நானூறு சமண முனிவர்கள்

இயற்றிய

நாலடியார்

உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார்

... தொடர்ச்சி - 6 ...

26. அறிவின்மை

     [அதாவது முன் கூறிய பகுத்தறிவில்லாமை.]

251. நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
     பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
     பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
     கண்ணவாத் தக்க கலம்.

     (இ-ள்.) நுண் உணர்வு இன்மை - நுட்பமான அறிவில்லாமையானது, வறுமை - தரித்திரமாம்; அஃது உடைமை - அப்படிப்பட்ட அறிவை யுடையவனாதல், பண்ணப் பணைத்த - மிகவும் வளர்ந்த, பெரு செல்வம் - பெரிய சம்பத்து ஆம்; எண்ணுங்கால் - யோசித்தால், பெண் அவாய் - பெண் தன்மையை விரும்பி, ஆண் இழந்த - ஆண் தன்மை இழந்த, பேடி - அலியானவள், கண் அவா தக்க - கண்கள் - விரும்பும்படியான, கலம் - ஆபரணங்களை, அணியாளோ - தரிக்க மாட்டாளோ [தரிப்பாள்], எ-று.

     மனிதருக்குச் செல்வமென்பதும் தரித்திரமென்பதும் அறிவும் அறிவில்லாமையுமே யன்றிப் பொருளும் பொருளின் மையு மன்று. பேடியும் நல்ல அணிகளை அணிவாளே, அதனால் வரும் சிறப்பு சிறப்பன்று என்பது கருத்து.

     விசேஷமாய் ஆபரணங்களைத் தரித்தல் பெண்களுக்கே யியல்பாதலால் ஆணிலக்கணங் குறைந்து பெண்ணிலக்கண மிகுந்த பேடி என்றார். பண்ணப்பணைத்த என்பது கன்னங் கறுத்த சின்னஞ்சிறுத்த பன்னப்பருத்த என்பவை போல் மிகுதிப் பொருள் பற்றி வந்த பணை என்பதின் அடுக்கெனக் கொள்க. ஐ அகரமானது விகாரம், பண்ண - செய்ய, (பணைக்கும்படி செய்ய) பணைத்த எனப்பொருள் கூறின் சிறப்பில்லையாம். வடமொழிகள் இங்ஙனம் அடுக்கி விகாரப்பட்டு வருவன பலவுள் இதனை "க்ரியா ஸம்ஹிகாரம்" என்பர் அவாவுதற்குத் தக்க என்பது அவாத்தக்க என்றாயிற்று.

252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
     அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
     நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
     பூவின் கிழத்தி புலந்து.

     (இ-ள்.) பல் - அநேகமான, ஆன்ற - நிறைந்த, கேள்வி - கேள்விகளின், பயன் உணர்வார் - பிரயோசனத்தை அறிந்தவர்கள், பாடு அழிந்து - பெருமைகெட்டு, அல்லல் உழப்பது - துன்பங்களால் வருந்துவதை, அறிதிரேல் - அறிய விரும்புவீர்களே யானால், (சொல்லுகிறேன்), தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, நாவின் கிழத்தி - சரசுவதிதேவி, உறைதலால் - வாசஞ்செய்வதனால், பூவின் கிழத்தி - திருமகள், புலந்து - பிணங்கி, சேராளே - (அவரிடம்) சேரமாட்டாளே, எ-று.

     அறிவைப் பெருமைப்படுத்துகிறீரே கற்றறிந்த புலவர் வெகு சங்கடப்படுவதேன் என்று ஒருவர் வினாவினதாகப் பாவித்து, பெண்களியல்பு தெரியாதா ஒருத்தி சேர்ந்தவிடத்து மற்றொருத்தி சேர்வதில்லையே. ஆதலின் சரசுவதி சேர்ந்த விடத்தில் இலக்குமி சேர்வதில்லையெனச் சாதுரியமா வுத்தரஞ் சொல்லினார். உண்மையோ கல்விச்சுவை தோய்ந்தவர்க்குச் செல்வத்தில் மிகுந்த விருப்பஞ் செல்லாமையே காரணமென்க. கிழமை - உரிமை, அதனை யுடையாள் கிழத்தி. அறிவுடைமையிற் குற்றங் கூறுதல் தவறு என்றபடி.

253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
     சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
     எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
     வழுக்கோலைக் கொண்டு விடும்.

     (இ-ள்.) தந்தை - பிதா, கல் என்று கழற - கல்வியைக் கற்றுக் கொள் என்று சொல்ல, அதனை ஓர் சொல் என்று கொள்ளாது - அதை ஒரு சொல்லாக ஏற்றுக் கொள்ளாமல், இகழ்ந்தவன் - தள்ளிவிட்டவன், மெல்ல - மெதுவாக, எழுத்து ஓலை - எழுத்தைக் கொண்டிருக்கிற ஓலையை, பல்லார்முன் - பலருக்கு எதிரில், நீட்ட - (படி என்று) கொடுக்க, விளியா - செத்தாற் போலாகி, வழுக்கு ஓலை - அங்கிருந்து தப்பிப் போய்விடும்படியான தொனியை, கொண்டுவிடும் - கொண்டு விடுவான், எ-று.

     விளியா - கோபித்து, வழு - (அடித்தலாகிய) தப்பிதத்தைச் செய்யத்தக்க, கோலை - தடிக்கொம்பை, கொண்டுவிடும், எனவும் உரைப்பர்.

254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
     நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
     இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
     உரைப்பினும் நாய்குரைத் தற்று.

     (இ-ள்.) கல்லாது நீண்ட ஒருவன் - கல்வி கற்காமல் வளர்ந்த ஒருவன், உலகத்து -, நல் அறிவாளரிடை - நல்ல விவேகமுள்ளவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, மெல்ல இருப்பினும் - சும்மா இருந்தாலும், நாய் இருந்தது அற்றே - நாய் இருந்தாற் போலாம்; இராது உரைப்பினும் - சும்மாயிராமற் போனாலும், நாய் -, குரைத்தது அற்று - குரைத்தாற் போலும், எ-று.

     புக்கு - புகு என்பதில் ககரம் இரட்டிக் காலங்காட்டி உகரவிகுதி பெற்றது.

255. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
     கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
     கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
     படாஅ விடுபாக் கறிந்து.

     (இ-ள்.) புல்லா - (கோட்டி இலக்கணம்) சேராத, புல் கோட்டி - அற்பக்கூட்டத்தையுடைய, புலவரிடை - (புன்) புலவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, கடை எல்லாம் - அற்பரெல்லாம், கல்லாத - தாம் கல்லாத விஷயங்களையும், சொல்லும் - சொல்வார்கள்; சான்றவர் - பெரியோர், கற்ற - (தாம்) கற்ற விஷயங்களை, (வினாவுவோர் புத்தி தாம் சொல்லும்) பொருளின்மேல், படா - செல்லாமல், விடுபாக்கு அறிந்து - விடுபட்டுப் போவதைத் தெரிந்து, சொல்லார் - சொல்ல மாட்டார்கள், எ-று.

     அற்பர் அற்ப கோட்டியிற் சென்று தாம் கல்லாதவற்றையும் சும்மாச் சொல்வர், பெரியோர்களோ வினாவினாலும் தாம் கற்றறிந்தவைகளையும் சொல்வதில்லை, ஏனெனில் கேட்போர் புத்தி தாம் சொல்வதின் மேற் படாமற்போ மென்பதை யறிந்து என்றபடி.

     கடை என்பது பொருளில் உயர்திணையானாலும் சொல்லில் பால் பகா அஃறிணையானதால் எல்லாமென்பதும் சொல்லும் என்பதும் அதனொடு பொருந்தின என அறிக. கடாயினும் என்பதில் யகரம் வந்தது போலிவழக்கு, கோயில் என்பது போல; [உயிர் புணர். 13வது] சூத்திரத்தில் நெறி என்ற மிகையினால் வந்ததெனவுங் கொள்ளலாம். விடுபாக்கு - தொழிற்பெயர், பாக்கு - விகுதி.

256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
     மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
     வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
     பச்சோலைக்கு இல்லை ஒலி.

     (இ-ள்.) கற்று அறிந்த - நூல்களைப் படித்து அவற்றின் உட்பொருள் அறிந்த, நாவினார் - புலவர், தம் சோர்வு அஞ்சி - தமக்குப் பிழை நேரிடுவதற்குப் பயப்பட்டு, சொல்லார் - (விஷயங்களைக் கண்டபடி எடுத்து) சொல்லார்; மற்றையர் ஆவார் - கற்றறியா தவர்கள், பகர்வர் - (தோன்றியபடி) சொல்வர்; பனையின்மேல் - பனைமரத்தில், வற்றிய ஓலை - உலர்ந்த ஓலை, கலகலக்கும் - கலகல என்று சத்திக்கும்; எஞ்ஞான்றும் - எப்போதும், பச்சோலைக்கு - பச்சையாயிருக்கிற ஓலைக்கு, ஒலி இல்லை - ஓசை இல்லை, எ-று.

     படித்தவர் சொல்வதில் பிழை நேரிடுமோ என்று பயந்து ஆலோசித்துச் சொல்வார்கள். கல்லாதாரோ வாய்க்குவந்தபடி சொல்வார்கள். இவர்களுக்கு உலர்ந்தவோலையும் பச்சையோலையும் உபமானம்.

     பசுமை பச்சு என்றாயிற்று. நாவினார் - புலவர்க்குக் காரணப் பெயர்.

257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
     நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
     குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
     சென்றிசையா வாகும் செவிக்கு.

     (இ-ள்.) நன்று அறியா மாந்தர்க்கு - நன்மை தெரிந்து கொள்ள மாட்டாத மனிதருக்கு, அறத்து ஆறு - தருமத்தின் விழியானது, உரைக்குங்கால் - சொல்லுமளவில், பன்றி கூழ் பத்தரில் - பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில், தேமா - மதுரமான மாங்கனியை, வடித்தற்று - பிழிந்தாற் போலும்; குன்றின் மேல் கொட்டும் தறி போல் - மலைமேல் அடிக்கிற கட்டுத்தறி போல், தலை தகர்ந்து - (அத்தருமவழிகள்) தலை சிதறி, செவிக்கு - காதுக்கு, சென்று இசையா ஆகும் - போய்க் கேளாதவைகளாய் விடும், எ-று.

     பன்றிக்குக் கூழுருசி தெரியுமல்லது தேமாவி னுருசி தெரியாது அதுபோல் கீழ் மக்களுக்குத் தருமவுபதேசம் இனியாது ஆதலின் அவ்வுபதேசம் மலைமேல் அடிக்குந்தறி உள்ளிறங்காமல் தலைபிளந்து போவதுபோல் சிதறிப் போய் காதிலேறாது; அதனால் அது வீண் என்கிறபடி.

258. பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
     வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
     கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
     நோலா உடம்பிற்கு அறிவு.

     (இ-ள்.) பாலால் கழீஇ - பாலினாலே கழுவி, பலநாள் உணக்கினும் - அநேககாலம் உலர்த்தி வைத்தாலும், இருந்தைக்கு - சரிக்கு, வாலிது ஆம் பக்கம் - வெண்மையான பக்கமானது, - இருந்தன்று - இருந்ததில்லை; கோலால் கடாய் - கோல் கொண்டு அடித்து, கூறினும் - சொன்னாலும், நோலா உடம்பிற்கு - புண்ணியஞ் செய்யாத உடம்புக்கு [மனிதனுக்கு என்றபடி], அறிவு - ஞானமானது, புகல் ஒல்லா - புகமாட்டாது, எ-று.

     கரியைப் பாலால் கழுவினாலும் வெண்மை யுண்டாகாதது போல் ஜன்மாந்தர புண்ணியமில்லாத மனிதனுக்கு எத்தனை சொன்னாலும் அறிவு வருவதில்லை என்பதாம்.

     கடாய் - கடா - பகுதி, யகரம் - வினையெச்சவிகுதி, கூறினும் என்பது குறினும் எனக் குறுகிற்று.

259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
     இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
     தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
     தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

     (இ-ள்.) பொழிந்து இனிது நாறினும் - (தேனைப்) பொழிந்து இனிப்பாகப் (பரிமளம்) வீசினாலும், பூ மிசைதல் செல்லாது - பூந்தேனை உண்ணுதற்குப் போகாமல், இழிந்தவை காமுறும் - ஈனமான வஸ்துக்களை விரும்புகின்ற, ஈ போல் - ஈயைப் போலே, இழிந்தவை கலந்த நெஞ்சினார்க்கு - இழிவான விஷயங்கள் பொருந்தின மனதுள்ளவர்க்கு, தக்கார் வாய் - யோக்கியருடைய வாயிலுண்டாகிற, தேன் கலந்த - மதுரஞ் சேர்ந்த, தேற்ற சொல் - தெளிவான சொற்களுடைய, தேர்வு - உண்மை, என் ஆகும் - என்ன பயனைத் தரும், எ-று. தாம் - அசை.

     இனிது - குறிப்பு முற்று, இங்கே வினைபுரியா நின்றது ஆக என்னும் வருவிக்குஞ் சொல்லுக்கு எழுவாயெனக் கொள்ளவுமாம். நாறினும் என்ற வினையின் தொடர்ச்சியால் இனிய கந்தத்தை எனச் செயப்படு பொருளாக்கினும் அமையும்.

260. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
     பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
     தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
     புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

     (இ-ள்.) கற்றார் உரைக்கும் - கற்றவர் சொல்லுகின்ற, கசடு அறு நுண் கேள்வி - குற்றமற்ற நுட்பமான பிரசங்கத்தை, தன் நெஞ்சு - தன் மனமானது, பற்றாது - பிடியாமல், உதைத்தலால் - தள்ளிப்போடுவதினால், மற்றும் - பின்னும், தன் போல் ஒருவன் - தன்னைப் போன்ற ஒருவனுடைய, முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து, கீழ் - கீழ்மகன், தானும் -, ஓர் புன் கோட்டி கொள்ளும் - ஒரு அற்ப பிரசங்கத்தைச் செய்வான், எ-று. ஓர், ஆம் - அசைகள்.

     கீழ்மக்கள் கற்றார்சொல்வது தன் மனதுக்குப் பிடியாத போது அதனை அலக்ஷியஞ்செய்து தான் மிகத் தெரிந்தவன் போல் மற்றொரு மூடனை நோக்கிப் பிரசங்கிப்பான் என்பது கருத்து.

     இவ்வளவால் இத்தன்மையானது அறிவின்மையென அதன் சொரூப குணங்களை யறிவித்து அங்ஙனமிராது விவேகத்தோடிருக்க வேண்டு மென்றதாயிற்று. போல் - இங்கு வினைத்தொகை.

27. நன்றியில் செல்வம்

     [அதாவது நன்மையில்லாத சம்பத்து; பயனில்லாமலும் கேடு தருவதுமான செல்வ மென்றபடி.]

261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
     பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
     பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
     கருதுங் கடப்பாட்ட தன்று.

     (இ-ள்.) அருகலது ஆகி - கிட்டினதாகி, பல பழுத்தக் கண்ணும் - அநேகமாய்ப் பழுத்திருந்தாலும், பொரி தாள் விளவினை - பொரிந்த அரையையுடைய விளாமரத்தை, வாவல் - வௌவால்கள், குறுகா - சேரமாட்டா; பெரிது அணிய ராயினும் - மிகவும் சமீபித்தவரா யிருந்தாலும், பீடு இலார் செல்வம் - பெருமையில்லாதவர்களுடைய செல்வமானது, கருதும் கடப்பாட்டது அன்று - நினைக்கும் படியான முறைமையுள்ள தன்று, எ-று.

     விளாமரத்திற்குப் பெருமையில்லை யென்பதன்று; வௌவாலுக்கு அதனா லுபயோகமில்லை யென்பது கருத்து.

     பாடு என்பது சாதாரணமான ஜனங்களுக்கு உபயோகமா யிருத்தலெனக் கொள்க. அருகலது - குறிப்பு வினையாலணையும் பெயர். பழுத்தக்கண் - வினையெச்சம்.

262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
     கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
     செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
     நள்ளார் அறிவுடை யார்.

     (இ-ள்.) அள்ளி கொள்வ அன்ன - அள்ளி எடுக்கலாம் படியான, குறு முகிழ ஆயினும் - சிறிய முகிழ்களை உடையவையானாலும், சூடும் பூ அன்மையால் - முடிக்கத்தக்க பூ அல்லாமையால், கள்ளி மேல் கை நீட்டார் - கள்ளி மரத்தின் மேல் கைபோட மாட்டார்கள் (மனிதர்), பெரிது செல்வம் உடைய ராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், கீழ்களை - கீழ்மக்களை, நள்ளார் - (அறிவுடையார்) விரும்ப மாட்டார்கள்; எ-று.

     அதிக அழகான பொருள் மேல் அள்ளி எடுத்துக் கொள்ளும் படியான ஆசையுண்டா யிருக்கும் ஆதலால் அள்ளிக் கொள்வன்ன என்றது. அள்ளிக் கொள்வ என்பதில் ஈற்றகரம் தொகுத்தல். அன்ன - அத்தன்மையுடையன.

263. மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
     வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
     செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
     நல்குவார் கட்டே நசை.

     (இ-ள்.) மல்கு திரைய - மிகுந்த அலைகளையுடைய, கடல் கோடு இருப்பினும் - சமுத்திரக் கரையில் இருந்தாலும், வல் ஊற்று - வலிமையான ஊறுதலையுடைத்தான, உவர் இல் கிணற்றின் கண் - உப்பில்லாத கிணற்றிலே, சென்று உண்பர் - போய் (நீரை) உண்பார்கள்; பெரிது செல்வம் உடையராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், (ஈயாதாரை விட்டு) சேண் சென்று - தூரத்தில் போய், நல்குவார் கட்டே - கொடுப்பவரிடத்துள்ளதே, நசை - ஆசை, எ-று.

     ஆசை - எழுவாய், நல்குவார்கட்டே - பயனிலை. ஊற்றுக்கு வலிமையாவது சிறிது சிறிதாயூறுவது, உவரில் கிணறு என்பதில், [மெய்புணர். சூ. 30ம் விதியால்] லகரம் றகரமாய்த் திரியவில்லை. நல்குவார்கட்டு - குறிப்பு முற்று. நல்குவார்கண் - பகுதி, டு - ஒன்றன் விகுதி, ணகரம் டகரமானது விகாரம். திரைய - குறிப்புப் பெயரெச்சம்.

264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
     உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
     வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
     பட்டும் துகிலும் உடுத்து.

     (இ-ள்.) புணர்கடல் சூழ் வையத்து - சேர்ந்த சமுத்திரஞ் சூழ்ந்த பூமியில், புண்ணியம் வேறே - புண்ணியமானது (யோக்கியதை யிருக்குமிடத்தைக் காட்டிலும்) வேறாகவே இருக்கிறது; உணர்வு உடையார் இருப்ப - கல்வியறிவுள்ளவர்கள் (ஒன்றுமில்லாது) இருக்க, உணர்வு இலா - அறிவில்லாத, வட்டும் வழுதுணையும் போல்வாரும் - பனவட்டையும் வழுதுணங்காயையும் ஒத்த அற்பரும், பட்டும் துகிலும் - பட்டுவஸ்திரத்தையும் வேறு நல்ல வஸ்திரத்தையும், உடுத்து வாழ்வரே - உடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்களே, எ-று.

     வட்டும் வழுதுணையும் எளிதில் கிடைக்கத்தக்க சாதாரணப் பொருள்கள்; இவை போன்ற அற்பர் செல்வராயிருக்க அறிவுள்ளவரோ தரித்திரராயிருப்பர் என்பது கருத்து.

     வாழ்வரே - இந்த ஏகாரம் பிரசித்தத்தைக் காட்டுகிறது. முந்திய ஏகாரம் தேற்றத்தில் வந்தது. ஓ - அதிசய இரக்கச் சொல். உணர்வது - அது அசை.

265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
     கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
     வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
     நினைப்ப வருவதொன் றில்.

     (இ-ள்.) வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களை யுடையவளே!, நயவர் நல்லார் - நீதிமான்களான நல்லவர், இருப்ப - (தரித்திரரா) யிருக்க, நயம் இலா கல்லார்க்கு - நீதியில்லாத மூடருக்கு, ஒன்று ஆகிய காரணம் - ஒரு செல்வப் பொருளுண்டாகிய காரணமானது, தொல்லை வினைப்பயன் அல்லது - பழமையான வினையின் பயனே யல்லாமல், நினைப்ப - யோசிக்க, வருவது ஒன்று - தோன்றத் தக்க வேறொன்றும், இல் - இல்லை, எ - று. [நயம் - பெருமையுமாம்.]

     முற்பாட்டில் கூறியபடி மூடர் செல்வம் பெற்று வாழ்தற்கு அவருடைய பூர்வ ஜனன புண்ணியமே யல்லது வேறில்லை யென நியாய முறுதிப் படுத்தியது.

266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
     நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
     புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
     நன்மக்கள் பக்கம் துறந்து.

     (இ-ள்.) நாறா தகடே போல் - பரிமளிக்காத புற விதழைப் போலே, நல் மலர்மேல் பொன் பாவாய் - நல்ல தாமரை மலரின் மேலிருக்கிற பொன்னின் பதுமை போன்ற திருமகளே!, நீ-, பொன்போலும் நல் மக்கள் பக்கம் துறந்து - பொன்னைப் போன்ற யோக்கியரான மனிதரிடத்து விட்டு, வேறு ஆய - (நன்மக்களில்) வேறாயிருக்கிற, புல் மக்கள் பக்கம் - கீழான ஜனங்களிடம், புகுவாய் - சேருகிறாய், (ஆதலால்) நிலத்து - பூமியில், நீறு ஆய் விளி - சாம்பலாகும்படி சாகக்கடவை, எ-று.

     சுகந்தமில்லாமலே பூவிலிருக்கும் புறவிதழ்போலே நீயும் சற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய் என இகழ்ந்தபடி. இதுவே பொற்பாவாய் என்பதனால் திடப்படுத்தப்பட்டது. நாறா தகடு - பரிமளியாத பொற்றகடு என்னவுமாம். அரோ - அசை.

267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
     பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
     வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
     நயவாது நிற்கு நிலை.

     (இ-ள்.) நயவார்கண் நல்குரவு - நயமுடையவரிடத்துள்ள தரித்திரமானது, நாண் இன்றுகொல் - வெட்கமில்லாததோ, பயவார் கண் செல்வம் - உபயோகியாதவரிடத்துள்ள சம்பத்தானது, பரம்ப - பரவுதற்கு (ஆன), பயின்கொல் - பிசினோ, வேல் கண்ணாய் - வேல் போன்ற கண்ணுள்ளவளே!, இவ்விரண்டும் - (யோக்கியரிடத்து வறுமையும் அயோக்கியரிடத்துச் செல்வமுமாகிய) இரண்டும், ஆங்கே - அவ்வவ்விடத்திலே, நயவாது நிற்கும் நிலை - மேன்மைப்படாமல் நிற்கின்ற நிலையை, வியவாய் காண் - ஆச்சரியப்பட்டுப்பார், எ-று.

     பரம்புதலாவது நாற்புறமு மொட்டும்படி வியாபித்தல். நீங்காது நிற்பது பற்றி பயின்கொல் என்னப்பட்டது. 'பறம்ப' எனப் பாடங்கொண்டு உறைகாரர் எனப் பொருள் கொண்டனர் சிலர்; அதற்குச் சந்தி யசையாதென அறிக.

268. வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
     கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
     காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
     மேலாறு பாய இருந்து.

     (இ-ள்.) வலவைகள் அல்லாதார் - பேய்த்தனமுடையராகாதவர் [யோக்கியர்], கால் ஆறு சென்று - தூரவழிபோய், கலவைகள் உண்டு - பல கலப்பான உணவைப் புசித்து, கழிப்பர் - காலங் கழிப்பார்கள்; வலவைகள் - பேய்த்தனமுள்ளவர்களோ, கால் ஆறுஞ் செல்லார் - தூரதேசமும் போகாதவர்களாய், மேல் ஆறு பாய - தம் மேல் பாலாறு நெய்யாறு பாயும்படி, இருந்து - தம்மிடத்திலேயே இருந்து, கருனையால் - பொரிக்கறியோடு கூட, துய்ப்ப - (உணவுகளை) உண்பார்கள், எ-று.

     இவ்வாறு இப்பாட்டிலும் முற்பாட்டுகளிலும் தக்கவர் வருந்த அவர்க்குப் பயன்படாமல் தகாதவரிடத் திருக்கின்ற செல்வம் நன்றியில் செல்வமென்று கூறியதாயிற்று. வலவைகள் இடாகினி காளிகளுக்கு ஊழியஞ் செய்பவராதலால் பேயெனக் கொண்டு அத்திறமுடையாரென உரைக்கப்பட்டது. அத்திறமாவது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலுமாம். கால் ஆறு - காலாற் செல்லத்தக்க ஆறு. கலவையாவது - பலரிடம் பெற்ற சோறாதலின் ஒருவ்கைப்படாதிருப்பது.

269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
     மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
     வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
     வண்மையும் அன்ன தகைத்து.

     (இ-ள்.) பொன் நிறம் செம் நெல் - பொன் போன்ற வர்ணமுள்ள நல்லநெற்கள், பொதியொடு - பொதிந்திருக்குங் கதிர்களோடு, பீள் - பயிரின் கருவானது, வாட - வாடிக் கொண்டிருக்க, மின் ஒளிர் வானம் - மின்னல் விளங்காநின்ற மேகமானது, கடலுள்ளும் - சமுத்திரத்திலேயும், கான்று உகுக்கும் - (தண்ணீரை) கக்கி உதிர்க்கும்; வெண்மை உடையார் - அறிவின்மை செல்வத்தைப் பொருந்தினால், வண்மையும் - (அவர்) கொடையும், அன்ன தகைத்து - அப்படிப்பட்ட தன்மையுள்ளது, எ-று.

     நல்ல நெற்பயிர் வாடிக் கொண்டிருக்க அங்கே பெய்யாமல் உபயோகமற்ற கடலிலே மேகம் மழை பொழிவது போல் புத்தியீனர் செல்வத்தைச் சற்பாத்திரத்தி லுபயோகப்படுத்தாமல் அபாத்திரத்தில் உபயோகப்படுத்துவர் என்பது கருத்து.

     கடலுள்ளு மென்பதில் உம்மை இழிவு சிறப்பு; அசையெனக் கொள்ளல் நலம்.

270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
     ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
     நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
     நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

     (இ-ள்.) உணர்வு இலார் - பகுத்தறிவில்லாதவர்கள், ஓதியும் ஓதார் - படித்தும் படியாதவர்களே; உணர்வு உடையார் - ஓதாதும் - ஓதாமலும், ஓதி அனையர் - படித்தவர்க்குச் சமானமானவர்களாவர்; (அதுபோல்) தூய்து ஆக - சுத்தமாக, [மிகவும்], நல்கூர்ந்தும் - வறுமையுற்றும், இரவாதார் - யாசியாதவர்கள், செல்வர் - சம்பத் துள்ளவராவர்; செல்வரும் - செல்வமுடையோரும், ஈயார் எனின் - (யோக்கியருக்கு) கொடாமற் போனால், நல்கூர்ந்தார் - தரித்திரப் பட்டவர்களே, எ-று.

     ஓதி - ஓதுகிறவன், இகர விகுதி கர்த்தாப் பொருளில் வந்தது, கூத்தாடி, கடலோடி என்பவை போல். தூயது - தூய்மையை உடையது, குறிப்பு முற்று; ஈண்டு ஆக என்பதோடு ஒன்றி வினையெச்சமாய் "மிக" என்னும் பொருளாய் வினையுரியாயிற்றென அறிக. பிறர் நல்குதலை ஊர்தல் [கொண்டு செல்லல்] - நல்கூர்தல், நல்குதல் - கொடுத்தல்.

28. ஈயாமை

     [அஃதாவது பிறர்க்குக் கொடாமையால் வருமிழுக்கு.]

271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
     அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
     அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
     அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

     (இ-ள்.) நட்டார்க்கும் - நேசித்தவர்க்கும், நள்ளாதவர்க்கும் - நேசியாதவர்களுக்கும், உள வரையால் - தமக்கு உள்ள அளவினால், அட்டது பாத்து உண்டல் - சமைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்பது, அட்டு உண்டல் - சமைத்துண்பதாம்; அடைதது இருந்து - (வருகிறவர்க்குக் கதவை) மூடியிருந்து, அட்டது உண்டு ஒழுகும் - சமைத்ததைத் (தாம்) புசித்து நடக்கிற, ஆவது இல் மாக்களுக்கு - குணமில்லாத மனிதருக்கு, ஆண்டை கதவு - மேலுலகத்தின் கதவானது, அடைக்கும் - மூடப்படும், எ-று. ஆம் - அசை.

     [பொது. சூ. 49] விதியால் அடைக்கும் என்னும் செய்வினை செயப்பாட்டு வினையாக் கொள்ளப்பட்டது.

272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
     சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
     பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
     அழிந்தார் பழிகடலத் துள்.

     (இ-ள்.) எத்துணை ஆனும் - எவ்வளவாயினும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்த பிரமாணத்தால், சிறு அறம் செய்தார் - சிறிய தருமத்தையாகிலும் செய்தவர், தலைப்படுவர் - மேன்மைப்படுவர்; மற்றை - வேறான, பெரு செல்வம் எய்தியக் கால் - மிகுந்த செல்வம் பொருந்தின போது, பின் அறிதும் என்பார் - (தருமத்தை) பின்பு பார்த்துக் கொள்வோ மென்கிறவர்கள், கடலத்துள் - கடல்சூழ்ந்த பூமியில், பழி - பழிக்கப்பட்டு, அழிந்தார் - கெட்டுப் போவார், எ-று.

     கடலையுடையது = கடலத்து - கடல் - பகுதி, அ - சாரியை, து - விகுதி, பழி என்னு முதனிலை "வரிப்புனைபந்து" என்பது போல் வினையெச்சப் பொருட்டாய் வந்ததெனக் கொள்க; [வினை. சூ. 32]ன் உரையைக் காண்க. மற்றை என்பதை என்பார் என்பதோடு கூட்டுக. [பொது. 33வது சூத்திரத்தினால்] தெளிவு பற்றி அழிந்தாரென இறந்த காலத்துக் கூறப்பட்டது.

273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
     வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
     பொருளும் அவனை நகுமே உலகத்து
     அருளும் அவனை நகும்.

     (இ-ள்.) துய்த்து கழியான் - அனுபவித்துக் கழியாமல் துறவோர்க்கு - (ஆதரிப்பவரால்) துறக்கப்பட்டவர்களுக்கு, ஒன்று ஈகலான் - ஒருபொருள் கொடாமல், வைத்து கழியும் - (பொருளை) வீணாவைத்து இருக்கிற, மடவோனை - மூடனாகிய, அவனை - (உபயோகமற்ற) அவனை, வைத்த பொருளும் நகும் - சேர்த்து வைத்த திரவியமும் சிரிக்கும், அவனை - அப்படிப்பட்டவனை, உலகத்து அருளும் - உலகத்திலே விளங்குகிற கிருபையும், நகும் - சிரிக்கும், எ-று. ஏ - இரண்டும் அசை.

     துறவோர் - துறவிகளும் ஆம், ஆயினும் சிறப்பில்லாமையின் "துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும்" என்னுந் திருக்குறளுக் குரைத்தது போல் ஈண்டும் ஆதரிக்கத்தக்கவரால் கைவிடப்பட்டவர் என்று உரைக்கப்பட்டது. வீணாக்கினதைப் பற்றி பொருளும் நகுமென உபசார வழக்காகக் கூறப்பட்டது. "அருளில்லார்க் கவ்வுலகமில்லை. பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாதியாங்கு" என்கிறபடி நற்கதியற்றானே யென அருட்கடவுள் நகும் என்பது கருத்து.

     கழியான், ஈகலான் - முற்றெச்சங்கள். ஈகலான் - ஈ - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி.

274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
     உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
     உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
     ஏதிலான் துய்க்கப் படும்.

     (இ-ள்.) கொடுத்தலும் துய்த்தலும் - (பிறர்க்கு) கொடுப்பதையும் (தான்) அனுபவிப்பதையும், தேற்றா - தெளியாத, இடுக்கு உடை உள்ளத்தான் - லோபகுணமுள்ள மனமுடையவன், பெற்ற பெருஞ்செல்வம் - அடைந்த மிகுந்த சம்பத்து, இல்லத்து உரு உடை கன்னியரை போல் - வீட்டிற் பிறந்த ரூபமுள்ள பெண்களைப் போலே, பருவத்தால் - (அனுபவிக்கும்) காலத்தில், ஏதிலான் துய்க்கப்படும் - அயலானாலே அனுபவிக்கப்படும், எ-று.

     வீட்டிற் பிறந்த பெண் அயலா னனுபவத்திற்கே உரியளாவது போல் லோபியின் செல்வமும் அயலானுக்கே உரியதாகும் என்றபடி.

     பருவத்தால் - வேற்றுமை மயக்கம்.

275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
     அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
     மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
     கழிநல் குரவே தலை.

     (இ-ள்.) எறி நீர் பெருங்கடல் - மோதுகின்ற நீரையுடைய பெரிய சமுத்திரத்தை, எய்தி இருந்தும் - அடைந்திருந்தும், அறு நீர் சிறு கிணறு - அற்றுப்போம்படியான நீரையுடைய சிறிய கிணற்றினது, ஊறல் பார்த்து உண்பர் - ஊற்றைக்கண்டு குடிப்பார்கள் (சனங்கள்); மறுமை அறியாதார் ஆக்கத்தின் - மறுமைப்பயனை அறியாதவர்களுடைய செல்வத்தைக் காட்டிலும், சான்றோர் கழி நல்குரவே - யோக்கியர்களுடைய மிகுந்த தரித்திரமே, தலை - மேலானது, எ-று.

     மிகுந்த தண்ணீருள்ளதா யிருந்தும் உபயோகப்படாத கடலைப் போலே பயனற்றது அயோக்கியருடைய பணம் ஆதலின், கிணற்று ஊற்றைப் போல் சற்றுச் சற்றாகிலும் உபயோகமான யோக்கியருடைய அற்ப சம்பத்தே மேலானதென்பது கருத்து.

     அற்று அற்றுச் சுரப்பதனான் அறுநீர் கிணறு என்றார். சுழி - உரிச்சொல்.

276. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
     எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
     தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
     யானும் அதனை அது.

     (இ-ள்.) ஏழை - மூடன், பொருளை - பணத்தை, எனது எனது என்று இருக்கும் - என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டிருப்பான்; யானும் - நானும், (அப்பொருளை) எனது எனது என்று -, இருப்பன் - இருப்பேன், தனது ஆயின் - அவனதனால், தானும் அதனை வழங்கான் - அவனும் அப்பொருளை (ஒருவர்க்கு) கொடான்; பயன் துவ்வான் - (அதின்) பிரயோஜனத்தை அனுபவிக்க மாட்டான். யானும் அதனை அது - நானும் அந்தத் திரவியத்தை அதுவாக, [அப்படியே செய்வேன் என்றபடி,] எ-று.

     செய்வேனென்று ஒரு சொல் வருவித்து அது என்பதை முடித்துக் கொள்க.

     உபயோக மில்லாமல் சம்பாதித்தவன் தனது என்று சொல்வதற்கும், சம்பாதியாதவன் அப்படிச் சொல்வதற்கும் வித்தியாசமில்லையென்றபடி.

277. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
     இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
     காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
     யாப்புய்ந்தார் உய்ந்த பல.

     (இ-ள்.) வழங்காத செல்வரின் - கொடாத தனவான்களைக் காட்டிலும், நல்கூர்ந்தார் உய்ந்தார் - தரித்திரர் (துன்பங்களில்) தப்பினவர்கள்; (எப்படியெனில்) இழந்தார் எனப்படுதல் - பொருளை இழந்து போனார்கள் என்கிற அபவாதத்தினின்றும், உய்ந்தார் - தப்பினார்கள்; உழந்து - வருந்து, அதனை காப்பு - அப்பொருளைக் காப்பாற்றுவதினின்றும், உயந்தார் -, கல்லுதலும் - (அதைப் புதைத்துவைக்கும் பொருட்டு) நிலத்தைத் தோண்டுவதினின்றும், உய்ந்தார் -; தம் கை நோவ - தமது கைகள் நோவும்படி, யாப்பு - கெட்டியாய்ப் பிடித்திருப்பதினும், உய்ந்தார் -; உய்ந்த பல - (இப்படி அவர்) தப்பினவை பல(வுண்டு), எ-று.

     எனப்படுதல், காப்பு, கல்லுதல், யாப்பு - இவை நான்கும் ஐந்தாம் வேற்றுமைத் தொகை. கொடாமல் பணம் வைத்திருப்பவனுக்குக் கஷ்டமேயன்றி வேறு பயனில்லை யென்பது கருத்து.

278. தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
     தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
     முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
     பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

     (இ-ள்.) தனது ஆக - (பொருள்) தனதா யிருக்கையிலே, தான் கொடான் - (லோபி) தான் (ஒருவர்க்கும்) கொடுக்க மாட்டான்; தாயத்தவரும் - தாயாதர்களும், தமது ஆய போழ்து - (அப்பொருள்) கொடுக்கமாட்டார்; முன்னே - பூர்வத்திலே, தனது ஆக கொடுப்பின் - தனதாயிருக்கையிலே கொடுத்தல், அவர் கடியார் - தாயாதர் விலக்கார்கள்; பின்னை - பிற்காலத்தில், அவர் கொடுக்கும் பொழுது - அந்தத் தாயாதர் கொடுக்குங் காலையில், தான் கடியான் - தான் (அதை) விலக்கமாட்டான், எ-று.

     தாயமாவது தகப்பன் பாட்டன் முதலானார் மூலமாய் வந்த பொருள்; அதனை எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் தாயாதர். ஒருவன் தான் சம்பாதித்த பொருள் தன் சுவாதீனமா யிருக்கையிலே வறியவர்க்குக் கொடாமல் வைக்க, அதைப் பெற்றுக் கொண்ட தாயாதிகளும் கொடுக்க மன மிசையார்கள்; தானுயிரோ டிருக்கையிற் கொடுத்தால் தாயாதார் தடுப்பதில்லை; தானிறந்த பின் அவர் கொடுத்தால் தான் தடுப்பதில்லை. இப்படி இரு திறத்தாரும் பொருளைச் சற்பாத்திரத்தில் உபயோகியாமல் வீணாக்குகின்றவர் என்றபடி. இது அக்காலத்து யாரையோ நோக்கிச் சொன்னதுபோலும்.

279. இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
     விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
     வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
     கொல்லச் சுரப்பதாங் கீழ்.

     (இ-ள்.) இரவலர் கன்று ஆக - யாசகர் கன்று போலிருக்க, ஈவார் ஆ ஆக - கொடுப்பவர் பசுப்போ லிருக்க, விரகில் - உற்சாகத்தினால், சுரப்பது - பயனைத்தருவது, வண்மை ஆம் - கொடுக்குங்குணமாம்; விரகு இன்றி - உச்சாக மில்லாமல், வல்லவர் ஊன்ற - வலிமையுடையவர்கள் அழுத்தி வருந்த, வடி ஆ போல் - பால் கொடுக்கின்ற பசுவைப் போல, வாய் வைத்து கொள்ள - அவ்வவ் விடங்களிலே நிறுத்தித் துன்பப்படுத்த, சுரப்பது ஆம் - பயனைத்தரும், கீழ் - கீழ்மகன், எ-று.

     கன்று வாய்வைக்கச் சந்தோஷமாய்ப் பாலைச் சுரக்கும் பசுவைப் போலே யாசகரைக் கண்டவுடனே சந்தோஷத்தோடு கொடுப்பதுதான் கொடை. வல்லவர் பலவகையில் வருத்த, மனமின்றிப் பால் சுரக்கும் பசுவைப் போல வலியோர் நேர்ந்த விடங்களிலே தூஷிக்கவும் இடுக்கண் செய்யவும் நிர்ப்பந்தமாய்க் கீழ்மக்கள் கொடுக்குங் கொடை, கொடை என்று சொல்லத்தகா தென்பதாம்.

     வல்லவர் ஊன்ற அடிக்கின்ற ஆ போலே உறுப்புக்களில் கருவிகளை வைத்துக் கொல்ல எனப்பொருள் உரைப்பாருமுளர். வடித்தல் - ஊற்றல், இங்கு பால் சுரத்தலாம். வாய் - இடம். கீழ் எழுவாய், சுரக்கும் - பயனிலை.

280. ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
     காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
     குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
     உறைபதி மற்றைப் பொருள்.

     (இ-ள்.) ஈட்டலும் துன்பம் - பொருளைச் சம்பாதிப்பதும் வருத்தம்; மற்று - மேலும், ஈட்டிய ஒள் பொருளை - சம்பாதித்த நல்ல பொருளை, காத்தலும் - காப்பாற்றுவதும், ஆங்கே கடு துன்பம் - அப்படியே மிகுந்த துன்பம்; காத்தல் குறைபடில் - காப்பது குறைந்தால்; துன்பம் -; கெடில் - நாசப்பட்டால், துன்பம் -; (ஆதலின்) பொருள் - திரவியமானது, துன்பக்கு உறைபதி - துன்பத்திற்கு வாசஸ்தானம், எ-று மற்றை - அசை.

     காத்தலிருக்கவும் பொருள் குறைபட்டால் எனவுமுரைக்கலாம். சாரியை விகற்பமாதலின் "துன்பக்கு" என்பதில் அத்துச்சாரியை வரவில்லை யென்றறிக [உருபு புணர். சூ.4].

29. இன்மை

     [அஃதாவது பண மில்லாமை.]

281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
     பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
     ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
     செத்த பிணத்திற் கடை.

     (இ-ள்.) அத்து இட்ட கூறை - காவி தோய்த்த வஸ்திரத்தை, அரை சுற்றி வாழினும் - அரையிலுடுத்து வாழ்ந்தாலும், பத்து எட்டு உடைமை - பத்தாயினு மெட்டாயினு முள்ளவனாயிருத்தல், பலர் உள்ளும் பாடு எய்தும் - பல ஜனங்களுக்குள்ளே பெருமை பெறும்; ஒத்த குடி பிறந்தக்கண்ணும் - உலகத்துக்குச் சம்மதியான வமிசத்திற் பிறந்தாலும், ஒன்று இல்லாதார் - ஒரு பொருளில்லாதவர்கள், செத்த பிணத்தின் - உயிர்போன உடலைப் பார்க்கிலும், கடை - கீழ் (ஆவர்,) எ-று.

     அத்து - தையலுமாம். பத்தெட்டு என்பதில் ஐயவும்மை தொக்கது.

282. நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
     யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
     நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
     புகற்கரிய பூழை நுழைத்து.

     (இ-ள்.) நெய் - நெய்யானது, நீரினும் நுண்ணிது என்பர் - தண்ணீரைக் காட்டிலும் சூக்ஷமம் என்று சொல்லுவர், நெய்யினும் புகை நுட்பம் - நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமாயிருப்பதை, யாரும் அறிவர்-; தேரின் - ஆலோசித்தறிந்தால், இரப்பு இடும்பையாளன் - யாசகத்தாலாகிய துன்பமுள்ளவன், புகையும் புகற்கு அரிய பூழை - புகையும் பிரவேசிப்பதற்குக் கூடாத துவாரத்தில், நுழைந்து புகும் - நுழைந்து போவான், எ-று. ஏ - அசை.

     யாசகன் கண்டவிடத்திலு நுழைந்து பிச்சையெடுப்பதனால் இகழப்படுவான் என்பது கருத்து.

     புகையும் புகுதற்கரிய பூழை நுழைந்து புகும் எனக் கவி அதிசயோத்தியாக் கூறியது. நெய் என்பது எண்ணெய் முதலிய நீர்த்த பொருள்களுக்கெல்லாம் பொதுப்பெயர்.

283. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
     செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
     கலாஅற் கிளிகடியும் கானக நாட!
     இலாஅஅர்க் கில்லை தமர்.

     (இ-ள்.) கொல்லை - கொல்லைகளில், கல்லால் - கல்கொண்டு, கிளி கடியும் - கிளிகளை ஓட்டுகின்ற, கானக நாட - காடு சிறந்த நாட்டரசனே!, கல் ஓங்கு உயர் வரை மேல் - கற்கள் வளர்ந்திருக்கின்ற உயரமான மலையில், காந்தள் மலராக்கால் - காந்தள் பூக்காமற் போனால், செம் பொறி வண்டு இனம் - சிவந்த புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டங்கள், செல்லா - அங்கே போகமாட்டா; (அப்படியே) இல்லார்க்கு - (பொருள்) இல்லாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினர் இல்லை, எ-று.

     காந்தள் பூக்காத போது வண்டுகள் மலையண்டை போகாதது போல் தரித்திரனிடத்துக்கு உறவினர் வாரார்கள் என்பது கருத்து. ஆம் - அசை.

284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
     தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
     திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
     ஒருவரும் இவ்வுலகத் தில்.

     (இ-ள்.) உண்டாய போழ்தின் - (பொருள்) உண்டாயிருக்குங் காலத்தில், உடைந்துழி - (தேகம்) அழிந்த விடத்தில், காகம் போல் - காக்கைகளைப் போலே, ஆயிரவர் - ஆயிரம் பேர்கள், தொண்டு - அடிமையாக, தொகுப - சேருவார்கள்; வண்டு ஆய் - வண்டுகள் போலாய், திரிதரும் காலத்து - திரியுங்காலத்தில், தீது இலிரோ என்பார் ஒருவரும் - நீர் துன்பமில்லா திருக்கிறீரா என்று க்ஷேமம் வினாவுமொருவரும், இவ்வுலகத்துஇல் - இவ்வுலகத்தி லில்லை, எ-று.

     வண்டாய் - வண்டு ஊணுக்காக ஓரிடமில்லாமல் பலவிடந் தேடித் திரிவது போல எனக் கொள்க. இலிர் - முன்னிலைப் பன்மைக் குறிப்பு முற்று.

285. பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
     சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
     கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
     இன்மை தழுவப்பட் டார்க்கு.

     (இ-ள்.) கறங்கு அருவி - ஒலியாநின்ற அருவிகள், கல் மேல் கழூஉம் - கற்களின் மேல் விழுந்து சுத்திசெய்கின்ற, கணம் மலை நல்நாட - கூட்டமான மலைகளுள்ல நல்ல நாடுடையவனே!, இன்மை தழுவப்பட்டார்க்கு - வறுமையால் கட்டிக் கொள்ளப் பட்டவர்களுக்கு, பிறந்த குலம் மாயும் - (அவர்) பிறந்த நல்லவமிசமும் கெடும்; பேர் ஆண்மை - கீர்த்தியுடைமை [அல்லது பெரியவல்லமை], மாயும் -; சிறந்த - மேன்மைப்பட்ட, தம் கல்வியும் - தம்முடைய கல்வித்திறனும், மாயும்-; எ-று.

     தரித்திரருக்கு குலமுதலிய மேன்மைகளும் சிறக்கா என்பது கருத்து.

286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
     உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
     இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
     விருந்தினன் ஆதலே நன்று.

     (இ-ள்.) உள் கூர் பசியால் - வயிற்றினுள்ளே நிறைந்த பசியினாலே, உழை - தன்னிடத்தில், நசைஇ சென்றார்கட்கு - விரும்பி வந்தவர்களுக்கு, உள் ஊர் இருந்தும் - ஊர்க்குளிருந்தும், ஒன்று ஆற்றாதான் - ஓருதவியுஞ் செய்ய மாட்டாதவன், உள் ஊர் இருந்து - உள்ளூரிலிருந்து, உயிர் கொன்னே கழியாது - உயிரை வீணாய்க்கழியாமல், தான் போய் - தான் (பிறதேசம்) போய், விருந்தினன் ஆதலே நன்று - (ஒருவர்க்கு) விருந்தாளி யாவதே நல்லது, எ-று.

     தன்னிடம் பசித்துவந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டாத தரித்திரன் ஓரூருக்குள்ளே குடித்தனஞ் செய்வதைக் காட்டிலும் எங்கேயாகிலும் போய்ப் பிச்சை எடுப்பது நல்லதென்கிறபடி.

     ஊருள் எனற்பாலது உள்ளூர் என்றானது போலிவழக்கு.
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
     கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
     முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
     அல்லல் அடையப்பட் டார்.

     (இ-ள்.) கூர்மையின் - கூர்மையினாலே, முல்லை அலைக்கும் எயிற்றாய் - முல்லையரும்புகளை வருத்துகின்ற பற்களை யுடைய பெண்ணே!, நிரப்பு என்னும் அல்லல் அடையப் பட்டார் - வறுமை யென்கிற துன்பத்தால் சேரப்பட்டவர்கள்; நீர்மையே அன்றி - சற்குணங்களுமல்லாமல், நிரம்ப எழுந்த - பூர்ணமா யோங்கி நிற்கிற, தம் கூர்மையும் - தம்முடைய புத்திக் கூர்மையையும், எல்லாம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும், ஒருங்கு இழப்பர் - ஒரு சேர இழப்பார்கள், எ-று.

     தரித்திரருடைய சற்குண முதலியவை விளங்கா என்பதாம்.

     முல்லையரும்புகளினு மேலான அழகுண்மையால் அவற்றைக் கீழ்ப்படுத்தின பற்களையுடையவளே என்றது. கூர்மை என்பது மற்றுமுள்ள வெண்மை முதலான குணங்களுக்கும் உபலக்ஷணம். உப லக்ஷணமாவது தன்னினத்தையுந் தழுவல் [பொது. சூ. 7] காண்க.

288. இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
     முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
     நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
     கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

     (இ-ள்.) இட்டு ஆறு - தாழ்மையான வழியில், [தரித்திரத்தில் என்கிறபடி], பட்டு - விழுந்து, ஒன்று இரந்தவர்க்கு - ஏதாகிலுமொரு பொருளை யாசித்தவர்களுக்கு, ஆற்றாது - உதவாமல், முட்டு ஆறுபட்டு - முட்டுப்பாடான வழியிலே பட்டு, [சங்கடப்பட்டு என்றபடி], முயன்று - (கொடுப்பதற்கு) முயற்சிசெய்து, வாழ்தலின் - வாழ்வதைக் காட்டிலும், நெடு ஆறு சென்று - தூரதேசத்திற் போய், நிரைமனையில் - வரிசையாயுள்ள வீடுகளில், கை நீட்டும் - கை நீட்டி யாசிக்கிற, கெடு ஆறு வாழ்க்கையே - கெட்ட வழியில் வாழ்வதே, நன்று - நலமாம், எ-று.

     இதில் அமைந்தது ஆறாம்பாட்டின் கருத்தேயானாலும் ஒருவர் பாடியதாகாமையின் கூறியது கூறலாகாதென வுணர்க. இட்டு - அற்பம், ஆதலின் இட்டாறு - வறுமையெனக் கொள்ளப்பட்டது. ஆறு என்பது வேற்றுமை தொகையாகவும் [உயி. புண. 33ம்] சூத்திரத்தினால் றகர மிரட்டி நின்றது. வருந்தி முயல்வதேயன்றிக் காரியம் கைகூடவில்லையென்பது "நிறைமனை" எனவும் பாடங்கொண்டு, நிறை - பொருள் நிறைந்த, வீடு - வீட்டில் சென்று, என்றும் பொருள் கொள்ளலாம்.

289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
     அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
     உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
     துப்புரவு சென்றுலந்தக் கால்.

     (இ-ள்.) துப்புரவு சென்று உலந்தக்கால் - அனுபவிக்கப்படும் பொருள்கள் போய் நாசமானால், கடகம் செறிந்த தம் கைகளால் - (முன்பு) கடகம் சேர்ந்திருந்த தங்கைகளாலே, வாங்கி - (பக்கத்துள்ள தூறுகளைத்) தள்ளி, அடகு பறித்துக் கொண்டு - கீரைகளைப் பறித்துக் கொண்டு போய், அட்டு - சமைத்து, குடை - (நுங்கெடுத்த பனங்காய் முதலான) உள்ளே துளையுள்ள பொருள்களை, கலன் ஆ - பாத்திரமாக (வைத்துக் கொண்டு), உப்பு இலி வெந்தை - உப்பில்லாத அந்த வெந்த கீரையை, தின்று - புசித்து, உள் அற்று - மனவூக்கங்கெட்டு, வாழ்வ - வாழ்வார்கள் (மனிதர்), எ-று.

     செல்வம் மாறினால் இலைக்கறி பறித்துண்ணும்படி நேரிடும் வறுமை மனதிற்கு மிகத் துன்பந்தரும் என்பது கருத்து.
     இப்பாட்டைச் செல்வ நிலையாமையிற் சேர்த்தலுந் தகும். குடை - குடையப்படுவது குடை எனச் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். வெந்தை - வெந்தது, ஐ - விகுதி, வினை முதற்பொருளில் வந்தது.

290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
     பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
     தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
     வாழாதார்க் கில்லை தமர்.

     (இ-ள்.) ஆர்த்த பொறிய - நிறைந்த புள்ளிகளையுடைய, அணிகிளர் - அழகு விளங்காநின்ற, வண்டு இனம் - வண்டின் கூட்டம், பூந்து ஒலி கொம்பின் மேல் - புட்பித்து நீங்கின கிளையின் மேலே, செல்லா - போகமாட்டா; நீர்த்து அருவி - நல்லதன்மையுள்ள அருவிகள், தாழா - குறையாத, உயர் சிறப்பின் - மேலான சிறப்பையுடைய, தண் குன்றம் நல் நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நல்ல நாட்டரசனே!, வாழாதார்க்கு - பொருள்பெற்று வாழாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினரில்லை, எ-று.

     இப்பாட்டில் மூன்றாம் பாட்டின் கருத்தேயானாலும் முன்கூறிய நியாயத்தாற் குற்றமன்று. நீர்த்து - குறிப்புமுற்று, பெயரெச்சமாயிற்று. பொறிய - குறிப்புப் பெயரெச்சமாம்.

30. மானம்

     [அதாவது ஒருவர்க்குள்ள கவுரவம்; எப்படிப்பட்ட சங்கடத்திலும் அதனை விடாமற் காக்குந் தன்மை.]

291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
     பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
     கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
     மான முடையார் மனம்.

     (இ-ள்.) திரு மதுகை ஆக - செல்வம் பலமா யிருப்பதனால், திறன் இலார் செய்யும் - யோக்கியதை யில்லாதவர்கள் செய்கின்ற, பெரு மிதம் - மிகுதியை [அவமதிப்பை], கண்டக்கடைத்து - கண்ட போது, எரி மண்டி - நெருப்புப்பற்றி, கானம் தலைப்பட்ட தீ போல் - காட்டிலுண்டான அக்கினிச் சுவாலைபோல், மானம் உடையார் மனம் - மானமுள்ளவர்களுடைய இதயமானது, கனலும் - சொலிக்கும், எ-று.

     செல்வச் செருக்கினால் அயோக்கியர் எல்லை கடந்து நடக்கையில் மானிகளுக்கு மனவருத்தமுண்டா மென்றபடி.

     பெருமிதம் - மிதத்துக்கு விஞ்சியது. கண்டக்கடைத்து - ஒரு வகை வினையெச்சம், அதனோடிருக்கும் உம்மையை அசையெனக் கொள்ள வேண்டும்.

292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
     தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
     உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
     உரையாரோ தாமுற்ற நோய்.

     (இ-ள்.) தம் உடையார் - தம்மை யுடையவர்கள் [தம்மானத்தைக் காக்குமவர்], என்பு ஆய் உகினும் - எலும்பாய்ப்போ யுதிர்ந்தாலும், இயல்பு இலார் பின் சென்று - சற்குண மில்லாதவர்களுடைய பின்னே போய், தம் பாடு உரைப்பரோ - தமது வருத்தத்தைச் சொல்வார்களோ, தம் பாடு - தமது சங்கடத்தை, உரையாமை - சொல்லாமலே, முன் உணரும் - முன்னிட்டு அறிந்து கொள்ளத்தக்க, ஒண்மை உடையார்க்கு - யோக்கியதை யுள்ளவர்களுக்கு, தாம் உற்ற நோய் - தாம் அடைந்திருக்கிற துன்பத்தை, உரையாரோ - சொல்லாம லிருப்பார்களோ, எ-று.

     மானிகள் எவ்வளவு ஈன ஸ்திதியிலும் தம் வருத்தத்தை அயோக்கியருக்குச் சொல்லார்கள். ஏனெனில் அவமானமேயன்றிப் பயனின்மையால், யோக்கியரோடே சொல்வார்கள் உபயோக முண்மையால் என்கிறபடி.

     உரையாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி.

293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
     காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
     புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
     மறந்திடுக செல்வர் தொடர்பு.

     (இ-ள்.) யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும் - நாமானால் எமது மனையாளைக் காட்டுவோம். தாம் ஆயின் - அவரானால், காணவே கற்பு அழியும் - பார்க்கவே கற்பு அழிந்துபோம், என்பார் போல் - என்று நினைக்கிறவர்களைப் போலே, நாணி - வெட்கி, புறங்கடை வைத்து - வாசலின் புறத்திலே வைத்து, சோறும் ஈவர் - சோறும் போடுவார்கள்; (அதனால்) செல்வர் தொடர்பு - தனவான்களுடைய கூட்டுறவை, மறந்திடுக - மறந்துபோகக் கடவீர், எ-று.

     செல்வர் நம்மிடம் வந்தால் நாம் கூசாமல் நம் இல்லாள் இதோ என்று காட்டுவோம். பார்த்தால் கற்பழியுமென்று நினைத்தோ நம்மை உள்ளே வரவொட்டாமல் வாசலுக்குப் புறத்திலேயே வைத்துச் சோறிடுகிறார். இப்படி அவமதிப்புச் செய்கிறதினால் அவர் சிநேகத்தை மறக்க வேண்டும் என்பது கருத்து.

     இல்லம் என்பதற்கு வீடு எனப் பொருள் கொண்டு உரைக்கலாம். இங்கு போல் என்பது உவமப் பொருளில் வந்ததன்று, சம்பாவனை பொருளில் வந்தது; சம்பாவனையாவது இப்படியிருக்கலாம் என்று ஊகித்தல்; ஆகவே இது "தற்குறிப்பேற்றவணி" ஆம். சோறும் என்கிற உம்மை உயர்வு சிறப்பில் வந்தது. சோறிடுவது உள்ளேயே தகும். அதனையு மிவர் புறத்திலிடுகிறார்கள் என்றபடி.

294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
     உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
     நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
     மான முடையார் மதிப்பு.

     (இ-ள்.) செம்மையின் நானம் கமழும் - நன்றாக கஸ்தூரி பரிமளிக்கின்ற, கதுப்பினாய் - கூந்தலுடையவனே!, இம்மையும் நன்று ஆம் - இப்பிறப்பிலும் நல்லதாம்; இயல் நெறியும் கை விடாது - கூடிய நல்வழியையும் விட்டு நீங்காது, உம்மையும் - மறுபிறப்பிலும், நல்ல பயத்தலால் - நல்லவற்றைச் செய்வதனால், மானம் உடையார் மதிப்பு - மானிகனிடத்துள்ள மதிப்பானது, நன்றே - நல்லதே, எ-று. காண் - அசையுமாம்.

     மதிப்பாவது மேன்மையாக நினைத்தல். கதுப்பு - கவுளுமாம்; அங்கும் கஸ்தூரி பூசுவதுண்டு.

295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ
     சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
     ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
     அருநவை ஆற்றுதல் இன்று.

     (இ-ள்.) பாவமும் -, ஏனை பழியும் - மற்றப்பழிப்பும், பட வருவ - உண்டாகும்படி வருகின்ற காரியங்களை, சாயினும் - சாம்படி நேரிட்டாலும், சான்றவர் - பெரியோர், செய்கலார் - செய்யமாட்டார்கள்; (ஏனெனில்) சாதல் - சாவு, ஒரு நாள் ஒரு பொழுதை துன்பம் - ஒருநாளில் சொற்பகால மனுபவிக்கத்தக்க துன்பமாயிருக்கின்றது; அவை போல் - அந்த இழிசெய்கைகளைப் போலே, அருநவை ஆற்றுதல் இன்று - (ஆத்துமாவுள்ளவும்) மிகுந்த குற்றங்களைச் செய்வதன்று, எ-று.

     பழி - பழிக்கப்படுவது, பொழுதை - ஐ - சாரியை [உயிர். புணர். சூ.35.]
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
     செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
     நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
     செல்வரைச் சென்றிரவா தார்.

     (இ-ள்.) மல்லல் மா ஞாலத்து - வளப்பமுடைய பெரிய பூமியில், வாழ்பவருள் எல்லாம் - வாழ்கின்றவர்களுக்குள்ளே யெல்லாம், செல்வர் எனினும் - தனவான்களானாலும், கொடாதவர் -, நல்கூர்ந்தார் - தரித்திரரே; நல்கூர்ந்தக்கண்ணும் - தரித்திரப்பட்டிருந்தாலும், செல்வரை சென்று இரவாதார் - தனவான்களிடம் போய் யாசிக்காதவர், பெருமுத்தரையரே - இப்பேர் கொண்ட கனவானோ டொத்தவரே [பெருஞ்செல்வர் என்றபடி], எ-று.

     இப்பாட்டு முந்திய இரண்டதிகாரத்துட் சேர்க்கத்தக்கதாயினும் வறுமையிலும் பிறரிடம் போயிரவாமல் மானத்தைக் காத்தல் நலமென இங்கு சேர்க்கப்பட்டது. நல்கூர்ந்தக்கண் - வினையெச்சம்.

297. கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
     இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
     விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
     சொற்பழி அஞ்சி விடும்.

     (இ-ள்.) புடை பரந்த - பக்கம் விசாலப்பட்ட, வில் - வில் போன்ற, புருவம் - புருவத்தையும், வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களையு முடையவளே!, கடை எல்லாம் - கடைத் திறமானவர்களெல்லாம், காய் பசி அஞ்சும் - காய்கின்ற பசிக்குப் பயப்படுவார்கள், ஏனை - அவரொழிந்த, இடை எல்லாம் - நடுத்தரமானவர்களெல்லாம், இன்னாமை அஞ்சும் - துன்பத்திற்குப் பயப்படுவார்கள்; தலை எல்லாம் - மேலானவர்களெல்லாம், சொல் பழி அஞ்சிவிடும் - உலகத்தாருடைய சொல்லால் வரும் பழிப்புக்கு அஞ்சுவார்கள், எ-று. மற்று - அசை.

     பழிப்பினால் மானக்குறைவு வருமென்று அஞ்சுவார்கள் என்பது கருத்து.

     கடை இடை தலை என அஃறிணையாக எடுத்ததனால் அஞ்சும் என்பதோடு முடிந்தன. கடை முதலியன இங்கே பன்மை.

298. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
     செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
     உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
     தலையாய சான்றோர் மனம்.

     (இ-ள்.) நல்லர் - நல்லவர்கள், (இவர்) பெரிது அளியர் - மிகவும் கிருபை செய்யத்தக்கவர்கள், நல்கூர்ந்தார் - வறுமையுள்ளவர்கள், என்று -, எள்ளி - அவமதித்து, செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் - அற்பப் பார்வையாகப் பார்க்கும் போது, தலை ஆய சான்றோர் மனம் - தலைமையான பெரியவர்களுடைய மனமானது, கொல்லன் உலை ஊதும் தீயே போல் - கருமான் உலைக்கடத்தில் ஊதியெழுப்புகிற நெருப்பைப் போலே, உள் கனலும் - உள்ளே சொலிக்கும், எ-று. கொல், ஓ இரண்டும் அசை.

     சிறுநோக்காவது அலக்ஷியமாப் பார்த்தல். நல்லர் அளியர் என்பவை இரக்கத்தாற் சொல்லுஞ் சொற்களன்று இகழ்ச்சியாற் சொல்லுஞ் சொற்களென்றறிக. தீயே - இதில் ஏ - அசை.

299. நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
     அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
     மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
     சொல்லாது இருப்பது நாண்.

     (இ-ள்.) நச்சியார்க்கு - விரும்பி வந்தவர்களுக்கு, ஈயாமை - கொடாமலிருப்பது, நாண் அன்று - வெட்கமன்று; நாள் நாளும் - தினந்தோறும், அச்சத்தால் - (போர் முதலியவற்றிற் செல்ல) பயத்தினால், நாணுதல் - வெட்கப்படுதல், நாண் அன்று -; எச்சத்தின் - (தம்மிலும்) குறைபாடுடைய, மெல்லியர் ஆகி - அற்பராய் இருந்து, ஆயார் - ஆராய்ச்சி யில்லாதவர், தம்மேல் - தம் விஷயத்தில், செய்தது - செய்த எளிமையை, சொல்லாது இருப்பது - (பிறர்க்கு) சொல்லாம லிருக்குமுறுதியே, நாண் - நாணம் ஆகும், எ-று.

     புத்தியீனர் தம்மிடத்துச் செய்த அவமதிப்பைப் பிறர் அறியாதிருக்கும்படி காத்தலே மானத்திற்குரிய நாணம் என்பது கருத்து.

     ஆயார் - பகைவருமாம். நச்சியார் - நச்சு - பகுதி, ஈறு குறைந்த இன் - இடைநிலை, ஆர் - விகுதி, யகரம் உடம்படுமெய், நச்சினார் எனவும் வரும். எச்சம் - குலம் கல்வி முதலியவற்றிலுள்ளது.

300. கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
     இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
     வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
     மானம் அழுங்க வரின்.

     (இ-ள்.) கடமா - காட்டுப்பசுவை, தொலைச்சிய - கொன்ற, கான் உறை வேங்கை - காட்டில் இருக்கின்ற புலியானது, இடம் வீழ்ந்தது - இடப்பக்கம் வீழ்ந்த அந்தப் பசுவை, உண்ணாது இறக்கும் - தின்னாமலிருந்து சாகும், இடம் உடைய - விசாலமான இடமுள்ளதாகிய, வானகம் கை உறினும் - சொர்க்கம் கைக்குவந்தாலும், விழுமியோர் - பெரியோர் [மானமுள்ளவர்], மானம் அழுங்க வரின் - மானம் கெட்டுப் போக நேரிட்டால், வேண்டார் - (அந்தச் சுவர்க்கத்தையும்) விரும்பமாட்டார், எ-று.

     மானத்தாழ்வு வருவதாயிருந்தால் எப்படிப்பட்டதையும் விரும்பமாட்டார் மானிகள் என்றதாம்.

     தொலைச்சிய - தொலைச்சு - பகுதி எனக் கொள்ள வேண்டும்.


நாலடியார் : 1 2 3 4 5 6 7 8