1 ஒரு பக்கம் வேப்பமரமும், மறுபக்கம் புளியமரமும் துவாரபாலகர்களாய் தோற்றம் காட்ட, அதற்குப் பின்னாலிருந்த அந்த மசூதி கம்பீரமாகக் காட்சியளித்தது. ஆனாலும் அதன் கம்பீரத்திற்கு மொக்கை மகுடம் சூட்டப்பட்டது போல், அதன் மாடி ஜன்னல்களோ, கதவுகளோ இல்லாமல் ஆங்காங்கே பொந்துகளைக் காட்டிக் கொண்டு காட்சியளித்தது. அந்தப் ‘பூச்சியில்லாத’ கட்டிடத்திற்கு வெளியே தரையிலிருந்து குறுக்கு நெடுக்குமாய் கட்டப்பட்ட சாரத்தில் பூச்சி புழுக்கள் மாதிரியான, அரை நிர்வாண ஆண்களும், தாங்கள் ஆனா அல்லது பெண்ணா என்று அந்தக் கணத்தில் எந்தப் பிரக்ஞையுமில்லாமல் உடையே உடைந்து போக இயங்கிக் கொண்டிருந்த பெண்களுமாக கரணம் தப்பக்கூடிய மரண விளிம்பில் நின்றபடி கைகளைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள். காண்ட்ராக்டர் ராமலிங்கம் “என்னப்யா வேலை செய்றிங்க வேல...” என்று அவர்கள் வேலை செய்வதைச் சரியாக பார்க்காமலேயே ஒரு கத்துக் கத்திவிட்டு வெளியே வந்தவர், தன்னையே கண்காணிப்பதுபோல் பார்த்த திவான் முகமதுவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். பதில் கும்பிடு பற்றிக் கவலைப்படாமலே, “வேலையா பாக்கீக வேல... கூலிய மட்டும் கூட்டிக் கேட்டா எப்படி?” என்று திவானைக் கண்கள் நோட்டமிட, அந்த மசூதியின் நுழைவு வாயிலுக்கு மீண்டும் போய் ஒரு எகிறு எகிறினார்.
அந்த மசூதியின் எதிர்த் திக்கிலிருந்தும், கிழக்குத் திசையிலிருந்தும் ஏழெட்டுப் பெண்கள். தெற்கில் ஒரு பத்துப் பெண்கள். தலைகளில் கோஷாக்கள் இல்லை. அதை ஈடுகட்டுவது போல் நெற்றிக்கு கோஷா போட்டது மாதிரி தலைமுடி தாறுமாறாகச் சிதறிக் கிடக்க, நெற்றிகளை ரத்தமாக்கிய குங்குமக்காரிகள். என்றாலும் இளசுகள் பிளாஸ்டிக் குங்குமப் பொட்டை வைத்திருந்தனர். பெரிதுகள் நெற்றி போதாது என்பதுபோல் சிவப்பு சூரியன் மாதிரி ஆன பொட்டுகள் வைத்திருந்தனர். உல்லி உல்லி வாயில், சுங்கடி போன்ற விதவிதமான சேலைகளில் வந்த இளம் பெண்கள், நடுத்தரங்கள். கழுத்தில் கிடக்கும் மஞ்சள் சரட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே காட்டுவது மாதிரியாக சிலர். அது தெரியாததுபோல் ஜாக்கெட்டில் விளிம்புபோல் அவற்றை ஆக்கிக் கொண்டவர் பலர். சில பெண்கள் முரட்டு டயரில் நெய்யப்பட்டது மாதிரியான சேலை கட்டியிருந்தார்கள். அத்தனை பேரும் கூலிப் பெண்கள். இடுப்பிலோ அல்லது தோளிலோ துவண்டு கிடந்த குழந்தைகளைச் சுமந்து வந்தார்கள். அப்படியும் ஒரு குழந்தை ஒருத்தியின் இடுப்பிலிருந்து இன்னொருத்தியின் தலையில் சூட்டிய பூ மொத்தையை பறிக்கப் போனது. அத்தனை பெண்களும், அந்த மசூதி வாசலில் ஒப்புக்குக்கூட நின்று நிதானிக்காமல், சொந்த வீட்டிற்குள் போவதுபோல் போனார்கள். இடுப்பு வழியாய் இறங்கப்போன குழந்தைகளை ஒரு குலுக்குக் குலுக்கி மேலே ஏற்றிக்கொண்டும், தோளில் கிடந்த குழந்தை களின் தலைகளை வருடிக் கொடுத்தும் அந்த மசூதிக்குள் நேற்று எங்கே நின்றார்களோ அங்கே நின்று கொண்டார்கள். திவான் முகமது அந்தப் பெண்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை ராமலிங்கத்தைப் பார்த்தார். பின்னவருக்கு லேசான மகிழ்ச்சி. திவான், அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அதுவே பெரிய காரியம். காரியம் கைகூடியது மாதிரிதான். மேலும் அவர் கவனத்தை அதிகமாய்க் கவருவதற்காக சாரத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண்ணை “மேலே ஏறுவியா, இல்ல கீழே இறங்கி ஒரேயடியா போறியா?” என்று ஒரு அதட்டுப் போட்டார். அதை திவான் ஆமோதிப்பது போல் தலையை மெல்ல மெல்ல ஆட்டுவது போல் இருந்தது. இதுதான் சாக்கு என்று ராமலிங்கம் பேசப்போனார். இதற்குள் திவானின் கவனம் கலைந்தது. ஒரு நாற்பது வயது அய்யப்ப பக்தர். காக்கா கறுப்பு வேட்டி, அதைவிட கட்டிக் கறுப்பான சட்டை, கழுத்தில் துளசி மாலை, தோளில் ஒரு குழந்தை. முன்னால் போன மனைவியிடம் குழந்தையை நீட்டிவிட்டு மசூதிக்கு வெளியே ஒதுங்கப் போனார். ஆனால், அவர் மனைவி அந்த வாசலில் நின்றபடி ஒரு முறைப்பு முறைத்ததால், அவர் ஓடுவதுபோல் நடந்து அவளையும் தாண்டி மசூதிக்குள் போனார். ஆனாலும் பெண் வாடைபடாத இடம் என்று ஒன்றை அவரே அனுமானித்துக் கொண்டு தனித்து நின்றார். அவரைப் பார்த்து லேசாய்ச் சிரித்த திவான் மீண்டும் ராமலிங்கத்தைப் பார்த்தபோது, ராமலிங்கத்திற்கு அது நல்ல சகுனமாகப் பட்டது. “அதோ பாருங்க பாய்... காதரு இன்னிக்கு தொழுகைக்கு வாரது ஆச்சரியமாயிருக்கு, என்ன விசேஷம்? அப்படியே வந்தாலும் ஒரு மட்டு மரியாதை வேண்டாம். தலையில் ஒரு குல்லா வேண்டாம். அதோ பாருங்க... அந்த முத்துக்குமாருப் பய கண்ணு எந்தப் பக்கமா போகுது பாருங்க. நானும் பாக்கேன். தினமும் அந்தப் பய அதே இடத்துல வந்து காக்கா கண்ணா பாக்கான். இதுக்கு இந்த காதர் பாட்சா உடந்தை. நீங்க ஏதாவது செய்யணும்.” திவான் முகமது, அந்த ஆண் ஜோடியையும், அதற்கு எதிர்பக்கம் கோஷா போடாமலே தலையைக் காட்டிய ஆயிஷாவையும் நோட்டமிட்டார். உடம்பு இயல்பாக எரிந்தாலும், அந்த ஹாஜி அஜீஸுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பது மாதிரியான ஒரு திருப்தி. அதே சமயத்தில், நிலைமையை, பார்வையைத் தாண்டிப் பழகும் கட்டத்திற்கு விட்டுவிடக்கூடாது என்ற ஒரு பொறுப்புணர்ச்சி. அவர்களைப் பார்க்கப் பார்க்கத் தான் ஒரு ஜமாத் தலைவர் என்கின்ற எண்ணமும் கூடவே வந்தது. ராமலிங்கத்தைப் பார்த்துப் பட்டும் படாமலும் பேசினார். “எல்லாம் எங்க காதர் பாட்சாவால... அவனுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஏதாவது தட்டிக் கேட்கலாமுன்னா எதிர்த்துப் பேசுவான். நீயாவது முத்துக்குமாருட்ட கொஞ்சம் சொல்லேன்.” “நான் சொல்லாம இருப்பேனா பாய்? அவன் அப்பன் துரைசாமிகிட்ட சொல்லி கையக் கால கட்டி போடும்படியா சொல்றேன். அப்புறம் காக்கா...” திவான் உஷாரானார். பாய் பாய் என்று சொல்லும் இந்த ராமலிங்கம் ‘அண்ணாச்சி’ என்ற அர்த்தத்தில் காக்கா என்ற வார்த்தையை போட்டுவிட்டார் என்றால், ஏதோ ஒரு சமாச்சாரத்திற்கு அவர் காக்கா பிடிப்பதாகத்தான் இருக்கும். அவரை ‘சொல்லு’ என்பது மாதிரி திவான் பார்த்தபோது, ராமலிங்கம் தலையைச் சொறிந்தபடி பேசினார். “கட்டுப்படியாகல காக்கா... என்ன மட்டும் நீங்க விட்டால், இது வரைக்கும் செலவழிச்ச மூணு லட்ச ரூபாயும் தொலையட்டும்னு ஓடிப்போய்டுவேன். நல்ல காரியமாச் சேன்னு மசூதியோட முதல் மாடியைக் கட்டுறதுக்கு சம்மதிச்சேன். ஆனாலும் இரும்புக்கும், சிமிண்டுக்கும், அதோ கூலி அதிகமா கேட்கிறாங்களே அந்தக் குடிகாரப் பயலுக, அவங்களுக்குத் தெரியுதா என்ன? ஏதோ என்னை, கையக் கடிக்காமலேயாவது நீங்க பாத்துக்கணும்.” திவான் முகமது, ஆசாமி எவ்வளவு செலவழித்திருப்பார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அந்த மொக்கை மாடியை கண்களால் ஒரு குத்துமதிப்பீடு செய்வது போல் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய்கூட செலவழித்திருக்க மாட்டான். அவன் சொல்றதுல மூன்றில் இரண்டு பொய். காண்ட்ராக்டர் மீண்டும் புலம்பினார். “உங்களையும் கவனிச்சுக்கிறேன் காக்கா. நான் என்னமோ உங்களைக் கவனிக்க மாட்டேன் என்கிற மாதிரி பார்க்கிறீங்களே. போங்க காக்கா.” திவான் முகமது, இப்போது ராமலிங்கத்தை காக்கா மாதிரியே சாய்த்துப் பார்த்தார். இவன் தம்பியாகப் பிறக்கவில்லை யென்றாலும், தம்பி மாதிரிதான். ஆனாலும், பங்காளி என்று வரும்போது அண்ணன், எப்படி தம்பியைப் பார்ப்பானோ அப்படியே ராமலிங்கத்தைப் பார்த்தபடி பட்டும்படாமலும் பதிலளித்தார். “ஆகட்டும் பார்க்கலாம்.” “அப்பாடா, இப்போதாவது என் வயித்தில் பாலை ஊத்தினிங்க பாய்.” திவான் லேசாக முகஞ்சுளித்தார். காரியம் ஆவதற்காக காக்கா (அண்ணன்) என்கிற வார்த்தையைப் பயன்படுத்திய இந்த காண்ட்ராக்டர், அது முடிந்துவிடும் என்று தெரிந்த உடனேயே ‘பாய்’ என்று பேச்சை மாற்றியது அவருக்குச் சிறிது, நெஞ்சைத் தட்டத்தான் செய்தது. ஆனாலும் அவர் கவனிப்பதாகச் சொன்னதால், காக்கா பாயானது பெரிதாகத் தெரியவில்லை. நாளைக்கே, தன்னை அவர் கவனிக்கணும்... பைசல் செய்துக்கலாம். திவான், காண்ட்ராக்டர் காதைக் கடித்தார்... “இதுவரைக்கும் செலவழிச்சதை நாளை பைசல் செய்துக்கலாம் வீட்டுக்கு வா... செக்கு தாறேன்...” இந்தச் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், எந்த விகிதாச்சாரத்தில் கவனிக்க வேண்டும் என்பதைப் பேசுவதற்காகவோ என்னவோ வேப்பமரத்திற்குப் பின்னால் ஒதுங்கினார்கள். அப்போது நான்கைந்து பேர் மசூதிப் பக்கம் வருவதைப் பார்த்து விட்டு திவான் முகமது அந்த மசூதி வாயிலுக்குக் கம்பீரமாக நடந்து வந்தார். ராமலிங்கம் பின்னால் நொண்டியடித்து நடந்தார். அங்கே வந்த நான்கைந்து பேரும் திவானைப் பார்த்தபடி நின்றார்கள். திவானோ, அந்த அய்வரில் அமீரை மட்டுமே நோட்டமிட்டார். ‘ஐம்பது வயதுக்குப் பிறகும் தாடி வைக்காத இவனெல்லாம் எவன்...? தலையில் ஒரு தொப்பி கூட வைக்காமல் கைக்குட்டையைக் கட்டியிருக்கான். உடம்பு மட்டும் தடியங்காய் மாதிரி வச்சிருக்கான். இவனெல்லாம் ஒரு முஸ்லீமாம்.’ “என்ன பாய் சொன்னீங்க? தொழுகையை மேல் மாடிக்குக் கொண்டு போறீங்களா. கீழ்த் தளத்து எல்லைச் சுவரை இடிச்சுட்டு ஷட்டர் போடணுமா?” திவானும் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பேசினார். “உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ராமு. ஷட்டருதான் போடணும்.” இப்போது அமீர் குறுக்கிட்டார். “ஷட்டர் வேண்டாம், மூச்சு முட்டும். ஒத்தை செங்கலுல சுவர் எழுப்பிடலாம்.” “அப்ப மட்டும் மூச்சு முட்டாதா?” “சொல்றத முழுசா கேளுங்க ராமலிங்கம். மேல் கூரை ‘பீமுக்கும்’ சுவருக்கும் இரண்டடி இடைவெளி விட்டுட்டா எப்படி மூச்சு முட்டும்?” திவான் முகமது அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவர், திடீர்த் தாக்குதல் போல் பேசினார். “இடைவெளி விடுறது இஸ்லாமுக்கு விரோதம்.” “எப்படி விரோதம்? நம் பெண்டு பிள்ளைகள இங்கே கீழ்த்தளத்துக்கு வரவழைச்சு, மேல் தளத்துல அப்பப்ப நடக்குற உபதேசத்தை கேட்க வைக்கணும்னு ஜமாத்து முடிவு செய்துட்டு. அதனால்தான் மாடியே கட்டறோம். இங்கேயும் அவங்கள ஜெயிலுல வைக்கறது மாதிரி ஷட்டர் போடணும்னு சொல்றீங்களே.” “என்ன பேச்சு பேசற அமீர் பிறத்தியான் பார்க்கலாமா?” “பிறத்தியார நாம பாக்கலையா? பிறத்தியான் நடக்கும் போதும் பாக்கான். பஸ்ஸுல போகும்போதும் பக்கத்துல இடிச்சுக்கிட்டு நிக்கறது மாதிரி நிக்கான். இங்கேயும் பார்க்கிறவன் பார்க்கத்தான் செய்வான். அப்படியே பார்த்தாலும் அவன் மோசமா பார்க்கான்னு ஏன் நினைக்கணும். வீட்டுலயும் தெருவிலயும்தான் துணியால கோஷான்னா, மசூதியிலயும் இரும்பு கோஷாவா?” திவான், பதிலுக்கு ஏதோ திருப்பிக் கொடுக்கப்போனார். அதற்குள் காதர் பாட்சா முத்துக்குமாரை விட்டுவிட்டு, அந்தப் பக்கமாக ஓடிவந்தான். முத்துக்குமாரோ அவனை அங்கே நிறுத்தி வைக்காமல், ஆயிஷாவை கண்ணடிக்க முடியாது என்று நினைத்தானோ, இல்லை பேச்சு சுவாராசியத்திற்காக அழைத்தானோ, தெரியவில்லை - அவனை ஓடிவந்து இழுத்தான். இதற்குள் அமீர், காதர்பாட்சாவைப் பார்த்து கையாட்டினார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட காதரும் முத்துக்குமாரைச் செல்லமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு அமீர் பக்கமாக ஓடி வந்து நின்று திவானைப் பார்த்துவிட்டு, அமீரைப் பார்த்து கண்ணடித்தான். இதைப் பார்த்துவிட்ட திவான் முகமது ஆத்திரம் தாங்காமல் முகத்தைப் புற்று போலாக்கி நாக்கை நாகப்பாம்பாய் வெளியே நீட்டியபடி, குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார். ராமலிங்கத்தைத் திட்டி அந்தத் திட்டை அவர்களுக்கு மறைமுகமாக கொடுக்கப் போனார். இதற்குள் - பாங்குச் சத்தம் ஒலித்தது. ‘அல்லாஹி... அக்பர்... அல்லாஹி... அக்பர்’ என்று அனைவருக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தைகளோடு, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே புரிந்த இன்னும் சில அரேபிய வார்த்தைகள். உடனே தெருப் பக்கமாக மெத்தனமாய் நடந்து கொண்டிருந்தவர்கள் கூட இப்போது மசூதியை நோக்கி வேக வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள். அந்த மசூதிக்கும், அதன் வளாகத்தில் உள்ளடங்கிய தர்காவிற்கும் இடையே அதன் வெளிக்கோட்டில் ஹவுது-செவ்வகத் தொட்டி, பச்சைப் பசேலென்று கருணைக் கடலின் அணுத்திரட்சியாய்க் கண் சிமிட்டியது. பாசி படர்ந்த உட்சுவர். ஆன்மீகம் வழுவழுப்பானது என்பது போன்ற தோற்றம். ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் நின்று ஒரு ஈயப் போணியை எடுத்து நீரேற்றி, முன் கைகளைக் கழுவினார்கள். முட்டிக் கால்களில் மிச்ச மீதியின்றி அள்ளிப் போட்டார்கள். பிறகு வாயை மூக்கோடு சேர்த்து அலசி தொப்பியையோ, அல்லது கட்டிய கைக்குட்டையையோ எடுத்துவிட்டு தலையை ஈரக்கையால் அலசி விட்டபடி சரஞ்சரமான பெண்களையும், இடையிடையே அழுது தீர்க்கும் குழந்தைகளையும் ஒப்புக்குக் கூட பார்க்காமலேயே தொழுகைத் தளத்திற்குள் நுழைந்தார்கள். திருக்குரான் கூறும் ‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லா’வின் திருப்பெயரை இதயத்தில் வைத்தபடியே, அந்தத் திருப்பெயர் இதயத்திலிருந்து ஒளிக்கீற்றாய் உதடுகளைப் பிரகாசப்படுத்தியதுபோல் அனைவரும் தொழுகைத் தளத்திற்குள் போனபோது - சம்சுதீன் தொழுகைத் தளத்திற்குள் நுழையாமல், அப்படியே குன்றி நின்றான். ஒரு பெண்ணைப் பற்றிய எண்ணம், அவள் யாராக இருந்தாலும் அவளைப்பற்றிய எண்ணம் இப்போது, இந்தத் தொழுகையின் சமயத்தில் வருவது தன்னுள் இருக்கும் இறை நம்பிக்கையான ஈமானைக் குலைப்பதாகாதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். இனிமேல் தொழுகைக்கு வரும்பொழுது இப்படிப்பட்ட எண்ணத்தோடு வருவதில்லை என்றும், அப்படி வந்தால் தொழுகை செய்வதில்லை என்றும் தீர்மானித்தான். அவன் மனதுக்குள் தொழுகையா? அபிராமியா? என்று நடுவர் இல்லாமலே ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்த அல்லாவைத் தவிர மற்ற எண்ணம் அப்போதைக்கு வரக் கூடாது என்று மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்று சொல்லப்பட்டவன்போல் அங்குமிங்குமாய்ப் பார்த்தபடியே நின்றான். பிறகு அபிராமி இந்நேரம் கோயிலை முடித்து விட்டு- (அவனுக்குத் தெரியும் அவள் கோயிலுக்கு போவது அவனைப் பூங்காவில் பார்க்கத்தான்.) பூங்காவில் காத்திருப்பதை நினைத்துக் கொண்டான். ஆகையால் அரைக்கிணறு தாண்டியதுபோல் இரு வேறுபட்ட மனநிலையில் தொழுகை செய்யக்கூடாது என்று நினைத்தவன் போல் திரும்பிக் கூடப்போக நினைத்தான். அப்போது அவன் தந்தை திவான் முகமது தொழுகைக் கூடத்திலிருந்து அவனைக் கண்களால் சுண்டியிழுக்க அவன் சண்டி மாடு மாதிரி தந்தையை நோக்கி நடந்தான். தொழுகைத் தளத்தில் வெளியே அந்நியர் இடுப்பில் அலைமோதிய குழந்தைகளின் அழுகைச் சத்தம்; அவர்களை அதட்டும் தாய்மைச் சத்தம்; காக்கை குருவிகளின் சீழ்க்கைச் சத்தம்; அத்தனை சத்தா சத்தங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாய் அனைவரும் வீராசனம் போட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள். மண்டியிட்டு உட்கார்ந்து கைகள் குவிய, வாய்கள் எதையோ ஓதிக் கொண்டிருக்க அசைவற்று இருந்தார்கள். தொழுகைக்கு என்றே நெய்யப்பட்ட முப்பது அடி நீள கோரைப்பாய்... அதன் நான்கடிப்பரப்புக்கு வேலிபோல் இன்னொரு பாய். இப்படி முப்பது முப்பத் தைந்து பாய்கள், அந்தத் தளத்தையே ஒரு பாய்த் தரையாக ஆக்கியிருந்தன. அத்தனை பேர் வாய்களிலும் ஒரு முணு முணுப்போ, சின்ன சத்தமோ எழவில்லை. தலைகுனிந்து இருந்த அத்தனை பேரிடமும் ஏதோ ஒரு மவுனதாகம். ஒரு பக்தி வேகம்... ஒரு நம்பிக்கை ராகம். நீண்ட நெடிய கோரைப் பாய்களை சின்னச் சின்னத் தட்டுப் பாய்களாய்க் காட்டும் தொழுகையாளர்களுக்கு முன்னால் இமாம் தனித்திருந்தார். மற்றவர்களைப் போல் வட்டவட்டமான பக்தித் தொப்பியோ, கிரிக்கெட் தொப்பியோ, குறைந்தபட்சம் காந்தி குல்லாவோ போடாமல் வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டையுடன் ஒரு வெள்ளைத் தலைப்பாகை கட்டிய ராமலிங்க சுவாமிகள் மாதிரியான தோற்றம். அவருக்கு முன்னால் கஃபா என்னும் கடவுள் ஆலயம் இருக்கும் மேற்குத் திசையை மனதில் பதிய வைக்கும் ஒரு திரைச்சீலை... மேலே சிறுத்து, கீழே பருத்து உள்ளடங்கிய சுவர்ப் பகுதிக்கு உடை போட்டது மாதிரியான பச்சைத் துணி, அங்குமிங்கும் ஆடாமல் அசையாமல் அசைவற்றும் அசைவித்தும் ஒரு கம்பீரமான கருணைத் தோற்றத்தைக் காட்டும் பச்சை வண்ணம்... இமாம் எழுந்தார். அவரோடு சேர்ந்து மற்றவர்களும் எழுந்தார்கள். சாத்தான் எச்சில் உமிழும் இடமாகக் கருதப்படும் தொப்புளில் இரண்டு கைகளையும் மடித்து அனைவரும் எழுந்தனர். பிறகு காதுகளில் கரங்களைச்சாய்த்து வைத்து அப்படியே மண்டியிட்டு நெற்றி தரை தட்டக் குனிந்தார்கள். அது மாலைத் தொழுகையான ‘மக்ரீப்’ என்பதால், ஏழு தடவை ‘ரகாயத்’ செய்து தொழுகை முடித்தனர். மனக்கடல்கள் இப்போது அலை எழுப்பவில்லை. அந்த அலைகள் இல்லாத அலையற்ற ஆழ்கடலுக்குள் போனதுபோன்ற ஏகாந்தம்; மூச்சு முட்டாத அடிவாரத்திலிருந்து வாழ்க்கையின் சேதாரங்களைப் பொருட்படுத்தாதது போன்ற ஒரு ஒருமை. சம்சுதீன்கூட, வலுக்கட்டாயமாக வந்த அபிராமியின் எண்ணத்தை மறக்கடிக்க அவளது சின்னச் சின்னக் குறைகளைக் கூட தன்னையறியாமலேயே நினைத்துப்பார்த்து, இப்போது அல்லாவிடம் அப்படியே ஒன்றிவிட்டவன் போல் கண்கள் சொருக நின்றான். அத்தனை தொழுகையாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தார்கள். அவர்களில் இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஒதுங்கிவிட்டு தர்காவிற்குள் போனார்கள். நடுத்தர மனிதர்கள் அந்தப் பெண் கூட்டத்தின் பக்கத்தில் வந்தார்கள். ஒவ்வொரு குழந்தையையும் உற்று உற்றுப் பார்த்துவிட்டு அதனதன் நெற்றிப் பொட்டிற்கருகே வாயைக் குவித்து ஊதி துவா சொன்னார்கள். இப்படிப்பத்து பேர் ஊதி விட்டார்கள். ஆனாலும் பெண்கள் கூட்டம் பிரியவில்லை. தொழுகைத் தளத்திலிருந்து படி இறங்கும் இமாமையும், அமீரையும் அவர்கள் கண்கள் மொய்த்தன. இமாமும் அமீரும், ‘எல்லா வஸ்துக்களின் பேரிலும் சக்தி வாய்ந்த யாதொரு இணையுமில்லாத’ அல்லாவை நினைத்தபடியே அந்தக் குழந்தைகளை நெருங்கினார்கள். அப்போது மவுனத்தைக் கலைக்கும் காலடிச் சத்தம்; பத்து பதினைந்துபேர் உள்ளே நெருக்கியடித்து ஓடி வந்தார்கள். யாரிடம் முதலில் செல்லலாமென்பது போல் அவர்கள் கண்கள் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தன. அல்லாவை நினைக்கும் போதும், அவர் பெயரில் காரியம் ஆற்றும்போதும் கவனம் கலையக்கூடாது என்ற திருக்குரான் ஆணைப்படி காலடிச் சத்தங்களைப் பொருட்படுத்தாமல் துவா செய்த இமாமுக்கும், அமீருக்கும் காத்து நிற்பது போல் நின்றார்கள். பிறகு அது வரைக்கும் காத்திருக்க முடியாது என்பதுபோல், அந்தப் பக்கமாக வந்த திவான் முகமதுவிடம் ஒருத்தர் உரத்துக் கத்தினார். தர்காவிற்குள், ஒரு ஜிப்பா மனிதரின் மயிலிறகிற்கு முகங்கொடுத்த இளவட்டங்கள் ஓடி வந்தார்கள். மசூதியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த வளாகத்தில் அங்குமிங்குமாய்ச் சிதறி நண்பர்களோடு குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த அத்தனை பேரும் தாவித் தாவி, குதித்துக் குதித்து அந்தப் பக்கமாய் வந்தனர். அத்தனை பேருக்கும் நடந்ததை நம்ப முடியவில்லை. ஆகாயத்தையே பார்த்தார்கள். சேதி சொன்னவர்களை சிலர் திடுக்கிட வைத்தும் தலைப்பாய்த் துண்டை சடைபோல் முதுகில் போட்டிருந்த இமாமை, திடுக்கிடப் பார்த்தார்கள். இமாம், கண் விழிக்காமலேயே அசந்து நின்றார். திவான்முகமது மலைத்துப் போனார். அமீர், ஆதரவுக்காக காதர்பாட்சாவைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தார். இதற்குள் மசூதி இருந்த அந்தத் தெருவின் இரு பக்கமும் உள்ள கடை கண்ணிகளில் இருந்தவர்களும் உள்ளே வந்தார்கள். கூட்டம் மசூதியிலிருந்து தெரு வரைக்கும் நீண்டு கொண்டே போனது. பெண்கள் திண்ணைத் தூண்களில் சாய்ந்து பாதி கோஷாக்களோடு விவரம் புரியாமல் நின்றார்கள். மசூதிக்குள் ஒரே கூக்குரல். ‘அல்லா அல்லா’ என்ற அவலச் சத்தம். ‘இன்சா அல்லா’ என்ற தெளிவுச் சத்தம். ஒவ்வொருவருக்கும் தத்தம் வீடே இடிக்கப்பட்டு அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது போன்ற தவிப்பு. ஒருவரையொருவர் இயலாமையில் பார்க்கும் கையறுநிலை, சொந்தக் கால்களை சொந்தக் கைகளே வெட்டிப் போட்டது போன்ற பிரமை. விவரத்தை மெல்லக் கேள்விப்பட்ட இந்துப் பெண்கள் இப்போது திட்டித் தீர்த்தார்கள். “பாழாப்போற பயலுக. மசூதி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே? இவங்களுக்கு என்ன வந்துட்டு? இடிச்சவங்க கையில கரையான் அரிக்க. வாயில புத்துவர. மாரியாத்தா. இடிச்ச பயலுவள இடிஞ்சு போக வையி தாயி! அடக்கடவுளே... இப்படியா ஒரு மசூதிய இடிப்பானுங்க?” இந்தப் பெண்கள் தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு சற்றுத் தள்ளி நின்ற ஆண்கள் கூட்டத்தில் ஒரே சத்தம். “பழிக்குப்பழி வாங்கணும். இந்த ஏரியாவுல ஒரு இந்துக் கோயில இருக்க விடக்கூடாது. புறப்படுங்கடா. இது ஒரு ஜகாத். யோசிக்க நேரமில்லை. இன்சா அல்லா. முதல்ல அபிராமி கோயில இடிக்கணும்.” அந்தப் பெருங்கூட்டத்திலிருந்து, ஒரு சின்னக் கூட்டம் கிளை விடப்போனது. கட்டிடத் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த மண்வெட்டிகளை ஆயுதங்களாகவும், இரும்புக் கம்பிகளை வேல்களாகவும், பாண்டு பாத்திரங்களை கேடயங்களாகவும் வைத்துக் கொண்டு அது புறப்படப் போனது. சாரங்களில் நின்ற பெண்களும் ஆண்களும் அங்கே நிற்பதா, கீழே இறங்குவதா என்று தெரியாமல் புலம்பி நின்றார்கள். கூட்டம் அவர்களையும் பார்த்துக் கீழே இறங்கும்படி சமிக்ஞை செய்வது போல் இருந்தது. அது, தங்களைத் தாக்குவதற்கா, அல்லது மசூதி மாடியைக் கட்டியது போதும் என்று சொல்வதற்கா என்பது புரியாமல் தொழிலாளர் கூட்டம் திக்குமுக்காடியது. என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பது மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது. ஜமாத் தலைவர் திவான் முகமதுவும், ஹாஜி அஜீஸும், தீப்பெட்டித் தொழிற்சாலை அதிபர் நூருல்லாவும் ஆங்காங்கே கூட்டத்திடம் கோபதாபமாய்ப் பேசுவதுபோல் கைகால்களை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், அமீரும் காதர் பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் கிளைவிடப் போன கூட்டத்தை உரிமையோடு பின்னுக்குத் தள்ளினார்கள். அவர்களது மோவாய்களைப் பிடித்து கெஞ்சினார்கள். “அல்லா பாத்துக்குவான் இன்சா அல்லா. இங்கே இருக்கவங்க நமக்கு எதிரியில்ல.” அந்தக் கூட்டமும் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவது போல் தோன்றியது. ஆனாலும் தொலைவில் வானமே வெடிப்பது போன்ற சத்தங்கள். நட்சத்திரங்கள் தரையிறங்குவதுபோன்ற ஒளிக்கீறல்கள். கண்ணுக்குத் தெரிந்த டவுன் பக்கம் வாணவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. நாலு தெருக்கள் தாண்டிய ஐந்தாவது இந்துத் தெருவில் கூட சின்னச்சின்ன வேட்டுச் சத்தங்கள். அந்த ஜகாத் கூட்டம், இப்போது காதரையும், அமீரையும் ஒதுக்கித் தள்ளியது. கோபத்தில் குப்புறத் தள்ளியது. நிலை குலைந்து விழுந்தவர்களை மிதிக்காமல், அவர்களுக்குச் சலுகை காட்டுவதுபோல் தாண்டிக் கொண்டே போனது. பின்புறமாய்த் திரும்பிய கூட்டத்தின் பக்கம் முகம் திருப்பி தங்களோடு சேரும்படி கைகளை ஆட்டியது. அந்தக் கரங்கள் மண்வெட்டி, கடப்பாரை சகிதமாகக் கைகளை ஆட்டின. தங்களோடு ஜகாத்துக்கு வராதவர்களை வெட்டிப் போடுவோம் என்பது மாதிரி ஆடின. பாதிப்பேர் பயந்துபோய், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர். கீழே கிடந்த அமீரும் பாட்சாவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்துக்கொண்டே எழுந்தார்கள். குழந்தைகள் சுகம் தேடி வந்த பெண்களுக்கு ஏதாவது நடந்து விடக்கூடாதே என்பது போல் அவர்கள் விழுந்தடித்து ஓடி, அந்தப் பெண்கள் கூட்டத்திற்கு முன்பு கைகளை நீட்டி மனிதச் சங்கிலியாய் நின்ற போது, ஒரு மோட்டா சேலை கட்டிய பெண் அவர்களையே சாடினார். அமீர் கண்களைத் துடைத்து, காதர் பாட்சாவின் தோள்பட்டையை தன் ஈரக் கைகளாலேயே தட்டிக் கொடுத்து, அந்தப் பெண்களைச் சுட்டிக் காட்டினார். மீண்டும் அந்தப் பெண்கள் திட்டித் தீர்த்தார்கள். “பாழாய்ப் போற பயலுவதாயா பிள்ளையாய் இருக்கிற நம்மள கூட பிரிச்சிடுவாங்க போலிருக்கே. ஊரு உலகத்துல ஒரு டாக்டராலயும் சுகப்படுத்த முடியாத நம்ம பிள்ளைய நோயும் நொடியும் இந்த மசூதியில் வந்துதான் சுகமானது. எந்த நொறுங்குவானோ அயோத்தியில் போயி மசூதிய இடிச்சிருக்கான் பாரு... ஏலா... ராசாத்தி எந்த இடத்தில இடிச்சாளாம்...” சம்சுதீன் தடுமாறினான். அபிராமி தனக்காக காத்திருப்பாளே என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் அந்த மசூதி இடிபாட்டில் அவள் காத்திருத்தல், அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவள் கிடக்கிறாள். சம்சுதீன், இப்போது, அபிராமியை பார்க்கப் போவது இல்லை என்று தீர்மானித்தான். அதே சமயம் அந்த ஜகாத் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதா, அல்லது வீட்டில் போய் முடங்கிக் கொள்வதா, என்றும் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். மசூதிக்கு வெளியே வந்த அமீர் தொலைவில் வேக வேகமாய் போய்க் கொண்டிந்த இஸ்லாமியக் கூட்டத்தை வெறித்துப் பார்த்தார். இனி மேல் தன்னால் செய்யக் கூடியது ஏதுமில்லை என்பது போல் தவித்துப் பார்த்தார். அவர் பக்கமாக வந்த காதர்பாட்சா தோளிலும், முத்துக்குமார் தோளிலும் ஆதரவு தேடி இரண்டு கைகளைப் போட்டபடியே அவலமாகப் பேசினார். “இந்து மதம் எரிமலையாய் வெடிச்சதுனால, இஸ்லாமும் பூகம்பமாகக் குலுங்குதே. இந்த பூகம்பத்துக்கும் அந்த எரிமலைக்கும் இடையிலே எத்தன பேர் சாகப் போறாங்களோ? எத்தன பெண்கள்...” அமீரால், அதற்கு மேல் பேச முடியவில்லை. “அல்லா அல்லா” என்று மட்டுமே அவர் வாய் அரற்றியது. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |