15

     ஏப்ரல் மாத முதலில் சிவவடிவேலு பம்பாய் வருவதாக ஆஸ்திரேலியாவிலிருந்து டெலக்ஸ் வந்திருக்கிறது என்றும் சரியான தேதி ஃபிளைட் நேரம் பம்பாய் அரைவல், மெட்ராஸ் அரைவல், மதுரை அரைவல் விவரங்களைப் பின்பு தெரிவிப்பதாகவும் மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்டிலிருந்து ஆடிட்டருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

     சவுத் ஈஸ்ட்டிலிருந்து வருவதாயிருந்தால் பம்பாய் போகாமல் நேராகச் சென்னையிலேயே லேண்டிங் ஆகிற மாதிரி பிளைட் இருக்கலாம் என்று ஆடிட்டர் திரும்ப அவர்களுக்கு எழுதினார்.

     “அது அவர் திரும்புகிற விமானக் கம்பெனியைப் பொறுத்தது. மணிலா டூ துபாய் அண்ட் துபாய் டூ பம்பாய் என்று ஒரு பிளைட் இருக்கிறது. அவர் மணிலா சிங்கப்பூர் எங்கிருந்து புறப்பட்டாலும் பம்பாய் - சென்னை எங்கு வேண்டு மானாலும் வந்து இறங்கலாம். கடைசி போர்டிங் பாயிண்ட் வந்ததும் அதுபற்றி மறுபடி எழுதுகிறோம் என்று டிராவல் ஏஜென்டிடமிருத்து பதில் கிடைத்தது.

     “ஏப்ரலில் நீ டில்லி புறப்பட்டு வா; நாம் சிம்லா போகலாம்” என்று பார்கவிக்குச் சுஷ்மா குப்தா கடிதம் போட்டிருந்தாள்.

     அவள் கடிதத்தை அண்ணன் தண்டபாணியிடம் காட்டி விமான டிக்கெட் எடுத்துத் தரும்படிக் கேட்டாள். தண்டபாணி சிரித்தான்.

     “இப்போ மார்ச் கடைசி வாரம். இங்கே ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ கட்டறது சம்பந்தமாக முக்கிய மீட்டிங் இருக்கு. குப்தா அவன் மனைவி, அஜித், எல்லாருமே குருபுரம் வராங்க. நீயும் இங்கே இருந்தாகணும், ஏப்ரல்லேயே அப்பா ஊர் திரும்புகிறார். அவர் முதல்லே மெட்ராஸ்லே இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிறாரா, பம்பாயில் இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிறாரா என்று இன்னும் உறுதியாகவில்லை. அவரை ரிஸீவ் பண்ண நீயும் இருக்கணும்! இப்போ சிம்லாவில் போய் என்ன பண்ணப் போறே? கோடையிலே குருபுரமே சிம்லாவை விடப் பிரமாதமாக இருக்குன்னு சிம்லாக்காரங்களே கொண்டாடறாங்க. நீ என்னடான்னா சிம்லாவுக்குப் போகணும்கிறியே?”

     “யார் கொண்டாடறாங்க அப்படி?”

     “ஏன்? அஜீத், அவனோட அக்கா சுஷ்மா குப்தா எல்லோருமே குருபுரத்தைக் கொண்டாடறாங்க.”

     “எனக்கு என்னமோ சிம்லாவைத்தான் பிடிச்சிருக்கு அண்ணா!”

     “வேடிக்கைதான். அஜீத் அவனுக்குக் குருபுரம்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நீயோ உனக்குச் சிம்லாதான். பிடிக்குதுன்னு சொல்றே. நீ அங்கே இருக்கறப்போவோ அவன் இங்கே இருக்கறப்போவோ உங்களுக்கு எது பிடிச்ச இடம்ன்னு ரெண்டு பேருமே ஒண்ணும் சொல்றதில்லை.”

     இதைக் கூறிவிட்டுத் தண்டபாணி நமுட்டு விஷமத்தனமாகச் சிரித்தான். “கிண்டல் வேணாம் அண்ணா! நான் சீரியஸாகவே கேட்கிறேன்.”

     “நானும் சீரியஸ்ஸாகத்தான் சொல்றேன். பார்கவி! சிம்லாவே இங்கே வரப்போகுது. நீ ஏன் அங்கே போகணும்ங் கறே?”

     அவள் தலை குனிந்தாள். தான் பிடிபட்டு விட்டோம் என்கிறாற்போல் உள்ளுணர்வு குறுகுறுத்தது அவளுக்கு.

     “பவர் உன்பேர்ல இருக்கு. நிறையக் கையெழுத்து எல்லாம் தேவைப்படும். அஜீத் ஏற்கனவே பதினைந்து லட்சம் இதிலே போட்டிருக்கான். ஸ்விம்மிங் பூல், கார்டன் ரெஸ்டாரெண்ட், ஷாப்பிங் காம்பிளக்ஸ், பெர்மிட் ரூம் இத் தனையோடவும் அனெக்ஸ் கட்டி இன்னும் அறுபது லட்சம் அவன் போடறான். நாம அறுபது போடறோம். அவனே நம்ம போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்ஸா சேர்த்துக்கிறோம். பார்ட்னர் ஆகிறான். அப்பா வர்றதுக்கு முன்னலேயே எக்ஸ்பான்ஷன் ப்ளுபிரிண்ட் ரெடியாகிடணும்,”

     “சரி, நான் இங்கேயே இருக்கேன். ஓ.கே.” என்றாள் பார்கவி.

     “ஏன்? பார்ட்னர் இங்கேயே தேடி வரான்கிறதாலியா?”

     “என்ன சொன்னே?” என்று பொய்யான கோபத்துடன் சீறினாள் பார்கவி.

     “தப்பா ஒண்ணும் சொல்லலே. ஓட்டலோட பார்ட்னர் இங்கேயே வரப்போறார்ன்னு சொன்னேன்” என்று சிரித்து மழுப்பினன் தண்டபாணி.

     பார்கவி உள்ளுர மகிழ்ச்சியில் மிதந்தாள். ‘அஜித் பார்கவியின் பார்ட்னர் ஆகிறான்’ என்ற வாக்கியத்தை எண்ணிக் குறுகுறுப்பு அடைத்தாள். அந்த வாக்கியத்திலேயே இரட்டை அர்த்தம் இருந்தது.

     சிலேடை இரட்டை அர்த்தப் பேச்சுக்களிலே அடிக்கடி கைதட்டல் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த குமரேசன் இப்போது பார்கவியைக் கிண்டல் செய்ய இந்த வாக்கியம் மிகவும் பயன்பட்டது.

     “பார்கவிக்கு ஒரு யங் பார்ட்னர் நார்த்திலிருந்து கிடைக்கிறது நம்ம அதிர்ஷ்டம்.”

     “எந்த இம்ப்ரூவ்மெண்ட்டுக்கும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம்.”

     “பார்கவியின் புதிய பார்ட்னர் ஏற்கெனவே சிம்லாவிலேயும், நைனிட்டால்லேயும் ரெண்டு பெரிய ஓட்டலை சக்ஸஸ் ஃபுல்லா நடத்திக்கிட்டிருக்கான்,” என்று குமரேசன் தற்செயலாக ஏதாவது சொன்னால்கூட அது சிலேடையாகவே குமாரி பார்கவியின் காதில் ஒலித்தது. அவள் நாணி முகம் சிவந்தாள்.

     பார்கவி புது அனெக்ஸ் சம்பந்தமான மீட்டிங்குக்கு வந்த போது குப்தாவே அகமதாபாத்திலிருந்து ஒரு பெரிய ஆர்க்கிடெக்டையும் கையோடு கூட்டிக் கொண்டு வந்திருத் தான். அனெக்ஸ் பில்டிங்கைத் தூரத்திலேர்ந்து பார்க்கறப்ப ஒரு ஜயண்ட் சைஸ் ஓட்டல் அதாவது தாமரைப் பூ தெரியற மாதிரி அமைத்திருந்தான் அந்த இஞ்சினியர். அவனுடைய மாடலும், வரைபடமும் மிக மிக எடுப்பாயிருந்தன. ஸ்விம்மிங் பூல் அருகில் தென்னந்தோப்பின் இயற்கைச் சூழல் கெடாமல் அமைக்கப்பட வேண்டும் என்று அவனிடம் சொன்னார்கள். அனெக்ஸில் ஒவ்வொரு சூட்டுக்கும் ஒரு பால்கனி வருகிற மாதிரிப் பிளான் இருந்தது. அஜித் யோசனை சொல்லித்தான் இந்த ஆர்க்கிடெக்டை அழைத்து வந்ததாகக் குப்தா சொன்னான். அவனும் அவனுடைய மனைவியும் மீட்டிங்குக்குச் சில தினங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து விட்டார்கள்.

     தான் என்ன கேட்கிறோம் என்ற நினைப்பே இன்றி, “நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் வந்தீங்களா அக்கா?” என்று சுஷ்மாவிடிம் பார்கவி கேட்டுவிட்டு அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

     “அஜீத் நாளன்னிக்கு வந்துடறான் அம்மா!” என்று சிரித்தபடி பதில் சொன்னாள் சுஷ்மா.

     “பார்கவி, உன் இந்தி பத்தாது. புதுப் பார்ட்னர் இந்திக்காரன். உன்னோட புரோக்கன் இந்தியை வச்சு இனிமேல் காலந்தள்ள முடியாது” என்று குப்தா அவளைச் சீண்டினான்.

     “ஏன்? அவ பார்ட்னருக்குத் தமிழ் கத்துக் குடுத்துட்டாப் போறது” இது சுஷ்மா.

     “எப்படியானாலும் இந்தப் பார்ட்னர்ஷிப்பாலே ஏதோ ஒரு பாஷை சங்கடப்படப் போறது உறுதி. பார்கவி இந்தி படிச்சா அதுனால இந்தி கஷ்டப்படும், அஜீத் தமிழ் படிச்சா அதுனாலே தமிழ் கஷ்டப்படும்.”

     “இல்லாட்டி ரெண்டு பேருமே கஷ்டப்படுவாங்க.”

     “பாஷையைக் கடந்த உறவு இது. இதுலே பாஷைப் பிரச்சினை வரவே வராது. தமிழ்நாட்டுச் சித்திராங்கதையை வடநாட்டு அருச்சனன் இதிகாச காலத்திலேயே காதலிச்சிருக் கான், அதிலே பாஷைப் பிரச்சினை வரலே. அந்தக் காதல் வெற்றியடைந்திருப்பது இன்று காவியங்களிலேயே பொறிக் கப்பட்டிருக்கிறது,” என்று குமரேசன் பிரசங்கத்தில் இறங்கிய போது,

     “எ பாயின்ட் ஆஃப் ஆர்டர் குமரேசன்! இப்போ நாம பார்கவியோட பார்ட்னர்ஷிப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கோம், வேற எதையும் பற்றிப் பேசலே, ஞாபகமிருக்கட்டும்.”

     “ஆமாம் நானும் பார்கவியோட பார்ட்னர்ஷிப் பற்றித் தான் பேசிக்கிட்டிருக்கேன். கத்தரிக்காய் வெலையைப் பற்றிப் பேசலை.”

     “ஐ மீன் ஓட்டல் நியூ பார்கவி” என்று குப்தா புன்னகை புரித்தான். நியூ பார்கவி என்றதும் குமரேசன் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கினான்.

     “நீ பட்டி மன்றங்களிலே பேசறதை விட்டப்புறமும் எதிர்க்கட்சியை அடிக்கணும்கிற மனப்பான்மையும் தலைவர் மணியடிச்சப்புறமும் விடாமப் பேசிக்கிட்டிருக்கிற பழக்கமும் உன்னைவிட்டுப் போகலே” என்றார் ஆடிட்டர்.

     “எங்கப்பா வந்தப்புறம் நிறைய கட்சி பேசணும்கிற ஆர்வத்திலே பழக்கம் விட்டுப்போகாமல் காப்பாத்திக்கிட்டிருக் கேன் சார்!”

     “அதுக்கெல்லாம் அவசியமே இராது. பார்கவியின் வளர்ச்சியைப் பார்த்துக் குருபுரமே வியந்து போயிருக்கு. உங்கப்பா அப்படியே மலைச்சுப் போயிடுவார்! எதிர்த்துப் பேச ஒண்ணுமே இராது!”

     “நீங்க நினைக்கிறீங்க; அவருக்குப் புதுமைன்னாலே அலர்ஜி, பார்கவியைப் புதுசா மாத்திப்பிட்டோம்கறதே அவருக்குப் பிடிக்காது.”

     “யூ மீன் ஓட்டல் பார்கவி ஆர் யுவர் யங்கர் சிஸ்டர் பார்கவி?”

     “ஐ மீன் போத்...”

     “நியாயந்தான். இரண்டு பார்கவிகளுமே மாறித்தான் போயிருக்காங்க. சல்வார்கம்மீஸோட இந்தப் புது பார்கவி நிக்கறதைப் பார்த்துச் சிவசிவா என்று கண்ணைப் பொத்திக் கொள்ளப் போகிறார் அவர்.”

     “பூனை கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு போய் விடாது.”

     “ஆனால் எலிகள் கவலைப்பட வேண்டியிருக்கும்.”

     “எங்கப்பாவும் நாங்களும் பூனையும் எலியுமா இருக்கோம்னு சொல்றீங்க...”

     “அய்யய்யோ! நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லல சாமீ. உங்க கணிப்பெல்லாம் சரியா இல்லாமப் போனாலும் போகும். மனுஷனோட முக்கால்வாசி முரண்டுக்குக் காரணமே பல இடங்களைப் பார்க்காமல் பழகாமல் கிணற்றுத் தவளையா இருக்கிறதுதான். நாலு இடம் சுத்திட்டுத் திரும்பி வந்தா மனசு விசாலப்படும். விட்டுக் கொடுக்கிற மனசு வரும். பிரயாணம் ஒரு மனுஷனை ஞானஸ்தனாக்கா விட்டால் வேற எதாலயும் அவனை ஞானஸ்தனாக ஆக்கவே முடியாது. உங்கப்பா முக்கால்வாசி இந்தப் பிரயாணத்திலேயே ‘மெல்லோ’ ஆகியிருப்பார்னு நான் நினைக்கிறேன்” என்றார் ஆடிட்டர்.

     “‘மொதலாளி கும்புடறேனுங்க. என்னைக் காப்பாத்த ணும்’னு கரும்பாயிரம் கால்லே விழுந்தவுடனே பிரயாணத்தாலே வந்த அத்தனை ஞானமும் போயிடும் சார்!”

     “தெரியுமா சங்கதி! கரும்பாயிரம் மலையிலே கோயில் முகப்பிலே காண்டீன் போட்டிருக்கானாம், தவசுப் பிள்ளைதான், சரக்கு மாஸ்டர்.”

     “சொந்த ஓட்டல்லியாவது திருடாமே இருப்பாங்கன்னு நினைக்கிறேன். தனக்குத்தானே திருட முடியாது.”

     “பரவாயில்லாமே நடக்குன்னு சொல்றாங்க.”

     “ஜான்சனுக்கு பாஸ்வெல் மாதிரி எங்கப்பாவுக்குக் கரும்பாயிரம்னு சொல்லலாம்.”

     “கரும்பாயிரம் வாட் எ ஃபன்னி நேம். வாட் இஸ் தி மீனிங்...?” என்று குப்தா கேட்டான்.

     “ஒன் தவுஸண்ட் ஷுகர் கேன்னு மொழிபெயர்க்கலாம்.”

     “ஈவன் தென் குமரேசன் ஹாவ் ஏ வெரி பிட்டர் ஒப்பினியன் எபெளட் ஹிம்.”

     “ஆமாம் இது பேய்க் கரும்பு.”

     “அது சரி, அந்த ஆள் ஏன் காதிலே பூ சுத்திக்கிறான்?” இது ஆடிட்டர்.

     “தன் காதுலே சுத்திக்கிறதுக்கு முன்னலேயே எங்கப்பா காதுலே வகையாகச் சுத்திவிட்டிருக்கான்.”

     “சரி, சரி! ஒரே கரும்பாயிரம் புராணமாப் போரடிக்காம விஷயத்துக்கு வா. அந்த அகமதாபாத் ஆர்க்கிடெட் கொண்டாந்திருக்கிற மாடலும் ப்ளு பிரிண்ட்டும் பற்றி என்ன அபிப்பிராயப்படறே?” என்று தண்டபாணி பிஸினஸை நினைவு படுத்தினான்.

     “எனக்குப் பிடிச்சிருக்கு, சவுத்திலேயே இது மாதிரிப் பில்டிங் நம்மதுதான்னு பேர் கிடைக்கும். பிரமாதமா ப்ளான் பண்ணியிருக்கான். ஆடிட்டர் சார் என்ன நினைக்கிறார்ன்னு தெரியலையே?” என்றான் குமரேசன்.

     “லோட்டஸ் நம்ம புராண இதிகாசங்களிலே வர்ற புனித மலர். அதனாலே ராசியாத்தான் இருக்கும். பார்கவிங்கற பேருக்கும் தாமரைக்கும் பொருத்தம் இருக்கு. பார்கவி வாசம் செய்ய ஒரு தாமரைங்கிற மாதிரி ஆயிடும். ரொம்பப் பொருத்தம்.”

     “ஆடிட்டிர் சார் எங்கப்பாவோட பழகிப் பழகி அதே மாதிரிப் பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சுட்டார். ஆர்க்கிடெக்சுரல் ப்யூட்டியைப் போய் ஜோஸியத்திலே பொருத்திப் பார்க்கக் கூடாது. அழகுங்கிறதே ஒரு அதிர்ஷடம்தான் சார். எங்கப்பா ஆயிரம் நாள் நட்சத்திரம் பார்த்து ஆரம்பிச்ச பார்கவி தேறவே இல்லை. அவரை வெளியிலே அனுப்பிச்சு அவர் வேலைக்கு வச்ச ஆளுங்களையும் அனுப்பிச்சுட்டு நியூ பார்க்கவியா மாத்தினப்புறம்தான் லட்சுமி கடாட்சம் பொங்குது இப்ப. நல்ல மனசும் முயற்சியும் இருக்கணும் சார், அது போதும்” என்று குமரேசன் மறுபடி ஆடிட்டிருக்கு ஒரு பிரசங்கம் பண்ணினான்.

     “என்னை விட்டுடுப்பா! போதும்! ஒத்துக்கறேன்” என்று கைகளை மேலே தூக்கி அலறினார் ஆடிட்டர்.

     “இங்கே இத்தினி புரொட்யூஸர் வந்து தங்கறாங்களே, எவனாவது உன்னை ஒரு படத்துக்கு வசனம் எழுதப் போடலாம்பா. ஏன்னா தமிழ்ப் படத்திலேதான் ஒவ்வொரு கேரக்டரும் டயலாக் என்கிற பேர்லே ஒரு மினி பிரசங்கமே பண்ண முடியும்.”

     “புரொட்யூஸருங்க நல்லா இருந்தாத்தான் பார்கவிக்கு நல்லது! இவனை மாதிரி ஆளுங்களைக் கதை வசனம் எழுதச் சொல்லி அவங்க பிழைப்புலே மண்ணைப் போட்டுட்டீங்கன்னா அப்புறம் பார்கவிக்குக் கஸ்டமர்ஸ் இருக்க மாட்டாங்க” என்று தண்டபாணி கவலைப்பட்டான்.

     “நான் இன்னொருத்தனுக்கு ஏன் எழுதணும்? ரெண்டு வருஷம் போனால் நானே படம் எடுப்பேன்” என்றான் குமரேசன்.

     “நீ ஏண்டா படம் எடுக்கணும்? பாம்புதான் படமெடுக்கும். உனக்கு எதுக்கு அந்த வேலை? மறுபடி கடனாளியாகணும்னு ஆசையா இருக்கா உனக்கு?” என்று குமரேசனை ஆடிட்டர் சாடினார்.



பார்கவி லாபம் தருகிறாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20