அத்தியாயம் - 35

     “தீவாளி கொண்டாடிட்டானுவ, மிசின் போட்டெல்லாம் எரிஞ்சி போச்சி!”

     “வீரபாண்டியில பத்து முந்நூறு போட்டு...!”

     “என்னது...?”

     தீபாவளிக்கு வந்த ஆதித்தன் கத்துகிறான். “நம்ம போட்டுக்கு இன்சூர் கூடக்கெடயாது. கைப்பணம் இருபத்தஞ்சாயிரம் போட்டிருக்கமே...! பாவிப்பயலுவ, முட்டாப் பயலுவ, அடுத்தவ வாழப் பொறுக்காத துரோவிப் பயலுவ...”

     பஞ்சாட்சரத்துக்குக் கண்ணீர்முட்டி அழுகையே வந்து விடுகிறது. அந்தப் பஸ்ஸில் அங்கேயே ஏறிவிடுகின்றனர் அவர்கள். வானில் இருள் கவிகிறது.

     லாஞ்சிகளை எரிய விட்டுட்டானுவ... மடப்பயமவனுவ! கிறிஸ்துவம் இதாஞ் சொல்லியிருக்கா? இந்து போட்டு, கிறிஸ்தவம் போட்டு, சாயபு போட்டு எல்லாந்தா எரியவுட்டிருக்கானுவ...!

     “பீற்றர் பய ஏ வார இல்ல?”

     “அவெ எங்கே!...”

     மீனெடுக்க வந்த கௌஸ் சாயபு மணலில் குந்திக் கொள்கிறார்.

     “நேத்து நா மணப்பாட்டுல பாத்தே. ஆத்து மடையில வள்ளங்க நீட்டமா நிக்கிமே? கொறவா இருந்திச்சி. சிலுவையார் மலக்கிப் பக்கமா இளவட்டப் பயலுவ காக்காக் கூட்டமாண்டு கத்திக்கிட்டிருந்தானுவ... ரொம்ப நஷ்டம்... ஒரு போட்டு அம்பதாயிரம் அறுபதாயிரம் மிண்ணாவுமே?”

     “இவனுவ அநியாயமா றால் கூனியெல்லாம் கலச்சிப் போடுறாவ...”

     “நம்ம கரையில எட்வின்பய, பீற்றர், இன்னம் சூசைப்பய எல்லாந்தா போயிருக்கானுவ. இந்நேரம் போலீசு முடுக்கிப் போட்டிருப்பா... எதுக்கும் துணிஞ்சாத்தா நியாயம் பெறக்கும். அப்பம் துவிச்சண்ட போட்டானுவ. தெறிப்பு போச்சி. இப்ப இது... எங்கக்கப்பெங் காலத்தில மொத்தமே கொச்சிக்கரை இங்கெல்லா அறுநூறு மிசின் போட்டுத்தா இருந்திச்சாம். இப்பம் றாலுக்குமட்டும் ஆறு லட்சம் விசைப்படவு - அது விசப்படவுதா வந்திருக்காம்...” என்று மொடுதவம் நியாயம் பேசுகிறான்.

     குலசேகர வாத்தியார், சாமியார் வருவதைப் பார்த்துக் கொண்டு மணியனிடம் மீண்டும் வருகிறார்.

     “நீ... இந்துவாகிவிட்ட பையன். இந்து முறைப்படி, அவருக்குக் கடைசிக் கடன் செய்யணுமப்பா. முடிநீக்கிக் குளித்து விட்டுவா...” என்கிறார்.

     மணியனுக்கு வெறுப்பாக இருக்கிறது.

     “சாமி, இப்போது சூழல் சரியில்ல. மனசு ஒரேயடியாக் குழம்பிக் கிடக்கு. அதது நடக்கிறபடி நடக்கட்டும். இப்ப இவங்களைத் தடுக்கிறாப்போல எதும் செய்ய வேணாம்...”

     முன்பு புயலடித்தபோது குடல் வெளியே குழல் போல் பிதுங்க அவனுடைய சிவப்பு நாய் கண்களில்லாமல் வாயைப் பிளந்து கொண்டு கரையில் கிடந்த கோலம் அவன் கண்முன் தோன்றுகிறது.

     அவன்தான் குழி தோண்டி அதை ஒரு பக்கம் புதைத்தான். ஏலி அழுகிக் கிடந்தாளாம். அந்தக் குழந்தையை - அவர்கள் புதைத்தார்கள். இந்துவென்ற மண் தன் கடமையைச் செய்யாமல் இந்தச் சடலங்களைத் தனதாக்கிக் கொள்ளாமலிருக்கவில்லை. கிறிஸ்தவமானாலும் இந்துவானாலும் சாயபுவானாலும் மனிதன் மனிதன்தான். எல்லா ஜீவராசிகளையும், இலை குப்பைகளையும் கூட மண் தனதாக்கிக் கொள்கிறது.

     இந்த அப்பனைப் போலீசு அடிக்க உடந்தையாக இருந்த கிறிஸ்தவம் இன்று பரலோக ராச்சியம் செல்வதில் அக்கறை காட்டுகிறது. சாமியார் ஜபம் செய்கிறார்.

     விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவனான இருதயராஜின் சவ அடக்கம், அவர் பெரிதும் விரும்பியிருக்கக் கூடிய அளவில் நடக்கிறது. அவருடைய குடும்பத்திலிருந்து புனித சேவைக்கும், தேவப்பணிக்குமாக ஒரு கன்னியை அளித்து விசுவாசத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவே, முழு ஜபத்துடன் கோயிலின் முன் அவரது உடல் இறக்கி வைக்கப் பெறும் மரியாதையையும் பெறுகிறது. மணியன் அருகே சென்று நிற்கிறான். குடிமகன் தோண்டிய குழியில், சாமியார் மந்திரம் ஜபித்து, உடலை இறக்கி முதல் மண்ணைப் போட்டபிறகு, அவனும் போடுகிறான்.

     அவருடைய மையம் புதைக்கப் பெற்ற இடத்தில் அழகியதொரு கட்டிடம் எழுப்பவும் லில்லி ஏற்பாடுகள் செய்து விடைபெறுகிறாள்.

     கணவன் என்ற பந்தம் கழன்று விட்டது. ஆத்தாளிடம் அதற்கு அடையாளமாக இருந்த பொற்றாலி வெகு காலத்துக்கு முன்பே போய்விட்டது. இந்து சமயம் தழுவிய போது மஞ்சள் கயிறும் குங்குமமும் தரித்துக் கொண்டாள். வாழ்க்கைப் பாதையின் மேடு பள்ளங்களில் அல்லாடும் போது, அதுவும் புதுப்பிக்கப்படாமல் முக்கியத்துவமிழந்தது; பிறகு எதுவுமே யில்லை.

     இரண்டு பையன்கள்... அப்பனின் இறுதிச்சடங்குக்குக் கூடச் சொந்தமில்லாமல் போய்விட்டார்கள். ஏனெனில் பீற்றரைப் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே போலீசு பிடித்துப் போயிற்று. இளையவன் ஊரை விட்டு ஓடிப் போனான். அகன்ற உலகில் சொந்தமும் பந்தமும் துச்சமென்று ஒதுக்கி வாலிபத்தின் எழுச்சியில் கிளர்ந்து வரும் வேட்கைகளைக் குறியாகக் கொண்டு போனான். இளரத்தத்தின் சூடுகள் ஆறும் போது வீட்டின் நினைவு வருமோ?...