புதிய திரிபுரங்கள் - Pudhiya Thiripurangal - சு. சமுத்திரம் நூல்கள் - Su. Samuthiram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



1

     பிரகாரம், கொடிக்கம்பம், பலிபீடம், கருவறை என்று ஆகம விதிப்படி அமைந்த ஆலயமல்ல, என்றாலும் ஆத்மார்ந்த விதிப்படி அமைக்கப்பட்டது போல ஜீவகளை சொட்டும் சிறு கோவில். தனிப்பெரும் ஜோதியான அருட்பெரும் ஜோதியே, அங்கே மூன்று பக்கம் மலையாகவும் முன்பக்கம் அருவியாகவும், ஒரு பக்கம் சமவெளிக்கு இட்டுச்செல்லும் மலைச்சரிவுப் பாதை யாகவும், மரம் செடி கொடிகளாகவும், மண்மேல் முகிழ்த்த தாவர சங்கமமாகவும், விண்மேல் முளைத்த வெள்ளிகளாகவும், ஒன்றில் பலதாய், பலதில் ஒன்றாய், தோன்றுவது அறியாத தோற்றங்காட்டி நிற்பது போல, நடப்பதுபோல, நிலையின்றி தாவுதல் போல, ஆட்சி செலுத்துவதாய் தோன்றும். இயல்பாக ஏற்பட்ட அந்த மலைக்குகையில் உள்ள லிங்கம், எப்போது ஸ்தாபிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது. மாடு, ‘ம்மா’ என்று கூப்பிடும்போது எப்படி வாயைத் திறந்து வைத்திருக்குமோ அப்படி இருந்தது அந்தக் குகை. மத்தியில் லிங்கம். குகைவாய் முனையில், கல்லால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை லிங்கத்திற்குப் பின்னால், குகையின் பின் புறச் சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் திரிசூலம்; குன்றின் முனைப்பில் நந்தி, ஆவுடையாரை ஒட்டி ஒரு சதுரக்கல். அந்தக் கல்லின் மேல் விபூதி சிதறிய சிறிய தட்டு. இவைதான் கோவிலாகவும், கோவிலைச் சார்ந்த சொத்துக்களாகவும் உருவமானவை.

     நடுநிசி வேளை.

     புல்லில் படர்ந்த பனி, லிங்க வடிவுகளாகத் தோற்றம் காட்டின. குகைக்குக் கிழக்குப் பக்கத்தில் துவார பாலகன் போலிருந்த ‘துங்குமூஞ்சி மரம்’ “நான் ஒன்றும் தூங்கும் மரமல்ல” என்று சொல்வதுபோல், இரண்டு மூன்று கிளைகள், மூன்று மூன்று கம்புகளாகப் பிரிந்து, முடிந்து, திரிசூலம் போல் தோன்ற, அந்த மரத்தின் இலை தழைகளுக்கு ஊடே உற்றுப்பார்த்தால், ஆகாயம் பல்வேறு ஸ்படிக லிங்கங்களாகத் தெரியும். பிரபஞ்ச வெளியில், லிங்க வடிவுக்கு ஒத்துவராத பகுதிகளை மரத்தின் சின்னஞ்சிறு இலைதழைகள் மறைத்து, ஊனக் கண்ணுக்கு ஞான ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. குகைக் கோவிலுக்கு எதிர்ப்புறத்திலுள்ள குன்றிற்கு மேலே சஞ்சரித்த மேகம், விஸ்வரூப லிங்கமாகத் தோன்றியது. அரூபத்தில் தான், மனதிற்கேற்ற ரூபங்களைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது போல, ரூப மற்றவை ரூபங்களாயின. மனமே பிரம்மாகவும், பிரம்மமே மனமாகவும் ஐக்கியப்பட்ட சதாசிவ நிலை நீ சதா... சிவம்... இதனால்தான் நாங்களும் சும்மா இருக்கிறோம் என்று உரைப்பது போல் காட்டு மிருகங்கள் கூட கண்ணயர்ந்தும், மரங்களில் துயில் கொண்ட பறவைகள், இறக்கைகளைப் பறக்கும் நிலையில் வைத்துக் கொண்டும் இருந்தன. ‘நீ ஆடுகின்ற அரசன். சுழற்சி வேகத்தின் உச்சகட்டமே - அசைவுகளின் பேரசைவே - தாண்டவம். பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அது நிற்பதுபோல் தோன்றுவது மாதிரி, உன் இயக்க வேகத்தால் ஏற்படும் ஸ்தம்பன மாயையை, இந்த பறவைகளும் மிருகங்களும் ‘சும்மா இருத்தல்’ என்று தவறாகப் புரிந்திருக்கின்றன. ஆனால் நான் அப்படி இல்லை. என் வேலை உன்னைப் போல், உன்னருளாலே சதா இயங்குவதே’ என்று, குகைக்குத் தென் பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவி, தன் இரைச்சலால் பேசிக் கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த அருவி மலையில் உலர்த்திப் போட்டிருக்கும் வெள்ளாடைபோல் தெரிந்தது.

     அருவி சொல்லாமல் சொல்வதை தான் செய்யாமல் இருந்ததற்கு பிராயச்சித்தம் செய்வதுபோல், குகைக்கு எதிர்த்தாற் போலிருந்த குன்றின் சரிவில் உள்ள குடிசைக் கதவு, சத்தத்தை எழுப்பிக் கொண்டு திறக்கிறது. கதவை இழுத்துத் திறந்ததால், அதில் ஏற்பட்ட அதிர்வுகள சப்த அலைகளாகி அருவியோசையின் அலைகளோடு, இரண்டறக் கலந்து பிரபஞ்ச அசைவிற்கு தாள லயமாய் லயிக்கின்றன.

     குடிசைக்கு வெளியே வந்த, காவி வேட்டி கட்டிய சாமியார், கதவைச் சாத்துவதற்கு முன்னதாக, கண்ணுக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கிய தன் குருநாதரின் காவி வேட்டியையும், மேலங்கியையும் விழியாடாது பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, கரங்குவித்து, தலையை லேசாகத் தாழ்த்தி பிறகு உயர்த்திவிட்டு, குகைக் கோவிலைப் பார்த்து மட மடவென்று நடந்தார். அப்படி நடக்கும்போது, இரண்டு கால் பெரு விரல்களுக்கு மேலே, அவற்றிற்கு அடுத்த விரல்களை மடக்கிப் போட்டுக்கொண்டே நடந்தார். குருநாதர் சொல்லிக் கொடுத்தது. பழைய காலத்து சாமியார்களைப் போல், காலில் கட்டைகளைப் போடாமல் விரல் மடித்து நடந்தாலும், இருந்தாலும் இச்சா சக்தி குறிப்பாக பாலுணர்வு போய்விடும் என்று அவர் சொன்ன உபதேசத்தின்படி நடந்து நடந்து பழகியவர்; இப்போது அந்தப் பழக்கமே, தன்னையறியாத ஒரு வழக்கமாக, தன் பாட்டுக்கு செய்து கொண்டிருப்பவர்.

     சாமியார் கோவில் முன்னால் வந்து, இடுப்பில் செருகியிருந்த விபூதிப் பையை எடுத்து, திருநீரை இரண்டு தோளுக்குப் பக்கமாகவும், தலையிலும் போட்டுவிட்டு,‘சிவாய நம...’ என்று தனக்குள்ளேயே கூவிக்கொண்டு பிறகு திருநீரை எடுத்து நெற்றி நிறைய பூசிக்கொண்டே, அருவியைப் பார்த்துப் போனார். ஆடைகளைக் களைந்து விட்டு, லங்கோட்டுடன் அருவியில் இறங்கி அப்படியே உட்கார்ந்தார். ‘ஓ குருநாதா... ஓம் நமச்சிவாய நமக... ஓம்சிவாய நம...’ என்று அவர் சொல்லச் சொல்ல, அப்படி அவர் சொல்வது தடைபடக் கூடாது என்பதுபோல், தலையில் விழுந்த அருவி நீர், அவர் வாய்க்குள் போகாமல் தோளிலும், மார்பிலுமாகச் சிதறியது.

     குளித்து முடித்த சாமியார் கோவிலுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் நடராஜர் சிலையையே உற்றுப் பார்த்துவிட்டு, நந்தியையும் வணங்கிவிட்டு மீண்டும் விபூதியைப் பூசிக்கொண்டு, லிங்கத்திற்கு அருகே இருந்த சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார். இாண்டு கைகளையும் மார்புடன் சேர்த்து வளைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக இருந்த உள்ளங்கைகளை அடிவயிற்றில் வைத்தபடி லேசாகக் கண்ணை மூடினார். அவர் மேனியை வியாபித்த காவியாடை நிலவொளியில் கிட்ட த்தட்ட மரப்பட்டைபோல் தோன்றியது. இன்னொரு விதத்தில் ஆசனம் போட்ட கால்களே ஆவுடையாராகவும், முதுகு லிங்கமாகவும் தெரிந்தது. சாமியாருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். உள்நோக்கிப் பாய்ந்த வயிறு. வெளி நோக்கி நிமிர்ந்த தோள்கள். நுனி சிவந்த மூக்கு. இரும்புத் தூணுக்கு சிவப்பு வர்ணம் திட்டியது போன்ற கழுத்து. குருநாதரின் ஆக்ஞையில் மேற்கொண்ட ஆசனப் பயிற்சிகள், அவர் தன் உடம்பை தானே உணர முடியாத நிலையில், உடம்புக் கூடு வேறு, அதில் உறையும் ஆன்மா வேறு என்று அவரே மிக மெல்லியதாய் அறியும் நிலையில் வைத்திருந்தன.

     கண்களை மூடிக்கொண்ட சாமியார் காதுகளிலும், அந்த காதுகள் வழியாக நெஞ்சுக்குள்ளும், எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாடிய சிவதோததிரப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அந்தப் பாடல்களின் ஒவ்வொரு வரியும், அவரை மேலே மேலே உயர்த்திக் கொண்டிருந்தது. ஆன்மா உடம்பை விட்டு விலகி, அருகே உள்ள லிங்கத்தைச் சுற்றிச் சுற்றி சுழல்வது போன்ற ஆனந்தப் பரவசம். சவத்தை விட்டு சிவத்திடம் போனது போன்ற மெய்யானந்தம், தான் வேறு, ஈசன் வேறல்ல என்ற பரசிவ நிலை. சிவதோத்திரப் பாடல்கள் காதுகளில் கச்சிதமாக ஒலித்தன.

     “பிரம்ம முராரிஸு ரார்சித லிங்கம்
     நிர்மல பாஸித சோபித லிங்கம்
     ஜன்மஜதுக்க வினாஸக லிங்கம்
     ததப்ரண மாமி சதாசிவ லிங்கம்”

     “அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்” என்ற வடலூர் வள்ளலாரின் பாடலையும், அருணகிரி நாதரின் ‘நாதவிந்துகலாதி நமோ நமோ’ என்ற பாடலையும், வானொலியில் கேட்கும் போதெல்லாம், அப்போது சென்னையில் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக இருந்த ராமையா அப்படியே மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார். சாமியாராய் மாறிய பிறகு இந்த பாடல்களைக் கேட்கப் பல தடவை ஏங்கியுமிருக்கிறார். ஒரு தடவை கோவிலுக்கு வந்த ஒருவரிடம், தன் அபிலாஷையை சிறு குழந்தையைப் போல் தெரியப் படுத்தினார். எங்கேயாவது தன்னை கூட்டிக்கொண்டு போய் இந்தப் பாடல்களை தான் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த பக்தர், சிரித்துக் கொண்டே போனார். ஒரு வாரத்தில், ஒரு டேப் ரிக்கார்டையும், இரண்டு டேப்புக்களையும் கொண்டு வந்து சாமியாரிடம் பயபக்தியோடு கொடுத்தார். ஏற்கெனவே டேப் ரிக்கார்டர் இயங்கும் விதத்தை சென்னையிலேயே தெரிந்து வைத்திருந்த சாமியார், அதைக் கொடுத்தவரை, இயக்கச்சொல்லி, நன்றாகத் தெரிந்து கொண்டார். கோவிலுக்குள் இருக்கும் போதும், குடிசைக்குள் முடங்கும்போதும், சதா இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருந்தார். இதனால், இதர நாமாவளிப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் கூட அவர் மரபுப்படி முணங்கவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. அல்லும் பகலும், இந்தப் பாடல்களைப் போட்டுப் போட்டுக் கேட்பதில், டேப்புக்கள் மட்டுமல்ல, டேப் ரிக்கார்டர் கூட தேய்ந்துவிட்டது. இன்றும் அவை ஒலிக்கும் நிலையிலேயே இருந்தாலும், சாமியாருக்கு அவை தேவைப்படவில்லை.

     இப்போது அவர் காதுகளுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் இந்தப் பாடல்கள், நினைத்த போதெல்லாம் முன்பு கேட்டதைவிட, நன்றாகத் தெளிவாக ஒலிக்கின்றன. குறிப்பாக கோவிலுக்குள் வந்து பத்மாசனம் போட்ட உடனேயே யாரோ அருகில் இருந்து பாடுவதுபோல், அவர் காதுகளில் ஒலிக்கும். சாமியார் கூட, சில சமயம் நம்பாதவர் போல் சுற்றும் முற்றும் பார்ப்பார். டேப்பில் வாங்கிய பாடல்களை நெஞ்சம் வேண்டும் போதெல்லாம் எதிரொலிக்கத் துவங்கியது. அதுவும் அசலைவிட நகல் சிறப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தால், எது அசல், எது நகல் என்பதில் கூட அவருக்கு சந்தேகம் வந்தது. இந்த அசல் - நகல் ஆராய்ச்சியே, மனிதன், கடவுளை தன்னைப்போல் நகலெடுத்தானா அல்லது கடவுள் தன் நகலை மனித உருவில் படைத்தானா என்ற வேதாந்த தத்துவத்திற்குள் இறக்கியது. “அழியாதது எதுவோ அதுவே அசல். ஆனால் ஒருவன் இறக்கிறான். அவனின் புகைப்படமே நிலைக்கிறது. இப்படி அசல் அழிவதும் நகல் நிலைப்பதுமாக இருந்தால், இந்த அசல் நகலுக்கு அப்பால் அழியாத ஒன்று இருக்க வேண்டும். அது தான் சிவமயம்... நிஜமான அசல். இந்த அசலின் நகல்தான் அத்தனையும். முற்றிலும் நகல்படுத்த முடியாதது எதுவோ அதுவே அசலான அசல். அதுவே சர்வாம்ச சிவம்” என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர், அம்மாக்காரி சொல்லிக் கொடுக்காமலே வீட்டுக்கணக்கை சரியாகப் போட்டுவிட்டு, தாயை புன்னகைத்து நெருங்கும் குழந்தையைப் போல, அவர், மரித்துப்போன குருநாதரின் காவி வேட்டியையே உற்றுப் பார்த்திருக்கிறார். பிறகு, தன்னை அறியாமலே தாரை தாரையாக வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர், தானே சிந்தித்து எடுத்த ஒரு தத்துவ முடிவைக் கேட்க அவர் இல்லாமல் போய்விட்டாரே! என்று அழுதுமிருக்கிறார்.

     சாமியாரின் மனதில் லிங்காஷ்ட பாடல்கள் முடிந்து, வள்ளலாரின் பாடலும் வந்து போய், அருணகிரிநாதரின் பாடல், டி.எம். செளந்தரராஜனின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

     “நாதவிந்துக லாதீ நமோ நம
     வேத மந்த்ர சொரூபா நமோ நம
     ஞான பண்டித சாமீ நமோ நம”

     வேத சொரூபனான முருகனை, நெஞ்சில் உருவகப் படுத்தி, அவன் கைகாட்டி அபயம் கொடுப்பதுபோல் உருவகமாக்கி, கண்களில் இருந்து பக்தி மழை பொழியப் பொழிய, பரவசத்துள் பரச்சிததாய், தன் மெய் பொய்யாக, ஞானப்பண்டிதனின் மெய்யோடு கலந்தவராய், தன்னை மறப்பதே தன்னையறிதல் என்ற தத்துவ சூட்சுமத்தில், சாமியார் சுக்கிலமாய் மாறிக் கொண்டிருந்த போது, பாறை வெடித்ததுபோல், பயங்கரமான குரல் ஒன்று கேட்டது.

     “ஏய்... ஈஸ்வரா... ஒன்கிட்ட எத்தன நாளாடா கேக்குறேன்? என் நோவக் குணப்படுத்துன்னு கூட கேட்கலே... என்னை அவஸ்தை இல்லாம சாகடின்னு சொல்லுறேன். ஏண்டா கேட்கமாட்டேங்கே... ஒன் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தணும். உன் எதிருல... தூக்குப் போட்டுச் சாகப் போறேனா... இல்லியான்னு பாருடா... தேவடியா மவனே...”

     சாமியார் திடுக்கிட்டுக் கண் விழித்தார். கோவிலுக்கு வெளியே, கத்தியதில் களைத்துப் போய் ஒரு தொழு நோயாளி நின்று கொண்டிருந்தார். உடம்பெங்கும் வெந்து போனது போன்ற சதைக் கட்டிகள். குறுகிக் கொண்டிருக்கும் அவயவங்கள். இந்த நோயாளியை, சாமியார் கடந்த ஆறு மாத காலமாகப் பார்க்கிறார். வாரத்தில் ஒரு தடவை, எப்போதாவது வருவார். அதுவும், தான் கோவிலுக்குள் இருந்தால், சற்று தொலைவில் பதுங்கி இருப்பவர் போல் இருந்து விட்டு, தான் போகும் போது, தட்டுத் தடுமாறி பயபக்தியுடன் எழுந்து கோவிலுக்கு சற்று முன்னால் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டுப் போகிறவர். அவருக்கு இன்றைக்கு என்ன வந்தது?

     சாமியார், அந்த தொழு நோயாளியையே வெறித்துப் பார்த்தார். ‘ஈஸ்வர நிந்தனை பாவம்... மகா பாவம்...’ என்று சொல்லக்கூட நினைத்து, பிறகு மெளனமாக அவரைப் பார்த்தார். ஒருவேளை தன்னைத்தான் அவர் அப்படித் திட்டினாரோ என்று நினைத்தவர் போல், சற்று மோவாயை உயர்த்திப் பார்த்தார். இதற்குள், சுய நினைவுக்கு வந்தவர்போல் தோன்றிய அந்த உருக்குலைந்த நோயாளி, கண்களால் கெஞ்சி, கைகளால் கும்பிட்டு, உடைந்த குரலில் ஒப்பாரி வைப்பது போல் பேசினார்.

     “மன்னிச்சுடு சாமீ... நானும் நடையா நடக்கேன்... இவன் சீக்கிரமா கூட்டிக்கிட்டு போகமாட்டக்கான்... ஒங்க நிஷ்டையக் கலைச்சிட்டேன்... நான் பாவி...”

     அந்த நோயாளி தன்னைத் திட்டவில்லை என்பதில் ஆறுதல் பட்டவர்போல் சாமியார், லேசாகப் புன்னகைத்தார். பிறகு, ஈஸ்வரனைத் திட்டினாலும பரவாயில்லை, தன்னைத் திட்டலாகாது என்ற எண்ணம் ஏற்பட்டதற்காக, அந்த எண்ணத்தைத் தோற்றுவித்த நெஞ்சை, கையால் குத்திக் கொண்டே ஆதங்கத்தோடு கேட்டார்.

     “நீ என் நிஷ்டையைக் கலைக்கல... ஏன்னா நான் இன்னும் நிஷ்டை நிலைக்குப் போகிற அளவுக்கு ஈஸ்வர கிருபை கிடைக்காதவன்... ஆனாலும் ஈஸ்வரனை சொல்லக்கூடாத வார்த்தையால...”

     சாமியார், நோயாளி சொன்ன வார்த்தையைச் சொல்ல முடியாமல் அவஸ்தைப் பட்டபோது, அந்த நோயாளி சகஜமாகப் பதிலளித்தார்.

     “ஈஸ்வரன அப்படிச் சொன்னா பாவமில்ல சாமீ... அவன் அனந்தன்... அப்பனும் அம்மாவும் இல்லாதவன்... இருந்தாலும்... இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன் சாமீ...”

     சாமியார் நிமிர்ந்து பார்த்தபோது அந்த நோயாளி வேகவேகமாய் நடந்து மறைந்து விட்டார். கூனிக் குறுகிச் செல்லும் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாமியார் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு, அருணகிரி நாதரின் பாடலைக் கேட்கப் போனார். அந்தப் பாடலே இப்போதும் ஒலித்தாலும், முன்போல தெளிவாக ஒலிக்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடையே, அந்த தொழு நோயாளியும் வந்தார்... அதுவும் ஈஸ்வரனை நிந்திக்கும் பேச்சோடு. திடுக்கிட்ட சாமியார், கண் திறந்து மூச்சை நிறுத்தி நிறுத்தி விட்டார். ‘அவன் கர்ம வினையை... அவன் அனுபவிக்கான்... ஈஸ்வரன் என்ன செய்வான்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு, மீண்டும் கண்களை மூடினார். முருக தோத்திரப் பாடலுக்குப் பதிலாக, ஒரு தடவை அவர் குருநாதர் உபதேசித்தது இப்போது பெரும் முழக்கத்தோடு ஒலித்தது.

     “மகனே! கர்மவினை என்று இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது. கண் முன்னாலேயே திருடிய ஒருவன் அளவுக்கு மீறி அடிபடும் போது கூட இரக்கப்படுவது மனித இயல்பு. அதுதான் ஈஸ்வரத்தன்மை. எப்போவோ ஒரு பிறவியில் ஒருவன் எதையோ செய்தான் என்பதற்காக அவன் இந்தப் பிறவியில் கர்மாவின் பலனை அனுபவிப்பான் என்று நினைத்து அப்படி அவனை அனுபவிக்க விடுவதும் அலட்சியப்படுத்துவதும் முறையல்ல. அது ஈஸ்வர திருவுள்ளமும் அல்ல...”

     சாமியாரால், கோவிலுக்குள், ஒருமித்த உள்ளத்துடன் இருக்க முடியவில்லை. ‘ஈஸ்வரா... என்னைவிட இந்த தொழுநோயாளி எவ்வளவோ மேலானவன். உன்மேல் உரிமையுடன் கோபித்து, நிந்தாஸ்துதி செய்தான். மனிதர்கள், காலனிடமிருந்து தப்புவதற்காக உன்னை தஞ்சமடையும்போது, அவனோ உன்னிடம் ‘காலனை ஏன் காட்டல...’ என்று கேட்கிறான். அந்த நோயாளிக்கு கருணை காட்டக் கூடாதா... மருந்தாகவோ அல்லது மரணமாகவோ வரப்படாதா...’

     அருவி நீர் கூடிய தடாகத்தில், ஒரு மரத்தின் கொம்பு ஒடிந்து, சலனச் சத்தம் கேட்டது.

     சாமியார் எழுந்தார். பறவைகளும் ஒலியெழுப்பத் துவங்கிவிட்டன. குடிசைக்குப் போய், அருகேயுள்ள நந்தியாவட்டச் செடிகளிலிருந்து, பூப் பறித்து மாலை தொடுக்க வேண்டும். தூரத்துக் கிராமத்தில் இருந்து, ஒரு சிறுவன் பால் கொண்டு வந்துவிடுவான். அவன் வரவும், இவர் மாலை தொடுத்து முடிக்கவும் சரியாக இருக்கும். பூஜையைத் துவக்கும் நேரமும் வந்துவிடும்.

     குடிசைப் பக்கமாகப் போன சாமியார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கையில் மாலையுடனும், சந்தனம் குவிந்த ஆலிலையுடனும் கோவிலுக்குள் வந்தார். அங்கே, கிராமத்துச் சிறுவன் பாலுடன் தயாராக இருந்தான். எளிமையான அபிஷேகம் முடிந்து லிங்கம் இன்னொரு கிழிந்த வேட்டியால் அலங்காரம் செய்யப்பட்டு, லிங்கத்திற்கு மேல் விபூதியும், விபூதிமேல் சந்தனமும், சந்தனத்திற்குமேல் குங்குமமும் வைக்கப்பட்டு, சாமியார் கற்பூரம் ஏற்றியபோது -

     “ஈஸ்வரா... நீதாண்டா கேட்கணும்... நீதான் கேட்கணும் சின்ன வயசிலேயே புருஷன பறிகொடுத்தாலும், கற்பு தவறாம நடந்தேன். கையில கழுத்துல இருந்த நகை யெல்லாம் விற்று அவரோட தம்பிங்கள படிக்க வச்சேன். இதனால, பிறந்த வீட்டு கோபத்துக்குக் கூட ஆளானேன். அதைப்பற்றிக் கவலப்படாம இருந்த என்னை... என் மச்சினன்மாரே ரெக்கை முளைச்ச தைரியத்துல அடிச்சி விரட்டிட்டாங்க... சொத்துமில்லாம... பத்துமில்லாமப் போயிட்டேன்... இந்த வயசிலே எங்கப்பா போவேன்... ஈஸ்வரா... எங்கே போவேன்?’’

     உணர்வுகளைப் போல், கிழிசல்களையே சேலையாய் அணிந்த ஒரு பெண், துக்கித்த கண்களுடன், நீர் மல்க நின்று கொண்டிருந்தாள். சாமியார் கற்பூரத்தை ஏற்றாமல் அந்த நடுத்தர வயதுப் பெண்ணையே பார்த்தார். தானே அங்கே பெண்ணாகி நிற்பதுபோல் ஒரு பிரமை. தான் மட்டுமே பட்டதாக நினைத்த ஒரு கொடிய அனுபவம், தனக்கு மட்டுமே ஏகபோகமானதல்ல என்ற நினைப்பு, ஆறுதலையும் ஆதங்கத்தையும் கொண்டுவர, அவர் மனதை நிலைப்படுத்திக் கொண்டு கற்பூரத்தை ஏற்றினார். பிறகு புற நிகழ்ச்சிகளால் தன் மனம் பாதிக்கப்படுவதை உணர்ந்து, அதை வழிப்படுத்த நினைத்தவர் போல் ஏதோ ஒரு வைராக்கியத்துடன் கண்களை மூடிக்கொண்டு, வடமொழியின் சாஸ்திரங்களிலும், தமிழ்மொழியின் தோத்திரங்களிலும் எழுந்தருளி ‘சாத்திரமும் தோத்திரமுமாய் ஆன ஈசனை’ நெஞ்சிற்குக் கொண்டுவந்து, நெஞ்சற தியானித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர் கண் விழித்துப் பார்த்தபோது, அவர் கண்கள் தானாகவே அந்த புலம்பிய பெண் இருந்த இடத்தை நோக்கின. அந்த இடமோ அவள் உட்கார்ந்த சுவடில்லாமலேயே வெறுமையாக இருந்தது. சாமியார் தன் விருப்பத்திற்கு எதிராகவே எழுந்து, கோயிலுக்கு வெளியே வந்து, சற்று நடந்து அந்தப் பெண் இருக்கிறாளா என்பதுபோல் பார்த்தார். அவளைக் காணவில்லை. மீண்டும் கோவிலுக்குள் வந்து சதுரக் கல்லில் உட்கார்ந்தார். இப்போது அவரது சொந்த அனுபவமே அவரிடம் பேசியது.



புதிய திரிபுரங்கள் : 1 2 3 4 5



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247