ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



1

     டெலிபிரிண்டரில் கிடைத்த கடைசித் தந்தியையும் சேர்த்த பின்பும் கூடப் பதினைந்து வரிகளுக்கு இடம் மீதமிருந்தது. வெளியூர்களுக்கான 'டாக் - எடிஷன்' இறங்கி, 'ஸிடி எடிஷ'னுக்கு மிஷின் தயாராயிருப்பதாக ஃபோர் மேன் நாயுடுவும் எச்சரிக்கை கொடுத்தாயிற்று, நைட் ரிப்போர்ட்டர் நாராயணசாமி கடைசித் தந்தியைச் செய்தியாக்கிக் கொடுத்துவிட்டு, இரண்டு மேஜைகளை இணைத்துப் படுக்கையாக்கிக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தார். ஹால் கடிகாரம் ஒரு மணி அடித்தது. அவ்வளவு பெரிய ஹாலில் நிசப்தத்தை மிரட்டுவது போல் ஒற்றை மணியோசையின் நாத அலைகள் சில விநாடிகளுக்குத் துரத்துவது போன்று சுழன்று கொண்டிருந்தன. நாயுடுவின் குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்.

     "ஸிடி எடிஷன் பேஜ் க்ளோஸ் பண்ணி மிஷின்ல ஏத்தலாமா? கடைசித் தந்திக்குக் கீழாலே இருக்கற எடத்தைக் காலியாவே வுட்டுப்புடறேன்."

     நான் நாயுடுவுக்கு மறுமொழி கூறுவதற்குள் எதிர்பாராத விதமாக டெலிபிரிண்டர் சீறத் தொடங்கியது. ஃபோர்மேன் முகத்தைச் சுளிப்பதைக் கவனித்துக் கொண்டே டெலி பிரிண்டரை நோக்கி விரைந்தேன். தூங்கத் தொடங்கிவிட்ட நைட் ரிப்போர்ட்டரின் உதவியை இனி நான் எதிர்பார்க்கமுடியாது. ஸிடி எடிஷன் மிஷினில் ஏற வேண்டிய அவசியம் நைட் எடிட்டருக்கு இல்லையென்றாலும், பத்திரிகைத் தொழிலைப் பொறுத்தவரை பதவியின் கெளரவத்தை விடத் தொழிலின் நாணயம் பெரிதென்று நினைக்கிறவன் நான். மூன்று நிமிஷம் சீறிவிட்டு டெலிபிரிண்டர் ஓய்ந்தது. அலுமினியம் ஸ்கேலை எடுத்துத் தாளைக் கிழித்தபோது பாதி புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியை புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை.

     "பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தீயக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது."

     - என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங்களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும், புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணீர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகையாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந்திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும் தேசபக்தியும், தீரமும், தெய்வநம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும் நாள்தோறும் பார்த்துப் பார்த்து வேதனையடைந்து கொண்டிருந்தவனுக்குக் காந்திராமனின் மரணச் செய்தி இன்னொரு பேரிடியாயிருந்தது.

     பதவிகளையும் சுயநலங்களையும் துச்சமாக மதித்த கடைசிப் பெரிய மனிதனும் இன்று பாரத நாட்டிலிருந்து மறைந்து விட்டான்! ஒரு வாரத்திற்கு முன்புதான் தேச நலனில் அக்கறை கொண்டு காந்திராமன் சத்திய சேவாசிரமத்திலிருந்து அனுப்பியிருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தேன்; அதில் ஓர் அறிக்கை படைபலத்துக்கு எதிரே சத்தியக்கிரகத்தாலும், அகிம்சையாலும் வென்ற செக்கோஸ்லோவாக்கியாவைப் பற்றியது. 'செக் நாட்டில் காந்தீயம் வெல்கிறது' - என்ற தலைப்பில் காந்திராமன் அனுப்பியிருந்த அந்த அறிக்கையில், 'ஆக்கிரமித்தவர்களுக்குத் தோல்வி; ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் வெற்றி இது' - என்று குறிப்பிட்டுருந்தார். மற்றொரு அறிக்கை நாடு முழுவதும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கும் மாணவர் அமைதியின்மையைப் பற்றியது. நாடு போகிற நிலை பற்றி இந்த இரண்டாவது அறிக்கையில் மகவும் கவலை தெரிவித்திருந்தார் காந்திராமன்.

     அந்த உருக்கமான அறிக்கைகளிலிருந்து பெற்ற ஆறுதலை இன்று நள்ளிரவில் இந்த வேளையில் இழக்கிறேன் நான். நாயுடுவின் குரல் என்னை விரட்டுகிறது.

     "என்னங்க... நியுஸ் எதினாச்சும் உண்டுங்களா?"

     "உண்டு! அவசியம் ஸிடி எடிஷன்லியாவது வந்தாகணும், காந்திராமன் போயிட்டார். கடைசித் தந்தியிலே மீதியிருக்கிற இடத்திலியாவது போட்டாகணும்..."

     நாயுடுவின் முகத்திலும் ஒரு கலக்கம் நிழலிட்டது.

     "இப்பவே மணி ஒண்ணரையாச்சு! மானோ ஆபரேட்டரும் வீட்டுக்குப் போயிட்டானே?"

     "பரவாயில்லை! இந்தப் பத்துப் பதினைஞ்சு வரியை நானே அடிச்சுக் கொடுத்திட முடியும் நாயுடு...."

     "சே! சே! நானே அடிச்சுக்கிறேங்க. நீங்க சிரமப்பட வேணாம். எழுதிக் குடுங்க. தேசத்துக்காக எவ்வளவோ செஞ்சவருக்கு நாம இதுகூடச் செய்யாட்டி... அப்புறம் இந்த நாட்டிலே நாம் பொறந்தோம்கிறதிலே அர்த்தமே யில்லை!.. கடைசிப் பெரிய மனுசனும் போயிட்டான்..."

     நாயுடுவின் பதில் எனக்குத் திருப்தி அளித்தது. மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின்போதுகூட நான் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேனென்பதை விவரிக்க வேண்டியதில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஓர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

     "நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரதமாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜூ! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம் விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வோரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்; ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம் காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?"

     "நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..."

     "கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்."

*****

     - கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது.

     நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று ஸிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம்கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையைவிட இதில் என் சொந்தக்கடமை பெரிதாயிருந்தது. மிகவும் நெருங்கிய ஆத்மபந்து ஒருவரின் மரணத்துக்குப் போவதுபோல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி. எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல், "உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்" என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.

     அப்படி ஒரு வழிகாட்டி இனிமேல் எனக்கு இல்லை என்பதை மனம் ஒப்பி அங்கீகரித்துக் கொள்வது வேதனையாகத் தான் இருந்தது. மனிதனால் லாபத்தை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொள்ள முடிவது போல் இழப்பை அத்தனை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொண்டுவிட முடிவதில்லையே. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக எனக்கு இருந்த ஒரு மகோந்நதமான துணை போய்விட்டது. எனக்கு மட்டுமில்லை, தேசத்துக்கும் தான். குருவையும், தெய்வத்தையும் தேடிக் கண்டுபிடிக்கிறவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை நிறைவதில்லை என்று நம்புகிறவன் நான். பன்னூறு யுகங்களாக இந்திய வாழ்க்கை வழிகாட்டுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. தனி மனிதனாக இந்தியனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி, இது பொருந்துகிறது. ஒரு சமயத்தில் புத்தர் கிடைத்தார்; அப்புறம் கடைசியாக மகாத்மா காந்தி, எனக்குக் காந்திராமன் - எல்லோரும் இப்படித்தான் கிடைத்திருக்கிறார்கள். காந்தியைக் குருவாகக் கொண்டு நானும், இந்தத் தலைமுறையினரும் வாழ்ந்திருக்கிறோம். இந்திய வாழ்க்கையோடு கங்கை நதியையும், இமயமலையையும் போல் குருவும் - குரு பரம்பரைத் தத்துவமும், எவ்வளவு அழகாகப் பிணைந்திருக்கின்றன என்றெண்ணிய போது மெய்சிலித்தது எனக்கு.

     நானறிய, சென்ற நூற்றாண்டு இந்தியன் ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்தான். இந்த நூற்றாண்டு இந்தியன் மனத்தைப் பெரிதாக மதித்து வாழ்கிறான். ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்த காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் நடுவே எவ்வளவோ தூரம் நமக்குத் தெரியாமலே இருக்கிறது. இந்த இரண்டு சகாப்தங்களின் எல்லைகளையும் பார்த்தவர் காந்திராமன். கங்கையின் உற்பத்தியையும், சங்கமத்தையும் பார்ப்பதுபோல், இரண்டு இந்திய சமூகங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இணையற்ற தியாகமும் சத்தியாக்கிரகமும், விரதங்களாயிருந்த காலத்திலும் இந்தியாவில் அவர் வாழ்ந்திருக்கிறார். தீ வைத்தலும், கலவரம் செய்தலும், பிடிவாதங்களாகிவிட்ட காலத்து இந்தியாவிலும் அவர் வாழ்ந்திருக்கிறார். சராசரி இந்தியன் ஆன்மாவை மதித்து வாழ்ந்த காலத்தின் மங்கலமான முடிவும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஆசைகளும் அவை விளையும் மனமுமாக வாழத் தொடங்கிவிட்ட காலமும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி இரண்டு சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்தவரை உலகத்துக்கு வரலாறாக எழுதிக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால், அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை.

     ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ராஜாஜி ஹாலில் வைத்துப் பெரியவர் காந்திராமனுடைய அறுபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது, முதல் முதலாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற என் ஆசையை நான் அவரிடம் வெளியிட்டேன். சிரித்துக் கொண்டே அதை ஒப்புக் கொண்டு இசைவு தர மறுத்துவிட்டார் அவர்.

     "என் மேலுள்ள பிரியம் உனக்கு இந்த ஆசையை உண்டாக்கியிருக்கிறது, ராஜூ! ஒரு மனிதன் உயிரோடு இருக்கிற வரை அவனுடைய வாழ்க்கை வரலாறு பூர்த்தியாகி விடுவதில்லை. உயிரோடு இருப்பவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளில் பொய்யும், மிகைப்படுத்தலும், புனைவுகளுமே அதிகமாக வரமுடியும். ஒவ்வொரு நாளும் நான் டைரி எழுதுகிறேன். ஆனால், அதையும் என் மனத்திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். நான் உயிரோடிருக்கிற வரை என் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடாது என்பதற்கு இப்போது நான் உன்னிடம் சொல்வதைத் தவிரவும் வேறு காரணங்கள் உண்டு, நீயும் தேசமும் என்னுடைய தியாகங்களுக்கு நன்றி செலுத்துவது போல் மறுக்கமுடியாத சில தியாகங்களுக்காக வெளியே கூறமுடியாமல் நான் இதயத்தில் அந்தரங்கமாக நன்றி செலுத்த வேண்டியவர்களும் இருக்கிறார்கள். மனத்தினால் எனக்கு நன்றி செலுத்தும் பல்லாயிரம் அன்பர்களிடமிருந்து நான் அதை ஏற்று இடைவிடாமல் என் ஆன்மாவினால் யாருக்கோ நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த அறுபது வயது வரை குடும்பம் பந்தபாசம் எதுவுமே இன்றிக் கழித்து விட்ட என்னை நீங்களெல்லாம் தேசபக்த சந்நியாசி என்று புகழுகிறீர்கள். என்னை என்னுடைய பொன்னான வாலிபத்தில் சந்நியாசியாக்கியவள் பாரததேவி மட்டுமல்ல; இன்னொருத்தியும் இருந்திருக்கிறாள். இதற்குமேல் என்னால் இப்போது எதுவுமே சொல்ல முடியாததற்காக என்னை மன்னித்துவிடு ராஜூ. இந்த பாரத தேசத்தில் கங்கையும் இமயமலையும் உள்ளவரை நானும் சிரஞ்சிவியாக இருந்து பார்க்கவேண்டுமென்று எனக்குப் பேராசை உண்டு. ஆனால் அது முடியாது. ஒருநாள் நானும் போகவேண்டியிருக்கும். அப்படி இந்தத் தேசத்தைக் காண்பதற்கு என்னைவிட அதிகமான பாத்தியதை உள்ள மகாத்மாவே போய்ச் சேர்ந்துவிட்டார். நான் எம்மாத்திரம்? ஒரு நாவலின் கதாநாயகனை விடச் சுவாரஸ்யமாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆன்மாவினால் வாழ்ந்திருக்கிறேன்; அதுதான் ரொம்ப முக்கியம். ஆன்மவினால் வாழ்ந்த தலைமுறையின் கடைசிக் கொழுந்து நான். எப்போதாவது நான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கை வரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத் தருகிறேன். இப்போது என்னை விட்டுவிடு."

     அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்குமேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன்.

     இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் ஏதும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

     ஃபோர்மேன் ஸிடி எடிசன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து 'எங்கேஜ்டு' ஆகவே இருக்கவே, 'எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே' என்று புறப்பட்டேன்.

     மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்தவால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுட வென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மெண்ட் எஸ்டேட் மரங்களில் காகங்கள் கரையத் தொடங்கி விட்டன. கிழக்குப் பக்கமிருந்து கடற்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது.

     "மதுரையில் யாரோ முக்கியமானவங்க... செத்துப் போயிட்டாங்களாம். ஃப்யூனெரலுக்கு அட்டண்ட் பண்ண மந்திரிகளும், பிரமுகர்களுமா இப்பவே ஏகப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட். டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ், நாலு எம். பி எல்லாம் வராங்க, மார்னிங் மதுரை பிளேன்ல அவங்களுக்கு ப்ரயாரிடி ஸீட் அரேஞ்ஜ் பண்ணனும். இங்கேயே வெயிட்டிங் லிஸ்டிலே பத்துப்பேர் இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலே, சார்!" - என்று மன்னிப்புக் கோரினார், ஏர்லைன்ஸ் புக்கிங் அலுவலர். வீட்டுக்குப் போய்க் காரிலேயே புறப்படுவதென்று முடிவு செய்தேன். காரில் காலை பதினொரு மணிக்காவது மதுரை போய்ச் சேரலாம்; மதுரையிலிருந்து ஒரு மணி நேர டிரைவ் தான். எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஆசிரமத்தில் இருக்கலாம்.

     மறுபடியும் ஆபிஸ்க்கு வந்து சில விவரங்களை எழுதி மேஜையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு ஃபோன் செய்தேன். ரொம்ப நேரம் மணி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கக் கிறக்கத்தோடு டெலிபோனை எடுத்துப் பேசினாள் மனைவி.

     "ராமு இருந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு இங்கே வரச் சொல். அவசரமாக மதுரை போகனும்" - என்று என் மூத்த பையனைக் காருடன் வரச்செய்யும் படி மனைவியிடம் கூறினேன். டெலிபோனை வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது,

     "மதுரை போறீங்களா, சார்? என்ன விசேஷமோ?" என்று கண்ணைக் கசக்கிக் கொண்டே எதிர்ப்பட்ட நைட் ரிப்போர்ட்டரிடம் மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்துச் சுட்டிக் காட்டினேன். அதோடு, "மிஸ்டர் நாராயணசாமி காலையிலே சீஃப் கரஸ்பாண்டெண்ட் வந்ததுமே நான் சொன்னேன்னு ஸிடி ரிப்போர்ட்டரை அனுப்பி, எல்லா வி.ஐ.பி.ஸ்ஸோட கண்டலன்ஸையும் கேட்டு வாங்கிப் போடச் சொல்லுங்கள். இப்படி ஒரு பெரிய மனுஷன் இனிமே தமிழ் நாட்டிலே பிறக்கப்போறதுமில்லே; சாகப் போறதுமில்லே..." என்றேன்.

     "நீங்க சொல்லணுமா? ரியலி ஹி டிஸர்வ்ஸ்..." என்று உருக்கத்தோடு பதில் வந்தது நாராயணசாமியிடமிருந்து. வாசலில் கார் வந்திருப்பதாக நைட் வாட்சுமேன் வந்து கூறவே, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். வீட்டுக்குப் போய் அவசரப் பயணத்துக்கான சிலவற்றை மட்டும் ஒரு பெட்டியில் திணித்துக் கொண்டபின், ஞாபகமாகக் கைக்காமிராவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

     "முந்நூறு மைலுக்கு மேலே நீங்களே ஓட்டிண்டு போயிட முடியுமா; ராமுவை வேணாக் கூட்டிண்டு போங்களேன். ரெண்டு நாள் தானே?" என்றாள் மனைவி.

     "காலேஜ் கெடும், அவன் வேண்டாம்! ஒரு வேளை இரண்டு நாளைக்கு மேலேயும் ஆகலாம்" - என்று அதை மறுத்துவிட்டுக் கிளம்பினேன்.

     கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது மெயின் ரோட்டை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில் மூவர்ணக் கொடி அரைக் கம்பத்தில் இறக்கப்படுவதைக் கவனித்தேன். கீழே சில ஊழியர்கள் கருப்புச் சின்னமணிந்து குழுமியிருந்தனர்; அவ்வளவு அதிகாலையிலேயே செய்தி அந்த ஊருக்கு எப்படிக் கிடைத்ததென்று தெரியவில்லை.

     விழுப்புரத்தில் சாலையோரமாக இருந்த ஒரு நியுஸ் ஸ்டாலில் "தமிழ் நாட்டுக் காந்தி மறைந்தார்" என்ற ஒரே செய்தியோடு ஒரு தேசியத் தமிழ் தினசரியின் வால் போஸ்டர் தொங்குவதைப் பார்த்தேன்.

     திருச்சியில் மெளன ஊர்வலம் ஒன்று மாலையில் நடைபெறுமென்று மலைக்கோட்டையருகே தார் ரோடில் சுண்ணாம்பால் பெரிதாய் எழுதியிருந்தார்கள். கண்ணுக்கு தெரிந்த மூவர்ணக் கொடிகள் எல்லாம் அரைகம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. கதர்ச் சட்டையணிந்த ஒருவன் அமைதியாகக் கையை நீட்டிக் காரை நிறுத்தி, என்னுடைய கதருடையைக் கவனித்து என்னிடமும் ஒரு சிறிய கருப்பு துணித் துணுக்கையும் குண்டூசியையும் நீட்டினார். வாங்கிச் சட்டையில் குத்திக் கொண்டு புறப்பட்டேன்.

     மதுரை போய்ச் சேரும் போதே காலை பதினொன்றரை மணியாகி விட்டது. மதுரை நகரமே துயர வீடு போல் களை இழந்து காணப்பட்டது. ஹர்த்தால் அநுஷ்டித்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வீதிகள் கலகலப்பாக இல்லை. எல்லா கடைகளுமே அடைப்பட்டிருந்ததனால் மிகவும் சிரமப்பட்டு ஒரு பூக்கடைக்காரரின் வீட்டுக்குப் போய் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து ஒரு ரோஜாப்பூ மாலையைத் தொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சேவாசிரமத்துக்குள் பெரியவர் உயிரோடிருந்தவரை யாரும் ரோஜாப்பூ மாலைகளோ வேறெந்த மாலைகளோ கொண்டு போக முடியாது.

     "பாரத மாதாவின் கழுத்தில் நாளைக்கு சூட்டுவதற்காக நானே இங்கு ஆயிரத்தைந்நூறு ரோஜாப்பூ பதியன்களை வளர்த்து வருகிறேன்" என்று தமது ஆசிரமத்தின் மாணவ மாணவிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் பெரியவர். ஒவ்வொரு ஆசிரமவாசியையும் ரோஜாப்பதியனாக உருவகப்படுத்திக் கூறும் அவருடைய கவித்துவத்தை வியந்திருக்கிறேன். நான் முதல் முதலாக இன்று தான் தைரியமாக அவருக்குச் சூட்ட ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெரியவர், மாலைகள் ஏற்பதையும் மரியாதைகள் பெறுவதையும் ஆடம்பரமாகக் கருதி வெறுத்து வந்தார். மாலைக்கு ஆகும் செலவைத் தமது தாழ்த்தப்பட்டவர் கல்வி நிதிக்குத் தரச் சொல்லிக் கேட்பது அவர் வழக்கம்.

     மதுரையிலிருந்து சேவாசிரமமுள்ள கிரமத்துக்குப் போகிற சாலையில் ஒரே கூட்டம். நடந்தும், காரிலும், ஜீப்பிலும், பஸ்களிலுமாக மனிதர்கள் மெளனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லார் மார்பிலும் சட்டைமேல் கருப்புச் சின்னம், நடையில் தளர்ச்சி, முகத்தில் துயரம். துக்கமே ஊர்வலம் செல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு வெளியிலேயே காரை 'பார்க்' செய்து விட்டு மாலையும் கையுமாக உள்ளே நுழைந்த போது அங்கிருந்த சூழ்நிலைகளைப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிடும் போலிருந்தது. இளம்மாணவிகளும், மாணவர்களும் பெரிய ஆலமத்தடியில் குழுமியிருந்தனர். உணர்ச்சி வசப்பட்டுச் சிலர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன். அன்பினால் மனிதர்கள் எவ்வளவு சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள் என்பதைப் பார்த்த போது மனம் நெகிழ்ந்தது. இத்தனை உயிருள்ளவர்களைக் கலங்க வைத்த ஒரு மரணத்தை என்னால் கற்பனை செய்திருக்கக் கூட முடியவில்லை. இந்த மரணத்துக்குக் காவலனே துணிந்திருக்கக் கூடாதென்று தோன்றியது.

     இரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே உறங்குவது போல் மலர் மாலைகளுக்கிடையே அவர் முகம் தெரிந்தது. சுற்றிலும் அசையாமல் மெளனமாய் நிற்கும் மனிதர்கள் சலனமற்றுப் போயிருந்தனர். தலைப் பக்கம் ஒருவர் கீதையும் இன்னொருவர் திருவாசகமும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். வணங்கினார்கள். திரும்பினார்கள். சிலரிடம் அழுகை பீறிக் கொண்டு வெடித்தது; சிலரிடம் மெல்லிய விசும்பல்கள் ஒலித்தன. ஆசிரமத்தில் அவருடைய அறையில் நுழைந்ததும் கண்ணில் படுகிறமாதிரி, 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நியதி, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தோல்வியே இல்லை' - என்று மகாத்மாவின் படத்துக்குக் கீழே எழுதியிருந்ததை இன்றும் காண முடிந்தது. இன்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தங்களின் எல்லை விரிவடைவது போல் உணர்ந்தேன் நான். மாலையணிவித்து விட்டுக் காற்பக்கமாக வணங்கியபின் ஒதுங்கி நின்ற என் காதருகே, "மறுபடி சந்திக்க முடியாத புண்ணிய புருஷர்களை நாம் ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கிறோம்" - என்று துயரத்தோடு மெல்லிய குரலில் கூறினார் ஒரு பிரமுகர். மந்திரிகள், பிரமுகர்கள் தேசபக்தர்கள், கல்வி நிபுணர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து மாலையணிவித்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். தயங்கித் தயங்கி நான் சில புகைப்படங்கள் எடுத்தேன்.

     மாலை ஐந்து மணிக்கு ஆசிரமத்தின் ஒரு கோடியிலேயே தகனக்கிரியை நடந்தது. அவர் ரொம்ப நாளாக விரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தபடி ஆசிரமத்தில் கடைசியாகச் சேர்ந்திருந்த அநாதைச் சிறுவன் ஒருவன் தான் அவருக்குக் கொள்ளியிட்டான். இரங்கல் கூட்டம் ஒன்றும் நடந்த்து. ஆலமரக் காற்றோடும், ஈமத் தீயின் சந்தனப் புகையோடும் மெல்லிய சோக இழைகளாக 'ரகுபதிராகவ' கீதமும் 'வைஷ்ணவ ஜன தோ' வும் ஒலித்தன. ஆசிரமப் பெண்கள் பாடினார்கள்.

     ஒரு சாகப்தம் அங்கே அன்றைய சூரியாஸ்தமனத்தோடு முடிந்து போயிற்று. பெரியவரின் அந்தரங்கக் காரியதரிசி நாராயணராவைச் சந்தித்துப் பெரியவரின் டைரிகளைக் கேட்க எண்ணியும் அன்றிரவு அது சாத்தியமாயில்லை. மறுநாள் காலையிலும் சாத்தியமாயில்லை. பிற்பகல் நாராயணராவைச் சந்திக்க முடிந்தது.

     "பெரியவர் பலதடவை சொல்லியிருப்பது ஞாபகமிருக்கிறது. நேற்று முன் தினம் மாலை வரையில் கூட அவர் டைரி எழுதியிருக்கிறார். நிதானமாக எல்லாம் தேடி எடுத்துத் தருகிறேன். இரண்டு நாள் தங்கிப் போகும்படி வைத்துக் கொள்ளுங்கள். அந்த மகா புருஷனின் வரலாறு வரவேண்டுமென்பதில் உங்களை விட எனக்கு ஆசை அதிகம்" - என்றார் நாராயணராவ். நான் அவருடைய விருப்பப்படியே இரண்டொரு நாள் சேவாசிரம கிராமத்தில் தங்க முடிவு செய்தேன். பெரியவரிடம் அவர் இருந்த போது வாழ்க்கை வரலாறு எழுதும் விருப்பத்தை நான் பிரஸ்தாபித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் "நாராயணராவ்! நான் உயில் எழுதாவிட்டாலும் என் டைரிகளின் உரிமை இவரைச் சேர வேண்டியது தான்; இதை இப்போதே உன்னிடம் சொல்லி வைக்கிறேன்," என்று பக்கத்திலிருந்த தமது காரியதரிசியிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் அவர்.

     'ராஜூ இப்போது பத்திரிகைக்காரராக இருந்தாலும் வக்கீலுக்குப் படித்தவர். டைரிகளை அவரிடம் கொடுக்காவிட்டால் உம்மேல் கேஸ் கூடப் போடுவார், ஜாக்கிரதை!' என்று கூட ஒரு முறை நாராயணராவைக் கேலி செய்திருக்கிறார் பெரியவர்.

     இரண்டு மூன்று நாட்களில் நாராயணராவ் பெரியவருடைய டைரிகள் எல்லாவற்றையும், அவர் மாரடைப்பால் இறந்து போவதற்க்குச் சில மணி நேரங்களுக்கு முன் எழுதியது உட்பட, என்னிடம் ஒப்படைத்து விட்டார். நாராயணராவுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. சென்னை திரும்பியதும் காரியாலயத்துக்கு ஒரு மாதம் லீவு போட்டுவிட்டுப் பெரியவர் காந்திராமனின் டைரிகளில் மூழ்கினேன். சத்தியாக்கிரக வாழ்வில் காந்தியுகம் அளிக்கமுடிந்த ஒரு காவியமாகவே அந்த வாழ்க்கை வரலாறு அமையும்போல் தெரிகிறது. சுதந்திரத்துக்குத் தியாகம் செய்தவர்களின் காலமும் சுதந்திரத்தை அநுபவிக்கிறவர்களின் காலமும் இந்த வரலாற்றில் சந்திக்கின்றன. பெரியவருடைய வாழ்க்கையில் உலகறியாத பகுதிகளும், அவரைத் தியாகியாக்கிய வேறொரு தியாகியின் கதையும் இதன் மூலம் வெளியாகிறது. அவரே சொல்லியதைப் போல் இந்த வரலாறு ஒரு நாவலைவிடச் சுவாரஸ்யமாயிருப்பதாவே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டு வாசித்தாலும் சரிதான். ஒரு வரலாற்றைப் போல எழுத முனைவதைவிட ஒரு கதையைப்போலவே இதை நான் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பெரியவர் தம் வாழ்நாளில் யாரையும் வெறுத்ததில்லை; யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. எனவே அவருக்கு ஒரு காலத்தில் கொடுமை செய்தவர்களைப் பற்றிக் கடும் மொழியில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. இது கதையைப் போல் அமைவதற்கு அதுவும் ஒரு காரணம். 'இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் எனக்குச் செலுத்தும் நன்றியை மனப்பூர்வமாக ஏற்று நான் அதை அப்படியே அந்தரங்கமாகவும், ஆன்ம பூர்வமாகவும் இன்னொருவருக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்," என்று அவர் அடிக்கடி கூறிய அந்த இன்னொருவரைப் பற்றி எழுத முயலும்போது இதில் கவிதையின் மெருகேறிவிடலாம். எப்படியாயினும், இது ஒரு மகா புருஷனின் கதை. சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்த சத்தியசீலரின் வரலாறு என்ற அளவில் இதைப் படைப்பதில் என் திறமை முழுவதையும் செலுத்தி எழுதியே ஆக வேண்டும். அவர் பிரியமாக அமர்ந்து, மாலை வேளைகளில் சத்திய சேவா ஆசிரமத்தின் அன்பு மாணவர்களிடம் உரையாடும் அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்தடியிலிருந்து இந்தக் கதையை நான் எழுதத் தொடங்குகிறேன். அதற்காகவே சென்னைக்குப் போய்ச் சில நாள் தங்கிவிட்டு ஒரு மாத லீவில் நான் மறுபடி இங்கே வந்தேன்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247