மணிமந்திரத் தீவு

ஷேக்ஸ்பியர்

     நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச் சிரிப்புப் போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க் கூட்டம் போலக் குதியாட்டம் போடுகிறது. வெட்டு மின்னலும் பேரிடியும் வானத்திருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன.

     இயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராகத் திரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்ய முடியும்?

     மாலுமி தீரன் தான்; அனுபவஸ்தன் தான்; கைத்த மனத்துடன், உப்புத் தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோ டிக் கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதைப் பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல்லை வந்துவிட்டது என்பதைக் கண்டு கொண்டான்.

     "தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லு" என்று கீழ்த் தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியனுப்பிவிடுகிறான்.

     அதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது.

     அத்தனை ஜீவன்களும் அதனதன் உயிருக்காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகின்றன.

     இப்படியாக ஒரு கோஷ்டி மக்களை ஒரு தீவில் நாடகாசிரியன் எடுத்துக்காட்டுகிறான். மனுஷ குண விகற்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப்பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவனுடைய சகோதரனான ஸெபாஸ்டியன்; அண்ணனை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக் - அவன் பெயர் அஸ்டோ னினோ; நேப்பிள்ஸ் அரசனின் மந்திரியான கொன்ஸாலோ; அலன்ஸோவின் மகன் ஆணழகன் பெர்டினான்ட்; குடிகார ஸ்டிபானோ; விதூஷகன் டிரன்குலோ; மற்றும் மாலுமிகள், மந்திரிகள் அத்தனை பேரும் கரையில் தொற்றி ஏறுகிறார்கள்.

     "இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப் போகும். ஏவின வேலையைச் சரிவரச் செய்தாயா?"

     அந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக் கோல்.

     "ஆமாம்; எஜமானே, அத்தனை பேரையும், ஒரு சிறு காயம் கூட இல்லாமல் கரை சேர்த்துவிட்டேன். பயங்கரமான புயலை உண்டு பண்ணினேன். கப்பலைக் கரை அருகே கொண்டுவந்தேன். இப்பொழுது எல்லோரும் தீவின் நாலா கரைகளிலும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போது?" என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப் போல் அவ்வளவு பசலை.

     "உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா? வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா? நான் தானே உன்னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையைச் செய். அப்புறம் கேள்" என்கிறான் பிராஸ்பிரோ.

     இந்த மந்திரவாதி தனது கையில் சிசுவையும் மந்திரத்தையும் ஏந்தி இந்தத் தீவுக்குள் குடியேறுவதற்கு முன் ஸிக்கோராக்ஸ் என்ற சூனியக்காரி இதைத் தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களைச் சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்தச் சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்தத் தீவிலே உள்ள தேவதைகளையெல்லாம் ஆட்டி வைத்துவிட்டுச் செத்து மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது.

     இந்த நிலையில்தான் மந்திரவாதி பிராஸ்பிரோ கையிலே பெண் குழந்தையும் மந்திர சாஸ்திரமும் தாங்கி இந்தத் தீவில் தஞ்சம் புகுகின்றான். பிராஸ்பிரோ பிழைப்புக்காக மந்திரவித்தை கற்றவனல்ல. மிலான் நகரத்து ட்யூக் அவன். நிர்வாகத்திலே கவலை செலுத்தி அரசியல் களரில் காலை விட்டுக்கொண்டு உழலாமல், சகபாடிகளான மனித வர்க்கத்தைச் சட்டத்தையும் வாளையும் காட்டி வதக்கி நடத்த ஆசைப்படாமல், புத்தகத்திலே கவனம் செலுத்தித் தேவதைகள்மீது ஆட்சி செலுத்துவதில் மோகம் கொண்டதுதான் அவன் குற்றம். இவனுடைய சகோதரனான அன்டானினோ 'சமயமிது, சமயமிது' என்று ஆட்சியைத் தன்வசப் படுத்திக் கொண்டான். முதுமையும் கருணையும் கொண்ட கொன்ஸாலோவின் உதவியால், பிராஸ்பிரோ காதல் வைத்த மந்திரப் புத்தகங்கள் அவன் வசம் சிக்கிவிட்டன. சகோதர வைரியான அன்டானினோ பிராஸ்பிரோவையும் குழந்தையையும், இனி எக்காலத்திலும் உயிருடனோ அல்லது செத்து மடிந்தோ தனக்கு வைரிகளாகிவிடக்கூடாதபடி ஒரு படகில் ஏற்றிக் கடலுக்கும் காற்றுக்கும் அர்ப்பணம் செய்து விடுகிறான். நாகரிக மக்கள் மீது ஆட்சி செலுத்துவதில் ஆசையற்ற பிராஸ்பிரோவை அவன் நாட்டங்கொண்ட வனதேவதைகள் மீதே ஆட்சி செலுத்தும்படி அப்படகு இந்தக் கண்ணற்ற தீவில் கொணர்ந்து தள்ளி விடுகிறது.

     கரையேறிய பிராஸ்பிரோ ஏரியலை மீட்கிறான்; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். பிராஸ்பிரோவின் நெஞ்சில் பாசம் வரண்டு விடாதபடி மூன்று குழந்தைகள் வளர்கின்றன. ஒன்று காற்றில் மாயாவியாக அலைந்து அவன் ஏவிய பணியைச் செய்யும் ஏரியல். தாமசகுணமும் க்ஷாத்திரமும் கொண்ட காலிபன், அடிமையாக வீட்டுக்கு வேண்டிய தேவைப் பொருள்களைத் தேடிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறான்; தனக்குத்தான் தீவை ஆள உரிமை உண்டு; மந்திரவாதி தன்னை ஏமாற்றி அதைப் பிடுங்கிக்கொண்டான் என்ற கோபம் மடியவில்லை. பிராஸ்பிரோவுடன் காற்றையும் கடலையும் தாண்டிவந்த சிசு, அவன் மனதில் வாஞ்சைக் கொழுந்து படர வளர்கிறது. அவளுக்கு மிராண்டா என்று பெயர்.

     இப்படியாகப் பன்னிரெண்டு வருஷங்கள் கழிந்தன. மிலான் சம்பவம் எப்போதோ நடந்த கதையாகி எல்லோரும் பிராஸ்பிரோவை மறந்துவிட்டார்கள்.

     நேப்பிள்ஸ் அரசனான அலான்ஸோ தன் மகளை ட்யூனிஸ் ராஜ்யத்து இளவரசனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தான். மணவினைக்காகச் சென்றிருந்த கோஷ்டிதான் இது; ஏரியலின் சக்தியால் எற்றுண்டு மணிமந்திரத் தீவில் கரையேறியது.

     "இப்படிப்பட்ட செழிப்பான தீவு ஒன்றுக்கு நான் அரசனாக இருந்தால்..." பழுத்து முதிர்ந்த கிழவனான கொன்ஸாலோ ஆரம்பிக்கிறான்.

     கடலுக்குத் தப்பிய ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்கிறது. பட்டத்து இளவரசனும் தன் பாசத்துக்குக் கொழுகொம்புமான பெர்டினான்ட் மாண்டு மடிந்துவிட்டான் என்று அலான்ஸோ மனம் வேகிறது. ஆழக் கடலுக்குள் மகன் மூழ்கி மூச்சடைத்து மாண்டு போனான்; இனி என்ன வாழ்வு என்று மனங் கைத்துச் சோர்ந்துவிட்ட அரசனுடைய மனத்தை வேறு திசையில் திருப்பக் கிழவன் முயற்சிக்கிறான். அந்தக் கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் கிழவனின் கனவை நையாண்டி செய்கிறார்கள்.

     கொன்ஸாலோ மேலும் விவரிக்கிறான்: "இந்த ராஜ்யம் அங்குள்ள யாவருக்கும் பொதுச்சொத்து. அங்கே பேரமும் பித்தலாட்டமும் இருக்காது. நீதி கண்டு சொல்ல ஒருவனும் இருக்கமாட்டான். அதிகாரம் கிடையாது, செல்வமோ வறுமையோ இருக்காது. கொத்தடிமைச் சேவகம் கிடையாது. பந்தகம், வாரிசு, எல்லை, வேலி எதுவும் இருக்காது. வரி இருக்காது. மதுவனம் இருக்காது. நாகரிகத்தின் பலன்களான உலோகம், தான்யம், மது, எண்ணெய் எதுவும் இருக்காது. அங்குள்ள யாவரும் உழைக்க வேண்டாம். ஆண்கள் சும்மா இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான்; களங்கமற்று, குணம் குறையாது இருப்பார்கள். அங்கே ராஜ்யாதிகாரமும் இருக்காது..."

     "ஆனால் நீ அதற்கு ராஜா" என்று சிரிக்கிறான் ஸெபாஸ்டியன்.

     "கிழவனார் பொதுச் சொத்தின் பின்பாதி. முன் கதை மறக்கிறதையா" என்கிறான் அன்டோனினோ.

     கொன்ஸாலோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. "அங்கே இயற்கை கொடுப்பது யாவருக்கும் பொது; வியர்வையோ உழைப்போ சிந்த வேண்டிய அவசியம் கிடையாது. துரோகம், அயோக்கியத்தனம், வாள், வல்லீட்டி, துப்பாக்கி, யந்திரம் எதையும் நான் அனுமதிக்க மாட்டேன். இயற்கை தனக்குள்ள செழிப்பிலே, வளத்திலே, கல்வியிலே கைநிறையக் கொடுப்பது எனது மக்களைப் போஷிக்கும்..."

     "பெரியார் பிரஜைகளிடை கலியாணம் கிடையாதோ" என்று கிண்டல் பண்ணுகிறான் ஸெபாஸ்டியன்.

     "எல்லாம் சும்மா அப்பா, அயோக்கியர்களும் அவிசாரிகளுந்தான்" என்றான் அன்டோனினோ.

     கிழவன் இவர்கள் பேச்சைச் சட்டை செய்யவில்லை.

     "இம்மி பிசகாது என் ஆட்சியில்; அதற்கு எதிரே கிருதயுகம் கூட ஈடாக நிற்கமுடியாது..."

     "மன்னர் நீடூழி வாழ்வாராக."

     "கொன்ஸாலோ நீடூழி வாழ்வாராக."

     "நான் சொன்னதைக் கவனித்தீர்களா?" என்று அலான்ஸோவைக் கேட்கிறான் கொன்ஸாலோ.

     "பேசாமலிரு; அது என் காதில் விழாது இப்பொழுது" என்கிறான் அரசன்.

     அந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து கண்ணைச் சொருகும் இசை ஒன்றை எழுப்புகிறான்.

     புத்திரசோகத்தில் ஆழ்ந்த அலான்ஸோவுக்கும் கண்ணுறக்கம் வந்து விடுகிறது.

     மிஞ்சியவர்கல் அன்டோ னினோவும், மன்னனுடைய சகோதரனான ஸெபாஸ்டியனுமே.

     இந்திர போகத்தில் அமர்ந்தாலும் இயற்கைக்குணம் போய்விடுமா என்ன?

     ராஜ்ய லக்ஷியத்தைப் பற்றிய கொன்ஸாலோவின் கனவு விழித்துக் காவல் நிற்பவர்கள் மனத்தில் ராஜ்ய மோகத்தைக் கிளப்புகிறது.

     அயோக்கியத்தனத்தால் நல்ல பலனும், அதைச் செய்து முடிக்க வசதியும் கிடைத்தால், யாருக்குத்தான் அயோக்கியனாக விருப்பமிராது?

     அண்ணனை விரட்டி ஆட்சியை எளிதில் கைப்பற்றிக் கொண்ட அன்டோ னினோ, ஸெபாஸ்டியன் மனத்தில் ஆசை வித்தை விதைக்கிறான். ஆதி கொலைகாரனான கெய்ன் ஆரம்பித்து வைத்த சகோதரத் துரோகம் மனித உடம்பின் நாடியோடு நாடியாக ஒன்றி, சமயம் ஏற்பட்ட போதெல்லாம் உச்சத்தில் ஓடுகிறது என்று சொல்லுகிறது விவிலிய வேதம். அலான்ஸோவைத் தீர்த்து விட்டால், வாரிசு யார்? மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக் கொண்டு உரிமை கொண்டாடி அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்ய முடியும்? அன்டோ னினோ சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சொல்லி ஸெபாஸ்டியன் மனதைக் கெடுத்து விடுகிறான். கிழவனை ஒருவனும் மன்னனை ஒருவனும் தீர்த்து விடுவது என்று சதித்திட்டம் போடுகிறார்கள்.

     யக்ஷணிக் குஞ்சான ஏரியல், தன் எஜமான் ஏவல்படி இவர்களுடைய உயிருக்கு ஆபத்து வராமல் காத்து நிற்க வேண்டியவன்.

     கொன்ஸாலோ காதில், "குறட்டை போடாதே. அருகே கொலைக் கும்பல் கும்மாளம் போடும் பார்" என்று ஓதுகிறான்.

     கொன்ஸாலோவும் மன்னனும் திடுக்கிட்டு விழித்து விடுகிறார்கள். ஏதோ சத்தத்தைக் கேட்டுக் கத்தியை ஓங்கியதாகச் சொல்லிச் சதிகாரர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள்.

     இந்தக் கோஷ்டி பட்டத்து இளவரசன் பெர்டினான்ட் கதியென்ன என்று தேடிச் செல்லுகிறது.

*****

     ஸ்டிபானோ ஒரு பட்லர். புட்டியிலே சொர்க்கத்தைத் தரிசித்தவன். கப்பல் போய்விடும் என்று நிச்சயமாகத் தெரிந்தவுடன் கடலில் குதிக்கத் துணிந்துவிட்டான். ஆனால் ஒரு பிப்பாய் சாராயத்தை உருட்டிக்கொண்டு வந்து ஒரு மிதப்புக் கட்டையாக உபயோகித்து பீப்பாயும் தானுமாகக் கரை சேருகிறான். கரைக்கு வந்தவுடன் முதல் வேலையாகப் பீப்பாயைப் பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புட்டி நிறையச் சாராயத்தை ஊற்றி எடுத்துக்கொண்டு தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். புட்டி தான் அவனுக்குப் பயத்தைத் தெளிவிக்கிறது. பேச்சுக் கொடுக்கும் தோழனாக, பசி போக்கும் மாமருந்தாக இருக்கிறது. போதை ஜன்னியில் தன் ஞாபகத்துக்கு வந்த பாட்டுக்களையெல்லாம் பாடிக்கொண்டு வருகிறான்.

     விதூஷகனான டிரின்குலோ வேறு ஒரு பக்கத்தில் கரையேறித் திசைகெட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில், வேலை செய்வதற்கு மனமில்லாமல் சோம்பிப் படுத்துக் கிடக்கும் காலிபனைக் கண்டுவிடுகிறான். அவனுடைய ஆராய்ச்சிக்குக் காலிபன் ஒரு காட்டு மனுஷனாகத் தோன்றுகிறது; மறுபடியும் இடிச் சப்தம் கேட்டு காலிபனுடைய அங்கிக்குள் நுழைந்து விடுகிறான்.

     போதையில் தன்னை மறந்து பாடிக்கொண்டு வரும் ஸ்டிபானோவும் அந்த இடத்துக்கு வந்து சேருகிறான். அவன் கண்ணிலும் காலிபன் தென்படுகிறான். அவனை மெதுவாகப் பிடித்துக்கொண்டு, ஊருக்குக் கொண்டு போய் விட்டால், பணங்காய்ச்சி மரத்தை கொல்லையில் நட்டு விட்ட மாதிரி என்று தோன்றுகிறது.

     மிருகத்தினிடம் நெருங்குகிறான்; அது மனுஷ பாஷை பேசுகிறது. இன்னும் அந்த மிருகத்துக்கு நாலு கால், இரண்டு குரல். இதென்ன விபரீதம்; மிருகம் இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து விதூஷகன் பிரசன்னமாகிறான். பிசாசு அல்ல, பழைய நண்பன் டிரின்குலோதான் என்று நிச்சயமான பிறகு, காலிபனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். பேச்சுக்கு மசியாத பிசாசு, புட்டிக்கு மசிந்து விடுகிறது. உள்ளே என்றுமில்லாத சுறுசுறுப்புத் தட்டவும், காலிபனுக்குத் தன்னைக் கைதூக்க வந்த கடவுளாகவே ஸ்டிபானோ தென்படுகிறான். இவனுக்கு அடிமையாகிவிட்டால், விறகு சுமக்கும் சள்ளை கிடையாது. புட்டிப் பொருளுக்காகத் தனக்குச் சொந்தமாகி இருந்திருக்க வேண்டிய ராஜ்யத்தையே இவன் காலடியில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறான்.

     புட்டி கொடுத்த புதிய புத்தித் தெளிவிலே ஸ்டிபானோவுக்குப் பட்டாபிஷேகம் க்ஷண காரியமாக நடந்து விடுகிறது. அவனுடைய பிரதான மந்திரி டிரின்குலோ; முதல் குடி மிருகப் பிராயம் நீங்காத காலிபன்.

     "இந்தத் தீவு எனக்குத்தான் உரியது, எங்கம்மா கொடுத்தது. இதைப் பிராஸ்பிரோ என்கிற ஒருவன் என்னிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டு என்னை அடிமையாக்கி விட்டான். இந்தத் தீவிலே பசித்திருக்க வேண்டாம்; வகை வகையாய்ப் பழங்களுண்டு; கண்ணை மூடிப் படுத்துவிட்டால், அங்கே இனிய பாட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும்; எழுந்திருக்கவே ஆசை எழாது. அவ்வளவு சுகம். இந்தத் தீவு உனக்கே உனக்கு. உன் அடிமை நான்" என்று ஸ்டிபானோ காலடியில் வைத்து விட்டான்.

     "அந்தக் கொடுங்கோலன் மத்தியானத்தில் கொஞ்ச நேரம் தூங்குவான். அவனைக் கொன்றுவிடு; அப்புறம் நமக்குக் கவலையே கிடையாது" இதுவே காலிபன் முறையீடு.

     "அகோ வாராய் மதிமந்திரி; புறப்படு புரட்சி செய்வோம்" என்று பிறக்கிறது சுக்ரீவ ஆக்ஞை.

     இந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து அவர்களை மோகன இசையொன்றில் மதிமயங்க வைத்து, குரல் செல்லும் திசையில் கோவேறு கழுதைகள் போலத் தொடரும்படி கல்லிலும் முள்ளிலுமாக இழுத்துச் செல்லுகிறான்.

*****

     பெர்டினான்ட் மடியவில்லை. நீந்திக் கரையேறி ஏரியலின் மோகனப் பாட்டைப் பின் தொடர்ந்து பிராஸ்பிரோ மகளைக் கண்டு விடுகிறான். கண்டவுடன் காதல். காட்டுக் கொடி போலும், வனதேவதை போலும் கண்முன் நின்ற மிரண்டாவுக்காக எந்த ராஜ்யத்தை வேண்டுமானாலும் தியாகம் செய்யவும் தயாராகி விட்டான். தகப்பனைத் தவிர மனித வர்க்கத்தையே பார்க்காமல் வளர்ந்த மிரண்டாவுக்கு அவன் இந்த உலகத்தவன் அல்லவென்றே படுகிறது. அப்படி இருவரும் காதல் பித்தேறி விடுகிறார்கள்.

     பிராஸ்பிரோவுக்கு இவர்கள் மனநிலை புரிந்து விடுகிறது. இவர்களது பாசம் நிலைத்ததுதானா என்று பரீட்சிக்க, பெர்டினான்ட்டை விறகு வெட்டச் சொல்லிப் பணியாள் நிலைக்கு ஆக்கி விடுகிறான். மிரண்டா நடமாடும் உலகில் விறகு வெட்டியாகக் காலம் கழித்தாலும் போதும், அதுவே பரமபதம் என்று கருதுகிறான். பெர்டினான்ட் - மிரண்டா இருவருடைய காதல்வழி அவ்வளவு கரடுமுரடாக இல்லை. பிராஸ்பிரோ மன்னித்து, மணவினைக்கு ஆசியளித்துக் காத்திருக்கக் கட்டளையிடுகிறான். தன்னுடைய திறமையால் இந்திர ஜால வித்தை நடத்துகிறான். மாத்திரைக் கோல் சுழற்றியதும், கவியின் உள்ளத்தில் குதித்தெழும் கற்பனைகள் போல வனதேவதைகள் அவர்கள் முன் தோன்றிப் பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள்.

     காதல் வானம்பாடி நடனம்புரிய நதித் தேவதைகளும் அறுவடைக்காரர்களும் வந்து ஆடுகிறார்கள்.

     இந்த நிலையில் குடிகார ராஜாவின் சதிக்கும்பல் தனது இருப்பிடத்தை நோக்கித் தேடி வருவது நினைவுக்கு வருகிறது. சட்டென்று வனதேவதைகளை அனுப்பி விட்டுப் புறப்பட்டு விடுகிறான்.

     மகனைத் தேடி வரும் மன்னன் கோஷ்டி, சமயத்தை எதிர்பார்க்கும் உள்ளுறை நோய் போன்ற கொலைக் கும்பலுடன் தீவுக்குள் வெகுதூரம் வந்துவிட்டது. கிழவன் கொன்ஸாலோ, இனி ஒரு அடி கூட எடுத்து வைப்பதற்குச் சக்தியில்லை என்று உட்கார்ந்து விடுகிறான். மன்னனுக்கும் தளர்வு தட்டுகிறது. யாவருக்கும் பசி காதை அடைக்கிறது.

     இந்தச் சமயத்தில் ஏரியல் அசரீரியாக வந்து மறுபடியும் தனது மோகனப் பாட்டைப் பாடுகிறான்.

     யாவரும் பிரமித்து நிற்கையிலே, தேவதைகள் கோஷ்டி ஒன்று அவர்கள் முன்னிலையிலே விருந்து படைக்கிறது. பசி கழுத்தைப் பிடித்து நெட்ட மன்னனும் மற்றோரும் நெருங்குகிறார்கள்; ஆனால் ஏரியல் பயங்கரமானதொரு கூளியாகத் தோன்றி உணவுகளைச் சிறகில் தட்டிக் கொண்டு மறைகிறான். ஆசைக்கும் நுகர்ச்சிக்கும் இடையில் எதிர்பாராத இந்த மதில் எழுந்து விட்டது.

     "ஆயிரம் பேய்களானாலும் சரி, ஒவ்வொன்றாய் வந்து பார்க்கட்டும்" என்று கர்ஜிக்கிறான் ஸெபாஸ்டியன்.

     சோர்ந்த கோஷ்டி பட்டினியுடன் தோழமை கொள்ளுகிறது.

     ஸ்டிபானோ புரட்சிக் கும்பல், பாட்டில் சொக்கி, கல்லிலும் முள்ளிலும் இழுபட்டுக் கடைசியில், சகதிக் குட்டை ஒன்றில் விழுந்து புட்டியையும் பறிகொடுத்து பிராஸ்பிரோ குகையை அணுகுகிறது. "வந்து விட்டோ ம்; வீரா, உன் வினைத்திறமையைக் காண்பி" என்று காலிபன் அவசரப்படுகிறான்.

     பட்டங்கட்டினாலும் பழமை வாசனை போகவில்லை. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த பட்டும் பட்டாடையும் கண்டு அதைத் தட்டில் கொண்டு போவதுதான் தன் ராஜ காரியத்தின் முதல் கடமை என்று நினைக்கிறான் ஸ்டிபானோ. ராஜாவே இப்படி என்றால் மந்திரியைக் கேட்க வேண்டுமா? 'எனக்கிது, இது' என்று கொண்டே துணிமணிகளை மூட்டைக்கட்டிக் காலிபன் முதுகில் ஏற்றுகிறார்கள். கதி மோட்சம் நாடிய காலிபன் பொதி கழுதையானான். காலிபன் அங்கலாய்க்கிறான். அவசரப்படுகிறான். முதலில் திருடுவோம்; அப்புறம் புரட்சி என்பது ஸ்டிபானோ வாதம். இந்தச் சமயத்தில் வேட்டை நாய்களின் ஹூங்காரம் கேட்கிறது. பிராஸ்பிரோவும் ஏரியலும் பயங்கரமான நாய்களை ஏவி முயல் வேட்டையாடி வருகிறார்கள்; முயல் வேட்டை மனுஷ வேட்டையாகிறது.

     புரட்சிக்கும்பல் பிளிறிக்கொண்டு ஓட்டமெடுக்கிறது.

     "இவர்களை விரட்டிக் கொண்டு போ; உடம்பெல்லாம் குத்தும் குடைச்சலும் உண்டாக்கக் குட்டிச் சாத்தான்களை ஏவி விடு" என்று உத்தரவு போட்டு விட்டு வேறு திசை செல்லுகிறான் பிராஸ்பிரோ.

     மன்னன் கோஷ்டி, பிராஸ்பிரோ மந்திரம் ஜபித்து மாயவட்டம் கீறிய பிரதேசத்துக்குள் பிரவேசித்துத் திகைப்பூண்டு மிதித்தவர்கள் போல அடியெடுத்துவைக்க முடியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

     மந்திரச் சட்டையணிந்து, மாத்திரைக் கோல் ஏந்தி, பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றுகிறான்.

     "எனது மந்திர சக்தியின் வலிமையால், சூரியனை இருட்டாக்கி, புயலை எழுப்பி உங்கள் எல்லோரையும் என் கைக்குள் சிக்கவைத்தேன். நான் மந்திரவாதி. தீவின் தலைவன்; மிலான் ஆட்சி இழந்த பிராஸ்பிரோ. இப்பொழுது சிறுமை மனிதர்கள் செயல்கள் மீதுள்ள என் சினம் அடங்கி விட்டது. அரசே வருக. குணசம்பன்னான கொன்ஸாலோவே வருக. சகோதரத்துரோகிகளே, உங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் என் அதிதிகள்" என்கிறான் பிராஸ்பிரோ.

     புத்திர சோகம் தீரவில்லை அலான்ஸோவுக்கு. நானும் உம்மைப் போலவே ஒரு மகளை இழந்து விட்டேன். இதோ பாருங்கள் என்று மாத்திரைக்கோலைத் தூக்குகிறான் பிராஸ்பிரோ.

     மிரண்டாவும் பெர்டினான்ட்டும் குகையில் சதுரங்கம் ஆடும் காட்சி தெரிகிறது.

     "உமது மகன் என் மகளைக் கவர்ந்துவிட்டான்" என்கிறான் பிராஸ்பிரோ.

     ஏரியல் விரட்ட, திருடிய துணி மூட்டைகளுடன் ஸ்டிபானோ - காலிபன் கோஷ்டி வருகிறது. வேறு திசையிலிருந்து மாலுமிகளும் மற்றுள்ளோரும் வருகிறார்கள்.

     நேப்பிள்ஸில் கலியாணம் முடிந்த பின் மிலானில் படித்துப் பொழுதுபோக்க இடம் கிடைத்தால் போதும்; இதுதான் பிராஸ்பிரோ ஆசை.

     "எங்களை நலமுற நேப்பிள்ஸ் சேர்த்த பின் நீ உன் விருப்பம் போலக் காற்றில் ஓடியாடித் திரிந்து மகிழ்" என்று ஏரியலுக்கு விடை கொடுக்கிறான். யக்ஷணிக் குழந்தையானாலும் பிராஸ்பிரோவுக்குப் பிரிய மனமில்லை. அதன் மேல் அவ்வளவு ஆசை படர்ந்துவிட்டது. இருந்தாலும் அதன் ஆசை இருக்கிறதே!

     தான் வழிபட்ட தெய்வம், போதை மயக்கம் தெளிவாத பரிசாரகன் என்பதில் காலிபனுக்கு மகா வெட்கம்.

     காலிபன் காதிலே வனதேவதைகளின் இசை நிரம்ப, எழுந்திருக்க மனமில்லாதவனாக, கண்மூடிக் கிடந்து, ஏகச் சக்ராதிபதியாக ஆளுகிறான்.

     தீவும் தனிமை கண்டது.