பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 17 ...

1601 முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12

1602 வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13

1603 அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14

1604 மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15

3. ஞாதுரு ஞான ஞேயம்

1605 நீங்காச் சிவானந்த * ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே. 1

* நேயத்தே

1606 ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 2

1607 தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென்ற பூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 3

1608 வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 4

1609 முன்னை யறிவறியாதஅம் மூடர்போற்
பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்து
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 5

1610 காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமும்
நாணாத * நாணமும் நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 6

* நாதமும்

1611 மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே. 7

1612 முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 8

1613 மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் * பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 9

* பரஞானம்

4. துறவு

1614 இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1

1615 பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2

1616 அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 3

1617 நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 4

1618 கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 5

1619 உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினிற் * பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 6

* பூத்தது வேளை

1620 மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 7

1621 நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படம்செய் துடம்பிட மாமே. 8

1622 அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றாள் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 9

1623 தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 10

5. தவம்

1624 * ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1

* ஒடுங்கு

1625 எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் * பெற்றவர்க் கல்லா(து)
இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2

* பெற்றவ ரல்லால்

1626 பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3

1627 இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
* திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4

* திருந்துநஞ்

1628 கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5

1629 பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே. 6

(இப்பாடல் 1586-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1630 அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7

1631 சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8

1632 தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா * மச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9

* மச்சகசன் மார்க்கத்

6. தவ நிந்தை *

(* சமாதி தூடணம்)

1633 ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1

1634 கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் * சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2

* சமாதியைக்

1635 விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை * மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3

* மெய்யுறஞ்

1636 கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே. 4

1637 மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5

1638 * மனத்திடை நின்ற மதிவாள் உருவி
# இனத்திடை நீக்கி இரண்டற $ வீர்த்துப்
@ புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6

* மனத்திலிருந்த
# மனத்தினை
$ வீசி
@ நினைத்த விடத்தே நிலைபெறு மாகில்,
அனைத்துயிர்க்கெல்லாம் அதிபதி யாமே

1639 ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 7

1640 இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் * வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8

* வருமபுலன்; வரும்புலன்

1641 படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே. 9

1642 ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10

1643 பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் * பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11

* புல்காற்

1644 சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12

7. அருளுடைமையின் ஞானம் வருதல்

1645 பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1

1646 தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதியறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2

1647 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3

1648 முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4

1649 சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் * கூடின்அச் சிவலோக மாமே. 5

* கூறில்

1650 புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6

1651 காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7

1652 அவ்வுல கத்தே * பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே # யருந்தவர் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8

* பிறந்தவ்
# அருந்தவம்
(இப்பாடல் 1869-ம் பாடலாகவும் வந்துள்ளது)

1653 கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9

1654 நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே. 10

8. அவ வேடம்

1655 ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1

1656 ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் * வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 2

* அப்புவி யாதலால்

1657 இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 3

1658 இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 4

1659 பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 5

1660 பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 6

9. தவவேடம்

1661 தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1

1662 பூதி * யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2

* யணிந்து

1663 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3

1664 காதணி குண்டலங் கண்டிகை * நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4

* நாகமும் நீறும்

10. திருநீறு

1665 நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1

1666 கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. 2

1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3

11. ஞான வேடம்

1668 ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணி * நிற் பாரே. 1

* நிற்போரே

1669 புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் * பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2

* பூண்பர் அருள் நண்ணத்

1670 சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3

1671 சுத்தித் திரிவர் * கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4

* கழுகடி

1672 அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5

1673 ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6

1674 ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 7

1675 * தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8

* தானன்றித்

12. சிவ வேடம்

1676 அருளால் அரனுக் கடிமைய தாகிப்
* பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1

* பொருளார்ந் தன்னுட பொற்பத னாடி

1677 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே. 2

1678 மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் * றிருப்பார் சிவவேடத் தாரே. 3

* றிருந்தார்

1679 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4

13. அபக்குவன்

1680 குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் * கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1

* கொள்வர்; கொள்வோர்

1681 மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2

1682 ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 3

1683 வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4

1684 பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
* யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5

* பஞ்சச்

1685 தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6

1686 கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7

1687 விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே. 8

1688 வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9

1689 மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவன் அசற்சீட னாமே. 10

14. பக்குவன்

1690 தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1

1691 பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2

1692 பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3

1693 கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள * பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4

* உடல்பொருள்

1694 சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5

1695 தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 6

1696 சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7

1697 சத்தும் அசத்துமெவ் வாறெனந் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் * கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சைத் தகுவோன்சற் சீடனே. 8

* கை காட்டிப்

1698 அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9

1699 சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10

1700 உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11