மதுராந்தகியின் காதல் - Madhuranthagiyin Kaadhal - மாயாவி நூல்கள் - Maayaavi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com




மதுராந்தகியின் காதல்

(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம்

அத்தியாயம் - 8. ஓலை கொணர்ந்த ஒற்றன்

     முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்தும், சோழ கேரளன் அரண்மனையிலிருந்தும் உட்கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி ஒரு சாலை போகிறது. அச்சாலையும் கோட்டையின் வடக்கு வாசலும் பொதுமக்கள் உபயோகத்துக்கானவை அல்ல. அவை அரசகுல மாதருக்கென்றே தனியாக அமைக்கப்பட்டவை. அரசகுல ஆடவருடன் வெளிச் செல்லும்போது மட்டுமே அரண்மனைப் பெண்டிர் உட்கோட்டையின் கிழக்கு வாசல் வழியே செல்வார்கள். தனியாக எங்கேனும் போவதாக இருந்தால், அவர்கள் வடக்குக் கோட்டை வாசலையே பயன்படுத்துவார்கள். அந்த வாசலைத் தாண்டியதும் அச்சலை பல கிளைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு பொதுச்சலையுடன் இணைகிறது.

     முன் அத்தியாயத்தில் கூறிய மந்திராலோசனை நடந்து கொண்டிருந்த அதே மாலை நேரத்தில் முடிகொண்ட சோழன் அரண்மனையிலிருந்து பல்லக்கு ஒன்று கிளம்பி, வடக்குக் கோட்டை வாசல் வழியாக வெளியேறி, சோழேச்சுரன் ஆலயத்துக்குச் செல்வதற்கான பொதுச்சாலையில் போயிற்று. பல்லக்கின் உள்ளே வானவியும், அவளது அந்தரங்கத் தோழியான பங்கயற்கண்ணியும் வீற்றிருந்தனர்.

     மனம் சோர்வுற்றிருக்கும்போது, அல்லது அது களிப்பில் மிதக்கும் போது, வானவிக்கு அரண்மனையில் இருக்கப் பிடிக்காது. மாலையானதும் ஆலயத்துக்குத் தரிசனத்துக்குப் போவதாகக் கூறிக்கொண்டு வெளியில் கிளம்பிவிடுவாள். ஆனால் இன்று அவள் மனம் சோர்வுற்று இருக்கவில்லை; களிப்பில் தான் மிதந்தது. இன்றென்ன? நான்கு நாட்களுக்கு முன் அந்த அகந்தை கொண்ட மதுராந்தகியின் முன் இரு பெரும் ஆணைகளை இட்டதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒற்றாக, எதிர்பாராத விதமாகத் தனக்குச் சாதகமாக நடந்து வருவதைக் கண்டதிலிருந்தே அவள் மகிழ்ச்சியில் மிதக்க ஆரம்பித்து விட்டாள்.

     ஆம், ஒரு பெண்ணால் எளிதில் நிறைவேற்ற இயலாத எதிர் ஆணைகள் இரண்டை இட்டாள் அவள். அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தன்னையே தியாகம் செய்து கொள்ளவும் துணிந்தாள். தம்பி மதுராந்தகனைத் தூண்டிவிட்டு மிக அபாயகரமன வேலை ஒன்றைப் பணித்து அதை அவன் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றச் செய்தாள். அந்த முதல் வெற்றி அவளுக்கு முழு வெற்றியாகப் போகிறது என்பதன் அறிகுறிபோல் குந்தள வீரனைக் கல்யாணபுரத்துக்கு அனுப்பிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிய போது அவளுக்கு மற்றொரு களிப்பூட்டும் செய்தி காத்திருந்தது - அவளுடைய பெரிய தந்தை இறந்துவிட்டார்!

     பெரிய தந்தை இராச மகேந்திரரிடமும், பெரியன்னை லோகமகாதேவியிடமும் பற்று அற்றவள் அல்லள் அவள். உண்மையில், மக்கட்பேறற்ற அவர்கள் வானவியைத்தான் தங்கள் மகளாகக் கருதி அன்பு செலுத்தி வந்தனர். இருந்தபோதிலும், அத்தகைய பாசம் மிக்க பெரிய தந்தையின் மரணச் செய்தி வானவிக்கு மகிழ்ச்சியையே அளித்தது. ஏனென்றால் அவருடைய மறைவால் வானவியின் தந்தை பட்டத்து இளவரசர் ஆகிவிட்டார்; அவளும் அரசகுலப் பெண்டிரிடையே ஏறக்குறைய மதுராந்தகியின் தகுதியை பெற்று விட்டாள் இல்லையா? இனி, அந்த மதுராந்தகி எந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தன் ஆணையை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறாளோ, அதே செல்வாக்கை இவளும் பயன்படுத்தி, அவள் ஆணை நிறைவேறாதிருக்கவும் வகை செய்துகொள்ள முடியுமே!

     இது வானவிக்குக் கிட்டிய முதலாவது எதிர்பாராத வெற்றி. இது மட்டுந்தானா? நந்துகனைக் காதலோலையுடன் கல்யாணபுரத்துக்கு அனுப்பிவிட்ட போதிலும், குலோத்துங்கனும் அன்றே வேங்கிக்குப் புறப்பட இருந்ததால், தன் ஓலை மேலைச் சளுக்க இளவரசரை எட்டுமுன் குலோத்துங்கன் வேங்கியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுது பெரிய தந்தையின் மறைவால் குலோத்துங்கனின் வேங்கிப் பயணம் குறைந்தது மூன்று நாட்களாவது தாமதப்பட்டுவிடும். இனி அவள் அந்தக் கவலையையும் விட்டுவிடலாம். மூன்று நாட்களுக்குள் எத்தனையோ நாடுகள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்திருக்கவில்லையா? ஆதலால் இதுவும் பெரிய தந்தையின் மரணத்தால் தனக்குக் கிட்டிய மற்றோர் எதிர்பாராத வெற்றி என்றே அவள் கருதினாள்.

     இந்த இரண்டு வெற்றிகளுமே தன்னை வானளாவ உயர்த்திவிட்டதாக நினைத்தாள் அவள். அப்படி நினைத்திருக்கையில் அவளுடைய முதல் ஆணையின் முழு வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டு மற்றொரு மகிழ்ச்சி தரும் செய்தியும் வந்தால், அவளுக்குப் பெருமை தலை கொள்ளாமற் போகாமல் என்ன செய்யும்? அந்தச் செய்தியை சற்றுமுன், இதோ அவளுடன் பல்லக்கில் அமர்ந்திருக்கும் தோழி பங்கயற்கண்ணிதான் கொண்டுவந்தாள். வேங்கி அரண்மனையை மேலைச் சளுக்கர்களின் உதவியுடன் விசயாதித்தன் கைப்பற்றிவிட்டானாம்! இப்பொழுதுதான் சோழதேவருக்கு ஓலை வந்ததாம். அந்த ஓலையைக் கொணர்ந்த வேங்கித் தூதனைக்கூட அவள் கண்ணால் பார்த்தாளாம்!

     வேங்கி ஓலைச் செய்தியைக் கேட்ட கணத்திலே வானவிக்கு வானாத்துக்கும் நிலத்துக்குமாகக் குதிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியை அவள் அரண்மனைக்குள் காட்டமுடியுமா? தம்பி மதுராந்தகனை மட்டும் சந்தித்துத் தனது முதல் வெற்றியைப் பறைசாற்றிவிட்டு, தோழியுடன் வெளிக்கிளம்பி விட்டாள்.

     பல்லக்கில் போகும்போது அவளுக்கு அப்பல்லக்கை நான்கு பேர்கள் சுமந்து செல்வதாகத் தோன்றவில்லை. அது ஒரு வானவூர்தியாக மாறி தன்னை இன்ப உலகிற்கு இட்டுச் செல்வதாகவே தோன்றியது. “வெற்றியடி வெற்றி! உன் தோழி வானவிக்கு வானம் கொள்ளா வெற்றி!“ என்று பங்கயற்கண்ணியிடம் பரவசத்துடன் பலப்பல பேசிக்கொண்டே சென்றாள்.

     அவர்கள் சோழேச்சுரம் ஆலயத்தை நெருங்கியபோது அங்கே இரவுப்பூசை தொடங்கப் போவதற்கான மணி ஒலித்துக்கொண்டிருந்தது. எனவே வானவி முதலில் அங்கே இறங்கி, தன் ஆணையை நிறைவேற்றி வைத்ததற்காக ஆண்டவனை வாயார, மனமார வாழ்த்தினாள். பூசை முடியும் வரையில் அவர்கள் அங்கே தங்கியிருந்துவிட்டுப் பிறகு பல்லக்கில் ஏறி அரண்மனைக்குச் செல்லும் வழியில் திரும்பினர்.

     பௌர்ணமியை நெருங்கிக்கொண்டிருந்த நாளாதலால் அந்த முன்னிரவு நேரத்திலும் வானத்து முழுமதி வெள்ளியை உருக்கி நிலமகளின் உடலெல்லாம் வார்த்திருந்தான். ஆலயத்திலிருந்து திரும்புவோர் கும்பலைக் கடந்து சாலையின் திருப்பம் ஒன்றுக்கு வந்ததும் வானவி பல்லக்கை இறக்கும்படி பணித்தாள். அவளும் பங்கயற்கண்ணியும் அதிலிருந்து வெளியே வந்தனர். “பல்லக்கை சாலை மரம் ஒன்றின் மறைவில் வைத்துவிட்டு நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் கால்வாய் வரையில் போய்விட்டு அரை நாழிகைப் பொழுதில் திரும்புகிறோம்,” என்று பல்லக்குத் தூக்குவோரிடம் கூறிவிட்டு தெற்கு-வடக்காகச் சென்ற அச்சலையின் மேற்குப் புறமாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களிடையே தோழியுடன் புகுந்து சென்றாள் அவள்.

     அந்தச் சாலைக்குச் சிறிது தூரத்துக்கு அப்பால், சாலை செல்லும் திசையிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதுதான் சோழகேரளன் அரண்மனைப் பூங்காவிலுள்ள செயற்கை வாவிக்குக் காவிரியிலிருந்து நீர் கொண்டுவரும் கால்வாய். அந்தக் கால்வாயே உட்கோட்டையைச் சுற்றிய அகழியாகவும் விளங்கியதால் மிக ஆழமானதாகவும், முதலைகள் வாழ்வதாகவும் இருந்தது. அதன் இரு கரைகளிலும் அடர்த்தியான தாழம்புதர்கள். இடையிடையே, பொதுமக்களுக்கும் அக்கால்வாய் நீர் பயன்படும் பொருட்டு, சில படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்படித்துறைகளைப் பெரும்பாலும் ஆலயத்துக்கு வந்து செல்வோரே பயன்படுத்துவது வழக்கம். இப்பொழுது இரவு நேரமாதலாலும், ஆலயத்தில் பூசைகள் அநேகமாக முடிந்துவிட்டதாலும் அப்படித் துறைகளில் யாரும் இல்லை. அத்தகைய படித்துறைகளுள் ஒன்றின் கடைசிப் படிகளில் வந்து அமர்ந்தனர் வானவியும், பங்கயற்கண்ணியும். இளவயதுப் பெண்கள் மகிழ்ச்சியில் திளைக்கும்போது இன்பக் கற்பனைகளுக்கும், இன்பப் பேச்சுக்களுக்கும் பஞ்சம் ஏற்படுமா, என்ன? பாதங்களைக் கால்வாய் நீருக்குள் நுழைத்து அதைத் துழாவியவாறு இருவரும் பொழுது போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர். வானவி, மதுராந்தகியின் கொட்டத்தை அடக்கி, அவளைச் சாதாரணப் பெண்ணிலும் சாதாரணப் பெண்ணாகச் செய்துவிட்டு, சளுக்கிய விக்கிரமாதித்தனை மணந்து கல்யாணபுரத்தில் அவனுடன் கழிக்க இருக்கும் குதூகல நாட்களைப்பற்றி இப்பொழுதே தன் தோழியுடன் கலந்து ஆலோசித்துத் திட்டங்கள் வகுக்கலானாள்.

     வானவியின் பேச்சும் திட்டங்களும் இன்னும் ஓயவில்லை. ஆனால் இடையே அதற்கு ஒரு குந்தகம் விளைந்தது. திடீரென்று பங்கயற்கண்ணி உலகமே கிடு கிடுக்குமாறு வீரிட்டாள். “முதலை!... முதலை!” என்று அலறினாள். ஒரு கணம் தப்பியிருந்தாலும் பங்கயற்கண்ணியின் வலது பாதத்தைப் பற்றியிருந்த முதலை அவளை நீருனுள்ளே இழுத்துச் சென்றிருக்கும். ஆனால் அதற்குள் அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்து விட்டது. எங்கிருந்தோ ஓர் அம்பு விர்ரென்று வந்து எஃகை நிகர்த்த முதலையின் செதிள்களுக்குள்ளே பாய்ந்து குத்திட்டு நின்றது. முதலை பங்கயற்கண்ணியின் காலை விட்டு விட்டு, வேதனை தாளாமல் வாலை ஓங்கி அடித்துக்கொண்டு முதுகில் தைத்த அம்புடனே நீருக்குள்ளே சென்று மறைந்த்து விட்டது.

     இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் பதைபதைத்துப் போன வானவி, பயத்தாலும் வேதனையாலும் மயங்கி விழும் நிலையிலிருந்த தோழியை அணைத்தவாறு மேல் படிக்கு இட்டு வந்தாள். பிறகு அவளைப் படியில் அமர்த்தித் தானும் அமர்ந்து, அவள் உடலைத் தன்மீது சாய்த்துக்கொண்டே அமைதிப் படுத்தினாள். முதலையின் பற்கள் பதிந்து ரத்தம் கசிந்த தோழியின் பாதத்தைப் பார்க்கையில், அவள் நெஞ்சகத்திலிருந்து உதிரம் கொட்டியது. “பங்கயா, பங்கயா! பயப்படாதே. நீ காப்பாற்றப்பட்டுவிட்டாய்,” என்று பின்புறமிருந்து வந்த குரல் வானவியைத் தன் நினைவு அடையச் செய்தது. ஆம், முதலையின் மீது அம்பு எய்த ஆடவன்தான் அங்கு நின்று கொண்டிருந்தான்.

     பகல்போல் வீசிய நிலவில் அவன் முகம் பளிச்சென்று தெரிந்தது. கட்டிளங்காளை அவன். இத்தனை குறி தவறாமல் அம்பு எய்த அவன் சோழ நாட்டானாகத்தான் இருக்க வேண்டுமென்று வானவி கருதினாள். அவள் நன்றி தோன்ற அவனை நோக்கி, “வந்தனம் ஐயா. என் ஆருயிர்த் தோழியின் ஆயுளை மீட்டுத் தந்ததற்கு அனந்த கோடி வணக்கம். தாங்கள் யாரோ?” என்று வினவினாள்.

     அந்த இளங்காளை விடையிறுக்கு முன் பங்கயற்கண்ணி அயர்வால் மூடியிருந்த இமைகளைத் திறந்து அவனை நோக்கினாள். “இவர்... இவர்...”

     “என்ன பங்கயா?...”

     “இன்று பிற்பகலில் வேங்கியிலிருந்து ஓலை கொணர்ந்த தூதர்.”

     “ஆ!” வானவி வியப்பு மலர அவ்விளைஞனை விழித்துப் பார்த்தாள். அவள் முகத்தில் முன்னமே பொங்கி நின்ற நன்றிப் பெருக்கு இரட்டிப்பாயிற்று. “வேங்கி வீரரே, மற்றோர் நன்றி!...”

     அவன் இடைமறித்தான். “அம்மணிகள் யாரென்று நான் அறியலாமோ?”

     பங்கயற்கண்ணி நிமிர்ந்து உட்கார்ந்தாள். “இவள் சோழ நாட்டுப் பட்டத்து இளவரசர் வீரராசேந்திர தேவரின் புதல்வி வானவி தேவி, நான்...”

     மீண்டும் அவ்வீரன் இடைமறித்தான். “என் பக்கியமே பாக்கியம்!” என்றான் அவன். “தேடித்திரிந்த மூலிகை காலில் சிக்கிக்கொண்டது, அம்மணி.”

     “என்ன சொல்கிறீர், வீரரே?”

     “இளவரசியாரைத் தனியே சந்திக்க விரும்பினேன்; சந்தித்துவிட்டேன்.”

     “எதற்காக, வீரரே? எதற்காக எங்கள் இளவரசியாரைத் தாங்கள் தனியே சந்திக்க விரும்பினீர்கள்?”

     அவன் இடைக் கச்சையிலிருந்து ஓர் ஓலையை எடுத்து வானவியிடம் நீட்டினான். “இளவரசி, நீங்கள் அனுப்பிய காதல் ஓலை உங்களிடமே திரும்பி வருகிறது.”

     ஓலையப் பெற்றுக்கொண்ட வானவியின் கரங்கள் நடுங்கின. ஐயோ! கடைசியில் அவள் அகப்பட்டுக்கொண்டு விட்டாளா? “பங்கயா! இது எப்படி இவருக்குக் கிடைத்தது என்று கேள்,” என்று பதறினாள் அவள்.

     “நந்துகனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.”

     “நந்துகனை உங்களுக்குத் தெரியுமா? நான் அவனிடம் ஓலை கொடுத்து அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

     “நந்துகனையா தெரியுமா என்று கேட்கிறீர்கள்? அவனை இன்று நேற்றல்ல; கடந்த பத்தாண்டுகளாகத் தெரியும், இளவரசி. அதனால் அவனே என்னிடம் சொன்னான்.”

     “ஆயினும் ஒரு பெண் ஓர் ஆணுக்கு எழுதியுள்ள ஓலையை நீங்கள் படித்ததும், அதைப் பெற்றுக் கொண்டதும் தவறில்லையா, ஐயா? உங்களை நல்லவரென்று நினைத்தோமே?” என்றாள் பங்கயற்கண்ணி.

     “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மணி. எனக்கு, நீங்கள் அவனிடம் ஓலை கொடுத்து அனுப்பியிருந்தது தெரியாது; அதைத் தருமாறு நான் அவனிடம் கேட்கவும் இல்லை. அவனே அச்செய்தியைக் கூறி, என்னை அதைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினான்.”

     “துரோகி!” என்று குமுறினாள் வானவி.

     “நந்துகனை அப்படிச் சொல்லாதீர்கள் இளவரசி. அவன் நல்லவன்.”

     “ஆமாம் நல்லவன்... உங்களைப்போல்! ஒரு பெண் ஓர் ஆடவனுக்கு ரகசியமாக அனுப்பிய ஓலையை...”

     “அவனிடமே சேர்த்து விட்டான்!”

     “என்ன?”

     “இன்னுமா விளங்கவில்லை இளவரசி?”

     “நீங்கள்... நீங்கள்...?”

     “ஆம், குந்தள விக்கிரமாதித்தன் தான்!”

     வானவியைச் சட்டென்று வெட்கம் கவ்விக் கொண்டது. பங்கயற்கண்ணிக்குப் பின் சென்று பதுங்கிக் கொண்டாள் அவள்.

     “இளவரசியின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதென்று கூறுங்கள் தோழி!” என்றான் விக்கிரமாதித்தன் குறுநகையுடன்.

     “ஏற்றுக்கொள்ளு முன்பே அதனைச் சாமுண்டராயர் மூலமாக நிறைவேற்றி வைத்ததற்கு என் நன்றியைக் கூறுவாய், பங்கயா!” என்றாள் வானவி.

     இதுவரையில் மலர்ந்த முகத்துடன் பேசிவந்த விக்கிரமாதித்தனின் முகம் இப்பேச்சைக் கேட்டதும் சுருங்கியது.

     “வாக்களித்தவாறு என்னை நான் அவருக்கு அடிமைப்படுத்திக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன் என்பதையும் அறிவிப்பாய், பங்கயா!” என்று தொடர்ந்து சொன்னாள் வானவி.

     விக்கிரமாதித்தன் ஏதோ கூற வாயெடுத்தான். ஆனால் தொலைவில் யாரோ ஓடி வருவதைப் பார்த்துவிட்டுச் சட்டென்று உறையிலிருருந்து வாளை உருவினான்.

     “என்ன?” வானவி திடுக்கிட்டு வினவினாள்.

     “அதோ!”

     அவன் சுட்டிக்காட்டிய இடத்தைப் பெண்கள் இருவரும் நோக்கினர். அங்கே, குடல் தெறிக்க மதுராந்தகன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

     பங்கயற்கண்ணி நகைத்துவிட்டு, "பகையாள் அல்ல இளவரசே, உங்கள் மைத்துனன் - இளவரசியின் இளைய சகோதரன் மதுராந்தகன்!" என்று விளக்கினாள்.

     இதற்குள் மதுராந்தகன் அவர்களை நெருங்கி வந்து விட்டான். அங்கே ஒரு வேற்றாள் நிற்பதைக் கூடக் கவனியாமல் பதற்றத்துடன், “தோல்வி அக்கா! படுதோல்வி! எல்லாம் பொய்!” என்று கூறினான்.

     “என்ன சொல்கிறாய் தம்பி?” கலக்கத்துடன் வினவினாள் வானவி.

     “குலோத்துங்கனின் தந்தை இறக்கவும் இல்லையாம், விசயாதித்தன் அரசைக் கைப்பற்றிக் கொள்ளவும் இல்லையாம். வேங்கியிலிருந்து வேறோரு தூதுவன் அத்தை கைப்பட வரைந்த ஓலையுடன் வந்திருக்கிறான். பிற்பகலில் வேங்கித் தூதன் என்று கூறிக்கொண்டு வந்தவனைக் குந்தள ஒற்றன் என சந்தேகித்து, அவனைத் தேடிப்பிடித்துச் சிறையிட நாலா பக்கமும் வீரர்களை விரட்டியிருக்கிறார்கள்.”

     இதைக் கேட்டதும் வானவிக்கும், பங்கயற்கண்ணிக்கும் உடலெல்லாம் நடுங்கியது. அவர்கள் நடுக்கத்தை மிகைப் படுத்துவதைப் போல் அச்சமயம் கால்வாயின் எதிர்க் கரையில், சிறிது தூரத்தில் சில குதிரைகள் பாய்ந்தோடி வரும் குளம்பொலி கேட்டது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247