முன்றுறை அரையனார்

இயற்றிய

பழமொழி நானூறு

(உரையாசிரியர்: புலியூர்க் கேசிகன்)

... தொடர்ச்சி - 2 ...

51. நாணயம் இல்லாதவனிடம் ஒப்பிக்க வேண்டாம்

     கையினாலே தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளாத பொருள் உலகில் ஒன்றுமே இல்லை. சமையல் செய்தவரை ஒட்டிக் கொள்ளாத பாத்திரமும் கிடையாது. அதனால் கட்டுப்பாடு உடையதாக ஒருவனைத் தொடர்ந்து ஒரு செயலைச் செய்யுமாறு ஏற்படுத்துவதானால், அச்செயலினோடு கலந்து, அதன் பயன் அனைத்தையும் உட்கொண்டு ஓடிவிடுகின்ற அன்பில்லாதவர்களை, ஒரு போதும் அதன் பால் வைக்கவே வேண்டாம்.

கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே
அட்டாரை ஒட்டாக் கலம்'.

     ஒன்றைச் செய்ய ஒருவனை ஏவும் பொழுது அவனே அந்தச் செயலின் பயனை எடுத்துக் கொண்டு போய்விடும் இயல்புடையவனானால் அவனை அதன்பால் ஈடுபடுத்த வேண்டாம்; வேறு தக்கவனையே ஏற்படுத்துக. 'இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி.

52. பிழைக்கும் பொறி இருப்பவனுக்கு ஆபத்தே இல்லை

     ஆரவாரமாகப் பேசுகின்றாரே என்று துணைவராகக் கொள்ளப்பட்டவர்கள் அந்த எண்ணமானது பழுது பட்டுப் போக, அந்தப் பிணிப்பினின்று தப்பி எழுந்து போனாலும் போய்விடுவார்கள். ஆனால், அரக்கு மாளிகையினுள் இடப்பட்ட ஐவராகிய பாண்டவர்களும் இறந்துவிடாமல் தப்பிப் போய்விட்டார்கள் அல்லரோ! அதனால் பிழைக்கும் பொறி உள்ள உயிருக்குப் பிழைக்க முடியாத ஆபத்தான இடம் என்பது எதுவும் இல்லை என்று அறிக.

குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே
உய்வதற்(கு) உய்யா இடம்'.

     நண்பர்கள் கைவிட்டாலும் நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது. 'இல்லையே உய்வதற்கு உய்யா இடம்' என்பது பழமொழி.

53. உதவாதது எதுவுமே இல்லை

     வானகத்திலே தோய்ந்திருப்பன போல விளங்கும் உயரமான குன்றுகள் பரந்து கிடக்கும் நாட்டுக்கு உரியவனே! ஒருவர் மற்றொருவரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் நன்மையேயாகும். பாம்பினால் வரவிருந்த ஒரு துன்பத்தை பார்ப்பான் பக்கத்திலே இருந்த் நண்டுங்கூட நீக்கியது. அதனால், சொல்லப் போகுமிடத்து, ஒன்றுக்கும் உதவாத பொருள் என, இவ்வுலகில் ஒன்றுமே இல்லை.

நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.

     பார்ப்பான் ஒருவன் தன் தாயின் ஆணைப்படி நண்டைத் துணையாகக் கொண்டு செல்ல, அது அவனைக் கடிக்க வந்த பாம்பினைத் தன் கொடுக்கால் இறுக்கிப் பிடித்துக் காத்தது என்பது கதை. இதனால், எத்தகைய நண்பராலும் சமயத்துக்கு அவராலும் உதவி கிடைக்கும் என்பது கூறப்பட்டது. 'இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று' என்பது பழமொழி. சிறு துரும்பும் பற்குத்த உதவும்' என்பதும் இதே கருத்தைக் கூறுவது.

54. தற்பெருமை அழிவையே தரும்

     உலகம் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்டவன் மாவலி. அவனும் பின் வந்து சம்பவிக்கப் போகின்ற தன் நிலையை ஆராய்ந்து அறியாதவனாயினான். 'எனக்கு எல்லாம் முடியும்! எனக்கு எல்லாம் எளிதே' என்று தன் குருவான சுக்கிரர் தடுத்தும் கேளாமல், செருக்கினால் மிகுந்து இரந்து வந்த வாமனனுக்கு மூன்றடி மண் நீர் வார்த்துக் கொடுத்தான். அதன் பயன், அனைத்தையுமே இழந்து விட்டான். ஆதலால், குற்றமுடைய ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவர்களுக்குத் தாமே தமக்குக் கொண்டு தர வராத துன்பங்களே இல்லையாகும்.

ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே
தாஅம் தரவாரா நோய்'.

     குற்றமுள்ள செயலிலே ஈடுபட்டவர் தமக்குத்தாமே துன்பத்தைத் தேடிக் கொள்ளும் அறியாமை உடையவர்கள். தோஒம் - குற்றம். 'இல்லையே தாம் தர வாரா நோய்' என்பது பழமொழி.

55. அரசனே முறை தவறினால் செய்வது என்ன?

     அலைகள் மிகுதியாக வருகின்ற கடற்கரைக்கு உரியவனே! தன்னுடைய வெண்குடையின் கீழாக வாழ்கின்ற குடிமக்களுக்கு அரசனும், செங்கோன்மை உடையவனாகவே விளங்க வேண்டும். அப்படி இல்லாமற் போனால், அந்த மக்கள் தாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? யானையானது தொட்டு உண்ணத் தொடங்கி விட்டால், அதற்கு மூடி மறைத்து வைக்கத் தகுதியான பாத்திரம் என்பது எதுவுமே கிடையாதல்லவா?

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'.

     அரசன் எப்பொழுதும் செங்கோன்மை உடையவனாக இருக்க வேண்டும். 'கொடுங்கோன் மன்னன் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று' என்பதையும் நினைக்க, 'இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்' என்பது பழமொழி. அரசனே முறை தவறினால் தடுப்பவர் யாரும் இல்லை என்பதாம்.

56. படித்தவனிடமே பொறுப்பை ஒப்புவிக்கவும்

     ஒரு செயலைச் செய்வதற்குரிய ஆளினை ஆராயுங் காலத்திலே, இவன் நம் உறவினன் என்றோ, உறவினன் அல்லாதவன் என்றோ கருத வேண்டாம். ஒள்ளிய பொருளைக் கற்றறிந்த ஒருவனை ஆராய்ந்து பார்த்து அவனிடமே அதை ஒப்புவிக்கவும். படித்தவன், தன் உரிமையாளனின் பேச்சைக் கேட்பான். அவன் கேளாமற் போனாலும் அது எருது உண்டு விட்ட உப்பைப் போன்று நன்மை தருவதாக முடியுமே அல்லாமல் உடைமைக்காரனுக்கு நட்டமாகாது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.

     கற்றவனிடமே காரியத்தை ஒப்புவிக்க வேண்டும் என்பது கருத்து. எருது உப்பைத் தின்றாலும், அதிக உரமுடையதாக உரியவனுக்கு நன்றாக உழைப்பது போலக் கற்றவனும் உழைப்பான் என்பதாம். 'இழவன்று எருதுண்ட உப்பு' என்பது பழமொழி.

57. கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே

     நல்ல பெண்மைப் பண்புகளை உடையவளே! தாம் ஒழுக்கக் குறைபாட்டினாலே இழிவுடையவராவதைக் காட்டினும் ஒருவர்க்கு இழிவு தருவது யாதும் இல்லை. அதே போல ஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வை விட சிறந்த உயர்வும் ஒருவர்க்கு யாதுமில்லை. இவை போலக் கல்லாதவர்களிடையிலே சென்று உறுதிப் பொருள் பற்றிக் கட்டு உரைபப்தினும், மிகுதியான ஒரு பொல்லாங்கும் இல்லை என்று அறிவாயாக.

கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய்!
'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.

     கல்லாதவன், அதனைக் கேட்டதும் சொன்னவரையே அவமதிக்க முற்படுவான்; அதனால் பொல்லாங்கே மிகுதியாகும் என்பது கருத்து. 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை', 'இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு' என்பன இரண்டும் பழமொழிகள்.

58. தொழுவதால் வினை மாறாது

     இவ்வுலகத்து நம் வாழ்வு முழுவதையும், நாம் பிறவி எடுப்பதற்கு முன்பாகவே வகுத்து விட்டவன் என்று கருதி கடவுளைத் தொழுது கொண்டே இருந்தால், வந்த துன்பங்கள் எல்லாம் தாமே ஒழிந்து போய் விடுமோ? காவலைக் கைவிட்டவன் பசு நிரையைக் காப்பாற்றுவதில்லை; அவ்வாறே முதலில் ஓலையைப் பழுதுபட எழுதினவன், தானே குற்றம் செய்தவனாக, அவனே மீண்டும் அதனை நேராது காப்பவனாதல் என்பதும் ஒரு போதும் இல்லையாகும்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது'.

     ஊழ்வினையால் துன்பம் வருவதாயினும், அதனை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாமே தவிரத் தெய்வங்களைத் தொழுது மட்டும் மாற்றிக் கொள்ள முடியாது. 'இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது' என்பது பழமொழி. இழுகினான் ஆ காப்பது இல்லை; முன்னம் ஓலை பழுதாக எழுதினான், அவனைக் காப்பது மில்லை என்க.

59. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

     சிறப்பினையுடைய தன்னுடைய இனமெல்லாம் தன் உடனே இல்லாமற் போய்த் தனித்துக் காணப்பட்ட இடத்தும், இளையது, என்று கருதியும், எவரும் பாம்பினை இகழ்ச்சியாகக் கருத மாட்டார்கள். அது போலவே, சிறந்த தகுதிகளை உடைய மன்னர்கள் தம்முடைய சிறந்த நிலைமையனைத்தும் கெட்டுப் போய் விளங்கிய காலத்தும், அந்த நிலைமையைப் பார்த்து, அதற்குத் தக்கபடி அவரை இழிவாகக் கூறி யாரும் இகழ்ந்து பேசவே மாட்டார்கள்.

சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'

     அரச குடிப்பிறப்பின் உயர்வு பிற கேடுகள் வந்த காலத்திலும் ஒருவரை விட்டு மாறாது; அவரை எள்ளற்கு யாரும் துணியார் என்பது கருத்து. 'இளைதென்று பாம்பிகழ்வார் இல்' என்பது பழமொழி.

60. கிடைத்ததைக் கொண்டு முயல்க

     வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலிலே ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்று விட்டானென்றால், அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்று விடுவான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்றுச் செல்வரைச் சேர்ந்தவர்கள், விரைவிலே பெரிதளவான ஊதியத்தையும் அவரிடமிருந்து பெறுவார்கள்.

சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்
'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும்'.

     செய்யும் முயற்சியிலே, முதலில் சிறிதான பலன் கிடைத்தாலும் இகழாது நிலைத்து நிற்பவர், விரைவிற் பெரிய பலனையும் அடைவர். 'இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்' என்பது பழமொழி.

61. தளராத முயற்சியே உயர்வு தரும்

     வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல் நீர்ப் பெருக்கினையுடைய சேர்ப்பனே! தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதி வரையும் முடித்து விடுகின்றவன் அறிவுடையவனே யாவான். அங்ஙனம் செயலைச் செய்து முடிப்பவன், வயதில் இளையவனே யானாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ளல் வேண்டும்.

கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்'.

     இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். 'இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்' என்பது பழமொழி.

62. தகுதியற்றவரை விலக்குவதற்கு

     காதிற் குழைகளை அலைத்து விளங்கும் அகன்ற கண்களை உடையவளே! சாகப் போகின்ற காராட்டை உடன்பாடு கொள்ளச் செய்து அதன் பின்னரே அதன் குருதியை உண்டவர் உலகத்திலே எவருமில்லை. அதே போல, ஒரு காரியத்தைச் செய்வதற்கென்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள், அந்தக் காரியத்தளவிலே நன்மை செய்யும் தகுதியற்றவரானால், அதனை அவருக்கு எடுத்துக் காட்டி, அவர் சம்மதத்தைப் பெற்று நீக்கிவிடுவோம் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம்.

நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்! 'இறக்கும்மை யாட்டை
உடம்படுத்து வெளவுண்டார் இல்'.

     காரியம் முடிக்கத் தகுதியற்றவரை அவருடைய தகுதியின்மையை உணர்த்திக் காட்டி விலக்க முயல வேண்டாம்; உடனேயே நீக்கி விடவேண்டும். 'இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்' என்பது பழமொழி.

63. இழந்ததை அடையவே முடியாது

     ஒலி முழங்கும் நீரினை உடைய உப்பங்கழிகள் அலை வீசிக் கொண்டிருக்கின்ற கானற் சோலைகளுக்கு உரிய அழகிய சேர்ப்பனே! கழிந்து போன ஒன்றினை மீட்டுத் தருவதற்கான வழியினை அறிபவர்கள் எவருமே இல்லை. அதனால், தம்மிடத்திலே உள்ள பொருள்களைத் தாமே போற்றிப் பேணுவதல்லாது, சிறந்தவராகிய சுற்றத்தார் எனக் கருதி, நம்பக் கூடாதவரிடத்திலே, பொருளைப் போற்றுபவர் மறந்துங் கூட விட்டு வைக்க மாட்டார்கள்.

மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
'இறந்தது பேர்தறிவார் இல்'.

     தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும். 'இறந்தது பேர்த்தறிவார் இல்' என்பது பழமொழி.

64. கொடுக்கக் கொடுக்கப் பெருகும்

     கடற்பரப்பிலே, துறையினின்று செல்வனவும் துறை நோக்கி வருவனவுமான தோணிகள் நிலையாக உலவிக் கொண்டிருக்கிற, அசைகின்ற நீர்ப் பெருக்கினையுடைய கடல் நாடனே! தம்மிடத்தே வந்து யாசித்தவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பதனால் தம் செல்வம் குறைந்து போய் விடும் என்று நினைத்துத் தம் செல்வத்தை மறைத்து வைப்பவர்கள், இறைக்குந்தோறும் ஊறிப் பெருகும் கிணற்றினைப் பார்த்தேனும், பொருளின் உண்மைத் தன்மையை அறிய மட்டார்களோ?

இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.

     கொடையால், பொருள் மிகுதியாகும் நல்லூழ் ஒருவனுக்கு வந்து வாய்க்கும். 'இறைத்தொறும் ஊறும் கிணறு' என்பது பழமொழி. 'இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்' என்று இந்நாளில் வழங்குவதையும் நினைக்கவும்.

65. மக்கள் விரும்புவன செய்க

     ஒன்றைச் செய்யவேண்டுமென மனங்கொண்ட இடத்தும் பொருந்தி வராத ஒன்றினை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள். சான்றோர்கள் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு பேணிக்காத்து வருதல் வேண்டும். மக்கள் விரும்புவனவான செயல்களைச் செய்யக் கூடாதென, விரும்பினதற்காக மக்களினத்தையே கழுவேற்றினவர் எவரும் இல்லை.

மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
'இனங்கழு வேற்றினார் இல்'.

     மக்களிற் பெரும்பாலோரின் விருப்பத்திற்கு ஆட்சியாளர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டுமே தவிர, சட்டம் இப்படிக் கூறுகிறதென அவர்களுக்கு மாறுபட்டு நிற்றல் வேண்டாம்; அவர்களை ஒழிக்கவும் முயல வேண்டாம். 'இனம் கழுவேற்றினார் இல்' என்பது பழமொழி.

66. இனிமையாகவே பேசுக

     ஒருவனைப் புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை. புன்மையான சொற்களும் நன்மையான சொற்களும் தருகின்ற பயனை உண்மையாக உணர்வதற்கு வல்லவர்கள், வன்மையான பேச்சுப் பேசுகிறவர்களாக வாழ்ந்திருத்தலும் உண்டோ?

புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.

     இனிமையாகவும் நன்மைதரும் சொற்களாலும் பேசுவதே சிறப்புடையது. 'இன்சொல் இனிதீன்றல்' என்ற குறளையும் நினைக்க. 'இன்சொல் இடர்ப்படுப்ப தில்' என்பது பழமொழி.

67. ஒருவனை எதிர்க்க இருவர்

     பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! வேட்டையாடுதல் என்பது சிறிது பொழுதளவே என்றாலும் ஒரு நாயைக் கொண்டே இருவர் வேட்டையாடினால், அது துன்பந் தருவதேயாகும். அதுபோல, ஒருவன் சொல்பவைகளைச் சொன்னால், அதனைக் காரணமாகக் கொண்டு அவனுக்கு மாறுபட்ட இருவர் ஒரே சமயத்தில் அதற்கு எதிர்வாதமிடத் தொடங்குதலும் தகுதி உடையதாகாது.

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.

     அவையிலே, ஒருவர் சொன்ன கருத்தினை ஒரே சமயத்திலே ஒருவர் தாம் மறுத்துப் பேசலாமே தவிரப் பலரும் எழுந்து மறுத்துப் பேசுதல் அவைப் பண்பு ஆகாது. பாலா - பண்பாகுமோ? 'இன்னாது இருவர் உடனாடல் நாய்' என்பது பழமொழி.

68. பேயையும் பிரிய முடியாது

     விளங்கும் அருவிகள் பாய்ந்து வீழ்கின்ற வளமுடைய மலை நாட்டிற்கு உரியவனே! விலங்கேயானாலும், தம்மோடு உடன் வாழ்தலைக் கொண்டிருக்கும் பழகியவர்களைக் கைவிட்டுப் போவதற்கு இசையாது; ஆதலால் பேயோடென்றாலும் முதலிலே பழகிவிட்டால் பின்னர் பிரிவதென்பது துன்பம் உடையதாகவே இருக்கும்.

விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
தாஅய இழியும் மலைநாட! 'இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு'.

     நட்பு செய்வதற்கு முன்னர், தகுதி உடையவரை நாடியே நட்புச் செய்தல் வேண்டும். 'இன்னாதே பேயோடானும் பிரிவு' என்பது பழமொழி. இதை நினைக்க வேண்டும்.

69. கெட்டாலும் பெரியோர் பெரியோரே

     மேல்மாடங்களையுடைய பெரிய வீடானது அழிந்த விடத்தும், அதிலுள்ள மரங்கள் மீண்டும் கட்டுவதற்கான ஒரு கூட்டத்திற்காவது பயன்படும்; அதுபோலவே, பெரியோர்கள் செல்வம் இல்லாத இடத்தும், தம்முடைய பெருந்தன்மையினின்றும் குறைபாடுறவே மாட்டார்கள். அதனால் இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்றுமே அழிவில்லை என்று அறிதல் வேண்டும்.

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.

     பெரியோர், தம் வலிமையாலும் செழுமையாலும் குறைந்த காலத்தினும் பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுவார்கள். சிறியோர் அங்ஙனம் உதவார். ஆதலின் அவர் தொடர்பைக் கைவிடுக. 'ஈடில்லதற்கில்லை பாடு' என்பது பழமொழி.

70. எப்போதும் பொறுக்க முடியாது

     இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப் போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அது போலவே முன்னம் ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ?

முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர! 'ஈனுமோ
வாழை இருகால் குலை?'

     சான்றோர், பிறர் செய்த குற்றங்களைப் பொறுப்பார்கள் என்றாலும் அவர் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதனால், சான்றோர் பொறுப்பார்கள் எனக் கீழ்த்தரமானவர் அவர்களுக்குத் தொடர்ந்து தீமை செய்ய முனைதல் கூடாதென்பதும் பெறப்படும். 'ஈனுமோ, வாழை இருகால் குலை' என்பது பழமொழி.

71. உடை மதிப்புத் தரும்

     படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் என்பதும் இல்லாத வறியராக இருந்தபோதும், நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் 'பசிக்கு உணவு உண்கிறீர்களோ?' என்று கேட்பவர் யாரும் இல்லை. அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியாயிருந்த காலத்தும், ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத்தினால் பொலிவுற்று விளங்குதலே நன்றாகும்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்'.

     உயர்குடிப் பிறந்தவர் எத்துணை வறுமைக் கண்ணும், பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மை தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து. 'உடுத்தாரை, உண்டி வினவுவார் இல்' என்பது பழமொழி.

72. உண்ட வீட்டிற்குத் தீவினை

     'பழைய உறவினர்' என்று, தம் சுற்றத்தாரையும் தம்மையும் ஏற்றுக் கொண்ட வகையாலேயே, தம் குறை அனைத்தும் தீர்ந்து போகுமாறு ஒருவர் கருணையுடன் நோக்கிய காலத்திலே, அப்படிச் சொன்னவரோடு சேர்ந்திருந்து பயன்பெற்றுப் பின் அவரைப் பற்றி ஒருவன் புறங்கூறித் திரிந்தானென்றால், உண்ட வீட்டிற்குத் தீயிடுவது போன்றதே அவன் செய்யும் செயலாகும்.

பண்டினர் என்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதால்
'உண்டஇல் தீயிடு மாறு'

     உதவின நன்றியை மறந்து புறங்கூறுவாரின் இழிதகைமை மிகவும் கொடியது. வெறுக்கத்தக்கது என்பது கருத்து. 'உண்ட இல் தீயிடுமாறு' என்பது பழமொழி.

73. வீரன் துரோகம் செய்ய மாட்டான்

     தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள், ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்கா. அது போலவே, தன் அரசனுக்கு ஒரு துன்பம் வந்துற்றால் தம் உடம்பையும் கொடுக்கக் கூடிய ராஜபக்தி உடையவன் அரசனுக்குப் பகையானவர்களோடு சேர்பனாவானோ? சேரமாட்டான் என்க.

உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ! - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? 'உண்ணா
இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.

     'தன் மன்னனிடம் பாசமுள்ள ஒரு வீரன், என்றும், துரோகக் கும்பலிலே சேரமாட்டான் என்பது கருத்து. இதனால், வீரர்களின் இயல்பு சொல்லப்பட்டது. 'உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர்' என்பது பழமொழி.

74. கூற்றமும் உட்பகையும்

     கூற்றமானவன், விதித்த ஆயுள் நாளை எண்ணிக் கொண்டே காத்திருந்து, உயிர்களைப் பற்றிச் செல்வதனை விரும்பித் திரிந்து கொண்டே இருப்பவன். என்றாலும் அப்படி ஓர் உயிரையும், தான் உண்ணும் காலம் வரையும் அவனும் காத்தே நிற்பான். அதுபோலவே கண்ணினுள் இருக்கும் கருமணியைப் போல அன்புடன் நண்பு காட்டிப் பழகிய போலி நண்பாளர்களும், தமக்கு ஆக வேண்டிய பயன் நம்மால் முடிந்தன என்று எண்ணும் அந்தப் பொழுதிலேயே, நம்முடைய பகைவராகி நிற்பார்கள்.

கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று'.

     போலி நண்பர்களை ஆராய்ந்து ஒதுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்த அவர் இயல்பு கூறப்பட்டது. 'உண்ணுந் துணைக்காக்கும் கூற்று' என்பது பழமொழி.
75. பணியாளரை அன்புடன் நடத்துக

     தம் காரியங்களைத் தாமே திறமையுடன் முடித்துக் கொள்ளுவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள், தம்மால் அதற்கென அடையப் பெற்றவர்களையும், தீமையான பதில்களாலே தமக்குப் பகையாக்கி விட்டு, அவர்கள் பகைமைக்குப் பயந்து, அவர்கள் அறியாததன் முன்பே தமக்குப் பாதுகாவலாக ஓடுதலை மேற்கொண்டு போய் விடுவார்கள். இவர்கள் செயல்தான், இரந்து உண்ணும் ஓடாகிய உண்கலத்தையே உடைப்பவனின் செயலைப் போன்றதாகும்.

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப
முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே
'உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'.

     த்ன் திற்மையில்லாத ஒருவன், பிறர் துணையாலும் ஒரு காரியத்தை முடிக்கச் சக்தியற்றவனாகவே இருப்பான். 'உண் ஓட்டு அகல் உடைப்பார்' என்பது பழமொழி.

76. பயனற்றவனின் உறவே வேண்டாம்

     அருவிகள், விட்டுவிட்டு ஒளி செய்து பொன்னைக் கொழித்து வீழ்ந்து கொண்டிருக்கின்ற, தண்மையான மலை நாட்டிற்கு உரியவனே! தம்மை வந்து புகலாக அடைந்தவர்களுக்கு உற்ற ஒரு துயரத்தைத் தமக்கு வந்து சேர்ந்ததாகவே கொண்டு, 'எமக்குத் துன்பம் வந்துற்றது' என்று உணராது அவரைக் கைவிட்டால், அதனை என்னென்று சொல்வது? 'உமியைக் குற்றுதலாலே கை வருந்துவது போன்ற செயல்' என்று தான் கூற வேண்டும்.

தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட!
'உமிக்குற்று கைவருந்து மாறு'.

     சுற்றத்தாருள் யாருக்காவது துன்பம் வந்த காலத்திலே உதவாத ஒருவன் பயனற்றவன் அவனைச் சுற்றத்தான் எனக் கருதி நாடிச் செல்லுதல், உமிக் குற்றிக் கைநோகிறதே என்பது போன்ற வீண் செயலேயாகும். 'உமிக்குற்றுக் கை வருந்துமாறு' என்பது பழமொழி.

77. இரண்டறக் கலப்பதே நட்பு

     உளம் பொருந்திய காதலுடைய உமையவளைத் தன்னிலே ஒரு கூறாக அமையுமாறு, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடையைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும் கொண்டிருக்கிறான். தம்மை நட்புச் செய்தவர்களைச் சேர்ந்த பொழுதிலே, அவரைவிட்டு அவ்விடத்தே கொஞ்சமேனும் அகலாமல், முழு உடம்பும் பொருந்தக் கலந்து விடுபவர்களே சிறந்த நண்பர்கள் ஆவர்.

ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.

     சிறந்த நண்பர்கள், நண்பரே தாம் என்று கருதும் கலந்த ஈடுபாடு உடையவர்கள் என்பது கருத்து. 'உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டான்' என்பது பழமொழி. தண்டு என்றது பகைவரின் பெரும்படையை.

78. உள்ளம் தெரிந்த பின் உறவாடுக

     கொல்லுகிற முறைப்படியே கொன்ற பின்னர் அல்லாது, மானின் தசையைத் தின்ன நினைப்பவன், அதனைத் தப்பிப் போக விட்டுவிட்டு, அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதில்லை. அது போலவே, ஒருவர் உள்ளத்திலே நிலவும் அன்பின் தகுதியை அறிந்த பின்னர் அல்லாமல், யாரும் யார்க்கும் தம்முடைய இரகசியத்தை முன்னதாகவே ஓடிச் சென்று சொல்லாதிருப்பாயாக.

அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக் கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்'.

     அன்பின் தகுதியை அறிந்த பின்னரே தம் இரகசியத்தை ஒருவரிடம் சொல்லலாம் என்பது கருத்து. 'உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்பது பழமொழி.

79. தகுந்தவரையே சேர்ந்து வாழ்க

     ஆற்றினுள்ளே புரள்கின்ற கயல்மீன்களைப் போல விளங்கும் மையுண்ட கண்களையும், பொற்குழையினையும் உடையவளே! பெரிதாகத் தோன்றுதல் வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள், அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆற்றலில்லாதவர்களை அடைந்து அவரைப் பின்பற்றி நடத்தல், வண்டிக்கு இடுகின்ற மையினுள்ளே குளிக்கின்ற செயலைப் போன்றதாகும்.

தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய்! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.

     'குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டது போல' என்ற பழமொழியையும் இங்கே நினைக்க. குளிக்க நினைத்து வண்டி மையினைப் பூசிக் கொண்டால் விகாரமே மிகுதியாகும்; அது போலவே ஆற்றலற்றவரை அடைபவரும் அவமானமே அடைவார்கள் என்பது கருத்து. 'உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு' என்பது பழமொழி.

80. உருவின் உயர்வு

     அந்த நாளிலே, வாளாற்றல் உடையவனாகிய திருமாலைக் கொல்லும் பொருட்டு மதுகைடவர் என்போர் வளைத்துக் கொண்டார்கள். அப்போது, திருமால், தன்னுடைய திருமேனியின் விளங்குதல் பொருந்திய பேரொளியைக் காட்டவும், ஒப்பற்ற அந்த வடிவழகின் தன்மையைக் கண்டு, அவர்கள் தம் நினைவைக் கைவிட்டார்கள். உருவப் பொலிவு ஒருவனுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பதும் அதனைப் போன்றதுதான்.

வாள்திற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்
பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
'உருவு திருவூட்டு மாறு'.

     உருவத் தோற்றத்தின் சிறப்பு இதன் கண் சொல்லப் பட்டது. இதனை, ஆங்கிலத்தில் 'பெர்சனாலிடி' என்பார்கள். 'உருவு திருவூட்டுமாறு' என்பது பழமொழி. திருமால் மோகினிப் பெண் வடிவிலே தோன்ற அவர்கள் மயங்கித் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு இறந்தனர் என்பர்.

81. இகழ்வான் இகழப்படுவான்

     பலவாகிய பசுக்கூட்டங்களை மேய்ச்சற் புறங்களிலே காத்து நின்ற நெடியோனாகிய திருமாலேயானாலும், அவையில் ஒருவனை இகழ்ந்து பேசினால், தானும் அவனால் இகழ்ந்து பேசப்படுதலை அடைதலே உளதாகும். ஆகையால், பலரும் கூடியிருக்கின்ற அவையின் நடுவிலே நன்னெறியின் பால் ஒழுகிவரும் சான்றோர்கள், ஒருவரையும், அவர்கள் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்லி இகழவே மாட்டார்கள்.

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.

     'உரைத்தால் உரை பெறுதல் உண்டு' என்பது பழமொழி. எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது என்பது கருத்து. அப்படிச் செருக்குற்றுப் பேசினால், அவரும் இகழத் தலைக்குனிவே ஏற்படும் என்பது முடிவு.

82. நண்பரைப் பழித்தல் கூடாது

     கண்கள் விழித்திருப்பன போன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடற்றுறைகட்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடையோர் பலர் நடுவிலே சொல்லாட மாட்டார்கள்; என்ன காரணம் என்றால், தமக்கு இழிவைத் தருவன பற்றிக் கனவு கண்டவர், அதனை யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்பதனால்.

கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.

     நண்பரைப் பழி கூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து. 'உரையார் இழித்தக்க காணிற் கனா' என்பது பழமொழி.

83. முறையாகவே எதனையும் ஆராய்ந்து செய்க

     இந்த உலகத்தினுள்ளே இல்லாத ஒரு பொருளுக்குப் பெயரும் இல்லையாகவே இருக்கும். அது போலவே, முடிந்து போன ஒரு செயலுக்கு முயற்சியும் வேண்டுவதில்லை. முடிவுறா இடையிலே முறிந்த செயலுக்குப் பெருக்கமும் இல்லை. குற்றமறச் செய்யவல்லதான ஒன்றைச் செய்வதிலே வருத்தமும் கிடையாது.

முடிந்தற்(கு) இல்லை முயற்சி; முடியாது
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம்; - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம்; 'உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர்'.

     எந்தச் செயலையும் குறைபாடில்லாமல் முற்றவும் செய்து முடிக்க வேண்டும் என்பது கருத்து! 'உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர்' என்பது பழமொழி.

84. அளவற்ற ஆசைப் படுபவர்

     இந்த உலகத்திலே, அளவுக்கு அதிகமான பெருஞ் செல்வத்தை விரும்புகிறவர்கள் சிலர். அவர்கள், நலத்தின் தகுதிகளால் மேம்பட்ட அரசர்களுள், நல்லவர்களைச் சார்ந்து அதனை ஈட்ட நினைப்பர். எனினும், அவர்களைச் சென்று சார்ந்ததும் நிலைகொள்ளாத காலினராகத் தருக்கி, ஏதும் அடையாதே கெடுவர். ஆராய்ந்து பார்த்தால், இத்தகையவரே உலக்கையின் மேலே இருக்க முயலும் காக்கை என்று சொல்லப்படுவராவர்.

நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
'உலக்கைமேல் காக்கை' என்பார்.

     உலக்கையை உயர்த்திக் குத்துகின்ற காலத்து, அதன் மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின் கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது. இது போல, மனத்திலே அறியாமையுடையவர்களின் முயற்சியும் பயனற்றுப் போகும். 'உலக்கை மேல் காக்கை' என்பது பழமொழி.

85. பகைவனை அன்பால் வசமாக்க முடியாது

     நிலத்தைச் சுற்றினும் சுவர் எடுத்துப் பொருத்தமாக நீர் பெருக்கி வெப்பத்தை தணிக்க முயன்ற போதிலும், உவர் நிலம் உள்ளேயுள்ள தன் கொதிப்பு மாறாமல், என்றும் உடையதாகவே இருக்கும். அதே போலச் சுற்றத்தார் அல்லாத பகைவர்களை எவ்வளவுதான் தலையளி செய்து போற்றினாலும், அது அவருக்கு நன்மையாகத் தோன்றுவதேயில்லை. விருப்பமற்ற குறிப்பினை உடையதாகவே தோன்றும்.

தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
'உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'.

     பகைவரை, அவர்க்கு அருள் செய்வதன் மூலம் நமக்கு வேண்டியவராக்கி விட முடியாது. நம் செயலை அவர்கள் ஐயுற்று அதிகமான உட்கொதிப்பே அடைவர்கள். ஆகவே அதனைச் செய்பவர் முயற்சி பயனற்றது. 'உவர் நிலம் உட்கொதிக்குமாறு' என்பது பழமொழி.

86. கீழ்மக்களுக்குச் செய்த உதவி

     பரந்து வரும் கடலலைகள் வெள்ளத்தைப் போல விளங்கும்; கடற்கரைகள் தண்மையுடன் விளங்கும்; அவற்றிற்கு உரியவனான சேர்ப்பனே! ஒருவருக்கு ஒரு துன்பமானது வந்த காலத்திலே, சுற்றத்தாராலும் தம் முயற்சியினாலும் அதற்குத் தகுதியான ஒரு செயலைச் செய்து, அவர் மனம் ஒத்தவராக நடந்தவர் என்பவர் எவரும் கிடையாது. செய்த உதவிகளை நினைத்து உவப் படையாத கீழ் மக்களுக்குக் கொடுத்த கொடையெல்லாம், இழந்து போன பொருள்களாகவே கருதப்படும்.

தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி
நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை எல்லாம் இழவு'.

     உதவியின் பயனை அனுபவித்தும், அதனை உதவியவரின் செயலுக்கு நன்றி காட்டாத பயனற்ற மக்களுக்கு உதவுதல் கூடாதென்பது கருத்து. 'உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு' என்பது பழமொழி.

87. கள்ளத்தை முகத்திலே காணலாம்

     ஒளி பொருந்திய அமர்த்த கண்களை உடையவளே! ஒருவர், எவ்வளவுதான் பிறர் அறியாத வகையாகத் தம் கள்ளத்தனத்தை மறைத்தாலும், அவருடைய உள்ளத்திலே நிலவுவதை அவர் முகமானது பிறருக்கு எடுத்துச் சொல்லிவிடும். அதனால், வெள்ளம் வருகின்ற காலத்திலே அதுவருமிடம் எங்கும் ஈரம் பட்டு விளங்குவதைப் போலக் கள்ளமான எண்ணம் உடையவர்களையும், அவர்களைப் பார்த்த அளவாலேயே அறிந்து கொள்ளலாம்.

வெள்ளம் வருங்காலை ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.

     உள்ளத்தில் உள்ளதை முகம் காட்டி விடும். ஆதலால் எவரும் உள்ளத்தில் தூய்மை உடையவராகவே வாழ்தல் வேண்டும் என்பது கருத்து. 'உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்' என்பது பழமொழி. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதும் நினைக்க.

88. கீழோர்க்கு உபதேசிப்பதும் ஆபத்து

     தேரின் உள்ளே தானே இருந்து கொண்டு, ஒருவன் தானே அதனுடைய அச்சாணியைக் கழற்றி எறிந்து விடுதல், தேருடன் அவனுக்கும் அவனே இழிவைத் தேடிக் கொள்வதாகும். தாம் கூறுகின்ற சொற்களை ஏற்றுக் கொண்டு, தம்மைப் போற்றி நடக்காதவர்களாக, கல்லால் எறிந்தாற் போலக் கடுஞ்சொற்களைப் பேசிப் பகைமையை மேற்கொள்ளும் கீழ் மக்களை, அவர்களுடைய வீட்டிலேயே இருந்து கொண்டு, அவர் செயலுக்காக அவர் மீது இரங்கிப் பேசி, அவருக்குக் கோபம் வருமாறு செய்தலும், அப்படிப்பட்ட அறியாமையான செயலேயாகும்.

சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.

     நீயோரால் ஒரு செயலைச் செய்து கொள்ளக் கருதும் அறிவுடையோர், தம் செயல் நிறைவேறும் வரைக்கும், அவர்களைக் கோபமூட்டும் வகையாக எதுவுமே பேசக் கூடாது என்பது கருத்து. 'உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்குமாறு' என்பது பழமொழி.

89. வரும் சிறப்பு தவறாது வரும்

     'கழுமலம்' என்னும் இடத்திலே கட்டப்பட்டிருந்த களிற்று யானையும், கருவூரிலே இருந்த சிறப்புடையோனாகிய கரிகால வளவனிடத்தே சென்றது. அவனைக் கொண்டு வந்து சோழ நாட்டுக்கு அரசனாகவும் ஆக்கிற்று. அதனால், சிறந்த பொருள்கள், தம்மை ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அடைதற்குரியதான முன் வினைப்பயன் உள்ளவனைத் தாமே வலியச் சென்று அடையாமற் போவது அருமையாகும்.

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் 'உறற்பால
தீண்டா விடுதல் அரிது'.

     'நல்ல சிறப்பு வரும் ஊழ்வினை இருந்தால், அது எப்படியும் வந்தே தீரும்' என்பது கருத்து. கழுமலம் - சீர்காழி என்பர், 'உழற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி. 'வருவது வந்தே தீரும்' என்பதும் இது.

90. வரவேண்டிய துன்பம் தவறாமல் வரும்

     பொங்கிப் பெருகி வந்து கற்பாறையினிடத்தே பாய்கின்ற, அருவிகள் அழகு செய்யும் மலைநாட்டிற்கு உரியவனே! அழகிய இடமான வானத்திலிருந்து பரந்த நிலவுக் கதிர்களைப் பொழிந்து உதவும் திங்களும், இராகு கேதுக்களால் தீமை அடைவதைப் பார்க்கின்றோம். அதனால், வரக்கடவதான துன்பங்கள் எவ்வளவு சிறந்தோர்க்கும் தவறாமல் வந்தே சேரும் என்று அறிய்வாயாக.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
'உறற்பால யார்க்கும் உறும்'.

     உயர்வுடைய சான்றோரும் ஒவ்வோர் சமயத்தே துன்பத்திற்காளாவது அவருடைய ஊழ்வினைப் பயன் என்பது கருத்து. அறை - பாறை. 'உறற்பால யார்க்கும் உறும்' என்பது பழமொழி. 'வினை வீயாது பின்சென்று அடும்' என்பதும் நினைக்க.

91. தீயவனை ஊரே அறியும்

     ஊரிலே அறியப்படாத பொலிகாளை என்பது எங்குமே கிடையாது. அது போலக், கூர்மையான அறிவுடையவர்களிடத்திலே சென்று நல்ல பண்பு உடைய அவர் அறிவுரைகளைக் கேட்டுப் பயன் பெறாது, தம்மிடமுள்ள இருண்ட அறிவான புல்லறிவினையே தம் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டு, கடிதான செயல்களையே செய்தொழுகும் முரடர்களின் பெயரை அறியாத அறிவிலிகளும், நாட்டிலே யாருள்ளனர்?

கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.

     மூரி - கட்டுக்கு அடங்காது அலையும் கொழுத்த எருது. அவர் போலப் புல்லறிவாளரும் கட்டுக்கடங்காது தலை நிமிர்ந்து செருக்கித் திரிவார்கள் என்பது கருத்து. அவர் தொடர்பைக் கைவிடல் வேண்டும் என்பது முடிவு. 'ஊரறியா மூரியோ இல்' என்பது பழமொழி. இவரை ஊரே அறியும் என்பதும் கூறப்பெற்றது.

92. சாவை நினைத்து, தருமத்தை உடனே செய்க

     அவர்கள் இல்லாமல், தாம் அமைவதே இயலாத சிறப்புடையவரான, இருமுது குரவராகிய தாய் தந்தையர்களும் கூடத் தம்மை விட்டுப் போய்விட்டதனைக் கண்டும் இவ்வுலகத்து வாழ்வை நிலையான ஒரு பொருளாக அறிவுடையோர் கொள்வார்களோ? அதனால், பொருத்தமான வகையினால் எல்லாம் காலத்தால் தருமங்களைச் செய்வீர்களாக. குன்றமானது ஊர்ந்து உருண்டு செல்லத் தொடங்கினால் அதன் வழியைத் தடுப்பது எதுவுமில்லை. அதுபோலவே, சாவு வருங்காலத்தும் அதனை வராது தடுப்பது எதுவும் இல்லை.

இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'.

     உடலின் நிலையாமையான தன்மை கூறி, அறம் செய்தல் வற்புறுத்தப்பட்டது. 'ஊர்ந்துருளின் குன்று வழியடுப்பதில்' என்பது பழமொழி. சாவும் அவ்வாறு தடுக்கவியலாதது என்பது கருத்து.

93. போர் வீரரின் முனைப்பு

     ஆராய்ந்து பார்க்குமிடத்திலே, காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும். "மாலை பொருந்திய பெரிய பெரிய மார்பினையுடைய அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்" எனத் தறுகண்மை பேசுபவர்கள், 'அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். யாவர் மேற்றாக அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலேயாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிக்கச் செல்வதே சிறப்பு.

தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'

     ஓடேந்தி அமணர் சென்றால் ஈகைப் பயன் உணர்ந்தவர் தாமே வந்து மனதார இட்டுச் செல்வது போல, வீரர்கள் போரிலே தம் கடனாகவே எண்ணித் தம் க்டமையைச் செய்ய, அதனால் அரசனும் வெற்றி பெறுவான் என்பது கருத்து. 'ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

94. துன்பத்துக்கு அஞ்ச வேண்டாம்

     ஆண் யானையானது பனியால் வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக் கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலை நாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒரு போதும் குறி தவறி நிலத்திலே வீழ்வதில்லை. அது போலவே, செய்யத்தக்கது இதுவென உணரும் அறிவுடையவர்கள், தம்மால் மிகவும் பயப்படத் தக்கதான துன்பங்கள் வந்தாலும், தம்மிடத்தே உண்டாகும் துன்பத்துக்கு ஒரு போதும் அஞ்சமாட்டார்கள்.

நனியஞ்சத் தக்க அவை வந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.

     அதனை ஊழ்வினைப் பயன் எனக் கருதி அமைந்து தாம் தளராமல் நல்வினைகளிலேயே ஈடுபட்டு வருவார்கள் என்பது கருத்து. 'ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி.

95. அறமே சிறந்த பெருஞ்செல்வம்

     தாம் தேடிப் பாதுகாவலாக வைத்த செல்வத்தைத் தமக்கு ஆபத்துக் காலத்திலே உதவும் பெருநிதி யென்று எவரும் நினைக்க வேண்டாம். அதனைத் தாமும் அனுபவித்தும், பிறருக்கும் கொடுத்து, இருமைக்கும் அழகியதாகத் தக்க இடம் பார்த்து, முறையாக அறம் செய்து வந்தால், அதுவல்லவோ, தாம் தளர்ந்த காலத்து உதவும் பெருநிதி என்று சொல்லப்படுவதாகும்.

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'.

     தருமநெறியே இருமையிலும் தன்மை தருவது. இதனை உணர்ந்து பொருளைப் பதுக்கி வைக்காமல் தருமத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பது கருத்து, 'எய்ப்பினில் வைப்பென்பது' என்பது பழமொழி.

96. தீவினை செய்தால் தப்ப முடியாது

     எல்லா வகையினாலும் மிகவும் பெரியவர்களாக விளங்கும் சான்றோர்களைக் கல்வியறிவில்லாத அறியாமை உடையவர்கள் பல சமயங்களில் வெறுக்குமாறு செய்து விடுகின்றனர். தகுதி நிறைந்து, ஒலி முழங்குகின்ற வளைகளை அணிந்தவளே! சொல்லப் போனால், அதுவே, எருக்கந் தூற்றிலே மறைந்து இருந்து கொண்டு, ஒருவன் யானையை மதம் பாய்ச்சி விடுகின்ற செயலினைப் போன்றதாகும்.

எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால், 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.

     அவன் உயிரிழப்பது உறுதியாவது போல, பெரியோர் வெறுத்துப் பேசும் அறிவிலிகளும் அழிவது திண்ணம் என்பது கருத்து. 'எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல்' என்பது பழமொழி. எருக்கந்தூரில் இருப்பவனை யானை எளிதாக மிதித்து விடுவது போல, அறியாமையாளரும் அழிக்கப்படுவர் என்பது கருத்தாகும்.

97. பகை மன்னரிடை உறவு

     போர்ச் செருக்கினையுடைய மன்னர்கள் இருவர்களிடையே ஒருவன் புகுந்து அவருள் ஒருவருக்கு உதவாத செய்தியைச் சொன்னான் என்றால், அதனைக் கேட்டு அவர்கள் சீறி எழுவர். அதனைத் திருத்துவதற்குத் தனக்கும் முடியாமற் போக, அது முடிவில் சொன்னவனுக்கே தீமையாய் முடியும். இரண்டு எருதுகளின் நடுவே இட்டிருக்கும் வைக்கோலைத் தின்னப்புகும் மோழை மாடு, அவை இரண்டாலும் குத்தப்பட்டுத் துன்பம் அடைவதன்றி, வைக்கோலைத் தின்ன முடியாதவாறு போலவே, அவன் கதியும் பயனற்றுத் துன்பமாக முடியும்.

செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்
ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும் ஆகாது தீதாம்; அதுவே
'எருத்திடை வைக்கோல் தினல்'.

     பேரரசர்கள் இடையே புகுந்து இருவருக்கிடையிலும் இலாபம் பெற ஏதாவது சொல்பவன் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும் என்பது கருத்து. இருவராலும் அவனுக்குக் கேடு விளையக்கூடும் என்பதாம். 'எருத்திடை வைக்கோல் தினல்' என்பது பழமொழி.

98. இன்சொல்லின் சிறப்பு

     உடுக்க உடையும், நோய்க்கு மருந்தும், தங்குவதற்கு இருப்பிடமும், உண்ண உணவும் இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து, அவர் குறைகளைத் தீர்த்தலான செயல்களைச் செய்து, அவரை அனுப்பி வைத்து, அவர்பால் இனிமையான சொற்களை மட்டும் சொல்லாமல் இருப்பது மிகவும் தவறாகும். அது, எருமையைக் கொன்று சமைத்து விருந்து வைக்கத் தொடங்கும் ஒருவர், அதற்குரிய மசாலாப் பொருள்களுக்குக் கஞ்சத்தனம் செய்வது போன்றதாகும்.

உடுக்கை மருந்து உறையுள் உண்டியோ(டு) இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கும் ஆறு'.

     எல்லாக் கொடையிலும், இன்சொல் வழங்குதலே சிறப்புடையது என்பது கருத்து. 'எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்குமாறு' என்பது பழமொழி. இன்சொல் வழங்காத கொடை மதிப்பிழக்கும் என்பதும் கருத்தாகும்.

99. அடைந்தவர் வறுமையைப் போக்க வேண்டும்

     தம்மைச் சேர்ந்தவர் ஒருவரை, அவரால், சேர்ந்து ஒழுகப்பட்டவர் முடிந்த உறவினராகக் கொண்டு நடந்தாலும், ஆராய்ந்து அவரை விட்டுப் போகாத வறுமையினைக் கண்டு, அது போவதற்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத விடத்து, அவர் செல்லும் நெறி வேறு என்ன உண்டாகுமோ? யாவரும் சமைத்து உண்ணும் உணவிற்கு ஆவன செய்வதே உண்மையான முயற்சியாகும். பிறவெல்லாம் பொய்யான செயலே.

சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.

     உதவுவார் என அடைந்த ஒருவர் உதவாவிட்டால், அப்படி அடைந்தவர் அவரை விட்டுத் தாமே தம் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயல்லாமல், அவரையே தொடங்கிக் கொண்டு இருப்பது கூடாது என்பது கருத்து. 'எல்லாம் பொய்; அட்டூணே வாய்' என்பது பழமொழி.

100. அரசனுக்குக் கோபம் வரும் செயல்

     வெம்மையான சினத்தையுடைய அரசனானவன், தான் விரும்பாத ஒன்றையே தனக்குச் செய்தாலுங்கூட, அவனையடுத்து வாழ்பவர், அதனைத் தம் நெஞ்சத்துட் கொண்டு பகைகொள்ளும் செயலைச் சிறிது கூடச் செய்தலே வேண்டாம். என்ன தீவினைகளைச் செய்து அகப்பட்டுக் கொண்ட போதும், எவரேனும் தூங்கும் புலியைத் துயில் எழுப்புவார்களோ?

வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்'.

     புலியைத் துயில் எழுப்பினால், அவர்களே அழிவார்கள். அதுபோல, அரசன் மீது அவர்களும் பகைத்து அவன் கோபத்தைக் கிளறி விட்டால், அவர்களே அழிய நேரும் என்பது கருத்து. 'எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்பது பழமொழி.


பழமொழி நானூறு : 1 2 3