மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்

இயற்றிய

மணிமேகலை

... தொடர்ச்சி - 10 ...

19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை

முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
"அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 19-10

பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
"முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக் 19-20

காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான் 19-30

'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!'
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
"ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப் 19-40

பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து
கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி 19-50

நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 19-60

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும் 19-70

அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர் 19-80

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 19-90

ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும் 19-100

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப் 19-110

பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120

முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர் 19-130

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ!' என்றலும்
'வருக வருக மடக்கொடி தான்' என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 19-140

வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத்
'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது 19-150

ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என
'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த 19-160

கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் 19-162

20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை

அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம் 20-10

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய 20-20

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் 20-30

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி 20-40

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின 20-50

இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் 20-60

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும் 20-70

'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் 20-80

காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
'வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து 20-90

வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த 20-100

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல்' என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக் 20-110

கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை 20-120

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்'
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129