![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 23. ‘விடுதலை’  | 
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 11 ... 
1001 	ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் * வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 88 * வில்வப்பலகை ஆகர்ஷணம் 
1002  	எண்ணாக் கருடனை ஏட்டில் * உகாரமிட்டு எண்ணாப் # பொன்னொளி எழுவெள்ளி பூசிடா வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 89 * அகாரமிட்; யகாரமிட் # பொன்னாளில் 3. அருச்சனை 
1003 	அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1 
1004 	சாங்கம தாகவே சந்தொடு சந்தனம் தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 2 
1005 	அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் * இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3 * இன்பமுடனேவந் 
1006 	எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. 4 
1007 	நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும் * மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே. 5 * மண்ணு வனலத் தோடிவை; எண்ணும் பலனத் தோடிவை 
1008 	வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. 6 
1009 	அறிவரு ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. 7 
1010 	இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் மருளறி யாமையும் மன்னும் அறிவு மருளிவை *விட்டறி யாமை மயங்கும் மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. 8 * விட்டெறி 
1011 	தான்அவ னாக அவனேதான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவன் அன்பிது நாலாம் மரபுறத் தான்அவன் ஆகுமோ * ராசித்த தேவரே. 9 * ராதித்த 
1012 	ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 10 
1013 	நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமவற ஆதி நாடுவது அன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. 11 
1014 	தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும் ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 12 4. நவகுண்டம் 
1015 	நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின் நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும் நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. 1 
1016 	உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே * மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 2 * மிகைத்திடு குண்டங்கள் 
1017 	மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 3 
1018 	கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 4 
1019 	எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே. 5 
1020 	கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. 6 
1021 	நற்சுட ராகும் சிரமுக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும் நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 7 
1022 	நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதென் றாளையும் கற்றும் வின் னாளே. 8 
1023 	வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 9 
1024 	இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. 10 
1025 	முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன் அக்கணன் தானே அகிலமும் உண்டவன் திக்கணன் ஆகித் * திகைஎட்டும் கண்டவன் எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 11 * திசையெட்டுங் 
1026 	எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12 
1027 	மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 13 
1028 	நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகி * நின் றாளே. 14 * நின்றானே 
1029 	நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும் கொண்டஇத் தத்துவம் * உள்ளே கலந்தெழ விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே. 15 * முன்னே 
1030 	எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப் படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு * கண்ணான தந்தமி லாற்கே. 16 * கண்ணான் அந்தமிலார்க்கே 
1031 	அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 17 
1032 	பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 18 
1033 	பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. 19 
1034 	அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. 20 
1035 	முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச் செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 21 
1036 	சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 22 
1037 	மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. 23 
1038 	கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 24 
1039 	உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே. 25 
1040 	கொடியாறு சென்று குலாவிய குண்டம் * அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே. 26 * அடியுரு 
1041 	மாதன மாக வளர்கின்ற * வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்று போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே. 27 * கன்னியைச் 
1042 	பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 28 
1043 	உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் * பயங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 29 * பகங்கண்டு 
1044 	சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே. 30 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் 
1045 	மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1 
1046 	திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி * யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே. 2 * யாம்பால; யம்பல 
1047 	தானா அமைந்தவம் முப்புரம் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையுள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே. 3 
1048 	நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரைஅபி ராமி அகோசரி புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. 4 
1049 	தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. 5 
1050 	குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட * வரத்த நிறமன்று கேலாத்தள் கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றானே. 6 * வரத்தள் நிறமன்னு 
1051 	நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. 7 
1052 	சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள் வத்துவம் ஆய்ஆ ளும் மாசத்தி மாபரை அத்தகை * யாவும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. 8 * யான மனோரணி 
1053 	அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. 9 
1054 	அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவா * ரருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. 10 
1055 	தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காவலன் வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. 11 
1056 	பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனே பராசத்தி புண்ணிய மாகிய போகமே. 12 
1057 	போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 13 
1058 	கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை * நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 14 * நம்பினேன் 
1059 	வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. 15 
1060 	தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. 16 
1061 	நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ மன்றது ஒன்றி * மனோன்மனி மங்கலி ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. 17 * மனோன்மணி 
1062 	ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மணி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. 18 
1063 	உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. 19 
1064 	அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு * வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டானே. 20 * சித்துச் 
1065 	உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல முன்றுற மன்னிநின் றாளே. 21 
1066 	நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. 22 
1067 	ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. 23 
1068 	தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. 24 
1069 	ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல் சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. 25 
1070 	மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆயந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே. 26 
1071 	அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் * யானே. 27 * நானே 
1072 	ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. 28 
1073 	ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு * ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29 * ஹ்ரீங்காரத் 
1074 	தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயிர்வித்துத் தந்த பதினாலும் வானோர் * தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. 30 * தவமும் 6. வயிரவி மந்திரம் * (இஃது ஒரு பிரதியில் ஆதிவயிரவி மந்திரம் என்றுள்ளது) 
1075 	பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1 
1076 	அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 2 
1077 	ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற * பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 3 * போதம் 
1078 	புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 4 
1079 	தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 5 
1080 	ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 6 
1081 	சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் கயனறி யாத வடிவுக்கு மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 7 
1082 	மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்பது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 8 
1083 	பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 9 
1084 	பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர் ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 10 
1085 	கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை * யோகி இறைவி பராசக்தி அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11 * மேலாகி; மோகி 
1086 	பூசனை கந்தம் புனைமலர் மாகோடி யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம்இ லாத மணிமந் திரயோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. 12 
1087 	காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவிநற் காரணி * காணே. 13 * தானே 
1088 	* காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 14 * காரண 
1089 	அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரை செய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. 15 
1090 	உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே. 16 
1091 	தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற வேமத்து இருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை மேவித்து அழுதொடு மீண்டது காணே. 17 
1092 	காணும் இருதய மந்திர முங்கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணு நடுவென்ற வந்தம் சிகையே. 18 
1093 	சிகைநின்ற வந்தக் கவசங்கொண்டு ஆதிப் பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19 
1094 	வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப் பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 20 
1095 	பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக் கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 21 
1096 	கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை * விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22 * வரிசங்கு 
1097 	நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23 
1098 	சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24 
1099 	ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 25 
1100 	கோலக் குழவி குலாய புருவத்துள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே . 26  |