நானூறு சமண முனிவர்கள்

இயற்றிய

நாலடியார்

உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார்

... தொடர்ச்சி - 4 ...

16. மேன் மக்கள்

     [இஃது மேலாகிய மனிதருடைய இயல்பு கூறியதாம்.]

151. அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
     திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
     மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
     தேய்வர் ஒருமாசு உறின்.

     (இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்தில், அகல் நிலா பாரிக்கும் - விரிவான நிலாவை நிரப்புகின்ற, திங்களும் சான்றோரும் - சந்திரனும் பெரியோர்களும், ஒப்பர் மன் - பெரும்பாலும் சமானமாவார்கள்; திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் களங்கத்தைப் பொறுக்கும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர் அதனைப் பொறார்; ஒரு மாசு உறின் - ஒரு குற்றம் நேர்ந்தால், தெருமந்து தேய்வர் - வருந்தி மெலிந்து போவர், எ-று.

     நிலா என்பதைக் கீர்த்திக்கு ஆகுபெயராக்கி "அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்கும்" என்பதைச் சான்றோருக்குங் கூட்டிக் கொள்க. சந்திரன் தேய்ந்தாலு மறுபடி வளர்கின்றான்; சான்றோரோ தேய்ந்தே போவார் என்பதும் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புகளைப் பற்றித் தான் மன் என்றது, [நன். இடை. சூ. 13; பொது. சூ. 27] விதியால் திங்கள் என்கிற அஃறிணையும் சான்றோர் என்கிற உயர்திணையும் ஒப்பர் என்று ஒரு முடிபு ஏற்றது; திங்களைத் தேவனென்று குறித்தால் இது வழாநிலையேயாம்.

152. இசையும் எனினும் இசையா தெனினும்
     வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
     நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
     அரிமாப் பிழைபெய்த கோல்?

     (இ-ள்.) இசையும் எனினும் - கூடுமானாலும், இசையாது எனினும் - கூடாதானாலும், சான்றோர் - பெரியோர், வசை தீர எண்ணுவர் - பழிப்பு நீங்கும்படியே (காரியத்தை) சிந்திப்பர்; விசையின் - வேகத்தினால், நரி மா உளம் கிழித்த - நரியென்னு மிருகத்தினது மார்பைப் பிளந்த, அம்பினில் - அம்பைக் காட்டிலும், அரிமா - சிங்கமானது, பிழைப்பு எய்த - தப்பிப் போம்படி (பிரயோகித்த), கோல் - அம்பானது, தீதோ - பொல்லாதோ, (தாழ்ந்ததோ என்கிறபடி,) எ-று.

     செய்யக்கூடினாலும் கூடாமற் போனாலும் பழிப்பில்லாத காரியத்தைப் பெரியோர் நினைப்பார்களேயன்றி இழிவான காரியத்தை நினையார்கள்; ஏனென்றால், சிங்கத்தின் மேல் அம்பை எய்து அது தவறிப் போனாலும் பெருமையுண்டு, நரிமேல் எய்து அதன் மார்பைப் பிளந்தாலும் பெருமையில்லை. ஆகையால் மேலான காரியமே யோசிப்பார்கள் என்பது கருத்து.

     பிழைப்பு என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது. அம்பினில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்ததெனக் கொள்க.

153. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
     குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
     உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
     செய்வர் செயற்பா லவை.

     (இ-ள்.) நரம்பு எழுந்து - நரம்புகள் மேலே தோன்றும்படி (மெலிந்து), நல்கூர்ந்தார் ஆயினும் - தரித்திரரானாலும், சான்றோர் - மேலோர், குரம்பு எழுந்து - எல்லைகடந்து, குற்றம் கொண்டு - (யாசிப்பதாகிய) குற்றத்தைக் கைக்கொண்டு, எறார் - (ஒருவரிடம்) போகார், உரம் கவறு ஆ - அறிவைக் கவறாக வைத்து, உள்ளம் எனும் நாரினால் - முயற்சியென்கிற நாரினாலே, கட்டி - (மனதைக்) கட்டி, உளவரையால் - (பொருளானது) தமக்கு இருக்கின்ற அளவினால், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று.

     மனதை விவேகத்தினாலும் முயற்சியாலும் உறுதிப் படுத்திக் கொண்டு இரக்காமல் தமக்குள்ளளவு பிறர்க்கு இட்டு நன்மையே செய்து வருவர் பெரியோர் என்பது கருத்து.

     கவறு என்பது பிளப்புள்ள பனமட்டை எழுந்தென்பது சினைவினையாதலால் நல்கூர்ந்தார் என்னு முதல்வினை கொண்டது [நன். வினை. சூ. 26]. குரம்பினின்றும் எழுந்தெனக் கொள்வதனால் எல்லை கடந் தென்றாயிற்று.

154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
     தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
     நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
     கல்வரையும் உண்டாம் நெறி.

     (இ-ள்.) நல் வரை நாட - நல்ல மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, சான்றவர் - பெரியோர், செல்வுழிக்கண் - தாம்போகும் வழியில், ஒரு நாள் காணினும் - (ஒருவரை) ஒருநாள் கண்டாலும், தொல்வழி கேண்மையின் - பழைய முறையில் வந்த சிநேகிதனைப் போல் [அல்லது உறவினனைப் போல] (கொண்டு), தோன்ற - விளங்கும்படி, புரிந்து - (உபசாரங்களைச்) செய்து, யாப்பர் - (தம்மவராக) பிணித்துக் கொள்வர்; சில நாள் அடிப்படின் - சில காலம் காலடிப் பட்டால், கல் வரையும் - கல்மிகுந்த மலையிலும், நெறி உண்டாம் - வழி உண்டாகும், எ-று.

     கல்லிலும் காலடிப்பட்டால் வழியுண்டாவது போல கடினசித்தருக்கும் பழகினால் சிநேக முண்டாகு மல்லவோ, அப்படியிருக்க மெழுகுபோன்ற சித்தமுள்ளவர் கண்டவுடனே சிநேகிப்பாரென்பது இயல்புதான் என்றபடி.

155. புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
     கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
     நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
     பல்லாருள் நாணல் பரிந்து.

     (இ-ள்.) பொருள் இல் - பொருளின் அறிவு இல்லாத, வறுகோட்டி - பயனற்ற சபையைச் சேர்ந்த, கல்லா ஒருவன் - (நூல்களைக்) கற்காத ஒருவன், புல்லா எழுத்தின் - (இலக்கணத்தோடு) பொருந்தாத சொற்களால்; உரைப்பவும் - சொல்லுமவைகளையும், நல்லார் - பெரியோர், கண் ஓடி - தாக்ஷிணியப் பட்டு, வருந்தியும் - வருத்தமடைந்தும், அவன் - அந்த மூடன், பல்லாருள் - பலபேருக்கு முன்பு, நாணல் - வெட்கப்படுவதற்கு, பரிந்து - இரங்கி, கேட்பர் - (காதினாற்) கேட்பர், எ-று.

     பெரியோர் மூடர் பேசும் பேச்சுகளையும் கேட்பார்கள், ஏனென்றால் தாங்கள் உபேக்ஷை செய்தால் அவர்கள் பலரில் அவமானப்படுவார்களே என்கிற இரக்கத்தால் தங்கள் மனதுக்கு வருத்தமாயிருந்தாலும் கேட்பர் என்பது கருத்து.

     எழுத்து சொல்லுக்கும், பொருள் அதன் அறிவுக்கும் ஆகுபெயர். மற்று, எ - அசைகள் ஏ - தேற்றத்தில் வந்ததெனவுமாம்.

156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
     இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
     வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
     கூறார்தம் வாயிற் சிதைந்து.

     (இ-ள்.) கரும்பினை - கரும்பை, கடித்து -, கண் தகர நூறி - கணுக்கள் உடையும்படி நெரித்து, இடித்து - (ஆலையில்) துவைத்து, நீர் கொள்ளினும் - சாற்றைக் கொண்டாலும், இன் சுவைத்தே ஆகும் - (அது) இனிய ருசியுள்ளதே ஆம்; குடி பிறந்தார் - நற்குலத்திற் பிறந்தவர், வடு பட வைது இறந்தக் கண்ணும் - (தம்மைப் பிறர்) குற்றந் தாக்கும்படி திட்டிப் போனாலும், தம் வாயில் - தமது வாயினால், சிதைந்து - (தம்மை வைதவர்) கெடும்படி, கூறார் - வசைகளைச் சொல்லமாட்டார், எ-று.

     இறந்தக்கண் - ஒருவகை வினையெச்சம்; இற - பகுதி, கண் - விகுதி, தகரம் எழுத்துப்பேறா யிரட்டி மெலிந்தது; நகர தகரங்கள் எழுத்துப்பேறு எனல் நேர் சிதைந்து - சிதைய என்பதின் திரிபு; நிலை திரிந்து எனவும் பொருள் கொள்ளலாம்.

157. கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
     எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
     வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
     சாயின் பரிவ திலர்.

     (இ-ள்.) வடு அறு காட்சியார் - குற்றமற்ற அறிவுள்ளவர்கள், கள்ளார் - திருடார்; கள் உண்ணார் - கள்ளைக் குடியார்; கடிவ கடிந்து ஒரீஇ - தள்ளத்தக்கவைகளைத் தள்ளி நீங்கி, பிறரை - அன்னியரை, எள்ளி இகழ்ந்து உரையார் - அவமதித்து நிந்தித்துப் பேசமாட்டார்; தள்ளியும் - தவறியாகிலும், வாயில் பொய் கூறார் - வாயினால் பொய்யைச் சொல்லார்; சாயில் - (வறுமையுற்றுத்) தளர்ந்தாலும், பரிவது இலர் - விசனப்படுந் தன்மை இல்லாதவராவர், எ-று.

     கடிந்து ஒரீஇ என்பதையும் எள்ளி இகழ்ந்து என்பதையும் [நன். பொது. சூ. 47] விதியால் ஒருபொருட் பன்மொழியாக அமைத்துக் கொளல் வேண்டும். ஒரீஇ - ஒருவு என்னு முதனிலை இகர விகுதி புணர்ந்து கெட்டு ஈற்றுயிர் மெய்யும் போய் உகரம் இகரமாகி அளபெடுத்ததெனக் கொள்க. இது சொல்லிசை யளபெடை.

158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
     ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
     புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
     அறங்கூற வேண்டா அவற்கு.

     (இ-ள்.) பிறர் மறையின்கண் - அன்னியருடைய ரகசியச் சொல்லில், செவிடு - ஆய் - செவிடனாய், திறன் அறிந்து - நற்காரியங்களின் தன்மையை யறிந்து, ஏதிலார் இல் கண் - பிறருடைய இல்லாளிடத்து, குருடன் ஆய் - கண்ணில்லாதவனாய், தீய - அயோக்கியமான, புறங்கூற்றின் - (காணாவிடத்துத்) தூஷிப்பதில், மூகை ஆய் - ஊமையாய், நிற்பானேல் - (ஒருவன்) இருப்பானானால், அவற்கு - அப்படிப் பட்டவனுக்கு, யாதும் அறம் கூற வேண்டா - வேறெந்தத் தருமமும் சொல்ல வேண்டுவ தில்லை, எ-று.

     புறங்கூற்றின் என்பதற்கு தான் ஒருவனைத் தூஷிப்பதில் எனவும் ஒருவன் தன்னைத் தூஷிப்பதில் எனவும் கருத்துக் கொள்ளலாம். பின்னதாயின் தன்னைத் தூஷிக்குமிடத்து ஒன்றும் பேசாதவனாய் என்பதாம். ஏதிலார் - ஏதில் - அயலாயிருத்தல், அதனை யுடையார் ஏதிலார், வேண்டா என்பது வேண்டும் என்பதின் எதிர்மறை ஆதலின் ஒருவகை வியங்கோள் என்றாகிலும் உறுதிப்பாட்டைக் காட்டும் தொழிற்பெயர் என்றாகிலுங் கொள்க.

159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
     என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
     வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
     காண்தொறும் செய்வர் சிறப்பு.

     (இ-ள்.) பண்பு இலார் - சற்குணமில்லாதவர், தம்முழை - தம்மிடத்து, பல் நாளும் சென்றக்கால் - (ஒருவர்) பலதினங்கள் வந்து கொண்டிருந்தால், என்னானும் வேண்டுப என்று - எதையாகிலும் விரும்புவார்களென்று, இகழ்ப - (அவரை) இகழ்வார்கள்; விழுமியோர் - பெரியோர், என்னானும் வேண்டினும் - (தம்மிடம் வருபவர்) எதையாகிலும் அபேக்ஷித்தாலும், நன்று என்று - நல்லதென்று சொல்லி, காண்தொறும் - காணும்போதெல்லாம், சிறப்பு செய்வர் - (அவருக்குச்) சிறப்பானவைகளைச் செய்வார்கள், எ-று.

     கீழ்மக்கள் பலநாளாய்த் தம்மிடம் வந்து கொண்டிருக்கிறவர்களையும் இவர் எதாவது நம்மிடத்திற் பெற விரும்புவா ரென்று வரவொட்டாமற் றள்ளி விடுவார்கள்; மேன்மக்களோ தம்மிடம் வருபவர் எதை அபேக்ஷித்தாலும் அதைக் கொடுக்க வுடன்பட்டுக் கண்ட போதெல்லாம் அவர்களுக்கு நன்மையே செய்து வருவார்கள் என்பது கருத்து.

     என் - இடைகுறைந்த எவனென்னுங் குறிப்பு முற்றாலாகிய பெயர். காண்தொறும் - வினைத்தொகைநிலைத் தொடர். தொறு என்பது இடைச்சொல்லாயினும் பெயர்ப்பொருளைத் தருதலால் பெயரெச்சத்திரிபாகிய வினைத்தொகை அதனோடு சேர்ந்தது.

160. உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
     கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
     பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
     குலந்தலைப் பட்ட இடத்து.

     (இ-ள்.) உடையார் இவர் என்று - பொருள் உடையவர் இவர் என்று நினைத்து, ஒரு தலையா பற்றி - உறுதியாப் பற்றிக் கொண்டு, கடை ஆயார் பின் சென்று வாழ்வர் - கீழ் மக்களுடைய பின்னே போய்ப் பிழைப்பர் சிலர்; நல்ல குலம் - நற்குலத்தாரை, தலைப்பட்ட இடத்து - சேர்ந்த விடத்தில் [சேர்ந்தால் என்கிறபடி], உடைய பிலம், (வேண்டும் பொருளை) உடைத்தாயிருக்கிற குகையை, தலைப்பட்டது போலாதே - சேர்ந்ததுபோலிராதா [இருக்கும் என்றபடி] எ-று.

     திரவியவான்களென்று நினைத்து அயோக்கியரையும் பின்பற்றி வாழ்கிறார்கள் உலகத்திற் சிலர்; அப்படிப் பட்டவர்க்கு யோக்கியரைச் சேர்தல் திரவியம் நிறைந்த குகையகப்பட்டது போலே சந்தோஷமா யிருக்குமல்லவோ என்பது கருத்து.

     தலைப்பட்டவிடத்து என்பதும் ஒருவகை வினையெச்சமெனக் கொள்ளலாம். குலம் - ஆகுபெயர்.

17. பெரியாரைப் பிழையாமை

     [அதாவது பெரியோர் திறத்தில் பிழை செய்யாமையாம்.]

161. பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
     வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
     ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
     பேர்க்குதல் யார்க்கும் அரிது.

     (இ-ள்.) ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட - ஒலிக்கின்ற அருவிகளை அணிந்த மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டையுடையவனே!, பொறுப்பர் என்று எண்ணி - (நாம் செய்யுங் குற்றங்களைப்) பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து, புரை தீர்ந்தார், மாட்டும் - குற்றமில்லாதவரிடத்தும், [பெரியோரிடத்தும் என்றபடி], வெறுப்பன. வெறுக்கும் படியான காரியங்களை, செய்யாமை வேண்டும் - செய்யாதிருத்தல் அவசியமானது; வெறுத்த பின் - (அவர்கள்) கோபித்த பின்பு, பேர்க்குதல் - (அக்கோபத்தின் பயனை) மாற்றுதல், யார்க்கும் அரிது - எப்படிப்பட்டவர்க்கும் கூடாதது, எ-று.

     இழிந்தாரிடத்துப் பிழை செய்வதனால் யாதொரு கேடுமில்லையென்று நினைப்பது போல் பெரியாரிடத்துப் பிழை செய்வதினாலும் அவர்கள் பொறுமையுள்ளா ரானது பற்றி யாதொரு கேடும் வாராதென் றெண்ணிக் கொண்டு அபசாரப் பட வேண்டாம். அவர் பொறுமையுள்ளவராயினும் "சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பெரியோ ரப்பிழை பொறுத்தலுமரிதே" என்கிறபடி பிழையின் கொடுமையால் அவர்களுடைய மனங் கலங்கிய போது அதனால் வருந் தீங்கை நிவர்த்தி செய்ய யாராலு மாகாதென்பது கருத்து "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கண்மேயுங் காத்த லரிது."

     தீர்ந்தார் மாட்டும் - உம்மை எச்சப்பொருட்டாய் வந்தது; மாடு - ஏழனுருபு. செய்ய வேண்டும் என்பது போற் செய்யாமை வேண்டும் என்பதிலும் வேண்டும் என்பது தேற்றப் பொருட்டாய் வந்த தொழிற்பெயர்; இதனை ஒருவகை வியங்கோளாகக் கொள்ளவுந் தகும். யார்க்கும் - குவ்வுருபு கர்த்தாப் பொருளில் வந்தது.

162. பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
     கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
     பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
     நயமில் அறிவி னவர்.

     (இ-ள்.) நல்ல நயம் இல் அறிவினவர் - மேன்மையான பயன் இல்லாத புத்தியுள்ளவர், [மூடர்], பொன் கொடுத்தும் - (விசேஷமாக) பொருளைக் கொடுத்தாலும், புணர்தற்கு அரியாரை - சேரக்கூடாத பெரியோர்களை, கொன்னே - சும்மா, தலைக்கூட பெற்றிருந்தும் - சேரத்தக்க நிலையை அடைந்திருந்தாலும், அன்னோ - ஐயோ, பயன் இல் பொழுது ஆ - வீண் காலமாக, கழிப்பாரே - கழிப்பார்களே, எ-று.

     அருமையான பெரியோர் வலியத் தம்மிடம் வந்த போது அவர்களைக் கொண்டு நன்மை பெறாமற் காலங்கழிப்பதும் பெரியாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.

     கொன்னேமுதலான விடத்து ஏ - அசை. தலைக்கூட என்பது வினையெச்சமாகத் தோன்றினாலும் பொருணோக்கத்தில் தொழிற்பெயராய்ச் செயப்படுபொருளா அமையுமென அறிக. அன்னோ - இரக்க இடைச்சொல். உம்மைகள் - சிறப்பு.

163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
     மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
     கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
     வையார் வடித்தநூ லார்.

     (இ-ள்.) அவமதிப்பும் - தாழ்வாக நினைப்பதும், ஆன்ற மதிப்பும் மேலாக நினைப்பதும், இரண்டும் - ஆகிய இரண்டும், மிகைமக்களால் - பெரியோர்களால், மதிக்கல் பால - மதிக்கத் தக்கவை; நயம் உணரா - குணமறியாத, கை அறியா - நல்லொழுக்கமறியாத, மாக்கள் - மனிதர்கள், இழிப்பும் - தாழ்த்துவதையும், எடுத்து ஏத்தும் - தூக்கிப் புகழ்வதையும், வடித்த நூலார் - ஆராய்ந்த நூலையறிந்த பெரியோர், வையார் - (ஒருபொருளாக) வைக்க மாட்டார், எ-று.

     "நாயின் மேலேறி வையாளி விட்டாலென்ன வீழ்ந்தாலென்ன" என்கிற பழமொழிப்படி அற்பர் புகழ்ந்தாலும் பழித்தாலுமொன்று மிலலை யென்பதாம்.

     அகன்ற என்பது ஆன்ற எனத் திரிந்த தென்பர்; ஆன்றல் - மாட்சிமை எனத் தனியே கொள்வது முண்டு. "உம்மையென்றெனவோ டிந்நான்கெண்ணு மஃதின்றியுமியலும்" என்றமையால் இங்கு உம்மை தொகைபெற்றது [நன். இடை. சூ. 9]. மிகை - மிகுதல் [மேன்மை] அதனையுடைய மக்கள், என உருபும் பயனுந் தொக்கத் தொடர். மக்கள், மாக்கள் - இவை இரண்டுக்கும் ஒருமையில்லை. ஏத்து - முதனிலைத் தொழிற் பெயர். நயமுணரா, கையறியா - பெயரெச்சங்கள் அடுக்கி மாக்களென்னுமொரு முடிபு கொண்டன. [நன். பொது. சூ. 4].

164. விரிநிற நாகம் விடருள தேனும்
     உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
     அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
     பெருமை யுடையார் செறின்.

     (இ-ள்.) விரி நிறம் நாகம் - மிகுந்த காந்தியுள்ள பாம்பு, விடர் உளதேனும் - மலைப்பிளப்பில் இருப்பதானாலும், உருமின் கடுசினம் - இடியின் மிகுந்த உக்கிரமானது, சேண் நின்றும் - வானத்தில் இருக்கவும், உட்கும் - பயப்படும்; பெருமை உடையார் -, செறின் - கோபித்தால், (பிழை செய்தவர்) அருமை உடைய அரண் சேர்ந்தும் - (பிறர்) புகுதற்குக் கூடாத கோட்டையைச் சேர்ந்திருந்தாலும், உய்யார் - பிழையார், எ-று.

     இது எடுத்துக்காட்டுவமையணி. நிற்க என்பது நின்று எனத் திரிந்தது. [நன். வினை. சூ. 27.] சாரியை விகற்பமாதலின் உருமின் என்பதில் அத்துச்சாரியை வரவில்லை. விரிநிறம் என்பது அதின் பளபளப்பினால் அதின் சத்தியைக் குறிப்பித்தது. பாம்பு இடியோசைக்கு அஞ்சி இறக்குமென்பர்.

165. எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
     தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
     அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
     பெரியராக் கொள்வது கோள்.

     (இ-ள்.) எம்மை அறிந்திலிர் - எங்களை அறியமாட்டீர்கள், எம் போல்வார் இல் - எம்மை ஒத்தவர்கள் இல்லை, என்று - தம்மை தாம் கொள்வது - தங்களைத் தாங்களே மதித்துக் கொள்வது, கோள் அன்று - குணம் ஆகாது; அறன் அறியும் சான்றோர் - தருமத்தை அறிந்த பெரியோர்கள், தம்மை - அரியர் ஆ நோக்கி - அருமையானவராக நினைத்து, பெரியர் ஆ கொள்வது - பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்வது, கோள் - குணமாம், எ-று.

     பெரியார் - ஆக என்பது ஈறு தொக்கது. அறிந்திலிர் - முன்னிலைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று, அறி - பகுதி, இல் - எதிர்மறைப்பண்படி, ஈண்டு விகுதி; த் - இடைநிலை, தகரம் இரட்டித்து மெலிந்தது; எல்லாம் ஒரு பகுதியானது, இர் - முன்னிலைப் பன்மை விகுதி. இல் - விகுதி குன்றிய குறிப்புமுற்று.

166. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
     விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
     அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
     தொல்புக ழாளர் தொடர்பு.

     (இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - விசாலமான கடலின் குளிர்ச்சியான கரையை யுடையவனே!, சிறியவர் கேண்மை - அற்பருடைய சிநேகமானது, நாள் நிழல் போல - முற்பகலின் நிழலைப் போலே, விளியும் - குறைந்துபோம்; தொல் புகழ் ஆளர் தொடர்பு - பழைமையான கீர்த்தியுள்ளவர்களுடைய சிநேகம், அல்கு நிழல் போல் - பிற்பகலின் நிழலைப் போல், அகன்று அகன்று ஓடும் - மிகவும் வளர்ந்து செல்லும், எ-று, ஏ - அசை.

     தொல்புகழாளர் - பெரியோர்; புகழுக்குத் தொன்மையாவது முன்னோர்களது நிலைமையாயிருத்தல்; அல்லது தொன்மை புகழாளர்க்குமாம். விளிவு - குறைவுக்குக் கொள்ளப் பட்டது. அகன்றகன்று - மிகுதியென்னும் பொருணிலையால் வந்த அடுக்கு. [நன். பொது. சூ. 44.]

167. மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
     துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
     குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
     உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.

     (இ-ள்.) மன்னா திருவும் - அரசருடைய செல்வத்தையும், மகளிர் எழில் நலமும் - பெண்களுடைய அழகின் நன்மையையும், துன்னியார் - நெருங்கினவர், துய்ப்பர் - அனுபவிப்பார்கள்; தகல் வேண்டா - யோக்கியதை வேண்டுவதில்லை; (எதுபோலெனில்) துன்னி - நெருங்கி, குழை கொண்டு - தளிர்களையுடைத்தாய், தாழ்ந்த - கவிந்திருக்கிற, குளிர் மரம் எல்லாம் - குளிர்ச்சியான மரங்களெல்லாம், தங்கண் சென்றார்க்கு - தங்களிடத்தில் வந்தவர்களுக்கு, ஒருங்கு - ஒருமிக்க, உழை - இடம் ஆம் (அதுபோல்), எ-று.

     மகளிர் என்பதை இங்கு வேசியர்க்குக் கொள்ளல் தகுதி; தாழ்ந்தோ ருயர்ந்தோர் என்று தாரதம்மியமின்றி வந்தவர்களை யெல்லாந் தம்மிடஞ் சேர்க்கின்ற அறிவில்லாத மரங்கள் போலவும் வேசிமார் போலவும் அரசர் பெரியாரைச் சிறியாரோடு ஒருமிக்கச் சேர்த்தலும் பெரியாரைப் பிழைத்தல் என்பது கருத்து.

     துன்னியார் - துன் - பகுதி, ஆர் - விகுதி, இன் - இடைநிலை ஈறு குறைந்தது, யகரம் - உடம்படுமெய், னகரம் இரட்டியது. தகல் - (தகு + அல்) தொழிற்பெயர் ஒருங்கு - பகுதியே வினையெச்சமானது [நன். வினை. சூ. 32ன் உரையைப் பார்க்க].

168. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
     பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
     உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
     கலவாமை கோடி யுறும்.

     (இ-ள்.) தெரிய தெரியும் - விளங்க அறியும்படியான, தெரிவு இலார் கண்ணும் - அறிவு இல்லாதவரிடத்திலும், பிரிய - பிரியும் போது, பெரும்படர் நோய் - பெரியதுக்கமாகிய வியாதியை, செய்யும் - (சிநேகமானது) உண்டாக்கும்; (ஆதலால்) பெரிய -, உலவா - வற்றாத, இரு கழி சேர்ப்ப - பெருமையான கழிக்கரை யுடையவனே!, யார் மாட்டும் - எவரிடத்திலும், கலவாமை - சிநேகியாமையானது, கோடி உறும் - (சிநேகத்தினும்) கோடி பங்கு நன்மையாகும், எ-று.

     புத்தியீனரிடத்தில் சிநேகித்துப் பிரிந்தாலும் துக்கமுண்டாகுமானால் நல்ல விவேகிகளைச் சிநேகித்துப் பிரிதலில் எவ்வளவு துக்க முண்டாகலாம்? ஆகையால் யாரையும் சிநேகியாமையே நலமென்றபடி. இதனால் பெரியாரைச் சேர்தலி லிருக்கு நன்மையைக் காட்டி அப்படிப்பட்டவ ரிடத்துப் பிழைத்தல் நல்லதன்றெனக் குறிப்பித்ததாம்.

     கண்ணும் - உம்மை - இழிவு சிறப்பு. யார்மாட்டும் - முற்றும்மை. பிரிய - நிகழ்கால வினையெச்சம்.

169. கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
     செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
     கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
     படாஅவாம் பண்புடையார் கண்.

     (இ-ள்.) கல்லாது போகிய நாளும் - நூல்களைக் கற்காமற் கழிந்த காலமும், பெரியவர்கண் செல்லாது - பெரியவரிடத்திற் போகாமல், வைகிய வைகலும் - சென்ற காலமும், ஒல்வ - இசைந்தவைகளை, கொடாது ஒழிந்த பகலும் - (தக்கவர்க்கு) கொடாமற்போன காலமும், உரைப்பின் - சொல்லப்புகுந்தால், பண்பு உடையார்கண் - சற்குணமுள்ளவரிடத்தில், படா ஆம் - சேராதவைகளாம், எ-று.

     இதிலும் பெரியோரிடத்திற் சேரு நன்மையைக் காட்டி அவரிடம் பிழையாமை நன்றெனக் குறிப்பிக்கப்பட்டது.

     போகிய - போ - பகுதி, கு - சாரியை, இன் - இடைநிலை, ஈறு போனது, அ - பெயரெச்ச விகுதி. ஒல்வ - வினையாலணையும் பெயர், ஒல் - பகுதி, வ் - இடைநிலை, அ - பலவின்பால் விகுதி. படா - எதிர்மறை வினையாலணையும் பெயர். காலங்களுக்கு விசேஷணமாதலால் ஆமென்கிற அதன் வினையால் முடிந்தது [பொது. சூ. 41]. எதிர்மறை முற்றாகக் கொண்டு, ஆம் - அசை, என்னவுமாம். கொடாஅ, படாஅ, - அளபெடைகள் செய்யுளோசைக்காக வந்தன.

170. பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
     உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
     செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
     அல்லல் களைப எனின்.

     (இ-ள்.) பெரியார் பெருமை - பெரியோர்க்குப் பெருமையாவது, சிறு தகைமை - எளிமையைக் காட்டும் பணிவேயாம்; ஒன்றிற்கு உரியார் - ஒரு பெரிய கல்வி முதலியவற்றிற்குச் சுதந்திர முள்ளவர்களுக்கு, உரிமை - அவ்வுரிமையாலாகி பெருமையாவது, அடக்கம் - (தானே எடுத்துக்காட்டாமல்) அடங்கியிருத்தல்; தெரியுங்கால் - ஆராய்ந்து பார்த்தால், தன் சேர்ந்தார் அல்லல் - தன்னைச் சேர்ந்தவர்களுடைய துன்பத்தை, களைப எனின் - நீக்குவார்களேயானால், செல்வமுடையாரும் செல்வரே - பொருளுள்ளவர்களும் உள்ளவர்களேயாவர், எ-று.

     பெரியோர்க்குப் பணிவும், கற்றோர்க்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் தக்ககுணங்கள் என்பது கருத்து. இதிலும் முற்பாடல்களிற் காட்டிய வழியே கருத்து அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வதிகாரமும் முன்னதிகாரத்தைப் போல மேன் மக்களியல்பைத் தெரிவித்த தென்பது தகுதி.

     தகைமை - தகு - பகுதி, ஐ - விகுதி, மை - விகுதிமேல் விகுதி, ஐ - சாரியை என்னவுமாம்; சிறுமையாகிய தகை என விரியும். தற்சேர்ந்தார் என்பது காரணத்தால் வந்த ஒரு பெயராதலால் தன் என்னுமொருமை பிழையன்று. களைப - பலர்பால் முற்று.

18. நல்லினம் சேர்தல்

     [அதாவது நல்ல கூட்டத்தைச் சேர்தல்; நற்குண முடையவர்களது சமூகத்தை நேசிப்பது என்பதாம்.]

171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
     நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
     நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
     புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

     (இ-ள்.) அறியா பருவத்து - புத்தியில்லாத வயதில், அடங்காரோடு - அடக்கமில்லாதவரோடு [அயோக்கியரோடு], ஒன்றி - சேர்ந்து, நெறியல்ல - வழியல்லாதவைகளை [பாவ காரியங்களை], செய்து ஒழுகியவும் - செய்து நடந்த அக்கிரமங்களும், நெறி அறிந்த - சன்மார்க்கத்தை அறிந்த, நல் சார்வு - நல்ல இடத்தை [பெரியோரை], சார - சேர்தலாலே, வெயின் முறுக - வெய்யில் விர்த்தியாக, புல் - புல்லை, பனி பற்று - பனி பிடித்திருப்பது, விட்டாங்கு - விடுவது போல, கெடும் - நாசமாகும், எ-று.

     நெறியாவது சாஸ்திர ஏற்பாடு ஒழுகியவ்வும் என்பதில் லகர வொற்று விரித்தல் செய்தொழுகிய நெறியல்லவும் எனக் கூட்டவுமாம். உம்மை - இழிவு சிறப்பு, சார - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம், விட்டாங்கு - விட்டால் என்பது விட்டு எனத் திரிந்து ஆங்கு என்னு முவமை இடைச் சொல்லோடு சேர்ந்தது. விட்டது என்பது ஈறுகுறைந்து சேர்ந்தது என்னவுமாம்.

172. அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
     பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
     வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
     பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

     (இ-ள்.) எஞ்ஞான்றும் - எப்போதும், அறம் நெறி - தருமத்தின் வழிகளை, அறிமின் - அறியுங்கள்; கூற்றம் அஞ்சுமின் - யமனை அஞ்சுங்கள்; பிறர் - அன்னியர்களுடைய, சுடு சொல் - கடூரமான சொற்களை, பொறுமின் - பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம் போற்றுமின் - வஞ்சனையை (உங்களிடஞ்சேராதபடி) பாதுகாவுங்கள்; வினை தீயார் கேண்மை - தீவினை செய்பவருடைய சிநேகத்தை, வெறுமின் - விரும்பாதுவிடுங்கள்; பெரியார் வாய் சொல் - பெரியோர்களுடைய வாயிலுண்டாகுஞ் சொற்களை, பெறுமின் - பெற்றுக் கொள்ளுங்கள், எ-று.

     "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்ற விதியால் அறிமின் முதலிய ஏவற்பன்மை முற்றுக்களை வினையெச்சமாகக் கொண்டு பெறுமின் என்பதோடு முடித்து உரைப்பாருமுளர். வினைதீயர் - வினையில் தீமையுள்ளார். கூற்றம் அஞ்சுமின் என அச்சத்தின் ஏதுவை இரண்டாம் வேற்றுமையாக் கூறல் செய்யுள் வழக்கு.

173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
     உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
     பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
     உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

     (இ-ள்.) அடைந்தார் பிரிவும் - சேர்ந்தவர்களைப் பிரிவதும், அரும்பிணியும் - அருமையான வியாதியும், கேடும் - மரணமும், உடம்பு கொண்டார்க்கு - தேகத்தைப் பெற்றிருக்கிறவர்களுக்கு, உடங்கு - ஒருமிக்க, உறலால் - வருவதனால், தொடங்கி - ஆதிகாலந் தொட்டு (வருகின்ற), பிறப்பு - இன்னாது என்று - தீயது என்று, உணரும் - அறிந்திருக்கிற, பேர் அறிவினாரை - மிக்க விவேகமுள்ளவர்களை, என் நெஞ்சு - என் மனமானது, உற புணர்க - உறுதியாகச் சேரக்கடவது, எ-று.

     பிறப்பில் துன்பங்களைக் கண்டு அதை வெறுத்திருக்கின்ற ஞானிகளைச் சேர்தல் நன்மைக்கு ஏதுவாம் என்பது கருத்து.

     உடங்கு என்பது ஒருங்கு என்பது போல் வினைப்பகுதி வினையெச்சப் பொருட்டாய் வந்தது; "வினைமுற்றே" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. இவ் வினையெச்சங்கள் பொருணோக்கால் வினையுரியாகின்றன. "இயல்பின்" என்கிற [நன். உருபு. சூ. 16] விதியால் அடைந்தார்ப்பிரிவு என வலி மிகுந்தது.

174. இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
     பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
     பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
     நண்பாற்றி நட்கப் பெறின்.

     (இ-ள்.) நினையுங்கால் - யோசிக்குமளவில், இறப்ப இன்னாது எனினும் - மிகவும் தீயது ஆனாலும், பிறப்பினுள் - சம்சாரத்தில், பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு - நற்குணந்தரித்த மனமுடைய பெரியவர்களோடு, எஞ்ஞான்றும் - எக்காலமும், நண்பு ஆற்றி - சிநேக குணம் பாராட்டி, நடகப் பெறின் - சிநேகிக்கப் பெற்றால், பிறப்பினை - பிறப்பை, யாரும் முனியார் - எவர்களும் வெறுக்க மாட்டார்கள், எ-று.

     பல தீமைகட்கு இடமாகிய இப்பிறப்பில் நல்லோரை நேசித்திருப்பதே குணமென்றபடி.

     பிறப்பு - சம்சாரத்துக்கு ஆகுபெயர்; சம்சாரமாவது பிறந்து இறக்கும்படியான இயல்பு; தேக சம்பந்தமுமாம். நண்பு - நள் - பகுதி, பு - விகுதி, ளகரம் டகரமாகி மெலிந்தது.

175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
     பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
     குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
     நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

     (இ-ள்.) ஊர் அங்கணம் நீர் - ஊரிலுள்ள சலதாரை நீரானது, உரவு நீர் - சிறப்புப் பொருந்திய நீரை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், பேரும் பிறிது ஆகி - வேறுபேரும் உண்டாகி, தீர்த்தம் ஆம் - பரிசுத்தமான ஜலமாம்; (அப்படியே) ஓரும் - அறியத்தக்க, குலம் மாட்சி இல்லாரும் - குலப்பெருமை இல்லாதவர்களும், நலம் மாட்சி - குணப்பெருமையுள்ள, நல்லாரை சார்ந்து - நல்லவர்களைச் சேர்ந்து, குன்று போல் நிற்பர் - மலைபோல் (பெருமை யுடையவராய்) இருப்பார்கள், எ-று.

     உரவு - வலி, இங்கே சிறப்புக்காயிற்று. "பேரும் பெரிதாகி" எனப் பாடங்கொண்டு, சிறப்பான ஓர் பேரையடைந்து எனப் பொருள் கொள்வது தகுதி. நலம் - குணத்துக்கு ஆகுபெயர். ஆகி, சார்ந்து என்பவை செயவெனெச் சத்திரிபுகள், செய்தெனெச்சமே காரணப் பொருட்டாய்வரின் பிறவினைக் கருத்தாவைக் கொண்டு முடிவது அனுபவத்திலிருக்கின்றது.

176. ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
     அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
     குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
     குன்றன்னார் கேண்மை கொளின்.

     (இ-ள்.) ஒள் கதிர் - அழகான கிரணங்களுள்ள, வாள் மதியம் - பிரகாசமான சந்திரனை, சேர்தலால் -, ஓங்கிய - உயர்ந்த, அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்திலுள்ள, முயலும் - முசலும், தொழப்படும் - கும்பிடப்படுகின்றது; (அதுபோல்) குன்றிய சீர்மையர் ஆயினும் - குறைந்த சிறப்புள்ளவர்களானாலும், குன்று அன்னார் கேண்மை - மலைபோன்ற மேன்மையுள்ளவர்களுடைய சிநேகத்தை, கொளின் - பெற்றுக் கொண்டால், சீர் பெறுவர் - மேன்மை அடைவர், எ-று.

     ஒண்கதிர் - ஒள் கதிர் என்பதில் ளகரம், முன் டகரமாகிப் பின்பு ணகரமாக மெலிந்ததெனக் கொள்க.

177. பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
     நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின்
     சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
     பெரியார் பெருமையைச் சார்ந்து.

     (இ-ள்.) பாலோடு அளாய நீர் - பாலிற் கலந்த ஜலம், பால் ஆகும் அல்லது - பாலாக எண்ணப்படுமே யல்லாமல், நிறம் தெரிந்து - நிறத்தின் வேற்றுமை அறியப்பட்டு, நீர் ஆய் தோன்றாது - ஜலம் ஆகக் காணப்படாது; தேரின் - ஆராய்ந்து பார்த்தால், நல்ல - , பெரியார் - பெரியவர்களுடைய, பெருமையைச் சார்ந்து - பெருந்தன்மையைச் சார்தலால், சிறியார் சிறுமையும் - அற்பருடைய அற்பத்தனமும், தோன்றாது -, எ-று. ஆம் இரண்டும் - அசை.

     அளாவிய என்பது அளாய என மருவியது; அளாவு என்னு முதனிலையில் ஈற்றுயிர்மெய் குறைந்து இறந்த காலங்காட்டும் யகர இடைநிலையும் அகர விகுதியும் சேர்ந்து உண்டானதென்றும் சொல்வார்கள்.

178. கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
     ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
     மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
     செல்லாவாம் செற்றார்சினம்.

     (இ-ள்.) கொல்லை - கொல்லையைச் சேர்ந்த, இரு புனத்து - பெரிய வயலிலே, குற்றி அடைந்த புல் - மரக்கட்டையை பற்றி நிற்கிற புல்லானது, உழவர் - உழுகின்றவர்களுடைய, உழுபடைக்கு - கலப்பைக்கு, ஒல்கா ஆகும் - அசையாதவைகளா யிருக்கும்; (அப்படியே) மெல்லியவரே ஆயினும் - பலஹீனர்களா யிருந்தாலும், நல் சார்வு சார்ந்தார் மேல் - நல்ல ஆசிரயத்தைப் பற்றினவர்களிடத்தில், செற்றார் சினம் - பகைவருடைய வலி, செல்லா ஆம் - செல்ல மாட்டாதவைகளாய் விடும்.

     கொல்லையாவது பலவயல்கள் சேர்ந்ததொரு நிலம் எனக்கொள்க. குற்றி பெயர்க்கப்படாமையால் புல்லும் பெயர்க்கப்படாதென்பது கருத்து.

     ஒல்கா - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; ஒல்கு - பகுதி, ஆ - விகுதி, மறைபொருளையும் காட்டும். "ஆவேயெதிர் மறைக் கண்ணதாகும்" என்பது விதி. உழுபடை - வினைத்தொகை நிலைத் தொடராய்க் கலப்பைக்குக் காரணப்பெயர்; குவ்வுருபு கருவிப் பொருளில் வந்தது.

     [இதுவரையிலும் நல்லினஞ் சேர்தலினாலாகும் பயன்களைக் காட்டி மற்றிரண்டு பாட்டால் தீயினஞ் சேர்வதனாலாகுங் கேட்டை விளக்குகின்றார்.]

179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
     குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
     தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
     தீயினம் சேரக் கெடும்.

     (இ-ள்.) நெல் - நெல்லானது, நிலம் நலத்தால் - நிலத்தினது வளப்பத்தால், நந்திய போல் - வளர்வது போலே, தத்தம் குலம் நலத்தால் - தாங்கள் தாங்கள் சேர்ந்திருக்கிற கூட்டங்களின் யோக்கியதையால், சான்றோர் ஆகுவர் - (மனிதர்) மேலான வராவர்; கலம் நலத்தை - கப்பலின் பெருமையை, தீ வளி - சுழல்காற்று, சென்று - போய், சிதைத்து ஆங்கு - கெடுத்தாற் (கெடுவது) போல, சான்றாண்மை - (ஒருவருடைய) மேன்மையானது, தீ இனம் சேர - துர்க்குணமுள்ள கூட்டத்தைச் சேர்வதனால், கெடும் - கெட்டுப்போம், எ-று.

     நந்திய - ஈறு குறைந்த தொழிற்பெயராக் கொள்க; பெயரெச்சமாக் கொள்ளின் கருதிய துள்ளிட்டது என்கிற குற்றம் வரும். சிதைத்து என்பது சிதைத்தால் என்பதின் திரிபு. ஆங்கு - உவமையிடைச் சொல். தந்தம் [தம்தம்] என்பது வலித்தலால் தத்தம் என்றாயிற்று.

180. மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
     இனத்தால் இகழப் படுவர் - புனத்து
     வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
     எறிபுனந் தீப்பட்டக் கால்.

     (இ-ள்.) மனத்தான் - மனநிலைமையினால், மறு இலர் எனும் - குற்றம் இல்லாதவர்களானாலும், தாம் சேர்ந்த இனத்தால் - தாங்கள் கூடின தீய கூட்டத்தால், இகழப்படுவார் - நிந்திக்கப்படுவார்கள். (மனிதர்); எறி புனம் - வெட்டியகாடு, தீ பட்டக்கால் - நெருப்புப் பற்றினால், புனத்து - அக்காட்டிலுள்ள, வெறி கமழ் - வாசனை வீசுகின்ற, சந்தனமும் வேங்கையும் - சந்தனமரமும் வேங்கைமரமும், வேம் - வெந்து போம், எ-று. ஏ - அசை.

     இயற்கையிற் குற்றமிலராயினும் சேர்க்கைக் குற்றத்தால் கெடுவர் என்பது கருத்து.

     மனத்தான் - மனத்தில் எனவு முரைக்கலாம், வேற்றுமை மயக்கம். [பெயர். சூ. 60].

19. பெருமை

     [அதாவது, எவ்வழியு மனக்கலக்கமின்றித் தாம் செய்ய வேண்டியவைகளைக் கூடியவளவு செய்யுமுறுதிப் பாட்டானாய வுயர்வு.]

181. ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
     காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
     ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
     போவதே போலும் பொருள்.

     (இ-ள்.) ஈதல் இசையாது - (பொருள் இன்மையால்) பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பது அமையாது; இளமை - யௌவனம், சேண் நீங்குதலால் - தூரமாக நீங்கிப் போதலால், காதலவரும் - (தம்மிடத்து முன்) ஆசை கொண்டிருந்த பெண்டிரும், கருத்து அல்லர் - (இப்போது) மனப்பற்றுடையவர்கள் அல்லர்; (ஆதலால்) காதலித்து - (இல்வாழ்க்கையில்) ஆசை வைத்து, நாம் ஆதும் என்னும் - நாம் வாழ்வோம் என்கிற, அவாவினை கைவிட்டு - ஆசையை விட்டு, போவதே பொருள் - துறந்து போவதே நல்ல காரியமாகும், எ-று. போலும் - அசை;

     ஒருவர்க்கு ஒன்று கொடுத்து உபகாரஞ் செய்யக் கூடாமலும் போகங்களை அனுபவிக்கக் கூடாமலும் போன பின்னும் இல்வாழ்க்கையில் ஆசை வைத்துத் தடுமாறுதலை விட்டு ஆத்துமானுபவ சுகத்தைப் பெற மனந் துணிவது பெருமை என்பது கருத்து.

     ஆதும் - தன்மைப்பன்மை யெதிர்கால வினைமுற்று; ஆ - பகுதி, தும் - விகுதி, விகுதியே காலங்காட்டும். [வினை. சூ. 13ம், பத. சூ. 18ம் காண்க.]

182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
     பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
     நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
     என்றும் பரிவ திலர்.

     (இ-ள்.) இல் சார்வின் - இல்வாழ்க்கையைச் சார்ந்ததனால், ஏமாந்தேம் - களிப்படைந்தோம், ஈங்கு - இந்த இல் வாழ்க்கையில், அமைந்தேம் - (எல்லாம்) நிறைந்தவர் ஆனோம், என்று எண்ணி -, பொச்சாந்து - (பின்வருவதை) மறந்து, ஒழுகுவர் - நடப்பார்கள், பேதையார் - புத்தியீனர்; அச்சார்வு - (இல்வாழ்க்கையாகிய) அந்த ஆதரவுகள், நின்றன போன்று - நிலையானவைகள் போலிருந்து, நிலையா - நிலைநிற்க மாட்டா, என உணர்ந்தார் - என்றறிந்தவர், என்றும் - எப்போதும், பரிவது இலர் - விசனப்படமாட்டார், எ-று.

     பல இடையூறுகளால் இல்வாழ்க்கை நிலைகுலைந்து வருந்தும்படி நேரிடுவதுதான் பின்வருவது; இது இத்தன்மையதென முன்பே உணர்ந்து அதிற் பற்றற்று நிற்குநிலை சுகத்திற்கு ஏதுவாதலால் பெருமை என்பது கருத்து.

     ஏமாந்தேம் - ஏமா - பகுதி. பொச்சாந்து - பொச்சா - பகுதி. மனைவி மக்கள் மாளிகை விளைநிலம் முதலியவைதாம் அச்சார்வு என்னப்பட்டன.

183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
     சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
     நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
     இன்றிப் பலவும் உள.

     (இ-ள்.) மயல் இன்றி - மயக்கமில்லாமல், மறுமைக்கு வித்து - மறுமைச் சுகத்திற்குக் காரணமாயுள்ள நற்காரியத்தை, செய்து -, சிறுமைபடாதே - துன்பத்தை யடையாமல், நீர் - நீங்கள், அறிஞர் ஆய் - விவேகமுள்ளவர்களாய், வாழ்மின் - வாழுங்கள்; நின்றுழி நின்றே - இருந்த இடத்தில் இருந்தே, நிறம் - பருவம் [அல்லது குணம்], வேறு ஆம் - மாறிப்போம்; காரணம் இன்றி - காரணமில்லாமலே, பலவும் உள - இன்னும் பலவேறுபாடுகளும் உண்டாம்; [அல்லது குணம் மாறும் படியான காரணமில்லாமலே பலமாறுதல்களும் உண்டாம் என உரைத்துக் கொள்க], எ-று.

     நாம் இருக்கிறபடி இருக்கையிலேயே நமக்குத் தெரியாமலே நம்முடைய பருவமுதலானவை மாறிப் போகின்றன. ஆதலால் மறுமைக்குரியவற்றை மயக்கமுறாமுன்னமே செய்து, விவேகிகள் என்று சொல்லும்படி வாழ்ந்து கொண்டு, பருவமுதலிய மாறிப் போன காலத்தில் மனக்குறையின்றி யிருப்பது பெருமை என்பதாம்.

     நிறம் ஒளியாதலால் பருவத்துக்கு ஆகுபெயராக் கொள்ளப்பட்டது. காரணமில்லாமல் என்பதற்கு நம்மால் அறியப்பட்ட காரணங்களில்லாமல் என்பது கருத்து. அறிஞராய் நின்றுழி நின்று எனக்கூட்டி "நாம் இன்னதைச் செய்ய வேண்டும் இன்னதைத் தவிர வேண்டும் என்றிருக்கையிலேயே எல்லாம் மாறுகின்றன" எனவும் கருத்துக் கொள்ளலாம். நின்ற உழி என்பது நின்றுழி என விகாரப்பட்டது, உழி - இடம்.

     இம் மூன்று பாட்டினாலும் இல்வாழ்க்கைச் சிதைவினால் மனங்கலங்காது நிற்றலாகிய பெருமை கூறப்பட்டது. இனிச் செய்கடன்களைப் பற்றிய வுயர்வு கூறப்பட்டது.

184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
     இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
     சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
     ஆஅயம் கண்ணும் அரிது.

     (இ-ள்.) உறைப்பு அரு காலத்தும் - மழை பெய்தல் அருமையாகிய காலத்திலும், ஊற்று நீர் கேணி - ஊற்றினால் நீரையுடைய குளம், இறைத்து உணினும் - இறைத்துக் குடித்தாலும், ஊர் ஆற்றும் - ஊரைக் காப்பாற்றும், என்பர் -, கொடை கடன் - கொடுத்தலாகிய கடமை, சாயக்கண்ணும் - தளர்ந்த போதும், பெரியார் போல் - பெரியோர்களைப் போல, மற்றையார் - சிறியவர், ஆயக்கண்ணும் - (செல்வம்) பெருகி வருங்காலத்திலும், அரிது - (பிறர்க்கு உபகரித்தல்) இல்லையாம், எ-று.

     ஒரு குளம் மழையில்லாத போதும் ஊற்று நீரால் பலரைக் காப்பாற்றுவது போல் பெருமையுடையோர் கொடுக்கும் வளம் தங்களுக்கில்லாத போதும் யாதோ ஒருவகையால் பிறர்க்கு உதவி செய்வர், சிறியாரோ செல்வ மிகுதியிலும் அப்படிச் செய்யார் என்பது கருத்து.

     அருங்காலத்து என்பதில் ஙகரம் இனமிகல். கொடைக் கடனும் என்பதில் உம்மை அசையெனக் கொள்வதே தகுதி. ஆயக்கண், காயக் கண் - வினையெச்சங்கள்; அளபெடைகள் பாட்டினோசையும் இன்னோசையு நிறைக்க வந்தன.

185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
     கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
     பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
     செய்வர் செயற் பாலவை.

     (இ-ள்.) உறு புனல் தந்து - (செழித்த காலத்தில்) மிகுந்த நீரைக் கொடுத்து, உலகு ஊட்டி - உலகத்தாரை உண்ணச் செய்து, அறும் இடத்தும் - (நீர்) அற்ற காலத்தினும், கல் ஊற்றுழி தோண்டின ஊற்றிலே, ஊறும் - (நீர்) ஊறப்பெற்ற, ஆறே போல் - நதியைப் போல், செல்வம் பலர்க்கு ஆற்றி - (உள்ள போது) தஞ்செல்வத்தைப் பலபெயர்க்குங் கொடுத்து, கெட்டு உலந்தக்கண்ணும் - (அச்செல்வம்) கெட்டழிந்த போதும், சிலர்க்கு ஆற்றி - சிலர்க்காயினுங் கொடுத்து, செயல் பாலவை - செய்யும்படியானவைகளை, செய்வர் - (பெரியோர்) செய்வார்கள், எ-று.

     கல் - வினைத்தொகை. செயல்பாலவை - செயலுக்குத்தக்க பான்மையுடையவை; பான்மை - குணம் அல்லது இயல்பு.

186. பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
     கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
     கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
     ஒன்றானும் தோன்றாக் கெடும்.

     (இ-ள்.) பெருவரை நாட - பெரியமலைகளுள்ள நாட்டின் அரசனே!, பெரியார்கண் - பெரியவர்களிடத்தில், தீமை - குற்றமானது, கரு நரைமேல் - சிறந்த வெள்ளை ரிஷபத்தின் மேல், சூடே போல் - சூடிய சூடு போலே, தோன்றும் - விளங்கிக் காணும், கரு நரையை கொன்றன்ன - சிறந்த வெள்ளை ரிஷபத்தைக் கொன்றாற் போன்ற, இன்னா செயினும் - தீச்செயல்களைச் செய்தாலும், சிறியார் மேல் - சிறியோரிடத்து, ஒன்றானும் - ஒரு குற்றமாயினும், தோன்றா கெடும் - விளங்கிக் காணாமல் அழிந்து விடும், எ-று.

     பெரியோர் ஒரு குற்றஞ் செய்தால் அது நன்றாய் விளங்கித் தோன்றும். சிறியோர் எத்தனை செய்தாலும் ஒன்றாவது விளங்கித் தோன்றாததுமன்றிச் செய்ததாகவே காணப்படாமற் போம் என்றதனால் பெருமையுடையோர் சிறிதுங் குற்றஞ் செய்யாது தம்மைக் காக்க வேண்டும் என்பது கருத்து.

     ரிஷபங்களில் வெள்ளை ரிஷபம் மிகச் சிறந்ததென்பர், ஆகையாலதைக் கொல்வது அதிக பாவமான செய்கை. தோன்றா கெடும் என்னுமிடத்து ஒற்றுமிகுவதே தகுதி. ஒன்றானும் - ஆன், ஏன் என்பவை ஐயம் அல்லது விகற்பத்தைக் காட்டு மிடைச் சொல், உம் - இழிவு சிறப்பு.

187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
     பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
     நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
     பகையேயும் பாடு பெறும்.

     (இ-ள்.) சிறுமை இசைந்த - அற்பத்தன்மை பொருந்திய, இயல்பு இலாதார்கண் - குணமில்லாதவர்களிடத்தில், பசைந்த துணையும் - சிநேகித்த அளவும், பரிவு ஆம் - துன்பமே ஆம்; அசைந்த - தளர்ந்த [நல்வழியிற் சேராத], நகையேயும் - பரிகாசத்தையும், வேண்டாத - விரும்பாத, நல் அறிவினார்கண் - நல்ல விவேகிகளிடத்து, பகையேயும் - விரோதமும், பாடு பெறும் - பெருமையை அடையும், எ-று.

     அயோக்கியரிடத்தில் நேசங் கொள்ளக் கொள்ளத் துன்பமே வரும், ஆதலால் அதனினும் யோக்கியரிடத்துப் பகை நல்லது; ஏனெனில் இப்பகை யாதொரு துன்பமுஞ் செய்யாதென்பது கருத்து.

     நகை - பரிகாசத்துக்கு ஆகுபெயர். பரிகாசத்திலுந்தகாததைக் கொள்ளாமை பெரியோ ரியல்பாதலின் அங்ஙன முரைக்கப்பட்டது. அசைந்த - தகாதவைகளை, நகையேயும் - மகிழ்ச்சியிலும், என உரைப்பாருமுண்டு.

188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
     ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
     சலவருள் சாலச் சலமே; நலவருள்
     நன்மை வரம்பாய் விடல்.

     (இ-ள்.) மெல் இயல் - மென்மையான குணமுள்ள, நல்லாருள் - பெண்டிர்களிடத்தில், மென்மை - மெதுவாந்தன்மைக்கும், ஒன்னாருள் - சத்துருக்களிடத்து, அது இறந்து - அதை விட்டு, கூற்று உட்கும் - யமன் பயப்படும்படியான, உட்கு உடைமை - பயப்படுத்துந் தன்மைக்கும், எல்லாம் - எல்லாவிடத்திலும், சலவருள் - வஞ்சகம் பேசுவோரிடத்து, சால - மிகவும், சலமே - வஞ்சம் பேசுவதற்கும், நலவருள் - நற்குண முடையவரிடத்து, நன்மை - நலமா நடப்பதற்கும், வரம்பு ஆய்விடல் - எல்லையாயிருக்க வேண்டும், எ-று.

     அயோக்கியரிடத்து அயோக்கியமாயும் யோக்கியரிடத்து யோக்கியமாயு நடப்பது பெருமை என்பது கருத்து.

     வேண்டுக என்றும் செலுத்துக என்றும் வினை வருவித்துத் தனித் தனி வாக்கியமா முடிப்பாருமுளர். வரம்பாய் - எல்லையாநின்று, விடல் - செலுத்த வேண்டும் எனவு முரைக்கலாம். சலம் உடையோர்சலவர், நலம் உடையோர் நலவர். 'மெல்லிய நல்லாருண் மேன்மை எனவும் பாடம். விடல் - வியங்கோள் வினைமுற்று. [நன். வினை. சூ. 19ன் உரையைக் காண்க].

189. கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
     மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
     துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
     விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

     (இ-ள்.) ஒருவன் -, கடுக்கி - (முகத்தைக்) கடுமையாக்கி, கடுங் குறளை பேசி - மிகுந்த கொடுஞ் சொற்களைப் பேசி, மயக்கி விடினும் - மயங்கச் செய்தாலும், மனப்பிரிப்பு ஒன்று இன்றி - மனம் வேறுபடுதல் கிஞ்சித்து மில்லாமல், விளக்கினுள் - தீபத்தில், ஒள் சுடரே போன்று - பிரகாசமான சுவாலையை ஒத்து, துளக்கம் இலாதவர் - அசைவு இல்லாதவர், தூய மனத்தார் - சுத்தமான மனமுள்ளவர், எ-று.

     ஒன்று என்பது இங்கே அற்பம் என்பதைக் காட்டுகின்றது.

190. முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
     பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
     முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
     துக்கத்துள் நீக்கி விடும்.

     (இ-ள்.) முன் துத்தும் - முந்தி உண்ணும்படியான, துத்தினை - உணவை, நாளும் - தினந்தோறும், அறம் செய்து - (பிறர்க்குக் கொடுத்தலாகிய) தருமமாச் செய்துவிட்டு, பின் துத்து - பின் உண்ணும்படியான (உணவை), துத்துவர் சான்றவர் - புசிப்பர் பெரியோர் அ துத்து - அப்படிச் செய்யு முணவு. முக்குற்றம் நீக்கி - காமம் வெகுளி மயக்கம் என்கிற மூன்று குற்றங்களையும் போக்கி, முடியும் அளவும் - (அவர்) முடியுங் காலம் வரையும், துக்கத்துள் நீக்கிவிடும் - துக்கத்தினின்றும் (அவர்களை) பிரித்துவிடும், எ-று.

     முதலில் உண்ணும்படி கொண்ட சோற்றைப் பரதேசிகட்குக் கொடுத்துப் பிற்பட நின்றதை உண்டு வாழுமவர்க்குச் சாமளவும் துக்கமில்லா திருக்கும்படியான நிலையைத் தரும்; புண்ணிய முண்டா மென்பதாம்.

     துத்தும் - து - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, து - சாரியை, தகரமும் உகரக்கேடும் சந்தி. துத்து - வினையாலணையும் பெயர், உண்ணத்தக்கதென்பது பொருள், து - பகுதி, து - ஒன்றன்பால் விகுதி, இடைநிலையின்றி வந்தது. துக்கத்துள் - எ-ம் வேற்றுமையுருபு 5ம் வேற்றுமையில் வந்தது.

20. தாளாண்மை

     [அதாவது முயற்சியை ஆளுந்தன்மை.]

191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
     கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
     வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
     தாளாளர்க்கு உண்டோ தவறு?

     (இ-ள்.) கோள் - (நீரின்) கொள்கையை, ஆற்ற - பூர்ணமாக, கொள்ளா - கொள்ள மாட்டாத, குளத்தின் கீழ் - ஏரியின் கீழுள்ள பைங்கூழ் போல் - பயிரைப் போலே, கேள் ஈவது உண்டு - பந்துக்கள் கொடுப்பதைப் புசித்துக் கொண்டு, கிளைகள் - (கொடுப்பவர்க்கு) உறவின் முறையார், துஞ்சுவ - சாவர்; வாள் ஆடு - வாளின் மேல் ஆடுகின்ற, கூத்தியர் - கூத்தாடும் பெண்களுடைய, கண் போல் - கண்ணைப் போல், தடுமாறும் - (அவ்வாட்டத்தின் மேல் கவனமாய்) புடைபெயர்ந்து நிற்கிற, தாள் ஆளர்க்கு - முயற்சியைக் கையாள்பவர்க்கு, தவறு உண்டோ - காரியம் கைகூடாமற் போவது உண்டாகுமோ [உண்டாகாது], எ-று.

     மிகுந்த நீரைக் கொள்ளமாட்டாத ஏரியின் கீழ்ப் பயிர் அவ்வேரி செழித்திருக்கு மளவும் செழித்திருந்து அது வரண்டால் தானும் சாவது போல், யாதொரு முயற்சியுஞ் செய்யாமல் உறவினர் கொடுக்கத் தின்று கொண்டு காலங் கழிக்குஞ் சோம்பர் அவர் செல்வம் வரளும் போது சாவர். கத்திமேல் ஆடுகிறவள் அவ்வாட்டம் தவறாமலும் அபாயம் வராமலும் ஜாக்கிருதையாய்க் கண்ணை அதன் மேலேயே செலுத்துவது போல் காரியத்தில் ஜாக்கிருதையாய் முயற்சி செய்கிறவர்களுக்குக் காரியம் தவறிப் போக மாட்டாது என்பது கருத்து.

     துஞ்சுக எனவும் பாடமுண்டு. தடு - தம்பித்திருத்தல். அது மாறுதல் தடுமாற்றம். ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி. பசுமையான கூழ் பைங்கூழ்; அடி அகரம் ஐ ஆய், மற்றவை கெட்டன. கிளைகளோ - ஓ - இரக்கதின்கண் வந்தது.

192. ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
     காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
     வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
     தாழ்வின்றித் தன்னைச் செயின்.

     (இ-ள்.) ஆடு கோடு ஆகி - ஆடுகின்ற கொம்பு ஆகி, அதரிடை - வழியில், நின்றதும் - நின்ற செடியும், காழ் கொண்ட கண்ணே - வயிரங் கொண்ட போதே, களிறு அணைக்கும் கந்து ஆகும் - யானையைக் கட்டும்படியான தறியாகும்; ஒருவன் -, தான் தன்னை -, தாழ்வு இன்றி செயின் - தாழ்ச்சியில்லா திருக்கும்படி (முயற்சி) செய்தால், வாழ்தலும் - (அவனுடைய) வாழ்வும், அன்ன தகைத்தே - அப்படிப்பட்ட தன்மையுடையதே ஆகும், எ-று.

     அளபெடை இன்னிசைக்கு வந்தது. ஏகாரம் இரண்டும் தேற்றம்.

193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
     சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
     கால்தொழில் என்று கருதற்க கையினால்
     மேல் தொழிலும் ஆங்கே மிகும்.

     (இ-ள்.) உறு புலி - பெரிய புலி - ஊன் இரை இன்றி - மாமிசமாகிய உணவு இல்லாமல், ஒருநாள் -, சிறு தேரை - சிறிய தவளையை, பற்றியும் தின்னும் - பிடித்தும் புசிக்கும்; (ஆனது பற்றி) அறிவினால் -, கால் தொழில் என்று - அற்பச் செய்கையென்று, கருதற்க - நினைக்க வேண்டாம்; கையினால் - முயற்சியால், மேல் தொழிலும் - மேலான செய்கையும், ஆங்கே மிகும் - அப்படியே மேம்படும், எ-று.

     புலியும் ஒரு சமயத்தில் தேரையைத் தின்னும்படி நேரிடும். ஆதலால் நாமும் சமயத்துக்கு ஏற்றபடி ஒரு அற்ப காரியஞ் செய்ய வந்தால் அதை அற்பம் என்று நினையாமல் முயன்றால் மேலான காரியம் அப்படியே கைகூடு மென்பதாம்.

     பற்றியும் என்கிற உம்மை எச்சப்பொருளோடு இழிவு சிறப்புமாம்; பற்றித் தின்பது முண்டு என்றபடி.

194. இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
     அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
     கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
     பெண்டிரும் வாழாரோ மற்று.

     (இ-ள்.) கண்டல் - முள்ளிச் செடியை [அல்லது தாழஞ் செடிகளை], திரை - அலைகள், அலைக்கும் - அலையச் செய்கின்ற, கானல் - உப்பளமுள்ள, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்றுறையுடைய பாண்டியனே!, இசையாது எனினும் - கூடாமற்போனாலும், ஓர் ஆற்றான் இயற்றி - ஒரு வழியினால் செய்து, அசையாது நிற்பது - மனம் சலியாமலிருப்பது, ஆண்மை ஆம் - ஆண்தன்மையாம்; இசையுங்கால் - கூடினால், பெண்டிரும் வாழாரோ - பெண்பிள்ளைகளும் மேன்மை அடைய மாட்டார்களா?, எ-று. மற்று - அசை.

     சுலபமாய் ஒரு காரியம் கைகூடினால் பெண்பிள்ளைகளும் அதைச் செய்து மேன்மை பெறலாம். இசையாத காரியத்தை எப்படியாகிலும் செய்து அந்த வருத்தத்துக்காக மனஞ் சலியாமலிருப்பதுதான் ஆண்குணம் என்பது கருத்து.

     கானல் - கடற்கரைச் சோலையுமாம். அம் - சாரியை, அழகைக் குறிக்கு முரிச் சொல்லுமாம்.

195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
     சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
     ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
     என்றிவற்றான் ஆகும் குலம்.

     (இ-ள்.) நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் -, (சொல்வது) சொல் அளவு அல்லால் - சொல்மாத்திரையா யிருக்கின்ற தல்லாமல், பொருள் இல்லை - ஒரு பொருளையும் உடைத்தாயிருக்கவில்லை; தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் பொருள் ஒன்றோ - சுத்தமான பொருளும், தவம் - விரதமும், கல்வி - நூலறிவும்; ஆள் வினை - முயற்சியும், என்ற இவற்றால் - என்று சொல்லப்படுகிற இக்குணங்களால், குலம் ஆகும் - நற்குலமென்பது உண்டாகும், எ-று.

     இயற்கையாய் நற்குலமென்றும் தீக்குலமென்றும் மில்லை; நற்குண நற்செய்கைகளால் நல்ல குலமென்பதும் அவையின்மையால் தீயகுல மென்பதுமாம் என்றதாயிற்று.

     ஒன்றோ என்பது எண்ணிடைச் சொல், அல்லது அது ஒன்றோ, பின் சொல்லப்படும் பிறவும் என வுரைக்கினு மமையும்.

196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
     ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
     உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
     குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

     (இ-ள்.) ஆற்றும் துணையும் - (தாம் ஒரு காரியத்தை) செய்து முடிக்குமளவும், அறிவினை உள் அடக்கி - (தமது) அறிவின் திறத்தை வெளிப்படாமல் வைத்து, ஊக்கம் உரையார் - (தமது) மனவலியை (பிறருக்கு) சொல்லமாட்டார், உணர்வு உடையார் - விவேகமுள்ளவர், ஊக்கம் - (பிறர்) மனவலியை, உறுப்பினால் - அவயவங்களி னிலைமையினால், ஆராயும் ஒண்மை உடையார் - ஆராய்ந்து அறியும்படியான புத்தியுள்ளவர்களது, குறிப்பின் கீழ் - அறிவின் நுட்பத்தில், பட்டது உலகு - இருக்கின்றது உலகு, எ-று.

     புத்திமான்கள் எடுத்த காரிய முடியுமளவும் முயற்சி செலுத்தும்படியான தமது மனோபலத்தைப் பிறருக்கு வெளியிடார். பிறருடைய மனோபலத்தையோ அவருறுப்புகளிருக்குந் தன்மையாலேயே அறிந்து கொள்ளுவர். ஆதலால் உலக்மெல்லாம் அப்படிப்பட்டவருடைய குறிப்பிலடங்கி யிருக்கிறதென்பது கருத்து.

     ஒண்மை - விளக்கம், புத்திக்கு ஆகு பெயர். ஊக்கமுரையாரும் உணர்வுடையாரும் ஒண்மையுடையாரு மானவர்களுடைய என ஒரே வாக்கியமாகவு முரைக்கலாம். குறிப்பின் கீழ் - கீழ் ஏழனுருபு.

197. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
     மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
     குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
     புதல்வன் மறைப்பக் கெடும்.

     (இ-ள்.) சிதலை தினப்பட்ட - கறையானாலே தின்னப் பட்ட, ஆல மரத்தை -, மதலை ஆய் - தாங்குந் தூணாய், அதன் வீழ் - அந்த ஆலின் வீழ், ஊன்றி ஆங்கு - தாங்கினாற் போல, தந்தைகண் குதலைமை தோன்றின் - பிதாவினிடத்தில் தளர்ச்சி உண்டானால், தான் பெற்ற புதல்வன் - அவன் பெற்ற மகன், மறைப்ப - மறைப்பதனால், கெடும் - போய்விடும், எ-று.

     செல்லெரித்து வீழ்ந்து போகத்தக்க ஆலமரத்தை அதன் வீழ் தாங்கிக் கொண்டது போல் பிதா செய்யுங் காரியத்துக்கு நேரிடும் தளர்ச்சியை மகன் முயற்சியால் போக்க வேண்டுமென்றபடி.

     ஆல் மரம் - இடையில் அம் சாரியை வந்தது. மதலை - மகனுக்கும் தூணுக்கும் சிலேடை ஊன்றினால் என்பது ஊன்றி எனத் திரிந்தது.

198. ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
     மானம் தலைவருவ செய்யவோ? - யானை
     வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
     அரிமா மதுகை அவர்.

     (இ-ள்.) யானை வரி முகம் - யானையினது புள்ளியுள்ள முகத்தை, புண் படுக்கும் - புண்படச் செய்யும்படியான, வள் உகிர் - கூர்மையான நகங்களும், நோன் தாள் - வலிமையுள்ள பாதங்களும் (உள்ள), அரிமா - சிங்கத்தைப் போன்ற, மதுகையவர் - வீரமுள்ளவர்கள், ஈனம் ஆய் - தாழ்ச்சியுண்டாகி, இல் இருந்து - வீட்டிலிருந்து, இன்றி - ஒரு பொருளுமில்லாமல், விளியினும் - சாம்படி நேரிட்டாலும், மானம் தலைவருவ - குற்றம் தம்மிடத்து வரும்படியான காரியங்களை, செய்பவோ - செய்வார்களோ [செய்யார்கள்], எ-று.

     நல்ல சாமர்த்திய முள்ளவர்கள் ஒரு கால் தங்கள் முயற்சி இடையூறுற்றுக் காரிய முடியாமல் சாம்படி நேர்ந்தாலும் பொறுத்திருந்து அம்முயற்சியை மறுபடியும் கைகூடப் பார்ப்பார்களேயன்றித் தாழ்வான காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.

     செய்ப - பலர்பால் வினைமுற்று, எதிர்காலம்; [வினை. சூ. 8, பத. சூ. 18] ஓகாரம் - எதிர்மறை.

199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
     தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
     உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
     பேராண்மை இல்லாக் கடை.

     (இ-ள்.) தீம் கரும்பு ஈன்ற - மதுரமான கரும்பு பெற்ற, திரள் கால் - திரண்ட தாளையுடைய, உளை - குதிரை முதலியவற்றின் பிடர் மயிர்போல் (கற்றையாகிய), அலரி - பூவானது, தேம் கமழ் நாற்றம் - இனிமையாய்ப் பரிமளிக்கும் சுகந்தத்தை, இகழ்ந்தது ஆங்கு - இகழ்ந்ததுபோல், ஓங்கும் உயர் குடியுள் - பேர் பெற்ற மேலான குலத்தில், பிறப்பின் - பிறந்ததனால், பேர் பொறிக்கும் - பேர் எழுதும் படியான, பேர் ஆண்மை - மிகுந்த சாமர்த்தியம் [அதாவது முயற்சி], இல்லாக் கடை - இல்லாமற் போனால், என ஆம் - என்ன (சிறப்பு) உண்டாம், எ-று.

     கரும்பிற் பிறந்தும் அதன் நுனியிலுள்ள பூங்கொழுந்துக்குச் சிறப்பில்லை போல மேற்குலத்திற் பிறந்தாலும் முயற்சியில்லையாயின் சிறப்பில்லை என்பதாம்.

     மெதுவாய்ச் செறிந்து குஞ்சம் போலிருக்குந் தன்மையால் உளை உவமானமாயிற்று. அலரி - அலர் - பகுதி, இ - கர்த்தாவைக் காட்டும் விகுதி. பிறப்பின் - தொழிற்பெயர், ஐந்தனுருபு, ஏதுப்பொருள்.

200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
     கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
     பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
     நீரும் அமிழ்தாய் விடும்.

     (இ-ள்.) பெரு - பெரிய, முத்தரையர் - முத்தரையரென்பவர், பெரிது உவந்து - மிகவும் சந்தோஷித்து, ஈயும் - கொடுக்கிற, கருனை சோறு - பொரிக்கறியோடு கூடிய சோற்றை, கயவர் - மூடர் [யாதொரு முயற்சியுஞ் செய்யுந் திறனில்லாதவர்], ஆர்வர் - உண்பார்கள்; கருனையை பேரும் அறியார் - பொரிக்கறியின் பேரையும் அறியாதவருடைய, நனி விரும்பு தாளாண்மை - மிகவும் விரும்பத்தக்க முயற்சியாலுண்டாகிற, நீரும் -, அமிழ்து ஆய்விடும் - (அவர்க்கு) அமிர்தம் போலாகும், எ-று.

     முத்தரையர் என்பவர் ஒருவர் பூர்வத்தில் பலருக்கும் நல்ல சோறிட்டுக் கொண்டிருந்தார் போலும், யாதொரு முயற்சியும் செய்ய மாட்டாத சோம்பேறிகள் அதனையுண்டு மகிழ்ந்தார்கள். அது தகுதியன்று. உயர்ந்த ஊணின் பேரையும் அறியாத சிலர் தமது முயற்சியால் கூழ்நீரைக் கொண்டாலும் அதுவே தகுதி. அவர்களுக்குத் திருத்தியையும் பெருமையையும் தருவதனால் அமிருதத்தோடு ஒப்பிடப்பட்டது.

     பெருமுத்தரையர் - பேரு முத்து அரையர் - பெரிய முத்துக்களையுடைய பாண்டியரசர்கள் எனவும் உரைக்கலாம்; அந்நாட்டிலே முத்து மிகுதியுமுண்டாவது பிரசித்தம். கயவர் - கயம் - பகுதி, உரிச்சொல், அர் - விகுதி. கருனை - வேற்றுமைமயக்கம் அல்லது கருனையைப் பேரினாலுமறியாதவர் எனவுங் கொள்ளலாம். தாளாண்மை - மூன்றனுருபு தொக்கது.

     இவ்வளவால் முன் கூறிய பெருமைக்கும் மேன்மைக்கும் தாளாண்மை முக்கிய காரணமென அதன் சொரூபமும் பயனும் அஃதில்லாமையா லிழிவும் விளக்கப்பட்டன.


நாலடியார் : 1 2 3 4 5 6 7 8