உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 அபிராமிக்கு அந்தக் காரே நடமாடும் சிறைக்கூடமாய்த் தோன்றியது. சாலை முழுவதும் வியாபித்த தரைப்படகு மாதிரியான கார்- அதில் வெளியே தலை காட்டுவது கிடக்கட்டும். என்ன நடக்கிறது என்பதைக் கூடப் பார்க்க முடியாத கரும்பச்சைக் கண்ணாடி ஜன்னல் அடைப்புக்கள். பினனிருக்கையில் வெல்வேட் இருக்கையின் நெருடல் சுகம் அறியாமல், அவள் குமைந்து கிடந்தாள். முன்பக்கம் பார்க்க முடியாதபடி டிரைவரின் முதுகும் அவருக்கு அருகே இரண்டு முதுகுகளும் வழியை அடைத்தன. இதனால் வேறுவழியில்லாமல் அவள் தலைக்குப் பின்னால் கைகளைப் போட்டுப் பின்னிருக்கையில் சாய்ந்தாள். வீட்டுக்குள்ளேயே பித்து பிடித்துக் கிடந்தாள். வீட்டில் , நாலைந்து பேர், சம்சுதீனை அப்பாவின் ஆட்கள் துரத்தியதாக காதும் வாயுமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு மனம் கேட்கவில்லை. என்ன ஆனாரோ? எப்படி ஆனாரோ? அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. “அவனை விட்டுவிடுங்கள். நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறேன்” என்று தந்தையிடம் சொல்லக் கூடப் போனாள். முயன்று பார்த்தும் முடியவில்லை. அவள் கோவிலுக்குப் போனால் ‘சார்ஜ்’ ஆகிவிடுவாள் என்பதைப் புரிந்த பழனிவேலுதான் அவளை இந்தக் காரில் அனுப்பிவைத்தார். கூடவே இரண்டு அடியாட்களையும் காவலுக்கோ அல்லது கண்காணிக்கவோ அனுப்பியிருந்தார். கார் இப்போது டவுனுக்கு வெளியே உள்ள தேரிமேட்டைப் பார்த்துப் பாய்ந்தது. கீழே மசூதியும், மேலே முருகன் கோவிலும் உள்ள பாறைமேடு. கல்லூரியில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ரகளையை அவள் நினைத்துப் பார்த்தாள். இன்னும் பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் “ஷட் அப்” என்று அடிக்காத குறையாகக் கத்திய சம்சுதீனின் ‘இஸ்லாமிய ஆணாதிக்கத்தை’அவளால் மறக்க முடியவில்லை. ஒருவேளை அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அவள் கல்லூரி கேட்டுக்கு வெளியே, ‘அந்த இடத்தில்’ அதாவது பஸ் நிலையத்திற்கும், கல்லூரி வாசலுக்கும் இடையே வழக்கம்போல் நின்ற போது, அந்த சம்சுதீனும் சாலையின் வேலியான வெள்ளை மணல் பாதையில்- வழக்கமான இடத்தில்- ஸ்கூட்டரை நிறுத்தியி ருந்தால், கூடவே ‘ஏறிக்கோ’ என்று என்றைக்கும் சொல்லத் தேவையில்லாததை அன்று சொல்லி யிருந்தால், அவள் ஏறியிருக்கலாம். அல்லது ஸ்கூட்டரின் இடது பக்கம் மட்கார்டோடு ஒட்டிக்கிடந்த நிக்கல் கால் பிடியை அவன் நிமிர்த்தியிருந்தால் கூடப் போதும். குறைந்தபட்சம் அவளைப் பார்த்தும் தலையை ஒரு வெட்டு வெட்டாமல் லேசாகச் சிரித்திருந்தால் கூடப் போதும். ஏனோ, ஒருவித மதவாத எதிர்ப்புரட்சி இருவரிடமும் ஏற்பட்டது. அவன் ‘அல்லா, அல்லா, அவளை ஏற்றுவதும் ஏற்றாததும் உன் இஷ்டம் இன்ஷாஅல்லா’ என்று பிரார்த்தித்தான். இவளும் அப்படியே அபிராமியைப் பிராத்தித்தாள். இப்படி இவர்களின் காதல், அல்லா-அபிராமி யுத்தமாக மாறியபோது, சொல்லி வைத்தாற்போல் பழனிவேலுவே இதே படகுக்காரில் அங்கே வந்தார். காரை நிறுத்தி விட்டு பின்னிருக்கைக் கதவைத் திறந்து மகளைக் கனிவோடு கூப்பிட்டார். அவளுக்கு அழுகை வந்தது. ‘பாருங்கப்பா இவரை! ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டேங்கார்’ என்று கூடத் தந்தையின் தோளில் புரண்டு முறையிடவேண்டும் என்பது போலவும் இருந்தது. ஆனால் அந்தத் தந்தையின் கண்களில் தோன்றிய வைராக்கியம், இவளையும் தொற்றியது. சம்சுதீனை ‘நீயும் உன் ஸ்கூட்டரும்’ என்பது மாதிரியே பார்த்தாள். தந்தை வெளியில் நிற்கும் போதே அவள் காரில் ஏறிக் கொண்டாள். வழிநெடுக இஸ்லாமியப் பெண்கள் எப்படியெல்லாம் தலாக்கிற்கு உட்பட்டும் , எதிர்த்துப் பேச முடியாமலும் பெண் எந்திரங்களாகச் செயல்படுவதாய், உண்மையையும் பொய்யையும் கலப்படம் செய்து தந்தை சாடைமாடையாகத் தெரிவித்த கருத்துக்களைச் சலனமில்லாமல் கேட்டாள். உடனே அவளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் சஹானுபானு என்ற இஸ்லாமிய இளம் பெண், கணவனுக்கு எதிராய் வழக்கு போட்டதும், அரசியல் சாசனமே அந்தப் பெண்ணுக்கு எதிராய்த் திருத்தப்பட்டதும் நினைவுக்கு வர தந்தையை ஆமோதிப்பதாய்ப் பார்த்தாள். இப்போது, காருக்குள் இருந்த அபிராமியால் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. சம்சுதீனைத் திருமணம் செய்வது என்பது - ஒரு முடியாத முடியக் கூடாத விஷயம் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆனாலும், அவனை மனதில் இருந்து உதற உதற அந்த உருவமும், அவனும் அவளும் சம்பந்தப்பட்ட கடந்த கால சம்பவங்களின் நினைவுகளும் மனதில் தடயத்திற்கு மேல் தடயம் போட்டுக் கொண்டேயிருந்தன. அவள் பின்னோக்கி நினைத்துப் பார்த்தாள். அப்போது கல்லூரிக்கு அவள் புதிது. தாவர இயல் உதவிப் பேராசிரியர் வேலை. எம்.ஃபில், படிக்காமலே தந்தையின் சிபாரிசில் கிடைத்த பதவி. வகுப்புகளுக்குள் இவள் பயந்த தாலோ என்னவோ மாணவ, மாணவியரின் பயமுறுத் தல்களும் அதிகமாயின. ஒருதடவை பி.எஸ்ஸி, பாட்டனி இறுதியாண்டு வகுப்புக்குப் பேராசிரியர் வராததால், அந்தப் பாடத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இவளுக்கு. ஆண்களும், பெண்களுமான அந்தக் கலப்புக் கூட்டத்தில் முன்கூட்டியே தயாரித்த குறிப்புக்களை துணையாகக் கொண்டு அவள் ‘மகரந்தச் சேர்க்கை’ பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். பூவில் உட்காரும் வண்டு எப்படி அங்கும் இங்குமாய் பயந்து பயந்து பார்க்குமோ அப்படி, உடனே, ஒரு பயல் எழுந்தான். “மேடம், அதோ அவனுக்கு ‘சுயமகரந்த சேர்க்கை’ பற்றிச் சொல்லிக் கொடுக்கணுமாம்” என்றான். அவள் புரியாமல் விழித்த போது, அதைப் புரிந்து கொண்டு வகுப்பே ஒரே வாயாய்ச் சிரித்து. தாழ்வாரத்தில் போய்க் கொண்டிருந்த ஆசிரியர்கள் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, தங்கள் பங்குக்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ‘கண்டுக்காமல்’ போய் விட்டார்கள். இவளோ அத்தனைக் கண்களும் உடம்பை சல்லடையாக்க, அத்தனை வாய்களும் குபிர்ச் சிரிப்பாய்ச் சிரித்து கும்மாளமாய் கைதட்டி இடையிடையே சில அருவருப்பான அபிநயங்களைக் காட்டிய போது, நிலைகுலைந்து சுவரோடு பொருத்தப்பட்ட கரும்பலகையில் சாய்ந்தாள். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டு விரல்களை விலக்கினாள். சம்சுதீனின் குரல். இதுவரை அவளிடம் “குட்மார்னிங்”, “வணக்கம்” என்பதற்குப் பதிலாக வேறு எதையுமே பேசாத அந்த இளைஞனின் குரல். மாணவர்களை தன்னந்தனியாய் எதிர்த்துக் கேட்டான். “நீங்க நடந்து கொண்டதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. உங்க அக்காவை இந்த இடத்திலே நிறுத்திப் பாருங்க. ஆர் யூ நாட் அசேம்ட் ஆப் யுவர்செல்ப்? யு கேர்ள்ஸ்! யூ டு கேர்ள்ஸ்...!” அந்த வகுப்பு அடங்கியது. அது ஆச்சரியமானாலும் உண்மைதான். ஒருவேளை சம்சுதீன் தமிழில் பேசியிருந்தால் எதிர்த்திருந்திருக்கலாம். பேசியது இங்லிஷ்... அதுவும் கான்வென்ட் உச்சரிப்பில். ஆனாலும் ஒரு பயல் ‘இனிமேல இவ்ங்களுக்கு காதல் வரவேண்டியதுதான் பாக்கி’ என்று முணுமுணுத்தது சம்சுதீனுக்கும் கேட்டது- அபிராமிக்கும் கேட்டது- இனிமையாகவே கேட்டது. ஆசிரியர் அறைக்குள் வந்ததும் விம்மியழுத இவளை, சம்சுதீன் தான் தேற்றினான். மாணவர்களின் மதிப்பைப் பெற இரண்டு வழிகளில் ஒன்றைக் கையாள வேண்டும் என்றான். முதலாவதாக பாடத்தில் அவர்களுக்கு தெரியாத அம்சங்களைச் சொல்ல வேணடும். நாம் அவர்களைவிடப் பல மடங்கு படித்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்ந்த வேண்டும். அவர்களிடம் ‘பிஸினஸ்லைக்காகப்’ பழக வேண்டும். அப்படி திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது போனால், அவர்களோடு சேர்ந்து ஜோக் அடிக்க வேணடும். பாம்பு தின்கிற ஊரில் நடுத்துண்டு எனக்கு என்கிற மாதிரி. இரண்டாவது வழியைப் பிடிக்காத அபிராமி, அன்றிலிருந்து தாவர இயலில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய புதிய அதிசயச் செய்திகளைத் தேடிப்பிடித்துப் படித்தாள். வகுப்புகளுக்கும் அதைத் தெரியப்படுத்தினாள். இப்போது மாணவர் பார்வையில் அவள் ஒரு அசட்டு அபிராமியல்ல. அசத்தும் அபிராமி. இதற்கெல்லாம் காரணம் யார்... மாணவர்களிடையே கெளரவத்தைத் தேடிக் கொடுத்தது யார்? அபிராமிக்கு இப்படிப்பட்ட சம்சுதீன், கண்ணபிரான் போல் அங்கே தோன்றவேண்டும் என்று விருப்பம். அப்படித் தோன்றியிருப்பானோ என்று வெளியே எட்டிப் பார்க்க ஒரு ஆசை. அபிராமி கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கப் போனாள். டிரைவர் பின்பக்கம் திரும்பாமலே ஆணையிட்டார். “ஏசி போயிரும்மா திறக்காதிங்க!” “எனக்கு இயற்கைக் காத்துத் தேவைப்படுது. இந்த செயற்கைக் காற்றை என்னாலதாங்கமுடியல.” அபிராமி, டிரைவரைப் பொருட்படுத்தாமல் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் நீட்டிக் கண்ணாடிகளுக்குக் கீழே உள்ள நிக்கல் பிடிகளைச் சுழற்றினாள். இரண்டு பக்கமும் கணகளைச் சுழலவிட்டாள். அந்தப் பக்கம் பார்த்தால் இந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நின்றவனைக் கடந்திருப்போமோ என்ற அச்சம். கண், காது, மூக்குகளை தனித்துவமாகக் காட்டினாலும் தனித்துவத்தை இழக்காத செவ்வக முகம். தலை இலேசாய் செம்பட்டையாய் இருந்தாலும், அந்தச் சிவப்பு முகத்திற்கு அது ஒரு தங்க முடியாகத் தோன்றுவது போன்ற நேர்த்தி. குழைவான பார்வை- நிறைவான உடம்பு. அந்த உருவத்தை -அந்த முகத்தை “நானிருக்கேன் பயம் ஏன்?” என்பது மாதிரியான அந்தப் பார்வையை அவளால் உதற முடியவில்லை. வழியில் அவன் முகச்சாயல் கொண்டவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவள் காருக்கு வெளியே கழுத்தைத் தூக்கிப் போட்டாள். பிறகு அது அவன் அல்ல என்று தெரிந்ததும், நீட்டிய கழுத்தை வளைத்துப் பிடித்து உள்ளொடுங்கிப் போனாள். அந்தக் கார், அந்த நகரத்தை ஒட்டியும், ஒட்டாமலும் இருந்த மணல் மேட்டின் மறு பெயரான தேரிமேட்டுப் பக்கம் போனது. அந்த மண் கடலில் தட்டுத் தடுமாறி ஓடி ஓர மலைப் பகுதிக்கு போனது. மலை என்று சொல்வது கூடத் தவறு. குன்று என்றும் கூற முடியாது. வெறும் பாறைக் குவியல்கள். அவற்றிற்குச் சிறிது தள்ளி ஏராளமான குடிசைகள். இடையிடையே காரைக் கட்டிடங்கள். அவையும் முறைப்படியாக இல்லை. அந்தப் பாறை வழுக்கலானது; செங்குத்தானது; ஆனாலும் இடையிடையே கால் பாதங்கள் படும்படியான அளவுக்குச் செதுக்கல்கள்; அந்தப்பாறைக்கு மேலே ஒரு கல் கட்டிடம். அதற்கு வெளியே நான்கைந்து கற்சிலைகள்; ஒரு பெரிய வேல்; அந்தப் பாறைக்குக் கீழே, ஒரு முழத் துண்டு கூட இல்லாத பிள்ளையார்; ஏகாங்கி, கூரையோ கொட்டகையா கிடையாது; மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து போனவர்; தும்பிக்கையில் பாசிப்பச்சை தலையில் பொடிப் பொடியான ஓட்டைகள். ஆனாலும் இவருக்கு தோப்புக் கர்ணம் போட்டுவிட்டுத்தான் அவரது தம்பியைப் பார்க்க வேண்டும். அந்தக் காரில் இருந்து இறங்கிய அபிராமி அதிர்ந்து போனாள். பிள்ளையாரைச் சுற்றி முப்பது நாற்பது பேரைக் கொண்ட கூட்டம்; பேண்ட் ஸ்லாக் காரர்கள்; லுங்கி கட்டிகள்; அந்தக் கலவைக் கூட்டம் பிள்ளையார் சிலையின் அடிவாரத்தை ஒரு இரும்புக் கம்பியால் குத்திக்குத்தி உள்ளே துளைத்துக் கொண்டிருந்தது -சம்சுதீன் - அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியன். அடிவாரத்துக்குள் நுழைந்த அந்தக் கம்பியின் மறுமுனையைப் பிடித்து நெம்புகோலாக்கி கீழே கீழே தள்ளுகிறான். அவனுக்கு இன்னும் நான்கைந்து கைகள் ஒத்துழைப்புக் கொடுக்கின்றன. கம்பி கீழே போகப் போக பிள்ளையார் குடைசாய்ந்து அவர்களிடமே அடைக்கலம் தேடுவது போல் குப்புற விழுகிறார். உடனே இன்னொருத்தன், பிள்ளையாரின் தும்பிக்கையில் ஆத்திரம் தாங்காமல் சுத்தியால் அடிக்கிறான். ஆங்காங்கே குடிசைகள் பக்கம், அவற்றைப் போலவே, அன்றாடக் கூலிகள் ஒடுங்கியும் ஒதுங்கியும் நிற்கிறார்கள். அபிராமியால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. டிரைவரும் அடியாள் ஆசாமிகளும் தட்டுத் தடுமாறியபோது, அவள் அந்தப் பக்கமாக ஓடுகிறாள். சம்சுதீனைப் பார்த்து உரிமையோடு கேட்கிறான். “சம்சுதீன் நீங்கள்லாம் படிச்சவங்களா? கடைசியிலே... நீங்களும் கற்கால மனிதர்தானா? அயோத்தி மசூதிக்கு இந்தப் பிள்ளையார் என்ன பண்ணுவார்?” சம்சுதீன், அவளைப் பார்த்து லேசாய்த் திடுக்கிட்டான். “எப்படி இருக்கே?” என்றுகூடக் கேட்கப் போனான். அவளது அப்பாவின் அடியாட்கள் துரத்த அவர்கள் கல்லெறியில் ஏற்பட்ட சதைப் பிய்ப்புக்களை ஆதாரமாகக் காட்ட நினைத்தான். உயிருக்குப் பயந்து அடைக்கலமாக இங்கே இந்தக் குடிசைப் பக்கம் வந்ததையும், தன்னைப்போல் அடைக்கலமான இதர முஸ்லீம் இளைஞர்களோடு, மூன்று நாட்களாக சரியான அன்ன ஆகாரமில்லாமல் அல்லாடுவதையும் தெரிவிக்கப் போனான். இதற்குள் இன்னொருத்தன் முந்திக் கொண்டான். அவனுக்கு உடை அலங்காரமாய் இருந்தாலும் முகம் முரட்டுத்தனமாய் இருந்தது. “பேசாமப் போம்மா! சம்சுதீனுக்கு வேண்டிவள் என்கிறதாலே ஒன்னை விட்டு வைக்கிறோம். இதே கூட்டம் இந்துக்களோட கூட்டமாயிருந்து, நீங்க ஒரு முஸ்லீம் பெண்ணாயிருந்திருந்தால் இந்நேரம் என்னவெல்லாமோ நடந்திருக்கும் ஒன்னைக் கும்பல் கும்பலாக கற்பழிச்சு அந்தப் பாறைப் பக்கம் வீசிப் போட்டிருப்பாங்க!” அபிராமி பயந்து போனாள். பின்பக்கமாய்த் திரும்பி இன்னும் கார் பக்கமாய் நின்ற தனது ஆட்களைப் பார்த்தாள். அவர்கள் அசைவதாய்த் தெரியவில்லை. இதற்குள், அவளுக்கு பதிலளித்தவனின் பேச்சில் ரசனை கண்டது போல் படித்த தோற்றமளித்த சில படியாத தலைகள் அவளை வெறித்துப் பார்த்தன. அதிலிருந்த கற்பழிப்புத்தனத்தை புரிந்து கொண்டது போல் கரடு முரடான முகங்களில் அழுத்தந்திருந்தமான மீசைகளை வைத்திருந்த குடிசை வாசிகள் அவர்களைத் தடுத்தார்கள். குடிசைப் பக்கம் கோஷாக்களோடு நின்ற பெண்கள் “பெண்பாவம் பொல்லாது. வேண்டாம். வேண்டாம்” என்று சொன்னபடியே ஓடிவந்தார்கள். ஆச்சரியந்தான். ஒரு பெண்ணுக்கு ஏற்படப் போவது அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. அபிராமி, சிறிது விலகி அந்தப்பாறை படிக்கட்டுக்களாய் தோன்றிய கல்வரிசைகளில் மேல்நோக்காய் நடந்தாள். முதலில் மேற்குப்பக்கம் சரிவான பகுதியில் தெளிவாகத் தெரிகிறதே மசூதி. அங்கே போகணும். அந்த மசூதிதான், ஆஸ்த்துமாக்காரியாக இருந்தவளை ஆரோக்கியமானவளாக மாற்றிய மசூதி. நெற்றிப்பொட்டில் விழுந்த இஸ்லாமிய துவாதான் அவள் நுரையீரலைச் செப்பனிட்டது. அந்த மசூதியைத் தரிசித்துவிட்டு, உச்சிப்பாறைக்கு போய் முருகனையும் தரிசிக்க வேண்டும். அவளைப் பெறாமல் பெற்ற அன்னை அபிராமியின் இன்னொரு பிள்ளைதானே அவன்? அண்ணன் வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதா, வந்ததே அதுக்குத்தானே. நான்கு படிக்கற்களில் ஏறிய அபிராமியின் முன்னால் ஒரு கூட்டம் பக்கவாட்டில் ஏறிக் குறுக்கே நின்றது. சம்சுதீன்தான் இப்போது அந்தக் கூட்டத்துக்குத் தலைவன். அமைதியாகச் சொன்னான்: “தப்பா நினைக்காதே அபிராமி... ஸாரி... நினைக்காதீங்க அபிராமி. இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட செயல் இல்லை. அயோத்தியில் இடையில் வந்ததாகக் கூறப்படும் மசூதி இருக்கக்கூடாதுன்னா, அதோ பரம்பரையாய் இருக்கிற எங்க மசூதிக்கு மேல பத்து வருஷத்துக்கு முன்னாலே வந்த முருகன் கோவில் இருக்க முடியாது. இப்போ இதை இடிக்கப் போறோம். வேணுமுன்னா என்னைத் துரத்துன உங்க கூட்டத்துக் கிட்ட போய்ச் சொல்லு! அந்தப் பேடிகளை, தைரியமிருந்தால் இங்கு வரச் சொல்லு!” “சம்சுதீன், நான் சொல்றதைக் கேளுங்க! நாங்க உங்களை ஏத்துக்கிறோம். நீங்கதான் எங்களை ஏத்துக்கிறதில்லை. இதுதான் பிரச்சினை. தயவு செய்து வழிவிடுங்க. என்னாலே கோவிலுக்கு போகாமல் திரும்ப முடியாது.” “நீங்க உங்களத்தான் முக்கியமாய் நினைக்கிறீங்க. எங்களோட உணர்வுகளோ, நான் உயிருக்குப் பயந்து துடிச்ச துடிப்போ உங்களுக்குத் தெரியல; உங்களுக்குத் தெரியவும் தெரியாது; ஏன்னா உங்க மதமே அப்படிப் பட்டது. நான், உங்கப்பன்- அந்த முரட்டுப்பயல், ஏவிவிட்ட வேட்டை நாய்கள்கிட்டே இருந்து தப்பிக்கும்போது அல்லாவை வேண்டிக்கிட்டேன். அதோ மேலே இருக்கிற முருகன் கோவிலை இடிச்சிட்டு, அதோ இருக்கிற மசூதியிலே தொழுகை செய்யுறதா அல்லாகிட்டே வேண்டிக்கிட்டேன். உங்களுக்குப் பல கடவுள்கள். ஒண்ணுக்கிட்டே வேண்டிக் கிட்டு அந்த வேண்டுதலை நிறைவேத்தாமல் அதுக்குக் கோபம் வந்தால் , அந்தக் கடவுளை அலட்சியப்படுத்திட்டு இன்னொரு கடவுள்கிட்டேபோகலாம். ராமர் இல்லாட்டால், ஈஸ்வரன்... ஆனால் நாங்க அப்படியில்லை. எங்களுக்கு ஒரே கடவுள் அல்லா. அவரை ஏமாற்றி அவரோட கோபத்தை... எங்களால் தாங்க முடியாது. தயவு செய்து போறீங்களா?” சுற்றும் முற்றும் நின்றவர்கள் சிரித்தார்கள். அபிராமி கொதித்துப் போனாள். இந்து மதத்தை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தது அவளுக்கு அழுகையானது. அதையே ஆவேசமாக்கி, அவர்களை முறைப்பாய் முறைத்தபோது, சம்சுதீன் சவாலிட்டான். “அந்த முருகன் கோவிலை இடிக்கப் போறோம். வேணுமுன்னா, அந்தப் பேடிப்பயல் பழனிவேலையும், அவன் பொட்டைக் கூட்டத்தையும் இங்கே வரச்சொல்.” அபிராமி சூளுரைத்தாள்: “முருகன் கோவிலை நீங்க வேணுமின்னா உடையுங்க. இதைப் பத்து மடங்கு பெரிசாக் கட்டி அந்தப் புதுக்கோவிலுக்குள் நான் வரலேன்னா... என் பேரு அபிராமியில்ல... அது மட்டுமில்லே. அந்த மசூதியும், அயோத்தி மசூதி மாதிரி ஆயிடலாம்.” “நீ உயிரோடு இருந்தாத்தானே இந்தக் கோவிலுக்குள்ளே வரமுடியும்?” சம்சுதீனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒருவன் காட்டுக்கத்தலாய்க் கத்தி அபிராமியின் கழுத்தை நெரிக்கப் போவதைப் போல் அதற்கு இருபக்கம் கரங்களைக் கொண்டு போனான். சம்சுதீன், அந்தக் கைகளைக் அல்லாடி அல்லாடிப் பின்னுக்கு இழுக்க போராடிக் கொண்டிருந்தான். இதற்குள் சிறிது தொலைவில் நின்ற கோஷாப் பெண்கள் ஓடோடி வந்தார்கள். அபிராமியை முன்னாலும் பின்னாலும் பிடித்துக் கொண்டு அவளைத் தூக்காத குறையாகத் தூக்கி, அந்தக் கார்ப் பக்கம் கொண்டு போனார்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்தது “நீங்கள்ளாம் ஆம்பிள்ளைகளா? ஒரு பொண்ணைத் தனியாய் அனுப்பிட்டு குத்துக்கல்லு மாதிரி நிக்கீங்களே? மனுசங்களாம் மனுசங்க!” என்றாள் ஒருத்தி. உடனே எல்லாப் பெண்களின் கண்களும் அவர்களைச் சுட்டெரித்துவிட்டு அபிராமியின் முதுகைத் தட்டிக் கொடுப்பதுபோல் ஒருத்தி தடவி விட்டதை அங்கீகரித்த படியே, திரும்பிப் போனபோது, அபிராமி காருக்குள் ஏறி அப்படியே குப்புறப் படுத்தாள். இரண்டு கைகளிலும் கண்ணிர் ஓடி முட்டிகள் வழியாக இறங்கியது. கார் நகருவது போலவும் தோன்றியது. அதன் மீது சில கற்கள் விழுவது போலவும், சரஞ்சரமாய்ச் சத்தம் கேட்டது. டிரைவர் பின்பக்கமாகத் திரும்பி ஆறுதல் சொன்னார். “எல்லாம் நன்மைக்கேன்னு நினைங்க அபிராமியம்மா! நம்ம முருகன் சரியான சித்தன். உங்களை இங்க வரவழைக்கிறது மாதிரி வரவழைச்சு, இந்த சம்சுதீன் எப்படிப்பட்டவன்னு உங்களுக்கு காட்டிக் கொடுத்துட்டான் பாருங்க!” அபிராமி நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்ணிமையின் அடிவாரத்தைக் கைவிரல்களே கத்தியாக கீறிவிட்டாள். அந்த கல் குவியலான பாறை உச்சியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். “முருகா! முருகா! உன் கருணையே கருணை! உன் விளையாட்டே விளையாட்டு கண்கண்ட தெய்வமே! அவனை, அந்த சம்சுதீனை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன்! இது சத்தியம் முருகா... சத்தியம்...” |