கோட்டுக்குள் நடந்து... - ஒரு கோட்டுக்கு வெளியே - Oru Kottukku Veliyae - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



கோட்டுக்குள் நடந்து...

     குட்டாம்பட்டியில் இன்றும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. கடன்பட்டவரிடம் கொடுத்த கடனை கேட்டுப் பார்ப்பார்கள். அவன் 'இன்னிக்கு நாளைக்கி' என்று இழுப்பான். அவனிடம் பணத்தை வசூல் செய்ய முடியாது என்று தெரியும் போது, கடன் தந்தவர், சம்பந்தப்பட்டவனை இழுத்து வந்து அவனைச் சுற்றி ஒரு கோட்டைப் போட்டு முடக்கி விடுவார். வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்கு முன்னால், அவன் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது. எத்தனை நாளானாலும் சரி, அவன் குடும்பத்தினர், அங்கேயே அவனுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் கிழித்த கோடு கிழித்ததுதான். அதைத் தாண்ட முடியாது. அதைத் தாண்டினால், கைகால்கள் சம்பந்தப்பட்டவனின் உடம்பிலிருந்து சம்பந்தப்படாதது மாதிரி தாண்டிவிடும்.

     ஒரு காலத்தில் 'கொடி கட்டிப்' பார்த்த பரம்பரையினர், குட்டாம்பட்டிப் பரம்பரை. அதாவது கட்டாம்பட்டிப் பரம்பரை என்று ஆகுபெயராகக் கருதப்படும் அந்த ஊரில் உள்ள பணக்காரர்களின் பரம்பரை. முன்பெல்லாம், கருப்பன் கூட்டத்துக்கும், சிவப்பன் கூட்டத்துக்கும் சண்டையென்றால், ஒருவர் பனையில் ஏறி, கொடியைக் கட்டிவிட்டு 'அவிருடா பார்ப்போம்' என்பார். 'அவுக்கப் போறவன்' தலை விழும்; அல்லது அதைத் தடுக்கப் போறவன் தலை விழும். இப்போது 'நாகரிகம்' அந்த ஊரிலும் பரவிவிட்டதால் பனைமரத்தில் ஏறிக் கொடி கட்டிப் பார்ப்பதில்லை. பனை மரத்தில் பலருக்கு ஏறத் தெரியாது என்பதும் ஒரு காரணம். உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல், மழையிலும், புயலிலும் முப்பதடிப் பனையில் ஏறி 'பயினி' இறக்கும் அந்தத் தொழில், இப்போது மட்டமாகி விட்டது. ஆகையால், 'நம் தொழில் இப்போது மட்டமாகி விட்டது. ஆகையால், நம்மால் பனையிலதான் ஏறி கொடிகட்ட முடியல. பனையேறிகளயாவது கோட்டுக்குள்ள நிறுத்தலாம்' என்று நினைத்ததுப் போல், குட்டாம்பட்டியினர் அதாவது குட்டாம்பட்டிப் பிரபுக்கள் கடன் கொடுக்காதவர்களை, கோட்டுக்குள் நிறுத்துவது, அங்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையில் ஒன்று.

     இதற்காக, எல்லோரையும் அவர்களால் கோட்டுக்குள் நிறுத்த முடியாது. அது கடன்பட்டவனின் குடும்பத்தைப் பொறுத்தது. பணபலம் இல்லாமல் ஆட்பலம் இருக்கும் நபர்களிடம், பணத்தை வசூலிக்கக் கோர்ட்டுக்குப் போவார்களே தவிர, கோட்டுக்குள் போக மாட்டார்கள். இவர்களுக்குக் கடன் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏழைகளிலும் ஆட்பலம் இல்லாத எளியவர்களுக்கு, கோட்டுக்குள் நிற்பதற்கு 'குவாலிபிகேஷன்' உள்ளவர்களுக்குத்தான் கடன் கொடுப்பதுண்டு. பல ஏழைகள், எளியவர்கள் மூலம் கடன் வாங்கிக் கொள்வதும் உண்டு.

     என்னதான் கோட்டுக்குள் நிறுத்தினாலும், சில பெரியவர்கள் முன் வந்து 'தந்திடுவான் விட்டுடு' என்று சொல்வதும், அப்படி அவர்கள் சொல்வதைத் தட்ட மனதில்லாமலும், தானாக இரக்கப்பட்டும் சிலர் கிழித்த கோட்டை அழித்து விடுவதுண்டு.

     மாயாண்டிக்கு, இந்தக் கோட்டுக்குள் இருக்க பல 'குவாலிபிகேஷன்கள்' இருக்கின்றன. இந்த வகையில், அவருக்கு அனுபவம் புதிது என்றாலும் கோடு கிழித்த மாரிமுத்து நாடாருக்கு, இது புதிதல்ல. மாயாண்டி, சில வருடங்களுக்கு முன்னால், பனையிலிருந்து விழுந்ததில் இறந்திருந்தால், பத்தாயிரம் ரூபாய் கிடைத்திருக்கும், கடன் பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், பாவி மனுஷன், மேற்கொண்டும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்ததாலோ என்னவோ, சாகவில்லை. காலைக் குணப்படுத்த, அவர் மாரிமுத்து நாடாரின் காலைப் பிடிக்க அவரும் மாயாண்டி பல சில்லறை வேலைகளைத் தட்டாமல் செய்ததை நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாய் கொடுத்தார். வட்டி மாதம் ஐந்து ரூபாய் தான். ஆனால் வட்டியைத் தான் மாயாண்டியால் கட்ட முடிந்தது.

     மாயாண்டி எங்கே கட்டினார்? அவர் மகள் உலகம்மை மாரிமுத்து வயலில் வேலை செய்வதில் கிடைக்கும் கூலியில் நாலணாவை, நாடாரிடமே விட்டு வைத்தாள். என்றாலும் அது வட்டியைத்தான் கழித்ததே தவிர, அசல் பக்கம் அண்டவில்லை. மாரிமுத்து நாடாரும், எப்போவாவது "ஏ உலகம்மா, கடன எப்ப குடுக்கப் போற?" என்பார். அவளும், "ரெண்டு மாசத்துல அடைக்கேன் மாமா" என்பாள். அத்தோடு சரி.

     ஆனால் விஷயம் இப்போது அப்படி இல்லை. உலகம்மை செய்த காரியம் ஊரிலேயே கொஞ்சம் ரசனை கலந்த கோபத்தை உண்டாக்கி இருந்தது என்றால், பண்ணையார் மாரிமுத்து நாடாருக்கு ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. மாயாண்டி நாடார், வாங்கிய கடனுக்காக வைக்கப்பட்டிருக்கிறார் என்று ஒவ்வொருவரும் வெளிப்படையாகப் பேசினாலும், அதன் உட்காரணம் எல்லோருக்கும் புரியும். ஆகையால் எவரும் சிபாரிசுக்குப் போகவில்லை. அப்படிப் போனால் 'நம்மையும் கல்யாணத்த உடச்சதுல சம்பந்தப்பட்டதா நினைப்பாவ' என்று பலர் நினைத்துக் கொண்டார்கள். சிபாரிசு செய்யத் துடித்த சிலரோ, மாரிமுத்து நாடாரிடம் கடன்பட்டவர்கள். அவர்களைச் சுற்றி தாங்களாகக் கோடுகள் போட்டுக் கொள்ளவோ, 'இந்தா கிழி' என்று மாரிமுத்து நாடாரிடம் சொல்லாமல் சொல்லவோ அவர்கள் விரும்பவில்லை.

     உலகம்மை, கோட்டுக்குள் தவிக்கும் அய்யாவைப் பார்த்தாள். காளியம்மன் மாதிரி கோர சொரூபமாகி, மாரிமுத்து நாடார் வீட்டை நொறுக்கி, பீடி ஏஜெண்ட்டின் வயிற்றைக் கிழித்து, உள்ளே இருக்கும் குடலை எடுத்துத் தோள்மாலையாகப் போட்டுக் கொண்டு, வெள்ளைச் சாமியின் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவது போல் பாவித்துக் கொண்டாள். ஒரே ஒரு கணந்தான். மறுகணம், கற்பனைச் சிறகு ஒடிய, பிரத்யட்ச நிலையை உணர்ந்தவள் போல், கோட்டுக்குள் காலடி வைத்தாள்.

     அவருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்த வீர மறவர்களில் ஒருவனான ராமசாமி, அந்தப் 'பொம்பிளையை' மிரட்டினான். அவன் அவ்வப்போது அரசியல்வாதியாகிறவன்.

     "கோட்டுக்குள்ள நுழைந்த, ஒன் கூட்டுக்குள்ள இருந்து உயிரு போயிடும்."

     வெள்ளைச்சாமி வெண்டையாகவே பேசினான்.

     "தேவடியா செறுக்கி, போழா பாக்கலாம்."

     உலகம்மை சிறிது தயங்கினாள். பிறகு வருவது வரட்டும் என்று நினைத்தவள் போல் கோட்டுக்குள் போனாள். வெள்ளைச்சாமி, அவளை அடிப்பதற்காகக் கிட்டே போனான். உள்ளூரப் பயந்தவனான ராமசாமி, அவன் வேட்டியைப் பிடித்து இழுத்துத் தடுத்தான்.

     உலகம்மை, அய்யாவின் கன்னத்தைத் தடவிவிட்டாள். அவள் தடவியதும், அந்தக் கன்னத்தில் ஈரக்கசிவு ஏற்பட்டது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள்.

     மாயாண்டி உளறிக் கொட்டினார்.

     "நான் தான் படிச்சிப் படிச்சிச் சொன்னேன் கேட்டியா? பலவேசம் பேச்சக் கேட்டு அவருக்குப் பயந்து அப்படிப் பண்ணிட்டேன்னு, 'மாரிமுத்துகிட்ட சொல்லு'ன்னே கேட்டியா? சொல்லவுமுல்ல, என்னயும் சொல்லவிடல. என்ன பண்றது? ஒய்யா கோட்ட கட்டி ஆள நெனச்சான்; இப்போ கோட்டுக்குள்ள கிடக்கான். என்ன பண்றது? போன பிறவில யார நிறுத்துனனோ அதுக்கு காளியாத்தா இப்டி தண்டிக்கா."

     உலகம்மை, அந்தக் கோட்டுக்குள் நின்று கொண்டு, அய்யாவைத் தூக்கி நிறுத்தப் போனாள். ராமசாமி, பேசப் போன பிராந்து சாமியை அடக்கிவிட்டு, "அவன வெளில கொண்டு வந்தியானா தெரியும் சேதி" என்றான்.

     இதற்குள், அந்தப் பக்கமாக வந்த பலவேச நாடார், வேறு பக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு 'கண்டு கொள்ளாதவர் போல்' போனார். "பலவேசம், நா இருக்கியல எதுக்குங் கவலப்படாண்டாமுன்னு காலையில் கூட வீட்ல வந்து சொன்னியே - இப்ப ஏன்யா அப்டி மொகத்த வச்சிக்கிட்டுப் போற? ஓஹோ! நீ இருக்கையில தான் நான் கவலப்படக் கூடாது. இப்ப தான் நீ இருக்காம நடந்துதான் போற" என்று மாயாண்டி முணுமுணுத்தார்.

     பலவேச நாடார், சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாததற்குத் தைரியமின்மை காரணமல்ல. 'சரோசா கல்யாணம் நின்னது நின்னதுதான். எப்படியும் மவனுக்கு மடக்கிப் போட்டுடலாம்'. இந்தச் சமயத்துல வெண்ணெய் திரளும் போது, சட்டியை உடைக்க அவர் விரும்பவில்லை. அதோடு உலகம்மை 'ஒமக்குப் பயந்து போவலன்னு' - எவ்வளவு திமிரா பேசுனா? பய மவா படட்டும்.'

     என்ன செய்யலாம் என்று புரியாமல், இடுப்பில் செருகியிருந்த சின்னக் கத்தியை அவ்வப்போது பிடித்துக் கொண்டே உலகம்மை நிலைகுலைந்து நின்றபோது, மாரிமுத்து நாடாரே அங்கே வந்தார். சுற்றி நின்ற சாட்சிக்காரர்களை விட, அந்தச் சண்டைக்காரரிடமே நேரடியாகப் பேசுவதென்று தீர்மானித்தாள், உலகம்மை.

     "மாமா! நீரு செய்தது, உமக்கே நல்லா இருக்கா?"

     மாரிமுத்து நாடார், அவளைக் கொலை செய்யப் போவது போல் பார்த்தார். 'சாப்பிட்டுப் போழா' என்று பாசத்தோடு ஒரு சமயம் அவளிடம் சொன்ன அந்த முகம், இப்போது அவளையே சாப்பிடப் போவது போல் உள்ளடங்கிய பற்களை நெறித்துக் கொள்ள வைத்தது.

     "ஒம்மத்தான் மாமா."

     "எந்த மொகத்தோட என்னை மாமான்னு கூப்பிடுறழா? பனையேறிப் பய மவளுக்கும் எனக்கும் என்னழா சம்பந்தம்?"

     "ஒம்ம தாத்தாவும் பனையேறினவருதான். நீரு மறந்தாலும் ஊரு மறக்காது."

     "கூடக்கூட வாயி பேசுன இங்கயே வெட்டிப் புதச்சிடுவேன். எந்தப் பய என் கையை மோந்து பாக்கான்னு பாத்துடலாம். வாங்குன கடன குடுக்க வக்குல்லாதவளுக்கு வாயி வேறயா?"

     "நான் குடுத்திருக்கிற வட்டியே முப்பது ரூவா வரும். ரெண்டார் ரூபாய் சம்பளத்துக்குக் கூப்புட்டாலும் ஒம்ம வயலுல ரெண்டு ரூபாய்க்கு நடவுக்கு வந்தேன்னா நீரு குடுத்திருக்கிற கடன நெனச்சித்தான்."

     "நானா ஒன் கையைப் பிடிச்சி இழுத்துக் கூப்பிட்டேன்?"

     "வார்த்தய அனாவசியமா விடாதயும். நான் கேக்க முடியாம போனாலும் காளியாத்தா கேக்காம விடமாட்டா."

     "சாபமாழா விடறே? சண்டாளி! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த துரோகி! ஒருத்தி வாழ்வயே பாழாக்கிட்டியாளா பாவி!"

     "நான் பாழாக்க நெனச்சனா... வாழ வைக்க நெனச்சனான்னு அந்தக் காளிப்பய மவளுக்குத்தான் தெரியும்."

     "ஜாலமாழா போடுற? கைகேயி! நீலி!"

     "நீரு மட்டும் என்னக் காட்டி ஒருவன ஏமாத்தலாமா?"

     "நான் ஏமாத்திட்டேன். நீ இப்ப அவங்கூட வேணுமுன்னா போழா."

     "வாய் கெட்டு பேசுனீர்னா வாயில கரையான் அரிக்கும்."

     "ஒங்கிட்ட எதுக்குழா நான் பேசணும்? ஏல வெள்ளய்யா! நீ வீட்டுக்குப் போல. அல்லன்னா தள்ளிப்போ. இப்ப சொல்றதுதான். வாங்குன கடன குடுத்திட்டு ஒப்பன கூட்டிக்கிட்டுப் போ."

     "முன்ன பின்ன சொல்லாம திடீர்னு ஒரு கிழவன அடச்சி வச்சா எப்டி?"

     "நீ மட்டும் முன்னபின்ன சொல்லிட்டுத்தான் சட்டாம்பட்டிக்குப் போனியோ? அவங்கூட படுத்துட்டு வந்தியா படுக்காம வந்தியா?"

     "யோவ்! இதுக்குமேல் பேசுன மரியாதி கெட்டுப் போவும்."

     பீடி ஏஜெண்டும், பிராந்தனும் அவளை நெருங்கினார்கள். அவர்களை இதுவரை தடுத்த மாரிமுத்து நாடார் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் நின்றார். உலகம்மை இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுக்கப் போனாள்.

     வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. ஒண்ணுகிடக்க ஒண்ணு நடந்தா சாட்சி சொல்ல வேண்டியது வரும். அதோடு பொம்பிளைய அடிக்க ரெண்டு ஆம்பிளைகள் போவதை, அந்த ஆம்பிளைகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பிரமுகர்களில் ஒருவர் முன்னால் வந்தார்.

     "ஏய், வெள்ளயா! இந்தப் பக்கமா வாடா! ஏழா ஒலகம்மா! நீ கடன் பட்டுருக்கறது வாஸ்தவம். மாரிமுத்து மச்சான் கைய கால பிடிச்சி கட்டாயமா தந்துடுறேன்னு சொல்றத விட்டுப்புட்டு ஏமுழா கத்துற?"

     மாரிமுத்து நாடார் 'மத்தியஸ்தருக்கு'ப் பதில் சொன்னார்:

     "எனக்கு கையக்கால பிடிக்க பெண்டாட்டி இருக்கா."

     உலகம்மை இறுதி எச்சரிக்கை விடுபவள் போல் பேசினாள். இப்போது அவள் மனதில் அச்சமில்லை. 'முடியாமல் போனால் இடுப்பில் இருக்கவே இருக்கு கத்தி!'

     "மாமா! மாரிமுத்து நாடாரால அய்யாவ விட முடியுமா, முடியாதான்னு கேட்டு சொல்லும்! நான் ஒண்ணும் பிச்ச கேக்கல. குடுத்த கடன தரமுடியாதுன்னு சொல்லல. அவரால முடியுமா முடியாதான்னு கேளும். அப்புறம் நீங்க என் மேல வருத்தப்படக் கூடாது."

     "நீ இப்டி பேசுனா அவரு எப்டி விடுவாரு? பெரிய மனுஷங்கிட்ட பேசுற பேச்சா இது?"

     மாரிமுத்து நாடாரும், தான் பெரிய மனுஷன் என்று நினைத்தவராய் அழுத்தமாகவும் ஆபாசமில்லாமலும் மத்தியஸ்தரிடம் பேசினார்.

     "மச்சான் அவளால இப்ப பணத்த குடுக்க முடியுமா முடியாதான்னு கேளும். பணத்துல ஒரு பைசா குறையாம வருமுன்னால, அவன விட மாட்டேன். நீரு வேணுமுன்னா இந்த மூதேவிக்கு பணம் குடும்... பணங்குடுக்காம மட்டும் அவா அவளோட அப்பன கோட்டுக்கு வெளில இழுத்தான்னா தெரியும் சேதி... அப்புறம் பொம்பிளய அடிச்சேன்னு நீங்க வருத்தப்படக்கூடாது. ஆமாம்."

     இதற்குள் உட்கார்ந்திருந்த மாயாண்டி மீண்டும் படுத்துக் கொண்டார். உடனே, என்னமோ ஏதோ என்று கீழே குனிந்த உலகம்மையிடம், "தண்ணி வேணும், தண்ணி வேணும், தாகமா இருக்கு" என்று முனங்கினார். பிறகு கத்தினார்.

     சுற்றி நின்ற கூட்டத்தினர், தத்தம் இயலாமைக்கு பிராயச்சித்தம் தேடுபவர் போல் "ஏ தண்ணி கொண்டாங்க, தண்ணி கொண்டாங்க" என்றார்கள். மாரிமுத்து நாடார் கூட வெள்ளைச்சாமியைப் பார்த்து, தண்ணீர் கொண்டுவரச் சொல்வதற்காக, தன்னையறியாமலே, லேசாக வாயைக் கூடத் திறந்தார். ஒருவர் பக்கத்தில் இருந்த ஊர்க்கிணற்றைப் பார்த்துப் போனார்.

     உலகம்மை அய்யாவின் காலைப் பிடித்து விட்டாள். தொண்டையை நீவி விட்டாள். முதுகைத் தடவி விட்டாள். தலையைக் கோதி விட்டாள். நெற்றியை வருடி விட்டாள். தோளைத் தேய்த்து விட்டாள். பிறகு கம்பீரமாக வெளியே வந்தாள்.

     "யாரும் தண்ணி குடுக்காண்டாம். எங்க அய்யாவுக்கு என்ன குடுக்கணுமுன்னு எனக்குத் தெரியும்."

     உலகம்மை, கூட்டத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேகமாக நடந்தாள். அவள் போவதையே, கூட்டத்தில் பெரும் பகுதி பச்சாதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றது. அவள் அய்யாவுக்குத் தண்ணீர் கொண்டு வர, வீட்டுக்குப் போவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.





புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247