http://www.chennailibrary.com




ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா

     சைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திரம் என்றும், பத்தாவது சாத்திரம் என்றும், பதினொன்றாவது பிரபந்தம் என்றும் பன்னிரண்டாவது புராணம் என்றும் வழங்கப்படும். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும். திருவிசைப்பா மாலை என்று அழைக்கப் பெறும். இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப் பட்டுள்ளது. ஒன்பதாம் திருமுறையை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிஅமுதனார், புருடோ த்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும். இத்திருமுறையில் உள்ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.

1. திருமாளிகைத் தேவர் அருளியது

1. கோயில் - ஒளிவளர் விளக்கே
பண் - பஞ்சமம்

ஒளிவளர் விளக்கே! உவப்பிலா ஒன்றே!
      உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
      சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே!
      அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
      தொண்டனேன் விளம்புமா விளம்பே. 1

இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்
      இருட்பிழம்பு அறஎறிந்து எழுந்த
சுடரமணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
      தூயநற்சோதியுள்சோதீ!
அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
      அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின்றாயைத்
      தொண்டனேன் பணியுமா பணியே. 2

தற்பரம் பொருளே! சசிகண்ட! சிகண்டா!
      சாமகண்டா! அண்ட வாணா!
நற்பெரும் பொருளாய்! உரைகலந்து உன்னை
      என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத்
      தந்தபொன் அம்பலத்து ஆடி,
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
      தொண்டனேன் கருதுமா கருதே. 3

பெருமையிற் சிறுமை பெண்ணோடுஆ ணாய்என்
      பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே!
கருமையின் வெளியே! கயற்கணாள் இமவான்
      மகள்உமை யவள்களை கண்ணே!
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
      அப்பனே! அம்பலத்து அமுதே!
ஒருமையிற் பலபுக்கு உருவிநின்றாயைத்
      தொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4

கோலமே! மேலை வானவர் கோவே!
      குணங்குறி இறந்ததோர் குணமே!
காலமே! கங்கை நாயகா! எங்கள்
      காலகா லா! காம நாசா!
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்
      கோயில்கொண்டு ஆடவல் லானே!
ஞாலமே! தமியேன் நற்றவத் தாயைத்
      தொண்டனேன் நணுகுமா நணுகே. 5

நீறணி பவளக் குன்றமே! நின்ற
      நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே!
வேறணி புவன போகமே! யோக
      வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா!
      அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடியெம் ஈசனே! உன்னைத்
      தொண்டனேன் இசையுமாறு இசையே. 6




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saiva/thiruvisaippa.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க






வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.