சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் - 1. அங்கிள் |
தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் 1. அங்கிள் அவளுடைய பற்கள் அவர் புஜத்தில் ஆழப் பதிந்து பல் பதிந்த குழிகளில் ரத்தம் தளும்பி அரும்பிக் கொண்டு எரிச்சல்... அந்த சிங்கப்பூர் குளோஸ் கட்நெக், அந்த புது ரத்தம் ஊறிப் பரவ ஆரம்பித்தபோது... சாளிப்பிள்ளை வாசலைக் கடந்து லேசாகத் திறந்திருந்த கேட்டின் திறப்பின் வழியே போய் விட்ட அவளைக் கண்களால் துழாவினார். மிஷன் தெருவில் யாருமே இல்லை. வரவில்லை, போகவில்லை. சாளிப்பிள்ளை முற்றத்தில் கிடந்த டர்க்கி டவலை எடுத்து அவள் கடித்த அந்த இடங்களில் ஒற்றியபடியே நீண்ட வராண்டாவைக் கடந்து வாசலுக்கு வந்தார். அவர் கண்கள் மிஷன் மேட்டுத் தெருவை மீண்டும் அளந்தன. எப்படிப் பாய்ந்து ஓடிவிட்டாள்! இமைக்கும் நேரம் இருக்குமா? தேகமே கொதித்து ரத்தமெல்லாம் தலைக்கேறிவிட்டது கொஞ்ச நேரத்திற்குள்... எப்படித் துடித்துப் போனாள் சின்னக் குட்டி. “வாண்டாம் அங்கிள்” “வாண்டாங்கிள்!” “உட்டுடுங்களேன்! உட்டுடுங்களேன்.” மிஷன் தெருவில் யாருமே இல்லை. பூமியே வனாந்தரப் பிரதேசமாகி விட்டதா? வெயில் சுள்ளென்று உறைத்தது. இந்த மாதிரி விஷயங்களில் அவர் படபடத்ததே கிடையாதே! உள்ளே நடந்து வந்தபோது ஏதோ நெஞ்சில் என்றுமே தொடாத ஓர் உறுத்தல் வேதளை மாதிரியும் இருந்தது. இவளுக்காகவா அது! பழங்கணக்கு பாக்குறது மடத்தனம்! மண்ணைத் திங்கற மாதிரி! மண்டையைச் சொறிஞ்சுகிட்டே நின்னா எல்லாம் சரியாப் போயிடுமா என்ன? சித்த நேரத்திலே என்ன பளிச்சினு எல்லாம் நடந்து போச்சு! ரொம்ப நிதானமாவேதான் யோசிச்சு கூட்டிக் கழிச்சுப் பார்த்துத் தீர்மானமா - வேலியோரத்துல தொம்பனுங்க நீட்டமா கூரா ஒரு ஈட்டி வச்சுக்கிட்டு அப்படியே நடந்து அணிலுக்காக நோட்டம் பாப்பானுகளே அது மாதிரி திடீர்னு ‘ச்சதக்!’ ஒரே குத்து, அணில் நிண்டக்கூட முடியாம ஈட்டியோட ஈட்டியா ஆயிடுமே, அது மாதிரி - ரொம்பத் தீர்மானமாத்தான் - செஞ்சது அது! கண்ணாடி முன்னால் சென்று நின்றார் சாளிப் பிள்ளை. கண்ணாடியில் தெரிந்த உருவம் அவரைப் போலத்தான் இருந்தது! ஆச்சரியம்தான். நாற்பத்தெட்டு வருஷங்களாக ஒரே மாதிரியாகவே காட்டிக் கொண்டிருக்கும் இந்த உருவம் அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நேத்திக்குக் கூட அவ சொன்னாளே: “எப்டி அங்கிள் இப்டி முடி - சுருள் சுருளா! அம்மாடி! நீங்க எப்டி இத சீவுறீங்க? கொத்து கொத்தா எப்டி இருக்கு! நான் சீவி உடட்டுமா அங்கிள்?” அவர் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே இருந்த டேபிளில் அந்தப் பெரிய கண்ணாடியைக் கொண்டு வந்து வைத்து அவள் அவர் தலைமுடியைச் சீவி விரல்களால் அளைந்து ஒதுக்கி நடுக்கோடு எடுத்து இருபுறமுமாக வெள்ளம் போல பிரித்து சுருள் சுருளாக அடங்காத அந்த தலை முடிகளுடன் இழையும் போது சிறு மூச்சாக அவள் மூக்கிலிருந்து வரும் காற்று அவர் மார்பில் வீசியது. அவள் புருவத்தைச் சுற்றிலும் மணி மணியாய் வியர்வை அரும்பி சரங்கட்டி நிற்க, விம்மி விம்மி இழையும் மேடு பள்ளங்களும், மெல்லியதாய்த் தொங்கும் தங்கச் சங்கிலியின் நுனியில் ஊசலாடும் அந்த தந்தச் சிலுவையும் - வியர்வையும் பௌடரும் கலந்து இழையும் மணத்துடன். அவன் லிடி! லிடியா!... நாக்கை மடக்கிக் கடித்தபடி மும்முரமாக அவள் சீவிவிட்டுக் கொண்டேயிருந்த போதும் ஏற்படாத படபடப்புத்தான்... “என்னா அங்கிள் ஒங்களுக்கு நெறய்ய வெள்ளி முடியா இருக்கு இப்டி?” “நரைச்சா பின்னே தங்க முடியாவா இருக்கும்! ஏண்டி?” “ஏண்டின்னு சொல்லப்படாதுன்னு சொல்லீர்க்கேனா இல்லையா?” “பின்ன என்ன சொல்றது? வாம்மாடி, போம்மாடின்னா சொல்லணுங் குறேயாடீ!” “பாத்தீங்களா... மறுபடியும் சொல்ற்றத்த! இனிமே... போடி, வாடினிங்களோ இஞ்ச வரவே மாட்டேன். ஆமா! பாத்துக்குங்க!” “போடி சர்த்தாம்” “இப்படித்தான் அத்தெயையும், தொறத்தி அடிச்சு கிட்டு ஜிம்ன்னு இஞ்ச வந்து ஒக்காந்திக்கிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கீங்க - ஆட்டம்!” “அவ ஓம் மாதிரி வாயாடி ஒண்ணுமில்ல... ஆமா!” “அத்தெயப் பாத்தா ஏங்கிள் இவ்வளவு கெழவியா இருக்காங்க?” “ஏய் கழுதே, நான் மட்டும் என்ன, கெழவந்தானே!” “ஹ்ஹேய்ன்னானாம். நீங்களா கெழவன்? காலையில் கெணத்தடியில் நீங்க நின்னுகிட்டு தண்ணி எறக்யறத்தெப் பாத்தாப் போதுமே அங்கிள்! தஞ்சாவூர்லே உங்ககிட்ட ஒரு பய போட்டிக்கு நிக்க முடியுமான்ன? அணைக்காட்லர்ந்து வர்றானே சூசைப் பய, அவந் தனியா நின்னு சூளை போட்டு எடுக்கற மாதிரி பட்டாளத்லல்லாம் போயி ஆப்பீசரா யிருந்துட்டு வந்த நீங்க, சூளை போட்டு கல் அறுத்து எடுத்து நீங்களே நின்னு கட்டடமே கட்டிட்டீங்களே!” “அல்லாம் பண்ணாக்க நான் கெழவன் இல்லேன்னு சொல்லுவாங்களா? ஓங்கப்பனே சொல்றானே வயசாச்சுன்னு!” “ஹே! அப்பாவுக்கு என்ன தெரியும் அங்கிள்? ஓங்களெ எனக்கில்ல தெரியும்!” “என்னடி தெரியும் பெரிசா?” “ஆமா, பெரிய பெரிய புஸ்தகம்லாம் படிக்கிறீங்களே... அதெல்லாம் எதுக்கு அங்கிள்? பரிச்சை எழுதப் போற மாதிரிக்கி படிபடிபடின்னு... ராத்திரி ரெண்டு மணி ஒரு மணி வரைக்கும் படிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும் அங்கிள்?” “லிடி! உனக்கு பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகல்லே?” “நாந்தாம் பள்ளிக்கூடம் போறத்தையே ஒரு வாரமா நிறுத்திட்டேன் அங்கிள்! இஞ்சப் பாருங்களேன்!” அவள் தன் கையை உயரத் தூக்கிக் காட்டினாள். இடுப்புக்கு மேலே மார்புவரை ஜாக்கெட் கிழிந்து வாயைப் பிளந்து கொண்டிருந்தது. உள்ளே வெண்மையாக உடல் பளீரிட்டது. புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து உள்ளே போனார் சாளிப் பிள்ளை. அவளும் பின்னாலேயே வந்தாள். பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார். “வாண்டாங்கிள்! மம்மி திட்டுவாங்க!” “நாங்குடுத்தேன்னு சொல்றீ! போ!” “ம்ஹ்ஹும்!” “பள்ளிக்கூடத்ல பேரடிச்சுட்டாங்களே!” “ஏங்கிட்ட ஏண்டி சொல்லல? தடிக் கழுத!” “அங்கிள்! எனக்கே படிக்கப் பிடிக்கலியே!” “எருமை! நாளைக்கே ஒங்க ஸ்கூலுக்கு வர்றேன்! ஒங்கப்பனுக்குத்தான் அறிவே கிடையாது! முண்டம்! ஓங்க ஆயி என்ன பண்ணா?... ஸ்கூலுக்குப் போறதுக்கே புடிக்கலியா? முதுகுத் தோல உறிக்கச் சொல்றேன், ஒங்க ஷிம்மி டீச்சர்ட்டே சொல்லி!” “நாம் போப்போறதில்லன்னா உடுங்களேன் அதோட! நீங்க அத்தையை வெட்டுன்னு உட்டுப்டு இஞ்ச வந்து இருக்கீங்களே, முடிஞ்சா அத்தெயை கொண்ணாந்து வெச்சுக்குங்களேன்... பார்க்கலாம்..” அவர் அறையக் கையை ஓங்கினார்... நிமிர்ந்து நின்றாள், அடி வாங்க. அசந்து போனார். விறு விறுவென்று வாசலுக்கு வந்தார் சாளிப் பிள்ளை, சுவரோரமாக நடந்து மல்லிகைக் கொடியோரம் போய் சுவரை ஒட்டினாற் போல நின்று சுவருக்கப்பால் பார்த்து கத்தினார். “எலிசு! எலிசு!” “ஏம்மாமா?” - பக்கத்து வீட்டுக்குள்ளிருந்து குரல் வந்தது. “இஞ்ச கொஞ்சம் வந்துட்டுப் போறியா?” லிடியாவின் தாய் வருகிறாள். வியர்வை பொழிந்த முகம், கையில் சாணிப் பிசுக்குகள்! ஒரு கையில் உருண்டையாய் சாணி! “ஒம் மகளுக்கு ஒளுங்கா ஒரு சட்டை போட்டு உடக் கூடாதாக்கும் - வயசு பதினெட்டாச்சுங்கிறே இவளுக்கு. எருமை! ஸ்கூலுக்குப் போகாம வேற மட்டம் அடிக்கிறாளாமே! இவ அப்பன் இதயெல்லாம் கேக்கற வேலையே கெடயாது போலருக்கு!” “என்னா செய்யறது மாமா! தஞ்சாவூர் பாரிஷ் என்ன அவ்வளவு பெரிசா என்ன? இருவத்தஞ்சு வருஷமா அவுங்களும்தான் க்ளார்க்காவே இருக்காங்க என்னா செய்யறது, சாமி கிருப பண்ணுவார் பண்ணுவார்னுதாம் பாக்குறேன். எழுவது ரூபா குடுக்குறாங்க டயோசிசன்ல. நானும் மாரியம்மங் கோயிலுக்குப் போயி டீச்சர் வேலன்னுட்டு கிழிக்கிறேன். இவளுக்கு முன்னாலேயே எங்க வீட்ல ஆறு கல்யாணம் பண்ணிக் குடுத்துருக்கேன். இவ ஏழாவதுக்கும் அடுத்தது எட்டாவதுக்கும்! எடி படிக்கிறேன் படிக்கிறேன்னு இண்டஸ்ட்ரியல் ஸ்கூலுக்குப் போறான். இவளுக்குக் கீழே அஞ்சு இருக்கு! அடுத்த பய பெஞ்சமின் கோல்டன்ராக்ல இருந்து பணமே அனுப்ப மாட்டங்கிறான்... - என்னா பண்ணச் சொல்றீங்க, மாமா! சாமி கண்ணெத் தெறந்து பாக்கணும்ன்னு கோயில்லெ போயி பொரண்டு அழாத நாளு இல்ல... ம்ஹ்! என்னமோ படிச்சுத் தொலைச்சா படிக்க வெக்கலாம்ன்னாலும்... படிக்கவும் மாட்டெங்கிறாளே. நாந்தாம் என்ன பண்ணட்டும் சொல்லுங்க...” அழாத குறைதான்! ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினார் சாளிப் பிள்ளை. முகமே பல்லாகி விட்டதோ, எலிசம்மாளுக்கு! “எட்டி அங்ங்ய போயி மாமாவெ தொந்தரவு பண்ணாதெ! சாணி பெசஞ்சு ரெண்டு ராட்டி தட்டுடீன்னேன். அங்ங்ய வந்துட்டாளா?” “எலிசு இவளுக்கு ஒரு சட்டெயாவது ஒளுங்கா தச்சுக் குடு! இப்படியே ரோடெல்லாம் அலைறா! இஞ்ச பாரு இப்டியா?” “நான் என்ன பண்ணட்டும் மாமா! எரும மாட்டுக்கு வயசாறாப்பல வயசாகுது அவளுக்கு, கிழிசலைக் கூட தச்சுப் போட்டுக்கத் தெரியலைன்னா என்னா பண்ணப் போவுதுங்களோ... போங்க... ம்ஹ்... நானும் எம் பொளைப்பும்” - எலிசு உள்ளே போகும் போது குதி போட்டுக் கொண்டு ஓடிய அதே லிடியாதானா இன்று... இன்றும் ஓடித்தான் போனாள் - ஓடித்தான்... கண்ணாடியிலிருந்து கண்னை எடுக்க முடியவில்லை சாளிப்பிள்ளைக்கு. மீண்டும் வாசலுக்கு நடக்கிறார். சொல்ல முடியாத அவசம், நெஞ்சில்! அடிக் கசப்பாக ருசித்தது. வேலியோரம் அணில்கள் துள்ளுகின்றன தொம்பன் ஈட்டியோட வருகிறான். அணில்கள் துள்ளியோடி மறைகின்றன! ஓர் அணிலைக் கூடக் காணோம். வெறும் புல் கொடிகள் காற்றில் தலையாட்டுகின்றன. வேலியோரமாகப் படர்ந்து கிடந்த மயிர்மாணிக்கம் செடி குவியலோரமாக ஊன்றிக் கவனித்துக் கொண்டே நீண்ட ஈட்டியை உறுதியாக ஒரே பக்கம் சாய்த்துப் பிடித்தபடியே கவனமாய் நடக்கிறான் தொம்பன். நீண்ட கழி! நுனியில் இரும்புத் தொப்பி - அதுவும் நீட்டமாக, பலசரக்குக் கடையில் பூராச் சக்கரை கொழவு ஜீனி சுருட்டி கட்டியதுபோல நீண்ட கூர்மையாகப் பளபளத்த தொப்பி, இலைகளின் செடி நுனிகளைத் தொட்டபடி நகர்கிறது. “ச்சதக்!” ‘விச்’ சென்ற ஒரு சப்தம் - இரும்புத் தொப்பி நுனியில் ஓர் அணில் குத்துண்டு சவமாக - தொப்பி நுனி ரத்தத்தில் நனைந்திருக்கிறது. தொம்பன் அதைத் துடைத்துக் கொண்டு - அணிலைப் பையில் ஓலைப் பெட்டியில் போட்டுக் கொள்ள மீண்டும் நெஞ்சில் பிடிபடாத - அது அவசமா? வேதனையா? மீண்டும்... அன்று ஞாயிற்றுக்கிழமை - இதுவும் ஒருநாள்! லிடி ஓடி வருகிறாள்; கையில் மூடிய தட்டுடன் பச்சை ஸாட்டின் பாவாடை. பழசுதான். வெள்ளை ப்ளவுஸ், லேஸ் கட்டிங் கொஞ்சம் தொள தொள வென்றிருக்கிறது! அவள் அம்மாவுடையதோ என்னமோ, மேலே ஓர் அரக்கு கலர் நூல் தாவணி. பின்னல் ரெட்டை! மல்லிகைச் சரம் பிச்சோடாவாகச் சுற்றியிருக்கிறது. கண்கள் மொய்க்கின்றன அவளை! “அங்கிள்! மம்மி - குடுத்துட்டு வரச் சொன்னாங்க. இடியாப்பம். இதுலே தேங்காப்பாலு ஜீனி இல்லியாம்... ஒங்ககிட்டதான் இருக்கே!” - அவள் வைத்துவிட்டு உள்ளே ஓடி ‘கப்போட்டி’ லிருந்து சர்க்கரை பாட்டிலை எடுத்து வருகிறாள் - போடுகிறாள். மல்லிகை மணம் குப்பென்று... மிஷன் தெரு முனையில் எஸ்பிஜி சர்ச் பெல் அடிக்க ஆரம்பித்து விட்டது. ‘டாண் டாண்... டாண் டாண்’ என்று. ஒரு மூன்று நிமிட இடைவெளி விட்டு வேறு ஒரு மணியின் நாதமும் வந்து முதல் மணி நாதத்துடன் கலந்து சுருள்கின்றது. அது, கேடல்ஸ் ரோட் முனையில் இருக்கும் லுத்தர் மிஷன் சர்ச் மணியோசை. “ஐயய்யோ செகண் பெல் அடிச்சுட்டாங்க. அங்கிள் நாம் போறேன்.” “ஏய்? அந்தக் கோட்டை எடுத்துக் குடுத்துட்டுப் போ!” “நேரமாச்சு, நீங்களே எடுத்துக்குங்க! நாம் போறேன்...” “கழுதை! மரியாதையா சொன்னா நீ கேக்கமாட்டே.” அவள் சிட்டாக ஓடி அறைக்குள்ளிருந்து அந்த ட்வீட் கோட்டைக் கொண்டு வந்து அவர் மடியில் போட்டுவிட்டு வாசலுக்குப் பாய்கிறாள். கோவில் மணிகள் கலந்து இசைந்து அவரையே அணைவது போல் பெருகி அழைக்கின்றன. நீண்ட அந்த தேக்கு மர அலமாரியில் பதித்த கண்ணாடி முன் நின்று வெள்ளை பனியனைப் போட்டுக் கொண்டார். உடலை மணத்துப் பார்ப்பது போல முகர்ந்து கொண்டார். யாட்லி பௌடர் மணம் அறையில் நிறைந்தது. ட்வீட் பாண்டைப் போட்டு ஸில்க் ஷர்ட்டையும் அணிந்து ‘இன்’ பண்ணி பெல்டையும் போட்டு கோட்டையும் டையையும் சரி பண்ணிக் கொண்டு கண்ணாடி முன் நின்றபோது... பத்மா ஞாபகம் வரத்தான் செய்தது. யாராவது சாளிப் பிள்ளையப் பார்த்து ‘நாற்பத்தெட்டு வயதாகிறது’ என்று சொல்லி விட முடியுமா, என்ன? மந்தகாசம் நிறைந்தது! அவர் ஆர்மியில் ஆபிசராகப் போய்ச் சேர்ந்து எஞ்சினியராக உயர்ந்து வடக்கே நைனிடாலில் இருந்த போது திடீரென்று புறப்பட்டு வரும்படி கடிதம், அவசரத் தந்தி யெல்லாம் வந்தது. ஆர்மியில் சேர்ந்த போதிலிருந்தே முரட்டுத்தனமாகவே வாழப் பழகியிருந்த ‘சாள்ஸ்’ இதையும் ஒரு முரட்டு வேலையாகவே ஒப்புக் கொண்டு ஒரே வாரம் லீவில் வந்து தஞ்சாவூரில் மிஷன் ஸ்ட்ரீட்டில் அறுபத்தொம்பதாம் நெம்பர் வீட்டில் மாலைகளும் பூக்களும் நிறைய வாழை மரங்களும் தோரணமுமாக தடபுடல் பட்டுக்கொண்டிருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் தனக்குக் கல்யாணம் என்பதே புரிந்தது. அவள் தான் பத்மா! அவர் மனைவியாம் அவள். பம்பாயில், லக்னோவில், துர்க்காபூரில், நாக்பூரில், காஷ்மீரில் - இப்படிப் பல ஊர்களிலும் இருந்ததைப் போலவேதான் அன்று தஞ்சாவூரிலும் ஒரு பத்மாவைக் கலந்து கொண்டார் சாள்ஸ்! கல்யாணம்தான் புதிது! “சாள்ஸ் இன்பராஜ் தானியேலுக்கும் - பத்மா க்றிஸ்டீனாள் நேசமணிக்கும் தூய பேதுருவின் ஆலயத்தில் பரிசுத்த விவாகம் நடப்பதாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி திருமணம்...” பெண்களைப் பொறுத்தவரை சாள்ஸ் பிள்ளை, பேதமில்லாத மனிதர். ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவம் பூண்டவர். பதினெட்டு வயதில் இண்டர் பாஸ் செய்தபின் அவர் போட்ட ஆட்டங்களுக்கு அளவே கிடையாது! பத்மாவை மூன்றே நாட்களில் பிரிந்தவர் அவர். கடிதம் கூட எழுதவில்லை. பம்பாயில் அவரோடு ஒட்டிக் கொண்டே அலைந்தாளே அந்த குல்ஹர்னி, அவளுக்கும் இவளுக்கும் வித்தியாசம் என்ன இருந்தது! பத்தோடு பதினொன்று! திரும்பி, கூடத்தில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவைப் பார்த்தார் சாளிப் பிள்ளை. மெதுவாக நடந்து அருகே வந்து உற்றுப் பார்த்தார். ஆமாம்! முப்பது வருடமாகப் பிடிபடாத அந்த வேதனை. இதோ இன்று அவசரமாய் உருவெடுத்து விட்டது. என்ன அது? ஏன் அது? என்ன சொல்லி உதறினாள்? “வாண்டாங்கிள்! வாண்டாம்!” கதவுகள் சாத்திக் கிடக்கின்றன! அவரும் அவளும் மட்டும் யாரும் எட்டமுடியாத, எட்டினாலும் நெருங்க முடியாத, நெருங்கினாலும் தொடவே முடியாத கோட்டைக்குள். அந்த சிவந்த உடலும், போர்வைபோல் அவிழ்ந்த கூந்தலும் பத்துப் பதினைந்து விநாடிகள் கசங்கிப் புழுங்கின! “உட்டுடுங்களேன்! உட்டுடுங்களேன்!” கடிவாளத்தைப் பிடித்தால், பின் குதிரை திமிறுமா? பூனை சீறுவது போல - அவள் சீறியும் - பூனைதான்; புலியல்ல! ஆனாலும் பூனைதானே! பூனையா அணிலா! குத்தீட்டி நீண்டு வருவதும் புலப்பட்டது... அணில்தான்! அந்த ஞாயிற்றுக்கிழமைதானே அந்த இன்னொரு சம்பவமும் - கோட்டை அணிந்து கொண்டு வாக்கிங் ஸ்டிக்கையும் கையில் எடுத்துக் கொண்டு கதவைச் சாத்திப் பூட்டிவிட்டு வெளியே வந்தார் சாளிப்பிள்ளை கோவிலில் ஆராதனை துவங்கி விட்டது. வேகமாக நடந்தார். மிஷன் மேட்டுத்தெரு வழியே சந்நிதித் தெருவை அடைந்தார். சந்நிதித் தெருவிலிருந்து சர்ச் காம்பவுண்ட்டுக்குள் நுழைந்த போது, ஒண்ணரை பர்லாங்கு துரத்தில், பள்ளிக்கூட மைதானம். மைதானத்தின் கோடியில் கல்லறைத் தோட்டம் சுவர் ஓரமாகப் பச்சைப் பாவாடையும் அரக்கு கலர் தாவணியுமாக - யாரது? கோயிலுக்குப் போகவில்லையா? அவள் கூட யார்? நீலக்கலரில் பேண்ட் - யாரது? வெள்ளை ஷர்ட்! யார்? யாரது? மறைந்து விட்டார்கள். கிரௌண்டில் யாருமே இல்லை! எல்லோரும் கோவிலினுள்? சுற்றிலும் ஒரே அமைதி, கோவிலிலிருந்து கிளம்பும் கீர்த்தனை, ஆர்கன் இசையோடு இழைய இழையக் கேட்கிறது. யாரது அவளுடன்? புளிய மரங்களிடையே மறைந்து விட்டனர். மெதுவாக நடந்தார். இறைந்தது! ஏன் இந்தப் பரபரப்பு? வேகமாக நடக்கிறார். கால் மணி நேரம் ஆகிறது. கோவில் கட்டடம் முழுவதையும் கடக்க. புளிய மரங்களிடையே ஒற்றை அடிப்பாதை நாயுருவிச் செடிகளும் கரம்பைச் செடிகளும் ஆள் நடமாட்டமற்ற குழலை ஞாபகப் படுத்தின. பாம்புபோலக் கிடந்த ஒற்றையடிப் பாதை காற்று பிரமாண்டமான புளிய மரங்களிடையே ‘ஹோ’ வென்று அலைத்தது. சாளிப் பிள்ளை நடந்தார். கல்லறைத் தோட்டம். வெயில் அதிகமில்லாத நிழல் கூடுகள். புளியம்பூக்கள் வாடி உதிர்ந்து உதிர்ந்து காய்ந்து வழியெல்லாம் மெத்தை யிட்டிருக்கின்றன. கூரிட்ட அமைதி. ஏராளமான கல்லறைகள். ஆயிரக்கணக்கில் இருக்கும். சிறிசும் பெரிசுமாக ஆயிரக்கணக்கான சிலுலைகள், மார்பிள், கருங்கல், மரம், இரும்பு இப்படி பலவற்றில் செதுக்கிய சிலுவைகள். சில கல்லறைகளில் சம்மனசுகள் பறப்பதுபோல, தேவ தூதர்களின் சிற்பங்கள். சிறு குழந்தைகள் இறக்கை மூளைத்த மார்பிள் குழந்தைகள்! ஒவ்வொரு கல்லறையிலும் பையின் வாக்கியங்கள் செதுக்கியிருக்கின்றன. இடையிடையே புளிய மரங்கள், புன்னை, நொச்சி மரங்கள். கூம்பாரம் கூம்பாரமாக மல்லிகைச் செடிகள். இடையிடையே சிலுவைகள்! உள்ளே நடக்கிறார் சாளிப்பிள்ளை. யாரையுமே காணோமே! அப்படியானால்... பார்த்தது பொய்யா! நிழல் பூத்துக் கிடக்கிறது எங்கும். கல்லறைத் தோட்டம் என்கிறார்களே. இதற்குத்தானோ? இனிமையான அமைதி, சில்லென்ற காற்று இழைய வீசுகிறது - யாரோ மூச்சு விடுவது போல... ‘ட்விக் ட்விக் ட்விக் ட்ய்யய்யா!’ தனியாக வாலாட்டிக் குருவி கரைகிறது. ‘கீச் கீச்’ சென்று சிட்டுகள் பறக்கின்றன. குத்து குத்தாக வளர்ந்திருக்கும் மருதாணிச் செடிகளின் பின்னால் அந்த நீண்ட கல்லறையின் அடிப்பாகம் லேசாகத் தெரிகிறது. மல்லிகைச் செடிகளின் இடையே இரண்டு வெண்மையான பாதங்கள்! மருதாணியிட்ட விரல்கள்! அதை ஒட்டினாற் போல அதன் மீது புரண்டு கிடக்கும் வேறு இரண்டு புதிய நரம்போடிய பாதங்கள்! சுற்றி வருகிறார் சாளிப் பிள்ளை அமைதி கலையவில்லை! வளையல்கள் ‘ளிக்’ கிட்டுக் குலுங்குகின்றன. கொலுசு மணி கருங்கல் தரையில் உரைகின்றன! பெருமூச்சும் சிறு மூச்சும் சிதறிக் கலவையிடும் ஓசை! மருதாணிச் செடி ஓரமாக அரண்போல நிற்கும் மல்லிகைக் கொடிகளை லேசாக விலக்கி எட்டிப் பார்க்கிறார் சாளிப் பிள்ளை ‘ஹோ’ வென்று காற்று ஓலமிடுகிறது. சுருள் சுருளான அவள் கூந்தல் அவிழ்ந்து பிரிந்து கிடக்கிறது. அவள் கரங்கள் ‘அந்த’ அவனை இறுகப் பிணைத்திருக்கின்றன. ஓசையை வென்று கிடக்கும் மௌனங்கள்! சாளிப் பிள்ளை செடிகளை மிதித்துக் கொண்டுதான் நுழைந்தார். பதறி எழுந்தனர் இருவரும். பலிஷ்டமான இரு கரங்களாலும் அவனைத் தூக்கிப் பிடித்தார். பளார் பளாரென்று அறைகள்! மிருகத்தைத் தாக்குவது போல! சமுதாயமே அவர் நேர்மைக் கரங்களுள் சிக்கி விட்டது போல! தீர்ப்பே இல்லாத காட்டு ஞாயம் போல அறைந்தே அவனைக் கொன்று விடுவார் போல இருந்தது. ஒவ்வோர் அறையும் அவன் உடலெங்கும் கண்மண் தெரியாமல் விழுந்தது. குறுக்கும் நெடுக்குமாக மிதித்தார். “ராஸ்கல்! அயோக்கியக் கழுத! இஞ்சியா இந்த வேல! பேஷ்! நல்லாருக்குடா நல்லாருக்கு, ஒங்கொப்பன் மிஷின் ஸ்கூல்ல வாத்தி... இந்த குட்டிய இழுத்துட்டு வந்து... வாடா ஒன்ன இன்னக்கி கொன்னு... உரிச்சி..” வார்த்தைக்கு வார்த்தை உதை, அடி, மிதி! அவள் இற்றுப் போய் சிலையாய் நின்றாள். அந்த ஞாயிற்றுக்கிழமை... அவன் அவர் காலில் விழுந்ததும், அவன் இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது என்று இவர் ஞாயம் விதித்ததும், அத்துடன் அவன் தப்பி ஓடியதும் - அவள் கையைப் பிடித்து பரபரவென்று இழுத்து வந்து எலிசம்மாளிடம் விட்டு கலக்கியதும் - எலிசம்மாள் அலறியதும், மகளை அடித்துக் குவித்ததும் - அவர் அதைத் தடுத்து நிறுத்தியதும்... துள்ளிய மான் வேலியில் சிக்கிக் கொண்டது. லிடியாவின் சிரிப்பு அதன் பின் கேட்பதில்லை. அவள் துணிச்சல் எல்லாம் கதையாகி விட்டது. மௌனம் நெறியாய் வளைந்து கொண்டது. ஊமையாய் வீட்டிலேயே கிடப்பாள். படுக்கையில் விம்மலும் அழுகையும். சாளிப் பிள்ளை கூப்பிட்டனுப்பினால் நடுக்கத்தை அழுந்தப் பிடித்து அடக்கியபடிதான் போவாள். கால்கள் பின்னும். குரல் தழுதழுக்கும். மேகம் மூடிக்கொள்ளும் மழை! அழுகையையும் தாவணி மூளையில் அழுத்தப் பார்ப்பாள். “சாப்பிட்டாச்சா?” “ம்” “அப்பா போயாச்சா?” “ம்” “ஏன் இப்படி இருக்கே?” “ம்!” “இன்னும் அந்த பாண்டிப் பயலை மறக்க முடியல, இல்லையா?” “இல்ல அங்கிள், இல்ல! இனிமே இல்ல, இனிமே இல்ல!” “அதானே பாத்தேன், ஞாபகம், கீபகம் வந்துட்ச்சோன்னு!” “இல்ல அங்கிள்!” “அந்த கதவெச் சாத்திட்டு வா உள்ளற!” வெளியே வெயில் சுள்ளென்று காய்ந்து கொண்டிருந்தது. எதிரே பிரமாண்டமான எஸ்பிஜி சர்ச் கோபுரம். வளைந்த முட்டை போன்ற தஞ்சாவூர் கோயில் கோபுரம்! ப்ளேக் ஐயர் கட்டின பிரமாண்டமான கோபுரம்! சிலுவை கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள். கட்டிலில் உட்கார்ந்திருந்தார் சாளிப் பிள்ளை. அவள் உள்ளே வந்ததும் சொன்னார்: “ந்த ஃபானை போடு!” மின் விசிறி சுழன்றது. “ஷெல்ஃபுல தைலம் இருக்கும் எடு.” எழுந்து கதவை ஒருக்களித்துச் சாத்தினார். “இங்க வா சீக்கிரம்.” புளிய மரங்களும், புன்னை மரங்களும், மருதாணி மரங்களும், மல்லிகைக் கொடிகளும் மறைந்த அந்தப்புரம் இங்கும் உருவாகத் தொடங்கியது. சாளிப் பிள்ளையே இப்படி ஒரு நிலையைக் கற்பனையில் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் புஜங்களிடையில் அவள் சிக்கியதும் அவர் தானே அந்த பாண்டியனாக முனைந்தார்! “வாண்டாங்கிள்! வாண்டாம், உட்டுடுங்களேன் உட்டுடுங்களேன்!” - அலறல். அவள் திமிறினாள் அவள் விழிகள் அருவெறுப்பில் சுழித்தன. அவள் பற்கள் அவர் புஜத்தில் பதிந்தன. ரத்தம்! அவள் தப்பி ஓடினாள். அவள் தாவணி கட்டிலில்தான் கிடக்கிறது. அணிலைத் தேடி நீண்ட குத்திட்டி தரையில் பாய்ந்தது. அணில் எங்கே? வியர்வை ஊற்றாகப் பெருகிக் கொண்டிருந்தது. புஜத்தைப் புரட்டிப் பார்க்கிறார், மறு கையால். அரிசிப் பற்கள் ஏழு குழிகளைச் செதுக்கியிருந்தன. ரத்தம் ஊறியிருந்தது. இரத்தம்! நிமிர்ந்தபோது? கூடத்தில் மாட்டியிருக்கும் சிலுவையில் ரத்தம் கொப்புளிக்கத் தொங்கும் நாயகன் ஓவியம். மைக்கல் ஆஞ்சலோ ரோம் நகரத்து வாட்டிகன் அரண்மனையில் வரைந்த பாணி ஓவியம்! ‘ச்சே! உடல் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்? என்ன ஆகிவிட்டது. மூச்சும் பெருமூச்சும் விடும்படி? பத்தோடு பதினொன்று. அத்தோடு இதுவும் ஒன்று! ஆனாலும் ஒரு சஞ்சலம்! அவசம்! ஏமாற்றம்!’ “திங்கணும்ன்னா சாளி ஒடன்னே தின்னுப்படணும்! ஆமா... அப்புறமா ஐயோ தின்னுருக்கலாமே தின்னுருக்கலாமேன்னு தோணிட்டே இருக்கும்” என்பானே ரத்தன்ராஜ் பயல், அவன் இப்போது எங்கே? மிஷன் தெருவில் அந்தக் காலத்தில் ரத்தன்ராஜும் சாளிப்பிள்ளையும் தின்னாத தீனியா? விரட்டாத பொட்டையா? ஆ! போன வருடம் ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரியில் காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழுகி அழுகி தொடை வரைக்கும் அழுகல் நீண்டு... ரத்தன்ராஜ் சுண்ணாம்புக் காளவாயில் வேகிற நீறு போல கொப்புளித்துக் கொப்புளித்து அடங்கியே போனாயே...! ச்சே! என்ன நினைப்பெலாம் வருகிறது... மெதுவாக நடந்து போய் கண்ணாடி அலமாரியைத் திறக்கிறார். முந்தாநாள் காலையில் கோட்டையிலிருந்து வந்த மோகன்ராம் கொடுத்துவிட்டுப் போன குள்ளமான மூன்று விஸ்கி பாட்டில்களும், படகு மாதிரி செய்த ஒரு நீண்ட கருஞ்சிவப்பு ஷாம்பெய்ன் பாட்டிலும் எதிரே... மணி முணா நாலா... அஞ்சு இருக்குமோ... ‘ட்யொப்’ என்ற கார்க்கு திறக்கும் சப்தம் ட்ரேயிலிருந்த டம்ளரில் ஊற்றியபின், ஒரு நிமிடம் அதையே பார்த்துக் கொண்டிருந்த பின், ‘பக்’ கென்று எடுத்து இரண்டே மடக்கில் விழுங்கினார். அடித் தொண்டையில் தீயால் வருடுவது போல ஓர் அனல். பிரெஞ்சு ஷாம்பெய்ன். அவருக்கு சோடா கலப்புப் பிடிக்காது. ‘ஏடனில் அவர் தங்கியிருந்த வருடங்களில் அவருடன் சுற்றிய ‘மஸ்ஸானா’ என்ற அந்த எகிப்திய பெண்ணுடைய பழக்கம்! அது அவரைப் பிடித்துக் கொண்டது. எழுந்து கிச்சனுக்குச் சென்றார். ‘கப்போர்டைத்’த் திறந்து ஸாஸ்ட்ரேயில் கிடந்த எலுமிச்சம் பழங்கள் இரண்டை எடுத்துக் கொண்டார்... “மஸ்ஸானா”... இரண்டு உயரமான... பெர்ஷியன் க்ளாஸுகளில் நுரையுடன் ‘விஸ்க்கி!’ மீண்டும் ஒரு ரவுண்ட்!... ஹா... மஸ்ஸானா!... எலுமிச்சம் பழத்தை ரெண்டாகப் பிளந்து நாக்கில் உரசிச் சுவைக்கிறார்... சில்லென்று முகத்தில் அடிக்க - உலகம் பற்றி எரிவதுபோல ஜிவ்வென்று... நைனிடால் ஞாபகம் வருகிறது... காக்கி உடைகளுடன் ராணுவ ஜீப்புகளில் இரவுகளில் நைனிடால் ஏரியைச் சுற்றி வருவதும், வானளாவிய பெர்ச் மரங்களும், பைன் மரங்களும் பனி மூட்டத்திற்குள் தலைகளைப் புதைத்துக் கொண்டு... ஏரியில் படகுகள் பாய்மரங்களுடன்... படகுகளில் ரெட்டை ரெட்டையாக ஸ்வெட்டரும் உல்லன் பாண்டுகளும், ஸ்வெட்டருக்குள் குழையும் காஷ்மீர் ஸாரிகளும்... ஆப்பிள் தோட்டம்! அந்த கிறிஸ்தவனாகிவிட்ட த்யாஃபிலஸ்! அவன் தங்கை... முன்னி... அவளுடன் சே... எட்டு டம்ளர்களும் எங்கே போயின? வெளியே வந்தார் சாளிப் பிள்ளை! முதல் முதலாக ஒரு பெண்ணை இப்படி... சில்லென்று காற்று வீசுகிறது. எதிரே பிரமாண்டமான எஸ். பி. ஜி. மிஷன் காம்பவுண்டுக்குள், புளிய மரப் பொதியல்களுக் குள்ளிருந்து வானளாவ எழுத்து நிற்கும் அரை வட்ட வடிவமான வளைந்த முகப்புடைய ரெவரண்ட் ப்ளேக் ஐயர் கட்டின சர்ச்! மாலை ஆராதனைக்கான மணி அடிக்கிறதோ... சந்தேகம்தான். ட்டாண்... ட்டாண்... ட்டாண்! ஓ! இந்த மணியோசை கயிறு போலப் பாய்ந்து வந்து நம்மைச் சுற்றிக் கடைகிறது போல... தாங்க முடியாமல் உள்ளே வருகிறார் சாளிப் பிள்ளை. மேசையில் பைபிள் கிடக்கிறது! எடுக்கிறார். புரட்டுகிறார். பெரியது; கறுப்பு நிறம்... பைபிளுக்கெல்லாம் கறுப்பு நிறம்தான்! மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து ரெண்டு ‘ஸிப்’பில் அதை உறிஞ்சிவிட்டு... கண்கள் பைபிளில் நிலைக்கின்றன... “ஆவியின் வழி இன்னதென்றும் கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்!” நெஞ்சில் மீண்டும் அனல் குழம்பு இறங்குகிறது. ‘அந்தப் பாண்டிப்பயல் எத்தனை பொடியன்... அந்த எடத்துக்கே போயி அப்படியே புடிச்சு... ஹிஹா! என்ன மிருகத்தனமா... ஒதச்சு மிதிச்சு... லிடியெ.... என் வெரலுக்குக் கீழே வெச்சு அமுக்கணும்ன்னு ஒண்ணு எப்ப எனக்குள்ளற கணு உட்டுச்சு? கோயில் ஆர்கன் வாசிப்பானே மார்ட்டின் வாத்தி அவம் மசுந்தானே இந்தப் பாண்டி? ‘பாண்டிப்பயல் லிடி கழுதெக்கு சரியான ஜோடிதான்... ஆனா... நானு யாரு? ஏம் வயசு என்னா? நானு என்னா செய்யணும்? நானு தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு! ஹ்ஹ... ஐயோ, ஏன் அப்படிச் செஞ்சேன்? அவனை அடிச்சுப் புரட்டி ஆ... அவள் அழுத அழுகை...’ “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாமிசத்திலிருந்து தீங்கையும் நீக்கிப் போடு. இளவயதும் வாலிபமும் மாயையே...” “லிடி! என்ன மன்னிச்சுடும்மா...” என்று அலறினார். என்ன? ச்சட்! என்ன இது... “சூரியனும் வெளிச்சமும் அந்த நட்சத்திரங்களும் சந்திரனும் அந்தகாரப் படாததற்கு முன்னும் - மழைக்குப் பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்கு முன்னும்...” “வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப் போய் எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து... பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும்...” “எந்திர சப்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு குருவியின் சப்தத்துக்கும் எழுந்திருக்க வேண்டியதாகி, கீத வாத்தியக் கன்னிகைகள் எல்லாம் அடங்கிப் போகாததற்கு முன்னும்...” “அவரை உன் வாலிபப் பிராயத்தில் நினை!” வாலிபப் பிராயம்.... ஓ! “லிடி! லிடி!” சாளிப் பிள்ளை கதறி அழுதார். எழுந்து கண்ணாடியின் முன் வந்து நின்றபோது, அவர் கிழவனிலும் கிழவனாகி தள்ளாடிக் கொண்டு நிற்பதை அவரே பார்த்தார் - அதோ ஒரு படுகிழவன். தலை வேறு, எங்கு நிற்கிறோம் என்ற பிடிப்பில்லாமல் சரிந்து கொண்டிருந்தது. ஹால் கடிகாரம் எட்டு முறை அடித்த போது விரல்களை விட்டு அவர் எண்ணினார். எட்டாவது அடித்தபின் ஒன்பதாவது அடிக்கிறதா என்று உற்றுக் கேட்டார் - இல்லை; அடிக்கவில்லை. மணி எட்டுதான். வெளியே இருள் பரவியிருந்தது. வயிற்றைக் கலக்கியது. நெஞ்சை எரித்தது. ஓ! இதுவும் வழக்கமாக வருகிறதுதான். முற்றத்தருகே சென்றதுமே வயிறு உறுமியது. இரண்டு விரல்களைத் தொண்டை வரை செலுத்தியதும் வாந்தி ஆகியது. வயிறே அறுந்து வந்துவிடுமோ! இரைந்தது. கும்மளியிட்டது. ஈஸிசேரில் சாய்ந்ததும், அயற்சி உடலை சுருட்டிப் போட்டது... கை தரையில் தொங்கத் தொடங்கியது. நினைவு மறந்தது... திடுக்கிட்டு விழித்தபோது - மன ஒன்பதே முக்கால்... யாரோ கதவை வெகு நேரமாக இடித்திருக்க வேண்டும்... தொடர்ந்து இடிபடும் ஓசை! “யாரது?” “நாந்தாம் மாமா!” “எலிசா?” “ஆமாம், மாமா!” “என்ன வேணும்?” “கதவைத் தெறங்களேன்!” குழப்பம் - லிடியின் தாய் - தாய்க்குத் தெரிந்து விட்டதா? கதவைத் திறந்தார் சாளிப்பிள்ளை . எலிசும் லிடியாவும். படபடப்புடன் விலகி நின்றார். எலிசு உள்ளே வந்து கதவைர் சாத்தினாள். அழுது அழுது முகம் சிவந்திருந்தாள் லிடியா! மூவரும் நடுக் கூடம் வரும் வரை எதுவும் பேசவில்லை. சாளிப் பிள்ளை சிலையாக முயன்றார். “முக்கியமான விஷயமாகத்தான் மாமா இஞ்ச இந்த நேரத்ல வந்தேன். என்னாண்ணாங்க... வந்து... என் மூத்தபய பெஞ்சமின் இருக்காம் பாருங்க, அவன் கோல்டன் ராக்ல ஒரு சட்டக்காரச்சியெ ரிஜிஸ்டர் ஆபீஸ்லெ போயி கல்யாணம் பண்ணிகிட்டான். நேத்துதாம் இவுக அப்பாவுக்கு வெஷயம் தெரிஞ்சு, வயத்துல நெருப்பக் கட்டிட்டு திருச்சிக்கு ஓடினாங்க...” “உம்” “அவளுக்கு ஏக்கனவே ரெண்டு புள்ளெ வேற இருக்காம். இனிமே தஞ்சாவூருக்கு வர மாட்டேன்ட்டானாம் பெஞ்சமின். இந்த மார்மேலியே போட்டு வளத்தேம் மாமா. அப்பனையே செருப்பெ எடுத்துக்கிட்டு அடி அடி அடீன்னு அடிச்சிருக்காம் பாருங்க... பந்த பத்தையா! மூஞ்சி கிஞ்சி எல்லாம் வீங்கிப் போயி திரும்பி வந்திருக்காங்க. இவ என்னடான்னா இப்படிப் பண்ணிருக்கா...” “எப்படி பண்ணிருக்கா?” “போங்க மாமா! எனக்குத் தெரியாதாக்கும் ஒங்க விஷயமல்லாம்! நானும் நாளு எளுத்து படிச்சவதான். எல்லாத்தியும் லிடி வந்து சொன்னா?” “என்ன சொல்ற நீ?” “ஆமா, ஒங்களுக்கு ஒண்ணுமே புரியவேல்ல... நா வந்து புட்டுப்புட்டு எளக்கி எளக்கி சொல்றேன். இனிமேம்க்கும்... போவிங்களா... பேசாம... நாலு மாசமாச்சு அவருக்கு சம்பளம் குடுத்து... டெய்லி முட்டை வேணும், கறி வேணும்... எல்லாத்துக்கும் நானும் என்னதாம் மாமா பண்ணுவேன்?... இந்த மூணு மாசமாத்தாம் மாமா நாங்களும் மனுஷங்களா நடமாடிகிட்டு இருக்கோம்... பெத்தது எல்லாம் இப்படிப் போனாலும், நீங்க கொஞ்சமாவா எங்களுக்கு குடுத்திருக்கீங்க. பத்து பேரு சாப்பிட்டுத் தீக்கற காசு ஒங்குளுது! என்னா கெட்டுப் போச்சு இப்பன்னேன்.” “எலிசு நீ பேசறதே எனக்குப் புரியலை...” “புரியலீல்ல... புரியாது... வந்து எப்படிச் சொல்றது... லிடியாவை ஒங்களுக்குப் புடிச்சிப் போச்சு... அதனால் என்ன... ஒங்களுக்கே அவளக் குடுத்துட்டாப் போச்சு." “என்னது? எனக்கா? லிடியாவையா! கல்யாணமா? சேச்சே என்ன எலிசு இது?” “இல்லேன்னா ஒங்க வீட்லயே வெச்சுகுங்க. கல்யாணம் பண்ணனும்ன்னு நானும் சொல்லலியே! ஆமா, மாமா ஊர் மேலே போயி, கெட்டழியற கழுத ஒழுங்கா ஒருத்தனுக்கு வாக்கப்பட்டா என்ன கெட்டுப்போச்சு? மாமா நேத்து சாயங்காலம் ஆரம்பிச்சு இண்ணைக்கி சாயங்காலம் வரைக்கும் ஒவ்வொரு புதுப்புது நரகமா வந்துட்டே இருக்கு மாமா! என்னா செய்வேன்! சாயங்காலமா ஒக்காந்துட்டு அழுதுட்டிருந்தா என்னாடீன்னா... இப்படி சங்கதிங்கறா... குளிச்சு வேற நாலு மாசமாச்சுன்னா... அப்பா. கொஞ்ச நேரத்துல இவுங்க அப்பா செருப்படி பட்டு ரத்தவிளாறா வந்து சேந்தாரு. சாவலாம்போல வந்தது... என்ன செய்யலாம் மாமா... சாவவும் புடிக்கலியே, என்ன பண்றது...” லிடி சிலைபோல் நின்றிருந்தாள். அவள் அழுது கொண்டிருப்பாள் என்று திரும்பிப் பார்த்தார் சாளிப் பின்ளை - அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள் லிடியா - நீலமான நயனங்கள். கறுப்புப் பென்ஸிலால் இமை வரைந்து தீண்ட பிறை வால் இமைகள்! “இவளெ நீங்க என்ன பண்ணுவீங்கன்னுட்டு எனக்கு தெரியாது மாமா... ஆனா, ஒங்ககிட்டே இவளெ உட்டுட்டுப் போறேன். என்னால் இவளுக்குக் காட்ட முடிஞ்ச வழி இதுதான். அப்புறம் அவ இஷ்டம்! ஒங்க இஷ்டம்; இனிமே அவ இஞ்சதான் இருப்பா!” பிணம் போல நின்றார் சாளிப்பிள்ளை. வெள்ளம் போல வந்த சுழலில் சிக்கிச் சுற்றி ஓய்ந்தே போனார். விம்மல்... சுவரோடு சாய்ந்து அழுதுகொண்டிருந்த லிடியாவை மீண்டும் பார்த்தார்... எலிசு போய்விட்டாளா? வாண்டாம் அங்கிள்! வாண்டாம் அங்கிள்!... உட்டுடுங்களேன் உட்டுடுங்களேன்... அப்படியே பாண்டிப் பயல் சிறு குழந்தையாகி லிடியாவின் வயிற்றில்! ஹ!... மெதுவாக நடந்து சென்று சுவரோடு சாய்ந்து கிடந்து விம்மிக் கொண்டிருந்த லிடியை இரு கைகளையும் கொடுத்துத் தூக்கி நிறுத்தினார். அவள் கண்களைப் பார்த்தார். கண்ணீர் பொங்கி வடிந்து கொண்டே இருந்தது. அவள் அவர் கண்களுக்குள்ளே பார்த்துக் கொண்டே இருந்தாள் - அலை பொங்கி மோதிப் புரண்டது. “அங்கிள்” - ஒரு விம்மலுடன் அவரைத் தழுவிக் கொண்டாள். இந்தப் பிணைப்பில் அந்த வயசு செத்தது! இந்த அணைப்பில் ‘அந்த சுகம்’ செத்தது. இந்த மடியில் அந்த அமைதி அமர்ந்தது. “அங்கிள்” - மீண்டும் ஒரு விசும்பல். (அங்கிள் - 1971) |