இளங்கோவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி - 14 ...

27. நீர்ப்படைக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 5

அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள; 10

வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுளை 15

நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும், 20

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து, 25

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; 30

குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய, 35

தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோ ர்; 40

நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
'வருக தாம்' என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து, 45

பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்;
மாடல மறையோன் வந்து தோன்றி,
'வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல் - பாணி கனக- விசயர்- தம் 50

முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க!' என-
'பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு?' என- 55

மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்:
'கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன் 60

மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள். 65

இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்
மா முனி பொதியின் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின் 70

வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
'வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை' என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
'கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; 75

அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ?' என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் 80

போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
'என்னோடு இவர் வினை உருத்ததோ?' என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு 85

என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச்,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி, 90

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; 95

துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்; 100

தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு. 'நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் 105

கணிகையர் கோலம் காணாதொழிக' என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்; 110

மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!' என-
'தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
'மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை' என- 115

'நீடு வாழியரோ, நீள் நில வேந்து!' என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் 'நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்; 120

வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து, 125

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி, 130

உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட 135

ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- 140

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க, 145

அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன்,
'எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க!' என்று ஏத்த- 150

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155

சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
'இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு 160

செங்கோல் தன்மை தீது இன்றோ?' என-
'எம் கோ வேந்தே, வாழ்க!' என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
'வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்; 165

குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லற் காலையும், 170

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு' என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-
'பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை 175

மாடல மறையோன் கொள்க' என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க' என்று ஏவி-
'தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்; 180

சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை, 185

பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190

இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி, 195

குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து 200

கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய, 205

மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம் 210

அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
'தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக' என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
'பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; 215

நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக' என-
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த, 220

'வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு' என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
'வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக் 225

கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம்' எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும் 230

தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235

முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து,
'வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்' என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ, 240

கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்துக்
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து 245

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
'வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்' எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் 250

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, 255

வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன் என்.

28. நடுகற் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5

வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
'உலக மன்னவன் வாழ்க!' என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் 10

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக் 15

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
'அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது 20

மருந்தும் ஆயது, இம்மாலை' என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால் 25

ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30

வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின், 35

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும், 45

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின், 50

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும், 55

பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்; 60

பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் 65

வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்; 70

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75

பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-
'தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு, 85

வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகை அடி வணங்க,
'நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு 90

வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை'- 95

ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
'ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு, 100

கயந் தலை யானையின் கவிகையிற் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோ ர்-தம்மேல் 105

கொதி அழல் சீற்றம் கொண்டோ ன் கொற்றம்
புதுவது' என்றனன் போர் வேல் செழியன்' என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-
தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக் 110

கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து, 'மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்; 115

ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை, 120

கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ் நாட்கள் 125

தண் ஆன் பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன் பின்னும், 130

அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும், 135

விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
'போற்றி மன் உயிர் முறையின் கொள்க' என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும், 140

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி, 145

இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோ ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்- 150

மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு 155

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; 160

மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி, 165

கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
'செய் வினை வழித்தாய் உயிர் செலும்' என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே! 170

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும், 175

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
'நாளைச் செய்குவம் அறம்' எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்; 180

இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து, 185

நீடு வாழியரோ, நெடுந்தகை!' என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-
வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன் 190

நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி, 195

பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, 'அம் 200

மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-
சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்' என,
அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை 205

முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-
'அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது' என,
பண்டையோர் உரைத்த தண் தமிழ் நல் உரை,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின், 210

ஆர் புனை சென்னி அரசர்க்கு அளித்து;
'செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
'வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர்' என்பதை 215

வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப் 220

பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
'அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து, 225

இமையவர் உறையும் இமையச் செல் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி, 230

பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்க' என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்.