-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்


முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 10 ...

1.91. திருஆரூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

981  சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
       பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1.91.1

982  பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
       மறவா தேத்துமின், துறவி யாகுமே. 1.91.2

983  துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
       நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 1.91.3

984  உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
       கையி னாற்றொழ, நையும் வினைதானே. 1.91.4

985  பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
       கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. 1.91.5

986  பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
       வாச மலர்தூவ, நேச மாகுமே. 1.91.6

987  வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
       செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 1.91.7

988  அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
       கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 1.91.8

989  துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
       உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 1.91.9

990  கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
       எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 1.91.10

991  சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
       பாரூர் பாடலார், பேரா ரின்பமே. 1.91.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வன்மீகநாதர்
தேவி - அல்லியங்கோதையம்மை

1.92. திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

992  வாசி தீரவே, காசு நல்குவீர்
       மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1

993  இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
       கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2

994  செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
       பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 1.92.3

995  நீறு பூசினீர், ஏற தேறினீர்
       கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 1.92.4

996  காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
       நாம மிழலையீர், சேமம் நல்குமே. 1.92.5

997  பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
       அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 1.92.6

998  மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
       கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 1.92.7

999  அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
       பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 1.92.8

1000  அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
       இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 1.92.9

1001  பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
       வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே. 1.92.10

1002  காழி மாநகர், வாழி சம்பந்தன்
       வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 1.92.11

திருச்சிற்றம்பலம்

இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்.
தேவி - சுந்தரகுசாம்பிகை.

1.93. திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1003  நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
       நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 1.93.1

1004  அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
       நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 1.93.2

1005  ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
       கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 1.93.3

1006  ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
       வாச மலர்தூவப், பாச வினைபோமே. 1.93.4

1007  மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
       பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 1.93.5

1008  மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
       பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 1.93.6

1009  விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
       படையா யினசூழ, உடையா ருலகமே. 1.93.7

1010  பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
       அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 1.93.8

1011  இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
       உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 1.93.9

1012  தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்
       நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே. 1.93.10

1013  நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
       ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே. 1.93.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமி - பழமலைநாதர்
தேவி - பெரியநாயகியம்மை

1.94. திருஆலவாய் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1014  நீல மாமிடற், றால வாயிலான்
       பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1.94.1

1015  ஞால மேழுமாம், ஆல வாயிலார்
       சீல மேசொலீர், காலன் வீடவே. 1.94.2

1015  ஆல நீழலார், ஆல வாயிலார்
       கால காலனார், பால தாமினே. 1.94.3

1017  அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
       பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 1.94.4

1018  ஆட லேற்றினான், கூட லாலவாய்
       பாடி யேமனம், நாடி வாழ்மினே. 1.94.5

1019  அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
       எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 1.94.6

1020  அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
       நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 1.94.7

1021  அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
       உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 1.94.8

1022  அருவன் ஆலவாய், மருவி னான்றனை
       இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. 1.94.9

1023  ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
       தேர மண்செற்ற, வீர னென்பரே. 1.94.10

1024  அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
       முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே. 1.94.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமி - சொக்கநாதசுவாமி
தேவி - மீனாட்சியம்மை

1.95. திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1025  தோடொர் காதினன், பாடு மறையினன்
       காடு பேணிநின், றாடு மருதனே. 1.95.1

1026  கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
       மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 1.95.2

1027  எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
       பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 1.95.3

1028  விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
       தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 1.95.4

1029  பந்த விடையேறும், எந்தை மருதரைச்
       சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 1.95.5

1030  கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
       தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 1.95.6

1031  பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
       நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 1.95.7

1032  எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
       தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 1.95.8

1033  இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
       பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 1.95.9

1034  நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
       அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 1.95.10

1035  கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
       பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 1.95.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மருதீசர்.
தேவி - நலமுலைநாயகியம்மை.

1.96. திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1036  மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
       அன்னி யூரமர், மன்னு சோதியே. 1.96.1

1037  பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
       குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 1.96.2

1038  நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
       சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. 1.96.3

1039  பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
       சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. 1.96.4

1040  நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
       மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. 1.96.5

1041  இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
       நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. 1.96.6

1042  அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
       எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. 1.96.7

1043  தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
       ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. 1.96.8

1044  இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
       பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே. 1.96.9

1045  குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
       தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. 1.96.10

1046  பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
       வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. 1.96.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - ஆபத்சகாயர்
தேவி - பெரியநாயகியம்மை.

1.97. திருப்புறவம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1047  எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
       மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
       செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
       பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.1

1048  மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
       நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்
       மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
       போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே. 1.97.2

1049  வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
       புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
       பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
       பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே. 1.97.3

1050  துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
       மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
       பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
       பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.4

1051  தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
       காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
       பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
       பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே. 1.97.5

1052  கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
       அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்
       பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
       பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே. 1.97.6

1053  எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
       கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்
       பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
       புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 1.97.7

1054  பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
       துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்
       அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்
       புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே. 1.97.8

1055  மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
       மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்
       கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
       பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே. 1.97.9

1056  வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
       மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
       கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
       பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே. 1.97.10

1057  பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
       மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
       தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
       இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே. 1.97.11

திருச்சிற்றம்பலம்

திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.98. திருச்சிராப்பள்ளி

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1058  நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
       றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
       சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
       குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 1.98.1

1059  கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
       செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
       வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
       பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 1.98.2

1060  மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
       செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
       சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
       எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 1.98.3

1061  துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
       சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
       கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
       பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. 1.98.4

1062  கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
       சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
       தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
       நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 1.98.5

1063  வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
       செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
       தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
       ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 1.98.6

1064  வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
       சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
       பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
       தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 1.98.7

1065  மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
       தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
       சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
       சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 1.98.8

1066  அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
       கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
       சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
       இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே. 1.98.9

1067  நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
       ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
       பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
       சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 1.98.10

1068  தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
       கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
       ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
       வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. 1.98.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - தாயுமானேசுவரர்
தேவி - மட்டுவார்குழலம்மை.

1.99. திருக்குற்றாலம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1069  வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
       கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
       அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
       நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.1

1070  பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
       கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
       கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
       அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள். 1.99.2

1071  செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
       கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
       வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
       நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள். 1.99.3

1072  பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
       கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
       அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
       நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.4

1073  மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
       குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
       இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
       சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர். 1.99.5

1074  மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
       கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
       கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
       பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள். 1.99.6

1075  நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
       கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
       காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
       சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள். 1.99.7

1076  போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
       கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
       மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
       நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.8

1077  அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
       குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
       பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
       பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள். 1.99.9

1078  பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
       குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
       இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
       அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள். 1.99.10

1079  மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
       கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
       நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
       பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே. 1.99.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - குறும்பலாவீசுவரர்
தேவி - குழல்வாய்மொழியம்மை

1.100. திருப்பரங்குன்றம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1080  நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்
       சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
       ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
       பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.1

1081  அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
       பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
       திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
       பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.2

1082  நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச்
       சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
       ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்
       பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 1.100.3

1083  வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
       குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்
       தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
       நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 1.100.4

1084  பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
       துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
       பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
       உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே. 1.100.5

1085  கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
       தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
       புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
       படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.6

1086  அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
       எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
       மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
       பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. 1.100.7

1087  மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
       பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
       சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
       நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.8

1088  முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி
       உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
       சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
       பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 1.100.9

1089  குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
       மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
       பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
       தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.10

1090  தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
       படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
       தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
       விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 1.100.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - பரங்கிரிநாதர்
தேவி - ஆவுடைநாயகியம்மை



முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14