பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




முன்றுறை அரையனார்

இயற்றிய

பழமொழி நானூறு

(உரையாசிரியர்: புலியூர்க் கேசிகன்)

... தொடர்ச்சி - 3 ...

101. எளியாரை இகழாதவர் இல்லை

     புகழ் பொருந்திய பிற மன்னர்களை வென்று அவர்களுக்கு மேற்பட்டவர்களாக நடந்து வருவது அல்லாமல், மதயானைகளைக் கொண்ட மன்னர்களுக்கு, அவர்களைக் கைகடந்து தம்மேற் செல்லுமாறு விடுதல், தமக்கே இறுதியில் துன்பமாக முடியும். மழைத் துளியை உண்ணும் பறவையான வானம்பாடியைப் போல, செவ்வையானவற்றையே உணர்பவர்களினும், எளியவர்களை இகழாதவர் உலகில் இல்லையாகும்.

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
'எளியாரை எள்ளாதார் இல்'.

     போர் வலியற்ற அரசன் மிக நல்லவனானாலும் மதிக்கப்பட மாட்டான் என்பது கருத்து. 'எளியாரை எள்ளாதார் இல்' என்பது பழமொழி. நல்லவனாக இருப்பது போதாது; வல்லவனாகவும் இருந்தால் தான் பிறர் மதிப்பார் என்பது கருத்தாகும்.

102. மன நலமே நலம்!

     ஆறுகள் மிகுதியான வெள்ளப் பெருக்குடன் வந்து மிகுதியான நல்ல தண்ணீரே பாய்ந்த காலத்தினும், ஒலிக்கும் கடலானது உப்புத் தன்மையினின்றும் நீங்குதலைப் பெற மாட்டாது. அது போலவே, மிகுதியான இனத்தின் நன்மைகள் நன்றாக உடையவர்களானாலும், எக்காலத்துங் கீழ்மையான புத்தியுடையவர்கள் நல்ல மனம் உடையவர் ஆகவே மாட்டார்கள்.

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்'

     'நல்லவர் தொடர்பினாலும் கீழோர் திருந்த மாட்டார்கள்' என்பது கருத்து. 'என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்' என்பது பழமொழி. அவர்கள் மனம் கீழ்மைப் போக்கிலேயே செல்லும் என்பதாம்.

103. கெடுக்க முயன்றவன் நண்பனானால்...?

     நீலோற்பல மலர்கள் என்று கருதிய வண்டினம், உண்மையான பூக்களைக் கைவிட்டுப் பக்கத்திலே மொய்த்துக் கொண்டிருக்கின்ற கண்களை உடையவளே! ஒருவன் ஒருவனை நலிந்து கெடுப்பதற்கு நாள்தோறும் சென்றான்; அதனால், அந்த ஒருவன் தளர்ச்சியுற்று வீழ்ந்து விடாமல் இருப்பதைப் பார்த்தான்; பின்பு, அவனோடு மிகவும் நட்புடையவனாகச் சென்று சேர்ந்தான்; இப்படிச் சேர்வது அம்பினால் எய்து ஒருவனைக் கொல்ல முயன்றவன், எய்யப்பட்டவன் அதற்குத் தப்பிவிட, அவனைப் பின்னர் தனக்குக் காவலாகக் கொள்வது போன்றதாகும்.

நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்
மெலிந்தொருவர் வீழாமைகண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்!
'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு'.

     ஒருவனைக் கெடுக்க முயன்று முடியாமல் போக அவனுடன் நண்பராக முயல்பவர், என்றும் அந்தக் கெட்ட எண்ணத்துடனேயே இருப்பார்கள். அவர்கள் தொடர்பு அறவே கூடாதென்பது கருத்து. 'ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு' என்பது பழமொழி. தன்னால் வெல்ல முடியாத ஒருவனைத் தனக்குக் காவலாகக் கொள்வது இயல்பு என்பதும் ஆகும்.

104. ஆட்சித் தலைவனைக் கோபித்தல்

     காட்டுப் பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும் அழகிய மலைகளுக்கு உரிய வெற்பனே கேட்பாயாக! தாமாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள், தாவிப் பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரினை உடைய மன்னரைக் கோபித்துக் கொள்வது எதற்காகவோ? கோங்க மரத்திலே ஏறினவர் என்றும் பாதுகாப்புடன் இருக்க முயன்றாலும், எக்காலத்தும் தம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாதவர்களே யாவர்.

தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்
வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்
'ஏமரார் கோங்கு ஏறினார்'.

     கோங்க மரத்தில் ஏறினான் கிளை முறிந்து வீழக்கூடும். அவர் செயல் போலவே, வலியுடைய மன்னருக்குச் சினம் உண்டாக எப்போதாவது பேசிய வலியற்றவர்களும், அவரால் அழிக்கப்படுவார்கள். ஆதலின் அப்படிச் செய்வது தவறு என்பது கருத்து. 'ஏமரார் கோங்கு ஏறினார்' என்பது பழமொழி.

105. ஏவலாளனுக்குப் பொறுப்புக் கிடையாது

     மின்னலைப் போல விளங்கும், நுண்மையான இடையினை உடையவளே! ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதற்கு, அவனை ஏவினவனை நோக வேண்டுமே அல்லாமல், அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. அது போலவே, "முன் பிறவியிலேயே யாம் ஆத்திரங்கொண்டு செய்த பழைய வினைகள் தொடர்ந்து வந்து இன்று எம்மை வருத்துகின்றது" என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மைத் துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ?

பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குலாய்!
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.

     'பகைவரால் நேரும் துன்பம் எல்லாம் நம் பழவினைப் பயனால் வந்தனவென்றே கருதவேண்டும். அவர்கள் ஊழ்வினையின் ஏவலைச் செய்பவர்களே தான் என்பது கருத்து. 'ஏவலாள் ஊருஞ் சுடும்' என்பது பழமொழி. 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்' என்பதும் இது.

106. குடிப்பிறப்பின் பண்பு குறையாது

     நல்ல எருதுக்குப் பிறந்த ஒரு கன்றானது, வளர்ப்போனால் மிகுதியும் பேணப் படாததாகித் தின்னும் புல்லும் சரிவரக் கிடைக்கப் பெறாமல், எதையோ மேய்ந்து கொண்டிருந்தாலும், பின்னர், உறுதியாக நல்லதொரு எருதாகி விடும்; அது போலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடையவன், தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் யாதும் தன்னிடத்தே இல்லை என்றாலும் தன் குடிப்பண்பின் காரணமாக உபகாரம் செய்பவனாகவே இருப்பான்.

ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.

     ஒப்புரவு - உயர்ந்தோர் மேற்கொண்ட நெறிப்படி நடத்தலும் ஆகும். குடிப்பிறப்பின் சிறப்பு ஒரு போதும் ஒருவனை விட்டு மாறாது என்பது கருத்து. 'ஏற்றுக் கன்று ஏறாய்விடும்' என்பது பழமொழி.

107. பகைவரை வீட்டுக்கு அழைத்தல்

     போவதற்குத் தகுந்த வழியிடையிலும், பெற்றோர் பின்னாகச் செல்ல முடியாது, ஒக்கலிலேயே செல்லும் குழந்தைகள், பெரிய காட்டினிடத்தே செல்லும் பெற்றோர் தம்மை இடுப்பிலே எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பி அழுதனர் என்றால், பெற்றோர் அதற்கு ஒருபோதும் இசைவதில்லை. ஏனென்றால் அது பெரிதும் துன்பம் தருவது என்பதனை அவரே அறிவார். அதுபோலவே, தம் முகத்தை வெளியிலே கண்டாலும் பொறுக்காத பகையுடையார் ஒருவரை 'வீட்டிற்கு போகலாம்' என்று அழைத்து வேண்டும் ஆசையும் பொருத்தமற்ற ஆசையேயாகும்.

முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை, இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
'ஒக்கலை வேண்டி அழல்'.

     தம்மை மதியாத ஒருவரைத் தாம் ஒதுக்கி விடுதலே சிறப்பு. அவரோடு நாம் உறவாடினால் நமக்குத்தான் கேடு வரும் என்பது கருத்து. 'ஒக்கலை வேண்டி அழல்' என்பது பழமொழி. நடக்கும் சக்தியிருந்தும் ஒக்கலை வேண்டி அழும் பிடிவாதத்துக்கு இசைவது கூடாது என்பதாம்.

108. பாதி அழித்தால் பகை தீராது

     உள்ளத்துள் கபடமில்லாமல் இனிதாகப் பேசுதல்; மாண்புடைய பொருள்களைக் கொடுத்தல்; சூழ்ச்சி பொருந்திய வஞ்சகமான முறைகளால் தமக்கு எளியராக ஆக்கித் தம் வசப்படுத்திக் கொள்ளுதல்; முறைமையாலே முன்னர் அவரைப் பகைத்துக் கெட்டவர்க்கு நடுநிலையாகச் சென்று அவரை நன்றாக அழித்தல்; ஆகியவற்றால் அல்லாமல், ஒடித்து எறிவதனால் மட்டுமே, பகைமை முற்றிலும் தீர்ந்துவிடாது.

மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்
'ஒடியெறியத் தீரா பகை'.

     ஒடி எறிதல் - பாதி வெட்டியும் வெட்டாமலும் வைத்தல். சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களாலும் பகைவரைப் போக்குவது பற்றிக் கூறியது இது. 'ஓடி எறியத் தீரா பகை' என்பது பழமொழி. முற்றவும் அழியச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

109. தாயும் அரச நீதியும்

     செல்வர்களுக்கும் வறுமையாளர்களுக்கும், அவரவர்க்குச் செய்யும் முறைமைகளைத் தெரிந்து, அதனின்றும் வழுவாமல், இருவருக்கும் நேர் சமமாகவே அரசன் பாரபட்சமில்லாமல் நீதி செலுத்த வேண்டும். அரச முறையிலே மாறுபட்டு, நேராக அவன் நடக்கவில்லையென்றால், ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீரும், அடுத்த பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலும் ஒரு பெண்ணுக்குச் சுரப்பது போன்றதாகும்.

முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.

     தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல், அரசனுக்கு மிகவும் பழி தரும் செயலாகும். நீதியின் முன் ஏழையையும் பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும். 'ஒரு பக்கம் நீரொழுகிப் பாலொழுகுமாறு' என்பது பழமொழி. இபப்டி நடப்பது தவறு என்பது கருத்து.

110. நண்பர் தீங்கினைப் பொறுத்தல்

     கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர் வளத்தினையுடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக்கும் பொறுமையானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்புச் செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப்பட்ட தொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், 'எம் தீவினைப் பயனால் வந்துற்றதே இது' என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வார்கள்.

தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.

     நட்பில் பிழை பொறுத்தல் இல்லாத போது அது நிலையாது என்பது கருத்து. 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பது பழமொழி.

111. வஞ்சிக்கவும் செய்யலாம்

     நெருக்கமாகக் கட்டப்பெற்றுள்ள மாலையினை அணிந்திருக்கின்ற வேந்தனானவன், செவ்வையில்லாத ஒரு செயலிலே ஈடுபட்டான் என்றால், அறிவுடையவரான அவன் அமைச்சர்கள், பொய்யுரைத்து அவனை வஞ்சித்தாயினும், அவனை அதனின்றும் நீக்கவே முயலுவார்கள். சந்திரனைக் காட்டி, அதன் மேல் இல்லாததெல்லாம் பழி சொல்லிப் பிள்ளைகளை மருட்டும் தாய்மார்களைப் போல என்க. ஒள்ளியவனான நெறிகளை இன்னபடியென்று காட்டாத, அவன் விருப்பப்படியே சார்ந்து நடப்பவர்களுக்கு, அப்படிச் செய்தல் என்பது அரிதாகும்.

செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.

     ஆட்சியிலுள்ளார் தவறான செயல்களில் ஈடுபட்டால், அறிவுடையார் பொய்யுரைத்து மருட்டியாயினும், அவரைத் திருந்தும்படிச் செய்தல் வேண்டுமென்பது கருத்து. 'ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது' என்பது பழமொழி.

112. தம்மவராயினும் தண்டித்தல்

     தம்முடைய கண் போன்றவர்களானாலும், அவர்கள் தகுதியில்லாத செயல்களைச் செய்தலைக் கண்டால், 'இவர் எம் கண் போன்றவர்' எனக் கருதி அதனைப் பாராட்டாது விட்டு விடுதல் அரச நெறிக்குக் குற்றம் தருவதாகும்; அதனால் வன்கண்மை உடையவனாகத் தன்னைச் செய்து கொண்டு, அரசன் அத்தகையவர்களையும் அரசநெறிப்படி முறையே தண்டிப்பானாக; அப்படித் தண்டிக்க மாட்டாத கண்ணோட்டம் உடையவனான ஒருவன், தன் அரசாட்சியினைச் செவ்வையாக ஒரு போதும் நடத்தவே மாட்டான்.

எங்கண் இணையர் எனக்கருதின் ஏதமால்;
தங்கண்ணார் ஆயினும் தகவில கண்டக்கால்;
வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.

     தமக்கு வேண்டியவர்கள் குற்றம் செய்தாலும், அவரை வேண்டியவர் எனக் கருதி விட்டுவிடாமல், முறையாகத் தண்டிப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகாகும். அல்லாமல், அவனிடம் தாட்சணியம் காட்டினால், அவன் நெடுங்காலம் ஆளமாட்டான் என்க.

     'ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு' என்பது பழமொழி.

113. எங்கும் பிச்சை கிடைக்கும்

     'மாரி' என்ற ஒன்று இல்லாமற் போய், உலகமே வறண்டு போயிருந்த காலத்தினும் கூடப் பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், பாணனுக்கு, நீர் உலையுள் பெய்து அழகாகச் சமைத்து வைத்திருந்த சோற்றுப் பானையைத் திறந்து, பொன்மனங் கொண்டு சோற்றைக் கொடுத்து உதவினாள். ஆதலால், சென்று இரந்தால் ஒன்றுங் கிடையாது போகிற வீட்டு முற்றம் என்பது உலகில் எதுவுமே இல்லையாகும்.

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.

     வீட்டினர், தம் வாயில் தேடி வந்தவர்க்கு எதையேனும் தவறாது உதவுவார்; உதவவேண்டும் என்பது கருத்து. 'பொன் கொண்டு திறந்து புகாவாக நல்கினாள்' - பொன்னைப் பெய்து கொண்டு வந்து சோறிடுவது போலச் சொரிந்து உதவினாள் எனலுமாம். 'ஒன்றுறா முன்றிலோ இல்' என்பது பழமொழி.

114. சொல்லும் பொருளும் உணர்த்தல்

     வளைவான உப்பங்கழிகள் நிறைந்துள்ள குளிர்ச்சி பொருந்திய கடற்கரை நாட்டுக்கு உரியவனே! உள்ளத்திலே கள்ளமில்லாமல் நட்புச் செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல்லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும். சொன்ன சொற்களை வேறுபட்ட பொருளாக எடுத்துக் கொண்டு பழி கூறுதல், ஒருவனுடைய பாவினை ஏற்றி மற்றொருவனுடைய பாவாகக் கட்டுதலோடு பொருத்தம் உடையதாகும்.

புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.

     நண்பர்கள் திறந்த உள்ளமுடையவர்களாகப் பழகுவார்களேயல்லாமல், சொல் வேறு பொருள் வேறாகப் பேசிப் பழகுபவர்கள் அல்லர். அப்படிச் சொல் வேறு பொருள் வேறாகப் பேசுவார்கள் நட்பினை நட்பாகக் கொள்ளுதல் வேண்டாம்; ஒதுக்கி விடுக என்பது கருத்து. 'ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று' என்பது பழமொழி.

115. அமைச்சரின்றி மக்கள் நலமில்லை

     தாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றினும், மனத்தாலும் வாயாலும், உடலாளும், அறிந்து அடங்கியவர்களாக விளங்கி, தம் நாட்டின் நன்மை ஒன்றையே எண்ணியவராக இருந்து, ஒன்றுக்கும் வருத்தங் கொள்ளாதவராகக் காத்து வருபவரே நாட்டின் சிறந்த அமைச்சர்களாவர். அத்தகையவர் இல்லையென்றால், அந்த நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம், அந்த நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து வேறு நாட்டுக்குச் சென்று அல்லற்படுவன ஆகிவிடும்.

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர்'.

அமைச்சர்கள் திரிகரண சுத்தியாக நாட்டின் நலம் ஒன்றையே கருதிச் செயற்பட வேண்டும் என்பது கருத்து. 'ஓம்புவார் இல்லெனின் சென்று படுமாம் உயிர்' என்பது பழமொழி. 'சென்றுபடும்' என்பது 'செத்து ஒழியும்' என்றும் பொருள்படும்.

116. ஊரைத் தழுவி நடக்கவும்

     தம்மை வந்து அடைக்கலமாகச் சேர்ந்தவர்கள் வருத்தம் அடையுமாறு ஒரு போதுமே நடக்க வேண்டாம். துறவியர்களின் ஒழுக்க நெறியினைப் பேணி நடவாமல் ஒதுங்கி நிற்பதும் கூடாது. தான் ஆராய்ந்து கண்ட பொருள் நுட்பத்தைப் பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து தான் மேற்கொள்க. ஊரினர் நடக்கும் பாதையிலே, அது சரியா, இது முறையா என்றெல்லாம் கேளாமலே தானும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க, இவையே சிறந்த நெறிகளாகும்.

செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
'ஓடுக ஊரோடு மாறு'.

     'ஊருடன் ஒத்து வாழ்தல் வேண்டும்' என்பது கருத்து. அடைந்தவர்க்கும் துறவியர்க்கும் உதவுதலும், கற்று நன்மையென நுட்பமாகத் தெளிந்த ஒன்றைக் கைவிடாமையும் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. 'ஓடுக ஊரோடு மாறு' என்பது பழமொழி.

117. தலைமை கருதுபவரை அழிக்க வேண்டும்

     மலை மேலே வளர்ந்திருக்கும் மூங்கிலையும், தம் அழகினாலே தோற்று அழியச் செய்யும் மென்மையான தோள்களை உடையவனே! 'தமக்குத் தலைமையான ஒரு நிலைமை இருக்க வேண்டும்' என்று கருதுகின்ற ஆணவத் தன்மை உடையவர்களை அரசனானவன் தன்னுடைய பிற சூழ்நிலைகளின் காரணமாகச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதானது, ஒரே அறையினுள் பாம்புடன் கூடி வாழும் பரிதாப நிலைமை போன்றதாகும்.

தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.

     அத்தகையோரைப் பகையாகக் கருதி அழித்து விடுதலே அரசன் தன்னைப் பேணிக் கொள்வதற்குச் செய்ய வேண்டிய செயலாகும் என்பது கருத்து. 'ஓர் ஆயுள் பாம்போடு உடனுறையுமாறு' என்பது பழமொழி. 'குடத்துள் பாம்போடு உடனுறைந்தற்று' எனவும் இப்பழமொழி வழங்கும்.

118. மாற்ற அரிது மனம்

     நேர்மையான வழியல்லாமல், குணமற்ற ஒன்றை ஒருவர் தம் உள்ளத்திலே கொண்டிருந்தால், அத்தகையவரை மீண்டும் அந்தத் தவறான எண்ணத்தினின்றும் தெளிவித்தல், பெரியார்க்குங்கூட இயலாத ஒன்றாகும். கூர்மையான நுண்பொருளின் கேள்வியினால் அறிவு உடையவர்களுக்கே என்றாலும், அவர் எண்ணியதையே பறையானது ஒலிக்கும் என்பதை அறிக.

நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே,
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
'ஓர்த்தது இசைக்கும் பறை'.

     பறை, அவரவர் கருத்தை ஒட்டியே ஒலிப்பது போல, மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே போய்க் கொண்டிருக்கும். அதனைப் பிறர் தம் கருத்துப் போல மாற்றுதல் எளிதன்று என்பது கருத்து. 'ஓர்த்தது இசைக்கும் பறை' என்பது பழமொழி.

119. கடன் கொடுத்தல் வேண்டாம்

     மடமான தன்மையினையுடைய மானின் நோக்கினையுடையவளே! தம் கையை விட்டுக் கடந்து போன ஒரு சிறந்த பொருளானது மீண்டும் தம் கைக்கு வந்து சேர்வது என்பதே இவ்வுலகிற் கிடையாது. இப்படிச் சொல்பவர்கள் பொருளின் இயல்பை உண்மையாகவே உணர்ந்தவர்களாவார்கள். உண்மையாகக் கீழ்மக்களாகிய பிறர்க்குக் கடன் கொடுத்தவன் பெறுவதெல்லாம் வாங்கியவன் அதனை மறுத்துப் பாம்புக் குடத்தினுள்ளேயும் கைவிடத் துணிதலாகிய பொய்ப் பிரமாணம் ஒன்றேயாகும்.

கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.

     கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் அதனைத் திருப்பித் தருவதற்கு மனம் வருவதே கடினம். அதனால், பொருளைப் பேணுபவன் தீயோருக்குக் கடன் கொடாமல் இருக்க வேண்டும் என்பது கருத்து. 'கடன் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி.

120. மூடனுக்குச் செய்த உபதேசம்

     மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலையில்லதவர்களாகி, நல்லது எது என்பதையும் உணராதவர்கள் ஆகிய, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி மொய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சபையினுள்ளே சென்று, உடலளவான மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு, உறுதி தரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும். அது, கடலினுள் மாம்பழத்தைக் கொட்டுவது போன்ற பயனற்ற செயலுமாகும்.

நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.

     அறிவுடையோர் புல்லறிவு உடையோருக்கு உபதேசம் செய்வதற்கு முயலுதல் கூடாது; அவர்க்கு உரைப்பது எல்லாம் வீணே என்பது கருத்து. 'கடலுளால் மாவடித் தற்று' என்பது பழமொழி.

121. பணம் உடையவர்க்கு ஆகாதது இல்லை

     விளங்கும் நீர்ப் பெருக்கினையுடைய கடற்கரைக்குரிய நாட்டினனே! பொருள் உடையவர்களின் செயல்கள் எல்லாம், இடையிலே முடிதல் இல்லாமற் போகாமல், நல்லதாகவே முறையாக முற்றவும் நடந்து முடியும்; பொருள் வசதி இல்லாதவர்களுக்கோ அவர்கள் செயல்கள் எல்லாம் மிகவும் வருத்தத்துடனேயே நடந்து வரும். அதனால், பொருள்வளம் உடையவர், கடலினுள்ளே செல்பவரானாலுங் கூட, அங்கும் தமக்கு நன்மையான தக்க வசதிகளைச் செய்து கொள்ளக் கூடியவர்கள் என்று அறிவாயாக.

ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'கடலுள்ளும் காண்பவே நன்கு'.

     பொருள், வாழ்வுக்கு மிகவும் தேவவ என்பதைச் சொல்வது இது. பொருள் உடையவர் காரியங்கள் நிறைவேறுவதும், பொருள் இல்லாதவர் காரியங்கள் தடைபடுவதும் உலக இயல்பு. 'கடலுள்ளும் காண்பவே நன்கு' என்பது பழமொழி.

122. சான்றோர் என்றும் யாசியார்

     பனை மடல்களின் இடையிலேயுள்ள தம் கூடுகளோடு, கடற் பறவைகளும் சேர்ந்து ஆரவாரிக்கின்ற, பெரிய கடற்கரைகளுக்கு உரியவனே! கடலோடு துரும்பு ஒரு போதும் சேர்ந்து இருப்பதில்லை. அது போலவே, தம்முடைய உடலானது ஒடுங்கும்படியான அளவுக்குப் பசித்தாலும், மாண்பு உடையவர்கள், பிறருடைய பொருள் அடைய விரும்பி, அவர் பாற் சென்று நின்று யாசிக்கவே மாட்டார்கள்.

மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப!
'கடலொடு காட்டொட்டல் இல்'.

     கடலொடு, துரும்பு ஒட்டாதது போல, சான்றோர் பால் இரந்து நிற்றலாகிய குணமும் ஒரு போதும் சேராது என்பது கருத்து. 'கடலோடு காட்டு ஒட்டல் இல்' என்று பழமொழி. காட்டு - துரும்பு; மடலின் அசைவுடன் புள்ளும் சேர்ந்து ஆரவாரிக்கும் என்பதாம்.

123. துறவிகள் புலால் விரும்புதல்

     விடுவதற்கு அரியவான வலிமையுடைய ஆசைகளையெல்லாம் மிகவும் மனவுறுதியுடனே தம்மிடத்தினின்றும் நீக்கி விட்டவர்கள், ஒழுகுவதற்கு அரியதான நல்லொழுக்க நெறியினிடத்தையே நிலைபெற்ற சான்றோர்கள். அவர்கள் தமக்குத் துன்பம் வந்த காரணத்தினாலே, கிடைத்த புலாலினை உண்ணுதல், கடலினின்றும் நீந்திக் கரை சேர்ந்த ஒருவன், கன்றின் குளம்படி அளவான நீரிலே வீழ்ந்து அமிழ்ந்துவிட்டது போன்றதாகும்.

விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல் 'கடல்நீந்திக்
கற்றடியுள் ஆழ்ந்து விடல்'.

     புலால் உண்ணுதல், பிற எல்லாத் தீய ஆசைகளினும் கொடியதாகும்; அதனை விட்டவரே சான்றோர் என்பது கருத்து. 'கடல் நீந்திக் கற்றடியுள் ஆழ்ந்துவிடல்' என்பது பழமொழி. கற்றடி - கன்றின் அடி; அந்த ஆழமுடைய நீர் என்பது பொருள். பழங்கால முனிவர்களிற் பலர் புலாலுண்டு வந்ததைக் கண்டிக்கும் வகையில் கூறியது இது.

124. மன்னர் கருத்துக்கு இசைய நடக்க

     மடல்கள் நிரம்பியிருக்கிற பனைமரங்கள், மிகுதியாக விளங்கும் கடற்கரைக்கு உரியவனே! மன்னரைச் சேர்ந்து வாழ்ந்து வருகிறவர்கள், அம்மன்னர், தம்மை விலக்கி விடுதற்குரிய செயல்களைச் செய்து, அதனால் அவர்கள் தம்மை எனன் செய்வார்களோ என்று பயந்து கொண்டே வாழாமல், அரியதான உடலினைப் பெற்ற அம்மன்னர்கள் மகிழ்வடையத் தக்கவாறே நடந்து வர வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடலினும் கிடையாத அளவு பெருஞ் செல்வ வளம் எல்லாம் அவர்களுக்கு வந்து வாய்க்கும்.

விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரும் மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
'கடல்படா வெல்லாம் படும்'.

     மன்னர் உவக்க நடந்தால், பெருஞ் செல்வமெல்லாம் அவராற் பெற்று இன்புறலாம் என்பது கருத்து. 'கடல் படா எல்லாம் படும்' என்பது பழமொழி.

125. நண்பர்க்கு உதவ வேண்டும்

     பரந்த அலைகளை கரையாகிய பாரிலே வந்து மோதுகின்ற கடற்கரைக்கு உரிய தலைவனே! தம்மால் விரும்பிப் பாதுகாக்கப்படுவர் பண்பற்றவர்களாக இருந்தாலும், சான்றோர்கள், அதனால் தங்கள் தன்மையினின்றும் சற்றும் மாறுபாடு அடைவார்களோ? மாட்டார்கள். ஆகையால், ஊர் அறிய நம்முடன் நட்புச் செய்தவர்க்கு உணவளிப்பதும் நம் கடமை அல்லவோ?

பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'.

     நட்டார் குணக்கேடரானாலும், சான்றோர் அவர்க்கும் உதவுவதையே தம் கடனாகக் கொள்வார்கள் என்பது கருத்து. 'கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா' என்பது பழமொழி. ஊரறிய நட்டார்க்கு உதவா விடின் ஊர்ப்பழிக்கு உள்ளாகல் நேரும் என்பதாம்.

126. சிறந்தவர் கொடுத்தல்

     புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டிக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளையுடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைப் போடுபவர்கள் இந்த உலகில் எவருமே இல்லை; ஆனால் அறிவினாலே மாட்சிமையுடைய சான்றோர்களோ, 'தம்மிடத்தே இரந்து வருபவர், தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று, அவருடைய தன்மையையே ஆராய்ந்து பார்த்து அவர் மனத்திலுள்ளதை அறிந்து அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள்.

நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.

     கொடுப்பவர் பலராயினும், வருபவர் குறிப்பறிந்து, அவர் கேளாததன் முன்பே அவர் கருதி வந்ததைக் கொடுத்து உதவுவதே சிறந்த கொடையாகும் என்பது கருத்து. 'கடிஞையில் கல் இடுவார் இல்' என்பது பழமொழி. கடிஞையில் கல் இடுவார் மிகவும் கொடியவர் என்பதாம்.

127. உடனே பகையை ஒழிக்க வேண்டும்

     மின்னலின் ஒளியைப் போல ஒளி நிலைபெற்றதாகி, மூங்கில் போல அமைவுடன் விளங்கும் அழகிய தோள்களை உடையவளே! ஒரு பாத்திரத்தின் உள்ளேயிருந்து கடித்து விட்டு ஓடும் பாம்பின் பல்லைப் பிடுங்க நினைப்பவர் எவருமே இல்லை. அதனை அது செய்வதற்கு முன் அவர்களே அதன் விஷத்தால் செத்து விடுவார்கள். அதனால், மிகவும் பகைமை கொண்டு முற்படத் தம்மை நலிந்து எழுந்தவர்களை, அப்போதே அடக்காது, பின்னர் அடக்குவோம் என்று சோம்பி இருத்தல் அறிவற்ற தன்மையேயாகும்.

முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப்
பின்னலிந்தும் என்றிருத்தல் பேதைமையே - மின்னின்று
காம்பன்ன தோளி! கடிதிற் 'கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல்'.

     பகையை அடியோடு முதலிலேயே அழித்து விடுவது தான் அறிவுடைமை. பின்னர் பார்த்துக் கொள்வோம் எனக் காலங் கடத்துவது அறிவற்ற தன்மை என்பது கருத்து. 'கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல்' என்பது பழமொழி. கலத்தில் கடித்து விட்டு ஓடிம் பாம்பை அடித்துக் கொல்வதே நல்லது; அதுபோலக் குறும்பு செய்யும் பகைவரையும் அழித்திடுக என்பதும் ஆகும்.

128. மன்னன் விரும்புவதை விரும்பாமை

     இடப்படும் தவளக் குடையினைக் கொண்ட தேரினை உடையவர்கள் மன்னர்கள். அவர்கள், 'எமக்கு இது பொருந்தும்' என்று எண்ணி மிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை, அவரைச் சேர்ந்து வாழ்பவர்கள் எவரும் விரும்புதல் கூடாது. அவர்கள், தாமும் விருப்பங்கொண்டு கொஞ்சமும் ஆராயாமல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் முயலுதல் மிகவும் ஆபத்தானதாகும். அது கடிய விலங்குகளைத் தாமே கூவித் தம்மிடத்தே வரவிடுவதைப் போன்றதாகும்.

இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று
கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு
மூடிய எனைத்தும் உணரா முயறல்
'கடியன கனைத்து விடல்'.

     'மன்னன் விரும்புவதை அவனைச் சார்ந்து வாழ்பவர் விரும்புவது கூடாது' என்பது கருத்து. 'கடியன கனைத்து விடல்' என்பது பழமொழி.

129. அதிகமாகத் துன்புறுத்தக் கூடாது

     ஒரு நாயை வளர்ப்பவன், அதனை அன்புடன் பேணாமல், கடைவாயிலை அடைத்து வைத்துக் கொண்டு அதனை அடித்தானென்றால், அந்த நாயும் தன் சொந்தக்காரனான அவனைக் கடித்துவிடும். ஆகவே, தாம் வறுமையுற்று வந்து தம்மைப் புகலாக அடைந்த உறவினரையும், 'இவர் தம்மை எதிர்க்க வலியில்லாதவர்' என்று கருதிப் பிறருக்கு வெளிப்பட இகழ்ந்து பேசி, எவரும் அவரை வருத்தாமல் இருக்க வேண்டும்.

ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்.

     பலரறிய இகழ்ந்தால் அவரும் எதிர்த்து நிற்பர் என்பது கருத்து. 'கடையடைத்து வைத்துப் புடைத்தக் கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்' என்பது பழமொழி.

130. கண்ணே காட்டிக் கொடுக்கும்

     மலர்ந்திருக்கும் ஆம்பற் பூக்கள் கலியாண வீட்டைப் போல மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற அலைகள் மிகுந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! 'யாம் செய்த தீய செயல்கள் வெளிப்படாமல் மலையே மறைத்துக் கொண்டிருக்கிறது' என்று நினைத்துக் கொள்வார்கள் தீயவர்கள்; தாம் செய்த தீமையால் வரும் பழிபாவங்களை அவர்கள் தெளிந்து உணர்வதில்லை. கண் பார்வை அம்பினும் கூர்மையாகச் சென்று ஊடுருவ வல்லது என்பதை அவர்கள் அறியார்கள்.

யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்
தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
'கணையினுந் கூரியவாம் கண்'.

     தீமை எவ்வளவுதான் மறைக்கப்பட்டாலும், வெளிப்பட்டுத் தோன்றி அதனைச் செய்தவர்க்குப் பழி பாவங்களைக் கொண்டு வந்து விடும். அதனால், அனைவரும் தீயன செய்யாது வாழ வேண்டும் என்பது கருத்து. ஆம்பல்-அல்லி; 'கணையினும் கூரியவாம் கண்' என்பது பழமொழி. 'கண் பார்வையானது அம்பினும் கூர்மையாக ஊடுருவிச் செல்வது' என்பது கருத்து.

131. இன்ப துன்பம் இல்லை என்பவர்

     ‘மறுமை இன்பம் துன்பம் என்பதொன்று இருக்கிறதோ? மனத்திலே தோன்றியவற்றை எல்லாம் பெற்று இன்புறுகின்ற வழியையே செய்து வாழுங்கள்’ இப்படிச் சொல்வார் சிலர். இவர்கள், நறுமணமுள்ள நெய்யிலே இட்டுச் செய்த சுவையான அடையினை எடுத்து எறிந்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டு செங்கல்லை உண்ணும் தீயவர்களுக்குச் சமமானவர்கள்.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே - நறுநெய்யுள்
கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்'.

     மக்களுக்கு தீய உபதேசங்கள் செய்பவர்கள் மிகவும் கொடியவர்கள் என்பது கருத்து. கட்டு அடை - பாகு பெய்த அடையுமாம். இட்டிகை - செங்கல்; ‘கண் சொரீஇ இட்டிகை தீற்றுபவர்’ என்பது பழமொழி.

132. குறிப்பால் குணம் அறியலாம்

     எவரிடத்தும் கண்டவான கூடுபாடுகளே அவர்களைப் பற்றிய முடிவினை நாம் செய்து கொள்வதற்கு உரிய காரணங்களாக அமையும். பெரிய உலைப் பாத்திரத்தினுள்ளே பெய்த அரிசியை, அந்த அரிசி வெந்தமை அறிவதற்கு, ஓர் அகப்பையாலே எடுத்துக் கண்டு உணரலாம். அது போலவே, எவரிடத்தும் அவரவர் செயல்களாகக் கண்டவற்றைக் கொண்டே அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
'கண்டது காரணம்ஆ மாறு.'

     செயலைக் கொண்டே மனிதர் மதிப்பிடப் படுவதனால், யாவரும் மறந்தும் பிழைபட்ட செயல்களிலே மனஞ் செலுத்தக் கூடாதென்பது கருத்து. மூழை - அகப்பை. ‘கண்டது காரணம் ஆமாறு’ என்பது பழமொழி.

133. பிறர் தவறு கூறலாகாது

     அழகிய குளிர்ந்த நீர் வளத்தினையுடைய புகார் நாட்டிலே, விளை நிலங்கள் இன்னின்னார்க்கு இவ்வளவு உளவென்று குறித்துக் காண்பதற்கு விரும்பிய அரசன், மக்களை அழைத்து அது பற்றி விசாரித்தான். அப்போது சான்றோன் ஒருவன், பிறனொருவன் தன் வலிமையால் அபகரித்துக் கொண்டு அநுபவித்து வருகின்ற ஒரு நிலத்தைப் பற்றித் தான் அறிந்திருந்தும், அதனைச் சொல்வதற்கு நாணங் கொண்டு மறைந்து நின்றான். ஆகவே, தன் கண்ணினாற் கண்டதே யானாலும் அதனால் வரும் பின் விளைவுகளை ஆராய்ந்து பார்த்தே சொல்ல வேண்டும்.

பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்
கொண்டதனை நாணி மறைத்தலால் தன் 'கண்ணிற்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்'.

     காண்பவற்றினை நன்கு ஆராயாமல் வெளிப்படச் சொல்வது கூடாது என்பது கருத்து. ‘கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்’ என்பது பழமொழி.

134. கயவரிடம் ரகசியம் சொல்லக் கூடாது

     மழை மேகத்தினைப் போலக் கருமையாக விளங்கும் கூந்தலையுடைய பொன்வளை அணிந்தவளே! அன்பு படத் தம்முடன் நட்புக் கொண்டு நடப்பவர்களுள்ளும், தாம் கேட்ட ஒரு செய்தியைப் பிறருக்குச் சொல்ல ஆராயாது போகின்றவர்களாக ஒருவருமே இல்லாதிருக்கின்றனர். அதனால், சான்றோர்கள் ரகசியமான செய்திகளைக் கயமைக் குணம் உடையவர்களுக்கு ஒரு போதும் சொல்லவே மாட்டார்கள்.

நயவா நட்டொழுகு வாரும்தாம் கேட்ட(து)
உயவா(து) ஒழிவார் ஒருவரும் இல்லை;
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
'கயவர்க்(கு) உரையார் மறை'.

     நண்பர்களே ரகசியங்கள் வெளிப்படுத்தும் போது, கயவர்கள் எவ்வளவு தூரம் அதனைப் பகிரங்கப்படுத்தி விடுவார்கள்! அதனால், அவரிடத்து ஒரு போதும் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம் என்பது கருத்து. ‘கயவர்க்கு உரையார் மறை’ என்பது பழமொழி.

135. சொல்வீரர் பயனற்றவர்

     வெகுண்டு எழுந்த போரினுள்ளே, பகைவர்கள் எல்லாரும் அழியும்படியாகத் தம்முடைய படைச் செருக்கினாலே போர் செய்து வெற்றி கொள்ள முயலாத கோழைகள், தாமும் போர் செய்பவர்கள் போல வீறாப்பாகப் பேசிக் கொண்டு, தம் அரசனின் சோற்றைச் சாப்பிட்டுத் திரிவார்கள். அத்தகையோர் நிலை உடலால் வலுவற்ற ஒருவர், ஆடைகளாற் புனைந்து தம்மைப் பகட்டித் திரிவது போன்றதாகும்.

உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்
தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே
'கருக்கினால் கூறைகொள் வார்'.

     வீரம் செயலில் தான் திகழவேண்டும்; வெறும் ஆடம்பரக்காரர்களும், பேச்சு வீரர்களும் வீரர்களாக மாட்டார் என்பது கருத்து. கூறை - ஆடை; கூறுபடுத்தியது. ‘கருக்கினால் கூறை கொள்வார்’ என்பது பழமொழி.

136. பழியில்லாத செயலே செய்ய வேண்டும்

     பெரிய சக்கரவாளம் ஆகிய மலை சூழ்ந்த வட்டமாகிய எல்லையிடத்தே சேர்ந்திருக்கும் மகாமேரு முதலாகிய மலைகளுங் கூட ஒரு காலத்துத் தேய்ந்தாலும் தேயலாம்; வடுப்பட்ட சொற்களோ ஒன்றுமே மறையாது. ஆதலால் தான் கெட்டுப் போவோம் என்று சொல்லப்படும் இக்கட்டான நிலைமையிலுங் கூடத் தனக்கு ஒரு வடுவும் ஏற்படாத செயல்களையே ஒருவன் செய்து வருதல் வேண்டும்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய
'கல்தேயும் தேயாது சொல்'.

     பழி மறையாது; வழி வழி தொடர்ந்து, தன் குடிக்கும் வந்து கொண்டேயிருக்கும். அதனால், அத்தகைய பழி வரும் செயல்களைச் செய்வதினும் ஒருவன் சாதலே நல்லது. ‘கற்றேயும் தேயாது சொல்’ என்பது பழமொழி.

137. வலிமை அறிந்து எழுதல்

     வேறு ஓர் ஒப்புமையுமில்லாமல், வில்லொடு மட்டுமே சரியாக ஒப்புமையுடையதாக விளங்கும் புருவத்தை உடையவளே! போர் இல்லாத சமயத்திலே வீரமாகப் பேசுபவர்கள் என்றாலும், அவர்கள் பேச்சை நம்பி, அவர்கள் பகைவருக்கு ஏற்ற வலிமையுடையவராக இல்லாவிட்டால், அவரைப் ‘பகைவர் மேல் சென்று போரிடுக’ என விடுத்தல், அப்படி விடுத்த மண்ணுக்கே முடிவில் துன்பந் தருவதாகும். அப்படிச் செய்வது, கல்லுடன் தன் கையைத் தானே மோதிக் கொள்வது போன்றதாகும்.

அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்
நிகரின்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி
வில்லொடுநே ரொத்த புருவத்தாய்! அஃதன்றோ
'கல்லொடு கையெறியு மாறு'.

     ‘எதிர்த்த வலியற்றாரைப் பகைவர் அழிப்பதுடன் ஏவிய மன்னனையும் அழித்து விடுவார்கள்’ என்பது கருத்து. ‘கல்லொடு கையெறியுமாறு’ என்பது பழமொழி. கல்லைக் கையில் அடித்தால் கைதான் நோவு கொள்ளும் என்பது தெரிந்ததே.

138. நம்மால் உயர்த்தப்பட்டவர்

     மென்மையானதும், மேன்மையான மாலை தரித்ததுமான மூங்கில் போன்ற தோள்களை உடையவளே! கன்னத்திலே அடக்கிக் கொண்ட நீரைக் குடிக்கவும் செய்யலாம்; அல்லது துப்பி விடவும் செய்யலாம்! அது போலவே, தம்மிடம் ஏவல் செய்பவரை வலிமையுடையவராகச் செய்தவர்கள், அவர்களை அழித்தாலும் அழிக்கலாம், உயர்த்தினாலும் உயர்த்தலாம். அது அவர்களாலே முடியும். இதற்கு, மெல்ல ஆராய்கின்ற ஓர் அறிவுத் திறமை எதுவுமே வேண்டுவதில்லை.

வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக் 'கவுட்கொண்ட நீர்'.

     தம்மால் உயர்த்தப்பட்டவரானாலும், அவர் தமக்கு மாறுபட்ட விடத்து ஆராயாமல் அழித்து விடுவதே அரச நெறி என்பது கருத்து. ‘கவுட் கொண்ட நீர்’ என்பது பழமொழி.

139. குடியைக் கண்டதும் மகிழ்வான்

     தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவரா யிருக்கலாம். அத்தகையவரும், அவர்களோடு பகை கொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோலவே, உணவாக நிரப்பி உதவும் ஒரு தகுதி இல்லை என்றாலும் கள்ளினைக் கண்டவுடனேயே குடிகாரனின் உள்ளமும் களிப்படையும்.

மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக் களிக்கும் களி'.

     குடிகாரன், கள் தனக்கு உணவாகாது என்பது அறிந்தும், கள்ளைக் கண்டதும் தன் அறியாமை காரணமாக அதை உண்டு மகிழ்வான். ‘கள்ளினைக் காணாக் களிக்கும் களி’ என்பது பழமொழி.

140. கள்ளும் சோம்பேறித்தனமும்

     மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே! கள்ளைக் குடித்துவிட்டுக் குடித்துவிட்டோமென்று வருந்துபவர்கள் யாருமே இல்லை. கொடி கட்டிய வலிமையான தேர்களையுடைய மன்னர்களால், பகுதிப் பணம் கொள்ளைப்பட்டு உயிர் வாழ்கின்ற சிற்றரசர்கள், அந்த மன்னர்கள் ஒரு காரியத்தை மனதிற் கொண்டு ஏவிய செயலைத் தம் சோர்வு காரணமாகச் செய்யாது விடுதல் என்ன பயனைத் தரும்? அவர்க்கு அழிவையே தரும்.

கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்'.

     குடிகாரன் குடித்தற்கு வருந்தாமலிருக்கலாம்; அதன் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. அடிமையரசர்களும் தம் சோம்பேறித்தனத்திற்கு வருந்தாமலிருக்கலாம். ஆனால் அதனால் வரும் விளைவுகளுக்குத் தப்ப முடியாது. ‘கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்’ என்பது பழமொழி.

141. ஆபத்தில் உதவாத நண்பர்கள்

     பாம்புக் கொடியை உடையவன் துரியோதனன். அவனுக்கு நண்பன் வெண்மேனியினனான பலராமன். பாரதப் போரினுள், அவன் தன் நண்பனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிப் போரிலே ஈடுபடவில்லை. அவனைப் போலத் தம் நண்பர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவாமல் அவரே அழிய விட்டுவிட்டுப் பின், ‘அவர் ஆன்மா சாந்தியடைக’ என்று பெருந்தவம் செய்பவர், உண்மை நண்பர்கள் ஆக மாட்டார்கள். அவர் செயல், திருவிழாப் பார்க்க வந்த குழந்தையை விழா முடியும் வரை தோளிலேற்றிக் காட்டாதிருந்த ஒரு தகப்பன், விழா முடிந்த பிறகு தோளில் ஏற்றிச் சுமந்து செல்வதைப் போன்றதாகும்.

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'.

     ஆபத்தில் உதவாத நண்பர் நண்பராகார். ‘கழிவிழாத் தோளேற்றுவார்’ என்பது பழமொழி.

142. பெரியவரைத் தாழ்த்த நினைத்தல்

     மிகவும் சிறியதாகவும் எளிமையுடையதாகவும் தோன்றினாலும் குளிர்ச்சியான மலையின் மேலுள்ள கல்லினைக் கிள்ளிக் கைவலியில்லாமல் தப்பியவர் எவருமே இலர். ஆதலால், முதன்மையாய் மிகுந்த பொருள் உடையவராகி, மிகவும் மதிக்கப்பட்ட செல்வாக்கும் உள்ளவர்களை, ‘வறுமையாக்கிவிட முயல்வோம்’ என்று ஒருவன் சொல்லுதல், அவனுக்கே கேடாக வந்து முடியும்.

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமால்
'கற்கிள்ளிக் கையுந்தார் இல்'.

     பிறருடைய செல்வமும் செல்வாக்கும் கண்டு பொறாமையினாலே அவரை அழிப்பேன், எனக் கறுவுதல் தவறு. அது அப்படி நினைத்தவர்க்கே தீங்காக முடியும். ‘கற்கிள்ளிக் கையுந்தார் இல்’ என்பது பழமொழி.

143. பாடங் கேட்டுப் படித்தல்

     ‘உண்ணுதற்கு இனிமையாயிருக்கும் இனிதான தண்ணீர் இந்தக் கிணற்றைத் தவிர வேறு எங்குமே கிடையாது’ என்று கருதும் கிணற்றினுள்ளேயிருக்கும் தவளை. அதனைப் போல அறிவுடையோர் என்றும் ஆகமாட்டார்கள். நூல்களை முழுவதுமாகப் பகல் எல்லாம் வெறுப்பில்லாமல் இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியன்மாரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மையானதாகும்.

உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்னும்
கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
'கற்றலின் கேட்டலே நன்று'.

     தானே கற்று வரும் போது எழும் ஐயங்கள் தீர்வின்றிப் போகும்; ஆகவே பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டுமானால், ஆசிரியன் ஒருவனை அண்டிக் கேட்டுத் தெளிவதே சிறப்பு. ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ என்பதும் இதுவே.

144. முட்டாள் கற்றும் பயனில்லை

     மலைச் சாரல்களிலே, பாறைகளின் மேல், வீழ்கின்ற அருவிகள் பலவாக விளங்கும் நல்ல நாட்டையுடையவனே! சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு துடியிலே பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாதவர்களைக் கல்வி போதிப்பதால் அறிவுடையவராக நிலைநிறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியாவதில்லை என்று அறிவாயாக.

நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே
சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!
'கற்றறிவு போகா கடை'.

     தட்டுவார் இல்வழித் துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாத போது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக் கற்பிப்பது வீண் என்பது கருத்து. ‘கற்றறிவு போகா கடை’ என்பது பழமொழி.

145. கல்வியை நாளும் கற்க

     தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச் சென்று சொல்லும் பொழுதிலெல்லாம், சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம். அதனால், சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும் வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்பட வேண்டும். இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன்றையும் கற்குந்தொறும், தான் அதனை முன்னர்க் கல்லாத தன்மையே தோன்றும் என்க.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.

     ‘கல்வி கரையில்’ என்பதை உணர்ந்து, செருக்கின்றி நாளும் கற்றலிலே மனஞ் செலுத்த வேண்டும் என்பது கருத்து. ‘கற்றொறுந் தான் கல்லாதவாறு’ என்பது பழமொழி. ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்பதும் இது.

146. படியாதவனின் அறிவாலும் பயனில்லை

     நற்குணம் உடையவனே! முதலிலே கேள்வி என ஒன்று எழாதிருந்தால் அதற்கான ஒரு விடையும் எழுவதில்லை. முதலில் உள்ளத்தில் ஒரு கனவு தோன்றாமற் போனால் எந்தவொரு செயலும் பின் நிகழ்வதுமில்லை. அதனால், படித்தவர்கள் முன்னிலையிலே விளக்கிச் சொல்லும் போது சொற்சோர்வுபட்டுப் போவதனால், நூற்களைக் கல்லாத ஒருவன் தன் இயற்கையறிவால் கண்ட சிறந்த நுட்பங்களும், நுட்பங்களாக மதிக்கப்படுவதுமில்லை.

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்!
'வினாமுந் துறாத உரையில்லை; இல்லை
கனாமுந் துறாத வினை'.

     இயற்கையறிவு இருந்தாலும் கல்வியறிவு இருந்தாலன்றி, அது சிறப்பதில்லை என்பது கருத்து. ‘வினா முந்துறாத உரையில்லை’, ‘கனா முந்துறாத வினையில்லை’; இவை இரண்டும் பழமொழிகள்.

147. கீழோர் பால் பொருளை ஒப்பித்தல்

     தனக்கு ஒரு போக்கிடம் இல்லாத கடலானது, நீர்த் துளிகளைத் தூவிக் கொண்டிருக்கும், அலைகள் கரையைப் பொருதுகின்ற கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரைப் பகுதிகளுக்கு உரியவனே! ஒருவர், தாம் வருந்தி முயன்று தேடிய சிறந்த பொருளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கீழ் மக்களிடத்தே ஒப்பித்தல், காக்கையைக் காவலாக வைத்த சோற்றைப் போல, விரைவிலே இல்லாமல் அழிந்து போய்விடும்.

ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'.

     காக்கை தன் இனத்தையும் அழைத்து அந்தச் சோற்றையெல்லாம் உண்டுவிடுவது போல, அத் தீயவர்களும் தம் இனத்துடன் கூடி அதனைப் போக்கடித்து விடுவார்கள். ‘காக்கையைக் காப்பிட்ட சோறு’ என்பது பழமொழி.

148. தமக்குத் தாமே தண்டித்தல்

     சான்றோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று இருந்தாலுங் கூட, மாட்சியற்ற ஒரு செயலைச் செய்யவே மாட்டார்கள். ‘எனக்குத் தகுதி அல்லவா?’ என்ற ஒன்றையே கருதினான்; தகுதிக்குத்தானே சான்றாகவும் ஆயினான்; தன் பிழையை நினைத்துத் தன்கையையே குறைத்துக் கொண்டான், பாண்டியனான பொற்கைப் பாண்டியனும். இதுவே, சான்றோர் இயல்பு ஆகும்.

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார் மாணா வினை'.

     கீரந்தை மனைவிக்காகக் கதவைத் தட்டிய ‘பாண்டியன்’ தான் செய்தது நன்மை கருதியானாலும், தகுதியன்று எனத் தன் கையை குறைத்துப் பின் பொற்கையன் ஆயினான்; இதுவே சான்றோர் பண்பு. ‘காணார் எனச் செய்யார் மாணா வினை’ என்பது பழமொழி.

149. சூதினால் சாவும் வரும்!

     பாரதக் கதையினுள்ளும் தம் தாயப் பொருளினையே பந்தயப் பொருளாகக் கொண்டு, நூற்றுவரும் பாண்டவரோடு சூதுப் போர் செய்தனர். அது காரணமாக, அவர்க்குப் பகைவராகிப் போர்க்களத்தின் இடையே உயிரும் இழந்தனர். அதனால், படித்தவர் எவரும் விருப்பமுடன் சூதாடவே மாட்டார்கள்.

பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
'காதலோ(டு) ஆடார் கவறு'.

     பாரதக்கதை நாடறிந்த வொன்று. அதனைக் காட்டிச் சூதின் விளைவை விளக்குவது செய்யுள். ‘காதலோ டாடார் கவறு’ என்பது பழமொழி.

150. காப்பாரும் பார்ப்பாரும்

     வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோலப் போற்றிப் புறந்தந்து சேர்த்து வைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிடத் திருடப் பார்ப்பவர்களே அதிகமாகும்.

நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
'காப்பாரில் பார்ப்பார் மிகும்.'

     பொருளை, அதனால் பூட்டி வைக்காது நல்ல காரியங்களிலே செலவிட்டு வாழவேண்டும் என்பது கருத்து. ‘காப்பாரிற் பார்ப்பார் மிகும்’ என்பது பழமொழி. பார்ப்பார் - தாம் கைக்கொள்ளப் பார்ப்பவர்.


பழமொழி நானூறு : 1 2 3



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247