உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 அவன் அந்தத் திண்ணைக் கடைக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினான். வெள்ளை இனாமல் பிடியின் இருபக்கமும் பிடித்திருத்த முடிமுளைத்த இரும்புகள் போன்ற இரண்டு கரங்களையும் எடுத்தான். சைக்கிளிலிருந்து இறங்காமலே முன் பக்கமாய் குவித்து, ‘பாருக்கு’ இருபக்கமும் கால்களை அகலப் போட்டான். பின்புறமாகத் திரும்பி கருப்பு ரப்பர் கயிறால் கட்டப்பட்ட வெள்ளை ஈச்சம்பாய் கூடையைத் திரும்பிப் பார்த்தான். அதில், விளையாட்டு அரங்க இருக்கைகள் போல் அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட பச்சை வெற்றிலைக் கட்டுகளில் கை போட்டான். பின்னர் வெற்றிலைக்காம்பு அடிவாரங்களில் பிசினாய் ஒட்டிய பாசியையோ, தூசியையோ அப்புறப்படுத்திவிட்டு, ஐந்து கவுளி வெற்றிலைக் கட்டுக்களை எடுத்து அவளிடம் நீட்டினான். பிறகு நீட்டிய கைகளைச் சுருக்கி, ஏழைகளின் நரம்புகள் போல் வெளிப்படையாய்த் தெரிந்த வெற்றிலைக் காம்புகளை பிடித்துக் கொண்டு ஒரு உதறு உதறினான். உதறிவிட்டு, அந்தக் கடையின் முன்பக்கம் நீளவாக்கில் பொருத்தப்பட்ட மரப்பலகையில் வெற்றிலைக் கட்டை வைத்துவிட்டு, அவளை ஏறிட்டுப் பார்க்காமலே சைக்கிள் இருக்கையில் ஏறி, பெடல்களை ஒரு அழுத்து அழுத்தியபோது - “யோவ் மூப்பனார்...” அவன் சைக்கிளை நிறுத்தினான். ஒரு காலை பெடவிலும், மறுகாலைத் தரையிலும் வைத்தபடியே திரும்பிப் பார்த்தான். அவள் தலையையே கையாட்டுவதுபோல ஆட்டினாள். உடனே, அவன் கால்களைத் தரையில் தேய்த்தபடியே, பின்பக்கமாகத் தன்னையும், சைக்கிளையும் கொண்டுவந்தான். உள்ளே நின்ற அவளைப் பார்த்தான். திண்ணையில் கிடந்த சின்னக்குழந்தை படுக்கும் படியான குறுங்கட்டில் இருக்கையில் உட்காராமல், அந்தத் திண்ணை விளிம்பிற்குக் கீழே கால்களை மறைத்து, மார்பகத்திற்கு மரவாடை போட்டதுபோல் மறைத்து உள்நோக்கி நீண்ட ஒரு பலாப்பலகை மறைக்க நின்ற பாத்திமாவைப் பார்த்தான். மாம்பழத்திற்குப் பப்பாளி விதைகளையே கண்களாக்கியது போன்ற தோற்றம். எந்தச் சதையும் ‘எக்ஸ்ட்ராவாக’ இல்லாத நேர்த்தி. குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகள் போட்ட சாதா சேலை. கட்டம் போட்ட ஜாக்கெட் கீழே விழப்போகிறேன் என்பதுபோல் தலையிலிருந்து நழுவிக் கொண்டிருந்த கோஷா. அவன், அவளை ஏறிட்டுப் பார்த்தான். எத்தனை நாளைக்குத் தான் இந்த மூப்பனார் பட்டம், கேட்டாக வேண்டும் இப்பவே. “இந்தாம்மா உன்னைத்தான்! என் பேர் மூப்பனார் இல்ல! மாரியப்பன்.” பாத்திமா அவனை ஓரம் சாய்த்துப் பார்த்தாள். ஒப்புக்குப் போடுவது போல், தோளில் தொங்கிய சேலை துணியை தலையில் போட்டுக் கொண்டாள். வேலை செய்யும்போது, பேச விரும்பாதவள் போல், வலதுபக்கம் கும்பலாய்க் கிடந்த சோடாப் பாட்டில்களை எடுத்து அவற்றிற்குரிய மரப்பெட்டிப் பொந்துகளில் திணித்தாள். இடதுபக்கம் உள்ள வேர்க்கடலை மிட்டாய் ஜாடியையும், வலது பக்கம் சாக்லேட் ஜாடியையும் இரு கைகளாலும் ஒரே சமயத்தில் நகர்த்தி வைத்தாள். வெற்றிலை அடுக்குகளை எடுத்துப் பின்பக்கம் கூடை மூடியில் வைத்தாள். இதற்குள், அவன் போகப்போவது போல், அவன் நிழல் மேலே எம்புவதைப் பார்த்துவிட்டு, அவள் நிமிர்ந்தாள். உடம்பில் படிந்த தூசி துப்பட்டைகளைத் தட்டி விட்டபடியே கேட்டாள்: “என்ன சொன்னீக?” “நான் மூப்பனாரு இல்லன்னேன்.” “பிறகு எப்படி வெத்திலை வியாபாரம் பாக்கீக?” “வெத்திலைன்னா மூப்பனாரு; பலசரக்கு கடைன்னா நாடாரு. பேன்சி ஸ்டோருனா சாய்பு: வட்டிக் கடைன்னா மார்வாடி! இப்படியா நினைக்கிறது?” “அப்போ நீங்க என்ன சாதி?” “மனுஷன். ஆண் சாதி.” பாத்திமா, தன்னையும், அவனையும் ரசனையோடு பார்த்தபடி வந்த, ஒரு பிஞ்சில் பழுத்த சிறுமிக்கு, காசை வாங்கிக் கொண்டு சாக்லேட்டைத் திணித்து விட்டு, அவனைப் பார்க்காமல் அந்தத் தெருவைப் பார்த்தாள். அந்தத் தெரு முழுவதும் வண்ணப் பாலம் போட்டது போல் நீண்ட நூல் இழைகளைக் கொண்ட தறிகள். அவற்றிலும் ஆங்காங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவள் அவனையும் புதிதாய்ப் பார்ப்பது போல் பார்த்தாள். இறுகலான உடம்பு, சுருள் கம்பி மாதிரியான கழுத்து, கனிவான முகம், முறம் மாதிரியான முதுகு, அந்த சைக்கிள் மணி போல் பிசிறு தட்டாத டாண்டாண் சத்தம், சின்னக் கரை போட்ட வேட்டி. அவள், எதிர்த் திசையில் தோன்றிய சில முகச் சுளிப்புகளைப் பார்த்துவிட்டு, கோஷாவை அகலப்படுத்தினாள். அவன் கோபப் பட்டானா அல்லது சாதாரணமாகக் கேட்டானா என்ற புதிரை அவிழ்க்கப் போகிறவள் போல் கேட்டாள். “தப்பாக் கேட்டுட்டேனோ?” “அப்படி நினைச்சா நான் திரும்பி வருவேனா? கோபப்பட்டிருந்தால், ஒரு மொறப்பு மொறச்சுட்டு திரும்பிப் பார்க்காம போயிருப்பேன். ஆமாம்மா.” “எம் பேரு ஆமாம்மா இல்லை... பாத்திமா.” “ஏதோ ஒரு மா. ஆமா தினமும் பாக்கேன். நான் கொடுக்கிற வெத்திலைய எண்ணுறதே இல்லையே ஏன்?” “எல்லாம் ஒரு நம்பிக்கையிலதான். இந்த வியாபாரத்துல மோசடி செய்து தானா நீரு மாடி வீடு கட்டப் போறீரு! இதுல உமக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்!” “கிடைக்கிறது முப்பது ரூபாய்... போலீஸ் மாமூல் மூணு ரூபாய். சைக்கிள் கேஸ் அது இதுன்று இரண்டு ரூபா. ஆக மொத்தத்திலே தேறுறது என் வயசுப்பணம். எவ்வளிவுன்னு சொல்றது?” “இருபத்தைஞ்சு சரிதானே. அப்போ வேற தொழில் பாக்குறது?” “இந்தக் காலத்துல தொழில்னாலே அது கள்ளச் சாராய்ந்தான்... போலீசைக் கைக்குள்ளே போட்டுக்கிட்டு காய்ச்ச ஆரம்பிச்சுட்டா... போலீசே நம்மனை கைக்குள்ளே போட்டுக்கனும்னு நினைக்கிற அளவுக்கு காசும் சம்பாரிச்சுடலாம். பெரிய மனுசனாவும் ஆயிடலாம். ஆனா இதுல்லாம் தங்குமா? என்னைப் பொறுத்த அளவுலே, உங்க வாப்பாவை மாதிரி தெத்தாமே, திருடாமே உழைச்சுச் சாப்பிடணும்னு நினைக்கேன். உங்க வாப்பா எனக்கு ஒருவழி காட்டறதாச் சொல்லியிருக்கிறார்.” “எங்க வாப்பாவா! அப்ப உருப்பட்டாப்லதான்...” “அவருஉருப்பட்டாரோ இல்லையோ, அவராலே நிறைய பேர் உருப்பட்டிருக்கிறாங்கன்னு தெரியும். ஆமா... நானும் அப்பப்பிடிச்சே பாக்கேன். உங்க தெருவிலே ஏன் ஒரு நாளும் இல்லாத வழக்கமா கூடிக் கூடிப் பேசுறாங்க?” “எங்கேயோ ஆக்ராவிலேயோ, ஐதராபாத்லேயோ பாபர் மசூதின்னு ஒண்ணு இருந்ததாம். அதை இடிச்சுட்டாங்களாம்.” “புதுசாக் கட்டப் போறாங்களா?” “தெரியலை... அப்பிடி இடிச்சதுலே ஏதாவது கோளாறு நடந்திருக்கும் போல தோணுது, வாப்பாக் கிட்டே கேட்டுச் சொல்றேன்.” “நான் மொதல்ல சொல்றதைக் கேள். வாப்பா சாப்பிட்டுகிட்டு இருக்கார். கூடமாட நின்று எது வேணுமின்னு கேளு!” அந்த ஓட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட சம்ரத் பேகத்தை மாரியப்பனும் பாத்திமாவும் திரும்பிப் பார்த்தார்கள். அவள் வாசல்படியைத் தாண்டி, பக்க வாட்டில் உள்ள ஒரு ஒற்றை இரும்புப் பலகை அடைப்பைத் திறந்தது தெரியாமல் திறந்து, மூடியபடியே கடைக்குள் வந்தாள். மோட்டா சேலை. முரட்டு நிறம்-ஜிகினா ஜாக்கெட்- எந்த நேரமும் தலையில் எடுத்துப் போட்டுக் கொள்வதற்காக முதுகுக்குப் பின்னால் இடுப்புப் பக்கம் தொங்கிய ஒரு துணி மடிப்பு. சம்ரத் பேகம், மாரியப்பனைப் பார்த்து சந்தோஷமாகச் சொன்னாள். “மாரி உனக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் இவள் அத்தா உன்னைப் பத்தி பேசிக்கிட்டிருந்தார். நீயும் அவரை மாதிரி யோக்கியமாம். அதனாலே ஒனக்கும் ஒரு வழி பண்ணப் போறாராம். என்னன்னு கேட்கமாட்டேங்கிறீயே. அதான் மூணாவது தெருவிலே இருக்கிற துரைச்சாமி முதலாளி ஒரு மாட்டு வியாபாரி... அவரு தயவுல, ஒங்க ரெண்டு பேருக்கும் நல்ல காலம் பிறக்கப் போவுதாம்... முன்னால இவரு மசூதியில கணக்கப் பிள்ளையா இருத்து திவான் முகம்மது மசூதி நிலத்தை கள்ளக் குத்ததைக்கு விடுறாருன்னு வேலையை விட்டபோது- இவரைத் தாங்கிக்கிட்டவரு துரைச்சாமி முதலாளி. ஏழெட்டு வருசமாஅவரு, மசூதி பாளைய வாரச் சந்தையில் வாங்கிப் போடுற மாடுகளை, இவருதான் புயியரை, புனலூரு, குன்னிக் கோடு மாதிரியான மலையாளம் மாட்டுச் சந்தைக்கு பத்திட்டுப் போறது உனக்குத் தெரியும். இப்படி மாடு பத்தற மத்தவங்க... புண்ணாக்குலேயும் புல்லுக்கட்டிலேயும் கமிஷன் வைப்பாங்களாம். சாராயத்திற்கு பணம் பத்தாம ஒரு மாட்டைக் கூட வித்திட்டு அது தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி விடுவாங்களாம். இவளோட வாப்பாவுக்கு இப்படிச் செய்யத் தெரியாதே. அதனாலேயே துரைச்சாமி முதலாளிக்கு அவருமேல ஒரு மட்டுமரியாதி. இப்ப அவருக்குப் பிள்ளைகள் தலையெடுத்திட்டதனால அவங்க இவரு அலையக்கூடாதுன்னு சொல்றாங்க. அதனாலே அந்த முதலாளி இவருக்கிட்ட ஒரு இருபதாயிரம் ரூபாயாக் கொடுத்து மாட்டு வியாபாரம் பாக்கச் சொல்லப் போறாராம். லாபத்திலே பாதிக்குப் பாதியாம். அவரு என்னடான்னா ஒன்னையும்கூட்டுச் சேர்க்கப் போறாராம்.” “அய்யய்யோ... நான் அன்னாடம் காய்ச்சி... ஏங்கிட்டே ஏது பணம்?” “உங்கிட்டே எவன் பணம் கேட்டான்?” அந்த மூன்று பேருமே அமீரைத் திரும்பிப் பார்த்தார்கள். மோவாய்க்குக் கீழே யாரோ உலர்த்திப் போட்டது மாதிரி இரும்பு இழைகள் மாதிரியான குறுந்தாடி. அதோடு அடையாளம் தெரியாமல் சங்கமமாகும் மீசை, அளவான உடம்பு. உழக்குச் சட்டை. நல்ல உயரம். முகம் கரடு முரடாயிருந்தாலும், அவர் கண்கள் ஒளி வீசின. உள்வளைந்த பற்கள். நிதானமாகப் பேசினார். “உன்கிட்ட எவன் பணம் கேட்டான். மாடு வாங்கி விடுறது என் பொறுப்பு. அதைச் சந்தைக்குக் கொண்டு போறது உன் பொறுப்பு. லாபத்தில் பாதியில் இரண்டு பேருக்கும் பாதிப்பாதி. ஏதோ நான் உனக்கு தர்மம் செய்யிறதாய் நினைக்காத, என்னாலையும் இப்போ மாடு பின்னாலே அலைய முடியல. வேறு ஆளைப் போட்டால் பத்திட்டுப் போற மாட்டை மட்டுமல்ல, என்னையும் வித்துப்புடுவான். ஒன்னைப் பங்காளியாச் சேர்க்கறதிலே எனக்கு நஷ்டமுமில்லை. ஏன்னா உனக்கு லாபமா வர்றபணமும், மாடுபத்தறதுக்குக் கூலியாகக் கொடுக்கிற பணமும் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்கும். ஆனாலும் உன்னைப் பங்காளியாச் சேர்க்கிறதனாலே எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்காத குறையைப் போக்கிவிட்டது மாதிரி இருக்குது.” அமீரின் குரல் தழுதழுத்தது. அவர் அதற்கு மேல் பேசினால் அழுதுவிடுவார் என்பதைப் புரிந்து கொண்டது போல், பாத்திமா பேச்சை மாற்றினாள். “யோவ் மூப்பனார்! தப்புத்தான். வெற்றிலைக்காரரே உம்ம வெத்திலைய நாங்க வாங்குறது மாதிரி எங்க கடையிலே பதிலுக்கு ஏதாவது வாங்கப்படாதா? என்னைக்காவது ஒரு கலரு சோடான்னு குடிக்கீரா சரியான கருமி.” “நீ வேறம்மா, ஒரு நாளைக்கு வாய் ருசி கண்டா அப்புறம் சும்மா இருக்காது. வீட்டுல முடங்கிக் கிடக்கிற பனையேறி அப்பனுக்குப் பொடி வாங்கிக் கொடுக்கக்கூட காசு தேறாது. என்னையே நம்பிக்கிட்டு இருக்கிற தங்கச்சியைக் கரையேத்த முடியாது.” “அடேயப்பா! ஒரு சோடாவுக்கா இந்தப் பஞ்சப்பாட்டு?” “சிறு துளி பெருவெள்ளம் என்கிறது மாதிரி, பெரு வெள்ளமும் சிறுசிறு துளியாய்ப் போயிடலாம்!” “வெத்திலைக்காரரே! நீர் மட்டும் படிச்சிருந்தீரு இன்னேரம் தூள் கிளப்பியிருப்பீரு...” மாரியப்பனும் தன்னால் படிக்காமலும் தூள் கிளப்பமுடியும் என்பதுபோல் அமீரைக் குறுக்கு விசாரணை செய்தான். “என்ன பாய் இது? ராமர் கோவிலை இடிச்சிருக்காங்க? கண்ணால பார்த்தேன். நீங்க என்னடான்னா மசூதியை இடிச்சதாச் சொல்றீங்க? இடிச்சது ராமர் கோவிலா, மசூதியா?” “இடிச்சது மசூதியைத்தாம்பா! இந்த அக்கிரமம் எங்கேயும் நடக்காது.” “நீங்கவேற டவுன்ல பெரிய பஸ் ஸ்டாண்டு பக்கம் பிளாட்பாரத்திலே ஒரு ராமர் கோயில் இருந்ததே கிளிக்கூண்டு மாதிரி. அதை யாரோ ராத்திரியோட ராத்திரியா இடிச்சுட்டாங்களாம், அந்தக் கோவிலுக்கு ஒரு பத்து பைசா சூடம் ஏத்தாத பயலுவ கூட இப்போ குதிகுதின்னு குதிக்கானுவ. அத்தக் கோவிலு முன்னால எச்சி துப்புன பயலுவ, உண்டியல் திருடன பயலுவ எல்லாரும் இப்போ ராமருக்கு ஏதோ ஆபத்து வந்திட்டுதுன்று கூப்பாடு போடுறாங்க. என்ன பாய் இதெல்லாம்? வாயில்லா ஜீவன். அவரை எதுக்கு இடிக்கணும்?” அமீர் எதையோ யோசிப்பது போல் தாடியைத் தடவிவிட்ட போது, மாரி அமீர் மனைவியிடம், தாயிடம் பேசுவதுபோல் பேசினான். “பேகம்மா... நான் வாரேன், காலையில இருந்தே நான் எதுவும் சாப்புடல. தலை சுத்துது... டாக்டர்கிட்டே போனால், பிளட் பிரஷர்னு சொல்லுவான். அதுக்கு முன்னாலேயே வீட்டுக்குப் போறேன்.” பாத்திமாவிற்கு இதயம் வலித்தது. சம்ரத்யேகம் “எங்க வீட்டுல சாப்பிடு” என்றாள். மாரியப்பன், தன் பாட்டுக்கு சைக்கிளை உருட்டப்போனபோது, அமீர் அவன் மார்பில் தனது வலதுகையை, குறுக்காய் வைத்தபடி “சாப்பிட்டுப்போ” என்றார். “வேண்டாம் பாய்.” “இப்பவே நான் சொன்னபடி கேட்க மாட்டேங்க. அப்புறம் எனக்குப் பங்காளியா மாறின பிறகு எப்படிக் கேட்பே? நீ நல்ல பிள்ளையா நான் சொன்னதைக் கேட்பேன்னு நம்பனுன்னால், நீ இங்கேயே சாப்பிடணும். சாப்பிட்டுட்டு இங்கேயே இரு. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... சம்ரத் நான் ஜமாத்துக்கு போய்ட்டு வாரேன்.” “போனமா வந்தமான்று வாங்க. வாயைத் திறக்கப்படாது... இது வரைக்கும் பட்டபாடு போதும் மாரி! நீ சாப்பிட வா!” அமீர், ஆங்காங்கே அவரது வரவுக்காக காத்து நின்றவர்களோடு கலந்தார். சின்னச் சின்னக் கூட்டங்கள் ஒன்றாகி, பெருங்கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த சம்ரத் பேகம், மாரியப்பனின் கையைப் பிடித்து இழுத்தபோது, அவன் தயங்கினான். “என்னப்பா இது... பாயுங்க வீட்ல சாப்பிடக்கூடாதுன்னு யாரும் சொல்லிக் குடுத்தாங்களா?” என்று பேகம் கேட்டபோது, மாரியப்பன் அந்த வீட்டுக்குள் முதலாவதாக ஓடினான். அந்த அம்மாள் கொல்லைப்புறக் கதவைத் திறந்து, அங்கே இருந்த சிமிண்ட் தொட்டியைச் சுட்டிக்காட்டி, ஒரு ஈயப்போணியை நீட்டினாள். மாரியப்பன், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். நான்கைந்து தெள்ளை மரங்கள். குலை போட்ட வாழைகளை சில்லாட்டைகள் மறைத்துமூச்சு முட்ட பைத்துக் கொண்டிருந்தன. இப்படியே விட்டால் ஒரு தேங்காய் கூடத் தேறாது... “பேகம்மா ஒரு அரிவாள் குடுங்க!” அந்த அம்மாள் காரணம் புரியாமல் அரிவாளை நீட்டிய போது, அவன் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு அரிவாளை இடுப்பில் சொருகிக் கொண்டு, தென்னை மரத்தில் ஒரே தாவாகத் தாவினான், கீழ்நோக்கிப் போன தலைகளை வெட்டினான். சில்லாட்டைகளின் அடிவாரத்தை அரிவாளால் கோடுகள் போட்டுப் பிய்த்தெறிந்தான். உடனே பாளைகள் தங்கநிறப் பெட்டகத்தில் பச்சை நிறக்காய்களைக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றை மாராப்பில் சுமப்பது போல் சுமந்து காற்றில் ஆடிக்காட்டின. மாரியப்பன் ஐந்த தென்னைமர உச்சிகளையும் துப்புரவாய்த் துலக்கிவிட்டு, கைகால்களைக் கழுவினான். உரிமையோடு கேட்டான். “சரி இனிமே சோறு போடுங்க!” சம்ரத் பேகம் ஒரு கோரம் பாயை எடுத்துப் போட்டாள். சுவரோடு மடித்துப் போட்டாள். அவன் முன்னால் ஒரு தட்டை வைத்தாள். சுடச்சுட ‘களி’ கொண்டு வந்தாள். அந்தக் கேழ்வரகுக்கூழ் நெருப்பில் வெந்து வெப்பக் கட்டியாய்க் கொதித்தது. பேகம், அதன் மேல்விதானத்தில் அகப்பையை வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். அது உள்வாங்கி வட்டக் கிணறுபோல் மாறியபோது, சமையலறைக்குள் போய் ஒரு ஈயப்பாத்திரத்தைக் கொண்டுவந்து அகப்பையால் ஊற்றினாள். அந்தப் பகுதிக்கு மட்டுமே அதிகமாய்ப் பரிச்சயப்பட்ட "நறுக்குமல" கருவாட்டுக் குழம்பு... அதை அவசர அவசரமாய்க் களியோடு சேர்ந்து சாப்பிடப் போனவன், அதன் சுவையை அவ்வளவு சீக்கிரம் வயிற்றுக்குள் மூழ்கடிக்க விரும்பாதவன்போல் ஆற அமர ஒவ்வொரு விள்ளலாய்ச் சாப்பிட்டான். கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட சுவை உணவைக் கண்ட தில்லை. அப்பாவுக்கும் கிடைத்தால் சந்தோஷப்படுவார். அவன் பேகத்தைப் பார்த்து, “இனிமே எப்பவும் என்னைச் சாப்பிடுன்னு சொல்லாதீங்கம்மா... அப்புறம் ஒங்களுக்கே மிச்சம் இருக்காது“ என்றான். சம்ரத் பேகம், தாய்மையின் பூரிப்பில் பெருமிதப்பட்ட போது, சாப்பிட்டு முடித்து மாரியப்பன் வெளியே வந்தான். பாத்திமாவின் கையிலிருந்த ஒரு பெட்டியைப் பார்த்தான். சதுரமானசெவ்வக மரப்பேழை. அவனைப் பார்தததும் அவள் திறந்தாள். வெல்வெட் மெத்தைப் பகுதிகளில் உள்ள விதவிதமான நகைகளைக் காட்டினாள். அவற்றிற்கு நேர்முக வர்ணனையும் தந்தாள், “இது காசி மாலை... இதோ கவின் கம்பு மாதிரி இருக்குதே இது கைவளை, இது காதோட தலை முடியை சேர்த்துக் கட்டுற தோட்டலு... அது சுங்கு. இது தலைகத்தி.” “எனக்குத்தான் தன்லசுத்துது. எதுக்கு இதெல்லாம்?” “இது கில்ட்டு மேக்கப் செட்டு. ஏழைங்களோட கல்யாணத்துக்கு வாடகைக்குக் கொடுக்கிறதுக்காக காதர் பாட்சா, வாப்பாவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுலயும் லாபத்துல, பாதிப்பாதி...” “இதுங்களெல்லாம் உனக்குப் போட்டா எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?” கலகலப்பாய்ச் சிரித்துப் பேசிய பாத்திமா சட்டென்று வாயடைத்துப் பார்த்தாள். மாரியப்பன், ஆடிப்போனான். ‘நான் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய மாட்டேம்மா” என்று கூடச்சொல்லப் போனான். ஆனாலும் அதற்குள் அந்தத் தெருமுனையில் இருந்த சாராயக் கடையில் ஒரு டேப் பாடல். வடக்குப் பக்கம் முகம் திருப்பி நின்ற அந்தக் கடையின் கண்ணாடி அலமாரிகளில் பல்வேறு வண்ண பாட்டில்கள் நவராத்திரி பொம்மைகள் மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொம்மைகளே கூடிப்பாடுவது போல் உறுமி மேளத்தோடான பாட்டு. இருபொருள் தரும் அசிங்கமான பாடல். அதில் எழுதக் கூடியது இதுதான்.
“சாராயம் நான் குடிச்சா நீயும் ஏண்டி ஆடுறே? சரக்குக்குச் சரக்கா வந்து நீயும் ஏண்டி பாடுறே?” பாத்திமா, சங்கடத்தோடு தெளிந்தாள். அந்த அப்பர்ஒயின் கடையில் பாடல்கள் ஒலித்ததுண்டு. ஆனால் இப்படி அசிங்கமாய் ஒலித்ததில்லை. அதுவும் இப்படிப்பட்ட சத்தத்தில்! அவளின் ஒவ்வொரு முகச்சுளிப்பிற்கும் ஏற்ப மாரியப்பனின் உடம்பு ஒவ்வொருவிதமாய் இறுகியது. கத்தியபடியே அந்தக் கடையை நோக்கிப் போனான். உள்ளே நின்ற நான்கு பயல்களை, வெளியே வரும்படி குரலிட்டு நடந்தான். “என்னடா நினைச்சிய... அக்கா தங்கச்சியோட பொறக்காத அற்பப் பயலுவளா?” |