வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

1

     உலகமே இருளில் மூழ்கிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு அந்தப் பகுதி இருளாக இருந்தாலும் அந்த இருளைக் கண்டும் அஞ்சாமல் இரண்டு பேர், அதுவும் இளம் பெண்கள், குதிரைகள் மீது அமர்ந்து வெகு வேகமாகச் சென்றனர். ஆனால், அவர்கள் அதுகாறும் வந்த வழி மாறி இப்போது மலைகள் குறுக்கிட்டுவிட்டன. எனவே மலைவழிப் பாதையில்தான் இனி செல்ல வேண்டும். அவர்கள் அக்காவும், தங்கையுமான அந்த அழகுக் குமரிகள் இனி பயணம் எளிதல்ல என்று புரிந்து கொண்டார்கள். என்றாலும் வேறு வழியில்லை, போய்த்தானாக வேண்டும். ஏனெனில் எதிரிகள் எந்த நிமிஷத்திலும் இவர்களைப் பிடித்து விடலாம். எனவே, மலைச்சரிவுப் பாதையில் நிதானமாகக் குதிரைகளை ஏற்றி மேலும் சென்றார்கள்.

     என்றாலும் அவர்களில் மூத்தவளான, அமரசுந்தரி என்ற அழகான பெண்ணுக்கு மேல் மூச்சு வாங்கியது. உடம்பை என்னவோ செய்தது. சோர்வு அவளைத் திடீரென்று பிடித்துக் கொண்டது. அவள் குதிரையும் பின் வாங்கியது.

     அக்காவின் சிரமநிலை தங்கைக்குப் புரிந்தது. தவித்துப் போனாள். ‘பூரண கர்ப்பிணியான அவள் இந்த நிலையில் இத்தகைய பயணம் மேற்கொள்ளும்படி விதி செய்துவிட்டதே, இல்லை, பாவிகள் செய்துவிட்ட கொடுமை இது. அவர்களைச் சும்மாவிடக் கூடாது. பழிக்குப் பழி வாங்காமல்...’ என்று அவள் பலபட நினைத்துக் குமுறிய போது அக்காள் மெதுவாக, “சற்று நேரம் இறங்கி அமருவோம் புவனி. என்னால் மேலே நகர முடியாது” என்று குதிரையிலிருந்து இறங்கிவிட்டாள். அவள் இறங்கியதும் குதிரை ஒரு துள்ளுத் துள்ளி நகர்ந்தது. சட்டென ஏதோ பள்ளத்தில் அதன் கால்கள் வைக்கப்பட்டதாலோ என்னவோ ‘கடபுட’வென்று கற்கள் உருண்டன. குதிரையும் மிரண்டு போய் இரண்டு மூன்று முறை கனைத்தது! சரி, இந்தப் பயங்கரமான அமைதியில் இந்தப் புரவியின் கனைப்பு நிச்சயமாக விபரீதம் விளைவிக்கும் என்று ஊகித்தார்கள் அக்காளும் தங்கையும். என்றாலும் அக்காள் மேலும் உட்கார முடியாமல் சற்றே சாய்ந்து கொண்டாள் ஒரு கல்லின் மீது. இருள், பனி, குளிர் எல்லாமே இருந்தாலும், வேறு வழியில்லையே!

     “தாத்தா, ஏதோ ‘கடபுட’ சப்தம், பிறகு குதிரையின் கனைப்பு... உங்கள் காதில் விழுந்ததா?” என்று ஒரு ஆண் குரல் அருகில் கேட்டதும் புவனசுந்தரி திடுக்கிட்டாள். சரி. எதிரிகள் மிகவும் அண்மையில்... “அக்கா, அக்கா..” என்று காதருகில் வாய் வைத்துக் கூப்பிட்டாள். பயனில்லை. அவள் மூர்ச்சையானவள் போலக் கிடந்தாள்.

     மீண்டும் பேச்சுக் குரல் கேட்டதும் புவனி உண்மையில் பயந்தே போனாள். எதிரிகளாயிருந்தால் நாம் இனி தப்ப முடியாது. ஆனால்... திரும்பவும் அவர்கள் பேசுவது அவள் காதில் தெளிவாகக் கேட்டது.

     “தம்பி, சத்தம் போட்டுப் பேசாதே. யாராயிருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எங்கும் அமைதியாயிருப்பதாலும், மலைப்பகுதியாக இருப்பதாலும் சிறு ஒலி கூடப் பெரிதாக எதிரொலிக்கும்” என்று கரகரத்த குரலில் ஒருவர் பதில் பேசியதும், ‘இவர் வயதானவர், இவர் தான் தாத்தா. அவர் பேரர் போலும்!’ என்று ஊகித்துக் காதுகளைத் தீட்டிக் கொண்டாள் கன்னியிளம் பெண்!

     “தாத்தா, யாரானாலும் அருகிலிருந்தால் அவர்கள் காதில் விழத்தான் செய்யும்!” என்று கூறினான் கேலியாக.

     “கேலி செய்யும் நேரம் இல்லை இது. நம் நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் யாரும் இந்நேரத்தில் இங்கு வரமாட்டார்கள். நாம் நேற்று வலுவாக இருந்த போதே நம்முடன் சேரப் பயந்த நண்பர்களா இப்போது பின்னே வருவார்கள்?” என்று சற்றே சினமும் வெறுப்பும் கலந்த குரலில் பதில் கேள்வி எழுந்தது.

     “மன்னித்திடுங்கள் தாத்தா! ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன். நண்பர்கள் என்றாலும் மனிதர்கள்தானே?”

     “நண்பர்கள் என்னும் போது நமக்குப் புது வாழ்வளித்த படவேட்டார் நினைவு தோன்றி இதயத்தில் குத்துகிறதே தம்பி... நினைக்க நினைக்க இதயம் பதறுகிறதே தம்பி... எத்தனை ஆண்டுகளாக அவர்கள் இந்நாட்டை ஆண்டு வந்தனர்? நாம் அடைக்கலம் நாடியதும் நொடியும் தயங்காது ஆதரித்த மல்லிநாதச் சம்பூவராயர் ஒரு தெய்வ புருஷன். அப்படிப்பட்ட அவர்கள் நிலை இப்படியா ஆக வேண்டும்? நாமாவது பல பல ஆண்டுகளாக நாடோடிகளாக இருக்கிறோம். என்றாலும் நாம் ஆண்பிள்ளைகள். அவருக்கோ இரு பெண்கள்தான். ஒரு மகன் கூட இல்லை. இப்பொழுது அவரும் இல்லை. அவர்கள் வீட்டு உப்பைத் தின்ற நாம் அந்தக் குடும்பத்துக்கு, அந்தப் பெண்களுக்கு ஒரு சின்ன உதவி கூடச் செய்ய முடியவில்லையே குமாரா... என்ன துர்ப்பாக்கியம் பார்த்தாயா?” என்று நொந்து கொண்டது கரகரத்த குரல்.

     “தாத்தா! நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது என் உள்ளம் துடிக்கிறது. ஆனால் நாம் செயலற்று நம் உயிர்காக்கக் ஓடிக் கொண்டே இருக்கிறோமே... நாம் போய் இந்த நிலையில் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்?”

     “அதுவும் சரிதான். ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வென்ன? படவேடு ராஜ்யாதிபதி ஏகாம்பரச் சம்பூவராயர், அவர் மகன் ராஜநாயணச் சம்பூவராயர், அவர் மகன் மல்லிநாதச் சம்பூவராயர் யாவரும் தங்கமானவர்கள்.”

     “தாத்தா... இந்த அநியாயமான கொடுமையைச் செய்தவர்கள் நிச்சயமாக உலூப்கான் இல்லை என்பதுதான் என் கருத்து” என்று அவன் அவரிடம் கூறியதும் புவனசுந்தரி காதுகளைத் தீட்டிக் கொண்டு உன்னிப்பாகக் கவனித்தாள் வரப்போகும் பதில் அறிய!

     “இல்லை குமாரா... நாம் இப்போது இருட்டில் எதுவும் தெரியாமல் எப்படி விழிக்கிறோமோ அதே போன்றதுதான் அந்த விபரீதமும்! நாம் இந்நேரத்தில் யாதவராயரையோ பல்லாளரையோ குறைகூற வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் சம்பூவராயரின் ஆதரவாளர்களேயன்றி எதிரிகள் அல்ல. தவிர சம்பூவராயர், அவருடைய மாபெரும் மாளிகை, சொத்து, சுதந்திரம், அவர் அருமையாகச் சேர்த்திருந்த அரும் பொருள்கள் யாவும் நாசம்.”

     “படைகள் அத்தனை ஏது தாத்தா? இரண்டாயிரம் பேர்கள்தானே!”

     “ஆமாம்! ஆனால் அவர்கள் அத்தனை பேரும் அழிந்து விட்டிருக்கலாம் அல்லவா? நம்மைத் துருக்கர்கள் இப்படி விரட்டிக் கொண்டேயிருக்கா விட்டால் நாம் இப்பொழுது எப்படியாவது அவர் மகள்களுக்கு உதவியிருக்கருக்கலாமே?” என்றார் பெரியவர்.

     “நீங்கள் சொல்வதைக் கேட்க விந்தையாயிருக்கிறது. இரண்டாயிரம் பேர்களை அழிக்க இருபதாயிரம் பேர்கள் வந்த போது, நாம் போய் என்ன தாத்தா சாதித்திட முடியும்? நாமிருக்கும் நிலையில் நாம் எப்படித் தாத்தா அவர்களுக்கு உதவி செய்ய முடியும்?”

     “தம்பி! நீ கேட்கும் கேள்வி என்னவோ நியாயமானதுதான். ஆனால் நாம் அவர் விஷயத்தில் நிச்சயமாகக் கடமை தவறியவர்களாய் விட்டோம். என்னையும் உன் தந்தையையும் சம்பூவராயர் எதிரிகளுக்குத் தெரியாமல் ஒரு நாள் அல்ல, இருபது மாதங்கள் பாதுகாத்தார். பாகூர் சர்வநாசமானதும் நம் நிலைமை படுமோசமாகிவிட்டது. உன் தந்தை, மூன்றாம் முறை மாலிக்காபூர் இப்பகுதி வந்த போதே அவனுடைய தாக்குதலுக்கு இலக்காகிவிட்டான். நீ அன்று நெட்டூரிலிருந்ததால் தப்பினாய். என்றாலும் நான் உன்னைத் திரும்ப பாகூருக்கு அழைத்து வந்ததுதான் பெரும் தவறாகிவிட்டது. மாலிக் போய்விட்டான் என்றுதான் நம்பினேன். அவன் ஆள் தொடர்ந்து வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் வந்தான். தன் அண்ணனைக் கொன்றவனை, அதாவது உன் தந்தையை பதுங்கியிருந்து பழி தீர்த்துவிட்டான். இப்போது நம்மையும் துரத்துகிறான். நாம் எங்கு ஓடினாலும் அவன் விடப் போவதில்லை. ஏனென்றால் அவனுக்குத் துணை வருபவர்கள் முந்நூறு பேர். அது மட்டும் அல்ல, இந்த உலூப்கானும் அவனை உன் விருப்பம் போல் செய் என்று அனுமதித்துவிட்டான்...”

     கிழவனும் குமரனும் பேசிய பேச்சுக்கள் அக்காளைத் தாங்கியிருந்த குமரியின் மனதில் அதிதீவிரமான, ஏராளமான சிந்தனைகளைக் கிளப்பிவிட்டன. இதே சமயம் சற்றே முனகலுடன் தனது சோர்ந்த நிலையிலிருந்து தெளிந்திட முயன்றாள் அமரசுந்தரி.

     “தாத்தா! நாம் நெட்டூர் செல்லும் வரைதான் இந்தப் பயம். பிறகு நாம் திருப்பியடிக்கலாம். அல்லது கடைசி வரை நாம் போரிட்டே உயிரை வேண்டுமானாலும் இழக்கலாம். தவறில்லை. ஆனால் அவர்களைப் பழிவாங்காமல் நம்மால் சாக முடியாது. தந்தையைப் பதுங்கி மறைந்து கொன்றவனை நேரிடையாக நான் சந்தித்து, வெளிப்படையாகப் போரிடும் வரை, ஒன்று வெற்றி அல்லது தோல்வி ஏதோ ஒன்று முடிவாகும் வரை, இந்த உயிர் தேவைப்படுகிறது. இரண்டாவதாக உங்களை நான் நெட்டூரில் கொண்டு போய்ச் சேர்த்திடுதல் வேண்டும். எனவே அது வரை ஒளிந்து மறைந்துதான் காலமோட்ட வேண்டும்” என்றான் குமாரன்.

     பெரியவர் பதில் ஏதும் கூறாததால் இளைஞனும் பேசவில்லை. இருவர் பேச்சும் சட்டென நின்றுவிட்டது. சிறிது நேரம் அந்தப் பகுதியில் நிலவிய பயங்கர அமைதி ஏனொ தெரியவில்லை, புவனசுந்தரியின் மனதில் பயங்கர பீதியை உண்டாக்கியது. அக்காள் தெளிந்தால் சற்றே தைரியம் உண்டாகலாம். சற்று அருகாமையில் வந்திருப்பவர்கள் அவர்கள் பேச்சிலிருந்து பார்த்தால் நம்மை ஆதரிக்கக் கூடியவர்களாகத்தான் தெரிகிறது. தந்தையை வெகுவாக மதித்துப் பேசினார் பெரியவர். ஆனால் ஏன் இன்னொருவன்... வயதில் வாலிபனாகத்தான் இருக்க வேண்டும். அப்படி வடக்கிலிருந்து வந்த முகம்மதியர் தந்தையைக் கொல்லவில்லை, மாளிகையை அழிக்கவில்லை, ஆலயத்தை இடிக்கவில்லை என்று அழுத்தமாக மறுத்துப் பேசுகிறான். நேரில் கண்டவர்கள் நாம். கொடுமையை அனுபவித்தவர்கள் தானும் தன் சகோதரியும். அசன்ஷாவின் இடிக்குரல், அட்டகாசச் சிரிப்பு, ஆர்ப்பாட்டமான கட்டளைகள், கோரமான செயல்கள் யாவற்றையும் அனுபவித்த தங்களுக்கு அல்லவா தெரியும் உண்மை...

     அமரசுந்தரி சற்றே அசைந்தாள்... “புவனி...” என்ற தங்கமான குரல் தீனமாக எழுந்தது அவளிடமிருந்து. சற்றே தெளிந்தாள் அக்காள் என்ற சிறு உற்சாகம் புவனசுந்தரிக்குப் புதுத்தெம்பு கொடுத்தது.

     “அக்கா...” என்று ஆதங்கத்துடன் அழைத்தவள், அவளை மெதுவாக உட்கார வைக்க முயன்றாள்.

     “புவனி.. இப்பப் பரவாயில்லை தெளிந்து விட்டேன். சற்று நேரமானால் என் நிலைமை திருந்திவிடும்...” என்றாள்.

     “அக்கா, நாம் இருக்குமிடம் ஒரு பாறையின் அடிப்பாகம் என்று இதுவரை நினைத்தது தவறு. நாம் ஒரு நீண்ட பாறையின் இடைப் பகுதியில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்...”

     “அது எப்படி?”

     “கீழே யாரோ இரு ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலத்தான் யாருக்கோ பயந்து ஓடி வருகிறார்கள் போல் இருக்கிறது!”

     “பேஷ்!” என்றாள் அமரசுந்தரி வெறுப்புக் குரலில்.

     “என்ன அக்கா?”

     “நாம்தான் பெண்கள். ஓநாய்களிடமிருந்து தப்ப ஓடுகிறோம். நீ கூறுவதைப் பார்த்தால் தொண்டை நாட்டு ஆண்களும் பெண்களாகிவிட்ட மாதிரி அல்லவா தெரிகிறது!”

     “இல்லை அக்கா! நான் அப்படி நினைக்கவில்லை. அவர்களும் ஏதோ ஒரு பெரும் இலட்சியத்துக்காகத்தான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஏன் என்றால் அவர்கள் பேச்சுக்கள் என் காதில் விழுந்தன.”

     “அப்படியானால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் புவனி!”

     “ஏன் அக்கா திடீரென்று இப்படிக் கூறுகிறாய்?”

     “நம் அனுதாபத்தைப் பெறுவது போல் பாசாங்கு செய்து நம் பகைவர்கள் நம்மை வஞ்சிக்கவே அம்மாதிரி நடித்திருப்பார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் புவனி?”

     “நம் நாட்டை நாசமாக்கியவர்கள் மகம்மதியர்கள் அல்ல. நம் தந்தையைக் கொன்றவர்களும் மாளிகையை அழித்தவர்களும் அவர்கள் இல்லை என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்” என்று அவள் சுருக்கமாகக் கூறியதும் அமரசுந்தரி திடுக்கிட்டாள்.

     இவர்கள் எவ்வகையான சந்தேகத்துக்கு உள்ளாயினரோ அதே சந்தேகத்தை அவர்களும் கொண்டார்கள் என்றால்... அவர்கள் நம்முடைய பகைவர் அணியைச் சேர்ந்தவர்களாயிருக்க முடியாதே...

     “அப்புறம் அக்கா, நம் தந்தை அவர்களை நீண்ட காலம் ஒளித்து வைத்திருக்கிறார்... இருபது மாதங்கள் அப்படி அவர்களை...” என்று அவள் கூறி முடிக்கு முன்னர் அமரசுந்தரி பதறிப் போய் “புவனி... புவனி... நீ என்னதான் சொல்லுகிறாய்? நம் தந்தையால் அப்படி ஆதரிக்கப் பெற்றவர்கள்... வில்லவரையர்கள் அல்லவா? அவர்கள் மகா வீர பரம்பரையினராயிற்றே! அவர்களுக்கும் நீ கூறும் இந்த நயவஞ்சக நரிகளுக்கும்...”

     “அக்கா... அக்கா... ஏன் இப்படிப் பேசுகிறாய் நீ? நான் பெரியவர் சொன்னதையும் இன்னொருவர் குறுக்கிட்டுப் பேசியதையும் நன்றாகக் கேட்டேன் அக்கா... ஒருவேளை நீ கூறும் அதே வில்லவரையர்களாக...”

     அமரசுந்தரி திடீரென்று வெறி பிடித்தவளைப் போல வாய்விட்டுச் சிரித்தாள் பயங்கரமாக... அதன் கிரீச்சொலி மலைகளில் எதிரொலித்தது. அந்த நடுநிசியில் இன்னும் அதிக பயங்கரத்துடன் திரும்பத் திரும்பப் பிரதிபலித்து. அது நேரம் வரை இருந்த அமைதியைக் கலைத்துவிட்டது!

     “பில்லம்மா...!” என்ற பயங்கரமான இடிக்குரல் இந்தக் கிரீச்சுக்குரலின் எதிரொலியை முறியடித்தது.

     “இதோ இருக்கிறேன் தேவா!”

     “இப்பொழுது கேட்ட சிரிப்பு...?”

     “ஒரு பெண்ணுடையதுதான் தேவா...!”

     “நம்முடைய ஆட்களை எல்லாம் நாலா திசைகளிலும் விரட்டு... அவர்கள்தான் இங்கே எங்கோ பதுங்கியிருக்கிறார்கள். விடக்கூடாது. மயிரிழை கூட வழிவிடாமல் மறித்திட வேண்டும். பிடிப்பவர்களுக்கு ஆயிரம் வராகன் என்று சொல்! உம்...”

     “உத்தரவு தேவா... நாமெல்லாம் யார் என்பது...”

     “பரவாயில்லை. இனி தெரிந்தால் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. துருக்கர்தான் படவேட்டை அழித்தவர் என்று உலகம் உறுதி கொண்டுவிட்டது. அது வரையில் நமக்கு ஒரு வெற்றிதான்.”

     “என்றாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை தேவா... உலூப்கான் ஆட்கள் இன்னும் இந்தப் பகுதியில்தான் சுற்றுகின்றனர்!”

     ‘தேவா’ என்று மற்றவனால் மரியாதையாக அழைக்கப் பெற்ற கம்பிலித்தேவன் மிகப்பயங்கரமாகச் சிரித்தான். அதன் எதிரொலியும் பயங்கரமாகவே இருந்தது. நடுங்கும் குளிரில் பாறையின் அடியில் பதுங்கியிருந்த சகோதரிகள் மேலும் நடுங்கி விட்டனர். அக்கா ஏன் சிரித்தாள் அவ்வாறு என்று கவலை கொண்ட தங்கை இனி தப்புவதென்பது நிச்சயமில்லை என்று முடிவு செய்துவிட்டாள். ஆனால் அமரசுந்தரி நம்மைப் போல துரதிஷ்டசாலிகளுக்கு ஆண்டவனே வந்து உதவாத போது வில்லவரையர் வந்தா உதவுவார்கள்? என்று அவநம்பிக்கையில்தான் அப்படிச் சிரித்தாள் என்பது அவளுக்குத் தெரியுமா?

     “அக்கா... நீ மீண்டும் மூர்ச்சையாகிவிடாதே... எனக்கு உண்மையில் பயம் ஏற்பட்டுவிட்டது. இங்கிருந்து நாம் குதித்தாலும் அவர்கள் மடியில்தான் போய் விழுவோம். மேலே செல்லவும் அச்சம்” என்று முணுமுணுப்பது போலப் பேசினாள்.

     அமரசுந்தரி தனக்காகப் பயப்படவில்லை. தான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டு விட்டோம் என்று மட்டும் வெகுவாகத் தவித்து விட்டாள். எனினும் இனி வேறு வழியில்லை. தங்கை காக்கப்பட வேண்டும். கர்ப்பிணியான தான் உயிரை விட்டாலும் வயிற்றிலிருக்கும் சிசு... குமுறினாள் பாவம்...

     “குதிரைகள் அங்கும் இங்கும் ஓடுகின்ற ஒலி... அப்படியானால் நீ சற்றுமுன் கேட்ட பேச்சு உண்மையானதுதான் புவனி... இந்தக் குரல்தான் நான் அன்று கேட்டது. நாம் உலூப்கானின் தளபதி அஸன்ஷா என்று நம்பியது... நீ கேட்ட பேச்சு மிக மிக உண்மை...” என்று முணுமுணுத்தாள் அமரசுந்தரி.

     “அக்கா... நீ கூறுவதைப் பார்த்தால்...?”

     “பார்க்கவும் வேண்டாம், கேட்கவும் வேண்டாம். நீ கேட்ட பேச்சின் ஒலி எந்த திசையிலிருந்து...”

     “பில்லமா.. அதோ அந்தக் குன்றின் கீழே ஏதோ அசைகிறதே! ஏதோ நகருகிற மாதிரி இருக்கிறது... கவனி...”

     “நிழல்கள் மாதிரி நகர்கின்றன.. இரட்டை நிழல்கள் தேவா.. அவர்கள்தான்.”

     “ஆம்! சரி, அந்தப் பக்கத்துக்கு ஆட்களை அனுப்பு... உம் சீக்கிரம். அதோ அந்த நிழல்கள் மறைகின்றன... ஓ! விடாதே பிடி...”

     மீண்டும் நாலா திசையிலும் ஆட்கள் நகருகிறார்கள். குதிரைகளின் குளம்படி ஒலிகள் பாறைகளின் மீது நடப்பதால் படபடவென்று ஒலித்தன.

     “தாத்தா... இங்கே எங்கேயோதான் அந்த அபலைப் பெண்கள் பாவம் சிக்கியிருக்கிறார்கள். நாம் அதிக நேரம் கம்பிலியை ஏமாற்ற முடியாது. நம்மை அவன் கண்டு பிடித்துவிட்டால் நாம் மட்டும் அழிய மாட்டோம்... அந்தப் பெண்களும் பாவம்...”

     “குமாரா... கூடாது கூடாது. நிச்சயம் அவர்கள் சம்பூவராயர் மகள்கள்தான். நாம் செத்தாலும் சரிதான். அவர்களை இந்தப் பாவிகளிடம் சிக்கவிடக் கூடாது.”

     “செத்தால் எப்படி தாத்தா காத்திட முடியும்? உங்களால் நடக்க முடியவில்லை. என்னால் உங்களையும் சுமந்து...”

     “தேவையில்லை. இனி நான் உயிர் வாழ்ந்து பயனில்லை. ஏகாந்த வில்லவராயன் ஏகாம்பரச் சம்பூவராயர் குடும்பத்துக்காக அவர்கள் வீட்டுப் பெண்களின் மானங்காத்திடத் தன் உயிர் இழந்ததாக இருக்கட்டும். பரவாயில்லை, நீ தப்பிவிட வேண்டும் அவர்களுடன். முதலில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து நீ அவர்களுடன் எப்படியாவது தப்பிப் போய்விட வேண்டும்.”

     “தாத்தா...”

     “குறுக்கே பேசாதே... நான் எண்பதை நெருங்குபவன். நீ இப்போதுதான் இருப்பதைத் தாண்டியவன். எனவே என் காலம் முடிந்தது. உன் காலம் துவங்குகிறது. கம்பிலி இந்த நாட்டைப் பிடித்துள்ள ஒரு பயங்கரப் பேய். நீ வில்லவன். எனவே பழிக்குப்பழி வாங்குவது உன் கடமை... புரிகிறதா? நீ இன்னமும் நீ உலூப்கானை நம்புகிறாய்... எனக்கு அவனைப் பற்றித் தெரியாது. என்றாலும் இந்தக் கம்பிலியைவிட கொடியவனாக அவன் இருக்க முடியாது. எனவே நீ புறப்படு. மெதுவாகப் போய் அந்தப் பெண்களைக் கண்டு பிடித்து, ‘பயப்படாதீர்கள், நான் நம்பத் தகுந்தவன். ஏகாந்த வில்லவரையன் மகனான வீராந்தகன் மகன் விஜய குமார வில்லவரையன்...’ என்று விநயமாக அறிவித்துக் கொள்வதுடன், இதோ இந்த வாளை அந்தப் பெண்களிடம், குறிப்பாக அமரசுந்தரி என்பவளிடம் காட்டிடு. இது போதும். அவர்கள் நம்புவர் நிச்சயமாக...”

     “ஆனால் தாத்தா...”

     “இனியும் தயங்காதே. இறைவன் என்னை எது வேண்டும்மானாலும் செய்யட்டும் குமாரா... புரிகிறதா? நாம் வில்லவரையர்கள் குமாரா... நமக்குக் காடு, மலை, புலி, சிங்கம், எல்லாம் கிள்ளுக் கீரைகள். புரிகிறதா...? புறப்படு. இறைவன் அருளிருந்தால் நான் நெட்டூர் சேருவேன். இல்லாவிட்டால் என்னுடைய ஆதிகால நண்பர், தொண்டை நாட்டு மாவீர மல்லிநாதச் சம்பூவராயன் குமாரிகளுக்காக உயிர்த் தியாகம் செய்தவானாவேன். புறப்படு... உம்...”

     “பில்லமா... ஏதோ பேச்சுக்குரல் கேட்கிறதில்லையா?” என்ற பயங்கர கேள்விக்குரல் அருகே எழுந்ததும் இருவரும் மவுனமாயினர். ஆனால் இவர்களுடைய உரையாடல் முழுமையும் சகோதரிகளின் காதில் மிகத் தெளிவாகக் கேட்டன. இருவரும் இந்தப் பேச்சின் காரணமாகவோ என்னவோ அந்நேரம் கண்ணீர் சிந்தினர்!

     “அக்கா... காதில் விழுந்ததா?”

     “நன்றாக விழுந்தது புவனி. அவர்தான் இந்தத் தென்னகத்தை மாற்றார்களின் கையில் சிக்கவிடாமல் காத்த மாவீரர் ஏகாந்த வில்லவரையர். நம் தாத்தாவுக்கு மிகவும் உற்ற தோழர். மைலம் முதல் மயிலை வரை இவரும், இவர் மகன் வீராந்தகரும் பெற்றிருந்த புகழ் மகத்தானது. இவர் மகன்தான் நம் அப்பாவுக்கு மிகவும் நெருங்கிய தோழரான வீராந்தகர். மாலிக்காபூரை இரும்புக் கோட்டை போல் எதிர்த்து நின்றவர். கம்பிலியை ஓட ஓட விரட்டி போளூர், திருவண்ணாமலை, ஏலகிரி, புங்கனூர் வரை நாயை அடித்துத் துரத்துவது மாதிரி துரத்தியடித்தவர். ஆனால் அதே சமயம்...” அவள் மேலே பேசுவதற்குள் மிகவும் அருகே ஏதோ சத்தம் கேட்டதும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்தாள் புவனசுந்தரி.

     “பில்லமா... அதோ கவனி! அங்கிருந்துதான் சத்தம் வருகிறது. நல்லகாலம், நாம் அதிகம் அலைய வேண்டாம். ஆட்களை இப்படியே வளைத்துக் கொண்டு கீழ்ப் பக்கம் பத்துப் பேராகவும் மேலே பத்துப் பேர்களாகவும் நெருக்கமாக நகரச் சொல்.”

     “அதோ இரு நிழல்கள் நீளுகின்றன... பேஷ்... மேலே மேலே! இதோ, ஆகா...! விடாதே... விடாதே.”

     “ஆஹாஹா...!” ஒரு பயங்கரமான சிரிப்பு எதிரொலித்தது.

     “அதென்ன கோரமான சிரிப்பு பில்லமா...? யார் அவர்கள்? ஆண் குரலாகவல்லவா இருக்கிறது... கொஞ்சம் பொறு.”

     “அசன், ஆட்கள் அத்தனை பேரையும் இந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துக் கொள்ளும்படி உத்தரவிடு. இங்கேதான் அந்த கயவன் இருக்கிறான். உம்...”

     “உத்திரவு” என்று நிதானமாக கட்டைக்குரல் பதில். திடீரென்று ஏகப்பட்ட கற்கள் ‘கடபுட’வென்று மலை மீது இருந்து உதிருகின்றன.

     “பில்லமா... புரிகிறதா யார் என்று?”

     “நான் அப்பொழுதே எச்சரித்தேன் தேவா. நீங்கள்தான்..” என்று அவன் பயந்து நடுங்கிய குரலில் பதில் அளித்ததும், “சரி சரி, அழுது தொலைக்காதே... நம் ஆட்களைப் புறப்படச் சொல்... அந்தச் சிறுக்கிகளுக்காக நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. உலூப் ஏராளப் பேர்களுடன் வந்திருக்கிறான். சீக்கிரம் தப்பித் தொலைவோம்...”

     பில்லமன் ‘தடதட’வென்று ஓடுவது பாறையில் ‘படபட’வென்று எதிரொலித்தது. அடுத்த நொடி குதிரைகள் மீது அவர்கள் ஏறிவிட்டார்கள்.

     “அசன்! இதோ இப்படி... இந்தப் பக்கம் உம்... ஆ! அதோ அந்தத் திசையில் ஓடுகிறான் கம்பிலி. விடாதே...”

     “அடக் கடவுளே! பில்லமா... உலூப்கான் என்னைக். கண்டு பிடித்தது எப்படி?” என்று கம்பிலித்தேவன் குதிரையைத் தட்டிவிட்டதும், பில்லமன் “நாம் இப்போது தப்புவது பற்றிக் கவலைப்பட வேண்டுமேயன்றி கண்டு பிடிப்பு பற்றியதல்ல தேவா...” என்றான் அச்சத்துடன்.

     “அதுவும் சரிதான். அந்தச் சிறுக்கிகள் மட்டும் கிடைத்திருந்தால் நான்...”

     மீண்டும் ‘கடபுட’வென்று கற்கள் உருண்டன.

     “தேவா... நம் பின்னால் யாரோ...” என்று பில்லமன் மிரட்டியதும் அவன் மவுனமாகிவிட்டான். என்றாலும் அவன் மனம் மவுனமாகவில்லை. அது புதிய சதித்திட்டத்தை போகின்ற போதே உருவாக்கிக் கொண்டிருந்தது!