான வினைகளைச் செய்பவராவார்கள், எ-று. நெய் உடம்பிற்பட இதமானதா யிருந்தாலும் காய்ந்து விடின் உடம்பைச் சுட்டு நோயுண்டாக்குவது போல, யோக்கியரும் தீவினை செய்பவரோடு சேர்ந்தால் தீவினையே அதிகமாகச் செய்பவராவார்கள். போல்வதூஉம் - இசை நிறை கோடார் - கோடு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி புணர்ந்து கெட்டது, ஆர் - விகுதி; வினைப்பகுதி இடைநிலையின்றி ஆர் விகுதியோடு சேர்ந்தால் எதிர்மறையைக் காட்டுமென்றே சொல்லலாம். உடன்பாட்டில் கோடினார், கோடுகின்றார், கோடுவார் என்று வரும். ஆகியார்ச்சார்ந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகையாகலின் உயர்திணைப் பெயர் முன் வலி மிகுந்தது. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்பது விதி.
125. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நத்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு. (இ-ள்.) பெரியவர் கேண்மை - பெரியோர்களுடைய சிநேகமானது, பிறை போல - இளஞ் சந்திரனைப் போல, வரிசை ஆ - கிரமக் கிரமமாக, நாளும் நந்தும் - தினந்தோறும் வளரும்; சிறியார் தொடர்பு - சிற்றறிவுடையாரது சிநேகம், வான் ஊர் - ஆகாயத்தில் தவழ்கின்ற, மதியம் போல் - பூர்ண சந்திரனைப் போல, வைகலும் - தினந்தோறும், வரிசையால் - கிரமமாக, தானே தேயும் - தானே குறைந்துவிடும், எ-று. அயோக்கியரோடு உறவாடுவதை விட்டு யோக்கியரோடு உறவாட வேண்டு மென்பதாயிற்று. நாளும், வைகலும் - இரண்டிடத்திலும் உம் - முற்றும்மைகள், பெரியவர் சிறியவர் என்பவற்றிற்கு அரிது என்பதற்கு எழுதியுள்ளதுபோலக் கொள்க.
126. சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து. (இ-ள்.) சான்றோர் என மதித்து - சற்குணம் நிறைந்தவர்களென்று நினைத்து, மன் சார்ந்தாய் - (சிலரை) மிகவும் நேசித்தாய்; சார்ந்தாய்க்கு - (அப்படி) நேசித்த உனக்கு, சார்ந்தார்கண் - (நீ) சேர்ந்தவரிடத்து, சான்றாண்மை - (அந்த) சற்குண நிறைவு, இல் ஆயின் - இல்லையானால், சார்ந்தோய் - (அவர்களை) அடுத்தவனே! கேள் - (அதற்கு நான் சொல்லும் உவமையை) கேள்; (அது) ஒருவன் - ஒருவன், அகத்து சாந்து உண்டு என்று- உள்ளே வாசனை வஸ்து இருக்கிறதென்று நினைத்து, செப்பு திறந்து - பரணியைத் திறந்து, அகத்து - உள்ளே, பாம்பு கண்டது உடைத்து - பாம்பைப் பார்த்த உவமானத்தையுடையது, எ-று. நீ சிலரை ஆராயாமல் மஹாகுணவான்களென்று நினைத்து நட்புக் கொண்டு பின்பு அவர்களிடத்து அந்த நட்புக்குணம் இல்லையென் றுனக்குத் தெரிந்தால் சாந்துச் செப்பு என்று ஒரு பரணியை நீ திறந்து அச்சாந்தில்லாமல் பாம்பிருக்கக் கண்டது போல் உன் குற்றத்தால் வந்ததென நினைத்துக் கொள். இதனால் ஒருவரை நன்காராய்ந்து நேசிக்க வேண்டும். அப்படி நேசியாமற் போனால் அதனால் செப்புக்குள்ளிருந்த பாம்பினால் தீமை வருவது போலத் தீமை யுண்டாகும். ஆகையாலதற்க கஞ்ச வேண்டு மென்பதாயிற்று. சான்றோர் - சால் - பகுதி, (=நிறைவு), ஆர் - விகுதி, றகரம் - இடைநிலை, லகரம் னகரமானது சந்தியும் விகாரமும், விகுதி ஆகாரம் ஓகாரமானது [பொது. நன். சூ. 2, விதியால்] மன் - உரிச்சொல். சார்ந்தாய்க்கு - முன்னிலை வினையாலணையும் பெயர். சார்ந்தோய் - விளி; ஈற்று னகரம் யகரமானது விளியுருபு. கண்டது - வினையாலணையும் பெயர், இங்கே காணப்பட்ட உபமானத்தை யுணர்த்திற்று.
127. யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் - சாரல் கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு. (இ-ள்.) சாரல் - மலைச்சாரல்களிலே, கனமணி நின்று இமைக்கும் - காந்திமிகுந்த இரத்தினங்கள் இருந்து பிரகாசிக்கின்ற, நாட - நாட்டை யுடைய அரசனே! கேள் - கேட்கக் கடவாய்; ஒருவர்தம் உள்ளத்தை - ஒருவருடைய மனத்தை, தேரும் துணைமை யுடையவர் ஒருவர் - ஆராய்ந்தறியும் வல்லமை யுடையவராகிய ஒருவர், யார் - எவர் இருக்கிறார்கள்? [ஒருவருமில்லை]; (ஏனெனில்) மக்கள் மனம் வேறு - மனிதர்கள் இதயமானது வேறு தன்மையையுடையது; செய்கையும் வேறு - (அவர்கள்) செய்யுங் காரியமும் வேறாயிருக்கின்றது, எ-று. உலகத்தில் மனிதர் மனத்தில் நினைத்தபடி செய்யாமல் மேலுக்கு வஞ்சனையாய் வேறுவிதம் நடத்துகிறார்களாகையால், செய்கையினாலே உள்ளத்தை யின்னபடி யென்று அறியக் கூடாது; ஆகவே செய்கையைக் கொண்டே நல்லவரென்று எண்ண வேண்டாம்; அப்படித் தேராத போது அவர் கூட்டுறவுக்கு அஞ்ச வேண்டும் என்பதாயிற்று. துணைமை - மை - பண்புப்பெயர் விகுதி. வேறு - ஐம்பான் மூவிடங்கட்கும் பொதுவான குறிப்பு வினைமுற்று. சாரல் - தொழிற்பெயர், இடப்பெயர்க்கு ஆகுபெயர்.
128. உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக்கண் மாசாய் விடும். (இ-ள்.) புனல் அருவிநீர், தெள்ளி - தெளிந்து, செதும்பு - சேற்றை, நின்று அலைக்கும் - (தான்) இருந்து போகும்படி செய்கிற, பூ குன்ற நாட - அழகிய மலையுள்ள நாட்டை யுடையவனே! உள்ளத்தான் நள்ளாது - மனத்தினால் விரும்பாமல், உறுது தொழிலர் ஆய் - உறுதியான தொழிலைச் செய்பவராய், கள்ளத்தால் நட்டார் - வஞ்சனையால் சிநேகித்தவர்களுடைய, சுழி கேண்மை - மிகுதியான சிநேகம், மனத்துக் கண் - மனதில், மாசு ஆய்விடும் - குற்றமுள்ளதாய் நிற்கும், எ-று. மனமொப்பி நேசியாமல் இவர் உண்மையாக நேசித்தவரென்று நம்பத்தக்க உறுதியான செய்கைகளைச் செய்து கபடமாக நேசிப்பவர்களுடைய சிநேகம் மனதிற் குற்றமாயிருக்கும், அதாவது பின்னிட்டுத் தீமையை விளைக்கு மென்பதாம். இதனால் அதற்கு அஞ்சவேண்டு மென்பதாயிற்று. தள்ளாது - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி; து - வினையெச்ச விகுதி. நட்டார் - நள் - பகுதி, ட - இடைநிலை, ளகரம் டகரமானது சந்தி, ஆர் - விகுதி; வினையாலணையும் பெயர், கழி - உரிச்சொல். கேண்மை - கேள் (=உறவினன், க்ஷேமத்தை விசாரிப்பவனானதால்) பகுதி, மை - பண்புப் பெயர் விகுதி. தெள்ளிப்புனற் செதும்பு நின்றலைக்கும் - அருவிநீர் சேற்றைப் போக்கித் தெளிவாய் நிற்கின்ற தென்பதாம். தெள்ளி - வினையெச்சம், தெள்ளு - பகுதி. அலைக்கும் - (அலையச் செய்கிற), பிறவினைப் பெயரெச்சம்.
129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால் நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு. (இ-ள்.) ஓக்கிய - (தான் பிறன்மேல்) வீசிய ஒள் வாள் - பிரகாசமான கத்தி, தன் ஒன்னார் கை பட்டக்கால் - தன் சத்துருவின் கையிற் சேர்ந்தால், ஊக்கம் அழிப்பது மெய் ஆகும் - (தன்) தைரியத்தைப் போக்கடிப்பது உண்மையாகும்; ஆக்கம் - (தான் மூடருக்குச் செய்த) உபகாரம், இருமையும் சென்று சுடுதலால் - (இம்மை மறுமை என்கிற) ஈரிடத்திலும் தொடர்ந்து வருத்துவதால், கல்லார்கண் தீர்வு - படிப்பில்லாத அயோக்கியரிடத்தினின்றும் நீங்கி யிருப்பது, நல்ல கருமமே - நல்ல காரியந்தான், எ-று. தான் ஒருவனைக் கொல்லுதற்கு மேலெடுத்த வாள் தவறிக் கொல்ல நினைக்கப்பட்டவன் கையிற் சேர்ந்தால், கத்தியைத் தூக்கினவனுக்குத் தைரியம் அழிந்து போகின்றது; ஆதலால் அவ்வாளாயுதத்துக்கு அஞ்சிப் பகைவரிடத்தினின்றும் நீங்க வேண்டும். அப்படியே தான் அயோக்கியனுக்கு ஓர் உபகாரம் செய்தால் அவன் அதைக் கொண்டு பல அக்கிரமங்கள் செய்வானாதலால் உபகாரம் செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் கீர்த்தியும் கெடுவது மன்றி மறுமையில் நரகத்துக்கு மேதுவாகும். ஆகவே வாளா யுதத்துக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அயோக்கியனுக்கு உபகாரம் செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டுமென்பது கருத்து. அழிப்பதூஉம் - உலகத்தில் பல காரியங்களைப் போல இதுவும் மெய்யாயிருக்குமெனப் பொருளைத் தருதலால் எதிரது போற்றிய எச்சவும்மை; இன்னிசையளபெடை. ஓக்கிய - பிறவினைப் பெயரெச்சம், ஓக்கு - பிறவினைப் பகுதி, ஓங்கு - தன்வினைப் பகுதி; மெல்லொற்று வல்லொற்றானது பிறவினைக் குறி, இன் - இடைநிலை ஈறு தொக்கது, அ - பெயரெச்ச விகுதி, யகரம் - உடம்படுமெய். ஆக்கம் - பொருட்பெயர்; அம் - செயப்படுபொருள் விகுதி; இங்கு பொருளெனக் கொள்ளினும் குற்றமில்லை. கல்லார்கண் - ஏழாம் வேற்றுமை, கண் - இங்கு நீக்கப் பொருளில் வந்தது. கல்லாதார் - கல்லாமை என்பது அயோக்கியதை வரையிற் கொள்ளப்பட்டது.
130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும் சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு. (இ-ள்.) நெஞ்சே - மனமே!, (நீ) மனை பாசம் கைவிடாய் - மனையாளிடத்துள்ள ஆசையை விடமாட்டாய்; மக்கட்கு என்று - மக்களுக்கு (பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும்) என்று, ஏங்கி - ஏக்கமுற்று, எனைத்து ஊழி - எவ்வளவு காலம், வாழ்தியோ - வாழ்வாயோ?, சிறுவரையே ஆயினும் - அற்பகாலமானாலும், எனைத்தும் - எவ்வளவாவது, செய்த நன்று அல்லால் - செய்த நற்காரியமே யல்லாமல், உயிர்க்கு - ஆத்துமாவுக்கு, உறு பயனோ - அடியும்படியான நற்பயனோ, இல்லை - (வேறு) இல்லை, எ-று. மனமே! மனையாளிடத்தும் மக்களிடத்தும் ஆசாபாசம் நீங்காமல் அவர்களுக்கே வேண்டுங் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று பெரிய ஏக்கங்கொண்டு எத்தனை காலம் நிற்கப் போகிறாய்? இவ் வேகத்தோடேயே மாள்வாயல்லது வேறொரு நற்பயனைப் பெற்றாயில்லை; நீ இருக்கும் சொற்ப காலத்திலாகிலும் தான தரும முதலிய நற்காரியங்கள் செய்தால் அதுதான் ஆத்துமாவுக்கு நற்பயனாகும். இதனால் உயிருக்கு உறுதி செய்யாமல் வீண் காலம் கழிப்பதற்கு அஞ்ச வேண்டுமென்பது கருத்து. மனை - மனையாளுக்கு ஆகுபெயர். எனைத்து - என் என்பதன் மேல் அளவைக் காட்டுகிற ஐ விகுதிபெற்ற எனை என்பது பகுதி, து - விகுதி. முந்தி யெழுதியது போல் எ என்னும் வினாவின் மேல் னகரச் சாரியை வந்ததென்றும் கொள்ளலாம். வாழ்தி - இ - முன்னிலை விகுதி, த் - எழுத்துப்பேறு, தி - விகுதியென்பது நேர்; இங்கே எதிர் காலத்துக்கு வந்தது. வாழ்தியோ - ஓ - வினாப்பொருளில் வந்தது. இகழ்ச்சியைக் குறிக்கின்றது. உறுபயனோ - இதில் ஓகாரம் முந்திச் சொன்ன பொருளினின்றும் வேறாந்தன்மையைக் குறிக்கின்றது. அறத்துப்பால் முற்றிற்று. பொருட்பால்
[அவற்றுள் எல்லாப் பொருள் நுட்பத்தையு மறிவதற்குக் காரணமாகிய கல்வி முதலில் கூறப்பட்டது.] 14. கல்வி
[அதாவது கற்க வேண்டிய நூல்களைக் கற்பது.]
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (இ-ள்.) குஞ்சி அழகும் - மயிர் முடியி னழகும், கொடுதானை கோடு அழகும் - வளையும்படியான ஆடையினது கரையழகும், மஞ்சள் அழகும் - பூச்சினது அழகும், அழகு அல்ல - அழகாக மாட்டா, நெஞ்சத்து - மனதில், நல்லம் யாம் என்னும் - யாம் நல்லவர்களா யிருக்கக் கடவோ மென்கிற, நடுவு நிலைமையால் - நடுவு நிலைமையைத் தருதலால், கல்வி அழகே - கல்வியினா லுண்டாகின்ற அழகே, அழகு - அழகாகும், எ-று. மயிர்களைச் சீர்ப்படுத்தி முடிப்பதனாலும் ஓரங்களில் பட்டுக் கரைபோட்ட வஸ்திரங்களைத் தரிப்பதனாலும், நல்ல பரிமளத் திரவியங்களை மெய்யிற் பூசுவதனாலும் உண்டாகின்ற அழகு அழகாக மாட்டா, நாம் மறுமைக்கு அஞ்சிப் பக்ஷபாதமில்லாமல் நடக்க வேண்டுமென்கிற நடுவுநிலைமையைக் கல்வி யுண்டாக்குவதால் அதனால் வரும் அழகே விசேஷமென்பதாம். மஞ்சள் என்பது பூசத்தக்க வாசனைத் திரவியங்களுக்கெல்லாம் உப லக்ஷணமாகக் கொள்ளப்பட்டது. [நன். பொது. சூ. 7] கொடுமை என்பது இங்கே மடியுந்தன்மைக்குக் கொள்ளப் பட்டது. நல்லம் - தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. அழகே - தில் ஏகாரம் - பிரிநிலை.
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. (இ-ள்.) இம்மை பயக்கும் - இவ்வுலக சௌக்கியத்தைக் கொடுக்கும்; ஈய - (பிறருக்குக்) கொடுப்பதனால், குறைவு இன்று - குறையுந் தன்மையை யுடையதன்று; தம்மை - (கற்றவராகிய) தம்மை, விளக்கும் - விளங்கச் செய்யும் [அதாவது எங்கும் புகழ்பெறச் செய்யுமென்றபடி]; தாம் உளரா - தாம் உயிரோடிருக்க, கேடு இன்று - கெடுதலை யுடையதன்று; (ஆதலால்) எம்மை உலகத்தும் - எத்தன்மையான உலகத்திலும், கல்வி போல் - கல்வியைப் போல, மம்மர் அறுக்கும் மருந்து - மயக்கத்தை அறுக்கும்படியான மருந்தை, யாம் காணேம் - யாம் கண்டோமில்லை, எ-று. இம்மையிற் சுகத்தையுண்டாக்கி, பிறருக்குக் கொடுக்கவும் குறைபடாமலிருந்து தமக்குப் புகழை யுண்டாக்கி, தாமிருக்கவும் அழிதலில்லாம லிருப்பதால் எல்லாப் பொருளிலும் கல்வியே மேலானதென்பது கருத்து. இதனை மருந்தென்றது மயக்கத்தைத் தீர்த்தலும் சுகத்தை யுண்டாக்குதலுமாகிய காரணங்களா லென்க. மற்ற மருந்து சுகத்தைக் கொடுத்தாலும் பிறருக்குக் கொடுப்பதனால் குறையும், தாம் இருக்கும் போது கெடவும் கெடும், ஆதலால் இம்மருந்து எல்லா மருந்திலும் மேலென்றார். ஆல் - அசைகள், இம்மை - சுகத்திற்கு ஆகு பெயர். எம்மை - அம்மை இம்மை என்பதைப் போல் மை விகுதி. இடப்பொருளில் வந்தது.
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும். (இ-ள்.) களர் நிலத்துப் பிறந்த உப்பினை - உவர் நிலத்தில் உண்டான உப்பை, சான்றோர் - யோக்கியர்கள், விளை நிலத்து நெல்லின் - கழனியில் விளையும் நெல்லைக் கொள்வது போல, விழுமிது ஆ கொள்வர் - மேன்மையான பொருளாகக் கொள்வார்; (அதுபோல்) கடை நிலத்தோர் ஆயினும் - கீழ்ச்சாதியிற் பிறந்தவர்களானாலும், கற்று அறிந்தோரை - (நூல்களை) கற்று (அவற்றின் சாரத்தை) அரிந்தவர்களை, தலை நிலத்து - மேலான ஜாதியில், வைக்கப்படும் - வைக்க வேண்டும், எ-று. பிறப்பைப் பற்றி உயர்வு தாழ்வு யோசியாமல் அவர்களிடத்துண்டான கல்விச் சிறப்பினால் அவரை உயர் பிறப்பாளராகக் கொண்டு அவர்களிடத்தில் கற்க முயல வேண்டு மென்பது கருத்து. நெல்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. விழுமிது - வினையாலணையும் பெயர், விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - ஒன்றன் விகுதி, படும் - இது ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான வியங்கோள் வினைமுற்று. அல்லது விதிப் பொருளையுடைய வினைமுற்று. இதை நன்னூல் உரையாசிரியர் தேற்றப் பொருளில் வந்த தொழிற்பெயரென்கிறார்.
134. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை; மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்; எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற. (இ-ள்.) வைப்புழி - வைத்த இடத்தில், கோள் படா - (பிறரால்) அபகரிக்கப்படமாட்டாது; வாய்த்து - (தமக்கு) கிடைத்து, ஈயில் - (பிறருக்கு) கொடுத்தால், கேடு இல்லை - அழிவதில்லை; மிக்க சிறப்பின் - மேலான (படைச்) சிறப்பையுடைய, அரசர் செறின் - அரசர் கோபிப்பாராயின், வவ்வார் - பிடுங்கிக் கொள்ள மாட்டார்கள்; (ஆதலால்) ஒருவன் -, மக்கட்கு - (தன்) பிள்ளைகளுக்கு, எச்சன் என - (தன் சம்பாத்தியத்தின்) மிஞ்சின ஆஸ்தியென்று, செய்வன - செய்யத்தக்கவை, விச்சை - கல்வியாம், பிற அல்ல - மற்றவைகள் அல்ல, எ-று. மற்று - அசை. செல்வப் பொருள் திருடப்படும்; பிறருக்குக் கொடுத்தா வழிந்து போம்; சேனாபலமுள்ள அரசரும் கைக்கொள்வார்கள்; கல்விப் பொருளுக்கு இத்தன்மையான ஈனங்களில்லை யாதலால் செல்வப் பொருளிலும் கல்விப் பொருளே சிறந்ததென்பதாம். கோள் - கொள் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முதனீட்சி விகாரம் பெற்றது, இரண்டாம் வேற்றுமைத் தொகை, சிறப்பின் - இன் - சாரியை. எச்சம் - எஞ்சியது எச்சம்; எஞ்சு - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி, ஞகரம் சகரமானது வலித்தல். செய்வன - செய்வது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர். விச்சை - வித்யா என்னும் வட சொல்லின் விகாரம். பிற - பலவின் பாற் பெயர், வேற்றுமைப் படும்போது அற்றுச் சாரியை பெறும்.
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து. (இ-ள்.) கல்வி கரை இல - கல்விகள் முடிவில்லாதன; கற்பவர் நாள் சில - கற்பவர்களுடைய வாழ்நாள்கள் சில; மெல்ல நினைக்கில் - பொறுத்து யோசித்தால், பிணி பல - கற்பவர்க்கு அநேகம் வியாதிகளுளவாம்; (ஆதலால்) நீர் ஒழிய பால் உண் குருகின் - நீரை நீக்கிப் பாலையே உண்ணுகின்ற அன்னப் பறவையைப் போல், தெரிந்து - (நூல் திறங்களை) அறிந்து, தெள்ளிதின் - விவேகத்தினால், ஆராய்ந்து -, அமைவுடைய - (தமக்குப்) பொருந்தினவைகளை, கற்ப - கற்பார்கள், எ-று, ஏ - அசை. ஒருவன் முற்றும் கற்க வேண்டுமானால் கல்விகள் அபாரமாக யிருத்தலினாலும் ஆயுள் அற்பமானதா யிருப்பதாலும், பலவியாதிகள் ச்மபவிப்பதனாலும் அது இசையாது; ஆகவே நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் கற்கின்றார்கள். எங்ஙனமெனில் நீரைப் பிரித்துப் பாலையுண்ணும் அன்னத்தைப் போல். நீரையும் பாலையும் கலந்து வைக்கில் நீரைப்பிரித்துப் பாலை யன்னம் உண்கிறதென்று கூறுகிறார்கள். கல்வி - கல் - பகுதி, வி - செயப்படுபொருள் விகுதி, கற்கத்தக்கவை யென்பது திரண்டபொருள். கல்வி கரையில என்பது முந்தி யெழுதியுள்ள இலக்கணத்திற் கண்டு கொள்க. மெல்ல - அவசரப்படாமல், மென்மை யடியாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம். தெள்ளிது - தொழிற்பெயராய்ப் பண்பை யுணர்த்துகின்றது. தெளி - பகுதி, இ - விகுதி, ளகரம் - விரித்தல், கற்ப - பலர்பால் வினைமுற்று.
136. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய் அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற மகன்துணையா நல்ல கொளல். (இ-ள்.) தோணி இயக்குவான் - மரக்கலத்தை நடத்துவோன், காணில் - ஆராய்ந்தால், தொல்லை வருணத்து - பழமையான சாதிகளில், கடைபட்டான் என்று - கடைசியான சூத்திர சாதியிற் சேர்ந்தவன் என்று, இகழார் - (பெரியோர்) நிந்திக்கமாட்டார்; காணாய் - நீ பார்; நூல் கற்ற - சாஸ்திரங்களைப் படித்து, மகன் துணையா - மனிதன் சகாயமாக விருக்க, நல்ல கொளல் - நல்ல நூற்பொருள்களைக் கற்றல், அவன் துணையா ஆறு போய் அற்று - அந்தத் தோணி இயக்குவான் துணையா நிற்ப ஆற்றைக் கடந்தது போலாகும், எ-று. படவு ஓட்டுவோன் ஈனசாதிய னானாலும் இன்றியமையாது அவனைக் கொண்டே ஆற்றைக் கடப்பது போலக் கற்றவன் ஈனசாதிப் பிறப்பின னானாலும் அவசியமான போது அவனைக் கொண்டே கற்க வேண்டிய நூல்களைக் கற்க வேண்டுமென்பது கருத்து. இயக்குவான் - பிறவினை வினையாலணையும் பெயர், இயக்கு - பிற வினைப்பகுதி, இயங்கு - தன் வினைப் பகுதி, தொல்லை - தொல் - பகுதி பண்படி, ஐ - விகுதி. தொல்லை வருணம் - பண்புத்தொகை. காணாய் அசையுமாம். போயற்று - போய் - செய்தெனெச்சத்திரிபு, அற்று - உவமையைக் காட்டும் குறிப்பு வினைமுற்று; இரண்டும் சேர்ந்து, போனால் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து என்னும் பொருளைத் தரும், இது முன்னோர் கொள்கை. செய்தெனெச்சத்தைத் தொழிற் பெயர் போலக் கொண்டு போனது போலாம் எனப் பொருள் கொள்ளுதல் இக்காலத்து வழக்கு. நல்ல - பலவின்பாற்பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை.
137. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார் இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி. (இ-ள்.) தவல் அரு - குற்றமில்லாத, தொல் கேள்வி தன்மை உடையார் - பழமையான நூற்கேள்விகளைக் கேட்குந் தன்மையை உடையவர்கள், எஃகு உடையார் தம்முள் - ஆயுதம்போற் கூர்மையான புத்தியை யுடையவர்களுக்குள்ளே, குழீஇ - கூடி, இகல் இலர் - மாறுபடுத லில்லாதவர்களாகி, நகலின் - மகிழ்வதைக் காட்டினும், இனிது ஆயின் - இன்ப முள்ளதாயின், அகல் வானத்தும்பர் - விசாலமாகிய வானத்தின் மேல், உறைவார் - வாசஞ்செய்கின்ற வேதர்களுடைய, பதி - ஸ்தானமாகிய சொர்க்கத்தை, காண்போம் - பார்ப்போம், எ-று. நன்றாய்க் கற்றவர்களோடு கூடி நேசமாயிருந்து அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சொர்க்கத்தி லுண்டாகிய அனுபவம் சிறந்ததல்ல என்பதாம். எஃகு ஆயுதம், இங்கு கூர்மை பற்றி புத்திக்கு ஆகுபெயராக கொள்ளப்பட்டது. தவலரு - அருமையாவது இன்மை. குழீஇ - குழு - பகுதி, இ - விகுதி, அளபெடை இன்னோசைக்குவந்தது, செய்தெனெச்சம். நகலின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், இதனை நீக்கப் பொருளென்பாரும் உளர்.
138. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர் தொடர்பு. (இ-ள்.) கனை கடல் - ஒலிக்கின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! கற்று அறிந்தார் கேண்மை - நூல்களைக் கற்று (அவற்றின்) சாரத்தை யறிந்தவரது சிநேகமானது, நுனியில் கரும்பு தின்றற்று - நுனியிலிருந்து கரும்பைத் தின்றது போலாம்; பண்பு இலா - குணமில்லாத, ஈரம் இலாளர் - சாரமற்றவர்களுடைய, தொடர்பு - சிநேகமானது, நுனி நீக்கி - நுனியைத் தள்ளி, தூரில் தின்றன்ன தகைத்து - வேரிலிருந்து தின்றதையொத்த தன்மையை யுடையது, எ-று. அரோ, ஏ - அசைகள். யோக்கியருடன் சிநேகிப்பது கரும்பை நுனியிலிருந்து தின்றது போல வர வர ருசியாயிருக்கும்; சற்குணமென்னும் சாரமில்லாதானுடைய சிநேகம் வேரிலிருந்து கரும்பைத் தின்பது போல வர வர ருசியில்லாமல் வெறுக்கத்தக்க தென்றபடி. ஆதலால் கற்றவரையே சேரவேண்டு மென்பதாயிற்று. கனைகடல் - வினைத்தொகை நிலைத் தொடர், தின்றற்று - போயற்று என்பதைப் போற் கொள்க. நுனியில், தூரில் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருளன. இலாளர் - இன்மையை யாள்பவர்.
139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (இ-ள்.) தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் நிறம் பாதிரி பூ சேர்தலால் - ஒண்மையான நிறத்தையுடைய பாதிரிப் பூவைச் சேர்ந்திருப்பதினாலே, புது ஓடு - புதிய பானையோடானது, தண்ணீர்க்கு - (தன்னில் தங்கிய) ஜலத்துக்கு, தான் பயந்த ஆங்கு - தான் (வாசனையைக்) கொடுத்தது போல, கல்லாரே ஆயினும் - (தாம்) கல்வி கற்காதவராயினும், கற்றாரை சேர்ந்து ஒழுகின் - கற்றோரைச் சேர்ந்து (அவர் போல) நடந்தால், நல் அறிவு - நல்ல விவேகமானது, நாளும் - தினந்தோறும், தலைப்படுவர் - உண்டாகப் பெறுவர், எ-று. கல்லாதாருக்கும் கற்றாரோடு சேர்க்கையால் விவேகமுண்டாம், எங்ஙனமெனில் பானையோடானது பாதிரிப் பூவைச் சேர்ந்து தன்னிலுள்ள நீருக்கு வாசனையைத் தந்தது போல என்பதாம். அறிவு தலைப்படுவர் - "உயர்திணை தொடர்ந்த" என்பது விதி. புத்தோடு - புது ஓடு என்பதில் தகரம் இரட்டித்தது [நன். உயிரீறு. சூ. 33ன் உரையைக் காண்க].
140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம் போஒம் துணையறிவார் இல். (இ-ள்.) அலகு சால் - கணக்குமிகுந்த, கற்பின் - சாஸ்திரங்களுக்குள்ளே, அறிவு நூல் கல்லாது - ஞான சாஸ்திரங்களைக் கற்காமல் விட்டு, உலக நூல் ஓதுவது எல்லாம் - இவ்வுலகத்திற்குப் பயன் படும்படியான நூல்களைப் படிப்பதெல்லாம், கலகல கூஉந் துணை அல்லால் - கலகலவென்று சும்மாக் கூவுமளவை யுடையதே யல்லது, கொண்டு - (அவற்றைக்) கொண்டு, தடுமாற்றம் - (சம்சாரத்தில்) தடுமாறுவது, போந் துணை - நீங்குமளவாகிய மேன்மையை, அறிவார் இல் - அறிபவர்கள் இல்லை, எ-று. பல நூல்களிருந்தாலும் ஞானநூலையே முக்கியமாய்க் கற்க வேண்டும்; அதனைக் கல்லாதுவிட்டு உலக இன்பத்துக்கு வேண்டிய நூலையே கற்பது யாதொரு பொருளு மில்லாமல் கலகலவென்று சும்மாக் கூவுவது போல் வீணே யல்லாமல் சம்சார பந்தத்தை நீக்கும் மேன்மையதல்ல என்பதாம். இதனால் ஞான நூலை முக்கியமாய்க் கற்க வேண்டுமென்பதாயிற்று. சால் - வினைத்தொகை, அல்லது உரிச்சொல். கற்பு - கற்கப்படு நூலுக்கு ஆகுபெயர். அறிவு நூல் - இரண்டாம் வேற்றுமையுருபும் பயனு முடன்றொக்கதொகை. கல்லாது - எதிர்மறை வினையெச்சம். ஓதுவதெல்லாம் - ஒருமையிற் பன்மைமயக்கம். கலகல - அநுகரணம் பொருளில்லாமையைக் குறிக்கின்றது. கூஉம் - கூ - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, அளபெடை இன்னிசை. கூஉந்துணை - பெயரெச்சத் தொடர்ப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இங்ஙனம் வருவதற்கு விதியில்லையாயினும் அநுபவத்தாற் கொள்ள வேண்டும். வினைத்தொகையாக் கொள்ளின் நகரம் மிகுவதற்கு வழி இல்லையாம். அல்லது துணையென்பதற்குத் துணையை யுடையதெனப் பொருள் கொள்ளலாம். போஒந் துணையும், இப்படியே. 15. குடிப்பிறப்பு
[இஃது நல்ல குலத்திற் பிறப்பதன் மேன்மையைக் கூறியது. நற்குடியிற் பிறந்தார்க்கே பெரும்பாலும் கல்வி கேள்விப் பயன்கள் அமையுமாதலால், இது கல்வியின் பின் வைக்கப்பட்டது.]
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார் இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று. (இ-ள்.) உடுக்கை உலறி - உடுக்கும் வஸ்திரமும் கெட்டு, உடம்பு அழிந்த கண்ணும் - தேகம் மெலிந்து நாசப்பட்ட போதும், குடி பிறப்பு ஆளர் - நற்குடியிற் பிறந்தவர்கள், தம் கொள்கையில் குன்றார் - தமக்குரிய ஒழுக்கங்களில் குறைய மாட்டார்; இடுக்கண் தலை வந்தக் கண்ணும் - (பசி தாகங்களால்) துன்பம் நேர்ந்த போதும், அரிமா - சிங்கம், கொடி புல் - கொடியாயிருக்கும் புல்லை, கறிக்குமோ - தின்னாது, எ-று. பற்று - அசை. எவ்வளவு பசி வருத்த முண்டானாலும் சிங்கம் புல்லைத் தின்னாதது போல் நற்குடியிற் பிறந்தவர் எத்தனை வறுமை யுண்டானாலும் தமக்குரிய நல்லொழுக்கங்களில் குறைய மாட்டார்க ளென்பதாம். உடுக்கை யுலறி என்பது வறுமையின் மிகுதியைக் காட்டுகின்றது. தம் கொள்கையாவன; மெய்கூறல், பரோபகாரம் செய்தல், அன்புடைமை, ஆசாரத்திலொழியாமை முதலியன, தலைவருதல் - தன்னிடத்தில் வர என்பது பொருள். அரிமா - அரி - சிங்கம், மா மிருகம், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. கொடிப்புல் - மாடு முதலியவையும் வந்து தின்னுதலால் கொடிப்புல் என்று கூறினார். உலறி - உலறு - பகுதி, இ - விகுதி. அழிந்தக்கண், வந்தக்கண் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உம் - இழிவு சிறப்பு. கறிக்குமோ என்பதனால் உட்கொள்ளாவிடினும் கறிப்பதுமில்லை யென்றபடி, ஓ - எதிர்மறை.
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (இ-ள்.) வான் தோயும் - வானம் அளாவிய, மை தவழ் வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற மலையையுடைய அரசனே!, சான்றாண்மை - சற்குணநிறைவும், சாயல் - தேஜஸும், [அல்லது மேன்மையும்,] ஒழுக்கம் - நல்லொழுக்கமும், இவை மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வான் தோய் - கீர்த்தியால் சுவர்க்கத்திற் சேர்ந்திருக்கிற, குடிப்பிறந்தார்க்கு அல்லது - உயர்குலத்திற் பிறந்தவர்களுக் கல்லாமல், பெரு செல்வம் - பெரிய செல்வமானது, எய்தியக் கண்ணும் - வந்தடைந்த போதிலும், பிறர்க்கு - நல்ல குடியிற் பிறவாதவர்களுக்கு, படர் - உண்டாகாவாம், எ-று. சான்றாண்மை முதலிய நற்குணங்கள் உயர்குலத்தார்க்கே இயல்பா யமைவனவேயன்றி இழிகுலத்தார்க்கு அமையாவென உயர்குலச் சிறப்புக் கூறப்பட்டது. படாஅ - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; அளபெடை அசையை நிறைக்க வந்தது.
143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு ஒன்றா உணரற்பாற் றன்று. (இ-ள்.) இருக்கை எழலும் - (பெரியோரைக் கண்டால்) தம் இருப்பிடத்தை விட்டெழுந்திருப்பதும், எதிர் செலவும் - எதிர்கொண்டு செல்லுதலும், ஏனை - இன்னமும், விடுப்ப - (அவர்கள்) விடை கொடுக்க, ஒழிதலோடு - ஒழிதலுடனே பிரிதலும், இன்ன - இப்படிப்பட்டவைகளை, குடிப்பிறந்தார் - நல்ல குடியிற் பிறந்தவர்கள், குன்றா ஒழுக்கமாக் கொண்டார் - குறையாத நல்ல நடக்கைகளாக ஏற்றுக் கொண்டார்கள், (ஆதலால் அவர்களை) கயவரோடு - மூடர்களோடு, ஒன்றா - சேர்த்து, உணரல் பாற்று - அன்று - மதிப்பது பான்மையை யுடையதல்ல, எ-று. பெரியோர் தம்மிடம் வந்தால் தாம் இருந்தவிடத்தை விட்டெழுந்திருந்து எதிர்சென்று உபசரித்து அவர்கள் விடை கொடுத்த பின் திரும்பி வருதல் முதலாகிய காரியங்களை இன்றியமையா ஒழுக்கங்களாகக் குடிப்பிறந்தார் கொண்டிருப்பதனால் அங்ஙனம் கொள்ளாத மூடர்களோடு அவர்களைச் சேர்த்துப் பார்ப்பது நன்றன்று என்பதாம். எழல் - எழு - பகுதி, அல் - விகுதி; "முற்றுமற்றொரோவழி" என்றதனால் உகரம் கெட்டது. செலவு - செல் - பகுதி, அ - சாரியை, உ - விகுதி. ஒழிதலோடு - ஓடு - எண்ணிடைச் சொல். இன்ன - சுட்டு அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர். இ (அல்லது) இன் - பகுதி, அ - விகுதி. கயவர் - கயமை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். ஒன்றா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஒன்ற என்பது பொருள். உணரற்பாற்று - உணரலாகிய பான்மையை யுடையது; உணரல் + பால் + று எனப் பிரித்துக் கொள்க.
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ புணரும் ஒருவர்க் கெனின்? (இ-ள்.) நல்லவை செய்யின் - நல்ல காரியங்களைச் செய்தால், இயல்பு ஆகும் - செய்ய வேண்டிய முறைமை யென்னலாகும்; தீயவை - தீயகாரியங்களைச் (செய்தால்), பல்லவர் தூற்றும் - பலரும் பரவச்செய்கிற, பழி ஆகும் - நிந்தையாகும், ஒருவர்க்கு புணரும் எனின் - (நற்குடிப்பிறப்பு) ஒருவர்க்குச் சேர்ந்தால், எல்லாம் உணரும் - எல்லாவற்றையு முணர்ந்த, குடி பிறப்பின் ஊதியம் - குடிப்பிறப்பினுடைய பயன், என் - என்ன? எ-று. ஓ - அசை. உலகத்தில் ஒருவர் நல்லொழுக்கமாக நடந்தால் அதனை உலகத்தார் விசேஷமாகக் கொள்ளாது நடக்க வேண்டிய இயல்பு தானென்று சாமானியமாகக் கொள்ளுகின்றார்கள்; தீயொழுக்கம் ஒழுகினாலோ தூஷிக்கின்றார்கள். ஆகவே நற்குடிப் பிறப்பினர்க்கு நல்லொழுக்கத்தால் யாதொரு பிரயோஜனமு மில்லை. பிறர் விசேஷமாகக் கொண்டாடாமை பற்றி நற்குடிப் பிறந்தார் தமக்கியல்பான நல்லொழுக்கத்தினின்றுந் தவறார் என்பது கருத்து. எல்லாமுணரும் என்றதனால் சகலகலா ஞானங்களை யுணர்வதற்கு நற்குடிப் பிறப்பு எளிதாயிருக்கின்ற தென்பதாம். எல்லாம் உணரும் என்பதற்கு எல்லாமறிந்திருக்கிற எனவும் பொருள் கொள்ளலாம் அப்போது பிரசித்தமான நற்குடிப் பிறப்பு என்றதாயிற்று. பல்லவர் - பல் - பகுதி, அ - சாரியை, அர் - பலர்பால் விகுதி, வகரம் உடம்படுமெய் 'பல்' தனிக்குறில் முன்னொற் றாதலால் லகரம் இரட்டிற்று.
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார். (இ-ள்.) கல்லாமை அச்சம் - (தாம்) கல்லாமைக்கு அஞ்சுதலும், கயவர் தொழில் அச்சம் - மூடர்களுடைய தொழிலுக்கு அஞ்சுதலும், சொல்லாமை உள்ளும் - (பொய் குறளை முதலியவற்றைச்) சொல்லாமலிருப்பதிலும், ஓர் சோர்வு - (எந்த விடத்தில் தவறிப் போனோமோ வென்கிற) தளர்ச்சிக்கு, அச்சம் - அஞ்சுதலும், இரப்பார்க்கு - யாசகர்களுக்கு, ஒன்று ஈயாமை - (அவர் விரும்பிய) ஒரு பொருளைத் தாராமைக்கு, அச்சம் - அஞ்சுதலும், எல்லாம் - (இப்பேர்ப்பட்ட) பல அச்சங்களும் (நற்குடிபிறந்தார்க்கு உண்டாகின்றனவாம்); (அங்ஙனம் யாதொரு அச்சமுமில்லாத) இ மாணா குடி பிறந்தார் - இப்படிப்பட்ட - மரத்தன்மையை யுடையோர், (அதாவது மரத்தினாற் செய்த பிரதிமைகளைப் போன்றவர்கள்), எ-று. நல்ல குடியிற் பிறந்தார்க்கு கல்லாமை முதலிய பலவற்றிலும் அச்சம் உண்டாகின்றது. ஆதலால் நற்குடிப் பிறப்பென்ன வென்று புகழாப் புகழ்ச்சியாக் கூறியதனால் அது மேன்மையதென்பது கருத்து. கல்லாமை முதலியவற்றிற்கு அஞ்சாத கீழ் குடிப்பிறந்தோர் மனிதர்களாக இருந்தும் பயனின்மையால் மரத்தார் என்றார். கல்லாமை - நான்காம் வேற்றுமைத்தொகை. மாணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மாண் - பகுதி, ஆ - எதிர்மறையைக் காட்டும் விகுதி.
146. இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப! இற்பிறந்தார் கண்ணே யுள. (இ-ள்.) கனமணி - காந்திமிகுந்த இரத்தினங்கள், முத்தோடு - முத்துக்களோடு சேர்ந்து, இமைக்கும் - பிரகாசிக்கின்ற, முழங்கு உவரி - சத்திக்கின்ற சமுத்திரத்தினுடைய, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, இனம் நன்மை - சேர்க்கின்றவர்களுடைய நன்மையும், இன்சொல் - இனிமையான சொல்லும், ஒன்று ஈதல் - (யாசித்தவர்க்கு ஏதேனும்) ஒரு பொருளைத் தருதலும், ஏனை - மற்றும், மனம் நன்மை - மனம் சுத்தமாயிருத்தலும், என்று இவை எல்லாம் - ஆகிய இவைகளெல்லாம், இல் பிறந்தார் கண்ணே உள - நற்குடியிற் பிறந்தவர்களிடத்திலேயே யுண்டு, எ-று. குற்றமில்லாத நல்லினத்தைச் சேர்ந்திருத்தலும், யாவரிடத்தும் தக்கபடி இனிமையாகப் பேசுதலும், கேட்பவர்களுக்கு இல்லை யென்னாது கொடுத்தலும், மனதில் பஞ்ச முதலியவில்லாமல் தயாதாக்ஷிணியங்க ளுள்ளவரா யிருத்தலும், இப்படிப்பட்ட நற்குணங்களெல்லாம் குடிப்பிறந்தா ரிடத்தேயுண்டு. இன்சொல் - பண்புத்தொகை, என்று - எண்ணிடைச் சொல்; இது இனநன்மை முதலியவற்றோடும் கூடும், [இடை. சூ. 10.] முத்தோடு - உடனிகழ்ச்சியில் வந்த மூன்றாம் வேற்றுமை, முழங்கு உவரி - வினைத்தொகை உவர்த்தலையுடையது உவரி. உள - பலவின்பாற் குறிப்பு வினைமுற்று.
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும் பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்; எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. (இ-ள்.) செய்கை அழிந்து - வேலைப்பாடுகள் கெட்டு, சிதல் மண்டிற்று ஆயினும் - கறையான்கள் நெருங்கிப் பிடித்திருந்தாலும், பேர் இல் - பெரிய வீடானது, பெய்யா ஒரு சிறை - (மழை) பெய்யாத ஒரு பக்கத்தை, உடைத்து ஆகும் - உடையதாயிருக்கும்; (அதுபோல்) எவ்வம் உழந்தக்கடைத்தும் - துன்பத்துள் மிகுதியாக அலைச்சற் பட்டிருந்தாலும், குடிப்பிறந்தார் - நல்லகுடியிற் பிறந்தவர்கள், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று. ஒரு பெரிய வீடு கட்டடங்க ளழிந்து செற்பிடித்திருந்தாலும் மழை பெய்தற்கு உள்ளாகாத ஒரு பக்கம் அந்த வீட்டில் இருக்கவே இருக்கும். குடிப்பிறந்தார் வறுமை முதலியவற்றால் வருத்தப்பட்டாலும், செய்யத்தக்க காரியங்களைச் செய்வார்களேயன்றி செய்யத்தகாத காரியங்களைச் செய்யார் என்பதாம். அழிந்து என்னும் வினையெச்சமும், மண்டிற்று என்னும் ஒன்றன் பால் முற்றும், மாடு கோடு கூரிய தென்பது போல் இல் என்பதைக் கொண்டன. உழந்தக் கடைத்து - கடைத்து - செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி வலி மிகுந்திருப்பதனால் இது பெயரெச்சத் தொடராகாது.
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார். (இ-ள்.) ஒரு புடை - ஒரு பக்கத்தை, பாம்பு கொளினும் - பாம்பு பிடித்துக் கொண்டாலும், ஒரு புடை - ஒரு பக்கத்தால், அம் கண் மாஞாலம் - அழகிய இடமுள்ள பெரிய பூமியை, விளக்குறூஉம் - விளக்குகின்ற, திங்கள் போல் - சந்திரனைப் போல, செல்லாமை - (தங்கள் காரியங்கள்) ஈடேறாமை, செவ்வன் நேர் நிற்பினும் - நன்றாக நேரே இருந்தாலும், குடிப் பிறந்தார் -, ஒப்புரவிற்கு - உபகாரச் செய்கைக்கு, ஒல்கார் - பின் வாங்க மாட்டார்கள், எ-று. கிரஹணகாலத்தில் ஒரு பக்கத்தை இராகு கேதுக்களென்கிற பாம்பு பிடித்துக் கொண்டாலும் மற்றொரு பக்கத்தினால் சந்திரன் உலகத்தை விளக்குவது போல, குடிப்பிறந்தார் தாங்கள் எடுத்த காரியங்கள் நிறைவேறாமற் போன போதிலும் கூடிய மட்டில் உபகாரம் செய்வார்களென்பது கருத்து. விளக்குறூஉம் - உறு - துணைவினை அல்லது அசை, இன்னிசை யளபெடை ஒல்கார் - ஒல்கு - பகுதி.
149. செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று. (இ-ள்.) செல்லா இடத்தும் - (தங்களுக்குக்) கூடாத போதும், குடிப்பிறந்தார் -, செய்வன - செய்யுங் காரியங்களை, செல் இடத்தும் - கூடிய விடத்தும், செய்யார் சிறியவர் - இழிகுலத்திற் பிறந்தவர்கள் செய்ய மாட்டார்கள், புல்வாய் - மானானது, பருமம் - பருத்திருத்தலை, பொறுப்பினும் - சுமந்திருந்தாலும், பாய் - ஓடுகின்ற, பரிமாபோல் - குதிரையைப் போல், பொரு முரண் - போர் செய்யவல்ல பலத்தை, ஆற்றுதல் இன்று - பொறுப்பதில்லை, எ-று. தமக்குக் கூடாதவிடத்தும் குடிப்பிறந்தார் செய்யும் காரியங்களைத் தமக்குக் கூடிய இடத்திலும் அற்பர் செய்ய மாட்டார்கள். எப்படியெனில் மான் பருத்திருந்த போதிலும் குதிரையைப் போலப் போரிட வல்லதல்லாதது போல். செய்வன - வினையாலணையும் பெயர்; செய் - வ் - அன் - அ - பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி; இங்கு இடைநிலை காலங்காட்டாது தன்மையைக் காட்டும். ஒருவகை மான் குதிரையைப் போல் பருத்திருக்கின்றது.
150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்; அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும். (இ-ள்.) எற்று ஒன்றும் இல்லா இடத்தும் - யாதொரு பொருளும் இல்லாத போதும், குடிப்பிறந்தார் -, அற்று - (தம்மைக் காப்பார்) இல்லாமல், தன் சேர்ந்தார்க்கு - தம்மைச் சேர்ந்தவர்களுக்கு, அசைவு இடத்து - சங்கடமான காலத்தில், ஊற்று ஆவர் - ஊன்று கோலாயிருப்பர்; அற்றக்கடைத்தும் - நீர் வறண்ட போதும், அகல்யாறு - விசாலமான நதியானது, அகழ்ந்தக்கால் - தோண்டினால், தெற்றென - தெளிவாக, தண் நீர் படும் - குளிர்ந்த நீரை உடைத்தாயிருக்கும், எ-று. கோடைக்காலத்தில் ஆற்றைத் தோண்டினால் நீர் சுரப்பது போல ஒன்றுமில்லாத வறுமைக் காலத்திலும் குடிப் பிறந்தார் தம்மையடைந்தவர்களுக்கு எப்படியாயினும் ஆதரவு செய்வர். எற்று - என் - பகுதி, று - விகுதி, னகரம் றகரமானது வலித்தல் ஊன்று என்னும் பகுதியில் னகரம் வலிந்தது; தொழிலாகுபெயர். தெற்றென - சீக்கிரத்தி லெனப் பொருள் கொள்ளின் "தெண்ணீர்படும்" எனப் பாடங்கொண்டு, தெள் - தெளிந்த எனப் பொருள் கொள்க. தண்ணீர் படும் என்பதை ஒரு சொல்போ லெடுத்துக் கொள்ள வேண்டும். |