சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)

7

     சாலை ஓரங்களை, கரிய அழுக்குத் தகர டப்பாக்களை மனசில் உருவகப்படுத்திக் கொண்டு வெளியூர் பஸ்கள் அடைத்துக் கொண்டிருந்தன.

     பகல் நேரத்துச் சூரியன், உக்கிரமாக வருத்துகிறது. துணி வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் இன்னும் வயிற்றுப் பிழைப்புக்காக இஞ்சி முரபாவிலிருந்து ஈறு வாங்கி வரையிலும் விற்கும் சிறு பொருள் விற்பனையாளரும் கூவும் ஒலிக் கசகசப்புக்கள் செவிகளை நெருக்குகின்றன.

     ஆப்பிள் கொட்டிக் கிடக்கும் காலம். வண்டிக்காரன் ஒருவன் அவளை வாங்கச் சொல்லிக் கூவி அழைக்கிறான்.

     கிலோ ஐந்து ரூபாய் என்று பேசி வாங்கிப் பைக்குள் போட்டுக் கொள்கிறாள்.

     இங்கே நடமாடும் வர்க்கத்தில் இவளைச் சட்டென்று இனம் புரிந்து கொண்டு எங்கே போகிறீர்கள் என்று கேட்க வர மாட்டார்கள்.

     கிரிஜாவுக்குப் பய உணர்வும் இல்லை; ஏமாற்றி விட்டதான எண்ணமும் இல்லை.

     முற்றிய நெற்றியில் துளி நீர் பட்டு வெடித்தாற் போல் அவள் அப்போதைக்கு ஓர் ஆசுவாசம் தேடி, அந்தக் கூட்டை விட்டு வந்திருக்கிறாள். இயல்பாகவே இருக்கிறது ஒவ்வொரு பஸ்ஸாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.

     டேராடூன் - ருஷிகேசம் - ஹரித்துவாரம் - ரூர்க்கி - மீரட்...

     இரண்டாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் காரில் ஹரித்துவாரம், ருஷிகேசம் முதலிய இடங்களுக்கும் பின்னர் காசி, கையை என்றும் சென்றிருந்தார்கள்.

     எங்கே போனால் என்ன? மாமியாருக்காக இவள் அடுப்புத் தூக்க வேண்டும். புண்ணியப் பயணம். விடுதலை உணர்வுடன் எதையும் அநுபவிக்க இயலாத மாறுதல்...

     அவள் பள்ளியில் வேலை செய்யச் சேர்ந்த முதல் வருஷத்தில், பள்ளித் தலைமை ஆசிரியரான முதியவர், ஒரு வட இந்திய யாத்திரைக்கு அந்த வருஷக் கோடை விடுமுறையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆறு ஆண்களும், பதினெட்டுப் பெண்களும் சேர்ந்த அந்தக் குழுவில், கிரிஜாவைப் போல் ஐந்து பேர் மணமாகாதவர்கள்.

     மற்றவர்கள், கணவன் மனைவியர். நடுத்தர வயதினரும், நடுத்தர வயசைக் கடந்தவர்களும் இருந்தார்கள்.

     கிரிஜா, தானும் போகிறேன். ஆயிரத்தைந்நூறு செலவாகிறது என்று கூறிய போது அண்ணன் “வேண்டாம்” என்று முட்டுக்கட்டை போட்டான்.

     “ஆயிரத்தைந்நூறுக்கு ரெண்டு மூணு சவரனாலும் வாங்கலாமே. நாளைக்கு கல்யாணமானால், போகாமலா இருக்கப் போறே? இப்ப எதுக்குடீ? அண்ணா சொல்றதும் சரிதானே” என்று அம்மாவும் அவனுக்கு ஒத்துப் பாடினாள்!

     “எல்லோரும் போகறப்ப, நான் மட்டும் போகக் கூடாதா? எனக்கொண்ணும் சவரன், நகை வேண்டாம்!” என்றெல்லாம் முரண்டி, பிடிவாதம் பிடித்து, கெஞ்சி அம்மாவைக் கரைத்து அவள் அந்தப் பயணத்துக்கு அவர்களைச் சம்மதிக்க வைத்தாள்.

     கிண்டலும், கேலியுமாக, உமா, கங்கா, பார்வதி, சாவித்திரி அவள் எல்லோரும் எப்படி அநுபவித்தார்கள்! வயசான தலைமை ஆசிரியர் தம்பதியையும் மற்றவர்களையும் குழந்தைகள் போல் சீண்டிக் கொண்டும் பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏறக்குறைய ஒரு மாசம் விடுதலையைப் பூரணமாக அநுபவித்த பயணம் அது.

     ஹரித்துவாரத்தில் அவர்கள் ‘மதராசி தர்மசாலா’ என்றழைக்கப்பட்ட விடுதியில் தங்கினார்கள். கங்கை பின் வாயிலை அலம்பிக் கொண்டு ஓடும்.

     இரண்டாம், மூன்றாம் மாடி முகப்புக்களில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தைப் பார்த்தபடி காலம் காலமாக உட்கார்ந்திருக்கத் தோன்றியது!

     நினைவில் சில நிமிடங்கள் தோய்ந்து நிற்கிறாள்.

     கங்கையின் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டே கடந்த காலம் நிகழ் காலம் கட்டுப் படுத்தாத விடுதலையில் அவள் அமைதியாக இருந்த பின், தெளிந்து தன் பிரச்னைக்கு முடிவு காணலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க இயலாது. குடும்பம்... மெல்லிய இழைகளால் மக்களையும் சுற்றத்தையும் இணைக்கும் நிறுவனம். இது காலம் காலமாக வந்த மரபில் பின்னப்பட்டது. இன்று இராட்சத முட்புதராக அது பெண்ணினத்தை வருத்துகிறதென்றால்...? முதலே தவறா...?

     “ஏம்மா? இது ஹரித்துவாரம் போற பஸ்தானே?”

     சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.

     ஒரு முதிய தமிழ்ப் பெண்மணி, வயசான தன் கணவர், அவர்களைப் போலவே தோற்றமளிக்கும் பெட்டியுடனும் பையுடனும் நிற்கிறார்கள்.

     “ஏம்மா, தமிழ் போல இருக்கியே? தமிழர்தானே? இது ஹரித்துவாரம் போறதா?”

     “ஆமாம், போகும், வாங்கோ...”

     முதியவரின் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறச் சொல்கிறாள். பெரியவருக்குக் கண் பார்வை துல்லியமில்லை போலிருக்கிறது. அவரையும் ஏற்றி விடுகிறார்கள். வசதியாக ஒரு மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர்.

     “நீயும் அங்க தான் போறியாம்மா?”

     “ஆமாம் நீங்க எங்கேருந்து வராப்பல...?”

     “நாங்க மதுரைப்பக்கம், கிராமம்... டில்லிக்கு வந்து அஞ்சு நாளாயிட்டது. தூரத்து உறவுக்காரப் பையன் கரோல் பாகில இருக்கான். கொண்டு ஏத்திவிடணும்னா, ஆபீசில லீவு கிடைக்கல. ஆட்டோ வச்சிட்டுப் போங்கோ. அவனே பஸ் நிறுத்தத்துல கொண்டு விட்டுடுவான். ஹரித்துவாரத்துக்கு அரை மணிக்கொரு பஸ் போறது, சிரமமில்லைன்னு சொன்னான். நாம்ப கேட்டா யார் லட்சியம் பண்ணிச் சொல்ரா? இந்த பஸ் போகும்ன்னா, ஆனா இங்கிலீஷில வேற என்னவோன்னா போட்டிருக்கு? எச் எழுத்தில்லையே, இந்தி படிக்கத் தெரியாது... நல்ல வேளை, நீ தமிழ் பேசறவளாக் கிடைச்சே... ஏதோ ஸ்வாமி இருக்கார்!” அம்மாள் பொரிந்து தள்ளுகிறார்.

     பருமனும் வெள்ளை மஸ்லின் சேலைக்கட்டுமாக, குஜராத்திப் பெண்கள், ஆண்கள், முக்காடும், முன்வகிற்றுக் குங்குமக் கீற்றுமாக உத்தரப்பிரதேசத்துப் பெண்கள், உச்சியில் குடுமி இழைகள் தனித்து இலங்க, கிராமத்து ஆடவர், குழந்தைகள் என்று பஸ் நிறைந்து விடுகிறது.

     கிரிஜா இத்தகைய உலகத்துக்கு ஒரு காலத்தில் பழக்கப் பட்டிருந்தாள். இப்போது மீண்டு வந்திருக்கிறாள். என்றுமே இத்தகைய சூழலுக்கு இவள் அந்நியப்பட மாட்டாள்.

     “எத்தனை மணிக்குக் கிளப்புவானோ?”

     “கித்னே பஜேகோ பஸ் நிகல்தி ஹை?”

     “ஏக் கண்டேகோ...” என்று அடுத்த வரிசைக்காரன் மறுமொழி கொடுக்கிறான்.

     “ஸாடே பாங்ச்... சே... பஜேகோ... பஹுஞ்ச்தீ!”

     “ஆறு மணிக்குள்ள போயிடும்மா...”

     “இருட்டறதுக்குள்ள போயிட்டாத் தேவலை. எங்கிட்ட ஒரு லெட்டர் வாங்கிக் குடுத்திருக்கிறான் அந்தப் பிள்ளை. ஸ்ரீ மடத்துக்குச் சொந்தமான சத்திரத்தில தங்கிக்கலாம்னு. மூணு நாள் சாப்பாடும் போடுவாளாம். நீ எங்கே போறேம்மா வேலையாயிருக்காப்பல...?”

     “...ஆ... டீச்சரா வேலை பாக்கிறவதான். இப்ப டெல்லில இருக்கேன். சும்மா ஒரு ஆறுதலா ரெண்டு நாள் ஹரித்துவாரத்தில் தங்கி கங்கையைப் பார்க்கணும்னு தோணித்து, வரேன்...”

     “எங்க தங்குவியோ?...”

     “...சிநேகிதா இருக்கா. எங்கானும் இல்லாட்ட தருமசாலாவில தங்கணும். அதொண்ணும் கஷ்டமில்ல மாமி!”

     வண்டியோட்டியும் நடத்துனரும் வந்து விட்டார்கள்.

     இறுக்கங்களைக் கரைத்துக் கொண்டு பஸ் நகரைக் கடந்து செல்கிறது. யமுனைப் பாலம்... யமுனையில் தண்ணீர் பெருகி ஓடுகிறது.

     “யமுனைத்தாயே! கிருஷ்ண கிருஷ்ணா! ஜலத்தைப் பார்க்கவே பரவசமா இருக்கு. கிருஷ்ணா, கோதாவரி, எல்லாம் ராத்திரில முழிச்சிண்டு பார்த்தேன். நர்மதை வந்ததுன்னா, எனக்கு எதுன்னு தெரியல. கோடிச்சுக் கோடிச்சு, ஆயுசின் கடைசிக் கட்டமா ஊரை விட்டுக் கிளம்பி வந்துட்டோம். இதுவரையும் எப்படி எப்படியோ சிரமமில்லாம எல்லாம் பார்த்துட்டோம். பத்ரிக்குப் போகணும்னு ஆசைப்படல. அரித்துவாரம் ருஷிகேசம் பார்த்து கங்கையில ஸ்நானம் பண்ணனும்! ரொம்ப இழுக்கும். ஜாக்கிரதையா சங்கிலியப் புடிச்சிண்டு குளிக்கணும்னா. ஸ்வாமிகள் வேற இப்ப அங்க இருக்காளாம்...!”

     அந்தம்மாள் வாயோயாமல் பேசுவது இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

     மீரட்டில் வண்டி நிற்கையில், பையைத் திறந்து ஒரு பிளாஸ்கை எடுக்கிறாள். காப்பியை மேல் மூடியில் ஊற்றி கணவனிடம் “காப்பி குடிச்சுக்குங்கோ!” என்று கொடுக்கிறாள். அவருக்கு மூடி பிடிக்கக் கூட கை நடுங்குகிறது. இவளே பிடித்துக் கொண்டு குடிக்கச் செய்கிறாள்.

     பிறகு உள்ளேயிருக்கும் சிறிய மூடி போன்ற பிளாஸ்டிக் ‘கப்’பில் சிறிது காப்பியை ஊற்றி கிரிஜாவிடம் நீட்டுகிறாள்; “இந்தாம்மா நீயும் ஒரு வாய் குடிச்சுக்கோ.”

     “நீங்க குடிங்க மாமி! எங்கிட்ட பழம் வாங்கி வைச்சிருக்கேன்.”

     “இருக்கட்டும். நிறைய இருக்கு காபி. அத்தனையுமா குடிக்கப் போறேன்? ஆளுக்குக் கொஞ்சம்... டில்லியிலே பால் ரொம்ப நன்னாயிருக்கு...”

     கிரிஜா தட்ட முடியாமல் காபியை வாங்கிப் பருகுகிறாள்.

     இப்படிப் பரிவுடன் யார் அவளுக்கு காபி ஊற்றிக் கொடுத்திருக்கிறார்கள்? அந்த இதமே அதன் சுவையாக நாவில் பரிமளிக்கிறது!

     ஹரித்துவாரம் சென்றடையும் முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.

     பழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்று கூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப் போக்கு வந்து ஒரு பெண்ணையும் பறிகொடுத்தாளாம்.

     கிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும்... ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணூறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்... சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டு தான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.

     “இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்... சாதி கெட்ட பய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி... ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா?...”

     கிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கி விட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச் சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருக்கிறார்.

     சாமு... அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமா? கிழவரின் யுகம் அது வேறு, இது வேறு.

     அந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது... இது பணத்திமிர் - பணச்செருக்கு, ஆடம்பரம்...

     விறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பது போல் பாதுகாக்கிறான். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப் பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதிரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.

     புருஷனாகப் பட்டவன், தூலமாகவும் சூக்சமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கலம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்துவதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்துமில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால் கூட இவர்களுக்குச் சொந்தமில்லை. அவள் தன்னைக் கட்டியவனுக்கு அடிமையாவாள்.

     ஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்தி மயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்‌ஷாவைப் பேசுகிறாள்.

     “நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே? எங்க கூட இருந்துக்கோயேன்? எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே?...”

     இந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற் போல் இன்னொரு ரிக்‌ஷாவையும் பேசுகிறாள்.

     முன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்று நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது; உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.

     தீப ஆரத்தி விடும் நேரம்.

     கௌரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்து ஊற்றி நீராட்டுகிறாள்.

     கிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள். கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.



சுழலில் மிதக்கும் தீபங்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247