உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா ... தொடர்ச்சி - 4 ... 7. திருவாலியமுதனார் அருளியது
1. கோயில் - பாதாதி கேசம்
பண் - பஞ்சமம்
மையல் மாதொரு கூறன் மால்விடை ஏறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே. 1 சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன் புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல் சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே. 2 குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை திரண்ட தில்லை தன்னுள் திருமல்கு சிற்றம் பலவன் மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே. 3 போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தடமல்கு சிற்றம்பலவன் சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளிர்வித்ததே. 4 பந்த பாசமெலாம்அறப் பசு பாசம் நீக்கிய பன்முனிவரோ(டு) அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன் செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் உந்திவான்கழி என்உள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே. 5 குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு மதுரமாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன் அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ் உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே. 6 படங்கொள் பாம்பனை யானொடு பிரமன் பரம்பரா! அருளென்று தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே. 7 செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன் செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு) ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே. 8 செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன் எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன் மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினுள் நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. 9 தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன் முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும் பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே. 10 தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர் ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த் தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே. 11 2. கோயில் - பவளமால்வரை
பண் - நட்டராகம்
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு நடம்புரி கின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. 1 ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச் செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே. 2 அலந்து போயினேன்; அம்பலக் கூத்தனே! அணிதில்லை நகராளீ! சிலந்தியை "அரசாள்க" என்(று) அருள்செய்த தேவதே வீசனே! உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக வுதைகொண்ட மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே. 3 அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே! அணிதில்லை நகராளீ! மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ? திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு) உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே! 4 வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்; மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. 5 தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைத்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்; ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே. 6 உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும், உண்பதும் பலிதேர்ந்து, விடைய(து) ஊர்வது, மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம் மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும் உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே. 7 அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும் பிறிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள்; பெரும்பற்றப் புலியூரில் மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே! 8 வான நாடுடை மைந்தனே! ஓஎன்பன் ஒவந்தரு ளாய்ஒ என்பன்; பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனே! என்பன்; தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூணணி மார்பனே! எனக்கருள் புரியாயே! 9 புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்ற எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனையவள் மொழியாக வரைசெய் மாமதில் மயிலையர், மன்னவன் மறைவல திருவாலி பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பணிவாரே. 10 3. கோயில் -- அல்லாய்ப்பகலாய்
பண் - இந்தளம்
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே. 1 அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே. 2 இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல் திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று) அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே. 3 சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச் சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள் நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே. 4 ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில்தோயத் தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள் வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத் தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே. 5 குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல் திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே. 6 சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை அத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்த முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக் கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே. 7 அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய்! அருளென்று துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே. 8 மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று) ஆல கண்டா! அரனே! அருளாய் என்றென்(று) அவரேத்தச் சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே. 9 நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச் செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் அடிகள் அவரை ஆருர் நம்பி அவர்கள் இசைபாடக் கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே. 10 வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும் தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத் தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப் பானோர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே. 11 4. கோயில் - கோலமலர்
பண் - பஞ்சமம்
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர் பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச் சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து) ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே. 1 காண்பதி யான் என்றுகொல் கதிர்மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச் சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறையோன் மலர்ப் பாதங்களே. 2 கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த் தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே. 3 அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின் உரிவைநல் உத்தரியம் உகந்தான் உம் பரார்தம்பிரான் புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே. 4 இறைவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே. 5 நினைத்தேன்; இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார் மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக் கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம் சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே. 6 கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த மூத்தனை மூவருவின் முதலைமுத லாகிநின்ற ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ? 7 சேர்வன்கொலோ? அன்னையீர்! திகழும்மலர்ப் பாதங்களை ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச் சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே. 8 நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த காய்சின மால்லிடையூர் கண்ணுதலைக் காமருசீர்த் தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து) ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே. 9 இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே. 10 திருச்சிற்றம்பலம்
8. புருடோத்தம நம்பி அருளியது
1. கோயில் - வாரணி
பண் - பஞ்சமம்
வாரணி நறுமலர் வண்டு கிண்டு பஞ்சமம் செண்பக மாலைமாலை வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திவைநம்மை மயக்குமாலோ; சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்; ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்? ஆவியின் பரம்என்றன் ஆதரவே. 1 ஆவியின் பரம்என்றன் ஆதரவும் அருவினை யேனைவிட்டு அம்மஅம்ம பாவிவன் மனமிது பையவே போய்ப் பனிமதிச் சடையான் பாலதாலோ; நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும் நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே ஆவியின் வருத்தம் இதாரறிவார் அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே! 2 அம்பலத் தருள்நடம் ஆடவேயும் யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம் உம்பர்கள்வன்பழி யாளர்முன்னே ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்; வன்பல படையுடைப் பூதஞ்சூழ வானவர் கணங்களை மாற்றியாங்கே என்பெரும் பயலமை தீரும்வண்ணம் எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே! 3 எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக் கொழுந்தது வாகிய கூத்தனே! நின் குழையணி காதினில் மாத்திரையும் செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும் செங்கனி வாயும்என் சிந்தைவெளவ அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ? அரும்புனல் அலமரும் சடையினானே! 4 அரும்புனல் அலமரும் சடையி னானை அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள் பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும்; என் பேதை நெஞ்சம் கருந்தட மலர்புரை கண்ட! வண்டார் காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்; திருந்திய மலரடி நசையி னாலே தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே! 5 தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத் தேறிய அந்தணர் சிந்தை செய்யும் எல்லைய தாகிய எழில்கொள் சோதி! என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்! பல்லையார் பசுந்தலை யோ(டு) இடறிப் பாதமென் மலரடி நோவ நீபோய் அல்லினில் அருநடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே. 6 ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே அந்தணர் மதலைநின் அடிபணியக் கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக் குரைகழல் பணிகொள மலைந்த தென்றால் ஆரனி? அமரர்கள் குறைவி லாதார்; அவரவர் படுதுயர் களைய நின்ற சீருயி ரே! எங்கள் தில்லை வாணா! சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 7 சேயிழை யார்க்கினி வாழ்வரிது; சிற்றம் பலத்தெங்கள் செல்வ னே! நீ தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்; தனிமையை நினைகிலை; சங்க ரா! உன் பாயிரம் புலியதள் இன்னுடையும் பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு) ஏயிவள் இழந்தது சங்கம் ஆவா! எங்களை ஆளுடை ஈச னேயோ. 8 எங்களை ஆளுடை ஈசனையோ இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற் பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப் பனிமதி நிலவதென் மேற்படரச் செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து அங்குன பணிபல செய்து நாளும் அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே. 9 அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை; மருள்படு மழலைமென் மொழிவுமையாள் கணவனை வல்வினை யாட்டி யேனான் அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா! ஆசையை அளவறுத் தார் இங் காரே? 10 ஆசையை அளவறுத் தார்இங் காரே? அம்பலத்(து) அருநடம் ஆடு வானை வாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல் மாசிலா மறைபல ஓது நாவன் வன்புரு டோ த்தமன் கண்டு ரைத்த வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை அணைவர் தாமே. 11 2. கோயில் - வானவர்கள்
பண் - பஞ்சமம்
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம் ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ? தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர் நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. 1 ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை சூடிவருமா கண்டேன்; தோள்வளைகள் தோற்றாலும் தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர் ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே. 2 ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர்அம்பால் பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார் சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர் கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே! 3 ஆரே இவைபடுவார்? ஐயங் கொளவந்து போரேடி என்று புருவம் இடுகின்றார் தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர் தீராநோய் செய்வாரை ஓக்கின்றார்; காணீரே. 4 காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம் சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர் பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன் ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே! 5 ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர் வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே. 6 ஆவா! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன் மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர் தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர் கோவா? இனவளைகள் கொள்வாரோ? என்னையே. 7 என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன் மன்னும் முடிகள் நெரித்த மணவாளர் செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர் முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே. 8 முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்; சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர் கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே. 9 நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச் சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர் ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! 10 ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும் கண்ணுதலான் தன்னைப் புருடோ த்தமன் சொன்ன பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார் எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே. 11 திருச்சிற்றம்பலம்
9. சேதிராயர்
கோயில் - சேலுலாம்
பண் - பஞ்சமம்
சேலு லாம்வயல் தில்லையு ளீர்! உமைச் சால நாள்அயன் சார்வதி னால்இவள் வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று மால தாகும்என் வாணுதுலே. 1 வாணு தற்கொடி மாலது வாய்மிக நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச் சேணு தற்பொலி தில்லையு ளீர்! உமை காணில் எய்ப்பிலள் காரிகையே. 2 காரி கைக்(கு)அரு ளீர்; கரு மால்கரி ஈரு ரித்தெழு போர்வையி னீர்! மிகு சீரி யல்தில்லை யாய்சிவ னே! என்று வேரி நற்குழலாள் இவள்விம்முமே. 3 விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள் செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள் அம்மல் ஓதி அயர்வுறுமே. 4 அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோ! எனை உயவுன் கொன்றையுந் தார்அருளாய்எனும் செயலுற் றூர்மதில் தில்லையு ளீர்! இவண் மயலுற் றாள்என்றன் மாதிவளே. 5 மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று) ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யே! எனும் சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை வாதித் தீர்! என்மடக் கொடியையே. 6 கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம் பிடியை என்செய்திட் டீர்! பகைத் தார்புரம் இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்!என்று முடியும் நீர்செய்த மூச்சறவே. 7 அறவ னே! அன்று பன்றிப் பின்ஏகிய மறவ னே! எனை வாதைசெய் யேல்எனும் சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்! எனும் பிறைகு லாம்நுதற் பெய்வளையே. 8 அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக் கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்; தென்ற லார்பொழில் தில்லையு ளீர்! இவள் ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே. 9 ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை நாய னாரை நயந்துரை செய்தன தூய வாறுரைப் பார்துறக் கத்திடை ஆய இன்பம்எய் தியிருப்பரே. 10 திருச்சிற்றம்பலம்
சேந்தனார்
அருளிய
திருப்பல்லாண்டு
கோயில் - மன்னுக
பண் - பஞ்சமம்
மன்னுக தில்லை! வளர்கநம் பத்தர்கள்! வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1 மிண்டு மனத்தவர் போமின்கள்; மெய்யடியார்கள் விரைந்து வம்மின்; கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து; அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2 நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து) அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநிழற் பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3 சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்! சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4 புரந்தரன் மாலயன் பூசலிட்(டு) ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய் இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5 சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்கும்திசை திசையென கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழா மாய் நின்று கூத்தாடும் ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமார் பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6 சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்; பெற்றதார் பெறுவார் உலகில்? ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்(கு)ஆட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7 சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமு ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8 பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9 தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10 குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின் மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11 ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12 எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. 13 திருச்சிற்றம்பலம்
|