வில்லவன் தேவி - Villavan Devi - ய. லட்சுமி நாராயணன் நூல்கள் - Y. Laxminarayanan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




வில்லவன் தேவி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

3

     நடுநிசியிலிருந்து குதிரைகள் தனித்து விடப்பட்டிருந்தாலும், அவற்றுக்கே உள்ள தனி அறிவைக் கொண்டு அவை எங்கோ குளிருக்கு அடக்கமான இடத்தைச் சேர்ந்து தங்கியிருந்தன போலும்! எனவே அக்கம்பக்கத்தில் அவற்றைக் காணவில்லை என்றதும் புவன சுந்தரி வெளியில் வந்து சுற்று முற்றும் பார்த்தாள். பிறகு வில்லவரிடம் “தாத்தா, நீங்கள் அக்காளைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவற்றைக் கண்டுபிடித்து வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பதில் எதிர்பாராமல் சடசடவென்று கீழே இறங்கினாள்.

     வில்லவர் திடுக்கிட்டார். உதயகாலத்தின் வரவால் நாலா திசையினும் பரவியிருந்த ஒளியின் சோபையை மீறிய சோபையுடன் ஒயிலாக நகரும் அவளைத் தன் பேரன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு எச்சரிக்கையாக ஒரு முறை கனைத்துக் கொண்டார்,

     சட்டெனத் திரும்பி நோக்கினான் அவரை.

     “எச்சரிக்கையாக நடப்பது சில சமயங்களில் அவசியம் குமாரா. என் பதிலை எதிர்பாராமல் அவள் போனது தவறு. நீ போய் எச்சரிக்கையாக, ஆமாம் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறதே இந்த எச்சரிக்கையை!”

     “தேவையில்லை தாத்தா, புரிந்துவிட்டது.”

     “புரிந்துவிட்டதல்லவா? அப்படியானால் சரி. அவள் அதோ போகிறாள். நீயும் போய் உதவி செய். குதிரைகள் அப்படியொன்றும் ஓடிவிடாது. அது கிடைத்ததும் நீ தாமதிக்காமல் புறப்படு. இங்கு நிலைமை மிகவும் நெருக்கடியாகிவிட்டது... புரிகிறதா?”

     “புரிகிறது தாத்தா. அத்தையுடன் திரும்புகிறேன்” என்று கூறிவிட்டு புவன சுந்தரி போன திசையில் ஓடினான்.

     குதிரைகள் ஒரு பாறையின் இடுக்கில் கிடைத்த இடத்தில் ஒடுங்கி நின்றிருந்தன பாவம்! புவன சுந்தரி அவற்றை வெளியே கொண்டு வந்தாள். அவை இன்னமும் குளிரில் வெடவெடத்த மாதிரி நடுங்கின. நல்ல காலம் உதய காலத்தின் இளம் வெய்யில் அவற்றுக்குச் சற்றே தெளிவூட்டின போலும்! புவன சுந்தரி அவற்றின் கால்களில் ஏற்பட்டிருந்த ரணத்தைப் பார்த்து “த்சுத்சு...” என்றவள் தன்னிச்சையாக திரும்பி நோக்கினாள்.

     சற்று எட்டத்தில் நின்ற விஜயகுமாரன் அவள் தன் கால்களை நோக்குவது கண்டு ரணங்களை மூடிக் கொள்ள முயன்றான்.

     “கல்லும் முள்ளும் கடவுளுக்குத் துணை செய்கின்றன போலும். இல்லாவிட்டால் இப்படிக் கால்கள் புண்களால்...”

     “குதிரையைத் தட்டி அனுப்புங்கள். தாமதம் கூடாது என்றார் தாத்தா...” என்றவன் பரபரப்புடன் முன் வந்து குதிரையைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பாராமல் நடந்தான்.

     அவள் வியப்புற்றாள். பிறகு வெட்கமும் கொண்டுவிட்டாள் என்பது அவள் முகத்தில் ஏறி நிலைத்த சாயை காட்டிவிட்டது.

     குதிரை மீது பாய்ந்து ஏறிய அவன் ஒரே முறை திரும்பிப் பார்த்தான்.

     முகத்தை மூடிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவள் கைகளை முகத்தின் அருகே கொண்டு போனாலும் கண்கள் பார்க்க வேண்டும் என்று துடிக்கின்றனவே!

     அதுகாறும் சோகமே ஊறித் திளைத்த அந்த அழகு முகம் சற்றே விகசித்து இலேசான ஒரு மகிழ்ச்சி ரேகை பரவியதை அவன் கவனித்தானோ இல்லையோ... உதய ஞாயிறு சட்டெனக் கவனித்துவிட்டான்!

     குதிரை பறந்தது. சில நொடிகள் அங்கேயே நின்ற அவள், இதுகாறும் இல்லாத ஒரு வகையில் மனதில் உண்டான ஏதோ ஒரு மாறுதலை உணர்ந்து கொண்டு, ‘நமக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையான சூழ்நிலையில் இந்த மனசுக்கு ஏன் வீணான ஒரு பிரமையில் ஈடுபட்டுத் தவிக்க வேண்டும்?’ என்று தோன்றிற்று. ‘புண்பட்ட மனசுக்குப் புத்தி வரவில்லையே? வீண் ஆசை கொண்டுவிட்டுப் பிறகு வரம்பிலாத வேதனைக்குள்ளாவானேன்?’ என்று சிந்தித்தபடி அக்காவிடம் திரும்பினாள்.

     “மகளே, நீ அக்காவுடன் இரு. நான் மலையில் ஏதாவது குகை இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்” என்று பெரியவர் எழுந்ததும் அவர் கால்களை நோக்கிய அவள் “ஐயோ கடவுளே...! இது என்ன கோரம்! உங்கள் கால்கள் இப்படி...” அவள் கண்கள் மட்டும் இல்லை உள்ளமும் கூட இதோ அழுகை வந்துவிட்டது என்று துடித்தது.

     “மகளே, உயிர் மீது ஆசை இருக்கும்வரை இத்தகைய ரணங்கள் என் போன்றவர்களுக்கு ஏற்படுவது சகஜம். ஆனால் உன்னைப் போன்ற பூக்களையும் கூட விதி கசக்கிட முயலுகிறதே என்றுதான் நான் வேதனையுறுகிறேன்...” என்றார்.

     புவன சுந்தரி மீண்டும் அக்காளைப் பார்த்தாள். அவள் தூக்கம் இப்போது கலைக்கப்படுவதற்கில்லை.

     “தாத்தா, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் பார்த்து வருகிறேன். நேரம் ஆக ஆக வெய்யில் வேறு. தயவு செய்து என் வேண்டுகோளை நிராகரிக்காதீர்கள். விரைவில் வந்துவிடுகிறேன்” என்று தடதடவென்று மீண்டும் இறங்கிவிட்டாள் அவள், பதில் எதிர்பாராமல்!

     வில்லவர் வியந்து வேதனையுற்றாலும் அவளுடைய இங்கித குணத்தையும் இளமைக்கே உரிய பரபரப்பையும் கண்டு உள்ளூரப் பெருமிதமுறவே செய்தார்.

     கீழே இறங்கிச் சென்றவள் எச்சரிக்கையாகவே நடந்தாள். எனினும் வெய்யில் முகத்தில் அடித்தது. கண்கள் கூசின. மலையின் முழுத் தோற்றத்தையும் இப்பொழுதுதான் பார்த்தாள்.

     ‘செங்கம், திருவண்ணாமலைப் பகுதியெல்லாம் மலைகள் இவ்வளவு பெரிதாயிருக்குமா என்ன? காடுகள் கூட பயங்கரமாகத்தானே இருக்கின்றன.’

     நடந்தாள். பாறைகளின் ஊடே அவள் கண்கள் ஊடுருவின. குகைகள் அப்படியென்ன எல்லா மலைகளிலுமே இருந்திடுமா என்ன! மலையை ஒட்டியே சென்றவள் சட்டென ஏதோ ஒரு கொடி மாதிரி பாதை செல்லுவதைக் கண்டு அதன் வழியே உற்று நோக்கினாள். அங்கே மலை பிளந்த மாதிரி ஏதோ ஒரு வழி.

     ‘ஒருவேளை...’ அச்சம் இலேசாகத் தலை நீட்டியது. ‘யாரேனும் நம்மைப் போலவே குகை தேடி வந்திருந்தால்... அல்லது எதிரிகள் எவரேனும் பதுங்கியிருந்தால்...’

     அந்தக் குகையின் நுழைவாயிலில் நின்றாள். கண்களை உள்ளே செலுத்தி ஊடுருவச் செய்தாள்.

     ஏதோ ஒரு பொறி தட்டிய மாதிரி மூளை வேலை செய்தது. சட்டென ஒரு கல்லைப் பொறுக்கி அந்தக் குகைக்குள் போட்டுவிட்டு அப்பால் நகர்ந்து பாறையுடன் ஒட்டிக் கொண்டு நின்றாள் சிலை போல.

     ‘கிறீச்!’ என்று ஒரு பெரும் இரைச்சல். ‘படபட’வென்று அதைத் தொடர்ந்து ஒரு பயங்கர ஒலி மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் என்று கூடச் சொல்லலாம். திடீரென்று இரண்டு மூன்று மான்குட்டிகள் குகைக்குள்ளேயிருந்து அதிவேகமாக ஓடிவர... அவற்றைத் தொடர்ந்து இரு பெரிய மான்கள், ஆணும் பெண்ணுமாக வெளியே ஓடி வந்து சில நொடிகள் நின்று மிரளமிரள விழித்துவிட்டுப் பிறகு முன்னே ஓடிய குட்டிகளைத் தொடர்ந்து ஓடிவிட்டன.

     “ஐய்யோ பாவம்! குளிருக்குப் பயந்து குகையில் ஒண்டியிருந்த குடும்பம் இது. இப்படி குறுக்கே வந்து கொடுமை புரிந்தேனே அவற்றை விரட்டி...” என்று தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

     என்றாலும் மனதில் இன்னொரு பக்கம் சற்றே நிம்மதி. குகையில் மான்கள் இரவு முழுமையும் பழுதுபடாமலிருந்தன. எனவே அங்கு ஆபத்து எதுவும் இல்லை. எச்சரிக்கையாகக் குகைக்குள் அடியை எடுத்து வைத்தாள். ஒரே இருட்டு. பகல் வந்தும் அங்கே நிலவிய இருள் அகலவில்லை. ஆனால் மீண்டும் ஒரு கிறீச்சொலி புறப்பட்டதும் திகைத்து நிமிர்ந்தாள்.

     வெளவால்கள்... புவன சுந்தரி தன் தலை மயிரை ஒருமுறை கோதிவிட்டுச் சுருட்டிக் கட்டி முன்னேறினாள். நாலா திசையும் இலேசாகத் தெரிந்தது. இதோ ஒரு அலாதி மணம் அங்கு பரவியிருப்பதைக் கண்டு மூக்கால் அதை உறிஞ்சிக் கண்டுபிடிக்க முயன்றவள் இன்னும் நாலடி முன்னேறியதும் அங்கு ஏதோ பளிச்சென்று தெரிந்ததைக் குனிந்து கண்டு பார்த்துக் கையில் எடுத்தாள்.

     அது ஒரு முத்திரை மோதிரம். இளம்பிறை போலக் கற்களை வைத்துக் கட்டப்பட்டிருந்தது. மீண்டும் சுற்று முற்றும் நோக்கினாள். ஒரு பெரிய மூட்டை மாதிரி ஏதோ கிடந்தது. அதன் அருகில் போகலாமா, தொட்டுப் பார்க்கலாமா என்று தயங்கியபடி நின்றவள் காதில் ஏதோ ஒரு ஒலி நுழைந்ததும் சட்டெனத் திரும்பினாள் இடையிலிருந்த குறுவாளில் கைவைத்தபடி.

     “யார் நீ?” என்று ஏக காலத்தில் இரு குரல்கள். இவளும் கேட்டாள். குகைக்குள் அப்போதே நுழைந்தவனும் கேட்டான்.

     புவன சுந்தரி பதறிவிட்டாள். உள்ளூர அச்சம் உண்டாகி ஒருமுறை அவளை உலுக்கிவிட்டாலும் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார் நீ?” என்று கேட்டபடி வந்தவனை உற்றுப் பார்த்தாள்.

     குகைக்குள் நுழைந்து நின்றவன் மிக நெடிய தோற்றத்தினன். கறுத்த மேனியன். சிவந்த கண்கள். ஊடுருவும் பார்வை பயங்கரம்தான். அவற்றை மிகைப்படுத்திக் காட்டின அந்தக் கொம்பு மீசை.

     ‘எங்கோ பார்த்திருக்கிறோம் இந்த ஆளை. எங்கே... எங்கே...?’

     “பெண்ணே, நீ யாராயிருந்தாலும் சரி. நான் உன்னை எதுவும் செய்திடப் போவதில்லை. ஆனால் அதோ அந்த மூட்டையை நீ தொடக்கூடாது. ஏனெனில் அது எனக்குச் சொந்தமானது. அதை எடுத்து போகவே நான் வந்தது. புரிகிறதா?” என்று அவன் சற்றே கரகரத்த குரலில் சொன்னான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினர் அல்லது புரவலராக இணைந்திடுங்கள்.




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247