முன்னுரை

     இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது; வளர்கிறது, நிறைகிறது.

     தேச சுதந்திர வரலாறும் போராட்டங்களும், பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசீய சமுகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன். அது எந்த அளவிற்குச் சரியான கருத்து என்பதைப் படிக்கிறவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இது ஒரு சத்தியாக்கிரகியின் கதை. அபிப்பிராயங்களை வற்புறுத்தி எதிர்பார்க்க விரும்பவில்லை.

     சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம் தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம் கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால், சுதந்திரம் இன்னும் இருக்கிறது.

     தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேள்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழ்ந்த ஒரு தேசபக்தரின் கதை இது. ஒரு சத்தியாக்கிரக யுகத்து நாவல் என்றே இதை வகுத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்.

     மகாத்மாவின் குரலையும், இந்திய சுதந்திரப் போரின் சங்கநாதத்தையும் இந்த நாவலிலும் கேட்கிறீர்கள். ஒரு மகத்தான தலைமுறையின் மங்கிய முடிவையும், மற்றொரு பரபரப்பான தலைமுறையின் ஆரம்பத்தையும் இக்கதை நிகழ்ச்சிகளாகப் பெற்றிருக்கிறது; இந்தக் கதை நடந்த காலத்து உண்மைத் தேசபக்தர்கள் சிலர் இன்னும் நம்மிடையே இருக்கின்றனர். இதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை அறியவும், உணரவும் அந்த உண்மைத் தேச பக்தர்கள் தான் நமக்கு உரைகல்.

     உலகறிய ஊரறிய நாட்டுக்குத் தியாகம் செய்த ஒருவரும், உலகறியாமல், ஊரறியாமல், அந்தரங்கமாக அவருக்காகத் தியாகம் செய்த ஒருத்தியும், அவர்களுடைய ஆத்மராகங்களும் இந்த நாவல் முழுவதும் சுருதி சுத்தமாக ஒலிக்கின்றன.

     இந்தியாவில் 'காந்தியுகம்' பிறந்து ஒரு நூறாண்டுகள் நிறையும் நல்ல வேளையில் இந்த நாவல் வெளிவருகிறது. இது ஒரு காந்தி யுகத்துக் கதை. ஆனால் காந்தி சகாப்தம் நிறையும் போது வெளி வருகிறது. 'சத்தியாக்கிரகம்' என்ற பதமும் பொருளும் தவத்துக்கு இணையானவை. அந்தத் தேசீய மகாவிரதம் நிகழ்ந்த காலத்தில் நிகழும் கதை இது. இதற்குள்ள பெருமைகள் என இதை எழுதியவன் கருதி கணக்கிடுவனவற்றுள் அதுவே முதன்மையானது; முக்கியமானது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.