பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே - Oru Kottukku Veliyae - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்...

     1975-ஆம் ஆண்டு வாக்கில் நான் எழுத்தாளரானேன். சுமார் 50 சிறுகதைகள், 'தாமரை', 'கலைமகள்' உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வெளியான சமயத்தில், 1976ஆம் ஆண்டில் நான் எழுதிய முதலாவது நாவலான 'பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே' வெளியானது. கால் நூற்றாண்டிற்குப் பிறகு, இப்போது இந்த நாவலை மறுவாசிப்பு செய்தபோது, அப்போதைய பல்வேறு சமூக - இலக்கிய சங்கதிகள் நினைவுகளை மலர வைக்கின்றன. எழுத்தால், இந்த சமுதாயத்தை புரட்டிப் போடலாம் என்று எழுதத் துவங்கிய நான், இப்போது இந்த தனித்துவ குணத்தை இழந்து, இலக்கியத்தில் தடம் பதித்த எனது முன்னோர்களையும் பின்னோர்களையும், அவர்களின் சமூகச் சேர்மானத்தோடு நினைத்து, என்னை, ஒப்பிட்டுக் கொள்கிறேன். எனது இலக்கியப் பங்கு கணிசமானது. சமூக அளவில் கண்ணுக்கு தெரியாத மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும், ஒர் மார்க்ஸிம் கார்கியின் 'தாயை'ப் போல சமூகத்தில் தடம் பதிக்கவில்லை. இதற்கு நான் மட்டுமல்ல, இந்த சமூக அமைப்பும் காரணம்.

     இந்த நாவல், எனது நாவல்களிலேயே இன்றளவும் அதிகமாகப் பேசப்படுகிறது. இதற்கு இணையாக எனது 'வாடாமல்லி' இப்போது பேசப்பட்டாலும், இந்தப் படைப்பு, இந்த நாவலின் வயதளவிற்கு வரும்போது பேசப்படுமா என்பது புதிர்தான். 'ஒரு கோர்ட்டுக்கு வெளியே'யின் சிறப்பு, எந்தப் பத்திரிகையிலும் தொடர்கதையாக வெளிவராமல், நேரடியாக எழுதப்பட்டது என்பதுதான். என்ன காரணத்தினாலோ, பதிப்பாளர்கள், இந்த நாவலை நூலகங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், இந்த நாவலைப் போன்ற தாக்கத்தை, எந்த நாவலும் இந்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.

நாவல் கௌரவங்கள்

     அந்தக் காலக்கட்டத்தில், இந்தப் படைப்பைப் பற்றி விமர்சிக்காத பத்திரிகைகளோ, இலக்கிய அரங்குகளோ இல்லை என்று கூட சொல்லலாம். பிரபலம் இல்லாதவர்களாக இருந்தாலும் இலக்கியவாதிகள் என்று கருதப்படுபவர்களின் படைப்புகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், இந்த நாவலையும் எடுத்துக் கொண்டது. இதுவே இதன் முதலாவது கௌரவமாக கிடைத்தது.

     சென்னை வானொலி நிலையத்தில், எழுத்தாளர் பாண்டியராசனால் நாடக வடிவம் பெற்ற இந்த நாவல், இப்போது நிலைய இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் கணேசன் அவர்களின் தயாரிப்பில், அப்போதைய நிலைய இயக்குநரான கவிஞர் துறைவன் அவர்களின் மேற்பார்வையில் ஒலிபரப்பானது. பின்னர் இந்த நாடகம் அகில இந்திய வானொலியில் பதினான்கு மொழிகளில் ஒலிபரப்பானது. இதோடு, 'நேசனல் புக் டிரஸ்ட்' என்ற மத்திய அரசு சார்ந்த வெளியீட்டு நிறுவனம் சார்பில் பதினான்கு மொழிகளில் வெளியிடப்படுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் இந்தி மொழி வடிவம், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இலக்கியவாதியான திருமதி. விஜயலட்சுமி சுந்தரராஜன் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இப்போது தெலுங்கிலும், மராத்தியிலும் வெளிவந்திருப்பதாக யூகிக்கிறேன். ஆனால், அந்த அலுவலகம் சென்று, பல தடவை கேட்டாலும் ஒரு தடவை கூட, 'ஆம்' 'இல்லை' என்ற பதில் இல்லை. இதுதான் அரசு சார்புள்ள இலக்கிய நிறுவனங்கள் நடந்து கொள்ளும் லட்சணம்.

இலக்கிய திருப்பு முனைகள்

     இந்த நாவல் எழுதப்பட்ட போதும், வெளியான போதும், இலக்கிய உலகில் எனக்கு ஒரு சில திருப்பு முனைகள் ஏற்பட்டன. இந்த நாவலை நான் எழுதும் போது, கண்ணீர் விட்டு, படுக்கையில் குப்புறப்படுத்து அழுதிருக்கிறேன். இத்தகைய அனுபவம் என்னுடைய ஆத்மார்த்த குருவான 'லியோ டால்ஸ்டாய்க்கு' எற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

     இரண்டாவதாக, இந்த நாவலை, சென்னை வானொலியில் விமர்சித்த பிரபல இடதுசாரி சிந்தனையாளரும், இலக்கியவாதியுமான காலஞ்சென்ற ஆர்.கே. கண்ணன் அவர்கள், மிகவும் பாராட்டினார். கூடவே, ஒரு இலக்கியக் கருத்தை என்னுள் பதிய வைத்தார். "ஒரு படைப்பில், ஓர் அளவிற்கு எழுத்தாளன் பாத்திரங்களைப் படைக்கிறான். பின்னர் அந்தப் பாத்திரங்களே அவன் எழுத்தைப் படைக்கின்றன" என்றார். இது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து. என் அளவில் அனுபவமாக நேர்ந்தாலும், இந்தக் கருத்து விவாதத்திற்குரியது.

     நான்காவதாக, இந்த நாவலை, ஒரு பிரபல இலக்கிய அமைப்பின் பரிசிற்காக எழுதினேன். 1950-களில் தோன்றிய 'தேசிய முழக்கம்' என்ற வார இதழின் ஆசிரியர்களில் ஒருவரும், எனது கல்லூரிக்கால சிந்தனையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவரும் உலக இலக்கியத்தை கரைத்துக் குடித்தவரும், ஸ்ரீராமுலு என்ற பெயரை நாட்டுப் பற்றின் உந்துதலால், 'பகத்சிங்' என்று மாற்றிக் கொண்டவருமான, காலஞ்சென்ற என் இனிய மூத்த தோழரிடம் படித்துக் காட்டுவதற்காக, அவர் வாழ்ந்த புரசைவாக்கத்திற்கு, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு தடவையாகப் போவேன். அவர், இவற்றைப் படித்துவிட்டு, இடையிடையே 'பிரமாதம்' 'அய்யய்யோ...' 'அச்சச்சோ...' என்று தன்னை அறியாமலேயே, தன்பாட்டுக்கு பேசுவதும், மீண்டும் நிறுத்தியதை வாசிப்பதுமாகவும் இருப்பார். எனக்கு கிடைத்த அளவுக்கு மேலாக, அந்த சிந்தனையாளருக்கு ஒரு வாசக அனுபவம் கிடைத்தது கண்டு வியந்து போனேன், மெய்சிலிர்த்தேன். இந்த படைப்பை, டைப் அடித்த அகில இந்திய வானொலியில் பணியாற்றிய என் இனிய தோழரும் இலக்கியவாதியுமான தோழர் ஜெயராமன், 'இந்த மாதிரி நாவலை நான் படிக்கல சார்' என்றார். டைப் அடித்த கட்டணத்தையும் வாங்க மறுத்தார். என்றாலும், இந்த நாவல், அந்த இலக்கிய அமைப்பின் பரிசைப் பெறவில்லை. இது கூடப் பெரிதில்லை. ஆனால், இதே அமைப்பு, முந்தைய ஆண்டு நிராகரித்த ஒரு நாவல் கைப்பிரதிக்கு, மறு ஆண்டு பரிசளித்தது. கேட்டால், 'அது வரைவு - இது அச்சு' என்று உப்பு சப்பில்லாமல் பதிலளித்தது.

     இதே போல், எனது இலக்கிய ஆசான் கவிஞர் துறைவன் அவர்கள், கல்கத்தாவில் அகில இந்திய வானொலியின் தலைமை இணை இயக்குநராக பணியாற்றியபோது, இந்த நாவலை என்னிடம் கேட்க, நான் கொடுக்காமல் போக, உடனே அவர், சென்னை தொலைக்காட்சி நிலையத்திலிருந்து இயக்குநராக ஓய்வு பெற்ற என் இனிய நண்பர் நடராசன் அவர்கள் மூலமாக, இந்த நாவலை கல்கத்தாவிற்குத் தருவித்து, ஒரு முக்கியமான வங்காள இலக்கிய அமைப்பிடம் சமர்ப்பித்தார். ஆனாலும், நடுவர்கள், 'ஒரு வயதான எழுத்தாளரின் வாழ்நாள் குறைவாக இருப்பதால், அவருடைய படைப்புக்குப் பரிசு கொடுக்கலாம் என்றும், இளைஞனான நான் காத்திருக்கலாம்' என்றும், படைப்பை விட, படைப்பாளிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று கவிஞர் துறைவன் அவர்களே என்னிடம் தெரிவித்தார். இதில் தவறில்லைதான். நானே நடுவராக இப்படி செய்திருக்கிறேன். ஆனாலும், பரிசுகள் படைப்புகளுக்காக மட்டும் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை எந்த அமைப்பிற்கும் நான் எனது நூல்களை அனுப்புவதில்லை. ஒரே ஒரு தடவை எனது பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுப்பை அனுப்பி, 'ஸ்டேட் வங்கி' எனக்குப் பரிசளித்தது. நான் எழுதிய 'லியோ டால்ஸ்டாய்' நாடகத்தை, சோவியத் விருதுக்காக அனுப்பச் சொன்னார்கள், நான் மறுத்துவிட்டேன். பின்னர், இடதுசாரி இலக்கியத்தின் மூத்தத் தோழர்களான விஜயபாஸ்கரன், கவிஞர். கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் இவற்றை பதிப்பகத்திடமிருந்து வாங்கி அனுப்பி வைத்தார்கள். நான் எதிர்பார்த்தது போல், இங்கிருந்து நடுவராக மாஸ்கோ சென்ற, ஒரு இடதுசாரி எழுத்தாள சகுனி, அதற்கு பரிசு வராமல் பார்த்துக் கொண்டார். ஆகவே, பரிசுக்காக படைப்புகளை அனுப்புவதில்லை என்று 1970-களில் நான் மேற்கொண்ட முடிவை இன்றளவும் பற்றி நிற்கிறேன்.

இன்ப அதிர்ச்சிகள்...

     இந்த நாவல், எனக்கு வழங்கிய பல இன்ப அதிர்ச்சிகளில் முக்கியமாக இரண்டைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதுதில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்ட்' அலுவலகம் சென்று, இந்திப் பதிப்பு ஆசிரியர் தியோ சங்கர் ஜா (Deo Shankar Jha) அவர்களை தேடிப் பிடித்து, என்னை அறிமுகம் செய்து கொண்டேன். உடனே அவர், 'உலகம்மா' என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். பல்வேறு இந்திப் பத்திரிகைகளில், இந்த நாவல் விமர்சிக்கப்பட்டதாகவும், புதுதில்லியில் எழுத்தாளர்கள் மத்தியில் இதற்காக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். செல்லும் இடமெல்லாம் கிராமப் பெண்களுக்கு, உலகம்மையின் போராட்டத்தைப் பற்றி தான் தெரியப்படுத்துவதாக தெரிவித்தார். என்றாலும், இந்த நிறுவனம் வெளியிட்ட 'மிகச் சிறந்த தமிழ் நாவல்கள்' என்ற நூலில், இந்த நாவல் இல்லை என்று அறிகிறேன். அந்த நிறுவனத்தில் உள்ள தமிழ் பிரதிநிதி யாராக இருந்தாலும், அவரை கைக்குள் போட்டுக் கொள்வது, 'நம்மவர்'களுக்கு கைவந்த கலை.

     இரண்டாவது இன்ப அதிர்ச்சியாக, இப்போது சன் டி.வி.யில் 'அண்ணாமலை' தொடரில் சக்கைபோடு போடும் தோழர் பொன்வண்ணனை, ஒரு தோழர் எனக்கு சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே அவர், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தான் படித்த இந்த நாவலை அப்படியே ஒப்பித்தார். இதற்கு திரைக்கதை எழுதி வைத்ததாகவும் தெரிவித்தார். பொன்வண்ணனே சிறந்த எழுத்தாளர். 'ஜமீலா' என்ற அற்புதமான கலைவழி திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர். அவருக்கு நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி சொன்னேன்.

     அன்று முதல் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்த நாவலைத் திரைப்படமாக்க அந்தத் துறையினர் கொடுத்த முன் தொகைகள், ஒரு திரைப்படக் கதாசிரியருக்குக் கிடைத்திருக்கக் கூடிய பணத்தை விட அதிகம். ஆனாலும், பலர் இதில் சாதி வருகிறது என்றும், கணிசமான காதல் இல்லை என்றும் இடையில் விட்டதுண்டு. அதே சமயம், சில பகுதிகளை அங்குமிங்குமாகத் திருடிப் பல படங்களில் சேர்த்துக் கொண்டதுமுண்டு. 'எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும், ஏட்டையா மாரிமுத்துகிட்ட எளநி குடிச்சதுக்கும் என்ன எசமான் வித்தியாசம்' என்று உலகம்மை, ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்ட துணிவான கேள்வியை, பல்வேறு திரைப்படங்களில் உரையாடல்களாக அடிக்கடி கேட்டதுண்டு. உடனே, இந்த உரையாடல்களை நான் தான் திருடியிருப்பேனோ என்று இந்த நாவலைப் படித்த வாசகர்கள் கூட சந்தேகப்பட்டிருக்கலாம்.

மாறிய வடிவம் - மாறாத காரணிகள்

     இப்போது இந்த நாவலைப் படிக்கும் வாசர்களுக்கும், நான் சுட்டிக்காட்டும் குட்டாம்பட்டியைப் போன்ற ஒரு பட்டி இந்தக் காலத்தில் இருக்குமா என்று நியாயமான சந்தேகம் எழலாம். கிராமங்களின் வடிவம் மாறியிருப்பது உண்மைதான். வீடியோ, ஆடியோ கலாசாரத்தில் மண்வாசனை வார்த்தைகள், மண்ணோடு மண்ணாகின. 'அண்ணாச்சி' என்ற வார்த்தை 'அண்ணே' என்றாகிவிட்டது. 'மயினி' என்ற வார்த்தை 'அண்ணி'யாகிவிட்டது. அம்மன் விழாக்களில் கூட, வீடியோ ஆடியோ படங்களே அதிக நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. 'சாமியாடி'களுக்கு, இட ஒதுக்கீடும், நேர ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. முன்பிருந்த 'கமலை'யும் 'எருவண்டி'யும் 'மேவுக்கட்டை'யும், இன்றைய கிராமத்து இளைஞர்கள் கண்ணால் பாராதவை. மாட்டுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவுகள் கூட அற்றுப் போய்விட்டன. ஆனாலும், இந்த நவீன கிராமங்களில் கட்டைப் பஞ்சாயத்து, தீண்டாமை, காவல்துறை மாமூல், கள்ளச்சாராயம், சாதி சண்டைகள் இன்றும் கொடி கட்டிப் பறக்கத்தான் செய்கின்றன. வகுப்புகளை கொண்ட இந்த தமிழ்ச் சமூகத்தை, வர்க்கப் படுத்த வேண்டும் என்று இந்த நாவல் சொல்லாமல் சொல்வதற்கு, இன்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. ஆகையால் இந்த நாவல், இப்போதும் தேவைப்படுகிறது.

தலித்திய விதைகள்

     இந்த நாவலைப் பற்றி, ஓராண்டுக்கு முன்பு, என்னிடம் பேசிய யாழ்ப்பாணத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள், 'பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே' படைப்பில் தலித்திய விதைகள் அப்போதே ஊன்றப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். உண்மைதான்! தலித்துகளைப் பற்றி தலித்துகள் மட்டுமே எழுத வேண்டும் என்று இன்று பேசுகிறவர்கள், பிறப்பதற்கு முன்பே, அதிரடி தலித்தியமாக, யதார்த்தம் குறையாமல் வெளியான நாவல் இது. என்றாலும், பேராசிரியர் சிவத்தம்பி உள்ளிட்ட திறனாய்வாளர்கள் கூட, வாயால் இப்படி சொல்வார்களே தவிர, இலக்கியப்பதிவு என்று வரும்போது எழுத மாட்டார்கள். இதுதான் நமது விமர்சனத்தை பிடித்திருக்கும் குணப்படுத்த முடியுமா என்று நினைக்க வைக்கும் ஒரு நோய்.

     இந்த நாவலை, நான் எழுதினேன் என்று சொல்ல மாட்டேன். இளமையில் நான் பங்கு பெற்ற, கண்ட, கேட்ட விசாரித்த நிகழ்வுகளை ஒன்று திரட்டி ஆங்காங்கே கத்தரித்து கொடுத்திருக்கிறேன். இதன் மெய்யான ஆசிரியர்கள் கிராமத்தில் பாவப்பட்ட 'உலகம்மா' போன்ற பெண்கள். 'மாரிமுத்து' போன்ற பண்ணையார்கள். 'பலவேசம்' போன்ற போக்கிரிகள். 'நாராயணசாமி' போன்ற இயலா மனிதர்கள். 'அருணாசலம்' போன்ற தலித் இளைஞர்கள். மதில்மேல் பூனைகளான ஊரார்கள்.

     இன்று முரண்பட்டு மோதி நிற்கும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு, இந்த நாவல் துணையாய் நிற்கும் என்று நம்புகிறேன்.

     நல்லது... வாசகத் தோழர்களே! நாவலுக்குள் போய் வாருங்கள். இதில், கண்டதையும், காணமுடியாமல் போனதையும் இயலுமானால் ஒருவரி எழுதிப்போடுங்கள்.

சு. சமுத்திரம்





புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247