சிவப்பிரகாச சுவாமிகள்

அருளிய

பிக்ஷாடன நவமணி மாலை

நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண்
டங்குற்று மென்றுகில் போக்கினள்வெற்றரை யாகியந்தே
விங்குற் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற்
றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே. 1

குன்றா முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான்
றன்றா மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து
நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னுறுநுதலா
யென்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே. 2

இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந்
தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள்
செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டா
யெப்பாத் திரத்திலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே. 3

வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி
யோட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம்
வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல்
யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே. 4

மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற்
கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான்மிடற்றி
னீண்ட வுகிருறுத் தாதனை வேனென்று நீர்தலையைத்
தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே. 5

வானோர் கொழுநின் பலிப்பாத் திரத்தை வனைந்ததுநீ
தானே வெனச்சக் கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி
யானோர் குயவன்மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப
நானோ வொருசிற் றிடைச்சியென் றாளந் நறுநுதலே. 6

பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தி
லங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென
வெங்கையில் வந்த தெமதாக லேவழக் கென்றுசெட்டி
மங்கையர் தங்கட் கிருங்கூ டலிலிட வைத்தனரே. 7

நீருக்குத் தக்க சடையார் முதுகுன்றச் நேடியுங்க
ளூருக்குட் பிச்சையென் றுற்றோமுண் டாயி னுரைமினென
வாருக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர்
யாருக்குக் கிட்டு மதுசோறு நீர்கொளு மென்றனரே. 8

முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச்
சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில்
வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள்
விழுங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே. 9

சிறப்புப் பாயிரம்

பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத்
தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரணம்
பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனித
னற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே. 10

சிறப்புப் பாயிரம்

பிக்ஷாடன நவமணி மாலை முற்றிற்று