உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 11 “இதைப் பார்த்தேளா? அபிதாவுக்கு எது கட்டினாலும் ஏர்வையாயிருக்கு! புடவை சாயம் சோகையாப் போயிட்டாலும் அவள் உடம்பில் அது மெருகு காட்டறது. சிவப்பாயிருந்தால் மட்டும் போதாது. சிவப்பாயிருந்தாலும் சில கலர்கள் தான் பொருந்தும். ஆனால் இந்தக் குருக்களாத்துப் பெண்ணின் நிறவாகே தனி. எந்தப் புடவைக்கும் இழைஞ்சு கொடுக்கறது. எனக்கு இதுதான் புரியல்லே. இவள் மாதிரியிருக்கவாள் எல்லாம் ஏன் இந்த மாதிரி இடத்தில் பிறக்கறா?” நான் அசுவாரஸ்யமாக ‘சூ’ கொட்டுகிறேன். அவளுடைய ஆச்சர்யமேதான் என்னுடைய ஆச்சர்யமும். ஆனால் ஆச்சர்யப்பட இவள் யார்? எனக்கு இப்படித் தோன்றுவது அடாது. தெரிகிறது. ஆனால் தோன்றுகிறதே! “ஆமாம் இங்கே நாம் இன்னும் எத்தனை நாளைக்கு ‘டேரா’?” சாவித்ரி வாயைத் திறந்தாலே எனக்கு எரிச்சல் எழுகிறது. பல்லைக் கடிக்கிறேன். “ஏன், எத்தனை நாள் இருந்து விட்டோம், உனக்கு அதற்குள் அலுத்துப் போகும்படி?” “எனக்கு அலுத்துப் போவது இருக்கட்டும் - இங்கே பொழுது போவது சிரமமாத்தானிருக்கு - இவாளுக்கு அலுத்துப் போகாமல் இருக்க வேண்டாமா? இவாளுக்கு நம்மைச் சமாளிக்கிறது யானையைக் கட்டித் தீனி போடறாப் போலேன்னா?” அவளை, பிறகு, என்னை, ஒரு முறை அவள் காணக் கண்ணோட்டம் விட்டுக் கொள்கிறேன். “எப்படியும் நான் யானையில்லை.” சாவித்ரி விடுத்த பார்வையில் என் கணை மொக்கைபட்டு வீழ்கிறது. அதில் அவ்வளவு அலக்ஷியம். ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’ எனும் மோன ஆச்சரியம். ‘உன்னைச் சட்டை செய்து உன்னைப் பதிலுக்குப் பதில் ஏசி உன்னிலும் கீழ்மைக்கு நான் இறங்கப் போவதில்லை’ எனும் பதிலும் கூட, என்னை அவமானப்படுத்தும் பொறுமையைச் சாதித்துத் தன் தரத்தை உரப்படுத்திக் கொண்டு, என் சிறுமையை எனக்கு உறுத்துகிறாள். வெற்றி கிறுக்குப் பிடித்தது. அது யார் பக்கம் என்று கடைசி வரை சொல்வதற்கில்லை. இருவரில் ஒருவருக்கு அது கட்டாயம் துரோகம் செய்தே ஆக வேண்டும். ஙண ஙணவென மணிகளின் ஓசை - பெரிதும் சின்னதுமாய் ஒன்று கலந்து எங்களை எட்டுகின்றன. என் நெஞ்சில் பழைய படங்களை எழுப்புகின்றன. “போகணும் போகணும்னு பறக்கறையே, உங்கள் ஊரில் இதெல்லாம் கண்டிருப்பையா? வா, வந்து பார். இத்தனை நாள் உன் பிறந்த வீட்டில் நான் இருந்தாச்சு. கொஞ்ச காலமாவது நான் வளர்ந்த இடத்தில் நீ இருக்க வேண்டாமா?” பாதி கடுப்பு, பாதி கேலியாகப் பேச்சை மாற்றுகிறேன். வீட்டுக்குப் பின்னால், மைதானத்தில் மாடுகள் மந்தை கூடுகின்றன. பெரிய மந்தைதான். சுற்று வட்டாரத்துப் பேட்டைகள், குக்கிராமங்களிலிருந்தும் மாடுகள் வந்து சேர்கின்றன. மாட்டுக்காரப் பையன் உருவம் கூடச் சரியாகத் தெரியவில்லை. அவ்வளவு நெரிசல், அவ்வளவு புழுதி. “ஓஹோ? பட்டணத்தானின் பட்டிக்காட்டு ப்ரவேசமோ?” குரல் கேட்டுத் திரும்புகிறோம். அபிதாவும் ஒரு பசுவை ஓட்டிக் கொண்டு வருகிறாள். தன் இனத்தை அது கண்டுவிட்டது; இனி அதை ஓட்டத் தேவையில்லை. அதற்குக் குஷி. அதற்கு மந்தையின் ஈர்ப்பு கண்டுவிட்டது. பீப்பாய் உடல் குலுங்க ஓடி வந்து, நிரையுடன் கலந்துவிட்டது. அபிதா வந்து, எங்களோடு நின்றாள். ஒன்றாகவும் இரண்டாயும் மாடுகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. சேரச் சேர அவைகளின் இரைச்சலும், பெரிய வாத்திய கோஷ்டியின் சுருதி கூட்டல் போன்ற விதவிதமான கத்தலும் மணிகளின் கணகணவும் வலுக்கின்றன. காதைப் பொளிக்கின்றன. “மாடெல்லாம் பெரிசாயிருக்கேன்னு பாக்கறேளா?” “இந்த மாடுகள் பெரிசுன்னா எங்கள் கண்கள் சிறிசு” என்றேன். “அப்போ சிறிசாயிருக்கேன்னு பாக்கறேளா? பெரிசாயிருந்தாலும் சரி, சிறிசாயிருந்தாலும் சரி, கன்னுக்குட்டிக்கு விட்டது போக, சகட்டுக்குக் கால்படிக்கு மேல் ஒரு பாலாடை கூடத் தேறாது. அதிலேயேதான் மோர், தயிர், நெய், வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு காப்பி, வெளி வியாபாரம், ஊர்கோலம், வாணவேடிக்கை எல்லாம். வந்த விருந்தாளி, பாலிலும் மோரிலும் முகம் பார்த்துக் கொள்ளலாம்.” அவளுடைய வாய்விட்ட சிரிப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது. “வீட்டுக்கு வீடு இந்தக் காமதேனு இல்லாட்டா, அதுவும் தகராறுதான். என்னதான் இருந்தாலும் நாட்டு மாடுதானே! மாமா சொல்றா - அதான் சித்திக்குத் தம்பி - அவர் எங்கெங்கேயோ ஊரெல்லாம் சுத்தியிருக்கார் - என்னென்னல்லாமோ பார்த்திருக்காராம் - இஷ்டப்பட்டால், இங்கே ராத்திரி என்னைக்காவது தங்கினால் கதை கதையா சொல்வார் - முக்காலி போட்டுண்டு, தலையை வயத்தில் முட்டுக் கொடுத்துண்டு, வாளி வழியக் கறக்கற மாடெல்லாம் இருக்காமே! கறக்கக் கறக்கத் தோள் பட்டை விட்டுப் போனாலும் போகும் மாட்டுக்கு மடி குன்றாதாமே! ‘அபிதா, ஒரு மாட்டுப்பாலே உங்கள் ஊருக்கு சப்ளை பண்ணி மிச்சத்தைப் பயிருக்குப் பாய்ச்சலாம்,’ நிஜமாவா மாமா?” உயிர் தன் முழு ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள். கொடுக்கும் அரி போன்று நீண்டு நுனி வளைந்து, என் நெஞ்சை அறுக்கும் ரம்பை மயிர்கள். அபிதா, உன் சித்தியின் தம்பி சொன்னது மெய்தான். ஆனால் அவன் ஏன் சொன்னான்? அவனை நான் முந்திக் கொள்ள முடியவில்லையே எனும் ஆத்திரத்தையும் எனக்கு நீ ஏற்படுத்தி விட்டாய். இந்த ஏக்கம் போதாதென்று அதை நீ இன்னும் அறியவில்லை எனும் வேதனை வேறு என்னை வாட்டுகிறது. மந்தை நகர ஆரம்பித்தது. மாட்டுக்காரப் பையன் ஓட்டி நகரவில்லை. தான் நிறைந்ததை உணர அது அவனை நம்பியில்லை. இன்றைக்கு இதற்கு மேல் மாடுகள் வருவதற்கில்லை. இன்றைய நிறைவு இவ்வளவுதான் என மந்தை எப்படியோ மொத்தாகாரமாய் உணர்ந்து, அந்த உணர்வின் உந்தலில் தானே நகர ஆரம்பித்து விட்டது. இதற்கு எப்படி அதன் அன்றன்றைய நிறைவு தெரிந்து விடுகிறது? இதுவே ஒரு உலகம் தான். எத்தனையோ தாய்கள், தந்தைகள், எத்தனையோ கன்றுகள், தாயின் கன்று தானும் தாயாகி, தன் கன்றை வீட்டில் தொழுவத்தில் விட்டு விட்டு, இங்கு வந்து கலந்து, மாலை வந்ததும், கன்று நினைப்பு வந்து தன் இடம் தேடி ஓடி விடுகின்றது. மந்தையோடு நகரும் தம் வழியில், இரண்டு பசுக்கள் எங்கள் பக்கத்தில் வருகின்றன. முக ஒற்றுமை, கண்களைச் சுற்றிய வெள்ளைக் கரை, கொம்புகளின் வளைவில் அதே கோணல், நெற்றியில் ஒரே மாதிரியான வெள்ளைத் திட்டு - இவை தாயும் கன்றுமாவே இருக்கலாம். தாயும், தானும் தாயாகிவிட்ட தாயின் கன்று. கன்றின் தாயாகிவிட்ட தாயின் கன்று, இங்கு, மந்தையில் தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளுமோ? இல்லை நானும் ஒரு மாடு நீயும் ஒரு மாடு எனும் போட்டி அடையாளம் மட்டுந்தான் நிற்குமோ? உடனே கூடவே ஒன்றுக்கொன்று ஆத்திரம், ஒரே இனமாயினும் உயிருக்கு உயிர் உள்ளூரப் புழுங்கும் உள்பகை - இதுதான் அறியுமோ? “மாமா மாமா!” அபிதா அலறினாள். ஒரு கணம் தப்பியிருந்தால் என்னை அது கீழே தள்ளி நான் மந்தையின் குளம்புகளடியில் மிதிபட்டுத் துவையலாகியிருப்பேன். அது என்னை உராய்ந்து சென்ற வேகத்தில், என் நெற்றிப் பொட்டில், புருவ மத்தியில் பின் மண்டையோட்டுள் மின்னல்கள் பறந்ததுதான் அப்போது அறிவேன். மின்னல்களின் பொளிசல்கள் - பொளிசல்களின் ஒளித்துடிப்புகள் - கோபம் சிந்தும் செவ்விழிகள். கீழ்வாய்ப் பல்வரிசையில் இளித்த குரூரம். விறைத்த வால் நுனியில் மயிர்க் குஞ்சம் கொடி கட்டிப் பறந்தது. முரசு கொட்டத் தூக்கிவிட்ட முன்னங்கால்கள். நாபியினின்று நீண்டு எட்டி எட்டி நாக்கு ஜெவெ ஜெவெனத் தவித்தது. குப்பென்று மேலே அலைமோதிய ஆண்வாடை. எங்கள் கண்கள் சந்தித்தன. சட்டென அபிதா முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கன்னங்களின் பிழம்பில் என் அந்தக்கரணத்தில் நான் எரிந்து போனேன். பிறகு எங்களால் ஒருவரையொருவர் சரியாக முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. இடையே, காற்றில் எழுதிய ஸன்னக் கோட்டில் காளையின் உருவம் எழுந்தது. அதன் திமில் மேல் எங்கள் கண்கள் தாம் ஒன்றையொன்று கவ்விக் கொண்டன. உடனே பயம் கொண்டு ஒன்றுக்கொன்று முதலை வாயினின்று விடுபெற முயன்றன. அவள் லஜ்ஜையில் அவள் தகதகக்கிறாள். சாவித்ரி என் வேதனை அறிவாளா? இன்று என்னவோ அவள் குருக்கள் வீட்டுப் பெண்டிருடன் அலாதியாக ஒட்டிக் கொள்கிறாள். தன் பெட்டியைத் திறந்து சாமான்களையெடுத்து வெளியே போடுவதும் அபிதாவின் காதில் கம்மல் ஒத்திப் பார்ப்பதும் - மாறி மாறி பண்டங்களைப் பற்றி அவர்கள் பேசுவதும் - அது என்ன அவ்வளவு பேச்சு இருக்குமோ! பேசினதையே பேசிப் பேசி அலுக்காத பேச்சு. நான், திண்ணையில் உட்கார்ந்து, மடியில் ஏதோ புத்தகத்தில் நினைவு ஊன்ற முயல்கிறேன். ஆனால் ஏடுகள் தாம் புரள்கின்றன. பிற்பகலாயினும் வெய்யிலின் வெப்பம் இன்னும் தணிந்த பாடில்லை. சுவர் சுடுகிறது. உயிரோடு சிதையில் வைத்தாற் போல் உடம்பு எரிகிறது. இங்கிருந்து பார்க்கையில், கொல்லைப் புறத்தில், அதையும் தாண்டி மரங்களில், கிளைகளில் இலைகளின் சந்தில் கானல் நடுங்குகிறது. ஒரு குரங்கு, தாய்க் குரங்கு, அதன் வயிற்றைக் குட்டி பற்றிய வண்ணம் அனாயாசமாய்க் கிளைக்குக் கிளைத் தாவுகிறது. குரங்கும் பத்திரம் குட்டியும் பத்திரம். நம் போல் விளிம்பில் தத்தளிப்பு அதற்கில்லை. அதன் பிடி குரங்குப் பிடி. பின்னால் சலசலப்பு கேட்டுத் திரும்புகிறேன். சாவித்ரியின் புதுப்புடவையைக் கட்டிக் கொண்டு, தலைகுனிந்தபடி அபிதா நிற்கிறாள். அவள் பின்னால் அவள் தோளைப் பற்றிக் கொண்டு, இளவரசியின் தாதி போல் சாவித்ரி. மூக்குப் பொடிக்கலர். அதையொட்டி அவள் முகம், முழங்கைக்குக் கீழ்பாகம், சந்தன வெண்மை பளீரிடுகின்றன. இப்பொழுதுதான் கவனிக்கிறேன், வெட்கமும் சந்தோஷமும் குழுமிய அவள் முகம் நிமிர்கையில், அபிதாவின் கண்கள் முழுக் கருமையில்லை. கரும்பழுப்பு. கறுப்பு உடுத்தினால் அதற்கேற்றபடி விழிகள் நிறம் மாறுமோ என்னவோ? - சட்டென்று அவள் என் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பின்னல் பாம்பு போல் என் பாதத்தில் லேசாய்ப் பட்டது. புல்லரித்துப் போனேன். “வாயில் கொழுக்கட்டையா? நமஸ்காரம் பண்றாள், ஆசீர்வாதம் பண்ணுங்களேன், சுருக்க கல்யாணம் நேரட்டும்னு!” சாவித்ரி, என் வேதனை அறிந்துதான் சொல்றையா? இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த சதி. இவள் வெற்றிய உன் வெற்றியா? என்னிடம் எதை நிரூபிச்சு ஆறது? என் நெஞ்சையா, இவள் நிறத்தையா? பாபி! நான் மௌனமாய் எழுந்து அவ்விடம் விட்டு அகல்கிறேன். சாட்டையின் கொடுக்குப் போல் சாவித்ரியின் வார்த்தைகள் என்னைத் துரத்துகின்றன. “மாமா ஒரு சமயம் அப்படித்தான் இருப்பா - நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே.” இங்கு ஏன் வந்தேன்? |