கதை பிறந்த கதை

     இந்தியாவுக்குச் சுதந்தரம் வந்திராத நாட்கள். நான் எழுத்துலகில் அடி வைப்பதற்கு முன்னோடியாகத் தோன்றியதை எல்லாம் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்த காலம். உதகை நகரில், எங்கள் நண்பர் ஒருவர் வீட்டு வாயிலில் தான் நான் முதன் முதலாக ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியைக் கண்டேன்.

     ஆங்கிலேயர் ஆட்சி புரிந்திருந்த அந்நாளைய உதகை, திருச்சி மாவட்டத்தின் எளிய கிராம மொன்றில் பிறந்து வளர்ந்திருந்த எனக்கு முற்றிலும் அந்நியச் சூழலாக இருந்தது என்றால் தவறில்லை. மரம் வெட்டும் ஒரு தொழிலாளியும் கூட, நீண்ட கால் சட்டை, மேல்சட்டை, கோட்டு, தொப்பி அல்லது தலைப்பா அணிந்திருந்தான். வேட்டி சட்டை போட்ட எளிய மனிதரையே நான் கண்டிருக்கவில்லை. அது குளிர் ஊர் என்ற கருத்தை விட, வாழ்க்கைத் தரத்தில் நாகரிகமடைந்த மேலான மக்கள் நிறைந்த ஊர் என்றே, எனது அந்தப் பதினைந்து, பதினாறு வயசு உள்ளத்தில் பதிந்தது. அத்தகைய நிலையில், நான் குறிப்பிட்ட நண்பர் வீட்டில் அவனைக் கண்டேன். எனக்குத் திக்கென்று தூக்கிவாரிப் போட்டாற் போலிருந்தது.

     கூழை பாய்ந்த உருவத்தினனான அவன், முழங்காலுக்கு மேலேயே முடிந்து விடும் ஓர் அழுக்குத் துணிக் கச்சை அணிந்து, மேலே பெயருக்கு அதே அழுக்கில் ஒரு கந்தற் சுருணைச் சட்டை போட்டிருந்தான். எண்ணற்ற சுருக்கங்கள் ஆழக் கீறிவிட்ட முகம். ஏதோ ஒரு பழைய சீலைக்கந்தல் பெயருக்குத் தலைப்பாகையாக இருந்தது. முடிக்கருமை, அவன் வயசை நாற்பதுக்குள் என்று வரையறை செய்தது. நரம்பெடுத்த முடிச்சுக் கால்களில், வெற்றுப் பாதம் வெடிப்பும் கணிசமான தேய்மானமும் உண்டென்று விளக்கியது.

     “யார்...?” என்றேன் சற்றே திகைத்து.

     அவன் கூடலூருக்கருகே எங்கோ ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிழைக்கும் தொழிலாளி. இங்கே வீட்டுக்காரருக்குத் தோட்டத் துரையிடம் இருந்து செய்தி கொண்டு முப்பது மைலுக்கு மேல் ஓடி வந்திருக்கிறான்.

     “ஏன் பஸ் இல்லையா? பஸ்ஸில் ஏன் வரவில்லை?”

     வரலாம் தான். ஆனால், ஆறணாவோ, எட்டணாவோ, மிச்சம் பிடிக்க முடியாதே? எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. ஆனால் சோவியத் தோட்டத் தொழிலாளி என்று என்னுள் அந்நாளில் பதிந்த உருவம், இன்றும் அப்படியே நினைத்தால் கண்முன் தெரிகிறது.

     தேயிலைத் தோட்டங்களில் பண்புரிபவர்களின் பணி, அல்லது வாழ்க்கை பற்றிய அவலமான செய்திகளெல்லாம் எனக்குப் பின்னே தான் அறியக் கிடைத்தன. அந்த ஆரம்ப நாட்களில் கற்பனையாகவே சில சிறுகதைகள் புனைந்ததுண்டு. ஆனால் அவை ஒன்றும் அச்சேறவில்லை.

     தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையைக் கண்டு, எனது எழுத்தில் உருவாக்க வேண்டும் என்றதோர் ஆவல், என்னுள் நீறு பூத்த நெருப்பாக அந்நாளிலேயே முகிழ்த்திருந்தது எனலாம். பின்னால் பல ஆண்டுகளில் நான் நீலகிரிச் சூழலில் ஒன்றி வாழ்ந்து, காடு மலைகளெல்லாம் சுற்றியிருக்கிறேன். தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் எனக்குப் பழகிப் போயின. என்றாலும் எனது அந்த ஆவல் நிறைவேறும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. நீலகிரியை விட்டு வந்த பிறகும் கூட, ஒரு தடவை அங்கே சென்று தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டறிய முயன்றேன். பயனில்லை.

     1977ம் ஆண்டில், மதுரையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன். அப்போது, இலங்கையில் இருந்து அங்கு கல்வி பயில வந்த மாணவர், ஏழெட்டுப் பேர் என்னைச் சந்திக்க வந்து ஆர்வத்துடன் பல விஷயங்களையும் பேசினார்கள். ஈழத் தமிழர் பிரச்னைகளைக் குறிப்பாக எடுத்துரைத்தார்கள். நான் இலங்கைக்கு வரவேண்டும் என்றும், எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், பிரச்னை தொடர்பான பிரசுரங்கள், மற்றும் விவரங்களடங்கிய காகிதங்களையும் என்னிடம் கொடுத்தார்கள். அப்போது நான் தோட்டத் தொழிலாளர் நிலை, சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், மற்றும் குடியுரிமை மறுக்கப்படும் பிரச்னை ஆகிய எல்லா விவரங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து நாவல் எழுத ஆர்வம் இருப்பதையும் கூறினேன். அவர்கள் உடனே மனமுவந்து, நான் இலங்கைக்கு அவசியம் வர வேண்டும் என்றும், மலையகத் தொழிலாளரிடையே தங்கிச் செய்திகள் அறிய அவர்கள் உதவுவார்கள் என்றும் கூறினார்கள். இந்தச் சந்திப்புக்கு முன், எனக்கு இலங்கையில் இருந்து வெளியாகும் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. இதற்குப் பிறகு பல நூல்களை இலங்கையிலிருந்து நண்பர்கள் பெற்றுத் தந்தார்கள். திரு.டொமினிக் ஜீவா, டானியல், யோகநாதன், தெளிவத்தை ஜோசஃப், செங்கை ஆழியான், போன்ற பல எழுத்தாளரின் படைப்புக்கள், வீரகேசரி பிரசுரங்கள் எல்லாம் எனக்கு இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்னைகளை, யதார்த்த வாழ்வின் சிக்கல்களைப் பரிச்சயம் செய்து தந்தன. தெளிவத்தை ஜோசந்ப் அவர்களின் மலையகத் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் சில கதைகள் அறுபதுகளில் கலைமகளில் வெளிவந்திருக்கின்றன. எண்பது தொடக்கத்தில் இலண்டனில் வாழும் திருமதி ராஜேசுவரி பாலசுப்ரமணியனின் ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல், வெளியான சில நாட்களிலேயே எனக்குக் கிடைத்தது. அது என்னைப் பெரிதும் கவர்ந்தது. பிரச்னையின் தீவிரத்தைப் பாதிப்போடு உணர்த்தியது எனலாம்.

     இந்த நிலையில் 1983 பிப்ரவரி - மார்ச்சில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாரதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கைக்கு அழைத்த எழுத்தாளரிடையே நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது அங்கு அரசியல் சமூக நிலைமை மிக நெருக்கடியாக இருந்தது. எங்களுக்கு விசா கிடைப்பதே கடினமாக இருந்தது.

     நான் அந்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றாலும், நான் எண்ணியிருந்தது நிறைவேறவில்லை. மலையகத் தமிழர், வீடற்ற நாடற்ற நிலையில் இடம் பெயர்ந்து, கிளிநொச்சிப் பகுதியில் குடியேறியிருந்தனர். சாலையிலே செல்லும் போது, அவர்கள் குடியிருப்பைக் காட்டினார்கள் நண்பர்கள். ஆனால், இறங்கிச் செல்லவோ, அவர்களைப் பார்த்துப் பேசவோ நேரமில்லை என்று போக்குச் சொல்லி, நண்பர்களே என்னைத் தடுத்து விட்டார்கள்.

     மேலும் கண்டியில் எனக்குக் கிடைத்திருந்த சிறிது நேர ஓய்வை, நான் லயங்களுக்குச் சென்று தொழிலாளர் குடும்பத்தினரைக் காணும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் பெரிதும் விரும்பினேன். அதுவும் சாலையிலிருந்து இறங்காத நிலையில் வெறுமே காண்பதுடன் திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று. தேசீய மயமாக்கப்பட்ட தோட்டம் ஒன்றின் மேலாளர் ஒருவரும், மற்றவர்களும் (தமிழர்கள்) என்னை, “லயங்களுக்குள் நீங்கள் செல்ல அனுமதி கிடைக்காது. மீறினால் வீணான தொந்திரவுக்குள்ளாவீர்கள்” என்று எச்சரித்தார்கள். மேலாளர் பங்களாவில் இருந்து திரும்ப வேண்டியதாயிற்று.

     ஆனால் நண்பர்கள், மீண்டும் என்னை ஜூலையில் வரும் படியும், தக்க உதவிகளைச் செய்வதாகவும் வாக்களித்தார்கள்.

     லயன்களுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏமாற்றம் சோர்வாக இருந்தது. கண்டியில் (அந்நாள் தைப்பூசம் என்று நினைவு) கண்ணகியம்மன் கோயிலிலும், பூங்காவிலும் ‘இவர்கள் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தினர்’ என்று முத்திரை குத்தினாற் போன்று தென்பட்ட சில தமிழரைப் பார்த்து, பெண்களிடம் சில வார்த்தைகள் பேசியதுடன் நான் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டேன்.

     இலங்கையில் தங்கியிருந்த அந்த இருவார காலத்தில், திரு.டொமினிக் ஜீவா, கவிஞர் முருகையன், (பாரதியின் வாழ்க்கையில் இருந்து சில நிகழ்ச்சிகளை அற்புதமான நாடகமாக்கி அளித்தவர்) இளைஞர் முருகபூபதி ஆகியோர், எங்களுடனேயே மாறி மாறிப் பயணம் செய்தும், போகுமிடங்களிலெல்லாம் பல எழுத்தாளப் பெருமக்களை அளவளாவச் செய்தும் பேரன்பைக் காட்டினார்கள்.

     தங்கிய காலம், கூட்டங்கள், பேச்சு, பல்வேறு பிரச்னைகளில் புகுந்து உரையாடுதல் என்று நீண்ட போது, காலம் காலமாகப் பழகிவிட்ட நெருக்கத்தையும் அன்பையும் சோதர உணர்வையும் அழியா நினைவுகளில் பதிந்து விட்டனர்.

     காலம் சென்ற தானியல் அவர்கள், தம் வீட்டில் எனக்கு விருந்தளிக்கும் வாய்ப்பாக, பல எழுத்தாள நண்பர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் இருந்து அளவளாவ உதவியதை எப்படி மறக்க முடியும்? தெளிவத்தை ஜோசஃபைப் பற்றிப் பல நாட்கள் எண்ணிப் பார்த்ததுண்டு. 1968-ம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சென்னைக்கு வருகை தந்த நிலரிடம், நான் அவரைப் பற்றிக் குறிப்பிட்டு விசாரித்தேன். அவர்கள் ஆச்சரியமும் திகைப்புமாக, ‘உங்களுக்கு அவரை எப்படிப் பழக்கம்’ என்று கேட்டார்கள். அவர் நேரில் வந்து, தமது சிறுகதைத் தொகுப்பொன்றை அளித்த போது, நான் அடைந்த மகிழ்ச்சி சொல்லத் தரமன்று. எங்கெங்கோ மூலைகளிலிருந்து எத்துணை இதயங்கள், அன்பு மொழிகளைத் தாங்கி வந்தன! எத்தனை கன்னி முயற்சிகள்! துண்டுப் பிரசுரங்கள்! நூல்கள்! சஞ்சிகைகள்! அத்தனையும் பெரும் புதையலாக இருந்தன. கொழும்பில், நண்பர் திரு.ரங்கநாதன் அவர்கள் தம் வீட்டில், நான் வேலுப்பிள்ளை அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தோட்டத் தொழிலாளருடன் தம் பணி முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட அவர் ‘வீடற்றவர்’ ‘Bonded Labour' என்ற அருமையான நூல்களைத் தந்தவர்.

     “நீங்கள் மீண்டும் ஜூலையில் வாருங்கள்!” என்று எல்லா நண்பர்களும் பிரியா விடை தந்தார்கள்.

     ஆனால் ஜூலை 83 - அந்த மாதமே இலங்கை வாழ் தமிழரின் வரலாற்றில் மட்டுமல்லாமல், நாகரிகமடைந்ததாகச் சொல்லப்படும் மனிதகுல வரலாற்றிலேயே வெட்கப்படும் வகையில் மிருக வெறியிலும் கீழான வெறிச்செயல்களுக்கு அப்பாவி மக்களைப் பலி கொண்ட நாட்களைக் கொண்ட கரிய மாசமாக, வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து பேயாட்சி செய்ய முடிசூட்டு வைபவம் செய்து கொண்ட மாசமாக விடிந்து விட்டது.

     அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும், சம்பவங்கள் முறுக்கேறி, மனிதாபிமானமாகிய மாணிக்கக் கங்கையில் பச்சை நிணத்தையும் தீயின் பொசுங்கலையும் குழப்பும் வகையில் ஈழத்தமிழர் பிரச்னை அகில உல்கப் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது என்றால் மிகையில்லை. தாயையும் சேயையும் பிணைத்த கப்பல் போக்குவரத்து நின்றதும் அந்நியனுக்கு அடிமையாகிக் கிடந்த, சொந்த மண்ணை விட்டு, கால்வாயைப் போன்றிருந்த கடலைத் தாண்டி இலங்கைக் காடுகளில் அதே அந்நியனுக்காக உதிரத்தையும் எலும்பையும் தேய்த்து வளம் பெருக்கிக் கொடுத்த மக்கள், இந்நாள் அங்கே உரிமையற்று விரட்டியடிக்கப்பட, சொந்தமாகக் கனவுகளில் மட்டுமே கண்டிருந்த பூமி முற்றிலும், அந்நியமாகி வதைக்கும் பரிதாபம் கண்முன் தொடர்ந்த காட்சிகளாக நெருக்குகின்றன. மனிதகுலம் விஞ்ஞான அறிவாலும் நாகரிகப் பண்பாட்டினாலும் விண்வெளியையே எட்டும் சாதனையைக் கண்டிருக்கிறது என்று பெருமைப்பட வேண்டிய நாளில், பிறவியெடுத்த மண்ணில் கண் விழித்துப் பிழைக்க உரிமை இல்லை என்று நசுக்கப்படும் மக்கள், காற்றில் பறக்கும் பஞ்சுப் பிசிறுகளாக, குஞ்சும் குழந்தையுமாகக் கரைக்குக் கரை அகதிகளாக அல்லாடுவதும், எந்த நேரமோ, எப்போதோ, வாழ்வோ, சாவோ என்று கத்தி முனையில் அஞ்சியஞ்சி மக்கள் நாட்களைக் கழிப்பதும், மனித நாகரிகத்தைக் காட்டுமிராண்டி நிலைக்குப் பின்னோக்கித் தள்ளிச் சென்றுவிட்டதைக் காட்டுகின்றன.

     இந்த நெருக்கடிகளில், புற உலகால் பாதிக்கப்படவில்லை என்று மனிதாபிமான அடிப்படையில் ஒரு தொழில் செய்யும் எவரும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. எழுத்து மனித உணர்வுகளின் பாதிப்புக்களின் எழுச்சிகளை வெளிக் கொண்டு வரும் வடிகால் என்றால் தவறில்லை. இந்தச் சுமைகளை எழுதினாலே தீரும் என்ற உந்துதலுக்கு ஆட்பட்டு எழுதத் துனிந்தேன். இதனால் சுமைகளை இறக்கிவிட்டேன்; பிரச்னையைத் தீர்த்து விட்டேன் என்று சொல்வதாகப் பொருளில்லை. இப்படி உரத்து இந்தப் பிரச்னைகளை சித்தரிப்பதும், சிந்திப்பதும், பலரிடம் பகிர்ந்து கொள்ளும் உத்திதான். தனியாகச் சிந்திப்பதை விடுத்துப் பலரையும் சிந்திக்கச்செய்தால், கருத்துக்களுக்கு வலிமை உண்டாகும். தெளிவான முறையில் தீர்வு காணச் செயலாற்ற வாய்ப்புக்கள் நேரலாம். இது நம்பிக்கை. இன்றைய நிலையில் நம்பிக்கை ஒன்று தான் தேன் துளி.

     இந்த முயற்சிக்கு உறுதுணையாகப் பல இடங்களிலும் செய்திகள் சேகரிக்க உதவிய நண்பர்கள் பலர். பெருவாரியாகத் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர் நெருங்கும் நீலகிரிப் பிரதேசத்தில், குன்னூர், கூடலூர், கோத்தகிரி, தேவாலா என்று எனக்குப் பல நண்பர்கள் செய்திகளைக் கூறி உதவினார்கள். குறிப்பாக, தாயகம் திரும்புவோருக்கான சம்மேளனத்தைச் சார்ந்த, திருவாளர்கள் சொர்ணமணி, குழந்தைவேல், தங்கவேல் எம்.சண்முகம், மற்றும் கூடலூர் நடராசா, ஆகியோர் என்னைப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று மக்களைச் சந்தித்து விவரங்கள் அறிய உதவியதை மறக்க இயலாது.

     இராமேசுவரத்திலும் மண்டபம் காம்பிலும் தூத்துக்குடியைச் சார்ந்த அகதி முகாம்களிலும் திரு.சாஸ்திரி அவர்களும், டாக்டர் நடராஜன் அவர்களும் பேரார்வம் கொண்டு, எனக்கு எல்லா வகையிலும் உதவினார்கள். இம்முயற்சிக்கு நான் துணிவு கொண்டு செயலாற்ற அவர்கள் காட்டிய ஆர்வம் பெரிதும் காரணமாக இருந்தது.

     முழு மனிதாபிமானத்துடன், அரசியலுக்கு அப்பால் நின்று, மண்டபத்திலும் இராமேசுவரத்திலும் இராமகிருஷ்ண மடம் சார்ந்து, பெருந் தொண்டாற்றும் அருள்மிகு பிரணவானந்தா சுவாமிகளின் ஒப்பற்ற அரும் பணிகளை நேரில் கண்டறியும் வாய்ப்பையும் பெற்றேன்.

     சென்னை நகரின் சுற்றுப் புறங்களில் தங்கியிருக்கும் பல முன்னாள் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் நான் எப்போது சென்று எந்தச் சந்தேகம் கேட்டாலும், தங்களுடைய சங்கடமான வாழ்க்கைச் சூழலைப் பொருட்படுத்தாமல் எனக்குச் செய்திகள் கூறி உதவியதை மறுப்பதற்கில்லை.

     இவ்வாறு எனக்கு உதவிய எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது என் கடமையாகிறது.

     இந்த நவீனம், ஏதேனும் பத்திரிகைகளில் வெளிவந்தால், பெருமளவில் மக்களைப் போய்ச் சேரும் என்ற ஆசை உள்ளூற இருந்தது. ஆனால் அரசியல் - வாணிப லாபமே பத்திரிகை தருமமாகப் போய்விட்ட நிலையில் அந்த எண்ணம் கைகூடவில்லை. எப்போதும் போல் எனது முயற்சிகளுக்கெல்லாம் பேராதரவளித்து நூல்களை வெளியிட்டு வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இதையும் நூலாக வெளியிடுகின்றனர்.

     இதற்கான உற்சாகமும் ஊக்கமும் அளித்து எனக்கு வெற்றிகரமாக இயங்கத் தூண்டுதல் நல்கிய தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அவர்களுக்கும், இளவல் அ.கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டு, தமிழ் வாசகப் பெருமக்களுக்கு, இந்நூலை முன் வைக்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்