வஞ்சிமா நகரம் - Vanchimaa Nagaram - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



1. மகோதைக் கரையிலே...

     பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பதுபோல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக்கூட அந்தச் சங்கமத் துறையே படைத்துக் கொடுத்தது.

     அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானியாற்றின் கரையோரமாகவே சென்றால் சேர நாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளூரை அடைந்து விடலாம். கரையோரமாக தென்மேற்கே பத்துநாழிகைப் பயணத்தில் வஞ்சிமா நகரம் இருந்தது. கொடுங்கோளூரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொதுமக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக்கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீப்போலப் பரவிக் கொண்டிருந்தது. பெரு மன்னராகிய கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவ வேந்தர் ஊரிலிருந்தால் கவலை இல்லை. அவரும் பெரும் படைகளோடு இமயத்திற்கும் குயிலாலுவத்திற்கும் சென்றிருந்தார். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் கூட அதிகமான படைவீரர்கள் இல்லை. முசிறியிலிருந்த போர்க்கலங்களையும், கடற்படையையும் கொண்டு ஆந்தைக்கண்ணனை எதிர்க்க முடியுமா? என்பதும் தெரியவில்லை. மகோதைக் கரையின் இருபது காத தூரமும் இதைப்பற்றியே பேச்சாக இருந்தது. கொடுங்கோளூர்க் கோட்டையின் நாற்பக்கத்து வாயில்களையும் கூட அடைத்துவிட்டார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் விரைவாக்கப்பட்டன. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளைய சேரர் இளங்கோ அடிகள் அரச காரியங்களில் ஆலோசனை கூறும் வழக்கமின்மையால் அவரையும் அணுகிக் கேட்க முடியாமலிருந்தது.

     கொடுங்கோளூர்க் கோட்டைப் பாதுகாப்புப் படைத்தலைவன் குமரன் நம்பிக்கு நிலைமையை எப்படி எதிர்கொள்வதென்ற சிந்தனை எழுந்தது. மகோதைக் கரையின் இருபது காத தூரத்தில், பேரியாறு, பொன்வானி, அயிரை போன்ற பல நதி முகத்துவாரங்கள் அங்கங்கே இருந்ததனால் ஒவ்வொரு முகத்துவாரத்திற்கும் பாதுகாப்பு அவசியமென்று தோன்றியது. முகத்துவாரங்களின் வழியாகக் கொள்ளைக்காரர்களின் படகுகளோ, கப்பல்களோ உள்ளே புக முடியுமானால் குட்ட நாட்டு நகரங்கள் எல்லாவற்றையுமே சூறையாடிவிட முடியும். பொன்னும், மணியும், முத்தும், பவளமும் நிறைந்த மகோதைக்கரை நகரங்களின் கதி என்ன ஆகுமோ என்ற பீதி எங்கும் பரவத் தொடங்கியிருந்தது.

     சேனைத்தலைவனும் பெரும்படை நாயகனும் ஆகிய வில்லவன் கோதை மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருந்தான். வஞ்சிமா நகரத்தின் அரண்மனையான கனக மாளிகைக் கோட்டத்தில் அமைச்சர் அழும்பில் வேள் மட்டுமே இருந்தார். செய்தி கனக மாளிகையை எட்டுவதற்கும் அதிக நேரம் ஆகவில்லை. ஆந்தைக்கண்ணன் மகோதைக் கரை நகரங்களைக் கொள்ளையிட இருக்கிறானென்ற செய்தி-மெய்யாயிருந்தாலும், பொய்யாகவோ பரப்பப்பட்டிருந்தாலும் அமைச்சர் அழும்பில் வேள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவராக இருந்தார். கொடுங்கோளூர்க் குமரனை உடனே தலைநகருக்கு அழைத்து வருமாறு தம்முடைய அந்தரங்க ஒற்றர்களாகிய வலியனையும், பூழியனையும் அனுப்பிவைத்தார் அழும்பில் வேள். கொடுங்கோளூர்ப் படைக் கோட்டைத் தலைவனாகிய குமரன் இளம்பருவத்தினன் - போர் முறைகளிலும் எதிரிகளை முறியடிக்கும் தந்திரங்களிலும் வில்லவன் கோதையைப் போல் அவ்வளவு வல்லவன் இல்லை என்றாலும் பேரழகன். குமரனுடைய கம்பீரமே தனி. மீசை அரும்பத் தொடங்கும் பருவத்து இளைஞர்களின் மேல் அழும்பில் வேளுக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. முதுமையையும் அரச தந்திர நெறிகளையுமே பெரிதாக மதிக்கிறவர் அவர். என்றாலும் இப்போது கொடுங்கோளூர்க் குமரன் என்ற மீசை அரும்பும் பருவத்து இளைஞனைக் கொண்டுதான் தம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. எதைக்கொண்டு எந்தக் காரியத்தை எப்போது சாதிக்கலாமோ அதைக்கொண்டு அந்தக் காரியத்தை அப்போது சாதிக்க வேண்டும் என்பது அழும்பில் வேளின் முடிவு. சிறிய கருவிகளைக் கொண்டும் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். பெரிய கருவிகளைக் கொண்டுதான் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. எப்படிச் சாதித்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் - என்று கவனிக்கிறவர் அவர். எதனால் சாதிக்கிறோம் என்ற காரணமோ, காரியம் நிறைவேறியபின் பயனற்றதானாலும் ஆகிவிடலாம் என்றும் பல சமயங்களில் அவர் கூறுவதுண்டு. அரச தந்திரச் சிந்தனைகளில் சேர நாடு முழுவதும் தேடினாலும் அழும்பில் வேளுக்கு இணையானவர்கள் கிடையாது என்று முடிவாகியிருந்தது. அத்தகைய அரசியல் வல்லவர் பேரரசரும் பெரும் படைத்தலைவரும் ஊரில்லாத இச்சமயத்தில் கொடுங்கோளூர்க் குமரனை அழைத்துவரப் பணித்திருந்தார் என்றால் அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்றே தோன்றியது. மகோதைக் கரையில் கொடுங்கோளூரிலிருந்து ஆடகமாடம் வரையில் கடற்கொள்ளைக்காரர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனையும் பற்றிய பயம் நிறைந்திருக்கிற சமயத்தில் அதற்குத் தக்க தீர்திறனாகக் கொடுங்கோளூர்க் குமரனை அழும்பில் வேள் தேர்ந்தெடுப்பார் என்பது பலர் எதிர்பாராத ஒன்று. வேளாவிக்கோ மாளிகையிலும், கனக மாளிகைச் சுற்றுப்புறங்களிலும் வஞ்சிமா நகர அரச கரும வட்டங்களிலும் இச்செய்தி வியப்பையே அளித்தது.

     மகோதைக் கரை என்று அழைக்கப்பட்டு வந்த மேற்குக் கடற்கரை நகரங்களும், சிற்றூர்களும், பேரூர்களும் எக்காலத்திலும் - கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் குறும்பர்கள் தொல்லையை அறிந்திருப்பினும் பேரரசர் தலைநகரில் இல்லாத காலமென்ற காரணத்தால் எங்கும் பரபரப்பு அதிகமாயிருந்தது. நதிகளின் முகத்துவாரங்களிலும் கரையோரத்துக் கடற்பகுதிகளிலும் அதிகமான படகுகளும் மரக்கலங்களும், நாவாய்களும், போக்குவரவு இருக்கும். இப்போது சில நாட்களாக அந்தக் கலகலப்பான கடற்பகுதிகளும், முகத்துவாரங்களும் எதையோ எதிர்பார்த்துச் சூழ்ந்துவிட்ட பயங்கரத்துடனும், தனிமையுடனும் காட்சியளித்தன. வெறிச்சோடிப் போயிருந்த கடற்கரைப் பகுதிகளும், முகத்துவாரப் பகுதிகளும் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தன.

     அமைச்சர் அழும்பில் வேளின் ஆணைபெற்றுக் கொடுங்கோளூர்க் குமரனை அழைத்து வருவதற்காகச் சென்ற வலியனும், பூழியனும் கடற்கரைப் பகுதிகளிலும் முகத்துவாரங்களிலும் ஏற்பட்டிருந்த இந்த மாறுதல்களை எல்லாம் கவனித்தார்கள். வஞ்சிமா நகரையும், கொடுங்கோளூரையும் இணைத்த சாலை மிகவும் அழகானது. இருமருங்கிலும் அடர்ந்து செறிந்த பசுமையான மரங்கள் அணிவகுத்தாற் போல் அழகுற அமைந்திருந்தன. வலியனுக்கும், பூழியனுக்கும் அத்தகைய சாலையில் குதிரையில் செல்வதே சுகமாக இருந்தது. ஆயினும் எங்கும் நிலவிய சூழ்நிலை மட்டும் மனநிறைவு தருவதாக இல்லை. யானைப்பாகர்கள் சிலர்மட்டும் தங்களுடைய முகபடாமணிந்த யானைகளோடு சாலையில் குறுக்கிட்டார்கள். நீண்ட கொம்புகளோடு முகபடாம் அணிந்த யானைகள் தங்களுடைய மணிகள் அளவாக விட்டு விட்டு ஒலிக்கும்படி சாலையில் செல்வதே கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. வலியனும், பூழியனும் புரவிகளில் பயணம் செய்தார்கள். பயணத்தின்போது இருவரும் பல செய்திகளைப் பேசிக்கொண்டே பயணம் செய்தார்கள்.

     "கொடுமை மிகுந்த கொள்ளைக்கூட்டத் தலைவனாகிய ஆந்தைக் கண்ணனையும் அவன் ஆட்களையும் வெல்வதற்குக் கொடுங்கோளூர்க் குமரனின் சாமர்த்தியமே போதுமென்று நம்புகிறாயா நீ?" - என்று பூழியனைக் கேட்டான் வலியன்.

     "கொடுங்கோளூர்க் குமரன் - இதுவரை - பெண்களின் புன்னகையைத் தவிர வேறெதையும் வெற்றிக் கொண்டு பழக்கப்படவில்லை" என்று மறுமொழி கூறினான் பூழியன்.

     "ஆனாலும் எல்லாம் தெரிந்தவராகிய அமைச்சர் பெருமானே நம் குமரனை எதிர்பார்க்கிறார் என்றால் அதில் ஏதோ சிறப்பிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது."

     "அப்படியும் இருக்கலாம். ஆனால் பெரும் படைத்தலைவரும், பேரரசரும், வடதிசைப் படையெடுப்பு மேற்கொண்டு சென்றிருக்கிற இச்சமயத்தில் கொடுங்கோளூர்க் குமரனையும் விட்டால் வேறு யார் தான் இங்கு இருக்கிறார்கள்?"

     "அதற்குச் சொல்லவில்லை! பொதுவாக நம் அமைச்சர் பெருமானுக்கு விடலைப் பருவத்து இளைஞர்கள் மேல் அதிகமாக நம்பிக்கைகள் கிடையாது."

     "எல்லாச் சமயத்திலும், எல்லாரையுமே நம்பாமல் இருந்துவிட முடியாது அல்லவா? அப்புறம் ஆந்தைக்கண்ணன் பாடு கொண்டாட்டமாகி விடுமே?"

     -பேசிக் கொண்டே கொடுங்கோளூர்ச் சாலையில் விரைந்தார்கள் அமைச்சரின் அந்தரங்கத் தூதர்கள். அவர்கள் கொடுங்கோளூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஊர் அமைதியடைந்திருந்தது. இயல்பாகவே அமைதியடைகிற நேரமென்று சொல்லி விடுவதற்கும் இல்லை. மகோதைக் கரை நெடுகிலும் பரவியிருந்த ஆந்தைக்கண்ணன் பயம் கொடுங்கோளூரில் மட்டும் குறைந்து விடுமா என்ன? கொடுங்கோளூர்க் கோட்டை வாயில்கள் அவர்கள் சென்ற வேலையில் அடைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கமாக இருந்த பெருங் கதவுகளிலே மட்டும் நீட்டிவாசல் சிறிதளவு திறந்திருந்தது. உள்ளே போய்த் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் வாயிலிலேயே உண்மை தெரிந்தது. கொடுங்கோளூர்க் குமரன் படைக் கோட்டத்தினுள்ளே இல்லையென்று வலியனுக்கும் பூழியனுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. என்ன செய்வதென்று இருவரும் திகைத்தனர். நிலைமையோ அவசரமாக இருந்தது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247