எமது தளத்தில் அனைத்து நூல்களையும் இலவசமாக படிக்கலாம்.
பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!

ரூ.590 (3 வருடம்) | ரூ.944 (6 வருடம்) | புதிய உறுப்பினர் : Paul Raj | உறுப்பினர் விவரம்

எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்
      

வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD


4

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்? ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும், ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்?'

     "உங்களுக்கு என்ன வந்தது? அடுத்தவர்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும் வெறுப்பதும் தான் இலக்கியக் குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? என்னவோ?" -

     -துளசி அறையிலிருந்து வெளியேறிச் சென்ற பின்பும் நீண்ட நேரம் இந்தக் கேள்வி சுகுணனின் செவிகளிலும் மனத்திலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

     -'இவளை நான் மறக்க வேண்டும். அல்லது இவள் என்னை மறக்க வேண்டும்! இந்தப் பாழாய்ப்போன மனித வாழ்க்கையில் சில உணர்ச்சிகளில் ஏமாறினாலோ, ஏமாற்றப்பட்டாலோ, அந்த உணர்வையும் அதிலடைந்துவிட்ட ஏமாற்றத்தையும் மறப்பதற்கு வேறு மாற்றுணர்வே கிடைப்பதில்லை. அதில் காதலும் ஒன்று போலும்' - என்று இப்படி அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு இன்னும் சில அச்சகத்து ஊழியர்களோடு வந்து எதிரே நின்றார்.


Curious Lives
Stock Available
ரூ.270.00
Buy

ஒரு நாள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மனிதனும் மர்மங்களும்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

புயலிலே ஒரு தோணி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கங்காபுரிக் காவலன்
இருப்பு உள்ளது
ரூ.630.00
Buy

நூல் பதிப்பித்தல்
இருப்பு உள்ளது
ரூ.13000.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

பித்தப்பூ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

சோளகர் தொட்டி
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

The Greatest Miracle In The World
Stock Available
ரூ.160.00
Buy

அக்கடா
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ரகசியக் கடிதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

ராட்சசி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

கிராமத்து தெருக்களின் வழியே...
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

இலக்கணத் தொடக்கம்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

ஆரோக்கிய பெட்டகம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

காவல் கோட்டம்
இருப்பு இல்லை
ரூ.770.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

பித்தப்பூ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy
     எதையோ வேண்டி, ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருகிற நிலையில் இப்போது அவர்கள் வந்து நிற்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. சில சமயங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்றோ சொற்பொழிவு செய்ய வேண்டுமென்றோ கேட்க வருகிறவர்கள் இப்படிப்பட்ட தயக்கத்தோடுதான் வருவது வழக்கம்.

     சுகுணன், நாயுடுவின் முகத்தைப் பார்த்தான். பேச வந்ததைப் பேசலாமே என்று எதிரே நிற்பவரின் சொல்லை வரவேற்பது போன்ற புன்முறுவலொன்று அவன் இதழ்களில் மலர்ந்தது.

     "கொழந்தை புறப்பட்டுப் போயிடிச்சுங்களா?" என்று துளசியைப் பற்றி விசாரித்தார் நாயுடு.

     இந்தக் கேள்வியைப் பெரிதாக இலட்சியப்படுத்திப் பதிலும் சொல்ல விரும்பாமல் ஒரேயடியாக அலட்சியப்படுத்திப் பதில் சொல்லாமலிருக்கவும் விரும்பாமல், 'பக்கத்து அறைக்குப் போயிருக்கிறாள்' என்று சொல்வது போல் 'காலை மலர்' சர்மாவின் அறைப்பக்கமாகக் கையைச் சுட்டிக் காண்பித்தான் அவன். நாயுடு அதோடு விடவில்லை. மேலும் கேட்டார்.

     "கொழந்தை மறுபடி இங்கே வருங்களா?"

     "வரவேண்டிய அவசியமோ காரியமோ ஒன்றுமில்லை. ஆனால் வந்தாலும் வரலாம்."

     சிறிது நேரத் தயக்கத்திற்கும், மௌனத்துக்கும் பிறகு நாயுடு மீண்டும் மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

     "உங்க கிட்டத்தான் ஒரு காரியமா வந்தோம் சார்..."

     "சொல்லுங்க... என்ன காரியம்?"

     "கொழந்தைக்கும், மாப்பிள்ளைக்கும் வர ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாங்க பிரஸ் ஒர்க்கர்ஸ் எல்லாரும் உட்லண்ட்சிலே ஒரு விருந்து கொடுக்கலாம்னு எண்ணியிருக்கோம்..."

     "ரொம்ப சரி! செய்ய வேண்டியதுதான்..."

     "அதுக்கு..."

     "அதுக்கு...?..."

     "நீங்க தான் தலைமை வகிக்கணும்."

     இந்த ஒரே வாக்கியத்தை - இந்த ஒரே வேண்டுகோளை நாயுடுவோடு கூட வந்திருந்த எல்லாருமே சேர்ந்து 'கோரஸ்' பாடுவது போல் ஒன்றாகச் சொல்லி வேண்டினார்கள்.

     மறுபடியும் மறுபடியும் நான் விலக விரும்பிய வழிக்கே தன்னை இழுத்துக் கொண்டு போக வருகிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் அந்தரங்கமாகச் சபித்தவாறே அந்த வெறுப்பின் காரணமாக ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் மலைத்துப் போய் மௌனமான துயரம் உள்ளே வெதும்ப, அது வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க முயன்றபடி அவர்கள் முகத்தை ஒவ்வொன்றாக ஏறிட்டும் பார்க்கலானான் சுகுணன்.

     அந்தக் காரியாலய அச்சகத்தின் கம்போஸிங் (அச்சுக் கோத்தல்), ப்ராஸஸ் (பிளாக்குகள் தயாரித்தல்), பைண்டிங் ஆகிய எல்லாப் பிரிவுகளிலும் முதன்மைப் பணியாளர்களாயிருந்த எல்லா ஃபோர்மெனும் நம்மாழ்வார் நாயுடுவோடு இதற்காக அவனை அழைக்க வந்திருக்கிறார்கள்.

     வெளிப்படையான அறிகுறிகளோ பழக்கவழக்கங்களோ இல்லாமல் இருவர் மனத்தளவில் மலர்ந்த காதல் கருகினால் அந்த வாட்டமும் ஏமாற்றமும் கூட இந்த உலகத்துக்குத் தெரிவதில்லை. வெறும் கதாசிரியனாகவும், கலகலப்பாகப் பழகக்கூடிய நவநாகரிகப் பெண்களின் கூட்டத்திலிருந்து ஒரு வெறும் இரசிகையாகவும் அவனும் அவளும் பழகினது போலப் பாவித்துக் கொண்டு அல்லவா அவளுடைய திருமணப் பாராட்டு விருந்திற்கு அவனையே தலைமை தாங்க அழைக்கிறார்கள்?

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்? ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் ஒரு பெரிய பூட்டுத் தொங்குகிறது. ஆனால் அந்தக் கடினமான பூட்டைத் திறந்து பார்க்கும் சாவி வேறு எங்கோ இருக்கிறது. பூட்டைக் கொண்டிருப்பவர் ஒரு புறமும், திறவுகோலையுடையவர் ஒரு புறமுமாகப் பிரிவதும் விலகுவதும் வாழ்க்கை வீதியில் இயல்பாயிருக்கலாம். ஆனால் அந்தப் பூட்டிய மனத்தை மற்றவர்கள் உடைத்துப் பார்க்க வருவது தான் வேதனையான காரியம்' என்பதைச் சுகுணன் அந்த வேளையில் மிக நன்றாக உணர்ந்தான்.

     "திருமண விருந்துதானே இது? விருந்திற்குத் தலைமை தாங்கக் கூட ஒருவர் அவசியம் தானா நாயுடு?" என்று அவன் கேட்டதை அடக்கத்தினாலும் விநயத்தினாலும் அவனிடமிருந்து வெளிவந்த வார்த்தைகளாக அவர்கள் எடுத்துக் கொண்டு மேலும் அவனது சம்மதத்தை எதிர்பார்த்து வற்புறுத்தித் தயங்கி நின்றார்களே ஒழிய உள்ளே அவன் மனம் படும் வேதனையை அவர்களால் உணர முடியவில்லை. விருந்து முடிந்ததும் மாலை போடுவதும் மாலை போட்டு முடிந்ததும் நவநாகரிகப் பூச்சூடலாகிய வார்த்தை மலர்களைச் சொற்பொழிவுகளாகத் தொடுத்துப் பேசுவதும் தவிர்க்க முடியாதவை என்பதை அவன் அறிவான். ஆயினும் தனக்கு வேதனை தரக்கூடிய அந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியினாலேயே அவன் அப்படிப் பேசினான். அவர்களோ விடவில்லை. கடைசியாக இன்னொரு சாக்கைச் சொல்லித் தப்பிக்க முயன்றான் அவன்.

     "இந்த மாதிரி விருந்துக்கும், திருமண வாழ்த்துக்கும் வேறு யாராவது வயதானவர்கள் தலைமை வகித்தால் நன்றாயிருக்குமே? நீங்கள் 'காலை மலர்' ஆசிரியர் சர்மாவையோ 'டைம்ஸ்' நாயரையோ கூப்பிட்டால் என்ன" -

     "அதெப்படிங்க? நாங்கள் உங்களைத்தான் கூப்பிடறோம். நீங்களே வந்தாத்தான் நல்லாயிருக்கும்."

     சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையிலிருந்தான் சுகுணன். இதற்கு மேலும் பிடிவாதமாக அதிலிருந்து தப்ப முயலுகிற கோழைத்தனத்தை அவன் செய்யவில்லை. திருமண விருந்துக்கு தலைமை வகிப்பதாக ஒப்புக் கொண்டு அவர்களை அனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் காரியாலயத்தில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மறுபடி அவன் அறைக்கு வந்தாள் துளசி. வந்தவள் ஆர்வத்தோடு அவனிடம் ஒன்று வேண்டினாள்:

     "உங்கள் தொடர்கதையின் அடுத்த வாரப் பகுதி கையெழுத்துப் பிரதியாயிருந்தாலும், அச்சான ஃபாரமாயிருந்தாலும் உடனே எனக்குப் படிக்க வேண்டும்..."

     "வெளிவர வேண்டிய பாரம் அச்சாகிவிட்டது. ஆனால் அச்சான பாரம் இங்கு எடுத்து வைக்கவில்லை. அதற்கும் அடுத்த வாரத்துக் கதைப் பகுதியை நானே இன்னும் எழுதவில்லை.

     "இதென்ன? எப்போது இந்த டீ டவராவைக் கொண்டு வந்து வைத்தார்கள்? குடிக்கவே இல்லையா? மறந்து விட்டதா?" என்று அவன் மேஜை மேல் கவனிக்கப்படாமல் ஆறிப் போயிருந்த தேநீரைக் காண்பித்துக் கேட்டாள் துளசி.

     "மறந்திருக்கும்! அதனால் என்ன இப்போது?" என்று அலட்சியமாக அந்த டவரா-டம்ளரை எடுத்து ஜன்னல் வழியே, ஏதோ ஒரு வெறுப்போடு அதிலிருந்து தேநீரை வெளியே ஊற்றினான் ச்குணன். அவனுடைய அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்.

     "காண்டீன் பக்கமாகப் போய் பையனைச் சூடாக வேறு தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?"

     "எனக்கு வேண்டியதில்லை. ஒருவேளை உனக்குத் தேவையானால் சூடாக வரவழைத்துக் கொள்ளலாம்..."

     "இப்போது எனக்குத் தேவை தேநீர் அல்ல. உங்கள் தொடர்கதையின் வெளிவரப் போகும் பகுதி தான் வேண்டும்..."

     "ஃபோர்மெனிடம் கேள்! தருவார்."

     முன்பெல்லாம் அச்சான முதல் ஃபாரத்தை அவளுக்காக அவன் எடுத்து வைத்துக் கொடுப்பது வழக்கம். இன்று அப்படிச் செய்யவில்லை. அவளே விரைந்து போய் ஃபோர்மெனிடம் வாங்கி வந்தாள். அப்போது மாலை மணி ஐந்து இருக்கும். அவள் வீட்டிற்குப் போய் வருவதாக விடைபெற்ற போது அவன் அமைதியாக விடை கொடுத்து அனுப்பினான். எப்போதும் ஆதரவாக வாசல் வரை - கார்க் கதவு வரை போய் அனுப்புவது வழக்கம். இன்று அதையும் செய்யவில்லை. செய்ய முடியாது, செய்வதும் நன்றாயிராது. ஆனால் செய்யும்படி ஒரு நிர்ப்பந்தம் வந்து சேர்ந்தது. அவள் அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் அறையில் டெலிபோன் மணி அடித்தது. "துளசி இருந்தால் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். அவள் கணவர் ஏதோ சினிமாவுக்கு முதல் ஆட்டம் டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்" - என்று அவள் தந்தை நாகசாமி ஃபோன் செய்தார்.

     சுகுணன் உடனே காரியாலய முகப்புவரை விரைந்து போய் அங்கே காரில் புறப்படத் தயாராயிருந்த துளசியிடம் கையைக் காண்பித்துக் காரை நிறுத்தி அதை அப்படியே தெரிவித்தான். கணவன் சினிமா டிக்கெட்டோடு வீட்டில் காத்திருப்பதாக அவன் வந்து தெரிவித்ததைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் இரண்டு கணம் ஸ்டியரிங்கில் கை வைத்தபடியே இருந்தாள் அவள். பிறகு கீழே இறங்கி ஒரு கணம் நின்றாள்.

     சுகுணனோ தகவலைத் தெரிவித்துக் கடமை முடிந்து விட்டது போல விரைந்து உள்ளே திரும்பி விட்டான். சந்திக்காமலிருந்த சில நாட்களை விட இன்று சந்தித்த பின்பே இருவருக்கும் இடையே அதிகத் தொலைவும் பிரிவும் பிறந்து விட்டது போன்ற உணர்வுடன் இருவரும் பிரிந்தனர்.

     கார் திரும்பியபோது உள்ளே வேகமாக விரையும் அவன் உருவை அவள் ஒரு வினாடி பார்த்தாள். கண்களில் நீர் பனித்தது. ஓர் இயந்திரம் போல் அவள் கால் இயங்கி வேக விசையை மெல்ல அழுத்தியது. கார் நகர அவளும் சென்றாள்.

     ஐந்தரை மணியளவில் சுகுணனும் காரியாலயத்திலிருந்து திருவல்லிக்கேணியில் அறைக்குப் புறப்பட்டு விட்டான்.

     முதல் நாளிரவு இரயிலில் உறக்கம் விழித்துப் பயணம் செய்ததனால் மிகவும் சோர்வாக இருந்தது. மனத்தின் சோர்வுகளும் உடலின் சோர்வுகளுமாக இருண்டும் சேர்ந்து அவனை வாட்டின. ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்து மாலையிலோ, இரவிலோ அறைக்குத் திரும்பியதும், இரண்டாவதாக ஒரு முறை குளிப்பது அவன் வழக்கம். கடுங் கோடைக்காலமாக இருந்து வெப்பம் அதிகமாக வாட்டினாலோ நடுப்பகல் இடைவேளையின் போது கூடக் குளிப்பதற்காகவே அறைக்கு வந்து திரும்புவதுமுண்டு. உடம்பில் வெம்மையோ, வேர்வையோ, கசகசகளைப் போக்கி, நறுமணம் கமழும் ஈரச் சந்தனத்தைப் போல் குளிரக் குளிர வைத்துக் கொள்வது அவனுக்கு மிக விருப்பமான காரியம். அன்றோ குளிக்க வேண்டுமென்று நினைப்பது கூடச் சோர்வாயிருந்தது. பல்லாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவது போல மனத்தில் ஏதோ ஒரு நுட்பமான வலி இசிவெடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் வழக்கப் படுத்திக் கொண்டுவிட்ட நல்லொழுக்கங்களின் மேல் அவனுக்கிருந்த பிடிவாதத்தின் காரணமாக அறைக்கு வந்ததும் முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்தான்.

     அதிக வசதிகள் இல்லாத அந்தச் சிறிய அறையைத் தூய்மையாகவும் வைத்துக் கொள்வதில் சுகுணனுக்குப் பிரியம் அதிகம். ஊதுவத்திக் குழலில் மீதமிருந்த கடைசி ஊதுவத்தியும் கொளுத்திவிட்டுப் பாயை விரித்துக் கீழே அமர்ந்து சொந்தமாக வந்திருந்த சில கடிதங்களுக்குப் பதிலெழுதலானான். பி.இ.இன். மகாநாட்டிற்கு டெல்லி வருமாறு கடிதம் போட்டிருந்த நண்பன் தவமணிக்கும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் பெடரேஷனுக்காகக் கல்கத்தாவிலிருந்து கோஷ் எழுதியிருந்த கடிதத்துக்கும் பதில் எழுதி முடித்த பிறகு, 'ஓய்விருக்கும் போது கிராமத்துக்கு வந்து தன்னோடு சில நாட்கள் தங்கிவிட்டுப் போக வேண்டுமென்று' - எழுதியிருந்த சகோதரிக்கும் மறுமொழி வரைந்தான். அடுத்த வார பூம்பொழில் 'இலக்கியமேடை' கேள்வி - பதில் பகுதிக்கு வந்திருந்த கேள்வி கடிதங்களை ஒன்றாக அடுக்கிக் கட்டி எடுத்து வந்திருப்பது ஞாபகம் வந்தது. அவற்றை எடுத்து சிலவற்றிற்குப் பதில் எழுதினான். மனம் தனிமையாக, எல்லாவற்றிலும் விடுபட்டுத் தளர்ந்தது போல் உணரும் வேளைகளில் நிறைக் கடிதங்களை எழுதி முடித்தது போலத் தோன்றும்.

     மிகவும் குறுகலான பெரிய தெரு என்ற சிறிய வீதியில் இரவும் மனிதர்களும் கவிந்து உலாவத் தொடங்கி விட்டனர்.

     நாலு வீடு தள்ளியிருந்த மெஸ்ஸிற்குப் போய் இரவு உணவை முடித்துக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பினான். அறைக்குள் வசதிகளுக்குப் பஞ்சமானாலும் காற்றுக்குப் பஞ்சமில்லை. படுக்கையில் புரண்டபடி நீண்ட நேரம் எதை எதையோ தொடர்புடனும் தொடர்பின்றியும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டு அயர்ந்து உறங்கிப் போனான் சுகுணன்.

     மறுநாளும் அதற்கடுத்த நாளும், பத்திரிகை வேலைகளில் மூழ்கினான் அவன். நடுவில், 'படங்கள் சரியாக விழாததனால் திருமணப் புகைப்படங்கள் எதையும் போட வேண்டாமென்று' துளசியே அபிப்ராயப்படுவதால் அப்படியே விட்டு விடுவது நல்லதென்று, பத்திரிகை அதிபர் நாகசாமி அவனுக்கு ஃபோன் செய்து தெரிவித்தார். அவளுடைய திருமணப் படத்தை முதல் பக்கத்தில் பார்டர் கட்டி போட வேண்டுமென்று அவர் தனக்குக் கட்டளையிட்ட போது கடமையை ஏற்று எப்படி அதை வரவேற்றுச் செயல்பட்டானோ, அதே போல இப்போதும் படத்தைப் போட வேண்டாமென்ற இந்தச் செய்தியையும் கடமையுணர்வோடு கேட்டுக் கொண்டான் அவன். ஆனால் இதெல்லாம் துளசி தனது மன வேதனையைத் தவிர்ப்பதற்காகச் செய்யும் காரியங்கள் என்பது அவனுக்கே புரிந்துதானிருந்தது. அவள் அலுவலகத்தில் தனக்கு முன்பே படத்தைக் கிழித்தெறிந்த போதும், வேறு நல்ல படம் தருவதாக ஃபோர்மென் நாயுடுவிடம் பொய் கூறிய போதுமே - இது இப்படித்தான் நடக்குமென்று அவன் அநுமானம் செய்திருந்தான். கடைசியில் அது அப்படியே நடந்தது.

     துளசியும், மாப்பிள்ளையும் கோடைக்கானல் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுச் சனி இரவு அங்கிருந்து புறப்பட்டு ஞாயிறு காலையில் தான் சென்னை வருவதாகக் கேட்டுவிட்டு ஞாயிறு மாலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் அச்சக ஊழியர்கள். இப்போது அவர்களுடைய கோடைக்கானல் பயணம் நின்று போன தகவல் தெரிந்ததும் வெள்ளிக்கிழமை மாலையே விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் அன்றே அவன் தலைமை வகிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். சுகுணன் அதற்கும் மறுக்கவில்லை. துயரமோ, ஏமாற்றமோ, தன்னைக் கோழையாக செய்துவிடக் கூடாதென்று தன் மனத்துக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக் கொண்டு திருமணப் பாராட்டுக் கூட்டத்துக்குப் போய்வர ஒப்புக் கொண்டிருந்தான் அவன்.

     தன்னை வேண்டுமென்றே மிக மிக வஞ்சகமான முறையில் பழிவாங்குவதற்காகவே அவன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறானோ என்று துளசிக்கு உள்ளூற ஒரு பயம் தோன்றினாலும் தோன்றலாம். அவனுடைய கதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சில அன்பர்களின் திருமணங்களுக்குத் தலைமை தாங்க அவன் போயிருக்கிறான். அதைப் போலவே இதையும் ஒரு மேடை நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்து விட்டுத் தன் அந்தரங்க உணர்ச்சிகளை மனத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டு வந்துவிட அவனால் முடியும். ஆனால் இதில் மிக மிகப் பரிதாபத்துக்குரியவள் துளசி தான். விருந்தில் அவன் சாதாரணமாகப் பேசுவதெல்லாம் கூட அவளைக் குத்திக் காட்டிப் பேசுவது போல் அவளுக்குத் தோன்றலாம். அவன் ஒன்றுமே பேசாமல் இருந்தாலோ அதுவும் ஒரு விகல்பமாகவே தோன்றும். முதலில் அச்சக ஊழியர்கள் அளிக்கும் அந்த விருந்திற்கு அவன் தலைமை வகிக்கப் போகிறான் என்பதே அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாயிருக்கும். அதை வைத்துக் கொண்டும் அவள் என்னென்னவோ நினைக்கலாம். கற்பனை செய்யலாம். ஆனால் இவற்றை எல்லாம் நினைத்து அவன் தயங்கவோ, தளரவோ, அவசியமில்லை.

     'சமூக வாழ்வில் ஆண்களுக்குச் சில பொது வசதிகள் இருக்கின்றன. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் முகம் சிவக்க நாணாமல், கூசாமல், பயப்படாமல் நிற்க ஆணுக்கு ஒரு வசதி இருக்கிறது. 'பெருமையும் வலிமையும் ஆண்மைக்கு உரியன; அச்சமும் மடமும் நாணமும் பெண்மைக்கு உரியன' என்று இவற்றுக்குக் குண எல்லை வகுத்த பழைய இலக்கண ஆசிரியர்கள் எத்தனை கவனமாக எத்தனை நிச்சயமாக எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படி அந்த இலக்கணத்தை வகுத்திருக்கிறார்கள்!' என்று அவர்களை ஒரு கணம் சிந்தனையில் நினைத்து வியந்தான் சுகுணன்.

     வெள்ளிக்கிழமையன்று மாலை நான்கு மணிக்கே அலுவலகத்திலிருந்து அறைக்குப் புறப்பட்டுப் போய் விட்டான் சுகுணன். குளித்து உடை மாற்றிக் கொண்டு அறையிலிருந்து நேரே உட்லண்ட்சுக்கு வந்து விடுவதாக அவன் மற்றவர்களிடம் சொல்லியிருந்தான். விருந்து முடிந்ததும் மணமக்களைப் பாராட்டி சர்மா, டைம்ஸ் நாயர் இன்னும் சில அச்சக ஊழியர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் சொற்பொழிவாற்ற இருப்பதாக ஃபோர்மென் நாயுடு முன்பே சுகுணனிடம் தெரிவித்திருந்தார். இத்தகைய நிகழ்ச்சிகளால் திருமணங்கூட ஒரு வெளிப் பகட்டுச் சடங்காகி விடுவதை அவன் உணர்ந்து சலித்திருந்தாலும் இந்தத் திருமண விருந்தில் அந்தச் சலிப்பைக் கூட அவன் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமலிருந்தது.

     ஆறு மணிக்கு ஒரு டாக்ஸியில் போய் உட்லண்ட்ஸில் இறங்கி விருந்து நடக்கும் பகுதிக்குள் நுழைந்த போது துளசியும் அவள் கணவனும் உட்பட எல்லாருமே வந்து கூடியிருந்தார்கள். துளசியோடும் அவள் கணவனோடும், நாயரும், சர்மாவும், ஃபோர்மென் நாயுடுவும் அருகிலமர்ந்து ஏதோ சிரிப்புக் கலகலக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுகுணன் அருகில் வந்ததும் அவனை மரியாதை செய்து வரவேற்கும் பாவனையில் துளசி எழுந்து நின்றாள். ஃபோர்மென் நாயுடுவும் எழுந்து வரவேற்றார். முறையையும் பொது நாகரிகத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல் துளசி தன் கணவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர் நீட்டிய கையை ஏமாறவிடாமல் அவனும் புன்முறுவலோடு பற்றிக் குலுக்கினான். அப்போது அவன் நினைத்தான்:

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்?'

     எல்லாரும் இருக்கைகளில் அமர்ந்த பின் சில விநாடிகள் வரை ஒருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

     "சார் தான் தமிழில் நம்ம துளசியோட ஒரே ஃபேவரிட் ஆசிரியர்" என்று எதையாவது பேச வேண்டுமென்பதற்காகச் சொல்லுபவர் போல் குறுக்கிட்டுக் கூறினார் சர்மா.

     மனத்தின் சத்திய ஆழத்திலிருந்து பிறக்காமல் வெறும் நாக்கு நுனியிலிருந்து உதிர்ந்த அந்தப் போலிப் புகழ் வார்த்தைகள் சுகுணனின் செவிகளில் அபஸ்வரமாக ஒலித்தன. 'துளசியின் ஃபேவரிட் ஆசிரியன்' -அவன் தான் என்பது உண்மையாயினும் சர்மா அதை வெளியிட்ட விதம் அந்தச் சூழ்நிலையில் போலியாக ஒலித்தது. விருந்துக்காக வரிசை வரிசையாய் நாற்காலிகள் போடப் பட்டு அவர்கள் அமர்ந்திருந்த திறந்த புல்வெளியிலிருந்து மேலே தெரிந்த வானத்தில் அப்போதே மினுமினுக்கத் தொடங்கிவிட்ட ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பராக்குப் பார்க்கலானான் சுகுணன்.

     சிறிது நேரத்தில் விருந்து தொடங்கியது. மேடையில் முக்கியமான நடு இடத்தில் துளசியும் அவள் கணவனும் பிரதம விருந்தினர்களாக அமர்ந்த பின் அவர்களுக்கு வலது பக்கம் சுகுணனும், இடது பக்கம் சர்மா, நாயர் முதலியவர்களும் அமர்ந்து கொண்டார்கள். அச்சக ஊழியர்கள், உழைக்கும் பத்திரிகையாளர்கள், யார் எந்த விருந்தோ கூட்டமோ நடத்தினாலும் அதற்குப் பத்திரிகை அதிபர் நாகசாமி சில காரணங்களால் வருவது வழக்கமில்லை என்பது நன்றாகத் தெரிந்தும், "அப்பா வரலியாம்மா?" என்று துளசியிடம் சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்டு வைத்தார் சர்மா. வரவில்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தாள் துளசி.

     விருந்து தொடங்கியது. அந்த அருமையான விருந்தில் இரசித்துச் சாப்பிட முடியாதவர்கள் இருவர் இருந்தனர். ஒருத்தி துளசி, இன்னொருவன் சுகுணன். திட்டமிடாமல் சேர்ந்த இயற்கையாய்த் துளசியின் வலது புறம் சுகுணனும், சுகுணனின் இடது புறம் துளசியுமாக அமர்ந்திருந்ததால் ஒருவர் நிலையை மற்றொருவர் நன்றாக உணர முடிந்தது. அவளுடைய கூந்தலின் மல்லிகை அவனருகே மணந்தது. அவளுடைய சரீரத்தின் இங்கிதமான நளின நறுமணங்கள் அவனுக்கு மிக அருகே கிளர்ந்தன. அவளுடைய கைகளின் வளைகள் அவனுக்கு மிக அருகே ஒலித்தன. வெண்ணெய் திரண்டாற் போன்ற அவளது அந்தப் பளிங்கு முழங்கை அவனுக்கு மிக அருகே இயங்கியது. ஆயினும் அவன் எங்கோ கண்ணுக்கெட்டிய வான மூலையில் மின்னிய ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேளையில் துளசியின் வீணைக் குரல் ஒலித்தது.

     "என்ன இது? ஒன்றுமே சாப்பிடாமல் எங்கோ பாராக்குப் பார்க்கிறீர்கள்?"

     "வர வர ருசியே போய் விட்டது..." - என்று ஏதோ நகைச்சுவையாகப் பதில் சொல்வது போல் அவன் கூறிய வார்த்தைகள் அவளைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அந்த வார்த்தைகளில் அடியுண்டு விழுந்த அவள் இரண்டு விநாடி மௌனத்திற்குப் பின் பதில் சொன்னாள்:

     "அதெப்படி? நீங்கள் தலைசிறந்த கதாசிரியர்! எல்லா நல்ல ருசிகளும் உங்கள் பேனாவிலிருந்துதான் பிறக்க வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் தவம் கிடக்கிறோம். உங்களுக்கே ருசி போய்விட்டதென்றால்..." என்று சொல்லி விட்டு அந்தச் சொற்களின் ஆழத்தை மூடி மறைக்க மேலாக ஒரு புன்னகையும் புரிந்தாள் துளசி.

     அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் பக்கமாகத் திரும்பிக் கண்களைச் சிலகணம் அவள் முகத்தில் ஊன்றி ஒரு பார்வை பார்த்தான் சுகுணன். அந்தப் பார்வை அவள் பேச்சையும் சிரிப்பையும் அப்படியே கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டது.

     விருந்து முடிந்தது. ஃபோர்மென் இரண்டு பெரிய ரோஜாப் பூ மாலைகளை அவன் கையில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மாலைகளில் ஒன்றைத் துளசியின் கைகளிலும், மற்றொன்றை மாப்பிள்ளையின் கைகளிலும் கொடுத்து அவர்களே ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளும்படி செய்தான் சுகுணன்.

     துளசியின் மெல்லிய விரல்கள் அந்த மாலையைத் தன் கைகளிலிருந்து வாங்க நடுங்குவதை அவன் கவனித்தான். அதைத் தன் கைகளிலிருந்து வாங்கும் போது அவள் கழுத்தும் தோள்களும், தலையும் ஏன் அப்படிக் குழைந்து குனிந்து தயங்கின? அவளையும் அறியாமல் அவனிடமிருந்து அந்த மாலையைத் தன் கழுத்திலேயே ஏற்றுக் கொள்ள அவள் சரீரம் இயற்கையாகக் குழைகிறதா? சில பூக்கள் தென்றல் உராய்ந்ததும் மலருவதுண்டாமே! இன்னும் சில பூக்கள் கைகள் பட்டால் மலருவதுண்டாமே!

     'பாழும் கடவுளே! மனம் என்பதை ஏன் தான் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்! ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும் ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்!'

     மாலை மாற்றிய கைகளோடு முகத்தில் இருந்த சிரிப்புப் பூச்சை மேலாகப் பிரித்தெடுத்துவிட்டு அடியிலிருந்த அசல் சோகத்தை மட்டுமே காண முடிந்தாற் போன்ற முகத்தோடு துளசி பதறி நிற்கையிலே, "நான் ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற குறை இனிமேல் உனக்கு இருக்காதே துளசி?" என்று சர்வ சாதாரணமாக நகைச்சுவையோடு கேட்பது போல் அவளை ஒரு கேள்வி கேட்டான் சுகுணன். அதை எல்லாரும் - மாப்பிள்ளையும் கூடச் சிரித்து கைதட்டி வரவேற்றார்கள்.

     துளசியின் முகத்திலோ அந்தக் கேள்வியை அவன் கேட்ட போது ஏற்கெனவே இருந்த பூச்சுச் சிரிப்பும் மறைந்து விட்டது. அந்த முகத்தில் இருந்து பொதுவான மகிழ்ச்சியையும் துடைத்தெறிந்துவிட்டது அவனுடைய அந்தக் கேள்வி.

     மேடைகளில் பேசிப் பேசிப் பழகிய அனுபவமும், துணிவும், அவனை அந்தத் திருமண விருந்துக் கூடத்தில் நன்றாக நாடகம் ஆட வைத்தன.

     திடீரென்று தன்னை எல்லாரிலும் மிகமிக மூத்தவனாக்கிக் கொண்டு, "'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்று குறள் கூறுகிறது. குடும்பம் ஆரம்பமாவது இருவர் அன்பில். வளர்வது மூன்றாவது அன்பைப் படைப்பதற்காக. இவ்வாறு படிப்படியாக அன்பை வளர்க்கும் ஒரு பண்ணையே நமது பாரத நாட்டு இல்லற வாழ்வு. இந்த இருவர் அன்பில் ஒரு தியாகமயமான புதுத் திருப்பத்தை உண்டாக்குவது மக்கட்பேறு. குழந்தைகள் பிறக்குமுன் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலுமே மாற்றி மாற்றி அன்பைச் செலுத்துவதற்கு முடியும். இந்தக் காதல் ஓரளவு சுயநலமானது. தங்களைப் பற்றியது. இந்த அன்பே குழந்தைகள் பிறந்த பின்பு சமூக நலமான பொது அன்பாக மாற முடியும். குடும்ப வாழ்வின் தத்துவமே வீட்டளவில் ஓர் அன்பை வளர்த்து அந்த அன்பை நாட்டளவில் ஒரு சமூகச் சொத்தாக்குவதில் தான் இருக்கிறது. அத்தகைய சீரிய குடும்ப வாழ்வு நாம் இன்று பாராட்டும் இந்த மணமக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனமார விரும்புவதை விட வேறெந்தப் பெரிய வாழ்த்துக்களையும் இவர்களுக்கு நாம் தந்துவிட முடியாது! அடுத்த நமது நிறுவனத்தைச் சேர்ந்த காலை மலர் நாளிதழ் ஆசிரியர் சர்மா அவர்கள் சில வார்த்தைகள் பேசி மணமக்களை வாழ்த்துவார்" - என்று உற்சாகமாகத் தலைமையுரை கூறிவிட்டு இடத்தில் அமர்ந்தான் சுகுணன்.

     அமர்ந்தவன் துளசியின் பக்கமாகத் திரும்பியபோது அவள் கண்களில் நீர் சுரந்திருப்பதைக் கண்டான். ஆயினும் அதைக் காணாதது போல் இருந்து விடுவதைத் தவிர அப்போது அவனால் செய்ய முடிந்தது வேறொன்றுமில்லை. அவள் மனம் புண்பட வேண்டுமென்று அவன் எதையும் பேசவில்லை. அவன் பேசிய எதையாவது அவள் தன்னைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? எனவே அவன் துளசியின் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்துப் பேசத் தொடங்கியிருந்த சர்மாவின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தினான்.

     சர்மா நகைச்சுவைத் துணுக்குகளைப் பொழிந்து கூட்டத்தில் இருந்தவர்களைச் சிரிப்பிலாழ்த்திக் கொண்டிருந்தார். சர்மாவுக்கு ஒரு பலசரக்கு ஞானம். சங்கீதம், சமையல், சாப்பாடு, சினிமா, டென்னிஸ், பரதநாட்டியம் எல்லாவற்றிலும் 'வகைக்குக் கொஞ்சம் ஞானம் உண்டு'. கடைசிப் பட்சமாகப் பத்திரிகைத் தொழிலிலும் கொஞ்சம் தெரியும். கொஞ்சந்தான்! அவர் பேசுவதிலுள்ள ஹாஸ்யங்களுக்குச் சிரிப்பதை விடப் பேச முடியாமலோ, பேசச் சரியான வார்த்தை வராமலோ மேடையில் அவர், தவிப்பதையும் தடுமாறுவதையும் பார்த்தே கூட்டத்தில் அலையலையாகச் சிரிப்புப் பொங்கும். சென்னையில் பெரும்பாலான புத்தக வெளியீட்டு விழாக்கள், சங்கீத சபாக்களின் கச்சேரிகள், நாடகங்களின் அரங்கேற்றங்கள், இலக்கியக் கூட்டங்கள், ஆகியவற்றில் நிரந்தரமாக அவருக்கு ஓர் இடம் உண்டு. அதாவது நன்றி கூறுவது. ஒரு கூட்டத்திற்குச் சர்மா போயிருந்தால் அந்தக் கூட்ட முடிவில் நன்றி கூறும் பொறுப்பு அவருடையதாகத்தான் வந்து சேரும். இதனால் பொது இடங்களில் அவரைப்பற்றிக் குறிப்பிடும் போதோ பேசும் போதோ காலை மலர் ஆசிரியர் சர்மா என்று சொல்லாமல் "யார்? நம்ம 'நன்றி சர்மா'வையா சொல்கிறீர்கள்!" - என்று குறிப்பிடுகிற அளவு அவருடைய நன்றிப் புகழ் பரவியிருந்தது.

     அவருடைய பேச்சிலோ நன்றியிலோ ஒரு சிறப்பு அல்லது சிறப்பின்மை (நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அப்படி) என்னவென்றால் பேசத் தொடங்கிவிட்ட பேச்சையோ கூறத் தொடங்கிவிட்ட நன்றியையோ எந்த இடத்தில், எவ்வளவு நேரத்தில், எப்படி முடிப்பது என்று தெரியாமல் அவர் தவித்துத் தடுமாறுவது தான். முடிப்பது போல் வருவார்! முடிக்கத் தெரியாமல் வேறு விஷயத்துக்குத் தாவி மறுபடி அங்கிருந்து இக்கதைக்கு வரத் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்பார். இப்படி இவரை மேடையில் நிறுத்தி இவர் காமெடியன் மாதிரித் தவித்துத் திருதிருவென்று விழிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவே இவரைப் பல கூட்டங்களில் பேச அல்லது நன்றி கூற அழைக்கிறார்களோ என்று கூடச் சுகுணன் சில சமயங்களில் வேடிக்கையாக நினைத்திருக்கிறான். ஆனால் அப்படியும் வேடிக்கையாக நினைத்து விட முடியாது. 'நன்றி சர்மா'வுக்கு மயிலாப்பூர், மாம்பலம், அடையாறு 'ஸ்நாப்'களினிடையே நல்ல செல்வாக்கு உண்டு. இந்த செல்வாக்குக்குப் பயந்து தான் காலை மலர் ஆசிரியராக அவரை வைத்திருந்தார் நாகசாமி. 'இலட்சியத் துடிப்புள்ள புதிய தலைமுறை இளவட்டம் என்ற முறையில் சுகுணனிடம் சர்மாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு. அவனை எதிர்க்கவோ அவனிடம் முரண்படவோ அவர் ஒரு போதும் துணியமாட்டார்.

     மணமக்களை வாழ்த்தி சர்மா அன்றும் நிறைய நேரம் பேசினார். அவருக்குப் பின் இன்னும் ஐந்தாறு பேர் பேசினார்கள். இறுதியில் ஃபோர்மென் நாயுடுவை நன்றி கூற அழைப்பதற்கு முன், "இன்று நன்றி கூறும் சான்ஸ் நமது சர்மா சாருக்கு இல்லை. சர்மா சார் தயவு செய்து என்னை மன்னித்து விட வேண்டும். இப்போது நாயுடு நன்றி கூறுவார்" என்று சுகுணன் அறிவித்த போது கூட்டத்தில் அலை அலையாகச் சிரிப்பு எழுந்தது. சர்மா கூட விழுந்து விழுந்து சிரித்தார். ஒருத்தி முகத்தில் மட்டும் ஈயாடவில்லை. அவள் தான் துளசி.

     மனங்களின் இரகசிய வேதனைகளைப் புறக் கண்களால் காண முடியாத இந்த உலகில் அப்பாவி நாயுடு எதை எதையோ நினைவுபடுத்தி நன்றி கூறிக் கொண்டிருந்தார்.

     "நான் இந்தக் கூட்டத்துக்கு நம்ப சுகுணன் ஐயாவைத் தலைமை தாங்கச் சொன்னதுக்கு ஒரு காரணம் உண்டு. துளசிம்மாவுக்கு நம்ப சுகுணன் ஐயா கதை மேலே உசிர். பத்திரிகை பைண்டாகி வெளிவர வரைக்குங் கூட அவங்களாலே பொறுத்துக்க முடியாது. எங்கிட்ட வந்து அச்சான ஃபாரத்தையே வாங்கிட்டுப் போய் தொடர்கதை படிச்சிடுவாங்க. சில சமயம் 'சார்' கிட்டவே கையெழுத்துப் பிரதியைக் கேட்டு வாங்கிப் படிச்சிடும். கதைக்கு இன்னா படம் வருதுன்னு ஆர்ட்டிஸ்டுங்க கிட்டக் கூடப் போய்ப் பார்த்திட்டு வந்திடும். அத்தினி ஆர்வம். அத்தினி ஆசை."

     மழை நீரின் கனம் தாங்காமல் தாழ்ந்து சாயும் பூச்செடி போல் சுகுணனின் தலை தாழ்ந்தது. இந்த விநாடியில் துளசியின் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடியும் என்ன செய்வது? இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வெளி நடிப்புச் செய்ய ஓர் ஆண் மகனால் முடியும். அந்த நடிப்பைத்தான் சுகுணனும் இப்போது நயமாகவும் நாடகமாகவும் செய்து கொண்டிருந்தான். துளசியோ தவித்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பழி வாங்குவதற்காகச் சுகுணனே இப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாரோ என்று கூட அவள் கற்பனை ஓடலாம்.

     சுருக்கமாக நாயுடு நன்றி கூறி முடித்துவிட்டார். அச்சக ஊழியர்கள் பலர் மணமக்களுக்கு ஏதேதோ பரிசுகள் வழங்கினார்கள். அதில் பெரும்பாலான பரிசுகள் சுகுணனின் 'பாலைவனத்துப் பூக்கள்' என்ற நாவலின் விலையுயர்ந்த பரிசுப் பதிப்பாக இருந்தன. வீட்டுக்குப் புறப்படுமுன் அவள் சுகுணனிடம் விடைபெற வந்தாள். வார்த்தைகளைப் பேச நா எழாத நிலையில் வருகிறேன் என்று பொம்மைப்போல் தலையசைத்தாள். சுகுணனே செயற்கை புன்முறுவலோடு அவளிடமும் அவள் கணவனிடமும் சேர்ந்தே இரண்டு வார்த்தைகள் கலகலப்பாகப் பேசி விடை கொடுத்தான்.

     "குடும்ப வாழ்க்கை எப்படி முதலில் வீட்டு அன்பையும் பிறகு நாட்டு அன்பையும் வளர்ப்பதற்கு ஏற்ற முறையில் இந்தத் தேசத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி ஒரு கருத்தைச் சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப நல்லாயிருந்திச்சுங்க" என்று அவனைப் புகழ்ந்தார் நாயுடு.

     "என்னய்யாது? திடீர்னு நன்றி கூறுகிற சான்ஸ் இன்று சர்மாவுக்கு இல்லைன்னு! என்னை பிடிச்சு வம்பிலே இழுத்து விட்டுப்பிட்டீரே?" என்று சர்மா அவனருகில் வந்து குழைந்தார்.

     "அது உங்கள் பிறப்புரிமையாயிற்றே! அதனால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்றுதான் அப்படிச் சொன்னேன்" என்று கூறினான் சுகுணன். மறுபடியும் சுற்றியிருந்தவர்களிடையே சிரிப்புப் பொங்கியது. இத்தகைய பாராட்டுக் கூட்டங்களில் எல்லாம் ஆரம்பத்திலும் முடிவிலும், இப்படிச் சொல்லி சில வெற்றுச் சிரிப்பலைகள் பொங்க, நடுவே எங்கோ சிலர் மனம் புண்பட்டு அழுது புழுங்குவது தான் பட்டினத்து நாகரிகம். மனிதனுடைய சத்தியத்துக்கும் மனோதர்மத்துக்கும் சாயம் பூசி ஏமாற்றி விடுகிற பொய் வண்ணமான இந்தச் சிரிப்பு என்கிற தரக்குறைவான - மங்கலான வர்ணம் தான் இன்றைய நகரங்களின் பல பொது நிகழ்ச்சிகளில் பரவலாகப் பூசப்பட்டு விடுகிறது என்று நினைத்து உள் மனத்தில் தவித்தான் சுகுணன்.

     துளசி அந்தக் கூட்டத்திலிருந்து போகும்போது கழுத்து வரை முட்ட முட்ட அழவேண்டிய துயரத்தோடு கனத்துப் போயிருக்கிறாள் என்று அவன் மனத்துக்குப் புரியும். ஒரு காலத்தில் அவள் இருந்த மனம் அது! இப்போதும் அவள் அங்கு இல்லையென்று சொல்லித் தீர்த்துவிட முடியாது. இருப்பதாகப் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளவும் முடியாது. அது ஒரு நுணுக்கமான வேதனை.

     விருந்துக்கு வந்திருந்த எல்லாரிடமும் பேசி விடை பெற்றுக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பும் போது இரவு பத்தரை மணிக்கு மேலிருக்கும். அந்த நேரத்திலும் வேர்வை அடங்க இன்னொரு முறை குளிக்க வேண்டும் போலிருந்தது. உடம்பில் அணுவளவு வேர்வை இருந்தாலும் அவனுக்கு உறங்க வராது. தூங்குவதைக் கூடச் சுத்தமான உடம்போடு செய்து பழகியாயிற்று. இதனால் இரயிலில் போகும்போது வசதியான மெத்தை இடம் ஆகியவற்றோடு முதல் வகுப்பில் போனால் கூட அவனால் உறங்க முடியாது. சிறிது ஓசை கூட அவன் தூக்கத்தைக் கலைத்து விடும். பல்லி சுவரில் ஊர்கிற ஓசையில் அல்லது கிசுகிசுக்கிற ஓசையில் பலமுறை நடு இரவில் விழித்துக் கொண்டு எழுந்திருக்கிறான் அவன். இத்தனை நுணுக்கமான உணர்வுகள் இருப்பதால்தான் அந்தரங்கமாக உணர்ச்சி நஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத தவிப்பை அடைகிறோமே என்று கூடத் தனக்குத் தானே சிலமுறை இதை ஒரு பலவீனமாகக் கூடப் பாவித்துக் கொண்டு சிந்தித்திருக்கிறான் சுகுணன். மேலோட்டமான உணர்வுகளே உள்ள பலருக்கு நடுவே ஆழமான உணர்வுகள் உள்ளவனாக மனத்தினால் விலகி வாழ்வதும் ஒரு பலமா அல்லது பலவீனமா என்பதைப் பல சமயங்களில் அவனால் முடிவு செய்ய இயலாமலே போயிருக்கிறது.

     திருவல்லிக்கேணி பெரிய தெரு கண்ணப்பா லாட்ஜ் என்பது சென்னை நகரில் பிரம்மசாரிகளை அடைத்துப் போட்டு வாடகை வாங்குகிற (அ) தர்ம சத்திரங்களில் ஒன்று. அறைகளுக்கு எல்லாவற்றுக்குமாகக் கிழக்குக் கோடியில் நான்கு பொதுக் குளியலறைகளும் நடுக்கூடத்தில் ஒரு பொது டெலிபோனும் கூட உண்டு. எல்லா அறைக்காரர்களுக்கும் வருகிற ஃபோன் கால்களை வந்து சொல்ல ஒரு பையன் லாட்ஜில் இருக்கிறான். அறையிலிருந்த யாராவது வெளியே போன் செய்ய முடியாதபடி பெரும்பாலான நேரங்களில் டெலிபோனில் புளியங்கொட்டைப் பருமனுக்கு ஒரு சிறிய பூட்டுத் தொங்கும். லாட்ஜ் நடத்துகிறவருக்குக் 'கைலி' ஏற்றுமதி வியாபாரம். இலங்கை, மலேயாவுக்குக் கைலி, லுங்கி ஏற்றுமதி செய்வது அவர் தொழில். அறைகளில் ஒன்று திருவாளர் கண்ணப்பா அவர்களின் கைலி ஏற்றுமதி அலுவலகமாக இருந்தது.

     கைலிகளுடன் சமயாசமயங்களில் கடத்தலாக வருகிற சிங்கப்பூர்க் கைக்கடிகாரங்கள், செண்ட் வகைகள், டெரிலின் ஷர்ட்டிங் துணிகள், டிரான்சிஸ்டர்கள் வியாபாரமும் இரகசியமாக உண்டு. இந்தக் கடத்தல் வேலையில் ஈடுபடும் அழுக்கடைந்த பழைய கார்கள் நாலைந்து 'லாட்ஜின்' கீழே தெருவில் ஓரமாய் வரிசையாய் நிற்கும். அத்தனை கார்களையும் காணவில்லையானால் கள்ளிக்கோட்டைக்கோ, மங்களூருக்கோ, வேதாரணியத்துக்கோ, சிதம்பரத்துக்கு அருகில் கவரப்பட்டு என்ற கடற்கரைக்கோ, சரக்குக் கடத்திவர அத்தனை 'ரதங்களும்' புறப்பட்டுப் போயிருப்பதாக அர்த்தம். இந்தக் கள்ளக்கடத்தல் ரதங்களையும் இவற்றின் இரகசியப் போக்குவரவு இயக்கங்களையும் நடத்தச் சீவாத தலைமயிருடன் புலித்தலையும், பாம்பும், தேளும், பூரானும், முதலையும், டிசைன் போட்ட கைலிகளைக் கட்டிக் கொண்டு ஐந்தாறு மர்ம மனிதர்களும் அவரிடம் உண்டு. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் கண்ணப்பா அவர்களின் மற்றோர் உபதொழிலான 'அழகு ராணிப் பதிப்பகம்' இருந்தது. திருமூலமாமுனிவர் திருவாவடுதுறை அரசமரத்தடியில் தவமிருந்து நூறு ஆண்டுகளுக்கு ஒரு திருமந்திரம் சிரமப்பட்டு அருளியது போலல்லாமல் இலக்கிய சாதனையை இன்னும் கொஞ்சம் வேகமாக மாற்றி ஆண்டுக்கு ஒரு நூறு துப்பறியும் மர்ம நாவல்கள் வீதம் வெளியிட்டு அவற்றையும் கைலியோடு இலங்கைக்கும் மலேயாவுக்கும் ஏற்றி அனுப்புவது ராணிப் பதிப்பகத்தின் தலையாய பணிகளில் ஒன்றாக இருந்தது.

     தமிழ்நாட்டு சினிமா நட்சத்திரங்களின் வருடாந்திரக் காலண்டர் ஒன்றை விதவிதமான வண்ணப்படங்களோடு வெளியிட்டு இலங்கை, மலேயா முதலிய நாடுகளில் 'மார்க்கெட்' அடிப்பதும் கண்ணப்பாவின் தொழில் இரகசியங்கள். இன்னும் 'இல்லற இன்ப விதங்கள்' - 'காதலிக்க எழுபத்திரண்டு வழிகள்' - 'இன்பம் இங்கே' என்பது போல டீக்கடையிலும் பீடிக்கடையிலும் கூட விலைப்போகும் சில மாயப் (மாயும்) பிரசுரங்கள் எல்லாம் கூட உண்டு. அரைக்கப் டீயை நாலு பேராகப் பங்குப் போட்டுக் குடித்துவிட்டு இம்மாதிரி அமர இலக்கியங்களைப் படைத்துக் கொடுத்து அன்றாடச் செலவிற்கு இரண்டு மூன்று வாங்கிக் கொண்டு கண்ணப்பாவுக்குச் சலாம் போட்டு விட்டுப் போகக்கூடிய ரெடிமேட் எழுத்தாளர்கள் நாலைந்து பேரும் அழகு ராணிப் பதிப்பகத்தில் உண்டு. இதில் சிலர் 'எழுத்து சீஸன்' டல்லாயிருக்கும் போது தேள், பூரான், பாம்புடன் கூடிய கலர் கைலியைக் கட்டிக் கொண்டு கடத்தல் கோஷ்டியிலும் கூடப் போய் ஐக்கியமாவதுண்டு.

     மாடியில் 'லாட்ஜ்' அறைகள் நிறைந்த ஹாலில், திடீர் திடீரென்று நடு இரவில் பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் டெலிபோன் மணி அடிக்கும். அந்த வேளையிலும் அதை எடுப்பதற்கு கண்ணப்பாவின் ஆள் ஒருத்தன் அதனருகிலேயே பழி கிடப்பான். கள்ளக் கடத்தல் சம்பந்தமான சாதக பாதகச் செய்திகளை அறியக் கண்ணப்பாவுக்கு அந்த டெலிபோன் தான் ஒரு கேந்திரமான செய்திக் கருவி. போர் முகாம்களில் வயர்லெஸ் ரேடியோவுக்குள்ள அத்தியாவசியம் இங்கே இந்த டெலிபோனுக்கு உண்டு. ஏதோ ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு டெலிபோன் மணி விடாமல் அடித்தது. அதற்குக் காவலாகப் பழிகிடக்க வேண்டிய கண்ணப்பாவின் ஆள் அன்று இரவில் இரண்டாவது ஆட்டம் படம் பார்க்கப் போய்விட்டதால், உறக்கம் தடைப்பட்ட சுகுணன் அறையிலிருந்து கூடத்துக்கு வந்து மணி அடிப்பதையாவது நிறுத்தலாம் என்கிற எண்ணத்தில் டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் 'கிருஷ்ணகிரியிலிருந்து டிரங்கால்' என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஒரு முரட்டுக் குரல் கரகரப்பான தொனியில் 'நம்பர் 8866 கிருஷ்ணகிரிக்கும் சேலத்துக்கும் நடுவே பஞ்சராயி நின்னு போச்சு' என்று ஒரே வாக்கியத்தை இரண்டு மூன்று முறை சொல்லி விட்டு டெலிபோனை வைத்துவிட்டது. மறுநாள் காலையில் கண்ணப்பாவின் ஆட்களும் அறையும் பரபரப்பாயிருந்த அலங்கோலத்தில் தான் 8866 எண்ணுள்ள கார் கடத்தல் பண்டங்களுடன் வரும்போது பிடிபட்ட செய்தியே அப்படிப் பூடகமாகக் கூறப்பட்டதாக உணர்ந்தான் சுகுணன். அப்படிப் பல இரகசிய வாக்கியங்கள் கள்ளக் கடத்தல் உலகில் உண்டாம்.

     அன்று துளசியின் திருமண விருந்திலிருந்து திரும்பி வந்து நீராடி முடித்த பின்பும் உறக்கம் வராமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் சுகுணன். அப்போது மணி பதினொன்றரை ஆகியிருந்தது. வெளியே வழக்கம் போல டெலிபோன் மணி கிணுகிணுத்தது. 'சரிதான் கண்ணப்பாவின் கடத்தல் ரதங்களில் ஏதோ ஒன்று ஏதோ ஒரு வழியில் சிக்கிவிட்ட செய்தி வருகிறது' என்று எண்ணியபடி சுகுணன் ஒரு கணம் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு புத்தகத்தை மேலே படிக்கத் தொடங்கினான்.

     ஆனால் என்ன ஆச்சரியம்? ஃபோனடியில் வழக்கமாகப் பழிகிடக்கும் கண்ணப்பாவின் ஆள் ஓடிவந்து, "சார் உங்களுக்குப் ஃபோன் வந்திருக்குது" என்றான்.

     அச்சகத்தில் பத்திரிகைக்காக இரவு மெஷினில் ஓடும் ஃபாரத்தில் ஏதாவது அச்சுப்பிழை அல்லது சந்தேகம், அல்லது கரெக்ஷனில் ஓவர் எடுக்க முடியாமற் போகிற செய்தியைத் தெரிவிக்கச் சில சமயம் டீயூடியில் உள்ள ஃபோர்மென் அவனை ஃபோனில் கூப்பிடுவது வழக்கம். இன்றும் அப்படி ஏதாவது சந்தேகம் வந்திருக்கும் போலும் என்றெண்ணியபடி அன்று மெஷினில் ஓடுகிற ஃபாரத்தின் விஷயங்களை நினைவுக்குத் தந்துகொண்டே எழுந்து வந்து டெலிபோனை எடுத்தான் சுகுணன்.

     "துளசி பேசுகிறேன். முதலில் இந்த அர்த்த ராத்திரி வேளையில் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்கணும்."

     "சரி..."

     "உங்களை ஒன்று கேட்கணும். எவ்வளவோ அடக்கியும் எம் மனசு பொறுக்காமல் ஃபோனில் கூப்பிட்டேன்..."

     "அதற்கென்ன கேளேன்?"

     "விருந்துக் கூட்டத்தில் என் கையில் மாலையைக் கொடுத்துவிட்டு 'ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிற குறை இனி உனக்கு இருக்காது துளசி' என்று சிரித்துக் கொண்டே கூறினீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?"

     "என்ன அர்த்தம் என்று கூறுவதை விட, என்ன அர்த்தம் இல்லை என்று கூறிவிடுவது இப்போது எனக்குச் சுலபமாயிருக்கும் துளசி?"

     "என்ன!"

     "விசேஷமாக எந்த அர்த்தமும் இல்லை என்பது தான் அது."

     "இல்லை? நிச்சயமாக நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நீங்கள் சாதாரணமான அர்த்தத்தில் அந்த வார்த்தைகளை அங்கே சொல்லவில்லை; உங்களுடைய வார்த்தைகளும் அர்த்தங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்..."

     "அப்படியானால் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லையே! அதுதான் உனக்கே தெரிகிறதே..."

     எதிர்ப்புறம் குரல் தேய்ந்து விசும்பல் ஒலி எழுந்தது. அழுவதைப் போன்றதோர் சோக இனிமை ஃபோனில் பெருகி இழைந்தது.

     "அசட்டுப் பெண்ணே! வீணாக மனத்தை அலட்டிக் கொள்ளாதே" என்று கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் டெலிபோனை வைத்துவிட்டான் சுகுணன். வீணை வாய் படைத்து அழுவதைப் போன்ற அந்த இனிய குரலை இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டுமென்று ஆசையாயிருந்தும் ஒரு பிடிவாதத்தைக் காப்பாற்ற முயலும் ஆண்மையின் கட்டுப்பாட்டோடு மனமின்றிதான் போனை வைத்திருந்தான் அவன். அதற்குப் பிறகு நாலைந்து நாள் துளசியை அவன் பார்க்கவில்லை. சுகுணனுக்கு எழுத ஓய்வும் அவசியமும் இருந்தது. நிறைய எழுதினான்.

     அன்று வியாழக்கிழமை மாலை ராயவரத்தில் முன்பே ஒப்புக் கொண்டிருந்த அந்த வாசகசாலைக் கூட்டத்திற்குப் போனான் சுகுணன். அன்று காரியாலயத்தில் நிறைய வேலை இருந்ததனால் ஐந்தே முக்கால் மணிக்குமேல்தான் அங்கிருந்து அறைக்குத் திரும்ப முடிந்தது. காரியாலயத்திலிருந்து அறைக்கு வந்த டாக்சியையே 'வெயிட்டிங்'கில் நிறுத்தி வைத்துவிட்டு, அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து அதே டாக்சியில் ராயவரத்துக்கு விரைந்தான் அவன். ஏதோ ஒரு குறுகலான சந்தில் நுழைந்து புகுந்து ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வாசகசாலையைத் தேடிப் போக வேண்டியிருந்தது. வழக்கம்போல யாரோ ஒரு மந்திரி அந்த விழாவுக்கு வருவதால் தெருவில் பத்தடிக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நின்றிருந்தார்கள். அதனால் விழா நடக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாயிருந்தது.

     மந்திரி வாசகசாலையில் கட்டப்பட்டிருந்த 'புதுபிளாக்' கட்டிடமொன்றைத் திறந்து வைத்துவிட்டுப் பத்து நிமிடம் பேசிய பின் தமக்கு வேறு எங்கோ மற்றொரு கூட்டமிருப்பதாகக் கூறி விட்டுப் போய்விட்டார். சுகுணன் விழாவை மேலே நடத்த வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு மேடை மேல் அமர்ந்து கீழே வரிசையாக மடக்கு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்ட போது துளசியும் அவள் கணவனும் முன்பக்க வரிசையொன்றில் நடுவாக வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு வியந்தான்.

     'புதுமணத் தம்பதிகள் கடற்கரைக்கும், சினிமாவுக்கும், உல்லாசப் பயணத்திற்கும் போவதைக் காண்பதுண்டு. இவள் என்னடா என்றால் எனது பேச்சைக் கேட்க வேண்டுமென்பதற்காகக் கணவனையும் வற்புறுத்தி இங்கே அழைத்து வந்திருக்கிறாளே' என்று எண்ணினான் சுகுணன். அவள் செய்திருப்பது பெரிய அநியாயமாகத் தோன்றியது அவனுக்கு. ராயவரத்தில் எங்கோ குறுகலான சந்தில் ஒதுக்குப்புறமான மூலையில் தெருவை வளைத்து முடிந்த மட்டும் பந்தல் போட்டுச் சேறும் சகதியுமான அந்தத் தெருவிலேயே மடக்கு நாற்காலைகளை வரிசையாகப் போட்டு நடத்துகிற அந்த வாசகசாலை ஆண்டு விழாவில் தான் பேசப் போவதை இவள் கேட்டு என்ன ஆகப் போகிறது? அப்பாவிப் பெண்! இப்படித் தொடர்ந்து பல அசட்டுக் காரியங்களைச் செய்து கணவனிடம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளப் போகிறாளே என்று அவளுக்காகவும் மனம் இரங்கியது.

     கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. அவன் அவர்கள் வந்திருப்பதை மறந்து காரியங்களைக் கவனிக்க வேண்டியதாயிற்று. அவனே தலைமையுரை பேச எழுந்து 'சகோதரர்களே! சகோதரிகளே!...' என்று பேசத் தொடங்கியபோது மட்டும் 'இன்று கூட்டத்தில் நான் கணவருடன் வந்திருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டும், வேண்டுமென்றே என்னைக் குத்திக்காட்டுவதற்காகத் தானே 'சகோதர சகோதரிகளே' என்று பேசத் தொடங்கினீர்கள்?' என்பதாகத் துளசி ஃபோன் செய்து அன்றிரவே அரற்றத் தொடங்கி விடுவாளோ? என்று விநோதமாக ஒரு சந்தேகமும் எழுந்தது அவனுக்குள்.

     மனத்தில் பயமும் குற்ற உணர்வும், தாழ்வு நினைவும் வந்து சுமந்துவிட்டாலே பின்பு எல்லாம் விகல்பமாகத்தான் தோன்றும். ஆனால் இந்தத் தயக்கம் ஒரு கணம் தான். அப்புறம் ஆற்றொழுக்குப் போல் ஒரே நிலையாக அவன் பேச்சு மேலே வளர்ந்தது. கூட்டம் தெருவிலிருந்தாலும் அமைதியாக எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசகசாலைக்கு அடிக்கடி நன்கொடை தருகிறவரோ என்னமோ ஒரு பிரபல நடிகர் நடுக்கூட்டத்தில் வந்து முன் பக்கமாக அமர்ந்து பேச்சின் கவனத்திலிருந்து நீங்கி எல்லோரும் சில நிமிடங்கள் தன்புறம் திரும்பச் செய்தார்.

     சுகுணனுக்கு இந்த நடிகர் மேல் ஆத்திரம் மூண்டது.

     'மந்திரிகள் கூட்டத்தில் பாதியிலேயே போய் விடுவார்கள். நடிகர்கள் பாதிக்கு மேல் தான் வருவார்கள். அப்படிப்பட்ட விநோதமான விச்த்திரமான நாட்டில் நாம் வாழ்கிறோமென்பது உங்களுக்கு ஒவ்வொரு கணமும் நினவிருக்க வேண்டும்' என்று பேச்சினிடையே குத்தலாக இரண்டு வாக்கியங்களைத் தொடுத்து விட்டான் அவன். அவ்வளவுதான். உடனே கூட்டத்தில் சில பகுதிகளில் மெல்ல ஒரு சலசலப்புக் கிளம்பியது.






சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்