உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 3 ... 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து திருவின் செய்யோள் ஆடிய பாவையின் விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச் சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி 5-10 'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன! எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என 'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின் முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால் பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்' என்றே தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப 'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ? நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்? 5-20 செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!' என அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை 'அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர் விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை! ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை' என 'வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி! ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் 5-30 வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்! யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப் பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு 5-40 "யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் காதலன் ஆதலின் கைவிடலீயான் இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில் பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள் புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் கணவிர மாலை கைக்கொண்டென்ன நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி "என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி 5-50 தன் உறு துன்பம் தாங்காது புகுந்து "சமணீர்காள்! நும் சரண்" என்றோனை "இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் "அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப் புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன் 5-60 பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் "என் உற்றனிரோ?" என்று எமை நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி சங்கதருமன் தான் எமக்கு அருளிய 5-70 எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள் உலக நோன்பின் பல கதி உணர்ந்து தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி காமற் கடந்த வாமன் பாதம் தகைபாராட்டுதல் அல்லது யாவதும் மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என 'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன் 5-80 வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச் சித்திராபதியால் சேர்தலும் உண்டு' என்று அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக் களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி "கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி" என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம் இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை? 5-90 'இதுவே ஆயின் கெடுக தன் திறம்!' என மது மலர்க் குழலாள் மணிமேகலை தான் சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள் இந்திர கோடணை விழா அணி விரும்பி வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி 'புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ! குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் 5-100 முற்ற உணர்ந்த முதல்வா என்கோ! காமற் கடந்தோய் ஏமம் ஆயோய் தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ! ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?' என்று எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப் 5-110 புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் 5-120 வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும் அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்க பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப பவளச் செங் கால் பறவைக் கானத்து குவளை மேய்ந்த குடக் கண் சேதா 5-130 முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப கன்று நினை குரல மன்று வழிப் படர அந்தி அந்தணர் செந் தீப் பேண பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக் கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள அமரக மருங்கில் கணவனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு அந்தி என்னும் பசலை மெய்யாட்டி வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் 5-141 6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் சான்றோர் தம் கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர் வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல் கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் 6-10 ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி 'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் 'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் 6-20 பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறு புழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடு நவை எய்தாது அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப 'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும் அம் செஞ் சாயல் நீயும் அல்லது நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் 6-30 சக்கரவாளக் கோட்டம் அஃது என மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன் ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன் 'மாதவி மகளொடு வல் இருள் வரினும் நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந் நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் 6-40 நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர் 6-50 தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும் அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால் வேறு வருணப் பால் வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் 6-60 நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர் தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி 6-70 நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும் பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும் நீள் முக நரியின் தீ விளிக் கூவும் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும் ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும் நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின் இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 6-80 கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும் சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில் 6-90 விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர் ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் 6-100 அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல் அறம் விரும்பாது வாழும் மக்களின் சிறந்த மடவோர் உண்டோ? ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன் என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு 6-110 உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் கடகம் செறித்த கையைத் தீநாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும் சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி 6-120 இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக் கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்கு எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின் வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" என 6-130 தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் "பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை யாரும் இல் தமியேன் என்பது நோக்காது ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ? துறையும் மன்றமும் தொல் வலி மரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய் தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில் 6-140 கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற "கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற "ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என "அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 6-150 பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும் "என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என் கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் "ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்? ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் 6-160 ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் 'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய் உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்! நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும் "தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும் மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின் 6-170 யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என "ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது ஆழித் தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்! ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றே நால் வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையில் உரூபப் பிரமரும் இரு வகைச் சுடரும் இரு மூவகையின் பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் 6-180 எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி "அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச் சம்பாபதி தான் உரைத்த அம் முறையே எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின் சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற 6-190 எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில் சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையின் நின்ற எழு வகைக் குன்றமும் நால் வகை மரபின் மா பெருந் தீவும் ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும் பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும் பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து 6-200 மிக்க மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண் இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின் சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்க மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத் தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ 6-210 அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 6-214 |