http://www.chennailibrary.com


புகழேந்திப் புலவர்
இயற்றிய
நளவெண்பா

     இந்நூலை இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர். பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார். பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார். அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார். அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று. இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன. இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்த சந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும்.

பாயிரம்

கடவுள் வணக்கம்

விநாயகர்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்கு நளன்
மா சரிதங்கூற வருந்துணையாம் - ஈசன்
கரியான னத்தான் கருதுபுகழ் பூண்ட
கரியான னத்தான் கழல். 1

நம்மாழ்வார் வணக்கம்

நேசர் இதங்கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதம் கூற வருந்துணையாம் - பேசரிய
மாமகிழ்மா றன்புகழாம் வண்தமிழ்வே தம்விரித்த
மாமகிழ்மா றன்தாள் மலர். 2

திருமால் வணக்கம்

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என்னென்றான் எங்கட் கிறை. 3

சிவபெருமான்

கலாப மயிலிருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடைமேல் உறையும் - நிலாவை
வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்
கழியவார்த் தார்நமக்கோர் காப்பு. 4

முருகப் பிரான்

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - சோலை
மணித்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வென்றோன்
அணிச்சே வடியெம் அரண். 5

அவையடக்கம்

வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடும் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாடல் உற்ற இது. 6

நூலாசிரியர்

பாரார் நிடத பதிநளன்சீர் வெண்பாவால்
பேரார் புகழேந்தி பேசினான் - தாரார்
செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள்
மொழியின் சுவையே முதிர்ந்து. 7




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/nalavenba.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.