அய்யாவைச் சுமந்து...

     புள்ளினங்கள் ஆர்த்தெழுந்து, மாடு கனைத்து, மனித நடமாட்டம் துவங்கிய வேளையிலே, மீதமின்றி எடுக்காமல், மீதியென்று வைக்காமல், சரியாக வராமல், சமத்துவத்தையும் மறக்காமல், தன்னை நினைப்போர்க்கும் தன்னை நினைவூட்டி கனியாய் இருப்பதைப் புவி ஈர்ப்பால் இழுத்தும், காயாய் இருப்பதைக் காற்றால் முடித்தும் தனக்கென்றும் சாவில்லாத மரணதேவனின் மடியில் துயில் கொண்ட மாயாண்டியின் வாய் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தது.

     இப்போது அய்யாவைப் பயபக்தியோடு பார்த்துக் கும்பிட்டுக் கொண்டாள் உலகம்மை. பானையில் இருந்த நீரை எடுத்து வீட்டுக்குள்ளேயே முகத்தை அலம்பிவிட்டு, முந்தானைச் சேலையை முக்காடாகப் போட்டுக் கொண்டு ஊருக்குள் நுழைந்தாள். கிராம முன்சீப்பைப் பார்த்துவிட்டு, சேரியில் போய் சேதி சொல்லிவிட்டு, வருவதற்காகப் புறப்பட்டாள். நேராக முன்சீப் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

     வாசல் பக்கத்துத் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ ஒரு நோட்டுப் புத்தகத்தையோ அல்லது நமூனாவையோ கண்களால் குடைந்து கொண்டிருந்த கிராமத் தலையாரி, அவளைப் பார்த்ததும், குறுகை நிமிர்த்தியதோடு, "இங்க எதுக்கு வந்த?" என்று எரிந்து விழுந்தார். உலகம்மை, சாவகாசமாக, ஆவேசத்தை அடக்கிவைத்த நிதானத்துடன் கேட்டாள்:

     "யோவ் தலயாரி! முன்சீப்ப வரச் சொல்லுய்யா!"

     தலையாரி எழுந்தே விட்டார். ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும், சில சமயம் முன்சீப்பையும் 'எசமான்' என்று அழைக்கும் ஜனங்கள், தன்னை அப்படி அழைகக்வில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பவர் அவர். இருந்தாலும் இவளைப் போல் யாரும் அவரை, இதுவரை 'தலையாரி' என்று அழைத்ததில்லை - அதுவும் 'யோவ்' என்ற அடைமொழியுடன். அவருக்குக் கோபம் வார்த்தைகளாக வடிவெடுத்தது.

     "நீ ஒன்னப்பத்தி என்னதான் நினைச்சிக்கிட்ட? நான் யார்னு தெரியுமா?"

     "தெரிஞ்சிதாய்யா கேக்குறேன். நீரு கிராம ஜனங்களுக்கு ஒத்தாசை பண்றதுக்கு மட்டுமே இருக்கிற தலையாரி. முன்சீப் வீட்டுப் பால்மாட்டை கறக்கிறதுக்கு இருக்கிற பால்காரன் இல்ல!"

     முன்சீப் வீட்டு கறவை மாடுகளின் மடுக்களைத் தடவி விட்டுப் பழகிப் போன தலையாரி, அதிர்ந்து போனார். அருகே கிடந்த டவாலியை எடுத்துப் பூணூல் மாதிரி போட்டுக் கொண்டார்.

     "உலகம்மா நீ பேசுறது உனக்கே நல்லதா முடியாது!"

     "இப்பமட்டும் நல்லதா முடிஞ்சிட்டாக்கும்? மரியாதியா போயி முன்சீப்ப நான் சொன்னேன்னு கூட்டிக்கிட்டு வாரும். சீக்கிரமா போம். நீர் போறீரா இல்லியா? சரிசரி, வழிவிடும், நானே போறேன்."

     உலகம்மைக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்றும் அதற்குத் தான் பொறுப்பாகக் கூடாது என்றும் நினைத்து, தலையாரி உள்ளே போய், முன்சீப்பிடம், "நாயே பேயே" என்று வாங்கிக் கட்டிக் கொண்டார். வாங்கியதை உலகம்மையிடம் திருப்பிக் கொடுக்க ஓடோடி வந்தார்.

     "இப்ப அவரால் பார்க்க முடியாது! வந்த வழியப் பாத்து மரியாதியா போ. இல்லன்னா கழுத்தப் பிடிச்சித் தள்ளுவேன். இன்னும் ஒன் அடங்காப்பிடாரித்தனம் போவல பாரு!"

     "யோவ்! தள்ளிப் பாருய்யா பாக்கலாம்! ஒன்னத்தான் தலையாரி!"

     "என்னழா ஒன்னோட பெரிய இழவாப் போச்சி."

     உலகம்மை தலையாரியை ஒரு பொருட்டாக கருதவில்லை. வாசல்படியில் நின்றுகொண்டு, "கிராம முன்சீபு, சீக்கிரமா வாரும்! ஒம்மத்தாய்யா! உடனே வாரும்! வாரியரா? நான் வரட்டுமா? காது கேக்குதா, கேக்கலியா? யோவ் முன்சீப்" என்று ஊருக்குக் கேட்கும்படி கத்தினாள். இதைக் கேட்டு அக்கம்பக்கத்து ஆசாமிகள் கொஞ்சம் தொலைவில் வந்து நின்று கொண்டார்கள்.

     முன்சீப், முப்பத்திரெண்டு பற்களைக் கடித்துக் கொண்டும், வேட்டியை உடுத்துக் கொண்டும் வெளியே வந்தார். அவர் பெண்டு பிள்ளைகள் கூட, என்னமோ ஏதோ என்று நினைத்து, வாசலுக்கு உள்ளே நின்று கொண்டு, தலைகளை மட்டும் வெளியே நீட்டினார்கள். 'யோவ் முன்சீப்பா? செறுக்கி மவா பேசுறதப்பாரு.'

     கிராம முன்சீப்புக்குச் சொல்லமுடியாத கோபம்.

     "ஒனக்கு பைத்தியம் பிடிச்சுட்டா? கிராம முன்சீப்புன்னா ஒன் வீட்டுக் கிள்ளுக்கீரையா?"

     உலகம்மை சளைக்காமல் பதில் சொன்னாள்:

     "அப்டி நினைச்சா நான் வரவே மாட்டனே!"

     "எதுக்காவ வந்த? சட்டுப்புட்டுன்னு விஷயத்தச் சொல்லு."

     "எங்க அய்யா செத்துப் போயிட்டாரு. சொல்லிவிட்டுப் போவ வந்தேன்."

     கூடிநின்றவர்களும், முன்சீப்பும் திடுக்கிட்டார்கள். 'பாழாப்போற இந்த முண்டையால அந்த மனுஷன் கட்டயப் போட்டுட்டான். பிள்ள குலமழிச்சா பெத்தவன் என்ன செய்வான்? எல்லாம் இவளால, இவளால!'

     முன்சீப் கடுமையாகக் கேட்டார். 'எப்படிச் செத்தார்?' என்று சகஜ பாவத்துடன் வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, அதட்டிக் கொண்டு கேட்டார்:

     "உன்னோட அப்பன் செத்தா என்கிட்ட எதுக்கு வந்த? ஊரே தள்ளி வச்சிருக்கயில என்கிட்ட எதுக்காவ வந்த? நான் என்ன வெட்டியானா?"

     உலகம்மை, அவரைப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு பேசினாள்:

     "ஒம்ம வெறும் குட்டாம்பட்டிக்காரரா நெனச்சி வரலய்யா. நீரு இந்த ஊருக்கு முன்சீப்பு! சர்க்கார்ல சம்பளம் வாங்குற வேலக்காரன்! நாங்க ஏவுற வேலயச் செய்யுறதுக்கு இருக்கிற உத்தியோகஸ்தன்! கிராமத்துல நடக்கிற நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயி மாதிரி இருக்க வேண்டிய சர்க்கார் ஆளு. அதுக்காவத்தான் இங்க வந்தேன்! எங்கய்யா செத்துப் போயிட்டாரு! நாளக்கி மாரிமுத்தோ, பலவேசமோ நான் தான் எங்கய்யாவ அடிச்சிக் கொன்னுட்டேன்னு போலீஸ்ல கூடச் சொல்லலாம்! அதனால் நீரு வந்து பாத்து சந்தேகத்தப் போக்கணும்! அதுக்காவத்தான் வந்தேன்."

     முன்சீப்பின் மீசை, அறுந்து விழுந்து போவது போல் துடித்தது. உலகம்மை சொல்வது உண்மையாக இருந்ததால், அவரால் கோபப்படாமலும், கோபமாகப் பேசாமலும் இருக்க முடியவில்லை.

     "என்னமோ சொன்னான் கதையில, 'எலி ரவிக்க கேட்குதாம் சபையில' என்கிற மாதிரி, அப்பனப் பறிகொடுத்தாலும், ஒன் திமிரு அடங்கல! நான் வரமுடியாது! ஒன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க. ஊரு ஒன்னத் தள்ளி வச்சது மாதிரி என்னயும் தள்ளி வைக்கணுமா என்ன? போ போ."

     முன்சீப் வீட்டுக்குள் போகப் போனார். உலகம்மை, விடுவிடென்று விட்டாள்:

     "போணுமுன்னா போம்! அதுக்குள்ள, நான் சொல்றத கேட்டுட்டுப் போம். நீரு சர்க்கார் உத்தியோகஸ்தர். மாரிமுத்துவோட பெரிய்யா மவனுல்ல! நான் ஊர்ல தள்ளி வச்ச உலக்கம்மையல்ல! வரி கட்டுற பொம்பள! ஒமக்குத் தள்ளி வச்ச விவகாரத்துல சம்பந்தப்பட்ட அதிகாரம் கிடையாது. இன்னுஞ் சொன்னா, அதத் தீர்த்து வச்சிருக்கணும்! போவட்டும். தள்ளி வச்ச ஊருகூட நீரு சேருறதா இருந்தா, போம்! ஆனால் உத்தியோகத்துல இருந்து ஒம்மத் தள்ளி வைக்கத பாராம ஓயமாட்டேன்! இது சத்தியமான வார்த்த! நேரா அருணாசலத்தோட கலெக்டர்கிட்ட போவப் போறேன்! அப்புறம் வருத்தப்படக் கூடாது! என்ன சொல்றீரு? ஒம்மோட கடமயத்தான் நான் செய்யச் சொல்றேன்! என்ன சொல்றீர்? முன்சீப் அய்யா, வாரீரா? போவலாம்!"

     முன்சீப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை. வாசலில் மிதித்த காலை உள்ளேயும் கொண்டு போக முடியவில்லை; வெளியேயும் இழுக்க முடியவில்லை. 'அருணாசலம் பயலோட இந்த மூளி சேந்துக்கிட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டா, உத்தியோகம் போயிட்டா, நாயி கூட திரும்பிப் பாக்காது. என்ன பண்ணலாம்?'

     உலகம்மை சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு "சரி ஒம்மிஷ்டம். இன்னும் கால் மணி நேரம் வர பாப்பேன்! அதுக்குள்ள வரலன்னா வருத்தப்படக் கூடாது" என்று சொல்லிக் கொண்டே, நிதானமாகத் திரும்பி வேகமாக நடந்தாள். உணர்ச்சி வேகத்தில் சேரிப்பக்கம் போகவில்லை. அதோடு முன்சீப் வரும்போது, அருணாசலம் வந்தால் கைகலப்பே ஏற்படலாம் என்று அவள் நினைத்ததும் ஒரு காரணம். வீட்டிற்கு வந்து, அய்யாவின் வேட்டியைச் சரிப்படுத்தினாள். வெளியே போய், இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து, அய்யாவின் நெஞ்சில் வைத்து விட்டு, பின்னர் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, முட்டுக்கால் போட்டு அதற்குள் தலையை வைத்துக் கொண்டு, முடங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

     'என்ன பண்ணலாம்' என்று யோசித்துக் கொண்டும், எல்லாரும் தன்னை, தான் கொண்ட முன்ஸீப் உத்தியோகத்தைப் பெரிதாக நினைத்து, எஜமானனாக நினைக்கையில், 'ஒரு எச்சிக்கலப்பய மவா, வந்தட்டிப்பய பொண்ணுகிட்ட, வேலைக்காரன் மாதிரி போவ வேண்டியதிருக்கே' என்று முன்ஸீப் முனங்கிக் கொண்டிருக்கையில், சுற்றி நின்ற கூட்டத்தில் ஒருவர், "அவா சொல்றது மாதிரி நீரு எல்லாத்துக்கும் பொதுவான மனுஷன். போயிட்டு வாரும்" என்று உபதேசம் செய்தார்.

     முன்ஸீப்பும் "அதெப்படி?" என்று சொல்லிக் கொண்டே, கூட்டத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, பெரிய மனது பண்ணிப் போவதாகப் போக்குக் காட்டிக் கொண்டு புறப்பட்டார். புறப்பட்டவருக்கு, தனியாகப் போகப்பயம். இன்னொரு உத்தியோகஸ்தரான கணக்கப்பிள்ளையைத் தேடியலைந்து கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து, நழுவப்போன கர்ணத்திடம், உலகம்மை பாணியில் பேசி, நண்டுப்பிடி போட்டுப் பிடித்துக் கொண்டார். இருவரும் ஓட்டுக்கணக்கில் லயித்திருந்த பஞ்சாயத்துத் தலைவரையும், பலவந்தமில்லாமல் சேர்த்துக் கொண்டு, கால எமதூதன் போல் போனார்கள்.

     தலைவர்கள் தலைதெறிக்கப் போவதைப் பார்த்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மக்களும், ஒன்றாகத் திரண்டு, அவர்கள் பின்னால் போனார்கள். பின்னால் போனவர்கள் பிறகு முன்னால் போய், தலைவர்கள் தோட்டச்சுவரில் ஏற முடியாததை உணர்ந்து கொண்டு உலகம்மையின் வீட்டுக்குக் கிழக்கே இருந்த 'செருவையை' இடித்து நொறுக்கி, தலைவர்களுக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். பிறகு, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டார்கள்.

     மூன்று தலைவர்களும், உலகம்மையின் குடிசைக்குப் போனார்கள். மாயாண்டியை உற்றுப் பார்த்தார்கள். கணக்கப்பிள்ளை மட்டும், 'சிவ சிவா' என்று சொல்லிக் கொண்டு, அவர்களைப் பார்த்தும் எழுந்திருக்காமல், மூலையோடு மூலையாகச் சாய்ந்து கிடந்த உலகம்மையை நோட்டம் விட்டுக் கொண்டார். கிராம முன்சீப், தான் உலகம்மைக்கு ஒன்றும் வேலைக்காரன் இல்லை, ஒரு முன்சீப் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில், பிரேத விசாரணைக்கு வந்திருப்பவர் போல், அதட்டிக் கொண்டார்:

     "உலகம்மா! அய்யா எப்படிச் செத்தார்? எப்போ செத்தார்?"

     உலகம்மை உட்கார்ந்து கொண்டே பதில் சொன்னாள்:

     "நான் சாயங்காலம் வந்து பாத்தா செத்துக் கிடந்தார். அவரு சாவும்போது பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேன்! எதுக்கும் ஐவராசாவ கேட்டுப் பாருங்க. அவரு, ஒரு வேள மாரிமுத்து நாடாரக் கேக்கச் சொல்லுவாரு."

     நெடிய மவுனம். பயங்கரமான சத்தத்தையும் உறைய வைக்கும் அசுரத்தனமான மௌனம். இறுதியில் தலைவர்கள் மூவரும், தங்களுக்குள் முனங்கிக் கொண்டார்கள். உலகம்மை வெடித்தாள்:

     "அய்யா செத்ததுல திருப்திதான? சந்தேகம் இருந்தா தென்காசி ஆஸ்பத்திரில வேணுமுன்னாலும் அவர அறுத்துப் பாத்து சந்தேகத்த அறிஞ்சுக்கிடுங்க. எனக்குச் சம்மதந்தான். உயிரோட இருக்கையிலே அறுத்திங்க! இனுமே செத்த பிறகும் அறுக்கதுல கவலயில்ல!"

     கணக்கப்பிள்ளையால் கையைக் கட்டிக் கொண்டோ, வாயைக் கட்டிக் கொண்டோ இருக்க முடியவில்லை.

     "என்ன பொண்ணு நீ, அகராதி பிடிச்சிப் பேசுற? நாங்களும் மனுஷங்கதான்."

     "ஓ நீங்க மனுஷங்க தான்" என்று உதட்டைப் பிதுக்கினாள் உலகம்மை.

     இதற்குள், "பொம்புளகிட்ட என்ன பேச்சி? பிணத்த அப்புறப்படுத்துற வேலயப் பாக்காம?" என்று பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக் கொண்டே வெளியே போனார். அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் வெளியே வந்தார்கள்.

     தலைவர்களின் சமிக்ஞைக்குக் காத்துக் கிடந்த கூட்டத்தினர், பஞ்சாயத்துத் தலைவர், "பிணத்தத் தூக்க வாங்க"ன்னு சத்தம் போட்டதும், திபுதிபென்று ஓடி வந்தார்கள். உலகம்மை வீட்டுக்குள் நுழையப் போனார்கள். மூலையில் சாய்ந்திருந்த உலகம்மை, முயல்குட்டி போல் துள்ளிக் கொண்டு எழுந்து, வாசலை மறித்துக் கொண்டு நின்றாள்.

     "யாரும் என் வாசலுக்குள்ள நுழயக் கூடாது! நீங்க என்னிக்கி எங்களத் தள்ளி வச்சியளோ, அன்னிக்கே ஒங்கள நான் தள்ளி வச்சிட்டேன்! எங்கய்யா உயிரோட இருக்கையில தொடாதவங்க இப்ப எதுக்குத் தொடணும்? யாரும் தொடப்படாது. கொலைகாரங்களே, குத்திப் போட்ட ஆள தூக்கினா எப்டி? யாரும் நுழையப்படாது. அவரு கால்ல விழாத குறையா கெஞ்சையில அவர உயிரோட கொன்ன ஜனங்க! அவரு பொணமான பிறவு வரவேண்டியதில்ல! அடச்சிப் போட்டுக் கொன்ன ஜனங்க! இப்ப பூமியில அடச்சிப்போட வந்தியளாக்கும்? அவரு உயிரக் கொன்ன ஆச தீராம, ஒடம்பையும் கொல்ல வந்தியளாக்கும்? யாரும் வரப்படாது! எங்கய்யாவ எப்டி அடக்கம் பண்ணணுமுன்னு எனக்குத் தெரியும்."

     நுழையப் போன கூட்டம், தயங்கி நின்று, தலைவர்களின் முகங்களைப் பார்த்தது. கணக்கப்பிள்ளை ஆணையிட்டார்:

     "ஏய்யா பாத்துக்கிட்டு நிக்கிய? ஊர்ல பொணம் கிடந்தா எப்டி? வீட்டில அழுவுற பொணம் ஊர்ள நாறணுமா? பொம்புள அதுலயும் இவா அடங்காப்பிடாரி! அப்படித்தான் பேசுவா. கழுத்தப் பிடிச்சித் தள்ளிவிட்டு உள்ள நுழையுங்கப்பா? நீங்களும் பொணம் மாதிரி நின்னா எப்டி? உம் ஜல்தி."

     கூட்டத்தினர் மீண்டும் நுழையப் போனார்கள். உலகம்மை இரு கைகளையும் இரண்டு பக்கமும் அகலமாக விரித்து வாசலை அடைத்தாள்.

     "யாரும் நுழையப்படாது! மருவாதியோடப் போங்க! இது ஊருல்ல. என்னோட வீடு! நீங்க தள்ளிவச்ச வீடு! அப்டி நுழைஞ்சிங்கன்னா என் உயிர இப்பவே இந்த நொடியிலயே மாய்ச்சிடுவேன்! பாழாப்போன உயிரு போகலன்னா, நேரா கலெக்டர் கிட்ட போயி நீங்க எப்டி எப்டி அவரச் சித்ரவத பண்ணிக் கொன்னிங்கன்னு சொல்லிடுவேன்! ஏய்யா ரோஷங்கெட்டு நுழையுறிங்க? பொணத்த நாறாமப் பாக்க வேண்டியது என் பொறுப்பு! நீங்க ஒண்ணும் பயப்படாண்டாம்! போங்கய்யா, கோடி நமஸ்காரம்! போங்கய்யா, நல்ல மாட்டுக்கு ஒரே அடி, நல்ல மனுஷக்கு ஒரே சொல்லுதான்! போங்கய்யா வேலயப் பாத்துக்கிட்டு! ஒங்கள யாருய்யா வெத்தல பாக்கு வச்சி அழச்சது?"

     கூட்டம் இப்போது தலைவர்கள் ஆணையை எதிர்பார்க்காமலே பின்வாங்கியது. "இவ்வளவு இருந்தும் இவா திமிரு அடங்கல பாரேன்!" என்று ஒருசிலர் முணுமுணுக்க, பலர் அதற்குப் பதிலளிக்காமலே நகர, ஆணும், பெண்ணுமாக நிறைந்த கூட்டத்தில் அத்தனை பேரும், கிழக்குப் பக்கம் வந்து, தங்கள் 'மாஜி' இடத்தில் நின்று கொண்டார்கள்.

     உலகம்மை, ஆவேசப்பட்டாள். ஐவராசாவையும், பஞ்சாட்சர ஆசாரியையும், பலவேச நாடாரையும், ராமையாத் தேவரையும், ராமநாதன் செட்டியாரையும், பீடி ஏஜெண்ட் ராமசாமியையும், கூட்டத்தில் பார்த்த அவளிடம் அடங்கிக் கிடந்த அணுசக்தி ஆவேச சக்தியாகியது. அய்யாவை மயானத்திற்கு எப்படித் தூக்கிக் கொண்டு போகலாம் என்று சிறிது யோசித்தாள். மல்லாந்து கிடக்கும் கட்டிலில், மல்லாந்து கிடக்கும் அய்யாவை, உயிரற்ற அந்தச் சடலத்தை அப்படியே அந்த உயிருள்ள சடலத்தால் தூக்க முடியாதுதான்.

     உலகம்மை யோசித்தாள். ஒரே நொடியில் விடை கிடைத்தது. விடை கிடைத்த வேகத்தில், தோண்டிப்பட்டைக் கயிற்றை, நாலைந்து துண்டுகளாக, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நறுக்கினாள். அய்யாவின் பிடரியில் ஒரு கையையும், கால்களுக்குள் ஒரு கையையும் அணையாகக் கொடுத்து, அவரைத் தூக்கி தரையில் வைத்தாள். பிறகு கட்டிலைப் பக்கவாட்டில் சாய்த்தாள். பிறகு யோசித்துவிட்டு, மீண்டும் 'மல்லாக்க'ப் போட்டாள். சடலத்தை, குழந்தையைத் தூக்குவது மாதிரி கட்டிலின் மத்திய இடத்தில் வைத்தாள். பின்னர் இரு கைகளையும், இரண்டு கட்டில் கால்களிலும் வைத்துக் கட்டினாள். கால்கள் இரண்டையும், ஒன்றோடொன்றுச் சேர்த்துக் கட்டி, பின்பு அதைக் கட்டில் 'சட்டத்தில்' கட்டினாள். கழுத்தைச் சுற்றிக் கயிற்றைப் போட்டு, அந்தக் கயிற்றை, கட்டிலின் கயிற்று வலைகளுக்கிடையே 'கண்கண்ணாக' இருந்த ஒரு ஓட்டைக்குள் விட்டு, பின்னர் அந்தக் கட்டிலின் மேல் 'சட்டத்திற்கு'க் கொண்டு வந்து கட்டினாள். இதே போல் இடுப்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதைக் கீழே இருக்கும் சட்டத்தோடும், மார்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதை மேல் இருக்கும் சட்டத்தோடும் பின்னினாள். கயிறு போதவில்லை. 'உரிக்கயிற்றை' அறுத்து, அதை இரண்டு துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டையும் வலது தோளுக்கும் இடது காலுக்கும் - இடது தோளுக்கும் வலது காலுக்கும் குறுக்காகப் போட்டு, அவற்றைக் கட்டிலின் பின்புறமாகக் கொண்டு வந்து, சட்டங்களில் நாலைந்து தடவை சுற்றிக் காட்டினாள். பின்னர், கட்டிலை பக்கவாட்டில் சாய்த்து, மேல் சட்டத்தை வலது கைக்குள் வைத்துத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வெளியே வந்தாள். மாயாண்டி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் மாதிரி காட்சியளித்தார்.

     வெளியே வந்ததும், கூட்டத்தை ஒரு தடவை இளக்காரமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கட்டிலின் சட்டத்தின் மத்தியப் பகுதியை, ஓரடி இடைவெளியில் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கி, முதுகில் சாய்வாக வைத்துக் கொண்டு நடந்தாள். முதுகுப் பக்கம் 'தொட்டிலைக்' கட்டி அதில் குழந்தையை வைத்துச் செல்லும் மலைஜாதிப் பெண் போல், அய்யாவை கட்டிக் கொண்டிருந்த அந்த கட்டிலை, அனாசியமாகவும், அலட்சியமாகவும் தூக்கிக் கொண்டு போனாள்.

     கூட்டத்திற்கு என்னவோ போலிருந்தது. இறந்து போன அய்யாவையும், இறக்காமல் இருக்கும் மாமியாரையும் நினைத்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருந்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். சில பெண்கள், உண்மையிலேயே கலங்கிப் போயிருந்தார்கள். இன்னும் சில பெண்கள், குறிப்பாகப் பிராந்தனை, அவள் சார்பில் அடிக்கப் போன சக கூலிக்காரிகள், வாய்விட்டே அழுதார்கள். உலகம்மையின் மாஜி பீடிக்கடை தோழிகள் கூட கண்களைத் துடைத்துக் கொண்டு, கழுவாய் தேடினார்கள். சரோசா கூட அங்கே இருப்பது போல் தெரிந்தது.

     பெண்கள் கூட்டம் இப்படி என்றால், ஆண்கள் கூட்டமும் அப்படித்தான். ஒவ்வொருவரும், குறிப்பாகப் பஞ்சாட்சர ஆசாரி, ஐவராசா, ராமையாத்தேவர் முதலியோர் பின்னால் இருத்திக் கட்டப்பட்ட சடலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். மிரட்டும் கண்களோடு, லேசாகச் சிரித்துக் கொண்டிருப்பது போல் இருந்த மாயாண்டி, அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்ப்பது போல் தெரிந்தது. 'இரு இரு ஒன்னக் கவனிச்சுக்கிறேன்' என்று ஒவ்வொருவரையும் அவர் சொல்லாமல் சொல்வது போல் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டத்தில் இருந்த ஐவராசா மயக்கம் போட்டு விழுந்ததால், அவருக்குத் துண்டை எடுத்து ஒருவர் வீசிக் கொண்டிருந்தார்.

     இந்த அமளிக்குள்ளும் அல்லது அமளியில்லாத அந்த நிசப்தத்திலும் பலவேசம், "பொம்புளக்கி இவ்வளவு பிடிவாதம் ஆவாது! சொல்றத கேக்காமப் போனா எப்டி? இவ்ளவு வீம்பு பிடிக்கவா ஊர்ச் சுடுகாட்டுலயும் பொணத்த அடக்கம் பண்ணப்படாது!" என்று இரைந்து பேசினார். யாரும் அவர் பேசியதை ஒட்டியோ வெட்டியோ பேசவில்லை.

     உலகம்மை மௌனமாக நடந்து போனாள். கண்ணீர் சிந்தாமல் நடந்தாள். 'என் மவா நடந்து போற தூசியில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடான்னு' அய்யா சொன்னதாக மலேயாக்காரர் சொன்னதை நினைத்துக் கொண்டு, கூட்டத்தைத் தூசியாகக் கருதிக் கொண்டு சென்றாள்.

     அத்தனை வேதனையிலும், மலேயாக்காரர் இருக்கிறாரா என்று பார்த்தாள். அந்த யோக்கியனும் இல்லை. மாரிமுத்து நாடாரும் அங்கே இல்லை. பெற்றவனைக் குழந்தையாக்கி, அந்தக் குழந்தை, பெற்றவளைப் போல் நடந்தது. தொட்டிலில் போட்டு கண்குளிரப் பார்த்தவனை, கட்டிலில் கட்டி, அவள் நடந்தாள். தூக்கி வைத்துச் சிரித்தவனைத் தூக்கிக்கொண்டு அவள் துக்கத்தையும் சுமந்து கொண்டு போனாள். ஊரார் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றனர்.

     சில பெண்கள் சத்தம்போட்டே அழுதார்கள். "உலகம்மா! ஒனக்கா இந்த கதி?" என்று கதிகலங்கிப் போய் கதறினார்கள். உலகம்மை யாரையும் பார்க்காமல், எதையும் நோக்காமல், பற்றற்று துறவி போல், பளு தாங்கிய முதுகைக் காட்டிக் கொண்டே நடந்தாள். அய்யாவின் கனத்தை விட, நெஞ்சின் கனவே அதிகமாக இருந்தது.

     அவள் வெகுதூரம் நடந்திருக்க மாட்டாள். ஒரு புளிய மரத்திற்கருகே நின்ற சேரிக் கூட்டம் ஓடிவந்தது. 'இதற்குமேல் போனால் கைகலப்பு வரும்' என்று நினைத்துப் புளிய மரத்தை, 'எல்லைப் போஸ்டாக' நினைத்துக் கொண்டு அங்கே நின்ற சேரி ஜனங்கள், அவளை நோக்கி ஓடிவந்தார்கள். "ஏம்மா, நாங்கெல்லாம் ஒங்கய்யாவோட ஒய்யாவா செத்துட்டோமுன்னா நினைச்சிக" என்று சொல்லி, கட்டிலை வாங்கிக் கயிறுகளை அவிழ்த்து, பிணத்தைக் கட்டிலில் மல்லாந்து படுக்கப் போட்டு, நான்கு பேர் தூக்கினார்கள். பெண்கள் ஒலகம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "ஓசியில பனவோலை தந்த மகராசா, ஒனக்கா இந்த கதி?" என்று புலம்பிக் கொண்டே போனார்கள்.

     அருணாசலம் அங்கே வரவில்லை. அவன் வந்தால் விபரீதம் ஏற்படலாம் என்று அஞ்சிய பெரியவர்கள், அவனை வீட்டிலேயே பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தார்கள்.

     மாயாண்டி நாடார் அருணாசலத்தின் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டார். நான்கு மூங்கில் கழிகளை, நேர்க்கோடுகள் போல் போட்டு, பத்துப் பதினைந்து வாத மடக்கிக் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் தென்னை ஓலைகள் போடப்பட்டன. ஓலைகளுக்கு மேல் அப்போதுதான் முனையப்பட்ட ஓலைப்பாய் விரிக்கப்பட்டது. மாயாண்டிக்குப் புதுவேட்டி கட்டப்பட்டது. கண்ணை மறைக்கச் சந்தனம் அரைத்து அப்பப்பட்டது. இதற்குள் கோணச்சத்திரம் போய், ஒருவன் வாங்கி வந்த ரோஜாப்பு மாலை சடலத்திற்கு போடப்பட்டது.

     சடலத்தை, பாடையில் வைத்து, மேல் ஜாதிக்காரர்களின் மயானத்தைப் பார்த்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மையற்ற பேனா போல், உணர்வின்றி நடந்து கொண்டிருந்த உலகம்மை, அய்யாவை, ஹரிஜனங்களுக்கென்று தனியாக உள்ள சுடுகாட்டில், மனிதன் செத்த பிறகும் சாதி சாவாது என்பதைக் காட்டுவதுபோல் தனியாக இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

     பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் பக்கமாகப் போனவர்கள் திரும்பி நடந்து, குளத்தங்கரைப் பக்கம் இருந்த சேரி சுடுகாட்டுக்குப் போனார்கள். அவசர அவசரமாக, பூவரசு மரக்கட்டைகள் போடப்பட்டு, வறட்டிகள் அடுக்கப்பட்டன. மாயாண்டியை, அதில் வைத்து, அதற்கு மேலும் வறட்டிகளை வைத்தார்கள். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. "யாராவது ஆம்புள கொள்ளி போடாட்டா நல்லதுல்ல" என்று ஒருவர் சொன்னார். உடனே, மேளக்காரரான அருணாசலத்தின் தந்தை "ஒன்ன சின்னப்பிள்ளையில ஜாதி வித்தியாசமில்லாம பெத்த மவன மாதிரி மடில வைச்சிக் கொஞ்சின மவராசன் இவரு. நீ கொள்ளி வைடா!" என்று அருணாசலத்திடம் சொன்னார். அவன் உடனே குத்துக்கால் போட்டு, உட்கார்ந்தான். அவனுக்குத் தலைமுடி இறக்கப்பட்டது.

     உலகம்மை எடுத்துக் கொடுத்த நெருப்பை வாங்கிக் கொண்டு, அருணாசலம் சடலத்திற்குத் தீ வைக்கப் போனான். அழுது தீர்ந்தவள் போல் இருந்த உலகம்மையால், இப்போது உணர்வற்று உயிரற்று இருக்க முடியவில்லை. அய்யாவின் பிணத்தோடு பிணமாகச் சேரப் போகிறவள் போல், முண்டியடித்துக் கொண்டு ஓடிப்போனாள். சிலர், அவளைப் பிடித்துக் கொண்டார்கள். அவள் ஓலமிட்டாள்:

     "என்னப் பெத்த அய்யா, எப்டிய்யா என்ன விட்டுட்டுப் போவ மனம் வந்தது? என்னையும் கூட்டிகிட்டுப் போவும். எப்பய்யா வருவீரு? ஒம்ம, சாவையில பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேனே. அய்யா, என்னப் பெத்த அய்யா, பெத்து வளத்து, பேருட்ட அய்யாவே, நீரு செத்து மடியயிலே சண்டாளி இல்லியே."

     உலகம்மையை யாரும் தடுக்கவில்லை. அவள் போக்கிலேயே அழ விட்டார்கள். நெருப்பு வைக்கப் போன அருணாசலம், நெருப்பை வைக்காமலே அங்கேயே அழுது கொண்டு நின்றான். அவன் கையைத் தூக்கி, அதிலிருந்த நெருப்பை ஒருவர் சிதையில் வைத்தார்.

     நெருப்பு மாயாண்டியைத் தள்ளி வைக்காமல் உடனே பற்றிக் கொண்டது.