சுப்பிரமணியத் தம்பிரான்

இயற்றிய

கலைசைச் சிலேடை வெண்பா

     இது கலைசையில் எழுந்தருளிய சிவபெருமானைப் பற்றிப் பாடிய சிலேடை வெண்பாவினால் ஆன நூலாகும். இந்நூலின் அனைத்து பாடல்களும் நேரிசை வெண்பாக்களேயாகும்.

     கலசை தொண்டைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் சிதம்பரேசர், அம்மையார் சிவகாமி அம்மையார்.

காப்பு

கார்மருவுஞ் சோலைக் கலைசைச் சிலேடைவெண்பாச்
சீர்மருவக் கூறுந் திறம்வருமே - ஏர்மருவுங்
கோதறுமுத் தோடைக் குளத்திருதாட் செங்கழுநீர்ப்
போதகமென் போதகத்தாம் போது. 1

வட்டிக் கலைநீர் வடித்தமைப்போர் மன்னுதிருத்
தொட்டிக் கலைவெண்பாச் சொன்மாலை - கட்டிடமெய்ச்
செங்கழுநீ ராம்பலிரு செந்தா மரைமலருந்
தங்கிடுமென் னெஞ்சகத்தே தான். 2

நூல்

நீருலவும் பூமகளு நெட்டகழின் வார்புனலுங்
காருணிய மீதூர் கலைசையே - ஏருலவுந்
தண்டரங்க மாலையார் தாங்குமுடி யார்வரைக்கோ
தண்டரங்க மாலையார் சார்பு. 1

மாதரணி குங்குமமும் வாளேந்து கையினருங்
காதமருக் கூருங் கலைசையே - போதலரும்
அங்கொன்றைத் தாரா ரறிந்துதமைப் போற்றாதார்க்
கங்கொன்றைத் தாரா ரகம். 2

வாஞ்சைதரும் பைங்கிளியு மாங்குயில்போல் வார்த்தையருங்
காஞ்சியிடை யார்க்குங் கலைசையே - ஆஞ்சலத்தால்
வெற்றிமதிக் கண்ணியான் வீயாம லாண்டவருள்
வெற்றிமதிக் கண்ணியான் வீடு. 3

ஆவலுடன் பாவலரு மாறுகால் வண்டினமுங்
காவலரைச் சூழுங் கலைசையே - மேவும்
அரிவையம்பா கத்தா னரணொருமூன் றெய்தோன்
அரிவையம்பா கத்தா னகம். 4

இச்சைமட வார்தனமு மீட்டறத்தி னோர்தனமுங்
கச்சங் கடக்கும் கலைசையே - மெச்சிவட
ஆலமருந் தண்ண லறுகணிவோன் வந்தெழுந்த
ஆலமருந் தண்ண லகம். 5

நாவலர்தம் புத்திரரு நண்ணும் பிரமரமுங்
காவியங்க ளாயுங் கலைசையே - தூவெள்ளைக்
கோட்டுக் குழையார் கொழுங்கயற்கண் மெல்லியலாங்
கோட்டுக் குழையார் குடி. 6

தண்ணார் பொழிற்சுரும்புந் தந்தைமொழி யார்கதுப்புங்
கண்ணாடி வீழுங் கலைசையே - ஒண்ணாறும்
வான்முத் தலைவேலை மைக்கடுவுண் டோன்கரத்தில்
வான்முத் தலைவேலை வாழ்வு. 7

பொற்புரிசை நீள்கொடியும் போர்வயவர் திண்புயமுங்
கற்பகமே லோங்குங் கலைசையே - எற்புருக
நந்தாண்ட வத்த னளினத்தன் வீழ்ந்திறைஞ்சும்
நந்தாண்ட வத்த னகர். 8

சிந்து மதமாவுந் தேனுகர்மா வும்பூவிற்
கந்தங் கலைக்குங் கலைசையே - தந்தாட்
குருக்கங் கணத்தினா னுற்றிடச்செய் தோன்பாம்
புருக்கங் கணத்தினா னூர். 9

வள்ளமுலை யார்விழியும் மைக்கா மதுரகரமுங்
கள்ளம் பயிலுங் கலைசையே - உள்ளவலம்
போகத் திருந்தார் புரமெரித்தார் தேவியொடும்
போகத் திருந்தார் புரம். 10

வான்மிசையே றும்பொழிலு மானார் குழலுமலர்க்
கான்மணந்து வக்குங் கலைசையே - மேன்மைதரும்
பாலத் திருக்கழலார் பண்டிருவர்க் காடியகா
பாலத் திருக்கழலார் பற்று. 11

பாயாத மானாரைம் பாலும் பசுந்தோளுங்
காயாவே யொக்குங் கலைசையே - ஏய்புலித்தோல்
அம்பரவ னானா னணிவலைகொண் டங்கொருநாள்
அம்பரவ னானா னகம். 12

சேலார் செழுந்தடத்திற் செந்தா மரையினிற்றேன்
காலாறு பாயுங் கலைசையே - சூலேறு
பாணியார் வேணியார் பாகீ ரதியென்னும்
பாணியார் வேணியார் பற்று. 13

மும்மொழிச் சிலேடை

தாமரைவண் டுங்குளமுஞ் சார்விரகத் தாரிடமுங்
காமரம்பா டுஞ்சீர்க் கலைசையே - மாமதமா
தங்க முரித்தார் தடங்கேழற் கோட்டினைச்சூர்
தங்க முரித்தார் தலம். 14

மண்டமர்செய் யுங்களமும் வான்கரும்பை மள்ளருஞ்சேர்
கண்டகரச் சாடுங் கலைசையே - தொண்டர்
கணிச்சித் திருக்கையான் காதரத்தைத் தீர்க்குங்
கணிச்சித் திருக்கையான் காப்பு. 15

தொண்டைக் கனிவாயார் சொல்லு நயனமுந்தேன்
கண்டவியப் பண்ணுங் கலைசையே - தண்டமிழ்சேர்
வண்டணிகைச் சத்தியத்தன் வாரணத்த னத்தனித்தன்
வண்டணிகைச் சத்தியத்தன் வாழ்வு. 16

பன்மறைதேர் பூசுரரும் பாறுதலில் வாழ்க்கையருங்
கன்மந் திரஞ்செய் கலைசையே - முன்மதனார்
ஐயம் புதையா ரறிவகல வென்னுளத்தில்
ஐயம் புதையா ரகம். 17

வல்லா ரிளமுலையார் வாள்விழியு நீள்வயலுங்
கல்லாரங் காட்டுங் கலைசையே - பொல்லாக்கா
மத்தகத்திற் கண்ணார் மருவுவதற் கண்ணார்
மத்தகத்திற் கண்ணார் மனை. 18

கொந்துகுழற் கோல்வளையார் கொங்கையுநற் பாகருந்திண்
கந்துகத்தே ரோட்டுங் கலைசையே - சந்தணையுஞ்
செப்பினகி லத்தார் செழுமனையில் வந்திரந்தோர்
செப்பினகி லத்தாரின் சேர்வு. 19

தேன்மருவும் பண்ணைகளுஞ் ச்செல்வர் திருமனையுங்
கான்முளைகண் மாறாக் கலைசையே - வான்மே
விருப்பு வணத்தார்க ணேந்தடியார் காய்ந்த
விருப்பு வணத்தா ரிடம். 20

முத்துநகை யார்குழல்சேர் மொய்யளியும் வீரருநற்
கத்திகையிற் சுற்றுங் கலைசையே - மித்தையுறும்
வண்டருக்கப் பாலார் மறைப்பொருணால் வர்க்குரைத்த
வண்டருக்கப் பாலார் மனை. 21

திக்குலவுங் கண்ணாருஞ் சித்திரயாழ் வல்லோருங்
கைக்கிளைபா ராட்டுங் கலைசையே - மிக்க
திருமாதங் கத்துரியார் செம்பொனக மீன்ற
திருமாதங் கத்தூரியார் சேர்வு. 22

அச்சா னகியனையா ரங்கைகளுங் கொங்கைகளுங்
கச்சூர முந்துங் கலைசையே - நச்சாரக்
கண்டங் கறுத்தார் கரத்தைத்தீ யின்செருக்கைக்
கண்டங் கறுத்தார்தங் காப்பு. 23

வம்பலர்தார் வேந்தர் மதகரியும் வாவிகளுங்
கம்பலையோ டுருங் கலைசையே - செம்பதுமத்
தானத்தன் றானத்தன் றங்கட் கிறைவனுசாத்
தானத்தன் றனத்தன் சார்பு. 24

வேம்பாகினின்மொழியார் மென்றோளுங் செவ்விதழுங்
காம்பீர மல்குங் கலைசையே - பாம்பார்
அகலத்தா னாண்டான்பெண் ணானனென் மம்மர்
அகலத்தா னாண்டா னகம். 25

மான்றமட வார்குழலும் வண்டரளஞ் சங்கினமுங்
கான்றங் கிவருங் கலைசையே - தேன்றங்
கருக்கங் கணியா ரறிவுடைமை யார்மெய்
யருக்கங் கணியா ரகம். 26

புண்ணியமெய்ப் பண்ணவரும் பொன்னனையார் பூங்குழலும்
கண்ணிவா சஞ்செய் கலைசையே - எண்ணியொரு
மன்னாக மத்தினான் வாரிகடைந் தோர்க்கிரங்கு
மன்னாக மத்தினான் வாழ்வு. 27

சிந்துமதுப் பூங்காவிற் செவ்வீதி யிற்றும்பி
கந்தருவந் தேரூர் கலைசையே - யுந்தி
கலசத்த னத்தியத்தன் காஞ்சனவெற் பீன்ற
கலசத்த னத்தியத்தன் காப்பு. 28

ஒண்டொடியார் வாய்மொழியு முண்மைப் புகழுநவ
கண்டங் கடக்குங் கலைசையே - மண்டு
மருத்தருந்தும் பையரவர் வார்சடைமேல் வைத்த
மருந்தருந்தும் பையரவர் வாழ்வு. 29

தண்ணார் வயற்கரும்புந் தத்துவந்தே ரந்தணருங்
கண்ணாரஞ் சிந்துங் கலைசையே - விண்ணாடும்
ஐயரவா விட்டா ரகத்தார்நற் குண்டலங்கள்
ஐயரவா விட்டா ரகம். 30

நிட்டையுறு சிட்டருஞ்செய் நீலங் கடைசியருங்
கட்டங் கழிக்குங் கலைசையே - வட்டக்
குடிலச் சடையார் கொடியேனைப் பீறற்
குடிலச் சடையார் குடி. 31

கொஞ்சுகிளி யன்னார் குவிமுலையுங் கண்ணுவருங்
கஞ்சமுருக் கும்பூங் கலைசையே - வஞ்சமனக்
கையர வப்பணியார் கண்ணுமனத் துக்கரியார்
கையர வப்பணியார் காப்பு. 32

சீலமுறு மன்னவருஞ் செங்கழுநீர்ப் போதலருங்
காலமனி யேறுங் கலைசையே - மாலில்
வருந்தப் படையார் மனத்தா ரினுநான்
வருந்தப் படையார் மனை. 33

நற்புலவர் செய்யுளுநன் னாரியர்கள் வெண்ணகையும்
கற்பனைய வென்னுங் கலைசையே - பொற்பார்
சலசத்தா னந்தனும்பர் சாரா தவசஞ்
சலசத்தா னந்தன் றலம். 34

அன்னநடை யார்மொழியும் மாடவர்க டிண்டோளுங்
கன்னலம்போ லாருங் கலைசையே - சென்னியிடை
வாரம் படைத்தார் வளர்சி தம்ப ரேசருமை
வாரம் படைத்தார் மனை. 35

தேந்தா மரைஞிமிறுந் திண்வயவர் தூணிகளுங்
காந்தாரம் பாடுங் கலைசையே - மாந்த
வருங்கடுக்கை யான்வாங்கி மாந்தினன்றேன் றேங்க
வருங்கடுக்கை யான்வாழ் மனை. 36

பொங்குசுதை மாளிகையும் போர்வீரர் வேற்றசையுங்
கங்குலவித் துய்க்குங் கலைசையே - யெங்குநிறை
வையம் படைத்தான்கம் மாய்த்தாழித் தூணியிற்றன்
வையம் படைத்தான் மனை. 37

வேதியர்பொற் குண்டலமும் விண்ணா டுடையவருங்
காதலம ருஞ்சீர்க் கலைசையே - மாதனங்கள்
பந்தங் குலைக்குமம்மான் பாகத்தா னென்னிருண்ட
பந்தங் குலைக்குமம்மான் பற்று. 38

பொற்கொடியார் செங்கையினிற் பூம்பழனச் சேற்றளையிற்
கற்கடக மூருங் கலைசையே - சற்குருவாய்
வந்தவலம் பாற்றினார் வார்சடைமேல் விண்மேனி
வந்தவலம் பாற்றினார் வாழ்வு. 39

நீர்மண் டிலஞ்சிகளு நீண்டதிருக் கோபுரமுங்
காரண்டந் தோயுங் கலைசையே - வீரநர
பஞ்சான னத்தான் பதைபதைக்கத் தான்பிளந்த
பஞ்சான னத்தான் பதி. 40

பொற்பூர் மடந்தையரும் போதகமன் னார்மார்புங்
கற்பூர நாறுங் கலைசையே - விற்போற்
கரும்புருவ மானார்தங் காமுறார் நெஞ்சிற்
கரும்புருவ மானார்தங் காப்பு. 41

மல்லுழவ ரேரிகட்கும் வாளுழவர் வாம்பரிக்கும்
கல்லணைகள் வைக்குங் கலைசையே - முல்லைநல்லார்
மத்தி னடிக்குமெய்யன் மால்விடையாக் கொண்டவனீ
மத்தி னடிக்குமெய்யன் வாழ்வு. 42

நம்புமடி யார்வினையு நல்லரசர் வீதிகளுங்
கம்பமா வோடுங் கலைசையே - சம்புவெள்ளிப்
பொற்பினா கத்தான் புகழ்ச்சிதம்ப ரேசனொரு
பொற்பினா கத்தான் புரம். 43

மாதரம்பொற் கொப்புகளும் வாயார் மதகுகளுங்
காதலையப் போடுங் கலைசையே - கோதில்
பரதத்து வந்தானென் பார்க்கருளி யென்றும்
பரதத்து வந்தான் பதி. 44

பட்டங்கொள் வேந்தர் பவனியின்மின் னாருரையிற்
கட்டியஞ்கூ றுஞ்சீர்க் கலைசையே - சிட்டருளத்
தன்பா னதியானத் தானந்த மாம்பெருமை
யன்பா னதியா னகம். 45

மாசில் வணிகரும்பூ வார்குழலின் மாதரும்பொற்
காசறையுட் கொட்டுங் கலைசையே - வீசுகையின்
மாசுணங்காப் பிட்டவரன் வண்ணத் திருவுருவின்
மாசுணங்காப் பிட்டவரன் வாழ்வு. 46

மன்னரணி மாளிகையு மாறாக் கொடையினருங்
கன்னன்மணி யேயுங் கலைசையே - வன்னிமதி
என்பரவ மட்டா ரெருக்கணிவார் காமியா
என்பரவ மட்டா ரிடம். 47

மைவாழ் மதிற்கிடங்கு மள்ளர் பெருங்குழுவுங்
கைவேழ மாடுங் கலைசையே - வைவாய்ந்த
கட்டங்கங் கையுடையார் காமருசீர்ச் செஞ்சடைமேற்
கட்டங்கங் கையுடையார் காப்பு. 48

பொன்னிலகு பூந்தடமும் பொற்பினட மங்கையருங்
கன்னியரங் காடுங் கலைசையே - மன்னு
மலைவிலத்த ரன்பாய் மலைவிலத்த ரென்றும்
மலைவிலத்தர் வாழு மனை. 49

சுந்தரஞ்சேர் நந்தினமுந் தோகை மயிலுமின்னார்
கந்தரங்கண் டார்க்குங் கலைசையே - கொந்திதழிக்
கண்ணி யரிப்பார் கலங்குமுயிர்க் கஞ்ஞானக்
கண்ணி யரிப்பார்தங் காப்பு. 50

செய்யதவத் தோருந் திரிமருப்புப் போர்த்தகருங்
கையடையா ருஞ்சீர்க் கலைசையே - வெய்யவிடத்
துத்திப்பாம் பாட்டினார் சொன்மூவர் தோத்திரஞ்செய்
தித்திப்பாம் பாட்டினார் சேர்வு. 51

சிற்பரணி யாடரங்குந் திண்புரிசைக் கேதனமுங்
கற்பமுற வாக்குங் கலைசையே - பற்பலவென்
றோற்றந் துரத்தினார் தோன்றிக் கிடந்திமைக்கும்
பாற்றந் துரத்தினார் பற்று. 52

மும்மொழிச் சிலேடை

மாப்பொலிந்த வீகையரு மைந்தருநன் மாதவருங்
காப்பணியாக் கொள்ளும் கலைசையே - தீப்பிறங்கு
மாலாழி யீந்தான்முன் மாலினுக்குப் பாலனுக்குப்
பாலாழி யீந்தான் பதி. 53

தந்திடையார் தோய்தடமுந் தாவுமிள வாளைகளுங்
கந்தித் தலைசேர் கலைசையே - வந்திதரும்
பிட்டுக் கலந்தார் பிராட்டிகழுத் திற்றோடையல்
இட்டுக் கலந்தா ரிடம். 54

மும்மொழிச் சிலேடை

அங்கனையார் கையி லணிமதிலிற் றேன்பணையிற்
கங்கணமண் டுஞ்சீர்க் கலைசையே - பொங்கும்
இருபதத்த னையவரைக் கீழிருத்தி யின்பந்
தருபதத்த னையன் றலம். 55

சூழுமிளங் காவுஞ் சுரிகுழலார் சிற்றிடையுங்
காழகமுற் றோர்கொள் கலைசையே - தாழும்
பவத்துயரப் போக்கினார் பாலுறா தென்னைச்
சிவத்துயரப் போக்கினார் சோர்வு. 56

தேசிலகு மாவணமுஞ் செம்மைநடு வோர்மொழியுங்
காசினியா யஞ்சேர் கலைசையே - மூசியெனை
யொட்டுஞ் சடைவிரித்தா ரோங்கிவரு நீர்புகுதக்
கட்டுஞ் சடைவிரித்தார் காப்பு. 57

பூண்டாங்கு காளையரும் பொற்கோயின் மங்கையருங்
காண்டீப மேந்துங் கலைசையே - யாண்டிரவி
பற்றகர மாட்டினார் பன்னகத்தைத் தாமரைபோ
லுற்றகர மாட்டினா ரூர். 58

ஞானமுடை யோருலகை நற்சிறுமி மார்குழலைக்
கானலெனக் காணுங் கலைசையே - மானமருஞ்
செங்கம லக்கரத்தார் தீரா தெனையழுத்தும்
பங்கம லக்கரத்தார் பற்று. 59

மும்மொழிச் சிலேடை

வாரியளிப் போர்கரமு மாதருங்கோங் கும்பூவிற்
காரிகைக்கொப் பென்னுங் கலைசையே - யாரியனாய்க்
கல்லா லடியற்றார் கான்போ யருச்சுனன்கை
வில்லா லடியற்றார் வீடு. 60

சொல்லோதி யார்காற் சிலம்புமவர் தோய்தடமுங்
கல்லோல மாறாக் கலைசையே - பொல்லேன்
அரந்தைக்கோ டீரத்தா னாரருள்வைத் தாண்ட
கரந்தைக்கோ டீரத்தான் காப்பு. 61

பூண்டகழற் காளையரும் பூந்தடத்திற் பூவையருங்
காண்டமுகந் தேறுங் கலைசையே - நீண்டசடைக்
கிந்துவளை விற்றா ரெடுத்தணிந்தார் கூடலிலே
வந்துவிளை விற்றார் மனை. 62

சிட்டமுறு யோகியரும் செய்யுளல வன்பெடையுங்
கட்டளையி னாடுங் கலைசையே - யெட்டுருவாய்த்
தோய்ந்த வருக்கொளியார் சுற்றைம் பொறிவழிவிட்
டோய்ந்த வருக்கொளியா ரூர். 63

தேற்றாச் சிறாரினமுந் தேம்பொழிலு மல்குசிறு
காற்றோர் கடாவுங் கலைசையே - போற்றியன்போ
டேகுவல யத்தா ரிறைஞ்சும் படப்பாந்தள்
வாகுவல யத்தார் மனை. 64

ஆயச் சிறார்படமு மார்க்குங் கடாசலமுங்
காயத் திரியும் கலைசையே - நேயமுடன்
பைத்த பதஞ்சலியார் பார்த்துருகப் பொற்பொதுவில்
வைத்த பதஞ்சலியார் வாழ்வு. 65

ஒன்றுமற்றோ ரான்முலையு முண்மைநெறி கண்டோருங்
கன்றுமறந் தீர்க்குங் கலைசையே - கொன்றைமுடிக்
கங்கா தரனார் கடையேன் கவியுவக்கும்
அங்கா தரனா ரகம். 66

வாளரவ வல்குனல்லார் வாள்விழியு மாலயமுங்
காளமியம் புஞ்சீர்க் கலைசையே - நீள்வீணைக்
கஞ்சக் கரத்தான் கடும்பிறவி வேரறுக்கும்
அஞ்சக் கரத்தா னகம். 67

உத்தமர்தேர் நூனெறியு மொள்ளொளிசேர் நித்திலமுங்
கத்தங் கொழிக்குங் கலைசையே - தத்தருவி
யுற்றவரை யாள்வா ருறுதனங்க டோய்வரவா
வற்றவரை யாள்வா ரகம். 68

பல்வகைநூ லாய்ந்தவரும் பார்த்திவர்சூட் டும்முடியுங்
கல்விரவி யேயுங் கலைசையே - வல்வினையால்
இட்ட தளையுடையா ரெண்ணத்தி னுக்கரியார்
பட்ட தளையுடையார் பற்று. 69

நற்றரள நீர்ச்செறுவு நாவலர்கண் முத்தமிழுங்
கற்றையவை யேறுங் கலைசையே - குற்றமில்சீ
ராவினஞ் சாடினா ரன்பிறக்கன் வேள்விபுக்க
தேவினஞ் சாடினார் சேர்வு. 70

செவ்வைமனத் தான்பினருந் தென்மடுவிற் செங்கயலுங்
கவ்வையலைத் துள்ளுங் கலைசையே - கொவ்வைவாய்த்
துப்பிதழி வாமத்தார் சுற்றுசடி லத்தினறை
பப்பிதழி வாமத்தார் பற்று. 71

சீற்றமுறு வாட்கையரும் செங்குமுதத் தேனளியுங்
காத்திரவில் வாங்குங் கலைசையே - நாத்திகமில்
நீதிக் கருத்தினார் நெஞ்சுகந்தார் கற்கரிக்கன்
றோதிக் கருத்தினா ரூர். 72

தேம்பா விசையினருஞ் செய்ந்நீல மாளிகையுங்
காம்போதி யோதுங் கலைசையே - கூம்பா
மருப்பச் சிலையான் மகிழ்ந்திடினு மேற்கும்
பொருப்பச் சிலையான்புரம். 73

வஞ்சியிளம் பேதையரு மாறா திராப்பொழுதும்
கஞ்சனையைப் பார்க்குங் கலைசையே - நெஞ்சம்
உருக வழுத்துவா ரும்பரின்பத் தேனைப்
பருக வழுத்துவார் பற்று. 74

வண்டோடை யம்புயமு மாவீர ரம்புயமுங்
கண்டூதி யாருங் கலைசையே - பண்டோர்கோ
லங்கூ விளத்தா னழற்பிழம்பாய் நீண்டெழுந்த
பைங்கூ விளத்தான் பதி. 75

தண்டாச் சவுரியர்க டாக்குமடி யாருமுறு
கண்டீர வங்கூர் கலைசையே - திண்டே
ரருக்கரைக்கண் டொட்டா ரறிவிலா நெஞ்சத்
தருக்கரைக்கண் டொட்டார் தலம். 76

புட்குலமு மாதரைவேள் போல்வாரு மாலையினிற்
கட்சிவந்து கூடுங் கலைசையே - வெட்சிமல
ரந்தார்க் குமரனா ரையரர வென்றிமையோர்
வந்தார்க் குமரனார் வாழ்வு. 77

வீட்டினெறி தேராரும் வேதியர்வேள் வித்தழலுங்
காட்டத்தெரியுங் கலைசையே - கூட்டரண
நீறா வசித்தார்நன் னேசமிலே னெஞ்சினிற்றே
னூறா வசித்தா ருழை. 78

கோமளமின் னார்முலைக்குங் கோலவத னத்தினுக்குங்
காமர் மதிவீழ் கலைசையே - நாமரையா
மத்தி னடிப்பார் மதியைக் கலைகெடக்கோ
பத்தி னடிப்பார் பதி. 79

வார்முலையார் நன்னுதற்கும் வாவிடா யுற்றவர்க்குங்
கார்முகந்துண் ணென்னுங் கலைசையே - நார்மிகுத்த
வுள்ளத் திருப்பினா ருள்ளேன்றன் கன்மனத்தை
மெள்ளத் திருப்பினார் வீடு. 80

நூலஞ்சு நுண்ணிடையார் நோக்கமுமம் போருகமுங்
காலஞ்ச மின்னுங் கலைசையே - கோலமுடி
வைத்தகம லத்தார் வருங்கூற்றை யஞ்ஞான்று
தைத்தகம லத்தார் தலம். 81

மைம்மாறு சிந்தையரு மாறா விதரணரும்
கைம்மாறு கொள்ளாக் கலைசையே - வெம்மான்றோல்
வீக்கு மரையன் விளிபடவென் சஞ்சிதத்தைப்
போக்கு மரையன் புரம். 82

பட்டாரு மிட்டிடையார் பார்வையிலுங் கோதையிலுங்
கட்டா ரிவருங் கலைசையே - யெட்டான
ஆசை யுடுக்கையா ரண்டங் கிடுகிடுக்கும்
ஓசை யுடுக்கையா ரூர். 83

அத்தார் மகவினத்தை யாட்டின் குழவைநன்கு
கைத்தாய ரேந்துங் கலைசையே - கொத்தாருஞ்
சீத வடம்புடையார் தேவி சிவகாமி
மாத வடம்புடையார் வாழ்வு. 84

மாதர் விழிவேலும் வண்ணப் பசுங்கிளியுங்
காதை யுரைக்குங் கலைசையே - யோதிடும்பேய்
மண்டுபுறங் காட்டினார் வாணனறக் கண்ணனமர்
கண்டுபுறங் காட்டினார் காப்பு. 85

அஞ்சநடையார் மொழியி லையிளைஞர் மெய்யிலுருக்
கஞ்சுகஞ்சே ரின்பக் கலைசையே - யஞ்சக்
கிளத்தலை யோட்டினார் கேதமற நாயே
னுளத்தலை யோட்டினா ரூர். 86

வாணுதலார் பூணுமவர் மையலுறப் பட்டோருங்
காணத் தணியுங் கலைசையே - யேணிவளர்
கையா னடத்தினான் கங்காளன் சங்கரன்வெண்
மையா னடத்தினான் வாழ்வு. 87

மாணிலைமை வாய்மையரும் வாய்ந்தவிழா விண்ணவருங்
காணியவந் தோயாக் கலைசையே - ஆணவமாம்
பாம்புயங்க வாட்டினார் பைம்பொற் - பொதுவரங்கின்
மேம்புயங்க வாட்டினார் வீடு. 88

வேரிமலர்ப் பண்ணையிலு மெய்ச்செல்வர் மந்திரமும்
காரணக்கூ லோங்குங் கலைசையே - வீரமெல்லாம்
மாளத் திகிரியான் மார்பொருவ னைப்பிளந்த
காளத் திகிரியான் காப்பு. 89

தூக்கணங்கன் னார்திருக்குந் தூக்குரைக்கு மாக்கணமுங்
காக்கணங்க ளாருங் கலைசையே - தாக்கணவும்
ஆதிவரா கத்தா னளப்பரிய சேவடியான்
மாதிவரா கத்தான் மனை. 90

ஆனகரு மேதிகளு மாயுமிசை யோருமிக்குக்
கான முழக்குங் கலைசையே - மானமறப்
பற்றிப் பரசினார் பாசத் தளைகளையும்
வெற்றிப் பரசினார் வீடு. 91

செம்மலர்ப்பூம் பொய்கைகளும் தேம்பொழிலிற் கொண்மூவுங்
கம்மிக் குலாவுங் கலைசையே - தம்மையறி
தொண்ட ருளக்கமலர் தோத்திரஞ்செய் வாரன்பு
கண்ட ருளக்கமலர் காப்பு. 92

திங்கணுத லார்குழலிற் செந்தேன் கழனியிற்சேர்
கங்கங் கறுக்குங் கலைசையே - கொங்கிமயக்
கொம்பா ரிடத்தினார் குண்டுவயிற் றுக்குறுந்தாள்
வெம்பா ரிடத்தினார் வீடு. 93

எட்டுறுபோ கத்தாரு மீர்ங்குமுத முஞ்செய்ய
கட்டிலணை யிற்சேர் கலைசையே - உட்டியா
னத்துவ சத்தினார் நாயேனை யாண்டவிட
பத்துவ சத்தினார் பற்று. 94

மைப்பறழ்க்குக் கோவலரு மங்கையர்சொற் குக்குயிலுங்
கப்பங் கொடுக்குங் கலைசையே - துப்புறுங்கூர்
மத்தோ டணிவார் வளையிழைத்துச் சேர்த்ததவ
ளத்தோ டணிவா ரகம். 95

சுந்தரஞ்சே ராடவருஞ் சூதுமுலை யார்குழலுங்
கந்தனையே யொக்குங் கலைசையே - பந்தஞ்
சிதையத் துதியார் திறங்கண் டவர்தம்
இதையத் துதியா ரிடம். 96

எண்ணேற்ற வுத்தமரு மெண்டிசையுங் காரிகையார்
கண்ணோட்டஞ் செய்யுங் கலைசையே - பண்ணார்
சுருதிமா வாக்கினார் சுற்றுநரி யெல்லாங்
கருதிமா வாக்கினார் காப்பு. 97

பம்புபெரும் பாக்கியரும் பஞ்சவனக் கிள்ளையும்பூக்
கம்பலத்தி லேறுங் கலைசையே - உம்பரெல்லாம்
வந்தித்த வக்கரையார் மாதுசிவ காமிபங்கர்
பந்தித்த வக்கரையார் பற்று. 98

தண்டிகையே றுஞ்செல்வர் தம்மார்பு நன்மடமுங்
கண்டிகையா ரங்கூர் கலைசையே - வண்டுளருந்
தண்டுளசித் தாமத்தன் றாரமா கப்புணர்ந்த
பண்டுளசித் தாமத்தன் பற்று. 99

ஐவாய வேட்கை யகன்றவரு மாகதருங்
கைவாரஞ் செய்யுங் கலைசையே - மெய்வாழ்வு
நண்ணியபி ராமிதிரு நாடோறும் போற்றிடுஞ்சேற்
கண்ணியபி ராமிபங்கர் காப்பு. 100

*****

வாழியதொட் டிக்கலையூர் வாழி சிவகங்கை
வாழி சிவகாமி வல்லியெந்தாய் - வாழி
புகழ்ச்சிதம்ப ரேசரருள் போற்றுமவ ரன்பர்
மகிழ்ச்சியுடன் வாழி வளர்ந்து.

கலைசைச் சிலேடை வெண்பா முற்றிற்று