பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல் ஒன்பது வரையான திருமுறைகள் தோத்திர வகையையும், பத்தாவது திருமுறை சாத்திர வகையையும், பதினொன்றாவது திருமுறை பிரபந்த வகநயையும், பன்னிரண்டாவது திருமுறை புராணவகையையும் சாரும். இத்திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரமாலை எனவும், தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கும் திருமந்திரமாகும். திருமந்திரம் ஒன்பது தந்திரங்களால் அமைந்துள்ளது. ஒன்பது தந்திரங்களும் ஒன்பது ஆகமங்களின் சாரமாகும். தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரமாகும். முதல் இரண்டு சாத்திர நூல்களான திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் திருமந்திரத்தின் வழி வந்தவையே எனக்கூறலாம். திருமூலர் திருவாவடுதுறையில் தங்கி மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாகக் கூறுவர். பாயிரம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. 1. கடவுள் வாழ்த்து 1. ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச் சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 1 * ஏழுபார்ச் சென்றவன் 2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங் கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 2 3. ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கம் நின்றார் அறியாத பரமனைப் புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே. 3 4. அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப் பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 4 * தெம்மெய்யைப் 5. சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும் தவனச் சடை முடித் தாமரை யானே. 5 6. அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 7. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன் பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. 7 8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8 9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன் தன்னால் தொழப்படுவார் இல்லை தானே. 9 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|