சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)

6

     கணவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்றால், கிரிக்கு அவன் அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்யும் வேலை கூடுதலாகும்!

     அவனே ஒரு தரம் சொன்னான். ஏதோ ஒரு செமினாருக்கு மிஸஸ் மேனன் சென்றிருந்தாளாம். “ஒரு சேலை இஸ்திரி போட நம்ம ஊர் கணக்குக்கு நாற்பது ரூபாய் ஆகிறது. சார், நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்” என்று கேட்டாளாம். “அது பற்றி எனக்குக் கவலை இல்லை, இங்கே நான் ஒண்ணுமே பண்ண வேண்டாம். பத்து நாட்கள் தானே, ஊரில் கொண்டு போட்டால் என் மிஸஸ், எல்லாம் சரியாக்கி வார்ட்ரோபில் வைத்து விடுவாள்” என்றாராம். மூன்று மாசம் போல் சென்றிருந்த போது என்ன செய்தார் என்று அவனும் சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை.

     அவன் உடைகளைப் பெட்டி போடக் கொடுத்து வந்து, அவற்றை அலமாரியில் வைக்கையில், அலமாரியை ஒழுங்காக வைக்க எல்லாவற்றையும் எடுக்கிறாள். மேல் தட்டில் ஒரு புதிய அலங்கார வேலைப்பாடமைந்த பெட்டி இவள் கண்களில் படுகிறது. பவள வண்ணத்தில் பச்சை எனாமல் பூ வேலை செய்யப் பெற்ற அலங்காரப் பெட்டி. ஒரு சிறிய ப்ரீஃப்கேஸ் போல் இருக்கிறது.

     ‘ஏது...? இது போல் ஒரு பெட்டி முன்பு கிடையாதே?... வாங்கி வந்திருக்கிறாரா? சொல்ல மறந்து போனாரா?’

     பெட்டியை எடுக்கிறாள். மரப்பெட்டி போல் கனமாக இருக்கிறது.

     பூட்டு சாவித் துவாரம் கூட வேலைப்பாடமைந்த வில்லையால் மூடப் பெற்றிருக்கிறது. ஆனால் சாவியில்லை; திறக்கவும் முடியவில்லை.

     இதுவரையிலும் அவளுக்குத் தெரியாத இரகசியம் எதுவும் அவனிடம் இல்லை என்று நம்பி இருக்கிறாள். இது... இது என்னவாக இருக்கும்?

     பிறகு வேலை ஓடவில்லை. பெட்டி, புழுவாகக் குடைகிறது.

     அதில் ‘ஃபான்ஸியாக’ அழகுப் பொருள் ஏதேனும் இருக்குமோ? ஊரிலிருந்து வந்த போது அவள் தானே பெட்டியைக் காலி செய்து துணிகளை எடுத்து ஒழுங்கு செய்தாள்?

     ரத்னா அன்று காலையிலேயே விடுதிக்குச் செல்வதாகக் கூறிப் போய்விட்டாள். ஆனால் பிறகு வருவாள். இவள் வினாத்தாளைப் பூர்த்தி செய்து வாங்கிப் போக, சாமுவிடம் பேச வருவாள். அபுவைக் கூட்டி வந்தாலும் வருவாள். அபு கிறிஸ்தவனா? ஏப்ரஹாமா? இல்லை... அபுபக்கர்... ஆபத்சகாயம்... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் - வித்தியாசமானவன்.

     பெரியவள் கற்பகத்தின் தாறுமாறான வாழ்க்கைக் குழப்பம் நெஞ்சின் நினைவுகளை முட்டுகிறது. சீராக இருக்கும் குடும்ப அமைதி... இது அமைதியா? உண்மையில் கிரி, நீ மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறாயா?... ஆனால், சாமு தாயாருக்காக இவளை அடிமையாக வைத்திருந்தாலும், வேறு விதமான கெட்ட பழக்கங்களோ, நடத்தைப் பிசகானவனோ அல்ல. அவர்களுள் எந்த விதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை - இல்லை. இருந்திருக்கவில்லை. ஆனால் எப்போதும் அவள் தானன்றோ விட்டுக் கொடுக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சுகமில்லை என்றாலும் கூட, அவள் வேலையை அவன் வந்து செய்ய வந்திருக்கிறானோ? அந்த நாளிலும் அவன் அரச அதிகார நிலை மாறியிருக்கிறதோ? “டாக்டரிடம் போனாயா?” என்று கேட்க மறந்து போவான். இவளே டாக்டரிடம் ஓட வேண்டும். மருந்து வாங்கி வந்து சாப்பிட்டு உடலைக் காத்துக் கொண்டு உழைக்க வேண்டும். ஆனால்... அவனுக்கு ஒரு தலைவலி வந்தால் கூட தாங்க மாட்டான். வீடு இரண்டு படும்!

     தொலைபேசி மணி ஒலிக்கிறது.

     “ஹலோ கிரி தானே...? நான் சாயங்கால ஃப்ளைட்ல பாம்பே போறேன். அங்கேருந்து திருவனந்தபுரம் போயிட்டு வருவேன். ரெடியா எல்லாம் எடுத்து வை. வந்ததும் கிளம்பி விடுவேன். ஒரு வாரத்துக்கான டிரஸ் வேண்டியிருக்கும்.”

     அவ்வளவுதான்.

     இதுபோன்ற அவசியங்களுக்குத்தான் அவனைப் பொருத்தமட்டில் அந்தக் கருவி பயன்பட்டிருக்கிறது.

     வந்ததும் வராததுமாக, அதைஇதை அங்கங்கு வீசி விட்டுப் பறப்பான்.

     இவள் பார்த்துப் பார்த்துத் தேவையானதைச் செய்ய வேண்டும். ஜூஸோ? காபியோ எது கேட்பாரோ? சாப்பாடு வேண்டுமோ, வேண்டாமோ?

     வீடு என்றால் பறப்பு, அவசரம்... வெளியில் ஆசுவாசம், நிம்மதி.

     குளிர்சாதன அலுவலக அறையில் கழுத்துச் சுருக்கைத் தளர்த்திக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பதைக் கற்பனை செய்கிறாள்.

     அழகான அந்தரங்கச் செயலாளர்... நகச்சிவப்பும், உதட்டுச் சாயமுமாக வெட்டு!

     சாமு அந்த மாதிரியான சபலக்காரனில்லை... சரியே!

     ஆனால் அந்தப் பெட்டி?

     நல்ல வேளையாக, அவன் புறப்பட்டுச் செல்லுமுன் சமயம் வாய்க்கிறது. அவள் அலமாரியின் பக்கம் நின்று அருகில் குளித்துவிட்டுத் தலை வாரிக் கொள்ளும் அவனிடம், “ஆமாம்! இது என்ன பெட்டி? ஏதானும் ஃபான்ஸி சாமானா? வாங்கிட்டு வந்து சொல்லவேயில்லை?” என்று கேட்கிறாள்.

     அவனும் புரியாதவனாக, “எது...?” என்று கேட்கிறான்.

     பெட்டியை வெளியிலெடுத்துக் காட்டுகிறாள்.

     “ஓ இதுவா? ரோஜா மாமி குடுத்து வச்சிருக்கச் சொன்னாளாம். ஸ்டேட்ஸ் போறாலோ என்னமோ? விவேக்குக்குக் கல்யாணம் நிச்சயமாகும் போல...”

     ‘இதென்ன புதுசா இருக்கு? ரோஜா மாமிக்கு அவங்க வீட்டில இல்லாத பந்தோபஸ்தா இங்க? பாங்க் லாக்கர் எங்க போச்சு? தாகூர் அவின்யூல கோட்டையாக வீடு... ஸெக்யூரிட்டி, ரொம்ப நாளா இருக்கும் சமையல் சாம்பசிவம்... இவர்களை மீறி என்றுமில்லாமல் இதென்ன புதிசு? அப்படி என்ன விலை மதிப்புள்ள சாமான்? நகையா...?

     - நாவில் இவ்வளவு சொற்களும் வரவில்லை.

     “இது என்னவாம்? நகையா?”

     அவன் உடனே எரிந்து விழுகிறான். “இத பாரு, தொண தொணங்காதே. எனக்கு நேரமாச்சு. என்ன வச்சிருக்கே? சப்பாத்தியா, ரைஸா?”

     “ஏனிப்படி எரிஞ்சு விழணும்? சப்பாத்தி, ரைஸ், சமயலறை மட்டும்தான் எனக்கு. அதிகப்படி ஒண்ணும் கேட்கக் கூடாது! உங்கம்மா எது செஞ்சாலும் அது சரி. நான் ஏன் என்னன்னு கேட்டா, கோபம் வந்துடும்!”

     முணுமுணுத்துக் கொண்டு அகலுகிறாள். தாழ்மைப்படுத்தும் இந்த நடப்பு அவளை ஆயிரம் நெருஞ்சி முட்களாக மாறிப் பிடுங்குகின்றன.

     தட்டில் சோற்றைப் போட்டு மேசையில் வைக்கிறாள். குளிர் நீரை எடுத்து வைக்கிறாள். மேசையில் டக்கென்று உறைக்கிறது.

     “ஏய், கிரி... என்ன?... என்ன முணுமுணுக்கிற?...”

     அவள் பேசவில்லை.

     அவன் அருகில் வந்து உறுத்துப் பார்க்கிறான். “என்னடீ முகம் வெங்கலப்பானையா இருக்கு?”

     “நான் ஒண்ணும் முணுமுணுக்கல. நான் பேசக்கூடாது. பேசினா... உங்களுக்கு ஆத்திரம் வரும். பேசாமலே ‘என்னடி!’. நான் மெஷின்!”

     அழுகை கொப்புளிக்கக் கத்தி விட்டுத் திரும்புகிறாள்.

     அவன் சோற்றுத் தட்டைத் தூக்கி எறிகிறான். தண்ணீர் குப்பியை வீச, அது உடைந்து சிதறுகிறது.

     “எப்படியும் சுடுகாடாப் போங்க! எப்ப வீட்டுக்கு வந்தாலும் சிரிப்புக் கிடையாது. முணுமுணுக்கிறா. இல்லாட்டா அடுப்பில் வேத்து ஒழுகிட்டு நிப்பா! சை! கடனேன்னு தண்டமா எதையானும் செஞ்சு வைக்கிறது. இன்னிக்குப் பகல்ல லஞ்ச் வச்சிருந்தியே, ஏக உப்பு, ஸ்பூனைக் காணல...”

     “என்னமோ ஒரு நாள் மறந்துட்டேன். அதுக்கு வாய் வார்த்தை இல்லையா?”

     “வாய் வார்த்தை இல்லாம இப்ப யாருடீ குத்தறாப்பல கொட்டினா? இத பாரு? நீ என்னமோ நாம் தான் இந்த வீட்டைத் தலைமேல் சுமந்து தாங்கறோம்னு நினைச்சிட்டு இஷ்டப்படி நடக்கிறாப்பலத் தெரியுது. எனக்கு இந்த மறைமுகம் எல்லாம் பிடிக்காது. எங்கம்மாவையோ, என்னையோ பிடிக்கலன்னா புறப்பட்டுப் போ! வீட்டை நாங்க மானேஜ் பண்ணுவோம்! என் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம்!”

     அவன் அவள் தயாராக்கி வைத்த கைப்பெட்டியுடன் வெளியேறுகிறான்.

     ...சீ! மனிதர்களா இவர்கள்?

     பதினேழு வருஷம் அடிமைச் சேவகம் செய்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்த... இவளுக்கு ஒரு பேச்சு, ஒரு குரல் எழுப்ப உரிமை இல்லையா? அப்படியும் உரத்த குரல் கூட இல்லை. அந்த ஒரு பிசிறைக் கூட பொறுக்க முடியாத ஒரு கூடு இது...? ரத்னா கூறினாற் போன்று, இது எவ்வளவு மோசமான கடுமையான, வெளிக்குத் தெரியாத அடக்குமுறை? வசதியான வீடு, நவீனமான வாழ்க்கை வசதிகள் என்ற ஆடம்பரங்கள். ஒரு பெண்ணுக்குத் தன் உரிமைக் குரலின் இலேசான ஒலியைக் கூட எழுப்ப விடாத அழுத்தங்கள் வேறென்ன?

     கூலிக்கு வைத்த ஆளிடம் கூடத் தவறு நேர்ந்தால் கேட்க முடியவில்லை.

     ஸ்பூன் வைக்க மறந்தது, உப்பு அதிகமாகி விட்டது இரண்டும் மன்னிக்க முடியாத குற்றம். இந்த வீட்டை அவள் தாங்கவில்லை.

     ஒரு நொடியில் உதறிவிட்டுப் போயிருக்கிறான். சோற்றை எடுத்து வீசி, நீர்க்குப்பியைப் போட்டு உடைத்து...!

     அவள் உழைப்பை, அவள் உள்ளுணர்வை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சத்தியத்தை உதாசீனமாக உடைத்தெறிவது போல நொறுக்கி விட்டுப் போய் இருக்கிறான்!

     அவள் காலையிலிருந்து இரவு கண் மூடும் வரை யாரை முன்னிட்டு ஆணி அடித்த நிலையில் சுழன்றாளோ, அந்த அவன், அவளைத் துரும்பை விடவும் கேவலமாகக் கருதியிருக்கிறான். அவனுக்குக் கோபம் வரும்; அவன் கோபம் அவள் அறிந்ததுதான். அவனிடம் பச்சாதாபம் கிடையாது என்பதையும் அவள் உணர்ந்திருக்கிறாள்? அவளுக்குப் பொறுமை பெரிது. ஆனால் இப்போது?

     அந்தப் பொறுமையின் அரணில் தீப்பிடிக்கிறது!

     திறந்த அலமாரி, விசிறிய சாப்பாட்டுத் தட்டு, உடைந்த கண்ணாடித் துண்டுகள்...

     இதையெல்லாம் இப்போது அவள் சுத்தம் செய்ய வேண்டும்!

     “அம்மா... என் ஷார்ப்பனரைக் காணல...” என்று பரத் வருகிறான்.

     “அங்கியே இரு? உங்கப்பா, உடைச்சுப் பரத்திட்டுப் போயிருக்கார்?”

     “அம்மா, டான்ஸ் மாஸ்டர் உங்கிட்ட என்னமோ அட்ரஸ் கேட்டாராமே? நீ அப்பாக்கிட்டக் கேட்டுச் சொல்றேன்னியாமே?”

     “அங்கியே நில்லு... கண்ணாடி உடஞ்சிருக்கு. உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி அவரையே கேட்கச் சொல்லு!”

     எல்லாவற்றையும் பெருக்கிக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்; செய்கிறாள். குழந்தைகளுக்குச் சாப்பாடு போட்டு சமையலறையை கழுவித் துடைத்து, படுக்கை போட்டு...

     எதுவுமே நடக்காதது போல் மாமியார் பேசாமலிருக்கிறாள்.

     நல்ல வேளை, இந்தப் பிரளயத்துக்கு முன் அவள் உபசாரம் முடிந்து விட்டது!

     படுக்கையில் உட்கார்ந்து அந்த வினாத்தாளை எடுத்துப் பார்க்கிறாள். தனது கூண்டு வாழ்வின் புதிய பரிமாணங்கள் சுமையாக அழுத்துகின்றன. வெகுநேரம் உறக்கம் பிடிக்கவில்லை.

     இந்தக் கூண்டில் தொடர்ந்து சுழல வேண்டுமா என்ற கேள்வி மெல்லியதாக எழுப்பி உறக்கம் கலைய, அது வலுவுள்ளதாக உயிர்க்கிறது!

     காலையில் பழக்கமான இயந்திரமாக இயங்குகிறாளே ஒழிய, உள்ளத்தில் வேறு சிந்தனைகள் உயிர்த்து இயங்குகின்றன! குழந்தைகளுடனோ, மாமியாருடனோ அவள் எதுவுமே பேசவில்லை. இந்த வீட்டில் தனக்கு எந்தப் பற்றுதலும் இல்லை என்ற மாதிரியில் இயங்குகிறாள்.

     அந்த வினாத்தாளைப் பூர்த்தி செய்து, ரத்னாவின் ஹாஸ்டலைத் தேடிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒரு மாறுதலுக்கு இரண்டு நாட்கள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற ஓர் அவா, மூர்க்கமாக அவளுள் இடம் பெறுகிறது!

     மாயா குளியலறையில் துணி கசக்குகையில், கிரிஜா தொலைபேசியைச் சுழற்றி, ரத்னாவிடம் தொடர்பு கொள்ள முயலுகிறாள்.

     மணியடித்துக் கொண்டே இருக்கிறது. யாரும் எடுக்கவில்லை.

     அவள் மொட்டை மாடிப்பக்கம் வருகையில் மாமியார் வாயிற்படியில் நின்றவாறு “காஸுக்கு ஃபோன் பண்ணினியா? ஸிலிண்டர் எடுத்து இருபது நாள் கூட ஆகலியே?” என்று கேட்கிறாள்.

     அப்பப்பா! எப்படி வேவு பார்க்கிறாள்? பிள்ளை கத்தியது உடைத்தது, பரத்தியது எல்லாம் தெரியும். ஆனால் ஒரு வார்த்தை கேட்க வேண்டுமே?

     காதிலும் மூக்கிலும் இவள் சுமக்கும் வயிரங்கள் அவமானச் சின்னங்களாக அழுத்துகின்றன.

     ‘கூட்டுக்குள் இருப்பதை உணர அவகாசமில்லாமல், உணராமல் இயங்குவது சுமையில்லை. நீ கூட்டுக்குள் இருக்கிறாய் என்ற உணர்வு அறிவுறுத்தப் பெற்ற பிறகு, ஓரிரண்டு நாட்களேனும் அந்த விடுதலையை அநுபவித்தாக வேண்டும் என்ற உந்துதலில் ஒவ்வொரு விநாடியும் சித்திரவதையாக இருக்கிறது.

     வயிரங்களைக் கழற்றி வைத்து விட்டாள். காதில் ஒரு சிறு திருகாணியும் கழுத்தில் தாலிச் சங்கிலியும் கையில் ஒற்றை வளையலும் கடிகாரமும் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

     இரண்டு புடவைகளும் உள்ளாடைகளும் ஜிப் பையில் வைத்துக் கொள்கிறாள்.

     மாயா வந்து போயாயிற்று; மாமியார் சாப்பிட்டாயிற்று.

     தனது தேவைகளை வெளி வராந்தாவில் வைத்து, பிரதானமாக கதவைச் சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடைக்குப் போகும் பாவனையில் மாமியார் அறைக்கு வருகிறாள்.

     “ஏன், தோடு மூக்குத்தியக் கழட்டிட்டே?”

     “அழுக்காயிருக்கு... கழட்டி வச்சேன்... நான் கடைக்குப் போயிட்டு வரேன்...”

     பதிலை எதிர்பார்க்காமல் அவள் வெளியேறுகிறாள். பையுடன் படியிறங்கி விடுவிடுவென்று தெருவில் நடக்கிறாள்.

     சாலை பஸ் நிறுத்தத்தில் திருமதி மூலே, குழந்தைகளுடன் நிற்கிறாள்.

     புன்னகை பரிமாறல். பளிச்சென்று மஞ்சள் சல்வார் கமீஸில் எதிர்வீட்டு சுஷ்மா வருகிறால். “ஆன்டி, எங்கே ஏர் பேகுடன் கிளம்பினீர்கள்?”

     “ஒரு ஃபிரண்டைப் பார்க்க...”

     “‘ஸ்பிக் மே கே’ ப்ரோகிராம்... ஸ்வுத் இண்டியன் மியூஸிக்...! ஆன்டி, வரீங்களா? கவிதாகிட்ட இன்விடேஷன் குடுக்கிறேன்?”

     “யார் கச்சேரி...?”

     “யாரோ வயலின் பர்ஃபாமென்ஸ்...”

     “குடு...”

     இதற்குள் மினி பஸ் ஒன்று வந்து நிற்கிறது.

     இடித்துப் பற்றி ஏறி உட்காரும் பழக்கமும் கூட இவளுக்குப் போதாது.

     இந்த நிறுத்தத்தில் நிற்க மனமின்றி ஏறி விடுகிறாள்.

     அது பழைய டில்லி ரயில் நிலையம் வரை செல்லும் ஊர்தி.

     சீட்டு வாங்கிக் கொண்டு, ஒரு குண்டன் சர்தார்ஜியின் அருகில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொள்கிறாள்!



சுழலில் மிதக்கும் தீபங்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247