ரங்கோன் ராதா 1 "ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது. என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான். "நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன். ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று. காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |