சிவப்பிரகாச சுவாமிகள்

அருளிய

இட்டலிங்க நிரஞ்சன மாலை

கட்டளைக் கலித்துறை

நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்
வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றா
யருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று
தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே. 1

குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்
றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி
யொருவாது தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்
திருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே. 2

என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா
துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழ
றன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ
பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே. 3

தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமா
மென்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்
புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியு
மன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே. 4

அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்
திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்
கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து
பொங்கெரி வெந்நிர யத்தூ டிருப்பப் பொருந்துவதே. 5

சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்
நித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே
யத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய்
மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே. 6

கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி
யொண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி
வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தி
லண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே. 7

காயங் கரணநற் பாவ மறிபவன்¢காணறிவு
ஞேயங்க ளாகி முதனடு வீறி னினக்கயலே
யாயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ
பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே. 8

சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி
சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்
மெத்தன் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக்
கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே. 9

வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே
யான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய்
கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவு
மான்குறிக் குங்க ணுமைபங்கனே யென்கைம் மாணிக்கமே. 10

பிரமமுந் தானு மயலனெ¢ றருச்சிக்கும் பேதநிலை
தருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென்
றருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா
றிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே. 11

கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா
ஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்
சீலங் கொளுமரு ளாசார மாதி திகழ்ந்துநிற்கு
மூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே. 12

மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்
விண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு
நண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்
கண்ணுங் கருத்துங் கலந்துநின்றாயென் கைக்கண்ணுதலே. 13

நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினாற்
சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ
யாக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே
பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே. 14

ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை
சென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்க
மென்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்
மின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே. 15

உறங்குது மென்றுறங் காநிற் பவரிலையோங் கொளியாய்ப்
பிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகா
ணிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று
புறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே. 16

குரவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு
திருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கட்
பொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென்
கருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே. 17

துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்
றயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு
பயிலினுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்
குயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே. 18

ஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்
கேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்
வீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே
நாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயகமே. 19

பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனு
நாடு மளவினி னீயன்றி வேறிலை நான்முகன்மா
றேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்
சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே. 20

இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு
செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே
யெல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்
நல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே. 21

பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ
டொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே
யழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்
மொழியா வருங்குரு லிங்மென் றேயென்கை முன்னவனே. 22

விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி
யடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெய
ருடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்
புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே. 23

நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே
புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி
செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்
கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே. 24

உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா
தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்
தொடர்ந்து நுகருநன் ஞானக் காத்திடை தோன்றுவைமால்
கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே. 25

யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்
நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவு
மானா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்
வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே. 26

உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியா
யிலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கௌ¤துகொலோ
சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்
விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே. 27

ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப
நானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைந்தழிதல்
வானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்
தீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே. 28

உருவஞ சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு
மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றா
யருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்
கருவன் றுலகம் படைத்தாடுமென் கைக்கறைக் கண்டனே. 29

விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்று
நற்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க
வுள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்
றுள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே. 30

அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்
பழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்
கழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற்
கொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. 31

இட்டலிங்க நிரஞ்சன மாலை முற்றிற்று