-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 3 ...

2.21. திருக்கழிப்பாலை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

219  புனலா டியபுன் சடையாய் அரணம்
       அனலா கவிழித் தவனே அழகார்
       கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
       உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 2.21.1

220  துணையா கவொர்தூ வளமா தினையும்
       இணையா கவுகந் தவனே இறைவா
       கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
       இணையார் கழலேத் தவிடர் கெடுமே. 2.21.2

221  நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
       முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
       கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
       அடியார்க் கடையா அவலம் மவையே. 2.21.3

222  எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
       வளிகா யமென வெளிமன் னியதூ
       ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
       களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 2.21.4

223  நடநண் ணியொர்நா கமசைத் தவனே
       விடநண் ணியதூ மிடறா விகிர்தா
       கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
       உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 2.21.5

224  பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
       மறையார் தருவாய் மையினா யுலகிற்
       கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
       இறையார் கழலேத் தவிடர் கெடுமே. 2.21.6

225  முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
       கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
       எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
       கதிரும் வினையா யினஆ சறுமே. 2.21.7

226  எரியார் கணையால் எயிலெய் தவனே
       விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
       கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
       உரிதா கிவணங் குவனுன் னடியே. 2.21.8

227  நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
       கனலா னவனே கழிப்பா லையுளாய்
       உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
       கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 2.21.9

228  தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
       துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
       அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
       உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 2.21.10

229  கழியார் பதிகா வலனைப் புகலிப்
       பழியா மறைஞா னசம்பந் தனசொல்
       வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
       கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 2.21.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பால்வண்ணநாதர்
தேவி - வேதநாயகியம்மை

2.22. திருக்குடவாயில்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

230  திகழுந் திருமா லொடுநான் முகனும்
       புகழும் பெருமான் அடியார் புகல
       மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
       நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.1

231  ஓடுந் நதியும் மதியோ டுரகம்
       சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
       கூடுங் குழகன் குடவா யில்தனில்
       நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.2

232  கலையான் மறையான் கனலேந் துகையான்
       மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
       கொலையார் சிலையான் குடவா யில்தனில்
       நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.3

233  சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
       நலமென் முலையாள் நகைசெய் யநடங்
       குலவுங் குழகன் குடவா யில்தனில்
       நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.4

234  என்றன் உளமே வியிருந் தபிரான்
       கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
       குன்றன் குழகன் குடவா யில்தனில்
       நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.5

235  அலைசேர் புனலன் னனலன் னமலன்
       தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
       கொலைசேர் படையன் குடவா யில்தனில்
       நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.6

236  அறையார் கழலன் னமலன் னியலிற்
       பறையாழ் முழவும் மறைபா டநடங்
       குறையா அழகன் குடவா யில்தனில்
       நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.7

237  வரையார் திரள்தோள் அரக்கன் மடிய
       வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
       வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
       வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.22.8

238  பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
       தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
       கொன்னற் படையான் குடவா யில்தனில்
       மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.22.9

239  வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
       பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
       குயிலன் குழகன் குடவா யில்தனில்
       உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 2.22.10

240  கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
       நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
       தடமார் புகலித் தமிழார் விரகன்
       வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 2.22.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கோணேசுவரர்
தேவி - பெரியநாயகியம்மை

2.23. திருவானைக்கா

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

241  மழையார் மிடறா மழுவா ளுடையாய்
       உழையார் கரவா உமையாள் கணவா
       விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
       அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 2.23.1

242  கொலையார் கரியின் னுரிமூ டியனே
       மலையார் சிலையா வளைவித் தவனே
       விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
       நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 2.23.2

243  காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
       பாலோ டுநெய்யா டியபால் வணனே
       வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
       ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 2.23.3

244  சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்
       உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே
       விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே
       அறமிக் கதுவென் னுமெனா யிழையே. 2.23.4

245  செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
       அங்கட் கருணை பெரிதா யவனே
       வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
       அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 2.23.5

246  குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
       தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
       வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
       நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 2.23.6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.23.7

247  மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
       தொலையவ் விரலூன் றியதூ மழுவா
       விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
       அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 2.23.8

248  திருவார் தருநா ரணன்நான் முகனும்
       மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
       விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
       அரவா எனும்ஆ யிழையா ளவளே. 2.23.9

249  புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
       ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
       மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
       அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 2.23.10

250  வெண்நா வலமர்ந் துறைவே தியனை
       கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்
       பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
       விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 2.23.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சம்புகேசுவரர்.
தேவி - அகிலாண்டநாயகியம்மை

2.24. திருநாகேச்சரம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

251  பொன்னேர் தருமே னியனே புரியும்
       மின்னேர் சடையாய் விரைகா விரியின்
       நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
       மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 2.24.1

252  சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
       உறவார் கணையுய்த் தவனே உயரும்
       நறவார் பொழில்நா கேச்சர நகருள்
       அறவா எனவல் வினையா சறுமே. 2.24.2

253  கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
       வில்லான் எழில்வே வவிழித் தவனே
       நல்லார் தொழுநா கேச்சர நகரில்
       செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 2.24.3

254  நகுவான் மதியோ டரவும் புனலும்
       தகுவார் சடையின் முடியாய் தளவம்
       நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
       பகவா எனவல் வினைபற் றறுமே. 2.24.4

255  கலைமான் மறியுங் கனலும் மழுவும்
       நிலையா கியகை யினனே நிகழும்
       நலமா கியநா கேச்சர நகருள்
       தலைவா எனவல் வினைதான் அறுமே. 2.24.5

256  குரையார் கழலா டநடங் குலவி
       வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
       நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
       அரைசே எனநீங் கும்அருந் துயரே. 2.24.6

257  முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
       கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
       நடையார் தருநா கேச்சர நகருள்
       சடையா எனவல் வினைதான் அறுமே. 2.24.7

258  ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
       நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
       வாயா ரவழுத் தவர்நா கேச்சரத்
       தாயே எனவல் வினைதான் அறுமே. 2.24.8

259  நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
       சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
       நடுமா வயல்நா கேச்சர நகரே
       இடமா வுறைவா யெனஇன் புறுமே. 2.24.9

260  மலம்பா வியகை யொடுமண் டையதுண்
       கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
       நலம்பாவியநா கேச்சர நகருள்
       சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே. 2.24.10

261  கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
       தலமார் தருசெந் தமிழின் விரகன்
       நலமார் தருநா கேச்சரத் தரனைச்
       சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே. 2.24.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - செண்பகாரணியேசுவரர்
தேவி - குன்றமுலைநாயகியம்மை

2.25. திருப்புகலி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

262  உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
       அகலி யாவினை யல்லல் போயறும்
       இகலி யார்புர மெய்த வன்னுறை
       புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.25.1

263  பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
       கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
       புண்ணி யன்னுறை யும்பு கலியை
       நண்ணு மின்னல மான வேண்டிலே. 2.25.2

264  வீசு மின்புரை காதன் மேதகு
       பாச வல்வினை தீர்த்த பண்பினன்
       பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
       பேசு மின்பெரி தின்ப மாகவே. 2.25.3

265  கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
       படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
       பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
       அடிகளை யடைந் தன்பு செய்யுமே. 2.25.4

266  பாதத் தாரொலி பல்சி லம்பினன்
       ஓதத் தார்விட முண்ட வன்படைப்
       பூதத் தான்புக லிந்ந கர்தொழ
       ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 2.25.5

267  மறையி னான்ஒலி மல்கு வீணையன்
       நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
       பொறையி னானுறை யும்பு கலியை
       நிறையி னாற்றொழ நேச மாகுமே. 2.25.6

268  கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
       இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
       பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
       பரவி டப்பயில் பாவம் பாறுமே. 2.25.7

269  அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
       விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
       பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
       இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 2.25.8

270  மாலும் நான்முகன் றானும் வார்கழற்
       சீல மும்முடி தேட நீண்டெரி
       போலு மேனியன் பூம்பு கலியுள்
       பால தாடிய பண்ப னல்லனே. 2.25.9

271  நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
       ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
       நின்ற வன்னிக ழும்பு கலியைச்
       சென்று கைதொழச் செல்வ மாகுமே. 2.25.10

272  புல்ல மேறிதன் பூம்பு கலியை
       நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
       சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
       கில்லை யாம்வினை இருநி லத்துளே. 2.25.11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

2.26. திருநெல்வாயில்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

273  புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
       மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
       நடையி னால்விரற் கோவ ணந்நயந்
       துடையி னாரெம துச்சி யாரே. 2.26.1

274  வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
       தாங்கி னார்தலை யாய தன்மையர்
       நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
       ஓங்கி னாரெம துச்சி யாரே. 2.26.2

275  நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
       இச்சை யாலுறை வாரெம் மீசனார்
       கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
       இச்சை யாரெம துச்சி யாரே. 2.26.3

276  மறையி னார்மழு வாளி னார்மல்கு
       பிறையி னார்பிறை யோடி லங்கிய
       நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
       இறைவ னாரெம துச்சி யாரே. 2.26.4

277  விருத்த னாகிவெண் ணீறு பூசிய
       கருத்த னார்கன லாட்டு கந்தவர்
       நிருத்த னாரநெல் வாயில் மேவிய
       ஒருத்த னாரெம துச்சி யாரே. 2.26.5

278  காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
       பேரி னார்பிறை யோடி லங்கிய
       நீரி னாரநெல் வாயிலார் தொழும்
       ஏரி னாரெம துச்சி யாரே. 2.26.6

279  ஆதி யாரந்த மாயி னார்வினை
       கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
       நீதி யாரநெல் வாயி லார்மறை
       ஓதி யாரெம துச்சி யாரே. 2.26.7

280  பற்றி னான்அரக் கன்க யிலையை
       ஒற்றி னாரொரு கால்வி ரலுற
       நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
       பெற்றி யாரெம துச்சி யாரே. 2.26.8

281  நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
       கூடி னார்குறு காத கொள்கையர்
       நீடி னாரநெல் வாயி லார்தலை
       ஓடி னாரெம துச்சி யாரே. 2.26.9

282  குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
       பண்ட மாகவை யாத பண்பினர்
       விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
       உண்ட கண்டரெம் உச்சி யாரே. 2.26.10

283  நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
       சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
       பண்ப யன்கொளப் பாட வல்லவர்
       விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 2.26.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - அரத்துறைநாதர்
தேவி - ஆனந்தநாயகியம்மை

2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

284  குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
       திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
       நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
       துலவி னான்அடி யுள்க நல்குமே. 2.27.1

285  குறைவி லார்மதி சூடி யாடவண்
       டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
       இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்
       துறைவி னான்றனை யோதி உய்ம்மினே. 2.27.2

286  என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
       நம்பன் நான்மறை பாடு நாவினான்
       இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
       தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 2.27.3

287  நாச மாம்வினை நன்மை தான்வருந்
       தேச மார்புக ழாய செம்மையெம்
       ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
       கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 2.27.4

288  மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
       பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
       இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
       தருவி சூடிடும் அடிகள் வண்ணமே. 2.27.5

289  வெண்ணி லாமதி சூடும் வேணியன்
       எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
       அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்
       துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே. 2.27.6

290  கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
       பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
       அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
       உடைய வாண ருகந்த கொள்கையே. 2.27.7

291  எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
       அடர்த்த தோர்விர லான வனையாட்
       படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்
       முடித்த லம்முற முயலும் இன்பமே. 2.27.8

292  பூவி னானொடு மாலும் போற்றுறுந்
       தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
       பாவி யாதெழு வாரைத் தம்வினை
       கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 2.27.9

293  கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
       விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
       எட்ட னைநினை யாத தென்கொலோ
       சிட்ட தாயுறை யாதி சீர்களே. 2.27.10

294  கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
       இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
       தந்த மில்லியை யேத்து ஞானசம்
       பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே. 2.27.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமி - நீலாசலநாதர்
தேவி - நீலாம்பிகையம்மை

28 திருக்கருவூரானிலை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

295  தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
       சுண்ட லாருயி ராய தன்மையர்
       கண்ட னார்கரு வூரு ளானிலை
       அண்ட னாரரு ளீயும் அன்பரே. 2.28.1

296  நீதி யார்நினைந் தாய நான்மறை
       ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
       காதி னார்கரு வூரு ளானிலை
       ஆதி யாரடி யார்தம் அன்பரே. 2.28.2

297  விண்ணு லாமதி சூடி வேதமே
       பண்ணு ளார்பர மாய பண்பினர்
       கண்ணு ளார்கரு வூரு ளானிலை
       அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 2.28.3

298  முடியர் மும்மத யானை யீருரி
       பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
       கடியு ளார்கரு வூரு ளானிலை
       அடிகள் யாவையு மாய ஈசரே. 2.28.4

299  பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
       மங்கை யர்மணி நீல கண்டர்வான்
       கங்கை யர்கரு வூரு ளானிலை
       அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 2.28.5

300  தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
       மேவர் மும்மதி லெய்த வில்லியர்
       காவ லர்கரு வூரு ளானிலை
       மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 2.28.6

301  பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
       பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
       கண்ணி னார்கரு வூரு ளானிலை
       நண்ணி னார்நமை யாளும் நாதரே. 2.28.7

302  கடுத்த வாளரக் கன்க யிலையை
       எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
       அடர்த்த வன்கரு வூரு ளானிலை
       கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 2.28.8

303  உழுது மாநிலத் தேன மாகிமால்
       தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
       கழுதி னான்கரு வூரு ளானிலை
       முழுது மாகிய மூர்த்தி பாதமே. 2.28.9

304  புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
       பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
       பத்தர் சேர்கரு வூரு ளானிலை
       அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 2.28.10

305  கந்த மார்பொழிற் காழி ஞானசம்
       பந்தன் சேர்கரு வூரு ளானிலை
       எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
       சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 2.28.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமி - பசுபதீசுவரர்
தேவி - கிருபாநாயகியம்மை

2.29 திருப்புகலி - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

306  முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
       பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
       துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
       சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.29.1

307  வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
       பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
       புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
       தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 2.29.2

308  பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
       நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
       பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
       தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 2.29.3

309  மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
       கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
       செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
       தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 2.29.4

310  முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
       பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
       புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
       செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 2.29.5

311  வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
       அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
       கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
       தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 2.29.6

312  நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
       வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
       பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
       செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 2.29.7

313  பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
       அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
       நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
       செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 2.29.8

314  கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
       ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
       நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
       தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 2.29.9

315  கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
       குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
       பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
       செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.29.10

316  செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
       அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
       பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
       வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 2.29.11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

317  மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
       நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
       திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்
       கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய். 2.30.1

318  விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்
       தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
       எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
       பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய். 2.30.2

319  விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
       திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
       பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
       புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய். 2.30.3

320  வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
       துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
       உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
       புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய். 2.30.4

321  பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
       கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
       சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
       விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே. 2.30.5

322  அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
       நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
       தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
       புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய். 2.30.6

323  மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
       அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
       திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
       புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய். 2.30.7

324  இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
       உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
       வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
       புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய். 2.30.8

325  வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்
       கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
       தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
       புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய். 2.30.9

326  விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
       உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
       படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
       அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே. 2.30.10

327  கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்
       தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
       சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
       பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே. 2.30.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சாட்சிவரதநாதர்
தேவி - கரும்பன்னசொல்லம்மை



இரண்டாம் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5