http://www.chennailibrary.com


இளங்கோவடிகள்

இயற்றிய

சிலப்பதிகாரம்

... தொடர்ச்சி ...

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக் 70

கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை 75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும் 80

அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு 85

இவ் ஆறு ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உரை பெறு கட்டுரை

அன்று தொட்டு, பாண்டிய நாடு மழை வறம்
கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும்
தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய,
நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது. 1

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள்
நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய,
மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக்
கயவாகு என்பான், நங்கைக்கு நாள் பலி - பீடிகைக்
கோட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்தை கெடுத்து,
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பன் முறை எடுப்ப,
மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா
விளையுள் நாடு ஆயிற்று. 3

அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக்
கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.