முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு (உரையாசிரியர்: புலியூர்க் கேசிகன்) சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அணிந்துரை பழமொழி என்றால் என்ன? பழம் தின்னச் சுவைப்பது; உண்பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது. இவ்வாறே கேள்விக்கு இனிதாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் விளங்கும் அரிய வாக்குகளையே, 'பழமொழிகள்' என்கிறோம். நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும் போது, நினைவிற் கொள்ள வேண்டிய ஓர் உண்மை இதுவாகும். இனிப் பழையவர்களான நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி, காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்து வரும், 'பழைய வாக்குகள்' என்றும் பழமொழிகளைக் கூறலாம். இப்படிக் கூறும் போது, தமிழினத்தின் பண்பாட்டிலே விளைந்த அறிவுச் சுடர்கள் இவை என்று அறிய வேண்டும். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்வுக்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஞானத் தெளிவுரைகளாகவும் அவை சுடரிடுகின்றன. பழமொழிக்கு 'முதுமொழி' என்றும் ஒரு பெயர். முதுமொழியின் இலக்கணத்தைத் தொல்காப்பியனார், அக்காலத்திலேயே வரையறுத்துக் கூறியுள்ளார்.
'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப' என்பது தொல்காப்பியர் கூறுவதாகும்.
ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்களால் அமைந்துள்ளது பழமொழி நானூறு. இப்படி ஒரு நூலை உருவாக்கி, மக்களின் ஒழுகலாறுகளை முறைப்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்கு உரியவர், முன்றுறை அரையனார் என்னும் தமிழ்ச் சான்றோர் ஆவார். 'அரையனார்' என்னும் சொல்லால் இவரை அரசகுடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது கடல் மற்றும் ஆற்றின் கரைகளில், மக்கள் நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில் சென்று வரவும் வசதியாக அமைந்த துறைகளையே 'முன்றுறை' என்பார்கள். கொற்கை முன்றுறை, கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக் கரையின் திருமருத முன்றுறை என்று பல முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில் பிறந்தவர் இவராகலாம். இந்நூலின் அமைப்பிலே பயின்று வரும் சொற்களையும் கருத்துக்களையும், பழமொழிகளையும் கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம் புலவருள் ஒருவர் எனலாம். சமண சமயக் கோட்பாடுகளில் அழுத்தமான பற்றினர் என்றும் அறியலாம். முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்துள்ளார். 'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும், நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் தழுவியதாகும். செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாதலால், ஒவ்வொரு செய்யுளின் பொருளும் தனியே நின்று அந்தச் செய்யுளிலே முடிந்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு செய்யுளாக மனப்பாடம் செய்து, ஒவ்வொரு கருத்தாக உளமேற்றி, ஒவ்வொருவரும் உயர்வதற்கு இந்நூல் உதவியாக அமைந்துள்ளது. முன்றுறை அரையனார் பலப்பல காலங்களில் தம்முடைய மாணவர்கட்கு அறிவுறுத்திக் கூறிய செய்யுட்களின் தொகுப்பாக அமைந்ததே இந்நூல் என்றும் கருதலாம். அறிவாளர்கள், தாம் சொல்லக் கருதும் உண்மைகளை விளக்குவதற்கு வழக்கிலுள்ள முதுமொழிகளை எடுத்துப் பயன்படுத்துவது இயல்பே என்பதையும் இந்நூலாற் காணலாம். இந்நூலுக்குரிய பால் இயல் அதிகாரப் பகுப்புக்கள் போன்றவற்றை முன்னோர் செய்துள்ளதாகத் தெரியவில்லை. இந் நூலை அச்சிட்ட பிற்காலத் தமிழறிஞர்களே இந்த பகுப்பு முறைகளைச் செய்துள்ளனர் என்று தெரிகின்றது. முதன் முதலாக, இந்தப் பழமொழி நானூறை அச்சேற்றி வெளியிட்டவர்கள் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்களாவர் (1874). இதனையடுத்து நி.சு. ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது (1954). இதனையடுத்துக் கி.பி. 1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களின் பதிப்பு வெளிவந்தது. ஏட்டுப் பிரதிகளில் கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பும், திருநாராயண அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) பதிப்பும் (கி.பி. 1918-1922) இந் நூலின் செழுமையைத் தமிழ் அன்பர்களிடம் பரப்பின. திருமணம் செல்வக் கேசவராய முதலியாரவர்கள் பத்து பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப் பகுப்புக்களையும் பால் இயல் என்னும் பகுப்புக்களையும் செய்து, சிறந்த உரையுடன் இந்நூலை அருமையாக வெளியிட்டு உதவினார்கள். இந்த நிலையிலே, பழமொழிகளுக்கே முதன்மை தரவேண்டும் என்னும் எண்ணத்துடன், இந்நூலிலே பயின்று வரும் பழமொழிகளைத் தொகுத்து அகரவரிசைப்படுத்திக் கொண்டு, அந்த அகர வரிசைக்கு ஏற்றபடி செய்யுட்களையும் வரிசைப்படுத்திக் கொண்டு, இந்தப் பதிப்பைத் தெளிவுரையுடன் நான் அமைத்திருக்கின்றேன். பழமொழிகளை உளத்தில் பதிக்கவும், மீண்டும் மீண்டும் நினைக்கவும், அவை அமைந்த செய்யுட்களை நினைவு படுத்திப் பயன் பெறவும், இந்த புதிய அமைப்பு உதவும் என்று நம்புகிறேன். ஒரே செய்யுளில் இரண்டு பழமொழிகள் அமைந்து விளங்கும் போது முதலில் வருகின்ற பழமொழியைத் தழுவியே செய்யுளை வரிசைப்படுத்தியுள்ளேன். அச் செய்யுட்கள்.
இல்லை அட்டாரை ஒட்டாக்கலம் தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை. 51 இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை. 57 கனா முந்துறாத வினை இல்லை வினா முந்துறாத உரை இல்லை. 146 சுரம் போக்கி உலகு கொண்டார் இல்லை மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை. 194 புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கு இல்லை வளிமுன்னர் வைப்பாரம் இல்லை. 313 என்பனவாகும். இந்தப் புதிய வரிசைப்படுத்தல் தமிழ் அன்பர்களால் வரவேற்கப் பெறும் என்று நம்புகின்றேன். இதன் முன்னைய பதிப்புகளும் தமிழுலகத்தால் வரவேற்கப் பெற்றிருப்பதும் என் நம்பிக்கைக்குச் சான்றாக விளங்குகின்றது. பதினெண் கணக்கு நூல்களுள் மிகவும் செல்வாக்குப் பெற்றதாக விளங்குவது திருக்குறள் ஆகும். திருக்குறளுக்கு அடுத்தபடியாக நாலடியார் பலராலும் விரும்பிக் கற்கப் பெறுகின்றது. நாலடியாரைப் போலவே பழமொழி நானூறும் விரும்பிக் கற்கப் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும். அந்த விருப்பமே இந்நூலை அமைப்பதற்கு என்னைத் தூண்டியது என்றும் கூறலாம். நாலடியாரையும் இந் நூலையும் கற்றறிந்த பின் திருக்குறளைக் கற்கும் போது, திருக்குறளின் பொருளானது மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் விளக்கம் பெறும் என்பார்கள் சான்றோர்கள். உலக வாழ்விலே, ஒழுக்கத்தைப் பேணியும், உள்ளத்தைத் தெளிவாக்கியும், உயர்ந்த நெறிகளில் நின்றும் வாழ்வது தான் சிறப்பாகும். இப்படி வாழ்பவர்களே,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். என்னும் வாக்கின்படித் தெய்வ நிலைக்கு உயர்கின்றனர்; பிறரோ விலங்கு நிலைக்குத் தாழ்ந்து விடுகின்றனர். மனிதப் பிறவி பெற்றவர்கள் தெய்வ நிலைக்கு உயர்வதே செய்யத்தக்கது. அதற்கு இயலாவிட்டாலும், மனித நிலையிலாவது வழுவாமல் வாழவேண்டும். இவ்வாறு வாழும் வகையறிந்து வாழ்வதற்கு இந்நூல் வழிகாட்டி உதவும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்தத் தெளிவுரை அமைப்பைச் செய்வதற்கு எனக்கு உதவியாக விளங்கிய இந் நூலின் முதற்பதிப்புப் பேராசிரியர்கட்கு எல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழினத்தின் வாழ்க்கை மரபுகளில் புதிய பல சிந்தனைகளை ஊன்றி வளர்ப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல புதிய படைப்புக்களை வழங்குவதிலும், ஒரு சிறந்த இடத்தைப் பெற்று விளங்குபவர்கள் தமிழகச் சமண முனிவர்கள் ஆவர். அவர்கட்கும், அவர்கள் வழி நின்று இந் நூலை உருவாக்கிய முன்றுறை அரையர்க்கும் தமிழுலகம் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையதாகும். இந்நூலினை அனைவரும் விரும்பி வரவேற்றுக் கற்று மகிழ்ந்து, வாழ்வில் வளம்பெருக்கி இன்புறுவதற்கு முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன். இந்தப் புதிய பதிப்பினை ஆர்வமுடன் வெளியிட்டுத் தமிழ் நலம் வளர்க்கும் முல்லை நிலையத்தாருக்கும் என் அன்பு நன்றி உரியதாகும். வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!
புலியூர்க் கேசிகன் புறத்திரட்டிலே கண்ட சில மிகைப் பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்தடக்கல், வாய்மை, இருளடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா உள்ளத்தில் தீர்த்தம் இவைஉளவா கப்பெற்றால், வெள்ளத்தில் தீர்த்தம் மிகை. (146) 'அமையப் பொருள் இல்லார்' என்பது இமையத்து அனையார்மண் இல்லை; சிமைய நகையேர் இலங்கருவி நல்வரை நாட! நகையேதான் ஆற்றி விடும். (1107) அறியாமையோடு இளமை ஆவதாம், ஆங்கே செறியப் பெறுவதாம் செல்வம்; சிறிய பிறைபெற்ற வாணுதலாய்! தானேயா டும்பேய் பறைபெற்றால் ஆடதோ பாய்ந்து? (1139) தற்சிறப்புப் பாயிரம் அசோக மரத்தின் நீழலிலே அமர்ந்து, அந்நாளிலே அறம் உரைத்த பெருமான் அருகதேவன். அவன் திருவடிகளைப் பணிந்து, தொன்மையான பழமொழிகளுள் நானூறு மட்டும் எடுத்துக் கொண்டு, நான்கு அடிகளையும் இனிமையாகச் செய்து முன்றுறை அரையன், உலகிற்கு உபகாரமாக இந்த நூலை அமைத்தனன். இனிய பொருள் துறைகள் செறிந்த வெண்பாக்கள் இவை நானூறும் ஆகும்.
பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா இவை. பிண்டி - அசோகு, பண்டைப் பழமொழி - தொன்றுபடு பழமொழி எனச் சான்றோரால் சொல்லப்படுவது. நூலாசிரியரே இதனைப் பாடினர்; அதனால், இது தற்சிறப்புப் பாயிரம் ஆயிற்று. 'இவற்றை அனைவரும் கற்று மனங்கொண்டு சிறந்து விளங்குக' என்பது ஆசிரியர் குறிப்பாகக் கூறுவது ஆகும். அவித்து அடக்குவதற்கு அருமையானவை ஆசைகள். அந்த ஆசைகளை அவித்து, மெய்ஞ்ஞானத்தைக் குற்றமற உணர்ந்தவன் அருகதேவன். பரந்த கடல் சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய இப் பெரிய உலகத்திலே, அவன் திருவடிகளைத் தமக்கு உரிமையாகும்படியாகத் தம் உள்ளத்திலே தெளிந்து உணர்ந்தவர்கள் எவரோ, அவர்களே பெரியவர்கள். பெரிய செயல் செய்த உடம்பினுள் இருக்கும் உயிரும் பெருமை உடையதாயிருக்கும் அல்லவா! அது போலவே, பெரிய செயல் செய்த அவர்களின் உயர்வும் பெரியதாகும்.
அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப் 'பெரியதன் ஆவி பெரிது.' உடலின் சிறந்த செயல்கள் உயிருக்கும் சிறப்பைத் தரும். 'பெரிய தன் ஆவி பெரிது' என்பது பழமொழி. ஆசு - குற்றம். செயற்கரிய செய்வாரே பெரியார்; இவ்வுலகில் ஐம்புல இச்சைகளை அவித்தலே செயற்கரிய பெருஞ்செயல்; அச்செயலைச் செய்து உயர்ந்த பெரியோனின் திருவடிகளை உளங் கொள்வோம். இப்படி உளம் கொள்பவரும் ஆசைகளை அவித்துப் பெரியவராக விளங்கிப் பெருமையடைவர் என்பதும் இதன் கருத்தாகும். நூல் 2. மேல்நிலை அடைதல் மணல் மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல் நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். 'அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்' என்பது போல, அது ஒரு போதும் நடக்க முடியாததேயாகும்.
மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத் தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர் அடும்பு அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே துடும்பல் எறிந்து விடல்'. பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி. துடும்பல் எறிதல் - நீர் துளம்பி விழக் குதித்து நீராடல். 3. அறநெறியாளனுக்கு உபதேசம் மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும்பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த வகையும் அதற்கான முதலீடும் அப்படியே அறநெறிக்கு மாறுபாடில்லாதது. அங்ஙனமானால், 'பல திறப்பட்ட வகைகளால் எல்லாம் அறம் செய்வாயாக' என அவனிடம் சான்றோர் சினந்து கூறவேண்டாம். அப்படி அவர் கூறினாலும், அது சர்க்கரையாற் பாலின் சுவை மயக்கமடையும் நிலைமையினைப் போன்றதேயாகும்.
தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள் தொக்க வகையும் முதலும் அதுவானால் 'மிக்க வகையால் அறஞ்செய்க!' எனவெகுடல் 'அக்காரம் பால்செருக்கும் ஆறு'. பாலில் சர்க்கரை சேர்த்ததும் இனிப்புச் சுவை கூடி, அது மேலும் விரும்பப்படுவது போல, அத்தகையோனைத் தரும காரியங்களிலே ஈடுபடத் தூண்டுவதனால் அவன் மேலும் சிறப்பே அடைவான். 'அக்காரம் பால் செருக்கும் ஆறு' என்பது பழமொழி. 4. தளராதவன் செல்வனாவான் ஒருவனிடம் உள்ளது, அவனுடைய உள்ளூர்க்காரர்கள் மிகச் சிறிய அளவினதே என்று உணர்ந்ததான சிறு முதலே என்றாலும், அதனையும் இகழ்ந்து ஒதுக்காமல் பேணி, அவன் தன் தொழிலை முயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! பழைய ஊரிலேயுள்ள ஆரவார மிகுந்த கடைத் தெருவிலே மேய்ந்த பழைய கன்றே என்றாலும், அதுவும், பின் ஒரு காலத்திலே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டல்லவா?
உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும் எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு'. கைமுதல் சிறிதேயானாலும், விடாமுயற்சியினால் அதனைப் பெரிதாக்கித், தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். 'அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு' என்பது பழமொழி. 5. கொடியவன் பார்க்க மாட்டான் பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களில் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கி விடுகின்ற கடற்றுறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அது கண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அது போலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலுங் கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள்.
கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்'. கீழ்மக்கள் கீழ்த்தரமான செயல்களைப் பழிக்கு அஞ்சியும் கூடக் கைவிட மாட்டார். 'அஞ்சாதே தின்பது அழுவதன் கண்' என்பது பழமொழி. 6. தருமம் செய்யுங்கள் தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென்று ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.
தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால் ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி 'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு'. யாக்கையின் நிலையாமை கூறினார். தருமத்தை இளமையிலேயே செய்க; பின்னர் பார்த்துக் கொள்ளலாமென்றால், அது முடியாதும் போகலாம். 'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி. 7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது! வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து அவரைப் புகழிலே நிலை பெறுத்துதல் எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கம் சோலைகளையுடைய மலை நாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக.
வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும் 'அஞ்சுவார்க் கில்லை அரண்'. 'வலிமை' என்பது ஒருவர்க்குத் தம்பால் அமைவதேயல்லாமல், பிறர் ஊட்டலாலும், அரண் முதலிய பாதுகாப்பாலும், துணையாலும் அமைவதன்று, 'அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி. 8. குடிப் பெருமையின் சிறப்பு தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமையாகக் கூறும் தற்புகழ்ச்சியாளர்களைப் பிறரும் புகழ்தல், புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று என்றாலும், அது, அடுப்பின் ஓரத்தில் முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியே யாகும்.
தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல் நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்'. குடிப்பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினர் ஆதல் இல்லை அவருடைய போலித் தோற்றங்கண்டு புகழ்வதெல்லாம், பொய்யான புகழ்ச்சியே அல்லாமல் உண்மைப் புகழ்ச்சியாகாது. 'அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி. 9. மகனுக்குச் செய்ய வேண்டியது ஒரு தகப்பன், எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமானது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும் போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள்.
எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச் செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி மான்சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க 'அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு'. மக்களைச், செந்நெறிமேற் செல்லுதலில் தகுதியுடையவராக்குதல் தான் ஒரு தந்தையின் கடமை. அணங்கு - தெய்வம், பாவை - செதுக்கிய சிலை. 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது இதிலுள்ள பழமொழி. 'இறைவன்' என்றதால், ஓர் அரசன் தன் குடிமக்களைச் செந்நெறிமேல் நிற்கச் செய்ய வேண்டும் என்பதும் இதனால் அறியப்படும். 10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம் மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரேயானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா?
தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் அமரா(து) அதனை அகற்றலே வேண்டும் அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்'. முகஸ்துதியை விரும்பினால், உள்ளத்து அகந்தையே நிறையும். அதனால், அது தம்மவராலே சொல்லப்பட்டாலும் தம் நல்ல ஒழுக்கத்திற்கு ஊறு செய்வதினால் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று என்பதாம். 'அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. கொள்ளாக் கலம் - பொருந்தாத நகைகள். 11. அறிவு ஆடை போன்றது! அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா?
அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன 'அணியெல்லாம் ஆடையின் பின்'. ஆடையின் மேல் அவ்வணிகளையும் அணியின் அழகு தரும். அதுபோல, அறிவுடைமையின் மேல் பிற செல்வங்களும் சேரின் பயன் தரும். இன்றேல் தருவதில்லை. 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது பழமொழி. ஆடையே முதன்மையானது என்பது கருத்து. 12. வம்புக்காரனின் வாய் நன்மை தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களுடைய திறமையில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற்காக வருத்தப்படாதவர் போல, அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள். பிறர் மீது இரக்கம் இல்லாது பழிதூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள்.
தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால் பரியாதார் போல இருக்க! - பரிவுஇல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே, 'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'. பழி கூறித் திரிபவரின் கீழ்மையை அறிந்து அவர் சொற்களைப் பாராட்டாமல் பொறுக்கும் அறிவுடைமை வேண்டும். அன்றி, அவர் வாயை அடக்க முயல்பவர், ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட முயன்றவர் போலத் தாமே மிகுதியான அவமானம் அடைவார்கள். பரிவு - இரக்கம்; துன்பம். 'அம்பலம் தாழ் கூட்டுவார்' என்பது பழமொழி. 13. அன்பால் சாதிக்க வேண்டும் அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ஙனமில்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது கறந்து கொள்ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும் ஆகும்.
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய், 'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'. செயலை முடிக்கும் முறைமை இதன்கண் கூறப்பட்டது. பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது. 'அம்பு விட்டு ஆக்கறக்குமாறு' என்பது பழமொழி. 14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம் கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியலை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.
முயலலோ வேண்டா; முனிவரை யானும் இயல்பினார் என்பது இனத்தால் அறிக! கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா; 'அயலறியா அட்(டு)ஊணோ இல்'. 'இனத்தைக் கொண்டு தன்மையை அறிக' என்று சொல்லி, நல்லினம் சேர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது. 'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி. 15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரனே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப்படும் அயிரையாகிய சிறுமீனைத் தூண்டிலிலே கோத்துவிட்டுப், பெரிய மீனாகிய வராலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே யாவர்.
சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால் பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ விராஅம் புனலூர! வேண்(டு); 'அயிரை விட்டு வராஅல் வாங்கு பவர்'. 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; பிறவெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்ற குறளின் கருத்தினைக் கொண்டது இச்செய்யுள். ஈகையால் இம்மையிற் கைம்மாறையோ, மறுமையில் இன்பத்தையோ பெறலாம் எனக் கருதாது, அதனைக் கடமையாகக் கருதிச் செய்க என்பது கருத்து. 'அயிரை விட்டு வரால் வாங்குபவர்' என்பது பழமொழி. 16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டே தான் பிளக்கலாம். அதைப் போலவே நல்லவர்களின் நல்ல தன்மையை உணர வேண்டுமானால் அவர்களை விட, நல்லவர்களே அதனை முறையாக உணரக் கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.
நல்லார் நலத்தை உணரின் அவரினும் நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும் 'அயிலாலே போழ்ப அயில்'. 'வயிரத்தைக் கொண்டுதான் வயிரத்தை அறுக்க வேண்டும்' என்று வழங்கும் பழமொழியையும் நினைக்க. நல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி, நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத்தப்பட்டது. 'அயிலாலே போழ்ப அயில்' என்பது பழமொழி. 17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்! மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம். அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன், அதனைச் செய்யப் புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மையாகும்.
உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம் புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல், நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர்'. செயலின் உண்மையான நிலையறியாமல் ஈடுபடுவது அழிவைத் தரும். 'அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்' என்பது பழமொழி. 18. பகையை அறவே ஒழிக்க வேண்டும் தம்முடன் மனம் ஒத்துப் போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதியடைந்து இருந்து விடக் கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்து போக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங்கொள்ளுதலே மன்னரின் இயல்பு. அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக்குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும்.
பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும், இருந்தமையா ராகி இறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே 'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு'. தாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான் 'அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு' என்பது பழமொழி. 19. மூடர்களின் உறவு கூடவே கூடாது பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்டமாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலை பெற்றிருப்பவர்கள், நுண்ணறிவு இல்லாதவர்களின் இடையிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள்.
தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார் பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற; விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப! 'அரிவாரைக் காட்டார் நரி'. பயனுள்ள நெல்லரிவார்க்குப் பயனற்ற நரியைக் காட்டிப் பொழுதை வீணே காயச் செய்தல் கூடாது. அறிவுடையோரும், அறிவுடையோருடன் கலந்து பழக வேண்டுமே தவிரப் பயனற்ற அறிவற்றோர் கூட்டத்தில் சேர்தலே கூடாது. 'அரிவாரைக் காட்டார் நரி' என்பது அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும். 20. ஈகையே செல்வத்திற்கு அழகு முழவுகளின் ஒலி போல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள். அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப் போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். 'இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட்டும்' என்று ஒரு பொருளை யேனும் மனதாரக் கொடுத்து மகிழாதவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும்.
முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார், விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும், இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம், 'அழகொடு கண்ணின் இழவு'. அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத்தால் தம் பெருமையற்றுப் போவது போல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வமாகும் என்பது கருத்து. 'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி. 21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார் அடுக்கடுக்காக விளங்கும் மலைத் தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! மணிகளின் இயல்புகளை உணர்பவர்களுக்கு, அவை சேறாகி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை அவர்களுக்கு என்னவிதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள்.
இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்; உணர்பவர் அஃதே உணர்ப; - உணர்வார்க்கு அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்'. வறுமை முதலியவற்றால் தாழ்ச்சியடைந்த காலத்தினும், குடிப்பிறப்பின் உயர்வு ஒருவரை விட்டு என்றும் மாறாது. சான்றோர் அவரை மதித்துப் போற்றுவர் என்பதாம். 'அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி. 22. உறவாடும் பகைவரை ஒதுக்கிவிட வேண்டும் பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.
வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்? கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ, 'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'. உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது. தனிசு - கடன். 'அள்ளில்லத்து உண்ட தனிசு' என்பது பழமொழி. 23. தருமம் செய்யப் பாவம் போகும் செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ் செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண்டாகும்.
அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித் திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம் புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும்'. அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடைவார்கள். 'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து. 24. அவன் மயக்கம் தெளியவில்லை! தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை, நீ அவன் பாற் சொல்லாதிருப்பாயாக. பாணனே! பொய்த்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல் என்பது எவருக்குமே முடியாத செயலாகும்.
தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம் மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப, நெறியல்ல சொல்லல்நீ, பாண! - 'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது'. தலைவனுக்காகத் தலைவியிடம் சமரசம் பேச வந்த பாணனிடம், தலைவனின் பரத்தையர் மோகம் இன்னும் தெளியவில்லை என்று கூறித் தலைவி மறுத்துச் சொல்லுகிறாள். அறிதுயில் - யோக நித்திரையுமாம்; இங்கே அது பொய்த்துயில் ஆகும். 'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி. 25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல் செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப! 'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'. 'பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்' என்று புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர். சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது. 26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள் நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கியிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந்திருக்கும் பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக.
பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார் சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ் அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும் பெரிதாள் பவனே பெரிது'. அறிவுடையோர் சிறந்த செயல்களையே செய்ய விரும்புவர்; அதனால், அவரே அதனை அறிந்து செய்பவராவர்; அவர்க்கு எவரும் அதனைச் சொல்லுதல் வேண்டாம். 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்பது பழமொழி. 27. பேதை எதையும் செய்யமாட்டான் தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும், இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமையையே தன் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியுடையவன் ஆகவே மாட்டான். 'வெற்றி பெறல்' என்பது, ஊழ்வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சியினாலே மட்டும் அடையக் கூடியதன்று' என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும்.
உறுகண் பலவும் உணராமை கந்தாத் தறுகண்மை ஆகாதாம் பேதை, - 'தறுகண் பொறிப்பட்ட வாறல்லால், பூணாது' என் றெண்ணி, 'அறிவச்சம் ஆற்றப் பெரிது'. 'ஊழையும் உப்பக்கங் காண்பர் தாளாது உஞற்றுபவர்' ஆனால், பேதையோ அனைத்தையும் ஊழின் பயன் என்று கருதி அஞ்சி, முயற்சியின்றித் துன்பங்களில் உழன்று அழிவான். 'அறிவச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி. 28. ஊழ்வினையால் அமைவதே செயல் மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதனால் என்க. அதனால் அவருடைய நல்ல அறிவினையும் கூட ஊழ்வினை கெடுத்துவிடும் என்று அறிதல் வேண்டும்.
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும், பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட பொறியின் வகைய கருமம்; அதனால், 'அறிவினை ஊழே அடும்'. மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' - விருத்தம் என்றும் பாடபேதம். 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதையும் ஒரு பழமொழியாகக் கருதலாம். 29. வல்லவன் காரியம் கெடாது நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்ததாகிய, பயனில்லாமல் சேர்ந்து கிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச்செல்வமும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும்.
பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ, 'குளநெடிது கொண்டது நீர்?'. 'செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்'. அதனால், அவர் செல்வமும் குறையாது. 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி. 30. வருவாய் உடைய செல்வம் விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல் நீர் முழுவதும் வற்றி விடுமோ? வற்றாது! அதுபோலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும், வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்து போவதில்லை.
களமர் பலரானும் கள்ளம் படினும் வளமிக்கார் செல்வம் வருந்தா; - விளைநெல் அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ நரிநக்கிற்(று) என்று கடல்'. ஏவலர் சிறு களவுகள் செய்தனர் என்றாலும், அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாதிருக்க வேண்டும்; அதனால் செல்வம் குறைந்துவிடாது என்பது கருத்து. 'அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்' என்பது பழமொழி. 31. ஊழ்வினைதான் காரணம் ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலை நாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வதொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு, அதனைப் போகாமல் நிலை நிறுத்தச் செய்யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலையெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை என்பதை அறிவாயாக.
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயனின்றே; ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும் 'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'. செல்வமும் வறுமையும் ஊழ்வினைப் பயனால் வந்து வாய்ப்பன என்பது கருத்து. 'ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி. ஆள்வினை - முயற்சி. 32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டு விடாதிருப்பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டும் பிறிதொன்றாக ஆக மாட்டாதல்லவா?
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடானாகும்; 'ஆகாதே உண்டது நீலம் பிறிது'. நீலநிறம் பற்றியபின், அது என்றும் அந்தப் பொருளை விட்டு மறைவதில்லை. அதுபோலவே, மூர்க்கனும் தன் புத்தியினின்று எதனாலும் மாறமாட்டான். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பதை நினைக்க. 'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்பது பழமொழி. பாடபேதம்; உலகும், உணர்வும்; யாதும், உறுதி. 33. கொடியவன் செய்வது செயலாகாது வலிமையானது நிலையாகத் தங்கியிருத்தலையுடைய, மலை போன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கணக்கு ஆகுமோ! அது போலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது.
தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன, வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ? மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ நந்துழுத எல்லாம் கணக்கு?'. நத்தை கீறிச் செல்லலை உழவு என்று கூறினாலும் அது உழவாகிப் பயன் தராதது என்பது போல, செய்வினைத் திறம் இல்லாதவர் செய்யும் காரியங்களும் பயனற்றுக் கைகூடாமற் போம். 'ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு' என்பது பழமொழி. 34. பொய்யைப் போக்கும் வழி ஒரு பொருளை மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன், பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள். அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள், குறளையைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க் காலைப் போலத் தாமும் குறளை பேசி ஆடவே மாட்டார்கள்.
பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன் தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார், 'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'. 'மணக்கால்' என்பதும் பாடம். அமைச்சர்கள், பொய் கூறி வேந்தன் மனத்தை எவராவது மாற்றினால், வேந்தனைத் தெளிவிக்கும் வகைகளை நாடுவாரே அல்லாமல், தாமும் அந்தப் பொய்யர்களோடு சேர்ந்து ஆடமாட்டார்கள் என்பது கருத்து. 'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி. உணர்வுடையார் - அறிவுடையார். 35. மக்களிடம் அன்பு குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடிமக்களிடத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்து வந்தான் என்றால், அவனைக் கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன செய்துவிட முடியும்? ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது போல. அவ்வேந்தன் ஒருவனே, அப் பகைவர்கள் அனைவரையும் தோற்று ஓடச் செய்து விடுபவனாவான்.
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப? 'ஆயிரம் காக்கைக்கோர் கல்'. 'தெறுமனத்தார்' என்பதும் பாடம். இதனால், ஆட்சியில் இருப்பவர்க்கு குடிமக்களின் அன்புக்குப் பாத்திரமாவதே சிறந்த வலிமையாகும் என்று சொல்லப்பட்டது. 'ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்' என்பது பழமொழி. இப்படியே அவனுடைய பகையும் அஞ்சி கலைந்துபோம். 36. ஆராய்ந்த பின் நம்புங்கள் தமக்கு அன்பு உடையவர்களாக விளங்குபவர்களிடத்தினும், அவர்களை முழுவதும் ஆராயாதவனாகி நம்பிக்கை கொண்டவன், உறுதியாகக் கெட்டே போவான். அப்படியிருக்க, 'எப்பொழுதும் வெகுண்டவர்களைப் போல, மனம் வேறுபட்டவர்களாகி நிற்கும் ஈரமற்றவர்களை நம்ப வேண்டாம்' என்று, கொஞ்சமும் சொல்ல வேண்டாம் அல்லவோ?
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித் தெளிந்தான் விளிந்து விடும்'. 'விளிந்துவிடும்' விரைந்து கெடும் என்பதும் பாடம். முளிதல் - காய்தல். தஞ்சம் - எளிமை. அன்புடையவர்களாகவோ அன்பற்றவர்களாகவோ விளங்கினாலும், எவரையும், ஆராய்ந்தே நண்பராகக் கொள்ளல் வேண்டும். 'ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்' என்பது பழமொழி. 37. ஏவியது செய்யாத ஊழியர் 'எம்மவராதலாலே நீவிர் இக்காரியத்தை எமக்குச் செய்து தருவீராக' என்று வேந்தன் தன்னுடைய சுற்றத்தார்களை நம்பி நியமித்த இடத்து, அக்காரியத்தைச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட அச்சுற்றத்தினர், அம்மன்னனுக்காக வேல் முனையிலேயாயினும் வீழ்ந்து அதனை எப்படியாயினும் நிறைவேற்ற வேண்டும். அப்படியல்லாமல், அந்தக் காரியத்தை வேண்டாமென மறுத்துச் சொல்வார்களானால், 'ஆல்' என்று சொல்லப் 'பூல்' என்று மறுத்துச் சொல்வது போன்றதே அதுவாகும்.
எமரிது செய்க எமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின் 'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'. 'ஆல்' பெரிது; 'பூல்' சிறிது. பெரியதைச் சொல்ல அதனை மறுத்துச் சிறியதை உரைப்பவர் தகுதியற்றவர். அரசச் சுற்றத்தார் தம் உயிர் கொடுத்தாயினும் அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் அன்றி, மறுப்பவர் ஊழியத்துக்கு உதவார் என்பது கருத்து. 'ஆல் என்னிற் பூலென்னுமாறு' என்பது பழமொழி. 38. பனைபோலச் செய்யும் உதவி பெரிய மூங்கில் வில்லினையும் தன் வடிவினாலே வெற்றி கொண்ட அழகிய புருவத்தை உடையவனே! தம்மை விரும்பி வந்து சேர்ந்திருப்பவர்களுக்கும், தம்முடைய சுற்றத்தினர்களுக்கும் அவர்களை வருத்துகின்ற பசித்துன்பத்தினைப் போக்காதவர்கள், யாரோ புதியவர்களுக்கு உதவுதலானது, தன்னை மிகவும் பாதுகாத்து வளர்த்தார்க்கு உதவாது, நெடுங்காலஞ் சென்று, பின்வரும் புதியவர்களுக்கு உதவுகின்ற இயல்பினையுடைய கரிய பனைபோலும் தன்மையை உடையதாகும்.
விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல், இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக் கரும்பனை அன்ன துடைத்து'. செல்வம் உடையவர்களாயிருந்தும், வந்த விருந்து உறவுமான பசித்தவர்க்கு உதவாமற் போனால், அது பயனற்ற செல்வமே. 'ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து' என்பது பழமொழி. 39. எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும் தம்முடைய குடிப்பிறப்பினாலே பொல்லாத தன்மையை உடையவர்கள்; எத்தகைய துணைவலிமையும் இல்லாதவர்கள்; மிகவும் வறுமைப்பட்டிருப்பவர்கள்; பதில் கூறும் சொற்களினாலே தம் பகைவரைப் போன்றிருக்கிறார்கள் என்று, வலியவர் ஒருவர் அவரை அலைக்கழித்த காலத்திலே, அந்தத் துயரத்தைப் பொறுக்க மாட்டாது வலியற்றவரான அவர்கள் அழுத கண்ணீர் ஆகிய அவையே அப்படி ஆட்டுவித்தவர்களுக்கு எமனாகி, அவர்களை அழித்துவிடும்.
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால் 'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும்'. எளியாரை வலியார் வருத்தினால், அவரால் அவரை எதிர்த்து அழிக்க முடியாவிட்டாலும், அவர்கள் பெருக்கிய கண்ணீரே அவ்வலியாரை அழித்து விடும். 'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்' என்பது பழமொழி. 40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர் கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்ஙனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை அல்லவா!
ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால் 'ஆற்றுணா வேண்டுவ தில்'. கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது பழமொழி. ஆற்றுணா - வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம். எனவே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம். 41. பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல் 'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் அவர் கூறும் மாறுபட்ட சொற்களை, அதற்கு எதிராகக் கூறும் எதிர்மாற்றங்களே உடைக்க வல்லன. தம் பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக் கொண்டே எளிதாக களைதல் வேண்டும். ஆதலால், அங்ஙனம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லானே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு) ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்'. பகைவரிடத்து ஒட்டி நண்பரைப் போல நடந்து, அவரை அழிக்க வல்லவர்களைப் பெற்றால், எத்தகைய பெரும் பகையையும் எளிதில் வென்றுவிடலாம். 'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்' என்பது பழமொழி. 42. அறத்தைப் பாதியிலே நிறுத்தக் கூடாது நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல், ஒரு கட்டுக்கோப்பு உடையதாகவே செய்து வருவானாக. இடையில், அது இடையூறு உடையதாகி, அதனால் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிடப், பயிரை நட்டுவிட்டுக் காத்து விளையவைத்து அறுத்துப் பயன் பெறாமற் போயினவனாதலை விட நடாமலிருப்பவனாயிருத்தலே நல்லதாகும்.
பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று'. அறம் செய்பவர், குறுக்கிடும் இடர்ப்பாடுகளைக் கருதி, இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது. தொடங்கியதை முற்றவும் செய்து பயன்பெறுதல் வேண்டும். 'இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்பது பழமொழி. 43. பகைவரின் துணைவரை நட்பாக்கிக் கொள்க "யானும் இவ்விடத்திலே துணையாகப் பகைவருடன் இருந்த என் தமையனும் ஒன்று சேர்ந்துவிட்ட காலத்திலே, பகைவருடைய வீரம் எல்லாம் செல்வதற்கு இடம் எதுவும் இல்லை" இப்படிச் சொல்லி, அவரும் தம்முடனே கூடிப் படைத் துணையாகி நின்று பகைவருடன் மாறுகொள்ளுமாறு, பகைவரிடமிருந்து அவரைப் பிரிந்து விடத் தூண்டுதல் சிறந்ததாகும். அதுதான், இடையரின் நாய்க்கு ஆடு திருடும் கள்ளர்கள் எலும்பினை இடுதலோடு ஒக்கும்.
யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால் வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப் படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே 'இடைநாயிற்(று) என்பிடு மாறு'. பகைவர் இருவராகிய இடத்து, அவருள் ஒருவரை உறவாடிப் பிரித்துத் தம்மவராக்கிக் கொள்ளல் சிறப்புடையது. 'இடைநாயிற்கு' - கிடை நாயிற்கு என்றும் பாடம். 'இடை நாயிற்கு என்பு இடுமாறு' என்பது பழமொழி. என்பு பெற்ற நாய் கள்ளற்குச் சாதகமாவது போலப் பகைவர்க்குத் துணையாக வந்தாரும் மாறி விடுவர் என்பதாம். 44. இல்லாததைத் தருவதாகச் சொல்ல வேண்டாம் வேலினது தன்மையைப் பெற்று, முற்றவும் அமர்ந்த கண்களையுடைய, பசிய வளையல்களை அணிந்தவளே! மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டும் என்று கூறும் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலே இல்லாத அப்பொருளைத் தன்னிடத்தே உடையதொன்றாகவும் அதனைத் தாம் தருபவராகவும் உறுதியாகக் கூறினால், அங்ஙனம் வீணே கூறுதல், இடையனால் வெட்டப்பட்ட மரத்தினைப் போன்றதாகும்.
அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால் உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால் 'இடையன் எறிந்த மரம்'. இடையன் கொஞ்சங் கொஞ்சமாகக் கிளையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்து விடுகிறான். அது போலவே, இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும், கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். 'இடையன் எறிந்த மரம்' என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி. 45. கொடுப்பவனும் கொடுக்க மாட்டான் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொருளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் தன்னால் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாதவனாகித் தன்னிடத்தேயுள்ள அப்பொருளை ஒளித்து வைத்து இல்லையென்று மறைப்பான். அதனால், யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும்.
மறாஅ தவனும் பலரொன் றிரந்தால் பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன் கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால் 'இரந்தூட்குப் பன்மையோ தீது'. இரந்து உண்ணுதலுக்குப் பலராகச் செல்லுதல் கூடாது. 'இரந்து ஊட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி. கொடுக்க நினைப்பவனையும் கொடுக்க விடாது செய்து விடும் என்பது இதன் கருத்தாகும். 46. வாழ்விலே உறுதி வேண்டும் இல்லற வாழ்க்கையானாலும், அஃதில்லாத துறவற வாழ்க்கையானாலும் தாம் உறுதியாக இரண்டிலொன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகிச் சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்துப் போக, நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள். அவர்களே, காவடியின் இரு பக்கத்திலுள்ள பொருள்களையும் நீக்கிவிட்டுத் தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர்களுக்குச் சமானமாவார்கள்.
இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம் ஒருதலையாச் சென்று துணியா தவரே 'இருதலையும் காக்கழித் தார்'. இருவகை வாழ்க்கையினும் எதன்பாலும் முறையே ஈடுபட்டு நிலைத்து வாழாது வாழ்நாட்களைக் கழிப்பவர், பயனற்று வாழ்ந்தவராவர். 'இருதலையும் காக் கழித்தார்' என்பது பழமொழி. இருபக்கமும் சுமையைத் தொங்கவிட்டு எடுத்துச் செல்ல உதவுவது காவடித் தண்டு. சுமைகளை அகற்றிவிட்டு வெறுந்தண்டைச் சுமந்து போவது நகைப்பிற்கே இடமாகும். 47. போலி நண்பர்கள் கேடு செய்வார்கள் தம்மிடத்திலே மிகுதியாக நட்புப் பூண்டவர்களுக்கும், அவர்களுடைய பகைவர்களுக்கும் இடையே சென்று, இருவரிடத்தும் மன வேறுபாடு இல்லாமல் மிகவும் நட்புடையவர்கள் போலவே பேசிப் பழகி, அவர்களுள் ஒருவருடன் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர், மிகவும் கெட்டவர்கள். அவர்களே, இருதலைக் கொள்ளி என்று சொல்லப்படுபவராவர்.
பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள் ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே 'இருதலைக் கொள்ளியென் பார்'. இருவரது பகைமையும் வளர, இருவராலும் இருவருக்கும் கேடே விளைதலால், 'இருதலைக் கொள்ளி' போன்றவராயினர் அவர் என்க. 'இருதலைக் கொள்ளி என்பார்' என்பது பழமொழி. சமாதானம் செய்ய முயல்பவர் இருவருக்கும் பகையாதலும் கூடும் என்பது கருத்து. 48. அச்சம் உள்ளவனுக்குப் பாதுகாப்பே இல்லை கோட்டை வாயிலை அடைத்து வைத்துப் பாதுகாவல் பெற்றுக் கோட்டையினுள்ளே இருந்தாலும் போருக்கு ஆற்றாது அச்சங்கொண்டு உள்ளே புகுந்திருப்பவர், அந்த அச்சத்தின் காரணமாகவே பகைவர்களிடம் எளிதாக அகப்பட்டு விடுவார்கள். பயந்து, இருளினிடத்தே போய் இருந்தாலும், பறவையானது, அது உண்மையாகவே இருளினையுடைய இரவாயிருந்தாலுங் கூட, அதனைப் பகலென நினைத்தே அஞ்சும்.
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும் அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள் 'இருளின் இருந்தும் வெளி'. உள்ளத்திலே, அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. 'இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம். 49. வாய்ப் பேச்சு வீரர்கள் நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவையினைக் கண்டால் தம் நாவைச் சுழட்டி வைத்துக் கொண்டு, நன்மையானவைகளை உணராத புல்லர்களின் கூட்டத்திலே, நம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுதல், பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப்பட்ட பானை சட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவது போன்றதாகும்.
நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி இடைக்கலத்து எய்து விடல்'. இடைக்கலம் - கருங்கலம்; பானை சட்டிகள்; புல்லார் - பகைவர். 'இல்லுள் வில்லேற்றி இடைக் கலத்து எய்துவிடல்' என்பது பழமொழி. இப்படிச் செய்வது புல்லறிவாண்மை என்பது கருத்து. 50. நல்ல விதி இருப்பவன் சிறப்பு அடைவான் பகைவர் இட்ட நெருப்பினாலே காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்ற பராந்தகச் சோழனின் மகனாகிய கரிகால் வளவனும், இரும்பிடர்த்தலையார் என்னும் பெயரையுடையவரைத் தனக்குத் துணையாகப் பெற்று, பின் காலத்திலே தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத்தினான். அதனால் உயிருடையவர் முயன்றால் அடையா தொழில் எதுவுமில்லை என்றறிக.
சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் 'இல்லை உயிருடையார் எய்தா வினை.' முயற்சியுடையார் தம் உயிரைக் காத்துக் கொண்டால், என்றேனும் நல்வாழ்வு பெற்றே தீர்வர் என்பதாம். 'இல்லை உயிருடையார் எய்தா வினை' என்பது பழமொழி. எனவே, உயிரைக் காத்துக் கொண்டு ஆகும் காலத்தை எதிர்நோக்கிச் செயலாற்ற வேண்டும் என்பது கருத்து. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் வகைப்பாடு : தன்வரலாறு இருப்பு உள்ளது விலை: ரூ. 550.00தள்ளுபடி விலை: ரூ. 500.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |