3. தேர்க்கோட்டம் பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப் பேச வேண்டுமென்கிற ஆவலோடு இருந்த தாயையும் ஏமாறச் செய்து சாரகுமாரன் பெரிய பாண்டியரிடம் செல்ல வேண்டியதாயிற்று. "குழந்தை வந்ததும் இங்கே அழைத்து வந்துவிடுங்கள்" என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டுக் காத்திருந்தார் முதிய செழியர். அநாகுலன், திலோத்தமை, பெரிய பாண்டியர் எல்லாரையும் பார்த்து நலமறிந்த சுவட்டோடு உறங்கச் சென்று விட்டார்கள் அவிநயனாரும், சிகண்டியாரும். சாரகுமாரன் பாட்டனாரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு உறங்கப் போகலாமென்று நினைத்திருந்தான். பாட்டனாரோ அவனிடம் - அவனுடைய குருகுலவாசத்தைப் பரிசோதனை செய்து பரீட்சை வைப்பது போன்ற கேள்விகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். சந்ததிகளைப் பற்றிக் கிழவர்களுக்கே இயல்பாக முதுமையில் ஏற்படும் கவலையும் அக்கறையும் பாசமும் அந்த முதியவரைப் பற்றியிருந்தன. பேரப் பிள்ளையை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தவர் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் கேட்டுப் பரிசோதித்து விட்டார். "குழந்தாய்! தேரில் நீ வருகிறபோது வழியில் ஏதாவது விசேஷமுண்டா? இடைநிலத்து ஊர்கள் எல்லாம் செழிப்பாயிருக்கின்றனவா? பயிர் பச்சைகள் எல்லாம் வளமாகத் தெரிகின்றனவா? அரச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இவற்றில் எல்லாம் பொதுவாக ஒரு கவனம் வேண்டும். அரச குடும்பத்தைச் சேர்ந்தவனின் கவனத்துக்கும் கருணைக்கும் எல்லை மிகமிகப் பெரியது, பொதுவானது, பரவலானது! அந்த ஞாபகத்தோடு உலகைப் பார்க்கிற ஞானம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இளமையிலேயே வந்துவிட வேண்டும்." "வருகிற வழியில் பொருநரும் பாணரும், விறலியருமாயிருந்த ஒரு பாணர் கூட்டத்தைப் பார்த்தேன் தாத்தா! அந்தக் கூட்டத்தில் சிலர் கலங்கி அழுது கொண்டிருந்தனர். என்னவென்று அருகில் போய்ப் பார்த்தபோது ஓர் இளம் பெண் மயங்கி விழுந்திருந்தாள். அவளுடைய மயக்கத்தை நீக்கி அந்தக் கூட்டத்தினரின் கலக்கத்தைத் தவிர்த்தேன்... அதோடு..." "அதோடு என்ன?" இளையபாண்டியன் மேலே சொல்லத் தயங்கினான். முதிய பாண்டியர் அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு மீண்டும், "அதோடு என்னவென்பதைத்தான் சொல்லேன்?" என்று அழுத்தமாக வினாவினார். "ஒன்றுமில்லை! அந்தப் பெண்ணை மட்டும் என்னுடன் தேரில் அழைத்து வந்து நமது நகரெல்லையில் இறக்கி விட்டேன். பாவம்! மிகமிகத் தளர்ந்து போயிருந்தாள்..." "துன்புறுகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஆண்கள் பெண்கள் என்று பிரிவோ, பேதமோ இல்லை. ஆனாலும் இளம் பெண்களுக்கு உதவி செய்வதில் கவனமாயிருக்க வேண்டும். உன் உதவி அவர்கள் மனத்தை நெகிழச் செய்யும். முதலில் நன்றி தெரிவிப்பார்கள். அப்புறம் புன்னகை செய்வார்கள். நிறையப் பேசுவார்கள். உன் மனமும் நெகிழும். போகப் போக வேறுவிதமாக ஆனாலும் ஆகிவிடும். இதில் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும். எல்லாருக்குமே இதில் விழுப்புத் தேவை. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கோ அதிகமான விழிப்பும் முன்னெச்சரிக்கையும் வேண்டும். எந்தப் பெண்ணும் ஓர் அரச குமாரனிடம் மயங்குவதற்குச் சாத்தியம் உண்டு. அரச குமாரனோ யாரிடமும் மயங்காத - தயங்காத கடமை வீரனாயிருக்க வேண்டும்." தாத்தாவிடம் அந்த நிகழ்ச்சியைத் தான் சொல்லியிருக்கக் கூடாதென்று அப்போதுதான் இளையபாண்டியன் உணர்ந்தான். அவரோ விடாமல் அதைப் பற்றியே அப்புறம் அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார். "அந்த இளம் பெண் யார் என்று கேட்டறிந்தாயா? அவள் எங்கிருந்து வந்தாளாம்? யாராம்? எந்த ஊராம்? என்ன பெயராம்?" "அவள் கையில் யாழுடன் வந்ததிலிருந்து பாண்குடியைச் சேர்ந்தவளென்று தோன்றியது தாத்தா. அவள் பெயர் 'கண்ணுக்கினியாள்' என்று கூறினாள். மிகவும் அழகான பெயரென்று நான்கூடப் பாராட்டினேன்." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|