பார்வதி, பி.ஏ. - Parvathi B.A. - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





1

     “எதுவோ, இல்லைன்னு வருகிறவர்களுக்கு ஒரு வேளை சோறு போடலாம். கையிலே கிடைச்சதைக் கொடுத்து, இன்னம் இரண்டிடம் பாரென்று சொல்லலாம். அதற்கு மேலே நாம் என்ன செய்ய முடியும்? செய்ய நாம் என்ன சூணாம்பேடா, நெறும்பூரா, விட்டலாவரமா? நமக்கு ஏது அவ்வளவு சொத்து? பெரிய பெரிய ஜெமீன் வைத்திருக்கிறவங்க, எச்சைக் கையாலே காக்காய் ஓட்டமாட்டேனென்கிறார்கள். நான் ஏதோ, என் சக்தியானுசாரம் தர்மம், உதவி செய்து கொண்டு தான் வருகிறேன். ஆகையினாலே, என்கிட்ட நீ ஒண்ணும் எதிர்பார்த்துப் பயனில்லை” - காலை எட்டு மணிக்குக் கலியாண செலவுக்கு ஏதாவது பொருள் உதவ வேண்டுமென்று கெஞ்சின கணக்குப்பிள்ளை கபாலமூர்த்திக்கு, மிராசுதார் ஆலாலசுந்தரம் இப்போதனை புரிந்து அனுப்பினார்.

     காலை பதினொரு மணிக்கு, மிராசுதாரின் தூரபந்து ஓர் கிழவர், தள்ளாடி நடந்து பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தார்.

     “பெரிய எழவாப் போயிடுத்து! இது என்ன அன்ன சத்திரமா? ஓயாமடமா? இப்படி வருகிறவர்களுக்கு வடித்துக் கொட்டிக் கொண்டிருந்தா, என் தலை மொட்டையாக வேண்டியதுதான். எங்கே வந்தானாம் கிழவன்? கூழ்கூடச் செய்யவில்லையே இன்று. போகச் சொல்லு, வேறே எங்காவது; இன்னக்கி பஜனை கோவிலிலே என்னமோ விசேஷமாம். சோறு போடுகிறார்களாம். அங்கே போய்த் தின்னச் சொல்லு.”

     இது, மிராசுதாரரின் உத்தரவு! கிழவர், “சிவனே, எந்த ஜென்மம் எடுத்தாலும் எடுக்கலாம். ஏழை ஜென்மம் மட்டும் கூடாதடா அப்பா! என்னமோ, நம்ம பாத்தியக்காரனாச்சே, போனா ஒரு வேளை சோறு போட மாட்டானான்னு வந்தேன். பிச்சைக்காரருடன் போய்ச் சாப்பிடச் சொன்னான். சுகமா வாழட்டும். ஒரு வேளைச் சோறு இல்லைன்னா உயிரா போயிடும்! போனாத்தான் என்ன? இப்படிச் சீரழிவு படுவதை விடச் சாவதே மேல்” என்று சோகித்துக் கூறிவிட்டு, கிழவர், கோயிலிலே போய்ப் படுத்துக் கொண்டிருந்து விட்டு, பட்டினியுடன் போராடினார்.

     மாலை ஐந்து மணிக்கு மகேசுவரர் கோயிலிலே மிராசுதாரரின் பேருக்கு அர்ச்சனை நடந்தது. பக்தி கொண்டவர்கள் அவருடைய பகவத் சேவையைப் பாராட்டினர். இரவு 9 மணிக்கெல்லாம் மிராசுதாரர், தாசி தமயந்தி வீட்டிலே வெள்ளித் தாம்பாளத்திலே இருந்த வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொண்டு பொழுது போக்காக நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். வேடிக்கையாட்டத்திலே நாற்பது ரூபாய் வரை போய்விட்டது. ஜெயித்தது, தமயந்தியின் தங்கை ஜெயா! ஆகவே நஷ்டமல்ல அது! என்றைக்கேனும் ஒரு நாள் உதவும்!! அட்வான்ஸ்சு தொகை!!

     இது போல் பணம் கேட்டால் இல்லை, சோறு கேட்டால் கிடையாது என்ற லோபித்தனமும், ஊர் மெச்சிக் கொள்ள பக்தி வேடமும், லீலைக்குப் பொருள் விரயமும் செய்வதே மிராசுதாரரின் நித்ய கர்மானுஷ்டானமாக இருந்தது. அவருடைய ஈரமற்ற நெஞ்சைப் பற்றி உரக்கப் பேசவும் ஊராரால் முடியாது. பெரிய இடத்துப் பகை நமக்கேன் என்ற பயம்! பணக்கோட்டையிலே, அவர் இருந்து வந்தார். அவரைக் கண்டிக்க எவருக்கும் முடிவதில்லை. ஊரிலே ந்த வியாபாரியும் அவருடைய ஆதரவு இருந்தால் தான் வாழ முடியும்! எங்கு எந்த நிலம் விற்பனைக்கு வந்தாலும் அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்த பிறகே மற்றவர்கள் பேசுவார்கள். அவ்வளவு செல்வாக்கு!! அந்த ஊருக்கு அவர் தான் ராஜா! அவர் உரத்த குரலிலே என்ன சொல்கிறாரோ, அதுதான் சட்டம்.

     மந்திராலோசனை மன்றத்திலே அவரோடு சேர்த்து மூன்றே பேர்: தாசி தமயந்தி, கோயில் குருக்கள் குமரகுருபரர், அவர். தமயந்தியின் தாயாருக்கும் குமரகுருபரருக்கும் பாலியத்திலே சிநேகிதம். அதன் பயனாகத்தான் தமயந்திக்கு மிராசுதாரின் தயவு கிடைத்தது. இந்த மந்திராலோசனை மன்றத்திலே ஆகும் தீர்ப்பை, அந்த ஊரிலே யாராலும் மாற்ற முடியாது. யாராவது முணமுணத்தால் அவர்கள் மீது திடீரென்று சிவிலோ, கிரிமினலோ கேஸ் கிளம்பும். அவர்கள் பாடு ஆபத்துத்தான்!

     இவ்வள்வு சொத்துக்காரராக இருந்த அந்தச் சீமானுக்குப் பிள்ளை குட்டியும் கிடையாது. யாரோ, இவர் பாடுபட்டு, ஊரை மிரட்டி, சேர்க்கும் பொருளை, ஆண்டு அனுபவிக்கப் பல்லை விளக்கிக் கொண்டே இருந்தார்கள். தமயந்தியோ மிராசுதாரரின் காலம் தீருவதற்குள் கறந்தால் உண்டு. அவர் கண்ணை மூடிக் கொண்டால், தனக்கு ஒன்றும் கிடைக்காது என்ற உண்மையை உணர்ந்தவள்.

     மிராசுதாரருக்கு இன்ன வியாபாரம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாது. எதெது மலிவாகக் கிடைக்குமோ அவைகளை வாங்குவார்; கிடங்குகளில் சேர்ப்பார்; மார்க்கட்டிலே அந்தப் பொருள் கிடைப்பது கஷ்டமாகி மக்கள் தவிக்கும் வரையிலே, வெளியே விடமாட்டார். கிடைத்தால் போதும், என்ன விலைக்கு வேண்டுமானாலும் வாங்கித்தானே தீர வேண்டும் என்ற நிலைமை வரும் போது அந்தப் பொருளை விற்க ஆரம்பிப்பார். கொள்ளை இலாபம் என்று கூற வேண்டுமா? எத்தனையோ ஏழைகளின் கண்ணீர் படிந்தது அவரிடம் குவிந்த பணம் அந்தக் கண்ணீரென்ன, வெள்ளி ரூபாயின் மதிப்பைக் குறைக்குமா? தங்கத்தின் மாத்துக் குறையும்படி செய்யுமா? பணம் பேசவா போகிறது அவரிடம்?

     எட்டிக் கொட்டை முதல் எலுமிச்சம் பழம் வரையிலே, இலுப்பைப் பிண்ணாக்கு முதல் இஞ்சி வரையிலே, எது கிடைத்தாலும் மலிவு என்றால் வாங்குவார். விலை ஏறினதும் விற்பார். மிராசுதாரரின் செல்வம் பெருகியதும், அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள பிரதேசம் பாழாகிக் கொண்டு ஏழைகள் அதிகரித்ததிலும், ஆச்சரியமென்ன இருக்க முடியும்? உடலிலே காசநோயிருப்பின், ஆள் இளைக்காமல் இருக்க முடியுமா?

     மிராசுதாரரின் சொத்துக்குப் பல் விளக்கிக் கொண்டிருந்த பார்த்திபன், வெளியூரிலேயே விவேகிகள் கழகம் என்று ஓர் நிறுவனம் வைத்துக் கொண்டு, தலைவனாக முயன்று கொண்டிருந்தான். தலைமைப் பதவி தனவந்தனாகப் போகும் தனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கு என்று அவன் நினைத்ததிலே தவறென்ன இருக்க முடியும்? அவன் புகழ் பெறுவது கேட்டு, முதலிலே மிராசுதாரர் பயந்தார். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டால், நம்மை இவன் மதிப்பானா என்று. மிராசுதாரரிடம், மிக மரியாதையாக முதலிலே நடந்து கொண்ட பார்த்திபன் நாளாகவாக, சொத்து நிச்சயம் தனக்குத்தான் என்பதைப் பிரபல வக்கீல்கள் கூறிடம் கேட்டு, மிராசுதாரரைப் பற்றி தன் நண்பர்களிடம் அலட்சியமாகவே பேசி வரலானான். மிராசுதாரருக்கு அவன் மன நிலையும் நண்பர்களிடம் அவரைப் பற்றி அவன் பேசுவதும் என்ன தெரியும்!

     “சுத்தப் பட்டிக்காடு! மகா பேராசை! ஊரிலே ரொம்பக் கெட்டப் பேர்! என் முகத்துக்காக அவரைப் பற்றி பத்திரிகைகள் கண்டிக்காமலுள்ளன. ஈவு இரக்கமே கிடையாது.” - இவைகள் மிராசுதாரருக்கு, பார்த்திபன் தந்து வந்த அர்ச்சனைகள் - நண்பர்களிடம்.

     இரண்டு பேருக்கும் உள்ளூர மூண்டு வந்த பகையை, குருக்கள் மோப்பம் பிடித்தார். அவருடைய மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இந்தப் பகையை வளர்த்து விட வேண்டும். இருவரும் சந்தேகப்பட முடியாதபடி! இந்தப் பிளானில் அவர் வேலை செய்தார். ஜெயாவுக்கு வேறு பிளான்! மிராசுக்கு வாரிசாக வரப்போகிற வாலிபன் கிடைத்துவிட்டால்... இந்தத் தேன் நினைப்பு ஜெயத்துக்கு. இந்த இடுக்கிக்குள் சிக்கியிருப்பது சீமானுக்குத் தெரியாது.

     விவேகிகள் சங்கத் தலைவர், சண்டமாருதப் பிரசாரம் செய்யலானார், நீதியின் அவசியத்தைப் பற்றி சமூக நீதி. அரசியல் நீதி என்று ஆரம்பமாகி, பொருளாதார நீதியிலே புகுந்தது பிரசாரம். “எல்லா பேதங்களையும் அதிகமாக வளர்ப்பது பொருளாதார பேதந்தான். எத்தகைய விடுதலை கிடைத்தாலும், கானல் நீராகவே முடியும். பொருளாதார பேதம் ஒழியா விட்டால்” என்று பார்த்திபன் பேசுவான். திரள் திரளான மக்கள் வாழ்த்துவர், வணங்குவர். பார்த்திபனுக்கு ஜே போடுவர். அவர் ஒரு பேச்சு சொன்னால் போதும், ஊரைக் கலக்கி விடுவோம் என்று கூறவும் ஓர் கூட்டம் தயாராகி விட்டது. பத்திரிகைகள் பார்த்திபன் புகழைப் பாராட்டுவது கண்டு பூரித்த சீமான், பிறகு அவனது செல்வாக்கு என்னும் சண்டமாருதம், தன் போன்றோரைத் தாக்கும், அவ்விதமான பிரசாரத்தினால் என்பதைக் கண்டு கலங்கினார். இரண்டோர் முறை இதமாகச் சொன்னார். “இந்தக் காலத்திலே இவ்விதம் பேசினால்தான் இனிக்கும்” என்று இளித்துக் கொண்டே. பார்த்திபன் சமாதானம் கூறுவான். மிராசுதாரர், “என்னமோ தம்பி! நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பேசணும். நீ ஒரு உயர்ந்த அந்தஸ்துக்கு வரவேண்டியவன் பாரு” என்று எச்சரிக்கை செய்து வந்தார். பார்த்திபனுக்கொன்றும் சமதர்ம வேட்கை கிடையாது! சுலபமாகத் தலைவனாக அந்தச் “சுருதி”யை உபயோகித்தான். அது பிறகு சுருக்குக் கயிறாகுமோ என்ற சிந்தனை கிடையாது. பார்த்திபனின் பிரசங்கத்தால் புரட்சி வீரனானான் குமார் என்ற ஏழைக் குடியானவன். எங்கெங்கு பார்த்திபன் பிரசங்கம் நடந்தாலும், எப்படியாவது போய்விடுவான், அதைக் கேட்க. பார்த்திபன், “ஆகவே நண்பர்களே! இந்தப் பொருளாதார பேதம் ஒழியா முன்னம் நம் நாடு சீர்படாது. நாம் வாழ முடியாது. முதலாளித்தனம் ஒழிய வேண்டும்” என்று தீப்பொறி பறக்கப் பேசும் போது, குமாரைப் பார்க்க வேண்டும்! குதிப்பான், கூவுவான், கைதட்டுவான். “பாட்டாளிக்குப் பாடுபடும் பார்த்திபனுக்கு ஜே” என்ற கோஷம் அரை பர்லாங்கு கேட்கும், அடிவயிற்றிலிருந்து வரும் குமாருக்கு!! ஒரு நாள் பார்த்திபனின் பிரசங்கத்தைக் கேட்ட பூரிப்போடு, வீடு நுழைந்த குமார் தன் வயோதிகத் தகப்பனார் வாட்டத்தோடு இருக்கக் கண்டான். குமாரின் தகப்பனார், தன் குடும்பக் கஷ்டத்தை மகனிடம் சொல்லுவதில்லை. அவன் மனத்தை ஏன் புண்ணாக்க வேண்டுமென்று. அன்று சொல்ல வேண்டி இருந்தது.

     “அப்பா குமார்! நாளைக் காலையிலே எங்கேயும் வெளியே போய்விடாதே, வேலை இருக்கிறது.”

     “என்ன வேலையப்பா?”

     “நாளைக்கு ஒரு பத்திரம் எழுதணும், நீயும் கையெழுத்துப் போடணும்.”

     “பத்திரம் எதற்கு?”

     “அடயேண்டா! வயிற்றெரிச்சலைக் கிளப்பறே. நம்ம நிலம், வீடு, எல்லாத்தையும் மிராசுதாரனுக்கு விக்கிரயம் செய்யறேன். அந்தப் பத்திரந்தான். உனக்கென்ன தெரிஞ்சது? அவன்கிட்ட பட்ட கடன் வட்டியும் அசலும் சேர்ந்து நம்ம மானத்தை வாங்குவதற்குள் நாமாகவே, கடனைக் கொடுத்தவனுக்குச் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு, கையைக் காலைப் பிடித்துக் கொண்டு இந்த வீட்டிலேயே நாங்கள் குடிக்கூலிக்கு இருக்கிறோமென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டால் மனசு இரங்கும்! பார்க்கணும், பகவான் எந்த வழி விடுகிறாரோ?”

     குமாரின் உடல் பதறிற்று. கண்களிலே நீர் ததும்பிற்று. தனது குடும்ப நிலைமையை உணராமல், குன்று போல் வளர்ந்து விட்டதை எண்ணித் துக்கித்தான். வெட்கமடைந்தான். அன்றிரவு அவன் பட்ட வேதனை சொல்லுந் தரமன்று. “ஆகா! பார்த்திபன் கூறும் திட்டம் இருந்தால், நமக்கு இத்தகைய கதியா ஏற்படும்?” என்று எண்ணிப் பதைபதைத்தான்.

     பத்திரத்திலே கையொப்பமான பிறகு, குமாரின் தகப்பனார், அடியற்ற நெடுமரம் போல், மிராசுதாரரின் காலில் விழுந்து, “தர்மப் பிரபு! இந்த ஒரு தயவு செய்ய வேண்டும். மூன்று தலைமுறையாக அந்த வீடு எங்களுக்குச் சொந்தம். மாதாமாதம் பூ மேலே வைத்துக் குடிக்கூலி கொடுத்து விடுகிறேன். அதிலே குடித்தனம் செய்ய உத்தரவு தரணும்” என்று கெஞ்சினார். கிழவர் மிராசுதாரர் காலில் விழுந்த போது, குமாருக்கு நெஞ்சிலே நெருப்பு விழுவது போலே இருந்தது. விழுந்த ஆளை அலட்சியமாக எண்ணி, வெள்ளித் தாம்பளத்திலிருந்து வெள்ளை வெற்றிலையை எடுத்து, கிளாஸ்கோ மால் துணியிலே துடைத்து கலர் சுண்ணாம்பு தடவி வாயிலே போட்டு மென்றபடி, மிராசுதாரர், “அதுக்கென்னையா இப்போ அவசரம் முழுகிடுத்தா? எழுந்திரு, எழுந்திரு. கடன் கொடுத்தா, இவ்வளவு தான். காலில் விழுவது. கள்ளக்கும்பிடு போடுவது, கெஞ்சுவது போதும்; வீடு விக்கிரயம் ஆனதற்குக் கொஞ்ச நாளாவது அதை நீ காலி செய்யணும். அப்போதுதான் அது விக்கிரயமானவர்களுக்கு சுவாதீனமாகும். பிறகு பார்ப்போம் போ” என்று மிராசுதாரர் கூறிய போது, குமார் தன் மனதிலே எண்ணியதை மட்டும் வாய்விட்ட்டுச் சொல்லியிருந்தால் சட்டம் அவனைச் சுக்குநூறாக்கியிருக்கும்.




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247