முன்னுரை - பெண் குரல் - Penn Kural - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

தளிர்

5

     மைசூரின் அழகிய விசாலமான வீதிகளுக்குக் குளிர்ச்சியையும் மனத்துக்கு ரம்மியத்தையும் தரும் வண்ணம் நின்று நிழல் தரும் மரங்களும், ஊருக்கே ஒரு கம்பீரத் தோற்றத்தை அளித்த மாட மாளிகைகளின் கூட கோபுரங்களும் என் நினைவிலிருந்தும் பார்வையிலிருந்தும் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தன. ‘வாழ்க்கையின் ஒவ்வொரு பாகமுங் கூட இப்படித்தான் கழிந்து விடுகிறது!’ என்று நெடு மூச்செறிந்த நான் வண்டிக்குள் திரும்பினேன். அதுவரை நான் எட்டிக் கூடப் பார்த்திராத இரண்டாம் வகுப்புப் பெட்டியின் மெத்தை என் மனதில் அதிகமான கூச்சத்தை உண்டு பண்ணியது. அத்தனை நாட்களில் நான் அதுபோலத் தனிமையில், இல்லை - ஓர் அன்னிய வாலிபனுடன் பிரயாணம் செய்ததில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்ட போது என் கூச்சம் பின்னும் அதிகமாகி என்னை என்னவோ செய்தது. அவ்வளவு பணம் படைத்திருந்த அத்தை கூட, என்னை அழைத்து வந்ததாலோ, அன்றி அத்திம்பேரும் வெங்கிட்டுவும் முன்னமேயே ஊர் திரும்பி விட்டதாலோ, வரும்போது மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்தாள். பழக்கமில்லாத என் நிலை அவனுக்குத் தெரிந்து விடக் கூடாதே என்று நான் அலட்சியமாக இருப்பவளைப் போலத்தான் பாவனை செய்து கொள்ள முயன்றேன். சாதாரணமாக இருக்கும் போது அழகாகத் தோன்றுபவர்கள் புகைப்படம் எடுப்பவரின் ‘இயற்கையாக இருங்கள்’ என்ற வார்த்தையில் மூன்று நாட்கள் சோகத்தில் திளைத்தது போல் ஆகிவிடுவதில்லையா? நானும் எந்தப் பாவனையும் செய்து கொள்ளாமல் இயற்கையாக இருந்திருந்தேனானால் அவன் கவனத்தைக் கவராமலிருந்திருப்பேன். இப்போது என் பாவனை பொருந்தாமலிருக்கும் முகத் தோற்றம் அவனைச் சீக்கிரம் கவனிக்கச் செய்து விட்டது!

     “ஏன்? என்னவோ போல் இருக்கிறாயே? இடம் சௌகரியமாக இல்லையா? ஆமாம், அங்கிருந்து வெளியே பார்த்தால் முகத்தில் கரித்தூள் அடிக்கும். இப்படி வந்து உட்கார்ந்து கொள்” என்று அவனுக்கு எதிர்ப்புற ஆசனத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த எனக்கு, தனக்குப் பக்கத்திலேயே ஓரத்து இடத்தைக் காட்டினான் மூர்த்தி.

     பெட்டியில் நான் ஒருத்திதான் என் இனத்தைச் சேர்ந்தவள். இன்னும் இரண்டே வயதானவர்கள் தாம் எங்களைத் தவிர அங்கு இருந்தனர். ஒருவர் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்க மற்றவர் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

     “இல்லை, இங்கேயே சௌகரியமாக இருக்கிறது” என்று சிரமத்துடன் அவனுக்குப் பதிலளித்துவிட்டு நான் மறுபடியும் முகத்தை வெளியில் நீட்டிக் கொண்டேன்.

     “இல்லை, அங்கே கரித்தூள் அடிக்கும் கண்களில். இப்படி வா! சொல்வதைக் கேள்!” என்று அவன் மிகவும் சகஜமாக எச்சரித்தது என் சங்கட நிலையை உச்ச நிலைக்குக் கொண்டு போய் விட்டது.

     ‘இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டுமே? எப்படிப் போகப் போகிறாய்?’ என்ற பயம் என் மனத்தில் குடியேறியது. அந்தப் பயம் ஏன் இப்படிப் புறப்பட்டு வந்தோம் என்று என்னை நினைக்கச் செய்து, முன்பின் பழக்கமில்லாத வாலிபன் அவன், அவனுடன் தனியே வழிப்பிரயாணம் செய்வதாவது? என் புத்தி ஏன் அசட்டுத்தனமாகச் சென்றது? ‘நீங்களே கொண்டு விடுங்கள், பாட்டி’ என்று பிடிவாதமாகச் சொல்லியிருக்கக் கூடாதா? இவனுடன் வர நேர்ந்த இந்தச் சந்தர்ப்பம் ஒரு சங்கடத்தை மட்டுமா தேடித் தந்திருக்கிறது? அத்தை என்னுடைய தாழ்ந்த அந்தஸ்தை விளக்கிக் காட்டுவது போல வேறு பேசிவிட்டாள். “டிக்கெட் வாங்க வேண்டாமா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை தனது பெரிய கைப்பையைத் திறப்பதற்குள் அவனாகவே கையில் இருந்த டிக்கெட்டுகளைக் காட்டி, “அவளுக்கும் சேர்த்தே வாங்கி விட்டேன்” என்றது அத்தைக்கு சற்றுச் சப்பிட்டுவிட்டதை முகம் காண்பித்து விட்டது.

     “அவளுக்கும் சேர்த்தா இரண்டாம் வகுப்பு வாங்கினாய்? அவளை அழைத்துப் போக வேண்டும் என்றால் கூடவே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? பெண்கள் வண்டியிலேயோ, அடுத்த வண்டியிலேயோ உட்கார்த்தி விட்டுச் சற்றைக்கு ஒரு தரம் நீ கவனித்துக் கொண்டால் போதாதா? வீணாக ரெயில்காரனுக்குக் கொடுப்பானேன்? அந்தக் காசைக் குழந்தை கையில் கொடுத்தால் இரண்டு ரவிக்கைத் துணியாவது வாங்கிக் கொள்வாளே?” என்று அத்தை ஒரு குட்டிப் பிரசங்கமே அல்லவா செய்து விட்டாள்?

     நான் இந்தச் சௌகரியங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அருகதை இல்லை என்று அறிவித்துங்கூட அவன், “பரவாயில்லை மாமி. என்னையே அப்பாதான், இந்த முறை ‘ஸெகண்டு கிளாஸில் போ. திரும்பி உடனே நீ கிளம்ப வேண்டும். தவிர மஞ்சுவும் ஒன்பது மாதக்காரி’ என்று சொன்னார். அவரே சௌகரியமாகப் போ என்று கூறும் போது, நானாகக் குறைத்துக் கொள்வானேன் என்று தான் வாங்கினேன்” என்று சிரித்து மழுப்பி விட்டான். ஏற்கனவே நான் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறேன் என்று கொஞ்சமும் அவள் அறியவில்லை? பணச் செருக்கும் அகம்பாவ அழுத்தமும் வேரோடி இருக்கும் நெஞ்சுக்கு எதிராளியின் தாங்காத மனசை ஏளனம் செய்வது போல் பேசுவது தவறு என்று படவே படாதோ? அத்தையாம் அத்தை! உயிரே போவதாக இருந்தால் கூட இவள் காலடிக்கு வரக் கூடாது!

     “சொல்லச் சொல்ல அங்கேயே உட்கார்ந்திருந்தாய் அல்லவா?” என்று அவன் கேட்கும்படி பாழாய்ப்போன புகை என் முகத்திலே வந்து தாக்கிக் கண்களில் கரித்தூளை விசிறி விட்டது. தோல்வியை ஒப்புக் கொள்வது போல் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன். விழிக்கவே முடியாதபடி எரிச்சல் கொளுத்தியது. முன்பு அவன் காட்டிய இடத்தில் போய்ச் சாய்ந்து கொண்டேன்.

     என்னையே கவனித்துக் கொண்டிருந்த அவன், “தண்ணீரை விட்டுக் கண்களை நன்றாக அலம்பிவிடு. சுமாராக இருக்கும்” என்று கூஜாவைத் திறந்து தம்ளரில் தண்ணீர் விட்டுக் கொடுத்தான். கண்களைக் கழுவித் துடைத்துக் கொண்டு நான் உட்கார்ந்து கொண்டேன்.

     அவன் காட்டிய அந்தப் பரிவு எல்லோரிடமும் சரளமாகப் பழகும் இவன் சுபாவ குணமா அல்லது வேண்டுமென்றே காட்டுகிறானா என்று எனக்கு விளங்கத்தான் இல்லை. ‘ஊர் போய்ச் சேருவதற்கு இன்னும் எத்தனை நேரம் இருக்கிறதோ? இடையில் காபி, சாப்பாடு என்று வேறு இருக்கின்றன. முழு முட்டாளாக இப்படியா வேண்டுமென்று சங்கடத்தில் சிக்கிக் கொள்வேன்?’ என்று உள்ளூறத் தவித்துப் போனேன். அவன் ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டுமே என்று நான் வேண்டிக் கொள்ளப் போக, அவன் என்னைக் கேள்வியாகவே கேட்டுத் துளைத்து விடுவான் போல் இருந்தது.

     “உங்கள் வீட்டிலே நீ ஒரு பெண்தானா?” என்று முதலில் கேட்டான்.

     “இல்லை. எனக்கு அக்கா இருவர் இருக்கிறார்கள்” என்று நான் முணுமுணுத்தேன்.

     “ஏதோ தனியாகப் போவதற்குப் பேச்சுத் துணையாகத் தமாஷாக இருக்கும் என்று உன்னைக் கொண்டு விடுகிறேன் என்று ஒப்புக் கொண்டேனே? நீ பேசா மடந்தையாக இருக்கிறாயே? இந்தக் காலத்தில் எந்தப் பெண் இப்படிப் பட்டிக்காட்டு அம்மாமியாக இருக்கிறாள்? ‘ஸ்கூல் பைனலில் அந்த ஜில்லாவுக்கே முதலாக மார்க்குகள் வாங்கித் தேறியிருக்கிறாள் சுசீலா. மாமா காலேஜில் சேர்க்காமல் இருக்கிறார்’ என்று உன்னைப் பற்றி ஹேமா கூட முன்பே சொல்லியிருக்கிறாளே? அப்படிப் படித்த பெண்ணாகவே நீ இருக்கவில்லையே?” என்று அவன் என்னைப் பார்த்து நகைத்தான்.

     ‘பட்டிக்காட்டு அம்மாமி’ என்று அவன் கூறியது என் உள்ளத்தில் உறைத்தது. என் கணவர் கூட இப்படி இருக்கும் பெண்களைக் கண்டால் பிடிக்காது என்றாரே! அந்தக் கணக்கில் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் செய்து கொண்டேனே ஒழிய, அசடு, இப்போது சமயம் வாய்த்திருக்கும் போது பயந்து பயந்து சங்கோசப்பட்டுச் சாகிறேனே? அவரைப் போலப் பண்படைந்த மனமுள்ளவன் போல் இருக்கிறது இவன். இவன் வாயிலிருந்து பட்டிக்காட்டு அம்மாமி என்ற பட்டப் பெயர் கேட்கும்படியாக பித்துக்குளியாக நடந்து கொண்டு விட்டேனே?

     என் அசட்டுக் கூச்சத்தைத் தூசியை உதறுவது போல உதறித் தள்ளி விட்டுப் பதில் கொடுக்க நான் முடிவு செய்த போது அவன் என்ன கேள்வி கேட்டான் என்று மறந்துவிட்டேன். ஆனால் மூர்த்தி அவ்வளவு தூரம் நான் சங்கடப்படும் வரை வைத்துக் கொள்ளவில்லை. அதற்குள் இன்னொரு கேள்வி விடுத்து விட்டான்.

     “சென்னையில் உங்கள் வீட்டார் எங்கே இருக்கிறார்கள்?” என்று வினவினான்.

     நான் பதில் கூற வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட பின் அவன் கேட்ட கேள்வி எனக்கு விடை தெரியாததாக இருந்தது! சென்னையை நான் முன்பின் பார்த்தவள் அல்ல. விலாசங்கூட எனக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

     ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “நான் இதுவரை அந்தப் பக்கம் சென்றதில்லை. ‘ராதாராம் எலக்ட்ரிகல்ஸ்’ என்று இருக்கிறதாமே? அந்தக் கம்பெனி சொந்தக்காரர் அவருடைய தமையன் தான்” என்றேன்.

     அவன் சட்டென்று நிமிர்ந்து கொண்டு, “என்னது? ராதாராம் எலக்ட்ரிகல்ஸ் என்றா சொன்னாய்? அப்படியானால் கேசவமூர்த்தியின் தம்பியா?” என்று கேட்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

     “தெரிந்திருக்கிறதே உங்களுக்கு?” என்று மலர்ந்த முகத்துடன் நான் திருப்பிக் கேட்டேன்.

     “அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை. கேசவமூர்த்தியின் மைத்துனியை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரி இளைஞர்கள் சங்கத்தின் ஆதரவிலே நடக்கும் விவாதங்களுக்கு ராஜதானிக் கல்லூரியிலிருந்து அவள் அடிக்கடி வருவது வழக்கம். அந்த முறையிலே எனக்குப் பரிச்சயம் உண்டு. அவள் பிரஸ்தாபித்துக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை கேசவமூர்த்தியின் சகோதரர் என்று பொருட்காட்சி ஒன்றில் அவள் எனக்கு அறிமுகம் செய்வித்ததாகக் கூட ஞாபகம் இருக்கிறதே?” என்று அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்தான்.

     மதனியின் தங்கை ஒருத்தி அவர்களுடனேயே இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள் என்று அப்பா சொல்லியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அவளாகத்தான் இருக்க்ம் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

     யோசனை பலனளித்து விட்ட மகிழ்ச்சியுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவன், “ம்... நினைவுக்கு வருகிறது. உன்னுடைய ‘அவர்’ பெயர் ராமநாதன் தானே?” என்று புன்னகை செய்துவிட்டு, “அவர் என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டான்.

     இதுவரையில் நான் உதறித் தள்ளியிருந்த பாழும் சங்கோசம் என்னை மீண்டும் முகமூடியிட்டு விட்டது. காலில் கௌவும் அட்டையை உதறித் தள்ளுவது போல் அத்தனை சிரமப்பட்டு அதை உதறித் தள்ளியிருந்தேன். ஆனால் அவருடைய பேச்சை யார் எடுத்தாலும் உள்ளத்திலே பொங்கி வரும் உணர்ச்சி என் சரளமான போக்கில் நெளிவையும், குழைவையும் கொண்டு வந்து விடும் போது, குறும்புச் சிரிப்புடனும், குறுகுறுத்த விழிகளுடனும் எனக்கு அதிகம் பழக்கமில்லாத இளைஞன் ஒருவன் கேட்கும் போது நான் என்ன செய்வேன்? அதுவும் வேற்று ஆடவர் எவருடனும் தனிமையில் பழகும் அனுபவம் எனக்கு முற்றும் புதிதாக இருக்கும் போது? அவன் கேட்டுவிட்டு என்னையே வேறு புன்னகை மாறாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

     பட்டுத் துணியால் மூடியது போல் மனம் கதகதக்க எப்படியோ கூட்டிக் குழப்பி அவர் எங்கு வேலையாக இருக்கிறார் என்று நான் ஒரு வழியாகக் கூறினேன். “அப்பா...டா! இதற்கு இத்தனை யோசனையா?” என்று கேட்டுவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான்.

     இந்தப் புதிய அனுபவம் ஒரு சமயம் தேவலை போலும் இருந்தது. ஒரு விதத்தில் பயமாகவும் இருந்தது.

     சற்றும் எதிர்பாராத விதமாக மூர்த்தியிடத்தில் என்னுடைய புரியாத சந்தேகங்களைத் தெளிவிப்பது போலும், அவன் மனநிலை எனக்கு நன்கு விளங்குவது போலும் தொடர்ந்து நாங்கள் பெங்களூர் வந்து வண்டி மாறிய பின் ஓடும் ரெயிலில் ஒரு சம்பவம் நேரிட்டது.

     நாங்கள் அந்தப் பெட்டியில் வந்து ஏறும் போது ஏற்கனவே ஒரு ஆடவனும் இளநங்கை ஒருத்தியும் அதில் இருந்தார்கள். அவள் கன்னட நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவள் முகமும் அணிந்திருந்த ஆபரணங்களும் விளக்கின. சோகம் சூழ்ந்த அவள் முகத்தோற்றம் கல்வியோ நாகரிகமோ சிறிதும் இல்லாதவளாகவும், அறியாமை மெத்த நிரம்பினவளாகவும் தோன்றியது. அந்த மனிதன் நாகரிகமாக உடையுடுத்து நல்ல தேகக்கட்டு வாய்ந்தவன் போல மீசையும் கிருதாவுமாகத் தென்பட்டான். நானும் மூர்த்தியும், ஆமாம், உம் என்று பேசிக் கொண்ட மாதிரியில் கூட அவர்கள் பேசவில்லை. ‘வெவ்வேறு ஆசாமிகள் போல் இருக்கிறது’ என்று நான் முடிவு செய்தேன்.

     “கீழே அப்படியே படுத்துக் கொண்டு விடு. இன்னும் ஆட்கள் வந்தால் படுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு மூர்த்தி மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கினான். ஆனால் எனக்குப் படுக்கப் பிடிக்கவில்லை. தூக்கமும் வரவில்லை. என்னை அப்படிக் கொட்டுக் கொட்டென்று விழித்திருக்கச் செய்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவர்கள் இருவரும் அதே நிலையில் இருந்தது தான் அது.

     அது என்னவோ சந்தேகம் தட்டியது. அந்தப் பெண்ணைப் பார்த்து நான், “எங்கே போகிறாய்?” என்று கேட்டேன். அவள் பதிலுக்கு அழுது வழிந்த குரலில் கன்னடத்தில் ஏதோ சொன்னாள். என்ன சொன்னாள் என்பது எனக்குப் புரியவில்லை. “தனியாகவா போகிறாய்?” என்று அர்த்தமில்லாமல் கேட்டு வைத்தேன். அதற்கும் அவள் ஏதோ உளறிக் கொட்டினாள். அவனைப் பார்த்தால் தமிழன் போலவே எனக்குப் பட்டது. ஆனாலும் எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஏனோ வாயே திறக்கவில்லை.

     என்னதான் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு சமயத்தில் அறியாமலே என்னை ஓர் அசத்தல் அசத்தி விட்டது. ஆசனத்தில் சாய்ந்தவாறே நான் கண்களை மூடியிருக்கிறேன். ‘டடக், டடக், டடக், டடக்’ என்று சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும் சப்தம் மட்டும் கொஞ்சம் நேரம் வரை என் செவிகளில் விழுந்து கொண்டிருந்தது. பின்னர் அதுவும் மெல்ல மறைந்து விட்டது. எத்தனை நேரம் நான் தூங்கி விட்டேனோ தெரியவில்லை. சப்தம் போட்ட பேச்சுக்குரல், அழுகையொலி எல்லாமாக என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன. வண்டி ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணி கன்னடத்தில் ஏதேதோ கடல்மடை திறந்து விட்டது போல் சொல்லிப் பிரலாபித்து அழுது கொண்டிருந்தாள். மூர்த்தி கீழே ஓரத்தில் தூங்கி விழுந்த கண்களுடன் அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு எல்லாம் விசித்திரமாகவும் குழப்பமாகவும் இருந்தன. ஆவலும் சந்தேகமும் பின்ன, “என்ன விசேஷம்” என்று நான் வினவினேன்.

     “வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே சொல்ல மாட்டாளோ...? அயோக்கியன்!” என்று அவள் பிரலாபித்து முடித்ததும் மூர்த்தி தானாகவே கூறிக் கொண்டான். பிறகு என்னிடம் அவன் தெரிவித்த விவரம் இதுதான்:

     அந்தப் பெண் எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசி. அவள் புருஷனுக்கு மைசூரை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டு நெசவு போடும் தறிகள் சொந்தத்தில் இருக்கின்றனவாம். மூன்று மாதம் முன்பு அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் உள்ள பிறந்த ஊருக்குப் பிரசவத்துக்காக வந்தாளாம். குழந்தை பிறந்து இறந்து விட்டதாம். திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்னர், அவள் புருஷன் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் தந்தி கிடைத்ததாம். வந்த சமயம் அவள் தந்தை ஊர் விவகாரத்தில் சிக்கி விரோதக்காரர்களின் தாக்குதலால் பக்கத்து நகர ஆஸ்பத்திரியில் படுத்திருந்தானாம். அவள் என்ன செய்வாள்? எப்படியோ தன்னந்தனியே பக்கத்து ஊர் வந்து ரெயிலேறி இருக்கிறாள். தவறுதலாக அறியாமல் மைசூர் செல்லும் வண்டிக்குப் பதில் பெங்களூர் வண்டியில் ஏறி விட்டாள். கிராமத்தை விட்டு வெளி உலகம் தெரியாத பெண் தானே? அத்துடன் கஷ்டநிலை வேறு. ஊர் வந்து சேரும்வரை அவளுக்குத் தவறுதல் புலப்படவில்லை. இரவு நேரத்தில் அந்தப் பெரிய நகரத்தில் வந்ததும் அவளுக்குத் திக்குத் திசை புரியவில்லை. அந்த சமயத்தில் அவன் குறுக்கிட்டிருக்கிறான். பாவம், அவள் அவனை நம்பித் தன் கஷ்டங்களைத் தெரிவித்துச் சரியான வண்டிக்கு ஏற்றித் தன்னைச் சேர்த்துவிடக் கோரியிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்கள், தோற்றம் எல்லாம் அவனை ஆசை வலைக்குள் வீழ்த்தி விடக் கூடியவனவாக இருந்திருக்கின்றன. திக்கற்ற அவள் நிலை, அறியாமை எல்லாம் அவனுக்குச் சாதகமாக இருக்கவே, தானும் மைசூர் போகப் போவதாகக் கூறித் தேற்றி அனுதாபப்படுபவன் போல நடித்து, கடத்திப் போக எண்ணியவனாகக் கன்னட நாட்டை விட்டுச் செல்லும் வேறு வண்டியில் தன்னுடன் ஏற்றிக் கொண்டு விட்டான். கொஞ்ச தூரம் வந்த பிறகு அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்ததாம். என்னிடம் தன்னுடைய ஊருக்கு வண்டி எப்போது போகும் என்று கேட்டாளாம்! நானும் தூங்கி விடவே அவன் கூறிய பதில் அவளுக்குச் சமாதானமாகத் தொனிக்கவில்லையாம். அவனும் என்ன நினைத்தானோ என்னவோ, சற்று முன் அவள் ஸ்நான அறைக்குள் சென்றிருந்த போது அவன் அவள் பெட்டி சகிதம், வண்டி நிற்கும் சமயம் சரியாக இருந்திருக்கவே, இறங்கி விட்டான். திரும்பி அவள் வந்து பார்த்த போது அவன் இருக்கவில்லை. அவள் குழப்பம் தீர்ந்து, பெட்டியைக் காணவில்லை என்று அறிவதற்குள் வண்டி ஓட ஆரம்பித்துவிட்டது. அப்புறந்தான் சத்தம் போட்டு மூர்த்தியை எழுப்பியிருக்கிறாள்.

     அடுத்த தடவை வண்டி நின்றதும் மூர்த்தி அவளுடன் இறங்கிப் போய் விவரங்களைத் தெரிவித்து அவளை போலீஸாரிடம் ஒப்பித்து விட்டு வந்தான். என் மனம் எல்லாவற்றையும் மறந்து அவள் பால் இளகிவிட்டது. சுய தைரியமும், வெளி உலகில் பழகிய அனுபவம் இல்லாத பெண்கள் திக்கற்ற நிலையில் சிக்கிவிட்டால் நயவஞ்சக வலையைக் கொண்டு வீழ்த்தி விடக் கயவர்கள் காத்திருக்கிறார்களே?

     “பாஷை தெரியவில்லை. போயும் போயும் ஒரு போக்கிரியிடமா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? நிர்க்கதியான அவளுடைய கஷ்டத்தைக் கேட்டாலே யாருக்கும் மனம் இளகுமே? எப்படித்தான் மோசடி செய்ய அவன் துணிந்தானோ? கண்டவர்களையும் நம்பக் கூடாது என்று சொல்வதும் சரியாக இருக்கிறது. எனக்கு அப்போதே சந்தேகம் தட்டியது” என்று என்னை அறியாமலேயே மனம்விட்டுச் சொல்லிக் கொண்டு போனேன் நான்.

     இத்தனை நீளமாக முணுமுணுக்காமல் என் இயற்கையான போக்கிலே அவன் முன்னிலையில் நான் பேசியது அதுதான் முதல் தடவை.

     “அவன் போயே போய்விட்டான். இனிமேல் எங்கே அகப்படப் போகிறான்? பெட்டியில் நூறு ருபாய் போலப் பணம் வைத்திருக்கிறாளாம். மூன்றாம் வகுப்பானால் கூடக் கூட்டம் அதிகம். யாரேனும் எப்படியேனும் அந்தப் பெண்ணை விசாரிக்க நேர்ந்து உளவு தெரிந்துவிடும் என்று முன் யோசனையுடன் தான் இங்கு யாருமில்லாத வண்டியில் எறியிருக்கிறான், திருடன். கவிழ்க்கும் எண்ணமும் மோசடியுமே எங்கும் மலிந்து விட்டன. முதலிலேயே சந்தேகம் தோன்றியவுடனேயே ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறேன், பார்த்தவுடனேயே யாரையும் எப்படி நம்புவது என்ற ஞானோதயம் திடீரென அப்போது குறுக்கிட்டதாம். ஏன் அப்படிச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை என்னையும் அவன் கோஷ்டியில் சேர்த்து விட்டாளோ என்னவோ?” என்று கூறிய மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

     அவனுக்கு என்ன புரிந்ததோ புரியவில்லையோ. எனக்கு அவன் கூறியது எதுவும் அப்போது மண்டையில் பிடிபடவில்லை. இன்னொரு விஷயம் என் நினைவில் அப்போது உறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் இருவர் மட்டுந்தான் அப்போது அந்தப் பெட்டியில் இருந்தோம்! நானும் கிட்டத்தட்ட அவள் போன்ற நிலையில் தான் இருக்கிறேன். அநுபவமில்லாதவள். பழக்கமில்லாத பிராந்தியத்தில் பிரயாணம் செய்கிறேன். மூர்த்தியை எனக்கு நன்றாகத் தெரியாது. அவளைப் போல இவன் என்னை ஏமாற்றி மோசடி ஏதும் செய்ய முடியாது. ஆனால்... ஆனால்... நினைக்கும் போதே மனம் பயத்தால் துடித்தது. அவனோ இளைஞன். நானோ பருவ மங்கை... இதோ அருகில் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்படியே நெருங்கி என் கையைப் பிடித்தானானால்?... நான் என்ன செய்வேன்? பொறி ஒன்றில் நானே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தேன். என்னுடைய சிந்தனைக்குள் புகுந்து என்னை இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கிக் கொண்டிருந்த ‘அவர்’ நினைவு, அத்தையகத்து ஏளனம், அப்பாவின் கஷ்ட நிலை எல்லாம் என்னை விட்டு ஓடிவிட்டன. எப்படி அங்கே விட்டு நாசுக்காகத் தப்புவது என்பதிலேயே சிந்தனை லயித்தது. ‘என்னை வேறு பெட்டியில் கொண்டு விட்டு விடுங்கள்’ என்று திடீரென்று நான் கூறினால் அவன் என்ன நினைப்பான்?

     என்ன நினைப்பான் என்ன? உண்மையில் குற்றமுள்ள நெஞ்சானால் ‘ஏன் எதற்கு?’ என்று ஆட்சேபிப்பான். இல்லாவிட்டால்...

     இல்லாவிட்டால் மட்டும் என்ன செய்வான்?

     ‘சீ அசட்டுத்தனம். அப்படிக் கேட்கக் கூடாது. உண்மையில் நான் பயந்த மாதிரியாகக் காண்பித்துக் கொள்வதே ஆபத்துத்தான். அத்தகைய துடுக்குத்தனம் காண்பித்தானானால் அபாய அறிவிப்புச் சங்கிலி இருக்கவே இருக்கிறது’ என்று சற்றுத் தைரியம் கொண்டு என்னை நானே பலப்படுத்திக் கொண்டேன். “என்ன சுசீலா? அவளைப் பற்றிய சிந்தனையில் ஒரேயடியாய் ஆழ்ந்து விட்டாற் போல் இருக்கிறது?” என்ற மூர்த்தியின் சிரிப்பொலி என்னைச் சிந்தனை உலகிலிருந்து மீட்டது.

     நான் எதுவும் பேசும் முன் அவனாகவே பேசலானான்.

     “இம்மாதிரி சில பேர்கள் இருப்பதனால் ஆண் சமூகத்தையே எல்லோரும் சந்தேகிக்கும்படி இருக்கிறது. அவனுடைய கௌரவமான நடையும் பாவனையும் மோசடி செய்பவனாகவா காட்டின? ஏற்கனவே நம் ஹிந்து சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்கள் குறைவு. அதிலும் ஆண்கள் அவர்களைச் சகோதரிகள் என்று சமமாக எண்ணி மரியாதை கொடுக்காமல் கீழ்த்தரமாக நினைப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தைரியமும் ஓடிப் போய் விடுகிறது. நான் எவ்வளவோ முறைகள் கவனித்திருக்கிறேன்? பஸ்ஸிலோ, மற்றும் பொது இடங்களிலே சற்று நன்றாக ஆடையணிந்து கவர்ச்சிகரமாகப் பெண்கள் யாரேனும் தென்பட்டுவிட்டால், பெண்கள் முன்னேற வேண்டும், முன்னேற வேண்டும் என்று மேடைப் பிரசங்கம் செய்பவர்கள் கூட, ஏதோ காணாது கண்ட அதிசயம் போல் வெறித்துப் பார்ப்பார்கள். சகஜமாக நினைப்பதில்லை. இத்தனை நாகரிகம் வந்துங்கூட, கூட்டங்களிலோ, க்யூ வரிசையிலோ பெண்மணி ஒருத்தி நிற்க வேண்டி வந்தால் மரியாதையில்லாமல் இடித்துக் கொண்டு போகும் ஆண்களை நான்பார்த்திருக்கிறேன். உண்மையில் பெண்கள் முன்னேற வேண்டுமானால், எல்லாத் துறைகளில்ம் தங்கள் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், ஆண்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணமும், மரியாதை தவறி நடப்பதும் அகல வேண்டும்” என்றெல்லாம் மேடை பிரசங்கி தோற்று விடுவான் போல ஆவேசமாகக் கூறிக் கொண்டு போனான்.

     என் சந்தேகத் திரை படீரெனக் கிழிந்தது. மூர்த்தியின் தூய இருதயத்தை நான் தெளிவாகக் கண்டேன். அடாடா, மனித உள்ளங்கள் தாம் எத்தனை விசித்திரமானவை! நான் அவன் சொல்லிலும் செயலிலும் சகஜ மனப்பான்மையைக் காட்டுவதைச் சந்தேகித்து இந்தக் குறுகிய நேரத்துக்குள் என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்! அத்தை எனக்கு உயர் வகுப்புச் சௌகரியம் தேவையில்லை என்று சொல்லியும் அவன் கேட்காமலே இருந்ததன் காரணத்தைக் கூட இப்போது வேறு வழியிலே கண்டுபிடித்தேனே; அவன் அந்தத் துர்பாக்கியவதியை எக்காரணம் கொண்டு இந்த வண்டியில் ஏற்றினானோ அது போல இவனும் நினைத்து விட்டானோ என்றல்லவா கலங்கியது பாழாய்ப் போன மனசு? அதுவும் அந்தக் காரணத்தைத் தானாகவே அவன் எனக்கு கண்டுபிடித்துச் சொன்ன போது என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது போல் பீதி கொண்டேனே!

     ஆனால் அதே சமயம் அவன் என் மனத்திலுள்ளபடியே சற்றும் சிந்திக்கவில்லை என்றும், நிர்மலமாக நடந்து கொள்ளாத ஆண் சமூகத்தினிடம் அவன் சிந்தனை லயித்திருக்கிறது என்றும் இப்போதல்லவா தெரிகிறது? இருவர் மனப்பான்மைக்கும் எத்தனை வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் போல, சீர்படாத குறுகிய என் நோக்கு எங்கே? எல்லாவற்றையும் பரந்த நோக்குடன் பார்க்க்ம் அவன் சீரிய மனப்பான்மை எங்கே?

     உள்ளூறக் குன்றிவிட்ட எனக்கு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசவே முதலில் அவமானமாக இருந்தது. தெளிவு கொண்டு பின், “ஆமாம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை” என்று ஆமோதித்தேன்.

     என் மனோவேகம் எப்படித்தான் சென்றது என்று நானே அறியவில்லை. என் கணவர், கிராமத்துப் பெண்ணின் அர்த்தமற்ற சங்கோஜத்தையும் அளவுக்கு மீறிய அடக்கத்தையும் வெறுப்பவர். இத்தகைய மனோபாவந்தான் கொண்டிருப்பாரோ என்று மகிழ்வுடன் ஆராய ஆரம்பித்து விட்டேன்.

     இந்நேரத்தில் நான் இப்படி மூர்த்தியுடன் பிரயாணம் செய்கிறேன். இந்த விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்று அறிந்தால் அவர் பெருமை கொள்வாரா?

     மறுநாள் புங்கனூருக்கு எங்கள் வண்டி வந்த போது அப்பா என்னை அழைத்துப் போக ரெயில் நிலையத்திற்கு வந்திருக்கவில்லை. அத்திம்பேரின் கடிதம் அவருக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த அன்ற் கிடைக்கும் போது, நான் வருகிறேன் என்று முன்கூட்டியே அவர் எப்படி அறிந்திருக்க முடியும்?






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247