விந்தன் நூல்கள்

     புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆன விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்கு மகனாக செப்டம்பர் 22, 1916இல் பிறந்தார்.

     சென்னை சூளைப் பகுதியில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பின்னர் இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

     1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

     மாசிலாமணி முதலியார் நடத்திய ‘தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். விந்தன் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, கல்கி கிருஷ்ணமூர்த்தி ‘கல்கி’ இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார்.

     விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) ‘விஜி’ என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை ‘விந்தன்’ என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி தான். 1946 இல் விந்தன் எழுதிய ‘முல்லைக் கொடியாள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. ‘கண் திறக்குமா?’ என்ற கதையை 1947இல் ‘நக்கீரன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். ‘பாலும் பாவையும்’ என்ற தொடர் ஒன்றை எழுதினார். ‘பாலும் பாவையும்’ விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், அக் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

     சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி.

     ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், ‘அன்பு’ என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

     ‘புத்தகப் பூங்கா’ என்ற பதிப்பகமும் ‘மனிதன்’ என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். ‘அன்பு அலறுகிறது’, ’மனிதன் மாறவில்லை’ என்ற இரு நாவல்களை எழுதினார்.

     எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த போது தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி விந்தன் காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?