மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Madurai Chokkanaathar Tamil Vidu Thoothu - தூது நூல்கள் - Thoothu Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


தி.சங்குபுலவர்

இயற்றிய

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

(கலிவெண்பா)

சீர்கொண்ட கூடல் சிவராச தானி புரந்து
ஏர் கொண்ட சங்கத்துஇருந்தோரும் - போர்கொண்டு 1

இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு
விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே 2

செய்ய சிவஞானத் திரள் ஏட்டில் ஓரேடு
கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால் 3

கூடல் புரந்து ஒருகால் கூடற் புலவர்எதிர்
பாடல் அறிவித்த படைவேளும் - வீடு அகலா 4

மன்னும் மூவாண்டில் வடகலையும் தென்கலையும்
அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் - முன்னரே 5

மூன்று விழியார் முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லின் இசைந்தோரும் - தோன்று அயன் மால் 6

தேடி முடியா அடியைத் தேடாதே நல்லூரில்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 7

மட்டோ லைப் பூவனையார் வார்ந்துஓலை சேர்த்துஎழுதிப்
பட்டோ லை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே 8

ஒல்காப் பெருந்தமிழ் மூன்று ஓதியருள் மாமுனியும்
தொல்காப்பியம் மொழிந்த தொல்முனியும் - மல்காச் சொல் 9

பாத்திரம் கொண்டே பதிபால் பாய் பசுவைப் பன்னிரண்டு
சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் - நேத்திரமாம் 10

தீதில் கவிதைத் திருமாளிகைத் தேவர்
ஆதி முனிவர் அனைவோரும் - சாதி, உறும் 11

தந்திரத்தினால் ஒழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தினால் ஒழித்த வல்லோரும் - செந்தமிழில் 12

பொய்யடிமை இல்லாப் புலவர் என்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள் 13

காடவரும் செஞ் சொல் கழறிற்றறிவாரும்
பாடஅரும் தெய்வமொழிப் பாவலரும் - நாடஅரும் 14

கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்கு உரியர்
எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல் ஆரும் 15

என்னடிகளே உனைக்கண்டு ஏத்தின்இடர் தீருமென்றுஉன்
பொன்னடிகளே புகலாப் போற்றினேன் - பன்னியமென் 16

பஞ்சி படா நூலே பலர்நெருடாப் பாவே கீண்டு
எஞ்சி அழுக்கு ஏறா இயல்கலையே - விஞ்சுநிறம் 17

தோயாத செந்தமிழே சொல்ஏர் உழவர் அகம்
தீயாது சொல்விளையும் செய்யுளே - வீயாது 18

ஒருகுலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய்
வருகுலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் - இருநிலத்துப் 19

புண்ணியம் சேர்உந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காம் கருப்பமாய் - நண்ணித் 20

தலைமிடறு மூக்குரத்தில் சார்ந்து இதழ்நாத் தந்தம்
உலைவிலா அண்ணத்து உருவாய்த் - தலைதிரும்பி 21

ஏற்பமுதல் முப்பது எழுத்தாய்ச் சார்பு இருநூற்று
நாற்பது எழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே 22

எண்முதலாகப் பகரும் ஈராறு எனும்பருவம்
மண்முதலோர் செய்துவளர்க்கும் நாள் - கண்மணிபோல் 23

பள்ளிக்கூ டத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள் இலகு 24

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய் - மஞ்சரையே 25

பன்னிஒரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ - முன்னே 26

நினையும் படிப்பெல்லாம் நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பார் உண்டோ - புனைதருநல் 27

செய்யுள்சொல் நான்கும்உயர் செந்தமிழ்ச்சொல் ஓர்நான்கும்
மெய்உட்பொருள் ஏழ்விதத் திணையும் - மையில் எழுத்து 28

ஆதியாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்ஐந்தும்
பேதியாப் பேரெழில் மாப்பிள்ளையாய்ச் - சாதியிலே 29

ஆங்குஅமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண்
தூங்கல்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்து 30

எண் கருவி ஐந்துஈன்றிடு நூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும் 31

நல்தாரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்று அகலாப் 32

பண்கள்முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத் 33

தாழ்விலா அட்டாதச வன்னனைகள் எனும்
வாழ்வுஎலாம் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ 34

நெடுங்கோல வையையில் என் நேசர்மேல் பட்ட
கொடுங்கோல் செங்கோலாகக் கொண்டாய் - அடங்காத 35

எம்கோவே பத்தென்று இயம் பு திசைக்குள்ளே நின்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கே உன் 36

தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும்
மாசற நீ வைத்த குறுமன்னியரோ - வீசு 37

குடகடலும் கீழ்கடலும் கோக் குமரியாறும்
வடவரையும் எல்லை வகுத்தாய் - இடைஇருந்த 38

முன்உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான
பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ - அந்நாட்டுள் 39

வையை கருவை மருதாறு மருவூர் நடுவே
ஐய! நீ வாழும் அரண்மனையோ - செய்யபுகழ் 40

மூ வேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த
பாவேந்தே நீ பெரிய பார்வேந்தோ - கா ஏந்து 41

விண்ணவரும் காணரிய வேத ஆகமங்கள் எலாம்
புண்ணியனே உன்றன் புரோகிதரோ - எண்ணரிய 42

நல்ல பெருங்காப்பியங்கள் நாடகம் அலங்காரம்
சொல்லரசே உன்னுடைய தோழரோ - தொல் உலகில் 43

சார்புரக்கும் கோவே நல்சாத்திரங்கள் எல்லாம் உன்
பார் புரக்கும் சேனாபதிகளோ - வீரர் அதிர் 44

போர்ப் பாரதமும் புராணம் பதினெட்டும்
சீர்ப்பாவே உன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள் 45

அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக
சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ - சக்கரம்முன்பு 46

ஏந்தி நெடுந் தேர்மேல் ஏறிச் சுழிகுளம்
நீந்திஓர் கூடநிறை சதுக்கம் - போந்து 47

மதுரம் கமழ் மாலைமாற்று அணிந்து சூழும்
சதுரங்க சேனை தயங்கச் - சதுராய் 48

முரசம் கறங்க முடிவேந்தர் சூழ
வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே - அருள் வடிவாய் 49

ஓங்குபுகழ் மூவர் ஒருபஒருபஃதும்
ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் - ஓங்கும் அவன் 50

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோதில்தாய்
மாற்றா இரட்டைமணி மாலையும் - தேற்றம்உற 51

பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து
கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் - கொற்றவருக்கு 52

எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறியக்
கண்ணியம் மிக்க பெருங்காப்பியமும் - நன்ணியே 53

இன்புறு சேரந் அரங்கேற்ற மகிழ்ந்து அம்பலத்தான்
அன்புறு பொன்வண்னத்து அந்தாதியும் - முன்பு அவர்சொல் 54

மாத்தமிழாம் மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள் 55

பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடக மா 56

வெற்புஅனையார் மாதை விமலரிடத்தே இருவர்
கற்பனையால் சொன்ன கலம்பகமும் - முற்படையோடு 57

ஆடல் கலிங்கம் அழித்து ஆயிரம் ஆனைகொன்ற
பாடற்கு அரிய பரணியும் - கூடல் 58

நராதிபன் கூத்தன்எதிர் நண்ணி ஓர்கண்ணிக்கு
ஓராயிரம்பொன் ஈந்த உலாவும் - பராவும் அவன் 59

பிள்ளைத் தமிழும் முன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து 60

வீரியம் செய்து வினையொழியவே ராச
காரியம் செய்யும் கவிதையே - பாரில் 61

அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே - விரிஆவுர் 62

திகழ்பா ஒருநான்கும் செய்யுள் வரம்பாகப்
புகழ் பாவினங்கள் மடைப்போக்கா - நிகழவே 63

நல்ஏரினால் செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்
சொல்லேர் உழவர் தொகுத்து ஈண்டி - நல்லநெறி 64

நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச் செய்விக்கும் நாள் - மேலோரில் 65

பாத்தனதாகக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்
கூத்தன் இவர் கல்லாது கோட்டி கொளும் - சீத்தையரைக் 66

குட்டிச் செவிஅறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த் தூர் - கட்டி 67

வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து - இளங்கனியாய் 68

தித்திக்கும் தென்அமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள் 69

உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் - மண்ணில் 70

குறம்என்று பள்என்று கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ ! திறம்எல்லாம் 71

வந்துஎன்றும் சிந்தாமணியா இருந்த உனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச் சிந்துமே - அந்தரம்மேல் 72

முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம் இலாப் பத்துக்குணம் பெற்றாய் - மற்றொருவர் 73

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோ நீ
நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக் குலவும் 74

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு
ஆன நவரசம் உண்டாயினாய் - ஏனோர்க்கு 75

அழியா வனப்பு ஒன்றுஅலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்பு எட்டு உடையாய் - மொழிவேந்தர் 76

வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார்நீ
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே - பாங்குபெற 77

ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனைப்போலச்
சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் - சேரமான் 78

தன்னடிக் கண்டு தளை விடுத்தாய் ஏழ்தளை உன்
பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ - என் அரசே 79

திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்றஉன்னை
வெண்பா என்று ஓதுவது மெய்தானோ - பண்பு ஏர் 80

ஒலிப்பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய்
கலிப்பா என்று ஓதல் கணக்கோ - உலப்பு இல் 81

இருட்பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை
மருட்பா என்று ஓதல் வழக்கோ - தெருள்பாப் 82

பொருத்தம் ஒருபத்துப் பொருந்தும் உனைத்தானே
விருத்தம் என்று சொல்லல் விதியோ - இருள்குவையை 83

முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல்
வந்து என் மனத்து இருளை மாற்றுமோ - சிந்தா 84

மணி கொடையின் மிக்கது என்பார் வண்கொடையும் உன்பேர்
அணியும் பெருமையினால் அன்றோ - தணியும் 85

துலங்கு ஆரம் கண்டசரம் தோள்வளை மற்றுஎல்லாம்
அலங்காரமே உனைப்போல் ஆமோ - புலம்காணும் 86

உன்னைப் பொருள்என்று உரைக்கும் தொறும் வளர்வாய்
பொன்னைப் பொருள் என்னப் போதுமோ - கன்னமிட்டு 87

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருள் உனைப்போல் எய்தாவே - நன்னெறியின் 88

மண்ணில் புகழ்உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்
விண்ணில் போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணிஉனைக் 89

கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக்கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்தமிழே 90

ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ - பூங்கமல 91

வீடுஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ
ஏடா உன்மேல் இருந்தாளோ - ஆடு அரவத் 92

தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ
சூழ் பாயோடு உன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வே என்று 93

ஓதி முனிகேட்க உனை முருகர் சொன்னாரோ
சோதி யவரை நீ சொற்றனையோ - பேதியா 94

நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ - நீள்மதுரை
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ - பாசமுறும் 95

என்செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால்
உன் செய்தி நானோ உரை செய்வேன் - இன்சொல்லாய் 96

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக என்ற - சொற்குள்ளே 97

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ - சொல்லியஉன் 98

ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் எனின்
நேரடிக்கு வேறே நிலன்உண்டோ - ஓரடிக்கு ஓர் 99

ஆயிரம் பொன் இறைக்கும் இயரை வீதியிலே
போய் இரந்து தூது சொல்லப் போக்கினோய் - ஆயிருந்தும் 100

மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என்வருத்தம்
காண்பாய் என் பெண்மதி நீகாணாதே - ஆண்பனைநல் 101

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்
வண்பதியார் ஒளவைஎன வந்து உதித்தாய் - நண்புஆர் 102

திலகவதியா ருடனே சென்மித்தாய் மாடக்
குல தவ தியானத்தார் கூடல் - பல தவம் சேர் 103

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும்
மானியார் தேசிகனா வந்துஉதித்தாய் - ஞானியார் 104

துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்
சிங்கடிக்கும் தாதையாய்ச் சீர் செய்தாய் - இங்குநீ 105

பெண்கள்எல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்கள் எல்லாம் ஆறப் புரிகண்டாய் - ஒண்கமலத்து 106

அன்னம்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்குஅவரை
இன்னம்தான் கண்டு அறியாது என்பரே - மன்எந்தாய் 107

அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது 108

மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப் பூந்
தானைப் பரமர்பால் சாராதே - ஏனைப்பூங் 109

கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்
ஆகி வலியானுக்கு அஞ்சுமே - ஆகையினால் 110

இந்த மனத்தைத் தூதாய் ஏகுஎன்பேன் இம்மனமும்
அந்த மனோதீதர்பால் அண்டாதே - எந்தவிதம் 111

என்றுஎன்று இரங்கினேன் என் கவலை எல்லாம்பொன்
குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் - சென்றாலும்! 112

பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று
எண்ணிய தொண்ணூற்று ஒன்றெனும் தொடையாய் - நண்நீ 113

ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே
விருது உடையார்க்கு நீ வேறோ - தருமிக்கே 114

ஓர் வாழ்க்கை வேண்டி உயர்கிழி கொள்வான்கொங்கு
தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் - கீரன் 115

இசையா வகையின் இயம்பினான் என்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான 116

பாட்டுக்கு இரங்கி ஒருபாணனுக்குச் சேரலன்மேல்
சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் - பாட்டியலில் 117

நாத்திரமா மேவுபொருள் நன்றா அறுபதெனும்
சூத்திரமாப் பாடியருள் தோற்றமும் - மாத்திரமோ 118

உன்னோடு அவர்விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு
அந்நேரம் உன்பிறகே யார் வந்தார் - மன்னவன் மேல் 119

காரியார் நாரியார் கண்ட கவியைப் பகிர
வாரிஇலாக் கானகத்தில் வந்தவர்ஆர் - நாரினொடும் 120

போற்றிஉறும் பத்திரற்காப் போந்து கிழஉருவில்
தோற்றி விறகு சுமந்தவர்ஆர் - தேற்றி அவற்கு 121

ஈயரிய பொற்பலகை இட்டவர்ஆர் மற்றுஅவன்தன்
நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளைப் - போய்அவையில் 122

தள்ளிஇசை தாபிக்கத் தக்கவர்ஆர் தென்மதுரைக்கு
உள்ளிருந்த சொக்கர் உனக்குள் அன்றோ - எள்ளி 123

வடமொழியில் வேத வசனமே ஈசர்
திட மொழியா என்பார் சிலரே - அடரும் 124

பரசமய கோளரியாய்ப் பாண்டி நாடுஎங்கும்
அரசமயம் நீ நிறுத்தும் அந்நாள் - விரசு நீ 125

ஆதிக்கண் வையையில் வேதாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கிந் ஏடகமே சொல்லாதோ - வேதத்தேவு 126

ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய்
வேதவனம் கண்டால் விளம்பாதோ - வேதம் 127

அமிழ்தினும் மிக்கென்னும் முனிக்கு அன்பர் உனைச் சொன்னார்
தமிழ்முனி என்னும் பேர் தாராதோ - தமிழால் 128

அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார்அத்
திறம் பரமர் வாக்கே செப்பாதோ - மறந்திடல்இல் 129

கற்புஅலகை ஓதுமறை காணார் கீழ் நிற்கவும் நீ
பொன்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரேண்டு 130

எண்இரந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேதப்
பண்நிறைந்த வாசி பகராதோ - அண்ணலார் 131

தென்பால் உகந்தாடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில்
அன்பால் என்று அப்பாலும் ஆரறியார் - உன்பேர் 132

பழிஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா 133

உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தித்
திருவாலவாய் இருக்கும் செல்வர் - ஒரு மால் 134

வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவு என்னத்
தடமதுரை மீன்உயர்த்த தாணு - படர்தீர்க்கும் 135

சத்திபுரத்து ஓர்பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன்
முத்திபுரத்து ஓர்பால் முளைத்து எழுந்தோர் - அத்திசைபோல் 136

ஆங்குஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும்
பூங்கோயிற்குள் உறைந்த புண்ணியனார் - பாங்காம் 137

இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும்
கடம்பவனம் மீதிலுறை காந்தர் - அடும்பேர் 138

அலகு அம்பு அரிக்கும் அரியார் முடிவேய்ந்து
உலகம் பரிக்கும் முறைஉள்ளார் - பலநாளும் 139

நின்றவூர்ப் பூசலார் நீடு இரவெலாம் நினைந்து
குன்று போலே சமைத்த கோயிலும் - நன்றிதரும் 140

தாயான கங்கைமுடி தான் குளிரக் கண்ணப்பர்
வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் - தூயமழைத் 141

துன்புஆர் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்
அன்பாய் அளித்த பரிவட்டமும் - இன்பாத் 142

தணிவுஅரிய மானக்கஞ்சாறணார் சாத்தும்
மணிமுடி சூழ் பஞ்சவடியும் - அணிவிடையார் 143

காமன்பால் முன்சேந்த கண்போல மூர்த்தியார்
தாம் அன்பால் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போல் 144

காக்கும் அரிபுனைந்த கண்மலரும் காதலொடு
சாக்கியர் தாம்சாத்திய பூந்தண்மலரும் - போக்கியமா 145

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்
மார்க்கறியும் தாயர் தரு மாவடுவும் - நீக்கரிய 146

கார்ஆர் இரவில் கணம்புல்லர் தம்முடிமேல்
சீராக ஏற்றிய செந்தீபமும் - ஆரால் 147

அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்குப் பூசை
சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கு அன்பர் 148

அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே
சொற்றமிழ் பாடுகஎனச் சொன்னமையால் - சொற்படியே 149

செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று
வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான் 150

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் - வருந்தினன் மால் 151

வெல்லானை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்
கல் ஆனை தின்ற கரும்பானேன் - நல் அவரைத் 152

தேடு நிழல் சிந்தனையின் தேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தாமரை ஒத்தேன் - ஓடம்மிசைக் 153

கொள்ளம்பூதூர் வெள்ளக் கொள்ளை கடந்தாய் என்மால்
வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ - தள்என்று 154

மாறுஇட்ட சாக்கியரை வன் கழுவேறச் செய்தாய்
சீறிட்ட வேளை அது செய்யாயோ? - நீறு இட்டே 155

அங்குஅரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன்
செங்கரும்பின் கூந் ஒழியச்செய்யாயோ - அங்கம்உறு 156

வெப்புநோய் தீர்க்காய் அவ்வேந்தனுக்கு என்வெவ்விரக
வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ - தப்பு அலவே 157

சாக்கியர் இட்ட நஞ்சுதன்னை அமுதாக்கினை இன்று
ஆக்கிய நஞ்சை அமுதாக்காயோ - நீக்க அரிய 158

வெந்தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காமச்
செந்தீச் சுடாது இருக்கச் செய்யாயோ - வந்து கொங்கில் 159

அப்பனியால் வாடாதே யார்க்கும் துயர்ஒழித்தாய்
இப்பனியால் வாடாது இரங்காயோ - அப்பரை 160

மைக்கடல் கொல்லாதபடி வன்கல் மிதப் பித்தாய்
அக்கடல் கொல்லாமல் உறவாக்காயோ - மிக்கு உயர்ந்த 161

மன்றில் பனைவடிவம் மாற்றினாய் அப்பனைமேல்
அன்றில்புள் வேறொருபுள் ஆக்காயோ - தொன்றுதொட்டுத் 162

தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய்
அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ? - முன்புஇருந்து 163

பாடும் இசை எல்லாம் உன் பாவையராச் சேர்ந்தாய்என்
னோடு முனியாதிருக்க ஓதாயோ - பாடலால் 164

சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்துஅடைந்தாய்
பொன்னே சுடாது அணியப் பூட்டாயோ - முன்இறந்தாள் 165

அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலின்என்
அங்கத்தைப் பூம்பாவை ஆக்காயோ - மங்கத்தான் 166

மாய்ந்தாலும் மாமுதலைவாய்ப் பிள்ளையைப் படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தஉரை 167

செய்தான் என்று என்சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு
எய்தாமல் அங்குஇருக்க எண்ணாதே - பொய்தீரத் 168

தேசு இவரும் சொக்கருக்கே சென்றிருந்து ஆங்கு அவரைப்
பேசி வரும் தூது பிறிது உண்டோ - நேசமொடு 169

தைவரினும் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலால் காட்டி அருள்காளையும் - தெய்வவெள்ளிப்170

பூதர வானவரைப் போற்ற முயன்று ஐயாற்றில்
ஆதரவாய்க் கன்ட அரசரும்- நாதர் 171

அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர்க்
குளம் தனிலே தேடிஅருள் கோவும் - வளம் திகழும் 172

காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து
நீளத்தான் சொற்றவனும் நீயன்றோ - கேள்அப்பால் 173

அம்மை தமக்கு இல்லாதார் அம்மை தாமா இருந்தார்
அம்மை என்று முன்உரைத்த அம்மையார்த் - தம்எதிரே 174

வெள்ஆனை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ஆனை மேற்கொன்ட வித்தகராய்த் - தள்ளாது 175

விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்றுபணிந்து
அஞ்சலி செய்து ஆட்செய்த அன்பராய்ச் - சஞ்சரியாத் 176

தென்கையிலாய வரைச் செல்வர்பால் சென்றாயே
உன்கையில் ஆகாதது ஒன்று உண்டோ - என்கையால் 177

ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம்
சேயும் புரந்திருக்கும் தென்மதுரை - வாய் இனிய 178

செவ்வழியே செல்வாய் நீ செல்வழி நல்வழிதான்
எவ்வழி என்றால் இயம்பக் கேள் - எவ்வழியும் 179

வெல்வாய் உனைநினைந்து வேயுறு தோளி என்று
செல்வார் தம் காரியம் சித்திக்குமே - செல்வாய் 180

தடைஉண்டோ ஐயாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றது அறியேனோ - இடையிலே 181

பாலைநிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னும்அதைச்
சோலைநிலம் ஆக்குவை நான் சொல்லுவதுஎன் - மேலானார் 182

கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக் 183

கற்பார் பொருள்காணார் காசுபணம் காணில் உனை
விற்பார் அவர்பால் நீ மேவாதே - கற்றாரை 184

எள்ளிடுவார் சொல்பொருள் கேட்டு இன்புறார் நாய் போலச்
சள்ளிடுவார் தம் அருகே சாராதே - தெள்ளுதமிழ்ப் 185

பாயிரம்முன் சொன்னபடி படியாமல் குழறி
ஆயிரமும் சொல்வார்பால் அண்டாதே - ஆய்தருநூல் 186

ஓதிஅறியாத ஒண் பேதையருடனே
நீதி முறையா நிகழ்த்தும் நூல் - பேதமையாம் 187

காணாதான் காட்டுவான் தான்காணான் கண்எதிரே
நாணாது இராதே நவிலாதே - வீணாக 188

ஆற்றின் அளவறிந்து கல்லாது அவைஅஞ்சும்
கூற்றினர் பால் ஏகாதே கூடாதே - போற்றாரை 189

வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்விஎன்று
பூண்டாய் நீதானே பொருள் அன்றோ - ஆண்ட 190

வலவா நல ஆவடுதுறையில் உன்போல்
உலவாக்கிழி பெற்றார் உண்டோ - நல இருப்புஅது 191

ஆக்க அரும் செங்கலைப் பொன் ஆக்கினாய் மண் முழுதும்
மாக்கனகம் ஆக்கிவிட வல்லையே - நோக்கு புகார் 192

பாடியதுஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டது நின்கொற்றமே - தேடி அருள் 193

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார் கண் பட்ட திருக் கண்டாயே - கல்லார்பால் 194

ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே - மாகவிஞர் 195

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றரிந்தார் என்னும் - மாமகிமை 196

சேர்ந்தது உன்பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம்
ஆர்ந்தவர்க்கு அல்லாது பசி ஆறுமோ - சேர்ந்து உன்னை 197

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பால் இருந்து தரித்து ஏகி - வம்பாகப் 198

பின்போய் யமன்ஓடப் பேர்ந்துஓடும் வையையிலே
முன்போய் எதிர்போய் முழுகியே - அன்போட 199

தாழ்ந்து நீள் சத்தம் தனைக் கற்றார் உள்ளம்போல்
ஆழ்ந்த அகழி அகன்று போய்ச் - சூழ்ந்து உலகில் 200

மேன்மேல் உயர்ந்துஓங்கு வேதம்போல் மேலாக
வான்மேல் உயர்ந்த மதில் கடந்து - போனால் 201

மிருதி புராணம் கலைபோல் வேறுவேறாக
வரு திருவீதி சூழ்வந்தே - இருவினையை 202

மோதும் சிவஆகமம்போல் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயிலுள் புகுந்து - நீ தென்பால் 203

முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி
தன் நேயம் போலாம் தளவிசையும் - தன் அடைந்து 204

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க
ஏறும் படி நிறுத்தும் ஏணிபோல் - வீறு உயர்ந்த 205

கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன் ஒருநால்
மாமேகம் சேர்ந்தது போல் மண்டபமும் - பூமேவும் 206

மட்டு அளையும் வண்டுஎனப்போய் மாளிகைப்பத்தி அறைக்
கட்டளையும் கண்டு களி கூர்ந்தே - இட்ட மணிச் 207

சிங்கா தனத்தில் சிறந்ததிரு வோலக்கம்
எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ - பைங்கழல் சூழ் 208

தேம்கமலத் தேசு தெரிசனம் செய்து அவர்க்கே
பூங்கமலக் கண் கொடுத்த புத்தேளும் -ஓங்கு அமல 209

மையில் அடியில் வணங்காத் தலை ஒன்றைக்
கையில் அளித்த கடவுளும் - மொய் இழந்த 210

மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு
மானம் தனை வகுத்த வானவனும்- தேன் அங்கு 211

அணி மலர்த்தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே
மணிமுடிகள் நீக்கி வணங்கக் - கணநாதர் 212

ஓதுதுனியோடு சினம் உற்ற பகை செற்ற முரண்
போத முனிவர் புடைசூழத் - தீதுஇல் 213

அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி
தெரிசனக் கண் பார்த்து ஏவல் செய்யப் - பரவியே 214

முன்இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே 215

நதிகள் எனக்கண்டு நந்தி பிரம்பு ஓங்க
உதகம் இருபாலின் ஒதுங்கிப் - பதினெண் 216

குலத்தேவர் தம் மகுடகோடி பதினெட்டு
நிலத்தோர் முடியால் நெரிய - நிலத்தே 217

செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே
இருக்கும் சினகரத்துள் எய்திப் - பொருக்கெனப்போய் 218

எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின்போன
செந்தாமரை போல் திருத்தாளும் - வந்து மனம் 219

தேறிக் கழுத்து அரியத் தென்பாண்டி நாடனுக்கு
மாறித் திரும்பும் மணிக் குறங்கும் - சீறிப் 220

பணிக்கற்கு மாறாப் படைஉடைவாள் சேர்த்து
மணிக்கச்சு உடுத்த மருங்கும் - துணிக்கு அமையத் 221

தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி
உண்டு பசிதீர்த்த உதரமும் - அண்டும் ஒரு 222

தாய்முலைப்பால் உண்டு அறியாத் தாம் பன்றிக்குட்டிகளின்
வாய் முலைப்பால் ஊட்டிய பூண்மார்பகமும் - தூயமுடி 223

ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு
மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப் 224

பூம்படலை ஆத்திப் புனைமலரைப் பூணாமல்
வேம்பு அலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி 225

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்
காதில் புகன்ற கனிவாயும் - தீதுஇல் சொல் 226

வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்குக்
கோயிலாத் தந்த குழைக்காதும் - போய் வணிகப் 227

பெண்நீராள் கண்ணீர் பெருகத் தழுவித் தம்
கண்ணீரால் ஆற்றி அருள் கண்களும் - தெண்ணீரார் 228

பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்
மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண் சுமந்து 229

கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள்உருகித்
தொண்டு செய்து தாள்முடிமேல் சூடியே - மண்டும் 230

உடுக்கலம் தம்கோக்குலம் என்று உற்றறிந்தால்என்ன
அடுக்கு இலங்கு தீபம் எதிராகக் - கடுத்திடேல் 231

வெங்கதிர் உண்டு உன்குலத்து வெண்மதிஉண்டு என்னல்போல்
தங்க ஆரத் தீபம் தாம் அசையத் - துங்க விடை 232

ஏங்கும் ஒருமீன் உயர்த்தின் எங்கிருப்பேன் என்பதுபோல்
ஆங்கு இடபதீபம் அழன்றுஆட - நீங்காது 233

அருள் தாம் மிருகத்துஉரு ஆனார்க்கு உவந்தே
புருடா மிருகத் தீபம் போற்ற - மருவார் 234
வருகுலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன
அருகு உலவும் தட்ட அசைய - இருசுடர்க்கும் 235

சொக்கர் உனைத்தானே சுடர்என்று காட்டுதல்போல்
அக்கரா லத்தி ஒளியாய் விளங்கத் - தக்கவளோடு 236

எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல்போல்
பொற்கும்தீபம் எதிர்போய் வளையச் - சொற்குஉருகும் 237

அற்புஊர் அத்தொண்டர்க்கு அருள்முத்தி ஈதுஎனல்போல்
கற்பூரத் தட்டில் வாய்ப்பப் - பொற்புஆக 238

நம்குலத்தும் வந்துஉதித்தார் நாதர்என்று பானுமகிழ்ந்து
அங்கு உறல்போல் கண்ணாடி அங்கண்உற - இங்குஅரசர் 239

எம்குலத்தார் ஆயினார் என்றுபிறை தோற்றுதல்போல்
துங்க முடிமேல் குடை வெண்சோதிவிடப் - பொங்கிஎழும் 240

முந்துகடல் வெண்திரைகள் முன்னே மாமிக்காக
வந்தவன்போல் வெண்சாமரை இரட்ட - விந்தை செயும் 241

ஆடுஅரவச் சித்தர் இவர் ஆதலினால் ஆலவட்டம்
நீடுஅரவம் போல எதிர்நின்று ஆட - நாடு அகலா 242

வால நறும்தென்றல் நம் மன்னர்என்று காண்பதுபோல்
கோல விசிறி குளிர்ந்து அணுகக் - காலைத் 243

திருவனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து
உருஅனந்த தேவருடனே - மருவி எதிர் 244
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித்
தோற்றரவு செய்து துதித்தன்பின் - ஆற்றல் 245

அரிய சிவஆகமத்தோர் ஆதிசைவர் தம்பால்
உரிய படையா ஒதுங்கி - அருமையுடன் 246

மூவர் கவியே முதலாம் கவிஐந்தும்
மூவராய் நின்றார்தம் முன்ஓதி - ஓவாதே 247

சீபாதம் எண்ணாத தீவினைப்பாவி செய்த
மாபாதகம் தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப் 248

பைந்நாகம் சூழ் மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகம் சூழ்கோயில் கண்மணியே - மன்ஆக 249

மைக்கண் கரும்பை மருவிப் பிரியாத
முக்கண் கனியே முழு முதலே - மிக்க புனல் 250

கங்கா நதிக்கு இறையே கன்னித்துறைக்கு அரசே
சிங்காதனத் துரையே செல்வமே - எம்கோவே 251

நாட விளைஆடி வந்த நற்பாவைபோல் அடியார்
கூட விளையாடி வந்த கோமானே - தேடஅரிய 252

சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடியநாள் ஓடிஎதிர்
வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ - வந்து அருளால் 253

பாவும் புகழ்சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில்
மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ - ஆவலினால் 254

புக்கு வந்தார் தம்மேல் பொடிபோட்டு உளம் மயக்கிள்
சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ - இக்கு அணைத்த 255

அங்கை வேள்தானே அரசாளவும் சிறிய
மங்கைதனைக் கோட்டி கொளல் வல்லமையோ - கங்கை எலாம் 256

நல்ல மைக்கண் ஊடுவர நல்குதியேநல்நங்கை எல்லாம்
வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே - நல்லவர்போல் 257

மைக் குவளைக்கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்
கைக்கு வளை விற்கக் கனக்கு உண்டோ - திக்கு வளை 258

தோள் தாரும் வேம்பாய்த் தொடர்ந்து தொடர்ந்தே ஒருதார்
கட்டாரும் வேம்பு ஆகக் கேட்டோ மே - நாட்டம்உற 259

வேளைஎரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலைகவர்தல்
காளையிடை இருந்து கற்றதோ - மீளாது 260

சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே
இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ - அன்றி அழல் 261

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்
என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் - சென்று ஒருநாள் 262

பொன்னனையாள் வீடும் புகுந்திருக்கலாம் எனின்என்
பொன் அனையாள் வீடும் பொருந்தாதோ - என்னும் மொழி 263

எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க
வல்லாய் உன்போல் எவர்க்கு வாய்க்குமே - நல்லாள் 264

கருணை விழியாள் அங்கயற்கண்ணி தன்னோடு
அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் - திருமதுரை 265

தானே சிவ ராசதானி என்று வீற்றிருந்தால்
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால் 266

அந்தரலோகத்தின் மேலான திருஆலவாய்ச்
சுந்தர மீனவன் நின் சொற்படியே - வந்து 267

துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268

தமிழ் விடுதூது முற்றிற்று




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247